சோனாவின் பயணம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

நேரு பால புத்தகாலயம்-25


சோனாவின் பயணம்




தாரா திவாரி


தமிழாக்கம் :

அழ. வள்ளியப்பா

ஓவியம் :

மிக்கி படேல்






நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா,

புது தில்லி

ஓர் அம்மா ஒட்டகமும் சோனு என்ற அதனுடைய குட்டியும் பாலைவனத்தில் மெதுவாக நடந்து கொண்டிருந்தன. அன்று வெய்யில் மிகவும் கடுமையாக இருந்தது. பிரகாசமான சூரிய வெளிச்சத்தில், சுட்டுப் பொசுக்கும் மஞ்சள் நிற மணல் பளபளத்தது. திடீரென்று சோனா நின்றது; மணலில் பாதங்களைப் புதைத்துக் கொண்டு,

“என்னால் இனி கொஞ்சம் கூட நடக்க முடியாது. ஒரே தாகமாக இருக்கிறது. எனக்குத் தண்ணீர் வேண்டும்” என்று முணுமுணுத்தது.

உடனே அம்மா ஒட்டகம் கீழே குனிந்து அதைப் பார்த்து, “கண்ணே, நீ தாகமாயிருப்பாய் என்பது எனக்குத் தெரியும். அதோ பார், தண்ணிர்! வெகு அருகில் உள்ளது” என்று கூறியது. 

சிறிது தூரத்தில் வரிசையாக இருந்த மரங்களை நோக்கி அது தன் கழுத்தை நீட்டிப் பார்த்தது. பிறகு, “அதோ, அந்த மரங்கள் உனக்குத் தெரிகிறதா? பாலைவனத்தில் எங்கேனும் மரங்கள் இருந்தால், அங்கே நீர் இருக்கும். அங்கே ஒரு கிராமம்கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும், அங்கே மற்ற மிருகங்கள் இருக்கும். நீ அவற்றுடன் விளையாடலாம். வா, போகலாம்” என்றது. 

“என்ன அழகு!” என்று கூறி சோனா வேகமாக நடக்கத் தொடங்கியது. விரைவில் அவை அந்த மரங்கள் இருந்த இடத்தை அடைந்தன. அம்மா தன்னுடைய தலையைத் தூக்கி மோப்பம் பிடித்தது. பிறகு, இடது புறம் திரும்பி, “இந்த வழியாக வா. தண்ணிர் வெகு அருகில் இருப்பதை மோப்பத்தால் கண்டுபிடித்து விட்டேன்” என்றது.

உயரமான மரங்களுக்கும், அடர்ந்த புதர்களுக்கும் நடுவே, தெளிந்த குளிர்ச்சியான நீர் நிரம்பிய ஒரு குளத்தை அவை கண்டன. குனிந்து, அந்நீரை வேகமாகக் குடித்தன. அருகிலே ஒரு மரத்தில் உட்கார்ந்திருந்த காகம், அவைகளைக் கவனித்துக்கொண்டிருந்தது.

சோனாவும், அதன் அம்மாவும் தண்ணீர் குடித்து முடித்ததும், “அடேயப்பா! நீங்கள் எவ்வளவு தண்ணிர் குடிக்கிறீர்கள்?” என்று பெருமூச்சு விட்டது, காகம். பிறகு, அந்தக் காகம் தன்னுடைய தலையை இப்படியும் அப்படியுமாக அசைத்துக் கொண்டே, “நான் பார்த்த மற்ற மிருகங்களே யெல்லாம் விட நிச்சயமாக நீங்கள்தான் அதிகமாகக் குடிக்கிறீர்கள். குடித்துக் குடித்தே இந்தக் குளத்தைப் பொட்டலாக்கி விடுவீர்கள் போலிருக்கிறதே!” என்றது. 

இதைக் கேட்டுச் சிரித்தது அம்மா ஒட்டகம். “இல்லை, இல்லை. எங்களால் அப்படிச் செய்ய முடியாது. ஆனாலும், நீ சொன்னதில் உண்மை இருக்கிறது. ஒட்டகங்களாகிய நாங்கள் ஒரே நேரத்தில் நிறைய நிறையத் தண்ணிர் குடிப்போம்.”

“ஏன் ?” என்று கேட்டது காகம்.

“நாங்கள் பெரும்பாலும் பாலைவனத்தில்தான் வசிக்கிறோம். அங்கு தண்ணிர் கிடைப்பது அரிது. ஆனால் நாங்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஏனென்றால், தண்ணீரே இல்லாமல் எங்களால் பல நாட்கள் இருக்க முடியும். நாங்கள் எங்களுடைய வயிற்றில் நீரைச் சேமித்து வைக்கத் தனியாக ஒர் அறை உள்ளது. அது தவிர, எப்போது எங்களுக்கு நீர் கிடைக்கவில்லையோ அப்போது எங்கள் உடலே நீரை உற்பத்தி செய்யும். நாங்கள் இதற்குமுன் எப்போது நீர் குடித்தோம் என்று உனக்குத் தெரியுமா?”

“எப்போது?” என்று கேட்டது காகம். அதிசயமான இந்த மிருகங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள அதற்கு ஆவல்.

“ஐந்து நாட்களுக்கு முன்பு” என்று பதில் கூறியது அம்மா ஒட்டகம்.

“என்ன ஐந்து நாட்களா!” என்று ஆச்சரியத்துடன் கூவிய காகம், மற்ற மிருகங்களிடம் இதைப் பற்றிச் சொல்வதற்காகப் பறந்து சென்றது.


இதைக் கேட்ட சோனாக்குப் பெருமையாக இருந்தது.

“நாம் மிகவும் சிறந்தவர்கள் இல்லையா, அம்மா” என்றது.

“நிச்சயமாக” என்றது அம்மா, இரண்டு ஒட்டகங்களும் மர நிழலில் உட்கார்ந்தன. உடனே, அம்மாவுக்குத் தூக்கம் வந்து விட்டது.

“சோனா, நீயும் தூங்கு” என்றது.

“இல்லை அம்மா, நான் சுற்றிப் பார்க்கப் போகிறேன்.” என்று கூறி விட்டுப் புறப்பட்டது, சோனா. 

இதற்குள் அந்தக் காகம் ஒட்டகங்களைப் பற்றிய செய்தியைப் பரப்பி விட்டது. காகம் சொன்னதை வயதான மிருகங்கள் அலட்சியப்படுத்தின. ஆனால் குட்டி மிருகங்களோ அந்த அதிசய மிருகங்களைக் காண உடனே புறப்பட்டு விட்டன. அவை புதர்களின் பின்னாலும் பாறைகளின் பின்னாலும் ஒளிந்து ஒளிந்து சென்றன, ஒட்டகங்களின் கண்களில் படாமலே அவற்றைப் பார்த்துவிட வேண்டும் என்பதற்காக. 

அவை சோனா அலைந்து கொண்டிருப்பதைப் பார்த்தன. வாயாடி முயல் புதரிலிருந்து வெளியே குதித்து, பின்னங்கால்களின் மேல் உட்கார்ந்து கொண்டு, சோனாவை உற்றுப் பார்த்தது. திடீரென்று அது உரக்கச் சிரித்தது.

“யார் நீ? எதற்காகச் சிரிக்கிறாய்?” என்று சோனா, கோபத்துடன் கேட்டது.

“நீ பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறாய். நீ ஓர் அதிசயமான மிருகம் என்று காகம் சொன்னது. ஆனால் நீ அதிசயமாகவா இருக்கிறாய்? அவலட்சணமாக, அசிங்கமாக இருக்கிறாய். நீள நீளமான கால்கள், வேடிக்கையான கூனல் முதுகு, நெட்டைக் கழுத்து...ஹஹ்ஹஹ்ஹா” என்று கூறிச் சிரித்தது, முயல். 

ஆடு, பன்றி, மான், நரி போன்ற மற்ற மிருகங்களும் சிரிக்க ஆரம்பித்தன. அவை சோனாவைச் சுற்றி நின்று கொண்டு கேலி செய்ய ஆரம்பித்தன.

“உன் பெயர் என்ன? உன் முதுகிலே பெரிதாகப் புடைத்து இருக்கிறதே, அது என்ன? இனி, உன்னை நாங்கள் கூனன் என்று தான் கூப்பிடுவோம்.” என்று கூறி பன்றி சிரித்தது.

“இல்லை, இல்லை. நாம் இதைத் தட்டைக் கால் என்று கூப்பிடுவோம். இதோ பாருங்கள், அருவருப்பான, நீளமான கால்கள், வேடிக்கையான தட்டையான பாதங்கள்?” என்று கூறியது ஆடு.

ஆடு இப்படிக் கூறிக் கொண்டே மேலும் கீழும் குதித்த வாறு அழகான தன் மெல்லிய கால்களைக் காட்டியது.

“இதனுடைய நெட்டைக் கழுத்தைப் பற்றி என்ன சொல்வது??’ என்று கூறிச் சிரித்து விட்டு, “இதனுடைய வாலைப் பார்த்தீர்களா?” என்று கூறிச் சோனாவின் குட்டையான வாலைச் சுட்டிக்காட்டியது நரி. பிறகு, “என்னுடைய அழகான வாலைப் பாருங்கள்” என்று பெருமையுடன் கூறித் தன்னுடைய அடர்த்தியான வாலை அசைத்துக் காட்டியது.

“ஏன் அதைக் கேலி செய்கிறீர்கள்? என்னுடைய வாலைப் பாருங்கள், இதுவும் அது மாதிரி சின்னதுதான்” என்றது, அன்பும் பண்பும் கொண்ட மான். 

பாவம், சோனாவுக்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்லை. மிகுந்த வருத்தத்துடனும் கோபத்துடனும் அம்மா விடம் ஓடியது. போகும்போது, அவற்றின் சிரிப்பொலி காதில் விழுந்து கொண்டேயிருந்தது. மான் ஒன்றுதான் அதைக் கேலி செய்ய வில்லை.

அம்மாவைப் பார்த்ததும், சோனா ‘ஓ’ என்று அழ ஆரம்பித்து விட்டது.

“என்ன? என்ன?” என்று அம்மா கேட்டது. சோனா மேலும் மேலும் அழ ஆரம்பித்தது. கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

“எனக்கு அந்த மிருகங்களைப் பிடிக்கவில்லை. அவை மிகவும் பொல்லாதவை” என்றது சோனா. “அவைகள் எல்லாம் என்னைக் கேலி செய்தன. ‘கூனன்’ ‘தட்டைக்கால்’ என்று எனக்குப் பட்டப்பெயர் கொடுத்து அழைத்தன. நான் இனி அவைகளுடன் விளையாடவே மாட்டேன்.” என்று அழுதுகொண்டே, நடந்தவற்றையெல்லாம் அம்மாவிடம் கூறியது.

“அழாதே, அவை உன்னைப் பார்த்து, விளையாட்டுத் தனமாகச் சிரிக்கின்றன. நமக்கு ஏன் திமில் இருக்கிறது என்பது அவைகளுக்குத் தெரியாது. தெரிந்தால், எங்களுக் கும் திமில் வேண்டும், என்று அவை கேட்கும். ஏன், நம்மைப் போல் தட்டையான கால்கள் கூட வேண்டுமென்று ஆசைப்படும்” என்றது அம்மா. 

“ஆனால், அவை அசிங்கமாக இருக்கின்றனவே, எதற்காக அவை இருக்கின்றன?”

“நாம் எப்படித் தண்ணீரைச் சேமித்து வைக்கிறோம் என்று சொன்னேனே, உனக்கு நினைவிருக்கிறதா? நாம் கொழுப்பைச் சேமித்து வைப்பது நம்முடைய திமிலில்தான். நமக்கு எதுவுமே சாப்பிடக் கிடைக்காத நாட்களில் அந்தக் கொழுப்புத்தான் நமது உணவாகும்” என்றது அம்மா.

“அது எப்படி?” என்று கேட்டது சோனா

“நாம் சாப்பிடும் உணவில் ஒரு பகுதி கொழுப்பாக மாறி, திமிலில் போய்ச் சேருகிறது. பாலேவனத்தில் சில நாட்களில் நமக்கு மிக மிகக் குறைவான உணவே கிடைக்கும். சிலசமயம் கொஞ்சம் கூட உணவு கிடைக்காது. அப்போது, பசியால் வாடி வதங்காமல் நம்மைப் பாதுகாப்பது இந்தக் கொழுப்புத் தான். இந்த இடத்தைப் போல உணவும் நீரும் உள்ள ஒரு பாலைவனச் சோலையை அடையும் வரை, நாம் நடந்து செல்வதற்கு வேண்டிய சக்தியையும் அது கொடுக்கிறது?” என்று பதில் கூறியது அம்மா.



“அப்படியானால் நம்முடைய நீளமான கால்களும் அருவருப்பான தட்டைப் பாதங்களும் எதற்காக உள்ளன?” என்று கேட்டது சோனா.

“அவற்றை அருவருப்பானவை என்று சொல்லாதே. அவை மிகவும் பயனுள்ளவை. நம்முடைய நீண்ட கால்களால், நாம் வேகமாக நடக்கலாம். நம்முடைய பாதங்கள் வட்ட மாகவும், தட்டையாகவும் இல்லாதிருந்தால், அவை மணலில் புதைந்து சிக்கிக்கொள்ளும். இதெல்லாம் மற்ற மிருகங்களுக்குத் தெரியாது. தெரிந்தால், அவை நம்மீது பொறாமைப்படும்” என்றது அம்மா.


“அப்படியா! சரி, நம்முடைய நீண்ட கழுத்தால் என்ன பயன் ?” என்று மிகுந்த மகிழ்ச்சியோடு சோனா கேட்டது.

“நமது கால்கள் நீளமாக இருக்கின்றன. அதனால் கழுத்தும் நீளமாகத் தானே இருக்க வேண்டும்? இல்லாதுபோனல் எப்படி நாம் நிலத்தில் உள்ளதை எடுப்போம்? மேலும், நம் முடைய நீளமான கழுத்து உயரமான மரங்களில் உள்ள இலைகளைப் பறிக்கவும், வெகு தூரம் பார்க்கவும் உதவுகிறது. நம் முடைய திமில், நீளமான கால்கள், தட்டையான பாதம், நீண்ட கழுத்து - எல்லாமே நமக்கு மிகவும் பயன்படுகின்றன. அவைகளுக்காக நீ பெருமைப்பட வேண்டும்” என்று பதில் கூறியது அம்மா.

இப்போது, சோனா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. அம்மா தனக்காக ஒடித்து வைத்திருந்த பசுமையான இலைகளேயெல்லாம் சோனா தின்றது. பிறகு அது தூங்கி விட்டது.


மறுநாள் அது மறுபடியும் புறப்பட்டது. முயல், நரி, பன்றி, ஆடு முதலியவை விளையாடிக்கொண்டிருந்தன. சோனா அவைகளைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. தலையை உயர்த்திக்கொண்டு அது தன் வழியே சென்றது.

“நாம் அதைப் பின் தொடர்வோம்” என்றது நரி,

எல்லா மிருகங்களும் சிரித்துக்கொண்டும், கேலி செய்து கொண்டும் அதன் பின்னால் சென்றன. சோனா அவைகளைக் கவனிக்கவே இல்லே. அது நடந்து கொண்டே இருந்தது.

வழியிலே உள்ள குளக்கரையில் ஒர் அத்தி மரம் இருந்தது. அதில் பழுத்திருந்த பெரிய பழங்கள் ஆசையைத் தூண்டின. சோனா தன் தலையை உயர்த்தி சில அத்திப் பழங்களைப் பறித்து ருசி பார்த்தது. பழத்தின் அழகைப் போலவே அதன் ருசியும் மிக நன்றாக இருந்தது. சோனா வயிறு நிறையத் தின்றது. மற்ற மிருகங்கள் அதைக் கவனித்தன. அவை எல்லாமே அத்திப் பழம் தின்ன ஆசைப்பட்டன. ஆனால், கிளைகள் மிக உயரத்தில் இருந்தன.

"நாம் பக்குவமாகக் கேட்டால் அது நமக்குக் கொஞ்சம் பழங்கள் தந்தாலும் தரும்” என்றது மான்.

“நான் அதைக் கேட்கப் போவதில்லை. நமக்கு வேண்டிய பழங்களை நான் பறித்துத் தருகிறேன். என்னால் எதில் வேண்டுமானலும் ஏற முடியும் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே!” என்று கர்வத்துடன் கூறியது ஆடு.


பின் கால்களால் நின்று கொண்டு, முன்கால்களைத் தூக்கி அத்தி மரத்தில் வைத்தது ஆடு, கிளையை நோக்கித் தன் கழுத்தை நீட்டியது. எட்டவில்லை. கழுத்தை நீட்டி நீட்டிப் பார்த்தது. அப்போது, பாவம், அது தடுமாறிக் குளத்திற்குள் விழுந்து விட்டது.

“உதவி உதவி!!” என்று அது கதறியது. 

அதனுடைய நண்பர்கள் எல்லாம் குளக்கரைக்கு ஒடி வந்தன. ஆனால், அவைகளால் அதற்கு உதவ முடியவில்லை. எல்லாமே மிகச் சிறிய மிருகங்கள். அவைகளால் எப்படி ஆட்டை நீரிலிருந்து வெளியேற்ற முடியும்? அவை திரும்பிச் சோனாவைப் பார்த்தன.

“நீ மிகவும் பெரியவன். தயவுசெய்து அதற்கு உதவி செய்” என்று எல்லாம் ஒன்று கூடிக் கெஞ்சின.

உடனேயே சோனா குளத்திற்குள் இறங்கியது. “என்னுடைய முதுகிலே ஏறிக்கொள்” என்று கூறிக் குனிந்து கொண்டது. ஆடு நன்றியுடன் அதன் முதுகில் ஏறிக் கொண்டது. சோனா பத்திரமாக அதைக் கரை சேர்த்தது. 

“மிகவும் நன்றி. நீ மிக மிக நல்லவன். நான் உன்னைக் கேலி செய்ததற்கு மன்னித்து விடு. நாம் நண்பர்களாக இருப்போம்” என்றது ஆடு.

“சரி வா; எங்களுடன் விளையாடலாம். நீ ஆட்டை ஏற்றிச் சென்றாயே, அதேபோல் எனக்கும் ஒரு சவாரி கொடு” என்றது முயல்.

“வா” என்று மகிழ்ச்சியுடன் அழைத்தது சோனா.

அன்றிலிருந்து அவைகள் யாவும் நல்ல நண்பர்களாகி விட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=சோனாவின்_பயணம்&oldid=1519954" இலிருந்து மீள்விக்கப்பட்டது