சொன்னால் நம்பமாட்டீர்கள்/திருவாடானைச் சிறை

விக்கிமூலம் இலிருந்து
திருவாடானைச் சிறை

1942 ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி அன்று இரவு 12 மணிக்கு போலீஸார் என்னைக் கைது செய்தனர். பகல் நேரத்தில் எப்போதும் பெரும் கூட்டம் என்னை சூழ்ந்துகொண்டு இருந்தபடியால் ஒரு வார காலமாக முயற்சி செய்தும் கைது செய்தால் பெரும் கலகம் ஏற்படும் என்று போலீஸார் கைது செய்வதை தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தனர்.

ஆனால் அன்று 144 தடை உத்தரவை மக்கள் முன்னிலையில் நான் கிழித்தெறிந்ததும் போலீஸ் இன்ஸ் பெக்டரை மக்கள் விரட்டி அடித்ததாலும் அதற்குமேல் என்னை வெளியில் வைத்திருப்பது பெருத்த அபாயம் என்று கருதி. போலீஸார் அன்றிரவே கைது செய்வது என்று முடிவு செய்துவிட்டனர்.

இரவில் அதிகம்பேர் என்னைச் சுற்றி இருக்கமாட்டார்கள். சில பேர்தான் இருப்பார்கள். இருப்பவர்களைச் சமாளித்துக் கொள்ளலாம் என்று போலீஸார் எண்ணி அன்றிரவு என்னைக் கைது செய்வதற்குச் சுமார் பத்து லாரி ரிஸர்வ் போலீலைக் கொண்டு வந்து நான் தங்கி இருந்த ஐக்கிய சங்கம் என்ற கட்டிடத்தைச் சுற்றி வளைத்து நிறுத்திக்கொண்டு உள்ளே படபடவென்று குதித்தார்கள்.

அப்பொழுது இரவு மணி 12 இருக்கலாம். சப்தம் கேட்டதும் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தபோது என்னைச் சுற்றிப் பல ரிஸர்வ் போலீஸ் நின்றது தெரிந்தது. “உங்களைக் கைது செய்திருக்கிறோம்” என்று போலீஸார் சொன்னார்கள்.

இன்ஸ்பெக்டர் என் கையில் விலங்கை மாட்டி, பல நூற்றுக் கணக்கான ரிசர்வ் போலீஸார் சூழ ‘இராமவிலாஸ்’ பஸ் ஒன்றில் என்னை ஏற்றிக் கொண்டு முன்னும், பின்னும் பல போலீஸ் வண்டிகள் தொடர தேவகோட்டையில் இருந்து 22 மைல் தொலைவில் உள்ள திருவாடானை என்ற ஊருக்குக் கொண்டு சென்றார்கள்.

திருவாடானையில் உள்ள சப்-ஜெயிலில் என்னைக் கொண்டுபோய் அடைத்தார்கள். மறுநாள் காலையில் என்னைக் கைது செய்த விஷயம் ஊர் முழுவதும் பரவி மக்கள் கும்பல்கும்பலாகச் சேர்ந்து ஊரே ஒன்றாகத் திரண்டு என்னை விடுதலை செய்யும்படி போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். கடைகள் அனைத்தையும் மூடும்படியும் செய்து போலீலைத் திக்கு முக்காட வைத்து விட்டார்கள்.

என்னை ஏற்றிக் கொண்டு சென்ற இராமவிலாஸ் பஸ்ஸை சூழ்ந்துகொண்டு தீ வைத்துக் கொளுத்தி மேற்படி பஸ்ஸை சாம்பலாக்கி விட்டார்கள். அதன் பின்னர் தேவகோட்டையில் உள்ள சப்-கோர்ட்டை நடத்தக்கூடாது என்று மக்கள் கோஷம் போட்டு இருக்கிறார்கள்.

அதையும் மீறி கோர்ட்டை நடத்தியதால் மக்கள் கோபம் கொண்டு பக்கத்திலிருந்த பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோலைப் பிடித்து கோர்ட் கட்டிடத்தின்மீது ஊற்றி தீ வைத்து விட்டார்கள். போலீஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் கூட்டம் கலையவில்லை.

பல பேர் துப்பாக்கிப் பிரயோகத்தில் இறந்தார்கள். அங்கிருந்த கூட்டம் கோபங்கொண்டு புறப்பட்டு திருவாடானையை நோக்கி வந்தது. திருவாடானை வரும் வழியில் உள்ள கிராமங்களில் எல்லாம் இளைஞர்களும், பெரியோர்களும், உற்சாகமாக இக்கூட்டத்துடன் சேர்ந்து அவர்களும் திருவாடானையை நோக்கி வந்தார்கள்.

சுமார் 20,000க்கு மேற்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து திருவாடானை சப்-ஜெயிலுக்கு என்னை விடுதலை செய்ய வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் சப்ஜெயிலைச் சுற்றி இருந்த சர்க்கார் அலுவலகங்களான மாஜிஸ்ட்ரேட் கோர்ட், தாசில்தார் காரியாலயம், கஜானா அதிகாரி போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் போலீஸ் கான்ஸ்டெபிள்கள், அனைவரும் என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயிலுக்கு முன்பு வந்தார்கள். எல்லோரும் என்னிடம் என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்கள்.

நான் சொன்னேன் ‘20,000’ த்துக்கு மேல்பட்ட ஜனங்கள் வருவதால் அவர்களைத் தடுத்து, நிறுத்துவதோ, வன்முறையை உபயோகிப்பதோ இப்பொழுது உள்ள சூழ்நிலைக்குச் சரியாக இருக்காது. இது சுதந்திரப்போராட்ட வேகம், மக்களிடம் ஏற்பட்டிருக்கும்.உணர்ச்சியை மதித்து அவர்களுக்கு வழிவிட்டு நில்லுங்கள், அனைவரும் ஒதுங்கிக் கொள்வதுதான் இந்த நேரத்தில் செய்யக்கூடிய புத்திசாலித்தனமான காரியம் என்று அவர்களுக்கு ஆலோசனை கூறினேன்.

அவர்கள் சொன்னார்கள். நாங்களும் எங்கள் குடும்பமும் குழந்தை குட்டிகள் அனைவரும் பக்கத்திலுள்ள லையனில்தான் குடியிருக்கிறோம், வருகின்ற கூட்டம் எங்களையும் எங்கள் குடும்பத்தாரையும் கோபப்பட்டுத் தாக்கினால் என்ன செய்வது என்று கேட்டார்கள்.

அதைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். அதற்கு நான் பொறுப்பு என்று சொன்னேன். அப்போது அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டரின் பெயர் சூரப்புலி சுந்தரராஜ் ஐயங்கார் என்பது ஆகும்.

எனது ஆலோசனையை ஏற்றுக்கொண்டு நான் சொன்னபடி போலீஸார் தங்கள் உடைகள் அனைத்தையும் கழற்றி நான் இருந்த சப்-ஜெயிலுக்கு முன்னால் போட்டார்கள். எல்லோரையும் அவரவர் வீட்டுக்குப் போய் நிம்மதியாக இருக்கும்படி கூறினேன். அதன்படி அவர்கள் அனைவரும் செய்தார்கள்.

இது நடந்த சிறிது நேரத்திற்கெல்லாம் பல ஆயிரக் கணக்கான மக்கள் கையில் கடப்பாரை, கோடாரி, அரிவாள், ஈட்டி முதலிய ஆயுதங்களுடன் பலத்த கோஷம் போட்டுக் கொண்டு சப்-ஜெயிலை நோக்கி வந்தார்கள். பலர் ஜெயிலை உடை யென்றும் கட்டிடத்திற்கு தீ வை என்றும் பலவாறாகச் சத்தம் போட்டார்கள்.

கூட்டத்திற்குத்தலைமை வகித்து வந்தவர்களில் ஒருவரான எனது நண்பர் திருவேகம்பத்தூர் பால பாரதி செல்லத்துரை அவர்கள் எல்லோரையும் அமைதிப்படுத்தி நான் இருந்த சிறைக்கு முன்னால் உட்கார வைத்தார்கள். அவர் சொற்படி அனைவரும் சப்-ஜெயிலுக்கு முன்னால் இருந்த மைதானத்தில் உட்கார்ந்தார்கள்.

பின்னர் செல்லத்துரை அவர்கள் என்னிடம் வந்து “இப்பொழுது நாங்கள் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டார்.” நீங்கள் என்ன முடிவுடன் வந்திருக்கிறீர்கள் என்று நான் திருப்பிக் கேட்டேன்.

“இந்தச் சிறையை உடைத்து உங்களை விடுதலை செய்ய வந்திருக்கிறோம்” என்று சொன்னார். “சரி அப்படியே செய்யுங்கள்” என்று நான் சொன்னதும், அங்கு நின்ற சிறை வார்டன் ஓடி வந்து இதோ சாவி இருக்கிறது” என்று சாவியைக் கொடுத்தார். சாவி வேண்டியது இல்லை. உடைத்துதான் திறப்போம் என்று மக்கள் பெரும் முழக்கம் போட்டார்கள்.

அதன்படியே அவர்கள் கொண்டு வந்திருந்த கடப்பாரை முதலிய ஆயுதங்களால் என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயில் பூட்டை உடைத்துத் தகர்த்து கதவைத் திறந்தார்கள்.

பட்டப் பகல் 12 மணிக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள், சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தில் இம்மாதிரி சிறைக் கதவை உடைத்து ஒரு அரசியல் கைதியை விடுதலை செய்தது சரித்திரத்தில் அதுதான் முதல் தடவை.

அந்தச் சரித்திர சம்பவத்திற்கு நான் காரணமாக இருந்தேன் என்று நினைக்கும்போது இன்றும் நான் பெருமைப்படுகிறேன். இந்தியாவில் வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை எளியேனுக்குக் கிடைத்தது.

மக்களுடைய மாபெரும் சுதந்திர எழுச்சியின் வேகத்தில் நடைபெற்ற சக்தி மிகுந்த இந்தத் திருவாடனை ஜெயில் உடைப்புச் சம்பவம், தமிழகத்தின் ஒரு கோடியில் ராமேஸ்வரம் அருகில் நடைபெற்றதால் இந்தியா முழுவதும் விளம்பரம் இல்லாமல் அமுங்கி விட்டது.

தமிழ்நாட்டுத் தலைவர்களும், இச்சம்பவத்தின் பெருமையை உணரவில்லை. மதிப்பிற்குரிய ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் 1942 சிறையிலிருந்து தப்பியதே பெரிய வீரச்செயல் என்று நாடுபோற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் திருவாடானையில் மக்கள் திரண்டு சிறைச்சாலையை உடைத்து ஆங்கில ஏகாதிபத்தியம் கைதுசெய்து வைத்திருந்த ஒரு சுதந்திர போராட்ட வீரனை விடுதலை செய்ததை நாடு முழுமையாக அறிந்து கொள்ளவுமில்லை, பாராட்டவும் இல்லை.

விடுதலை செய்யப்பட்ட என்னைச் சுற்றி இருந்த மக்கள் என்னைத்தோளில் தூக்கிக்கொண்டு ஆனந்தக் கூத்தாடினார்கள் சிலபேர் நான் இருந்த சப்-ஜெயிலுக்குத் தீ வைத்தார்கள். வேறு சிலர் மாஜிஸ்ரேட் கோர்ட்டிற்கும், தாசில்தார் அலுவலகத்திற்கும் தீ வைத்தார்கள்.

அதன் பின்னர் போலீஸ் லைனை நோக்கி ஓட ஆரம் பித்தார்கள். அப்பொழுது நான் குறுக்கிட்டு “அங்கு ஓடாதீர்கள். அவர்கள் அனைவரும் நமக்காக வேண்டிய ஒத்தாசை செய்திருக்கிறார்கள்” என்று அவர்களிடம் சொன்னேன். சில பேர் போலீஸ்காரர்களை சும்மாவிடக் கூடாது என்றும் அவர்கள் வீடுகளுக்குத் தீ வைக்க வேண்டும் என்றும் சத்தம் போட்டார்கள்.

நான் அவர்களைத் தடுத்து அவர்கள் அனைவரும் நமது சகோதரர்கள், நமது சுதந்திர போராட்டத்திற்கு உறுதுணையாக உள்ளவர்கள். அவர்களை ஒன்றும் செய்யவேண்டாம். இதோ அவர்களது உடைகள் என்று கூறி, போலீஸ்காரர்களுடைய உடைகள் அனைத்தையும் மக்களுக்குக் காண்பித்தேன். அவர்கள் அந்த உடைகளை வாங்கித் தீயில் போட்டு பொசுக்கித் தங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்.

பின்னர் கூட்டத்தினர் அனைவரும் என்னைத் தூக்கிக் கொண்டு ஊர்வலமாகச் சென்றார்கள். அப்பொழுது என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயிலும், அதைச் சுற்றி இருந்த சர்க்கார் அலுவலகங்களும் கொழுந்து விட்டு எரிந்தன. அச்சமயம் சிலர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே புகுந்து அங்கிருந்த துப்பாக்கிகளை ஒருவரும், துப்பாக்கிக் குண்டுகளை இன்னொருவரும் துக்கிக் கொண்டு வெளியே வந்தனர். சிலர் துப்பாக்கிகளைக் கையில் ஏந்திக்கொண்டு சிப்பாய்களைப் போல் நடந்தனர்.

மக்கள் என்னை ஊர்வலமாக அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளியே செல்லும்போது தூரத்தில் போலீஸ் லாரிகள் வருவது தெரிந்தது. போலீஸ் லாரியைப் பார்த்து மக்கள் கோபாவேசப் பட்டார்கள். பலர் போலீஸ் லாரியை அடித்து நொறுக்க வேண்டும் என்று கூச்சல் போட்டார்கள். சிலர் போலீஸ் லாரியை நோக்கி அரிவாளை வீசிக்கொண்டு ஓடினார்கள்.

எல்லோரையும் சமாதானப்படுத்தி ரோட்டுக்கு பக்கமாக இருந்த பனங்காட்டுக்குள் இருக்கும்படி கேட்டுக் கொண்டேன். அதன்படி மக்கள் இருகூறாகப் பிரிந்து ரோடின் இரு மருங்கிலும் உள்ள பனங்காட்டுக்குள் பதுங்கிக் கொண்டார்கள்.

போலீஸ் லாரிகள் மெதுவாக ஊர்ந்து கொண்டு வந்தன. மக்கள் மறைந்திருப்பதை யூகித்தவர்கள் போல் போலீஸார் சுடுவதற்குத் தயார் நிலையில் லாரியில் நின்று கொண்டு இருந்தார்கள். ரோடு ஓரமாக மறைந்திருந்த ஒருவரை போலீஸார் பார்த்து விட்டனர். உடனே அவரை நோக்கிச் சுட்டனர். அவர்கள் சுட்டகுண்டு மேற்படி நண்பரின் தொடையை தொட்டுக் கொண்டு சென்று விட்டது.

உடனே மேற்படி நண்பர் பெரும் கூச்சல் போட்டு “எல்லாம் வெத்து வேட்டு வெளியே வாங்கடா” என்று கலவரப்படுத்தி விட்டார். மறைந்திருந்த மக்கள் அனைவரும் பெரும் கூச்சல் போட்டு கொண்டு வெளியே வந்து போலீசாரைத் தாக்க ஓடினார்கள்.

இச்சமயம் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் ஒரு பக்கமும், குண்டு வைத்திருந்தவர்கள் மறு பக்கமும் பிரிந்து இருந்தார்கள். அதனால் மக்களிடம் இருந்ததுப்பாக்கியினால் போலீஸாரைச் சுட இயலாமல் போய்விட்டது. குண்டுகளைக் கையில் வைத்திருந்த கிராமவாசிகள் மட்டும், மேற்படி குண்டுகளை எறிந்தால் வெடிக்குமா? வெடிக்காதா? என்று தெரியாததால் அவைகளைச் சரமாரியாக வீசிக்கொண்டு இருந்தார்கள்.

இந்நிலையில் போலீஸார் தங்களைக் காத்துக் கொள்ளச்சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். குண்டுகளை பொழிந்து தள்ளினர். என் இடதுகையில் ஒரு குண்டு பாய்ந்தது. மக்களின் முன்னால் நின்ற என் மீது மேலும் குண்டுபடக்கூடாது என்று பலபேர் மாறி மாறி என் முன்னால் நின்று தங்கள் மார்பில் போலீஸாரின் குண்டுகளை ஏற்று வீர மரணம் எய்தினார்கள். இம்மாதிரி தியாகம் செய்த பெரு வரலாற்றை நான் படித்ததும் இல்லை, கேட்டதும் இல்லை. இந்த மாபெரும் தியாகத்தை இன்று நினைத்தாலும் எனது மெய் சிலிர்த்துவிடுகிறது.

பல பேர் ஒரு தேசபக்தனைக் காப்பதற்கு உயிரைக் கொடுப்பது என்பது வீரகாவியமாகப் பாடவேண்டிய அத்தியாயமாகும். எவ்விதப் பிரதி பிரயோசனமும் கருதாமல் தங்கள் இன்னுயிரை ஈந்த அந்த மாபெரும் தியாகிகளுக்கு இந்த நாடு என்றும் தலை தாழ்த்தி வணங்கக் கடமைப்பட்டுள்ளது.

இப்படிப் பல பேரைச் சுட்டு வீழ்த்தி விட்டு போலீஸார் தப்பி ஓடிவிட்டார்கள். சிலர் இறந்து வீழ்ந்ததும் பலர் உடம்பிலிருந்து இரத்தம்தெறித்ததும், அங்கு கூடியிருந்த மக்கள் ஒரு நிமிடத்தில் எங்கே சென்றார்கள் என்று தெரியாமல் ஒடிவிட்டனர்.

நானும் எனது நண்பர் இராமநாதனும் பிணக்குவியலின் மத்தியில் நின்று கொண்டு இருந்தோம். உயிர் போன பலரும், உயிர்போகும் தருவாயில் சிலரும், கை, கால், கண்போன சிலரும் ஒரே இரத்தக்காடாக முனகலும் மரணக் கூச்சலும், நிறைந்திருந்த அந்த இடத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திக்பிரமை பிடித்து 10 நிமிடத்துக்கு மேல் நின்று கொண்டு இருந்தேன். இரவு மணி 7ஆயிற்று. வெளிச்சம் மங்கி இருள் பரவிற்று. பனங்காடு, ‘சலசல’ என்ற சத்தம், மரத்தினுடன் மரங்கள் உராயும் போது ஏற்பட்ட பயங்கரமான ‘கீரிச், கீரிச்’ என்ற ஒருவித அச்சமூட்டும் சத்தம். இந்நிலையில் நரியின் ஊளை வேறு, சுற்றிலும் இறந்து கிடந்த தேச பக்த தியாகிகளைப் பார்த்து ஒரு முறை அவர்களின் பாதாரவிந்தங்களுக்கு வணக்கம் தெரிவித்து விட்டுநகர்ந்தேன்.

இருட்டில் மேடு பள்ளம் முள் கல் இவைகளில் தட்டுத் தடுமாறி நடந்தோம். காலெல்லாம் கிழிசல் ஏற்பட்டு ரத்தம் வடிந்து கொண்டே வந்தது. கையில் குண்டு பாய்ந்த இடத்தில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. சுமார் நான்கு மைல் வந்ததும் தலை சுற்றியது. மயக்கமாக வந்தது. அதே இடத்தில் கீழே தடால் என்று மயக்கமாக விழுந்து படுத்து விட்டேன். என் நண்பரும் மயங்கிப் படுத்து விட்டார். மயங்கிய நிலையில் நன்றாகத் தூங்கி விட்டோம்.

துங்கிக் கொண்டிருந்த எங்களை சிலர் தட்டி எழுப்பினார்கள். சுமார் 10 பேர் நின்று கொண்டிருந்தார்கள். போலீசார் என்று நினைத்து விட்டோம். ஆனால் அவர்கள் போலீசார் அல்ல. அதற்கு முன் தினம் இறந்து போன உறவினர் ஒருவருக்குப் பால் ஊற்றி அஸ்தி எடுத்துப் போக வந்திருக்கிறார்கள் அது சரி அவர்கள் ஏன் நாங்கள் படுத்திருந்த இடத்திற்கு வந்தார்கள்? எதற்காக எங்களை எழுப்பினார்கள்?

சொன்னால் நம்பமாட்டீர்கள், நாங்கள் அவர்கள் உறவினரைப் புதைத்திருந்த இடத்திற்கு மேல்தான் அவ்வளவு நேரம் அந்த இரவு முழுதும் படுத்திருந்தோம். இதை அறிந்ததும் எங்கள் மனோநிலை எப்படி இருந்திருக்கும்?