தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்

விக்கிமூலம் இலிருந்து

5.தேவும் தலமும்

தமிழ் நாடு, என்றும் தெய்வ மணங்கமழும் திருநாடு.பல பழமையான ஊர்களில் இன்றும் ஆண்டவன் கோயிலே நடுநாயகமாக அமைந்திருக் கின்றது.அப்பெருமானது தேர் ஓடும் திரு வீதிகளே சிறந்த தெருக்களாகத் திகழ்கின்றன.இத்தகைய பண்பு வாய்ந்த நாட்டில் பல ஊர்கள் இறைவ னோடு தொடர்புற்று விளங்குதல் இயல்பேயன்றோ?

பழங்காலத்தில் ஆண்டவனை மரங்களிலும் சோலைகளிலும் தமிழ் நாட்டார் வழிபட்டார்கள். ஈசன் கல்லாலின் கீழிருந்து நல்லார் நால்வர்க்கு உறுதிப் பொருளை உணர்த்திய காரணத்தால் ஆலமர் கடவுள் ஆயினார்.முருகவேள் கடம்ப மரத்தில் விரும்பி உறைதலால் கடம்பன் என்று பெயர் பெற்றார்.2 பிள்ளையார் அரச மரத்தடியில் அமர்ந்திருக்கின்றார்.

காவிரிக் கரையில் அமைந்த நெடுஞ்சோலையில் ஒரு வெண்ணாவல் மரத்திலே ஈசன் வெளிப்பட்டார்.இன்னும்,காஞ்சி மாநகரத்தில் இறைவன் மாமரத்தின் அடியிற் காட்சியளித்தார். அம் மாமரமே கோயிலாய் ஏகாம்பரம் என்றும், ஏகம்பம் என்றும் பெயர் பெற்றது.4

இன்னும், தமிழ் நாட்டில் வாழ்ந்த ஆன்றோர் பலர், மரங்களின் கீழிருந்து மெய்யுணர்வு பெற்றுள்ளார்கள். திருவாசகம் பாடிய மணிவாசகர் குருந்த மரத்தடியில் ஈசன் திருவருளைப் பெற்றார். திருமால் அடியார்களிற் சிறந்த நம்மாழ்வார் புளியமரத்தின் கீழ் அமர்ந்து புனிதராயினார்.5

இங்ஙனம் சிறந்து விளங்கிய மரங்களும் சோலைகளும் இறைவனை வழிபடுதற்குரிய கோயில்களாயின.திருக்குற்றாலத்தில் உள்ள குறும்பலா மரத்தைத் திருஞான சம்பந்தர் நறுந்தமிழாற் பாடியுள்ளார்.6

நறுமணம் கமழும் செடி கொடிகள் செழித்தோங்கி வளர்ந்த சூழல்களிலும் பண்டைத் தமிழர் ஆண்டவன் அருள் விளங்கக் கண்டார்கள். தேவாரத்தில் கொகுடிக் கோயில் என்னும் பெயருடைய ஆலயமொன்று பாடல் பெற்றுள்ளது. கொகுடி என்பது ஒருவகை முல்லைக் கொடி. எனவே, நல்மணம் கமழும் முல்லையின் அடியில் அமைந்த திருக்கோயில் கொகுடிக் கோயில் ஆயிற்று. இன்னும், தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று ஞாழற் கோயில் என்று குறிக்கப் படுகின்றது. ஞாழல் என்பது கொன்றையின் ஒரு வகை. கொன்றையங் கோயிலே ஞாழற் கோயில் என்று பெயர் பெற்றது.

காவும் காடும்

நிழல் அமைந்த சோலைகளும், நெடிய காடுகளும், இனிய பொழில்களும் வனங்களும் பாடல் பெற்ற பழம் பதிகளாகத் தமிழ் நாட்டில் விளங்கக் காவும் காடும் காணலாம். அவற்றுள் சில தேவாரப் பாட்டிலே காணப்படுகின்றன.

காவிரிக் கரையில் உள்ளதொரு பெருஞ் சோலையிற் காட்சியளித்த ஈசனை ஒரு வெள்ளானை நாள்தோறும் நன்னீராட்டி, நறுமலர் அணிந்து வழிபட்டமையால் திருவானைக்கா

திரு ஆனைக்கா என்று அத்தலத்திற்குப் பெயர் வந்த தென்பர்.அக்காவிலுள்ள திருக்கோவில் ஜம்புகேச்சுரம் எனப்படும்.

திருக்கோலக்கா

சீகாழிக்கு அருகே திருக்கோலக்கா என்னும் சோலைப்பதி உள்ளது.அப்பதியில் இளங்கையால் தாள மிட்டு இனிய தமிழ்ப்பாட்டிசைத்தார் திருஞானசம்பந்தர்.இப்பாடலுக்கு இரங்கிய ஈசன் பிள்ளைப் பெருமானுக்குப் பொற்றாளம் பரிசாக அளித்தார் என்றும்,அன்று முதல் கோலக்காவில் உள்ள கோயில் திருத்தாள முடையார் கோயில் எனப் பெயர் பெற்ற தென்றும் கூறுவர்.10

ஏனையாக்கள்

இன்னும்,ஒரு நெல்லி வனத்தில் ஈசன் காட்சி யளித்தமையால் திரு நெல்லிக்கா என்னும் பெயர் அதற்கமைந்தது.திருவிடை மருதூரின் அருகேயுள்ள திருக்கோடிகா என்பது மற்றொரு சோலைக் கோவில்.11 வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ஐந்து மைல் துரத்திலுள்ள குரங்குக்கா என்பது மந்திச்சோலை.பாலைவனத்திலும் கொற்றவை என்னும் வீரத் தெய்வத்தைச் சோலையில் வைத்து மறவர்கள் வழிபட்ட முறை பழைய நூல்களிற் குறிக்கப்படுகின்றது.12

காடுகள்

ஈசன் உறையும் காடுகளும் தேவாரப் பாடல்களால் இனிது விளங்கும். திருமறைக்காடு முதலிய காட்டுத் திருப்பதிகளை பாசுரத்திலே தொகுத்துப் பாடினார் திருநாவுக்கரசர்.13 திருமறைக்காடு முதலாகத் திருவெண்காடு ஈறாக எட்டுப்பதிகள் அப் பாட்டிலே குறிக்கப்படுகின்றன.

திருமறைக்காடு

இக்காலத்தில் வேதாரண்யம் என வழங்கும் திருமறைக்காடு மூவர் தேவாரப் பாடலும் பெற்ற மூதூராகும்.மறைவனம் என்றும்,வேதவனம் என்றும் திருஞான சம்பந்தர் அப்பதியைக் குறித்தருளினார்.14 நான் மறைகளும் ஈசனை வழிபட்ட இடம் திருமறைக் காடு என்பர்.

“சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம் பொழில்சூழ் மறைக்காடு”

என்னும் தேவாரத்தில் அவ்வூர்ப் பெயரின் வரலாறு விளங்குகின்றது.

தலைச்சங்காடு

காவிரியாற்றின் மருங்கே அமைந்த தலைச்சங்காடு திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றது.அப்பதியில் கட்டுமலை மேலுள்ள திருக்கோயிலில் அமர்ந்த இறைவனை,

“கூடஞ்சூழ் மண்டபமும் குலாய வாசற் கொடித் தோன்றும்
மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே”

என்று அவர் பாடியுள்ளார். இப்பொழுது தலையுடையவர் கோயிற் பத்து என்னும் பெயரால் அப்பதி வழங்கும்.15

தலையாலங்காடு

தேவாரப் பாமாலை பெற்ற தலையாலங்காடு தென்னிந்திய வரலாற்றிலும் பெயர் பெற்ற ஊராகும்.அது சங்க இலக்கியங்களில் தலையாலங்கானம் என்று குறிக்கப்படுகின்றது.அப்பதியில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும், ஏனைய தமிழ் வேந்தர் இருவருக்கும் கடும்போர் நிகழ்ந்த தென்றும், அப்போரில் பாண்டியன் பெற்ற வெற்றியின் காரணமாகத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் என்னும் பட்டம் பெற்றான் என்றும் பண்டைய இலக்கியம் கூறும். இத்தகைய ஆலங்காட்டைத் திருநாவுக்கரசர் பாடியருளினார்.16

சாய்க்காடு

புலவர் பாடும் புகழுடைய பூம்புகார் நகரத்தைச் சார்ந்தது திருச்சாய்க் காடாகும். தேவாரத்தில் பூம்புகார்ச் சாய்க்காடு என்றும், காவிரிப்பூம் பட்டினத்துச் சாய்க்காடு என்றும்,அப்பதி குறிக்கப் படுகின்றது.17 இக்காலத்தில் சாயா வனம் என்பது அதன் பெயர்.18

திருக்கொள்ளிக்காடு

திருநெல்லிக்காவுக்குத் தென் மேற்கேயுள்ளது கொள்ளிக் காடு.அப்பதியைப் பாடியருளிய திருஞானசம்பந்தர்,

“வெஞ்சின மருப்போடு விரைய வந்தடை
   குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே”

என்று ஒரு பாசுரத்திற் குறித்தமை திருக்கொள்ளிக் யால் கரியுரித்த நாயனார் கோவில் காடு என்னும் பெயர் அதற்கு அமைவதாயிற்று. இப்பொழுது அவ்வூர் தெற்குக் காடு என வழங்கும்.19

திருவாலங்காடு

தொண்டை நாட்டுப் பழம் பதிகளுள் ஒன்று திரு ஆலங்காடு. அது பழையனூரை அடுத்திருத்தலால் பழையனுர் ஆலங்காடு என்று தேவாரத்திற் குறிக்க பெற்றுள்ளது.20 அது தொண்டை நாட்டு மணவிற் கோட்டத்தில் அமைந்த ஊர் என்று சாசனம் கூறும். மூவர் பாமாலையும் பெற்ற அம்மூதூர் காரைக்கால் அம்மையார் சிவப்பேறு பெற்ற பெருமையும் உடையதாகும்.

பனங்காடு

பழங்காலத்தில் தொண்டை மண்டலத்துக் கலியூர்க் கோட்டத்தைச் சேர்ந்த கழுமல நாட்டில் பனங்காடு என்னும் பதி அமைந்திருந்த தென்று சாசனம் கூறும்:21 பனங்காட்டின் இடையே பரமன் கோயில் கொண்டமையால் பனங்காட்டூர் என்பது அவ்வூரின் பெயராயிற்று.22 அப்பதியில் அமர்ந்த பெருமானை,

“பாட்டூர் பலரும் பரவப் படுவாய்
பனங்காட் டுரானே
மாட்டுர் அறவா மறவா துன்னைப்
பாடப் பணியாயே”

என்று சுந்தரர் பாடியுள்ளார். இக்காலத்தில் வட ஆர்க்காட்டுச் செய்யார் வட்டத்தில் உள்ளது திருப்பனங்காடு.

மற்றொரு பனங்காட்டூரும் தேவாரப் பாடல் பெற்றதாகும்.விழுப்புரத்திற்கு வடக்கே ஐந்து மைல் அளவிலுள்ள பனையபுரம் என்னும் ஊரும் பனங்காட்டூர் என்பர். இப்பகுதியைப் பாடியருளிய திருஞானசம்பந்தர், “புறவார் பனங்காட்டுர்” என்று பாசுரந்தொறும் குறித்தலால், அதுவே அதன் முழுப் பெயர் என்று கொள்ளலாகும்.23 திருவெண்காடு

மூவர் தேவாரமும் பெற்றுள்ள மூதுர்களில் ஒன்று திருவெண்காடு.வடமொழியில் அது சுவேதவனம் எனப்படும்.வேலைசூழ் வெண்காடு என்று தேவாரம் பாடுதலால் அத்தலம் கடலருகேயமைந்த காடு என்பது இனிது விளங்கும்.24 சுவேதகேது என்னும் மறையவன் ஈசனை வழிபட்டுக் காலனைக் கடந்த இடம் திருவெண்காடு என்பர்.25 அங்குள்ள முக்குளம் என்னும் தடாகமும் தேவாரத்தில் போற்றப்படுகின்றது.

திருவேற்காடு

சென்னைக்கு அணித்ததாக வுள்ள காடுவெட்டியாற்றின் கரையில் அமைந்துள்ளது திருவேற்காடு.அறுபத்து மூன்று திருத்தொண்டர் களுள் ஒருவராகிய மூர்க்க நாயனார் பிறந்தருளிய அப்பதி திருஞான சம்பந்தால் பாடப்பெற்றுள்ளது.

திருக்காரைக்காடு

இன்னும்,காஞ்சி மாநகரின் ஒருசார், காரைச் செடிகள் நிறைந்த கானகத்தில் ஒரு நறுமலர்ப் பொய்கையின் அருகே ஈசன் திருக்கோயில் எழுந்தது.

“தேர்ஊரும் நெடுவீதிச் செழுங்கச்சி மாநகர்வாய் நீர்ஊரும் மலர்ப்பொய்கை நெரிக்காரைக் காட்டாரே”

என்ற தேவாரத் திருப்பாட்டில்,அந்நகர வீதியின் அழகும்,நன்னிப் பொய்கையின் நீர்மையும் நன்கு காட்டப்பட்டுள்ளன.அப்பொய்கை இப்பொழுது வேப்பங்குளம் என்னும் பெயரோடு திருக் கோயிலுக்குத் தெற்கே நின்று நிலவுகின்றது.26 ஆலம் பொழில்

ஆலமரங்கள் நிறைந்த சோலையும் அரனார்க்கு உறைவிடமாயிற்று. தென்பரம்பைக்குடி - என்னும் ஊரின் அருகே நின்ற ஆலம் பொழிலில் அமர்ந்தருளிய ஈசனைப் பாடினார் திருநாவுக்கரசர்.

“திருவானைத் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.”

என்பது அவர் திருவாக்கு. ஆலமர் கடவுளாகிய ஈசன் அமர்ந்தருளும் ஆலந் துறைகளும், ஆலம் பொழில் ஆலக் கோயில்களும் பிறவும் பின்னர்க் கூறப்படும்.

முல்லை வளம்

முல்லைக் கொடிகள் செழித்துத் தழைத்து நறுமலர் ஈன்ற பதிகளுள் ஒன்று திருக் கருகாவூர். முல்லை வளம் செம் பொருளாகிய சிவ பெருமான் . அம்முல்லை வனத்தில் எழுந்தருளிய கோலத்தை,

“கடிகொள் முல்லை கமழும் கருகா வூர்எம் அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே”

என்று பாடினார் திருஞான சம்பந்தர். இன்றும் அவர் முல்லை வனநாதர் என்றே அழைக்கப் படுகின்றார்.

அடிக் குறிப்பு.

1.“அன்றால் நிழற்கீழ் அருமறைகள் தானருளி” திருவாசகம், திருப்பூவல்லி, 13.

முருகனை “ஆலமர் - கடவுட் புதல்வ” என்று திருமுருகாற்றுப் படை அழைக்கின்றது.

2.“நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்” திருநாவுக்கரசர் தேவாரம், திருக்கடம்பூர்ப் பதிகம், 9.

3.

“திரையாரும் புனற்பொன்னித் தீர்த்தம் மல்கு
திருவானைக் காவில்உறைதேனே

-திருநாவுக்கரசர்

திருவானைக்காத் திருத்தாண்டகம், 6. “வெண்ணாவல் அமர்துறை வேதியனை"-திருஞான சம்பந்தர், திருவானைக்காப் பதிகம், 11.

“ஜம்புகேசுரம் என்ற வடசொல்லுக்கு, நாவற் கோயில் என்று பொருள்.

4.ஆமிரம் என்ற வடசொல் மாமரத்தைக் குறிக்கும். ஏக ஆமிரம் என்பது ஏகாமிரமாகி, பின்னர் ஏகாம்பரம் எனத் திரிந்ததென்பர். கச்சி ஏகம்பம் என்று தேவாரத்திற் பாடப்பெற்ற திருக்கோயிலில் பழமையான மாமரமொன்று இன்றும் காணப் படும்.கம்பை யென்னும் வேகவதி யாற்றை யடுத்துள்ளமையால் ஏகம்பம் என்ற பெயர் அமைந்த தென்பாரும் உளர். See "South Indian Shrines” - P. V. Jagadisa Ayyar, p. 86.

“கம்பக்கரை ஏகம்பம் உடையானை” என்னும் திருஞான சம்பந்தர் வாக்கு இதற்கு ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றது. -திருக்கச்சி யேகம்பத் திருப்பதிகம். 5.

5. திருப்பருத்திக் குன்றத்தில் குரா மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்றார் சமண அடிகளாகிய வாமன முனிவர்.

6.

“பூந்தண்நறு வேங்கைக் கொத்திறுத்து
மத்தகத்திற் பொலிய ஏந்திக்
கூந்தற் பிடியும் களிறும்
உடன்வணங்கும் குறும்பலாவே"

-

திருஞான சம்பந்தர், குறும்பலாப் பதிகம், 8.

7.“கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்” -திருநாவுக்கரசர் அடைவு திருத்தாண்டகம், 5.

8.“கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற்கோயில்” -திருநாவுக்கரசர் அடைவு திருத்தாண்டகம், 5.

9.சேக்கிழார், கோச்செங்கட் சோழர் புராணம்,2,3. 10.கோலம் என்பது இலந்தை மரத்தின் பெயர், எனவே கோலக்கா இலந்தை வனம் ஆகும்.

திருஞான சம்பந்தர் பொற்றாளம் பெற்றதை வியந்து பாடியுள்ளார் சுந்தரர்.

“நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும்
ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன்
தாளம் ஈந்துஅவன் பாடலுக்கு
இரங்கும் தன்மையாளனை”

- திருக்கோலக்காப் பதிகம், 8.

11.திருநெல்லிக்கா இப்பொழுது திருநெல்லிக் காவல் எனவும், திருக்கோடிகா, திருக்கோடிகாவல் எனவும் வழங்கும். மலையாள தேசத்தில் இன்றும் ஐயனாரும், நாகமும் வழிபாடு செய்யப்படும் இடங்கள் காவு என்று அழைக்கப்படுகின்றன. நாயர் இல்லந்தோறும் பாம்புக்காவு உண்டு என்பர்.

12.ஐயை என்னும் கொற்றவையின் கோட்டம் “குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும், விரவிய பூம்பொழில் விளங்கிய இருக்கை” என்று சிலப்பதிகாரம் கூறும்.காடுகாண் காதை,207-208.

13.மலையார்தம் மகளோடு மாதேவன் சேரும்
மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு தலையாலங் காடுதடங் கடல்சூழ் அந்தண் சாய்க்காடு தள்ளுபுனற் கொள்ளிக் காடு பலர்பாடும் பழையனுர் ஆலங் காடு
பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க விளையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை
வெண்காடும் அடையவினை வேறா மன்றே”

-அடைவு திருத்தாண்டகம்.
14.திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் அப் பதியை வணங்கச் சென்றபோது, திருக்கோயிலின் கதவு அடைக்கப் பட்டிருந்த தென்றும்,

“கண்ணினால் உமைக்காணக் கதவினைத் திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே”

என்று திருநாவுக்கரசர் பாடிய நிலையில் கதவு திறந்தமையால், இருவரும் மறைக்காட்டு இறைவனைக் கண்டு பாமாலை பாடிப் போற்றினர் என்றும், மீண்டும் திருக்காப்புச் செய்வதற்குத் திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடினார் என்றும் திருத்தொண்டர் புராணம் கூறும்.

15.இவ்வூர் தலைச் செங்காடு எனவும் வழங்கும். தஞ்சை நாட்டு, மாயவர வட்டத்தில் உள்ள தலையுடையவர் கோயிற் பத்து என்ற ஊரே பழைய தலைச்சங்காடென்பது சாசனத்தால் விளங்கும்.-M.E.R.,1925, 37.

16.“தடங்கடலைத் தலையாலங் காடன் தன்னை
சாராதே சாலநாள் போக்கினேனே”

என்பது அவர் பாட்டு - தலையாலங்காட்டுத் திருத்தாண்டகம், 6.

17.“விண்புகார் எனவேண்டா வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டெம் தலைவன்தாள் சார்ந்தாரே”
“மொட்டலர்ந்த தடந்தாழை முருகுயிர்க்கும் காவிரிப்பூம்
பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே."

-திருச்சாய்க்காட்டுப் பதிகம், 1,4,.

18.சாயாவனம் பூம்புகார் நகரைச் சேர்ந்த தென்று சாசனமும் கூறும். 269 of 1911.

19.தஞ்சை நாட்டுத் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ளது. M.E.R., 1935-36.

20."பழையனுர் ஆலங்காட்டெம் அடிகளே" -திருஞானசம்பந்தர் தேவாரம்,

இப்பொழுது காணப்படுவதுபோலவே முன்னாளிலும் பழையனூரும் ஆலங்காடும் தனித்தனித் தலங்களாக விளங்கின போலும். அதனாலேயே சுந்தரர், “பழையனுர் மேய அத்தன் ஆலங்காடன்” எனப் பிரித்துரைத்துப் போந்தார்; திருநாவுக்கரசர் வாக்கும் இக்கருத்தை வலியுறுத்துகின்றது.

“பழனைப் பதியா வுடையார் தாமே
செல்லு நெறிகாட்ட வல்லார் தாமே
திருவாலங் காடுறையும் செல்வர் தாமே”

என்பது அவர் தேவாரம்.இந்நாளில் பழையனுர், திருவாலங்காட்டுக்குத் தென்கிழக்கே முக்கால் மைல் தூரத்தில் உள்ளது.

21.235 of 1906. -

22.அங்கமைந்த பனைமரங்கள் சோழ மன்னர் களால் நன்கு பாதுகாக்கப்பட்டன என்பது கல்வெட்டுகளால் தெரிகின்றது.பச்சைப் பனைகளை வெட்டுவோர் தண்டனைக்கு ஆளாவர் என்ற அரசன் ஆணை திருப்பனங்காடுடையார் ஆலயத்துக்கு முன்னுள்ள மண்டபத்தில் எழுதப்பட்டுள்ளது. 246 of 1906.

23.பங்கயம் மலரும் புறவார் காட்டுர், பைந் தண்ணாழல்கள் சூழ் புறவார் பனங்காட்டுர் முதலிய தொடர்கள் பதினொரு பாட்டிலும் வருதல் காண்க-திருப்புறவார் பனங்காட்டுர்ப் பதிகம்.

ஒவ்வொரு சித்திரைத் திங்களிலும், முதல் வார முழுமையும் காலைக் கதிரவன் ஒளி அக்கோயிலில் உள்ள மூர்த்தியின்மீது வீசும் என்பர்.

24.சுந்தரர்-திருவெண்காட்டுப் பதிகம்.

25.வேலிமலி தண்காணல் வெண்காட்டின் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறைய வன்தன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர் ஆலமிடற் றான் அடியார் என்றடர அஞ்சுவரே”

-திருஞானசம்பந்தர், திருவெண்காட்டுப் பதிகம் 7.

26.திருக்காரை யீசுரன் கோயில் என்பது திருக்காலீசுரன் கோயில் என மருவியுள்ளது. காரைக்காடு திருக்காலிக்காடு என வழங்கும். 

மலையும் குன்றும்

திருவண்ணாமலை

ஈசனார் கோவில் கொண்டு விளங்கும் திருமலைகளைத் தொகுத்துரைத்தார் திருஞான சம்பந்தர்:

“அண்ணாமலை ஈங்கோயும் அத்தி முத்தாறகலா
முதுகுன்றம் கொடுங்குன்றமும்"

என்றெடுத்த தேவாரத்தில் அமைந்த அண்ணாமலை வட ஆர்க்காட்டிற் சிறந்து திகழும் திருவண்ணா மலையாகும். ஆதியும் - அந்தமும் இல்லாத இறைவன் அரும் பெருஞ்சோதியாகக் காட்சி தரும் திருமலை, அண்ணாமலை என்பர்.1

திருஈங்கோய் மலை

திருச்சி நாட்டைச் சேர்ந்தது ஈங்கோய் மலை. அங்கு எழுந்தருளிய இறைவனை ஈங்கோய் நாதர் என்று தமிழ் மக்கள் போற்றினார்கள்.அது பாடல் பெற்ற மலைப் பதியாதலால்,திருவீங்கோய் நாதர் மலையாயிற்று. இப்பொழுது அப்பெயர் திருவிங்க நாதர் மலையென மருவி வழங்குகின்றது.

அத்தி

தொண்டை நாட்டு வெண்குன்றக் கோட்டத்தைச் சேர்ந்த அத்தியென்னும் தலம்,பழம் பெருமை வாய்ந்ததென்பது சாசனத்தால் விளங்கும். அங்கமைந்த பழைய ஆலயம் அகத்தீச்சுரமாகும். பண்டைத் தமிழரசர் பலர் அதனை ஆதரித் துள்ளார்கள்.இராஜராஜ சோழன் காலத்தில் கேரளாந்தக நல்லூர் என்னும் பெயரும் அதற்கு அமைந்தது. கேரளாந்தகன் என்பது அம்மன்னனுக்குரிய விருதுப் பெயராதலால் அவன் ஆதரவு பெற்ற பதிகளுள் அத்தியும் ஒன்றென்று தோற்றுகின்றது. அப்பெயர் அதன் மறு பெயராய் ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக வழங்கிய தன்மை சாசனங்களால் விளங்கும்.பின்பு விஜய நகரப் பெருவேந்தனாகிய கிருஷ்ண தேவராயன் காலத்தில் கிருஷ்ண ராயபுரம் என்னும் பெயர் அத்திக்கு அமைந்தது.3 இங்ஙனம் பல படியாகப் பெரு மன்னர் ஆதரவுக்குரியதாக விளங்கிய அத்தியே திருஞான சம்பந்தர் குறித்த ஊராக இருத்தல் கூடும்.

திருமுதுகுன்றம்

இன்னும், ஈசன் வீற்றிருக்கும் மலைகளுள் ஒன்றாகப் பேசப் பெற்றுள்ள முதுகுன்றம், மணிமுத்தாற்றின் மருங்கே அமைந்துள்ளது. “முத்தாறு வலஞ் செய்யும் முதுகுன்றம்” என்று திருஞானசம்பந்தர் புகழ்ந்துரைத்த தலம் அதுவே. பண்டைக்காலத்தில் அவ்வூரில் இருந்ததாகக் கூறப்படுகின்ற பழமலை இன்று காணப்பட வில்லை.எனினும்,அப்பதியைக் குறிக்கும் முதுகுன்றம், பழமலை முதலிய தமிழ்ப் பெயர்களும், விருத்தாசலம் என்னும் வடமொழிப் பெயரும் முன்னாளில் இருந்து மறைந்த குன்றத்தைக் குறிக்கும்!

கொடுங்குன்றம்

பாண்டி நாட்டைச் சேர்ந்தது கொடுங்குன்றம். அதனைப் பெருநகர் என்றும் திருநகர் என்றும் திருஞான சம்பந்தர் பாடியிருத்தலால் அந்நாளில் அது சாலப் பெருமை பெற்றிருந்ததாகத் தோற்றுகின்றது. தமிழ் நாட்டில் அழியாப் புகழ் பெற்று விளங்கும் பாரியின் பறம்பு நாட்டை அணி செய்தது அக்குன்றம். இன்று பிரான்மலை என்பது அதன் பெயர்.4

திருக்குழுக்குன்றம்

ஈசன் கோயில் கொண்ட ஏனைய மலைப்பதிகளும் திருஞான சம்பந்தர் தேவாரத்தால் விளங்குவனவாகும்.

“கண்ணார் கழுக்குன்றம் கயிலை கோணம் பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும்
பண்ணார் மொழி மங்கையோர் பங்குடையான் பரங்குன்றம் பருப்பதம்”

என்றெழுந்த திருவாக்கிலுள்ள கழுக்குன்றம் திருக் கழுக்குன்றம் என்னும் சிறந்த பதியாகும். பண்டை நாளில் தொண்டை நாட்டைச் சேர்ந்தது திருக்கழுக்குன்றம்.5 தேவாரம், திருவாசகம் ஆகிய இரு பாமாலையும் பெற்ற அக்குன்றம்6 வேதாசலம் என்றும்,வேதகிரி என்றும் வடமொழியில் வழங்கும்.நினைப்பிற்கு எட்டாத நெடுங் காலமாக அம்மலையில் நாள் திருக்கழுக்குன்றம் தோறும் உச்சிப்பொழுதில் இரு கழுகுகள் வந்து காட்சியளித் தலால் பட்சி தீர்த்தம் என்னும் பெயரும் அதற்கு அமைந்தது.‘கழுகு தொழு வேதகிரி' என்று அருணகிரிநாதர் திருப்புகழில் இந் நிகழ்ச்சியை அறிவித்தருளினார்.7

திருக்கயிலாயமலை

விண்ணளாவி நிற்கும் இமயமலையில் வெள்ளியங் கிரியாக விளங்குவது திருக்கயிலாயம் ஈசன் வீற்றிருக்கும் மலைகளுள் ஒரு மாமலையாய இலங்கும் திருமாமலை அதுவே.கயிலாயம் இருக்கும் திசை நோக்கிப் பாடப்பட்ட தேவாரப் பதிகங்கள் பலவாகும்."கங்கையோடு பொங்குசடை எங்கள் இறை தங்கு கயிலாயமலையே” என்று ஆனந்தக் களிப்பிலே பாடினார் திருஞானசம்பந்தர். “கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி, கயிலை மலையானே போற்றி போற்றி” என்று உளங் கனிந்து பாடினார் திருநாவுக்கரசர். “ஊழிதோ றூழி முற்றும் உயர் பொன்மலை” என்று அத்ன் அழியாத் தன்மையை அறிவித்தார் சுந்தரர். இத் தகைய செம்மை சான்ற கயிலாச மலையின் இயற்கைக் கோலத்தையே தென்னாட்டுத் திருக்கோயில்கள் சுருக்கிக் காட்டும் என்பர்.

திருக்கோணமலை

இலங்கை யென்னும் ஈழ நாட்டிலுள்ள திருக் கோணமலையும் தேவாரப் பாமாலை பெற்றதாகும். தெக்கண கயிலாயம் என்று போற்றப்படும் தென்னாட்டு மலைகளுள் ஒன்று திருக்கோண மலை என்பர்.8 "குரை கடல் சூழ்ந்த கோணமாமலை" என்று தேவாரத்திற் புகழப் பெற்ற மலை இன்று திருக்கணாமலை என வழங்கும்.9

திருக்கற்குடி

இன்னும்,“கற்குடியார் விற்குடியார் கயிலாயத்தார்” என்று தேவாரத்திற் போற்றப்படும் கற்குடி இக் காலத்தில் உய்யக் - கொண்டான் என வழங்கு கின்றது.10 அம் மலையிற் கோயில் கொண்ட இறைவனை விழுமியார் என்று திருநாவுக்கரசர் போற்றியுள்ளார்.

“கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே"

என்பது அவர் திருவாக்கு. அஃது உய்யக் கொண்டான் திருமலை யென்னும் பெயர் பெற்ற பொழுது,ஈசனும் உஜ்ஜீவநாதர் என்னும் திருநாமம் பெற்றார்.அப்பெயர் இன்று உச்சி நாதர் என மருவி வழங்குகின்றது.11

காளத்தி மலை

தென் கயிலாயம் என்று கருதப்படும் திருக்காளத்தி மலை அன்புருவாய கண்ணப்பர் வழிபட்டுப் பேறு பெற்ற அரும் பெரும் பதியாகும்.12 “கன்றினொடு சென்று பிடி - நின்று விளையாடும் காளத்தி மலையைக் கண்களிப்பக் கண்ட திருஞான சம்பந்தர், அங்குக் கண்ணப்பர் திருவுருவைத் தரிசித்து ஆனந்தக் கண்ணி சொரிந்து, அவரடியில் விழுந்து போற்றிய பான்மையைத் திருத்தொண்டர் புராணம் விரித்துரைக்கின்றது.13

திருவாட் போக்கி மலை

திருச்சி நாட்டுக் குழித்தலை வட்டத்தில் உள்ளது வாட்போக்கி மலை.14 அதனை திருவாட் மாணிக்க மலை என்று சாசனம் போத்தி மலை கூறும்.” இக் காலத்தில் அஃது இரத்தினகிரியென வழங்கு கின்றது. இன்னும், அதனாசலம் சிவாயம், காகம் அணுகா மலை என்னும் பெயர்களும் அதற்குண்டு. அம்மலைக் கோயில் பண்டைத் தமிழ் வேந்தரால் பெரிதும் ஆதரிக்கப்பட்ட தென்பது அங்குள்ள கல்வெட்டுக்களால் விளங்கும்.

திருப்பரங்குன்றம்

முருகனுக்குரிய படை வீடுகளுள் முதலாக வைத்துப் போற்றப்படுவதும்,தேவாரப் பாமாலை பெற்றதுமாகிய திருப்பரங்குன்றம்,மதுரை யம்பதிக்கு அருகேயுள்ளது.அப் பரங் குன்றத்து மேவிய பரமனைத் தமிழ்நாட்டு மூவேந்தருடன் சென்று வழிபட்டுத் திருப்புகழ் பாடினார் சுந்தரர். “முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த பாடல்” என்று அவர் தாமே கூறுதலால் இவ்வுண்மை அறியப்படும். பரம் பொருளாகிய ஈசன் கோயில் கொண்டமையால் அது பரங்குன்றென்னும் பெயர் பெற்றதென்றும் தோன்றுகின்றது.

பருப்பதம்

இந்நாளில் ஆந்திர தேசத்துக் கர்னூல் நாட்டில் சிறந்து விளங்கும் ரீசைலம் என்னும் பதியே பருப்பதம் ஆகும்.கல்லார்ந்த வழி நடந்து, அரிதிற் காண்டற்குரியது அப்பதி. “செல்லல் உற அரிய சிவன் சீயர்ப்பத மலை” என்று சுந்தரர் பாடியதன் கருத்து இதுவே போலும் கிருஷ்ண நதிக் கரையிலுள்ள குன்றுகளிடையே நிவந்தோங்கி நிற்கும் பருப்பதத்தின் நடுநாயகமாக மல்லி கார்ச்சுனம் என்னும் திருக்கோயில் விளங்கு வதாகும்.அதைச் சார்ந்த அளகேச்சுரம் முதலான பல ஆலயங்களும் மண்டபங்களும் ஆற்றின் இருமருங்கும் உள்ளன.

செங்குன்றம்

கொங்கு நாட்டுத் திரு மலைகளுள் ஒன்று திருச் செங்குன்றம்.அம்மலையைச் சார்ந்த தலத்தைக் கொடி மாடச் செங்குன்றுர் என்று தேவாரம் செங்குன்றம் போற்றுகின்றது.செந்நிறமுடையதா யிருத்தலால் செங்குன்றம் என்னும் பெயர் அதற்கு வந்தது போலும் இந் நாளில் சேலம் நாட்டில் திருச்செங்கோடு என வழங்கும் ஊரே பழைய செங்குன்றூர் ஆகும்.

நெற்குன்றம்

நெற்குன்றமும், நற்குன்றமும் இறைவன் கோயில் கொண்ட மலைப் பதிகள் என்று திருஞான சம்பந்தர் கூறியருளினார்.16 நெற்குன்றம் என்னும் பெயர் வாய்ந்த ஊர்கள் தமிழ்நாட்டிற் பலவாகும். ஆயினும், அவற்றுள் ஒன்று திருநெற்குன்றம் என்று சாசனத்திற் குறிக்கப்படுவதால் அதனையே வைப்புத் தலமாகக் கொள்ளலாம். திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த முசிரி வட்டத்தில் இப்பொழுது தின்னகோணம் என வழங்கும் ஊரே திருநெற்குன்றம் எனத் தோன்றுகின்றது.17

இன்னும்

“கயிலாய மலையுளார்'காரோணத்தார்
கந்தமா தனத்துளர் காளத்தியார்”

கந்தமாதனம்

என்று திருவீழி மிழலைப் பதிகத்தில் திருநாவுக்கரசர் கூறிய கந்தமாதனம் என்பது திருச்செந்தூர்க் கோவிலின் வடபால் உள்ளது. கந்தவேள் விடுத்த தூதராகிய வீரவாகு தேவர் கந்தமாதனக் குன்றினின்றும் எழுந்து விண்ணாறாக வீர மகேந்திரத்தை நோக்கிச் சென்றார் என்று கந்த புராணம் கூறும்.18


தமிழ்நாட்டு மலைகளுள் மிகப் பெருமையுடையது பொதிய மாமலை.19 மலையம் என்னும் பொதுப் பெயரைத் தனக்கே உரிமையாக்கிக் கொண்ட பொதிய மலையை இமய

பொதியமலை மலைக்கு இணையாகக் கண்டனர் தமிழ்ப் புலவர். “பொற்கோட்டு இமயமும் பொதிய மும் போன்று” என்று வாழ்த்தினார் ஒரு புலவர்.20 தமிழ் முனிவர் என்று புகழப்படுகின்ற அகத்தியர் வாழும் அம் மலையைத் தமிழகம் முழுவதும் தொழுவதாயிற்று.

“திங்கள்முடி சூடும்மலை தென்றல்விளை யாடுமலை
தங்குபுயல் குழுமலை தமிழ்முனிவன் வாழுமலை”

என்று புகழ்ந்து மகிழ்ந்தாள் அம்மலைக் குறவஞ்சி.21 இத்தகைய மலையைத் திருநாவுக்கரசரும் தேவாரத்திற் குறித்துள்ளார்.

“பொய்த்தார் புரமூன் றெரித்தானைப்
பொதியில் மேய புராணனை"

என்னும் திருவாக்கால் திரிபுர மெரித்த பழம் பொருளாகிய பரமசிவன் பொதிய மலையையும் கோயிலாகக் கொண்டவன் என்பது விளங்கும். இப் பொதிய மலையின் அடிவாரத்தில், பொருநையாறு சவியுறத் தெளிந்து செல்லும் துறையில், பாபநாசம் என்னும் தலம் அமைந்திருக்கின்றது22.

குடுமியான் மலை

புதுக்கோட்டை நாட்டில் குடுமியா மலை என்னும் மலையொன்று உண்டு.அம்மலை திருநலக்குன்று23 என்று சாசனங்களிற் குறிக்கப்பட்டுள்ளது. அங்குத் திருமேற்றளி முதலாய சிவாலயங்கள் உள்ளன. குன்றின் சிகரத்தைக் குடுமி என்னும் சொல் உணர்த்துவதாகும்.எனவே,குடுமியான் என்று அக் குன்றுடைய பெருமான் குறிக்கப் பெற்றார்.24 நாளடைவில் பழம் பெயர் மறைந்து குடுமியான் மலை என்ற பெயர் வழங்கலாயிற்று. மலைக் குடுமியைத் தலைக் குடுமியெனப் பிறழவுணர்ந்த பிற்காலத்தார் சிகாநாதர் என்று அங்குள்ள ஈசனை அழைக்கலாயினர்.

குன்றக்குடி

பாண்டி நாட்டில் ஒரு குன்றின் அடிவாரத்தில் அமைந்த ஊர் குன்றக்குடி என்று பெயர் பெற்றது. அங்கு எழுந்தருளியுள்ள ஈசன், திருமலையுடையார் எனவும், தேனாற்று நாயகர் எனவும் சாசனங்களிற் குறிக்கப்படுகின்றார்.25 தேனாற்று நீர் பாயும் ஊர்களில் குன்றக் குடியும் ஒன்றாதலால் அங்குள்ள இறைவன் அப்பெயர் பெற்றார் போலும்! பழங்காலத்துப் பாண்டியர்கள் அக்கோயிலுக்கு விட்ட நிவந்தங்கள் பலவாகும்.இப்பொழுது அவ்வூரின் பெயர் குன்னக்குடியென மருவி வழங்குகின்றது; அக் குன்றப் பகுதியில் அமர்ந்த குமரவேலை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

அடிக் குறிப்பு

1.ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை -என்று திருவெம்பாவையிற் பாடினார் மாணிக்கவாசகர்.திருவெம்பாவை திருவண்ணா மலையில் அருளிச் செய்யப்பட்டது அம்மலை, அருணாசலம், அருணகிரி, சோணாசலம், சோண்கிரி, சோணசைலம் என்னும் பெயர்களும் உடையது. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் திருவண்ணாமலையிலேயே பிறந்தவர்.

2.அங்கு ஈசன் கோவிலும், திருமால் கோவிலும் எழுந்தன. அவை முறையே எதிரிலி சோழேச்சரம் எனவும் எதிரிலி சோழ விண்ணகரம் எனவும் பெயர் பெற்ற பான்மையைக் கருதும் பொழுது எதிரிலி என்பதும் இராசராசனது விருதுப்பெயர் என்று தெரிகின்றது. 301,302 of 1912.

3.299 of 1912.

4.கொடுங்குன்றமாகிய பறமலை (பிரான்மலை)ப் பக்கத்தில் பாரீச்சுரம் என்ற ஊர் இருந்ததென்பது கல்வெட்டால் அறியப்படும். சாசனத் தமிழ்க்கவி சரிதம் ப.7.

5.பெரிய புராணம்-திருக்குறிப்புத் தொண்டர் புராணம்.

6.கன்றினொடு பிடிசூழ்தண் கழுக்குன்றமே-தேவாரம்.
‘எனையாண்டு கொண்டு, நின்துய் மலர்க்கழல் தந்து ...காட்டினாய் கழுங்குன்றிலே!

-திருவாசகம், திருக்கழுக்குன்றப் பதிகம்.

7.திருப்புகழ், 325.

8.“முன்னர் வீழ்ந்திடு சிகரிகா ளத்தியா மொழிவர்
பின்னர் வீழ்ந்தது திரிசிரா மலையெனும் பிறங்கல் அன்ன தின்பிற கமைந்தது கோணமா வசலம் இன்னன மூன்றையும் தக்கின. கயிலையென் றிசைப்பர்”

-செவ்வந்திப் புராணம், திருமலைச் சருக்கம்.

9.திருக்கணாமலை என்பது ஆங்கிலத்தில் Trincomalee ஆயிற்று.

10.உய்யக்கொண்டான் என்பது இராஜராஜனுடைய விருதுப் பெயர்களில் ஒன்று.

11.தேவாரத் திருமுறை : சுவாமிநாத பண்டிதர் பதிப்பு, . 365 .

12.திருக்காளத்தி, தெக்கண கயிலாயம் என்று சைவ உலகத்தில் வழங்கப் பெறும். “தென்திசையிற் கயிலையெனும் திருக்காளத்தி” என்று திருத்தொண்டர் புராணம் குறிக்கின்றது. திருஞான சம்பந்தர் புராணம், 1028.

13.“சூழ்ந்துவலங் கொண்டிறைவர் திருமுன் பெய்தித்
தொழுதுதலை மேற்கொண்ட செங்கை போற்றி விழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார் மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்”

என்றார் சேக்கிழார். திருஞானசம்பந்தர் புராணம், 1022.

14.இத்தலத்திற் கோயில் கொண்டருளும் முடித்தழும்பர் என்னும் இறைவனுக்குத் தம் வருவாயுள் பன்னிரண்டில் ஒரு பங்கை அளித்து வரும் செட்டியார் குலம் பன்னிரண்டாம் செட்டிமார் என்று வழங்கப்பெறும்.அவர்கள் விரும்பியபடி வாட்போக்கிக் கலம்பகம் என்னும் பிரபந்தம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்டது. மீ. ச. முதற்பாகம், 139,

15.186 of 1914, இம்மலைக்கோயிலை அடைவதற்குச் சாதன மாகவுள்ள படிக்கட்டு கி.பி. 1783 -இல் அமைக்கப்பட்டது. 952 படிகள் உள்ளன. 1.M.P.p. 1517.

16.திருஞான சம்பந்தர் திருக்ஷேத்திரக் கோவை, 9.

17. M. E. R., 1932-33. தென் ஆர்க்காட்டுத் திருக்கோயிலூர் வட்டத்தில் ஒரு நெற்குன்றம் உண்டு. அது நெற்குணம் என வழங்கும்.M.E. R., 1934-35.

18.

“அலங்கலந் திரைகொள் நேமி
அகன்கரை மருங்கின் மேரு
விலங்கலின் உயர்ந்த கந்த
மாதன வெற்புத் தன்னில்
பொலங்குவ டுச்சி மீது
பொள்ளென இவர்த லுற்றான்
கலன்கலன் கலனென்று அம்பொன்
கழலமர் கழல்கள் ஆர்ப்ப.

-கந்தபுராணம், மகேந்திர காண்டம்.

19.புலவர் புராணம், பொதிகாசலப் படலம்,44. 20.புறநானூறு, 2. -

21.மீனாட்சியம்மை குறம், 13.

22.பாபநாசம் ஒரு வைப்புத் தலம், தஞ்சை நாட்டிலும் ஒரு பாபநாசம் உள்ளது.

23.திருநீலக்குன்று எனவும் குறிக்கப்படும்.

24.திருக்காளத்திமலை மீதிருந்த இறைவனைக் குடுமித் தேவர் என்று கண்ணப்பர் புராணம் கூறும்.

25.25 of 1909.

ஆறும் குளமும்

ஆண்டவன் கோயில் கொண்டுள்ள ஆற்றுப் பதிகளை ஒரு பாட்டிலே அடுக்கிக் கூறினார் திருநாவுக்கரசர்.

“நள்ளாறும் பழையாறும் கோட்டாற் றோடு
நலந்திகழும் நாலாறும் திருவையாறும் தெள்ளாறும்”

என்று அப்பெரியார் எடுத்த திருப்பாசுரத்தில் ஆறு பதிகள் குறிக்கப்படுகின்றன.அவற்றின் தன்மையை முறையாகக் காண்போம்.

திருநள்ளாறு

காரைக்காலுக்கு அண்மையில் உள்ளது திரு நள்ளாறு. நளன் என்னும் மன்னவன் கிங்கள்ள ஈசனை வழிபட்டுக் கலி நீங்கப் பெற்ற இடம் நள்ளாறென்பர்.

“வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய் நள்ளாறே”

என்பது தேவாரம்.அதனால் சனி வழிபாடு அங்கு சிறப்புற நடைபெறுகின்றது.

பழையாறை

முன்னாளில் பல்லாற்றானும் சிறப்புற்று விளங்கிய பதிகளுள் ஒன்று பழையாறாகும்.சோழ நாட்டு அரசுரிமை யேற்கும் மன்னர்,மகுடாபிஷேகம் செய்து கொள்ளுதற்குரிய சிறந்த நகரங்களுள் பழையாறும் ஒன்றென்று சேக்கிழார் கூறுதலால் அதன் சீர்மை விளங்கும்.1 பிற்காலத்தில் முடிகொண்ட சோழபுரம் என்னும் பெயர் அதற்கு அமைந்தது முடிகொண்டான் என்ற ஆற்றின் கரையில் கும்பகோணத்திற்கு அருகேயுள்ளது அப்பதி.3 கோட்டாறு

திருநள்ளாற்றுக்கு அணித்தாக உள்ளது கோட்டாறு. “தேனமரும் மலர்ச் சோலை திருக்கோட்டாறு” என்று திருஞானசம்பந்தர் பாடியிருத்தலால் அப் பதியின் செழுமை இனிது விளங்கும்.4

திருவையாறு

தஞ்சாவூருக்கு வடக்கே ஏழு மைல் அளவில் உள்ள பழம்பதி திருவையாறாகும். பஞ்சநதம் என்னும் வடமொழிப் பெயரும் அதற்குண்டு.5 தேவாரம் பாடிய மூவரும் திருவையாற்றைப் போற்றி யுள்ளார்கள். சஞ்சலம் வந்தடைந்த பொழுது “அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும் கோயில்” திரு ஐயாறு என்றார் திருஞான சம்பந்தர். “செல்வாய செல்வம் தருவாய் நீயே, திருவையா றகலாத செம்பொற் சோதீ” என்று போற்றினார் திருநாவுக்கரசர். “அழகார் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறுடைய அடிகளோ என்றழைத்துத் தொழுதார் சுந்தரர். காவிரிக் கோட்டம் என்று விதந்துரைக்கப் பெற்றதனாலும் ஐயாற்றின் பெருமை விளங்குவதாகும்.6

தெள்ளாறு

வட ஆர்க்காட்டு வந்தவாசி வட்டத்தில் தெள்ளாறு என்னும் ஊர் உள்ளது. பல்லவ மன்னனாகிய நந்திவர்மன் காலத்தில் தெள்ளாற்றில் நிகழ்ந்த பெரும் போர் நந்திக் கலம்பகத்தில் பாராட்டப் பட்டுள்ளது. பாண்டியனது பெருஞ்சேனையைத் தெள்ளாற்றில் வென்றுயர்ந்த பல்லவன் பாட்டுடைத் தலைவனாயினான்; தெள்ளா றெறிந்த நந்தி என்று புகழப்பெற்றான்; இங்கினம் பல்லவ சரித்திரத்திலும், நந்திக் கலம்பகத்திலும் குறிக்கப்படும் ஊர், பழைய வெண்குன்றக் கோட்டத்தைச் சேர்ந்ததென்றும், அங்குள்ள ஈசன் கோயில் திருமூலத்தானம் என்னும் பெயருடைய தென்றும் கல்வெட்டுக்கள் கூறும்.7

கடிக்குளம்

பழமை வாய்ந்த சிவப்பதிகளுள் மூன்று குளப்பதிகள் சிறந்திருந்தன என்பது திருஞானசம்பந்தர் பாட்டால் விளங்குகின்றது. அவற்றுள் ஒன்று பாடல் பெற்றுள்ள கடிக்குளம் என்ற ஊராகும். குளிர் பூஞ்சோலையினிடையே அமைந்த கடிக்குளப்பதியில் கோயில் கொண்டிலங்கும் ஈசனை

“கடிகொள் பூம்பொழில் குழ்தரு
கடிக்குளத் துறையும் கற்பகம்”

என்று போற்றினார் திருஞான சம்பந்தர். அவர் திருவாக்கின் சிறப்பினால் இப்பொழுது கற்பகனார் கோயில் என்பது கடிக்குளத்தின் பெயராக வழங்குகின்றது.ஏனைய குளங்களின் வகை, திருநாவுக்கரசரது பாட்டால் தெரிகின்றது. “வளைகுளமும் தளிக்குளமும் நல்இடைக்குளமும் திருக் குளமும் இறைவன் கோயில் கொண்ட குளங்கள் என அவர் கூறிப் போந்தார்.

வளைகுளம்

இவற்றுள் வளைகுளம் என்று முன்னாளில் வழங்கிய ஊர் இந்நாளில் வளர்புரம் என்னும் பெயர் பெற்றுள்ளது.வட ஆர்க்காட்டு ஆர்க்கோண வட்டத்திலுள்ள வளர்புரத்தில் பழமையான சிவாலயம் ஒன்று உண்டு.தொண்டிச் சரம் என்பது அதன் பெயர். சுந்தர பாண்டியன் முதலாய பண்டைத் தமிழரசர் அதற்கு நிவந்தம் விட்டுள்ளார்கள்.8 எனவே, வட ஆர்க்காட்டிலுள்ள வளர்புரமே பழைய வளைகுளம் என்பது தெளிவாகும்.

இடைக்குளம்

முற்காலத்தில் இடைக்குளம் என வழங்கிய ஊர் இப்பொழுது மருத்துவக்குடி என்னும் பெயர் பெற்றுள்ளது. தஞ்சை நாட்டுக் கும்பகோண வட்டத்திலுள்ள மருத்துவக்குடிச் சிவன் கோயிலிற் கண்ட சாசனம் திரு இடைக் குளமுடையார் என்று அங்கு எழுந்தருளிய ஈசனைக் குறித்தலால், பழைய இடைக்குளமே மருத்துவக் குடியாயிற்று என்பது இனிது விளங்கும்.9

திருமுக்குளம்

இன்னும், ஈசனார் அருள் பெற்ற திருக் குளங்களில் ஒன்று திருவெண்காட்டிலுள்ள முக்குளம் ஆகும். திருஞான சம்பந்தர் அங்கு எழுந்தருளிய போது,

“முப்புரம் செற்றார்பாதம் சேருமுக் குளமும் பாடி
உளமகிழ்ந் தேத்தி வாழ்ந்தார்”

என்று சேக்கிழார் கூறப் போந்தார். அவர் கூறுமாறே திருவெண்காட்டு முக்குளம் தேவாரப் பாட்டில் அமையும் பெருமை பெற்றுள்ளது.10

திருவரங்குளம்

புதுக்கோட்டை நாட்டில் திருவரங்குளம் என்னும் பதியொன் றுண்டு. பழங்காலத்துப் பாண்டியர் பலர் திருவரங்குளநாதர் கோவிலுக்குப் பல வகையான நிவந்தங்கள் வழங்கியுள்ளார்கள்.11 . தென்பாண்டி நாட்டிலுள்ள திருமால் திருப்பதிகளுள் ஒன்றாகிய குளந்தை யென்னும் பெருங்குளத்தில் பழமையான சிவன் கோயிலும் உண்டென்பது சாசனத்தால் விளங்கும். பண்டைப் பாண்டியன் ஒருவனால் அமைக்கப்பட்ட அக் கோயில் திருவழுதீச்சுரம் என வழங்கலாயிற்று.12

பெருங்குளம்

அடிக் குறிப்பு

1. அங்கிருந்த சோழ மாளிகையில் இராஜராஜனுடன் பிறந்த குந்தவை வசித்து வந்ததாகச் சாசனம் கூறும். 350 of 1907.

2. 172 of 1927.

3. அவ்வூரில் எழுந்த அருமொழித் தேவீச்சுரம் என்ற சிவாலயம் இராஜராஜன் பெயர்தாங்கி நிலவுகின்றது. 157 of 1908. அப் பெரு வேந்தன் இறந்த பின்னர் அவன் தேவியாகிய பஞ்சவன் மாதேவி பள்ளிப்படையாக அங்கு எடுத்த கோவில் பஞ்சவன் மாதேலீச்சுரம் என்று பெயர் பெற்றது. 271 of 1927.

4. இப்போது கோட்டாறு திருக்கொட்டாரம் என வழங்குகின்றது.

5. பஞ்சநதிகள் பாயும் பிரதேசத்தைப் பஞ்சாப் என்றழைப்பார் வடநாட்டார். ஐயாறு என்ற தமிழ்ப் பெயரும் அப் பொருளையே தரும்.

6. இவ்வூர்ப் பெயர் ஆங்கிலத்தில் திருவாதி எனச் சிதைந்து வழங்கும். தமிழின் சிறப்பெழுத்தாகிய வல்லின றகரம் அயல்நாட்டார் நாவில் சிதைவதற்கு இஃதொரு சான்று.

7. M. E. R. 1934-35.

8, 26 of 1911. 9. “உய்யக்கொண்டார் வளநாட்டுத் திறைமூர் நாட்டு...திருவிடைக் குளமுடையார் - 387 of 1907.

10. “வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்

தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே"

என்பது திருஞான சம்பந்தர் தேவாரம். சைவ சித்தாந்தத்தைத் தமிழ் நாட்டில் நிலைநிறுத்திய மெய்கண்ட தேவரின் தாய் தந்தையர் இம் முக்குளத்தில் நீராடி அப் பெருமானைப் பெற்றனர் என்ற வரலாறும் இதன் சீர்மையை உணர்த்துவதாகும். திருப்பெண்ணாகடத்தில் வாழ்ந்த வேளாளராய அச்சுத களப்பாளர் நெடுங்காலம் பிள்ளையின்றிக் கவலையுற்றார் என்றும், அதுபற்றி இறைவன் திருக்குறிப்பைத் தெரிந்து கொள்ளக் கருதித் தேவாரத்தில் முறைப்படி கயிறு சார்த்திப் பார்த்தபோது திருமுக்குளத்தின் பெருமையை யுணர்த்தும் திருஞான சம்பந்தர் பாட்டுக் கிடைத்ததென்றும், அவர் உடனே தம் மனைவியாரோடு திருவெண்காட்டை அடைந்து, முக்குளத்தில் நாள்தோறும் நீராடி ஆண்டவனைத் தொழுது வந்தார் என்றும், அந் நோன்பின் பயனாக மெய் கண்ட தேவர் அவர் பிள்ளையாகத் தோன்றினார் என்றும் வரலாறு கூறுகின்றது.

11. M. E. R., 1914-15. Pudukkottah Inscriptions

12. M. E. R., 1932-33.

துறையும் நெறியும்

இறைவன் உறையும் துறைகள் பலவும் ஒரு திருப்பாட்டிலே தொகுக்கப் பெற்றுள்ளன.

“கயிலாய மலையெடுத்தான் கரங்களோடு
சிரங்கள் உரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய் பராய்த்துறைதென் பாலைத்துறை
பண்டெழுவர் தவத்துறை வெண்துறை”.

என்று பாடினார் திருநாவுக்கரசர்.

திருப்பராய்த்துறை


காவிரியாற்றினால் அமைந்த அழகிய துறைகளுள் ஒன்று திருப்பராய்த்துறை. அது பராய்மரச் சோலையின் இடையிலே அமைந்திருந்தமையால் அப் பெயர் பெற்றது போலும்: காவிரிக்கரையில் கண்ணுக்கினிய காட்சியளித்த பராய்த் துறையிற் கோயில் கொண்ட பரமனை,

“பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே”

என ஆதரித்தழைத்தார் திருநாவுக்கரசர். இந் நாளில் இத்துறை திருப்பலாத்துறை என்று வழங்கும்.

காவிரி யாற்றங் கரையில் உள்ள மற்றொரு துறை பாலைத்துறையாகும். அத் துறையில் காட்சியளிக்கும் இறைவனை,

“மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம்
பரவு நீர்ப்பொன்னிப் பாலைத் துறையரே"

திருப்பாலைத்துறை

என்று பாடியருளினார் திருநாவுக்கரசர். பாலைத்துறையுடைய பரமனைப் பாலைவன நாதர் என்று இன்றளவும் வழங்குதலால், பாலை மரங்கள் நிறைந்த துறையாக அது முற்காலத்தில் இருந்ததாகத் தோன்றுகிறது.

திருத்தவத்துறை

இறைவன் அருள் விளங்கும் துறைகளுள் ஒன்று திருத்தவத்துறை. “பண்டு எழுவர் தவத்துறை” என்று இப்பதியைத் திருநாவுக்கரசர் குறித்தருளினார். முன்னாளில் முனிவர் எழுவர் தவம் புரிந்த பெருமை அதற்குரிய தென்பது அவர் திருவாக்கால் விளங்கும். இத்தகைய பெருமை சான்ற தவத்துறைக்குரிய தேவாரப் பாடல் கிடைத்திலதேனும் திருஞான சம்பந்தர் அப் பதியை வணங்கிப் பாடினார் என்று திருத்தொண்டப் புராணம் கூறும். திருச்சிராப்பள்ளியையும் திருவானைக்காவையும் வழிபட்ட பின்பு, “மன்னும் தவத்துறை வானவர் தாள் எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன்தமிழ் மாலை கொண்டேத்தினார்” என்று சேக்கிழார் கூறுதலால், திருஞான சம்பந்தர் தவத்துறைப் பெருமானைப் பாமாலை பாடித் தொழுதார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.2 ஆயினும், அப் பாடல் கிடைக்கப் பெறாமையால் தவத்துறை வைப்புத் தலங்களுள் ஒன்றாக வைத்தெண்ணப்படும்.3 இப்பொழுது லால்குடி என வழங்கும் ஊரே பண்டைத் தவத்துறை என்பது சாசனங்களால் விளங்குகின்றது. திருவெண்துறை

தஞ்சை நாட்டு மன்னார்க்குடிக்கு அணித்தாக உள்ளது திருவெண்துறை. தேவாரப் பாடல் பெற்ற அத் தலம் இப்பொழுது திருவண்டு துறையாகி, பிருங்கி முனிவர் வண்டு வடிவத்தில் ஈசனை வழிபட்ட இடமாகக் கருதப்படுகின்றது. இன்னும்,

“குயில் ஆலந்துறை சோற்றுத்துறை பூந்துறை
பெருந்துறையும் குரங்காடுதுறை யினோடு
மயில் ஆடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை
மற்றும் துறையனைத்தும் வணங்குவோமே”

என்று பாடினார் நாவரசர்.

குயில் ஆலந்துறை

குயில்கள் இனிதமர்ந்து கூவும் செழுஞ் சோலையினிடையே ஆலந்துறையைக் “குயிலாலந்துறை” என்று அவர் குறித்தார். மாயூரம் என்னும் மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள நல்லக் குடியிலே கோயில் கொண்ட நாதன் பெயர் ஆலந்துறையப்பர் என்றும், நாயகியின் பெயர் குயிலாண்ட நாயகி என்றும் வழங்குதலால், திருநாவுக்கரசர் குறித்த குயிலாலந்துறை அதுவே எனக் கொள்ளப்படுகின்றது. இந் நல்லக்குடி ஈசனருள் விளங்கும் இடங்களுள் ஒன்றென்பது, “நற்கொடி மேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்குடி நல்லக்குடி’ என்னும் நாவுக்கரசர் திருவாக்கால் அறியப்படும்.

"சோழவள நாடு சோறுடைத்து" என்னும் புகழுரைக்குச் சான்றாக நிற்பது சோற்றுத்துறையாகும். தேவாரப் பாமாலை பெற்ற இப் பழந்துறையைப் “பொன்னித் திரை வலங்கொள் சோற்றுத்துறை” என்று பாராட்டினார் சேக்கிழார். பழங் திருச்சோற்றுத் துறை

காலத்தில் இருவகை வழக்கிலும் ஏற்றமுற்று விளங்கிய சோறு என்னும் சொல் பிற்காலத்தில் எளிமையுற்றது.5 சாதம் என்பது அதனினும் சிறப்புடைய பதமாகக் கொள்ளப்பட்டது. இதனால் சோற்றுத்துறை சாதத் துறையாயிற்று; சாதத் துறை சாத்துறையென மருவிற்று. எனவே, இன்று திருச்சாத்துறை என்று அது வழங்கப்படுகின்றது.

அரிசிலாற்றங் கரையில், பாடல் பெற்ற பெருதுறை ஒன்று அமைந்துள்ளது.

“தழையார் மாவின் தாழ்கனி யுந்தித்
தண் அரிசில் புடைசூழ்ந்து
குழையார் சோலை மென்னடை யன்னம்
கூடுபெருந் துறையாரே"

திருப்பெருந்துறை

என்று அதன் இயற்கை யழகினை எடுத்துரைத்தார் திருஞானசம்பந்தர். இன்னும், தஞ்சை நாட்டுக் கும்பகோண வட்டத்தில் இப்பொழுது திருப்பந்துறை யென வழங்கும் பதி திருப்பெருந்துறையேயாகும். ஆதியில் செங்கற் கோயிலாயிருந்த திருப்பெருந்துறை, கரிகாற் சோழன் காலத்தில் கற் கோயிலாயிற்று என்று சாசனம் தெரிவிக்கின்றது. இராஜராஜ சோழன் வீரபாண்டியன் முதலிய பெருமன்னர் காலத்துச் சாசனம் அக் கோயிலிற் காணப்படுதல் அதன் பழமைக்கு ஒரு சான்றாகும்.6 இனி, பாண்டி நாட்டில் மாணிக்க வாசகர்க்கு ஈசன் அருள் புரிந்த இடமும் திருப்பெருந்துறையாகும். சிவபெருமானைத் 'திருவார் பெருந்துறைச் செல்வன்' என்று கீர்த்தித் திரு அகவல் கூறும். திருப் பெருந்துறையில் இருந்தருளும் இறைவனை,

“தில்லைவாழ் கூத்தா சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே”

என்றழைக்கின்றார் மாணிக்கவாசகர். இப் பதி ஆவுடை யார் கோயில் என்னும் பெயரோடு தஞ்சை நாட்டு அறந்தாங்கி வட்டத்தில் உள்ளது.7

குரங்காடு துறை காவிரியாற்றின் கரையில் குரங்காடு துறை யென்னும் பெயருடைய தலங்கள் இரண்டு உண்டு. அவற்றுள் வட கரையிலே அமைந்த குரங்காடு துறையில் வாலியென்னும் வானர மன்னன் இறைவனை வணங்கினான் என்பர்.8 “கோலமா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி வாலியார் வழிபட நின்ற கோயில் வட குரங்காடு துறை என்பது திருஞான சம்பந்தர் தேவாரத்தால் விளங்கும். இனி, காவிரியாற்றின் தென் கரையிலுள்ள குரங்காடு துறை இப்பொழுது ஆடுதுறை என்றே வழங்குகின்றது. தேவாரப் பாமாலை பெற்ற அப் பதியில் வாலியின் தம்பியாகிய சுக்கிரீவன் ஈசனை வழிபட்டான் என்னும் ஐதிகம் உண்டு.


இன்னும், திருச்சி நாட்டுப் பெரம்பலூர் வட்டத்தில் வட வெள்ளாற்றங்கரையில் மற்றொரு குரங்காடுதுறையுள்ளது. ஆடுதுறை யென வழங்கும் அப்பதியின் பழமை சாசனத்தால் விளங்குவதாகும். குலோத்துங்க சோழன், பராக்கிரம பாண்டியன் முதலிய பெருமன்னரால் ஆதரிக்கப்பெற்ற அக் கோயிலில் அமர்ந்த இறைவன் திருநாமம் குற்றம் பொறுத்த நாயனார் என்று கல்வெட்டிற் குறிக்கப்பட்டுள்ளது.9

மயிலாடுதுறை

காவிரி யாற்றின் கரையில் சிறந்திலங்கும் சிவப்பதிகளுள் ஒன்று மயிலாடுதுறை. அத் துறையைக் கண்டு ஆனந்தமாகப் பாடினார் திருஞான சம்பந்தர்.

“கந்தமலி சந்தினொடு காரகிலும்
வாரிவரு காவிரியுளால்
வந்ததிரை உந்தியெதிர் மந்திமலர்
சிந்துமயில் ஆடுதுறையே”

என்று அவர் பாடிய மயிலாடுதுறை இந் நாளில் மாயவரம் என வழங்குகின்றது.10

‘காவிரிசூழ் கடம்பந்துறை' யென்று தேவாரத்திற் போற்றப்பட்ட துறை இக் காலத்தில் குழித்தலை யென வழங்கும் ஊரைச் சார்ந்த கடம்பர் கோவில் ஆகும்.11 காவிரியாற்றின் தென் கரையிலுள்ள கடம்பவனத் தில் ஈசன் காட்சியளித்தமையால் அப் பெயர் அமைந்ததென்பர். திருக்கோவையாரில் ‘தண் கடம்பைத் தடம் என்று சொல்லப்படும் தலம் கடம்பந்துறையாக இருத்தல் கூடுமென்று தோன்றுகின்றது.

கடம்பந்துறை

சைவ உலகத்தில் ஆன்ற பெருமை யுடையது ஆவடுதுறை. தேவாரப் பாமாலை பெற்றதோடு திருமந்திரம் திருஆவடுதுறை

அருளிய திருமூலர் வாழ்ந்ததும் அப்பதியே இன்னும், திருவிசைப்பா பாடிய திருமாளிகைத் தேவர் சிவகதியடைந்ததும் அப்பதியே. இத்தகைய ஆவடு துறை, பேராவூர் நாட்டைச் சேர்ந்தது என்று சாசனம் கூறுகின்றது. பசுவளம் பெற்ற நாட்டில் விளங்கிய அப்பதியினை “ஆவின் அருங் கன்றுறையும் ஆவடுதண்துறை" என்று போற்றினாா் சேக்கிழாா். அத் தலம், வட மொழியில் கோமுத்தீச்சுரம் என்று வழங்கும் பான்மையைக் கருதும் பொழுது ஆவடுதுறை யென்பது ஆலயப் பெயராக ஆதியில் அமைந்திருத்தல் கூடும் என்று தோன்றுகின்றது. அக் கோயிலிற் கண்ட சாசனம் ஒன்று ‘சாத்தனூரில் உள்ள திருவாவடு துறை' என்று கூறுதல் இதற்கொரு சான்றாகும்.13 சாத்தனூர் என்பது இப்பொழுது திருவாவடுதுறைக் கருகே ஒரு சிற்றுாராக உள்ளது. அவ்வூரில் எழுந்த ஆவடுதுறை என்னும் சிவாலயம் பல்லாற்றானும் பெருமையுற்றமையால், கோயிற் பெயரே ஊர்ப் பெயராயிற்றென்று கொள்ளலாகும்.

மேலே குறித்த திருநாவுக்கரசர் திருப்பாசுரத்தில் “மற்றும் துறை யனைத்தும் வணங்குவோமே” என்றமையால், இன்னும் சில துறைகளும் உண்டு என்பது பெறப்படும். அவற்றுள் திருமாந்துறையும், திருச்செந்துறையும், திருப்பாற்றுறையும் சிறந்தனவாகும்.

திருமாந்துறை என்ற பெயருடைய பதிகள் இரண்டு உண்டு. அவற்றுள் ஒன்று திருஞான சம்பந்தரால் பாடப்பெற்றது. மற்றொன்று வைப்புத் தலமாகக் கருதப் திருமாந்துறை

படுகின்றது. இவ்விரு துறைகளும் ஒரு பெயருடையன வாயிருத்தலின், இவற்றுள் வேற்றுமை தெரிதற் பொருட்டு முன்னதை வடகரை மாந்துறை என்றார் திருத்தொண்டர் புராணமுடையார். காவிரி யாற்றின் வட கரையில் அமைந்த மாந்துறையை,

“அம்பொனேர் வருகாவிரி வடகரை மாந்துறை”

என்று பாடினார் திருஞான சம்பந்தர்.14

இனி, வைப்புத் தலமாகிய திருமாந்துறை, கும்பகோண வட்டத்தில் திருமங்கலக் குடிக்கு அணித்தாக உள்ளது. அத் தலத்தையும் திருஞான சம்பந்தர் பாடினார் என்பது சேக்கிழார் வாக்கால் புலனாகின்றது.

“கஞ்சனூர் ஆண்டதம் கோவைக்
கண்ணுற் றிறைஞ்சி முன்போந்து
மஞ்சனி மாமதில் சூழும்.
மாந்துறை வந்து வணங்கி
அஞ்சொல் தமிழ்மாலை சாத்தி”

என்னும் பாட்டால், திருமாந்துறை இறைவற்குத் திருஞான சம்பந்தர் தமிழ்மாலை சாத்தினார் என்று தெரிகின்றது எனினும், அப் பாடல் கிடைக்கவில்லை.

திருச்செந்துறை

ஆலந்துறையை வணங்கிய பின்னர்த் திருஞான சம்பந்தர் திருச்செந்துறை முதலாய பல கோவில்களையும் வழிபட்டுக் கற்குடிமலையை அடைந்தார் என்று சேக்கிழார் கூறுதலால், இறைவன் கோயில் கொண்டுள்ள இடங்களில் திருச்செந்துறையும் ஒன்றென்று தெரிகின்றது. திருச்சி நாட்டிலே திருச்சி வட்டத்தில் உள்ளது. திருச்செந்துறை. ஈசான மங்கலத்திற்கு அருகேயுள்ள அச் செந்துறையில் சந்திர சேகரப் பெருமானுக்குத் தென்னவன் இளங்கோ வேளாளரின் திருமகள் கற்கோயில் கட்டிய செய்தி சாசனங்களிற் காணப்படுகின்றது.15

காவிரியின் வடகரையிலுள்ள திருப்பாற்றுறை திருஞானசம்பந்தரால் பாடப் பெற்றுள்ளது. அங்குள்ள ஆதிமூலநாதர் ஆலயத்திற் கண்ட சாசனங்களால் திருப்பாற்றுறை, உத்தம சீலி சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்திருந்ததென்பது விளங்கும்.16 இப்பொழுது உத்தமசேரி என வழங்கும் ஊரே உத்தம சீலி என்பர்.

திருப்பாற்றுறை

இறைவனது அளப்பருங் கருணையைப் பேரின்ப வெள்ளமாகக் கண்டனர் ஆன்றோர். “சிவபோகம் என்னும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய், ஏகவுருவாய்க் கிடக்குதையோ என்று பரிந்து பாடினார் தவ நெறியில் தலைநின்ற தாயுமானவர். வெள்ளம் பொங்கிப் பொழிந்து செல்லும் கங்கை, காவிரி முதலிய ஆறுகளில் துறையறிந்து இறங்கி நீரைத் துய்த்தல் போன்று, சான்றோர் கண்ட துறைகளின் வாயிலாக ஆண்டவன் அருளைப் பெறலாகும் என்னும் கருத்தால் ஆலயங்களைத் துறைகள் என்று மேலோர் குறித்தனர் போலும்! அவற்றுள் சில துறைகள் பாடல் பெற்றனவாகும். பண்டு எழுவர் தவத்துறையாய் விளங்கிய லால்குடியின் தன்மையையும், மாணிக்கவாசகர்க்கு ஈசன் இன்னருள் சுரந்த திருப்பெருந் துறையின் செம்மையையும் இன்னோரன்ன பிற துறைகளையும் முன்னரே கண்டோம். இனிச் சாசனங்களிலும் திருப்பாசுரங்களிலும் தலப் பெயரோடு இணைத்துக் கூறப்படும் துறைகளைக் காண்போம்.

திருவெண்ணெய் நல்லூர் அருட்டுறை

பெண்ணையாற்றின் கரையில் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் ஈசன் கோயில் கொண்டருளும் இடம் அருட்டுறை எனப்படும். தேவாரம் பாடிய மூவருள் ஒருவராகிய சுந்தரமூர்த்தியை ஆட்கொண்ட துறை அவ் வருட்டுறையேயாகும். இதனை அவர் தேவாரத்தால் அறியலாம். “பித்தா பிறைசூடி” என்று அவர் எடுத்த திருப்பதிகத்தில் “பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தா" என்று பாடும் பான்மையால் ஆண்டவன் உறைவிடம் அருட்டுறை என்றும் போற்றப்படுகின்றது.17

திருநெல்வாயில் அரத்துறை

திருப்பெண்ணாகடத்துக்கு அண்மையில் நிவாநதியின் கரையில் உள்ளது நெல்வாயில்

என்னும் பதி. அது மூவர் தேவாரமும் பெற்றது. அரத்துறையென்பது அங்கமைந்த திருக் கோயிலின் பெயர்.

“கந்த மாமலர் உந்திக்
கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே’

என்னும் தேவாரத்தால் அரத்துறையின் செம்மை விளங்கும். இப்பொழுது நெல்வாயிலும் அரத்துறையும் தனித்தனி ஊர்களாகக் காணப்படுகின்றன. நெல்வாயில் என்ற பழம் பெயர் நெய்வாசல் எனவும், திரு அரத்துறை என்பது திருவடத்துறை எனவும் மருவி வழங்கும்.18 அன்பில் ஆலந்துறை

ஈசனருளைப் பெறுதற்குரிய துறைகளுள் ஆலந்துறை சாலச் சிறந்ததென்று தெரிகின்றது. ஆலமர் கடவுளாகிய சிவபெருமானைப் பல ஆலந்துறையில் வழிபட்ட முறை, திருப்பாசுரங்களாலும் சாசனங்களாலும் விளங்கும். ஓர் ஆலந்துறை அன்பில் என்ற ஊரில் அமைந்திருந்தது. அதனை அன்பிலாலந்துறை என்றே தேவாரம் பாடிற்று.

புள்ள மங்கை ஆலந்துறை

இன்னும், காவிரிக் கரையில் அமைந்த புள்ள மங்கை என்னும் பதியில் ஈசன் கோயில் கொண்ட இடமும் ஓர் ஆலந்துறையாகும்.

“புலன்கள் தமைவென் றார்புகழ்
அவர்வாழ் புளமங்கை
அலங்கல் மலிசடை யானிடம்
ஆலந் துறையதுவே”

என்னும் தேவாரப் பாசுரம் இதனைத் தெரிவிக்கின்றது.

அந்துவ நல்லூர் ஆலந்துறை

காவிரியின் வடகரையில் அமைந்தது புள்ள மங்கை ஆலந்துறை. அந் நதியில் தென்கரையிலும் ஓர் ஆலந்துறை உண்டென்பது திருத்தொண்டர் புராணத்தால் அறியப்படும். காவிரியாற்றின் தென் கரையில் அமைந்த திருக்கோயில்களை வழிபடப் போந்த திருஞான சம்பந்தர் திருவாலந்துறை முதலாய தலங்களை வணங்கினார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.19 எனவே, அவர் குறித்த ஆலந்துறை திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே ஏழு மைல் அளவில் காவிரியின் தென் கரையில் அமைந்த அந்துவநல்லூர் என்ற ஊரில் உள்ள ஆலயமே ஆதல் வேண்டும். இக்காலத்தில் அந்த நல்லூர் என வழங்குகின்ற அந்துவநல்லூரில் ஆலந்துறை யென்னும் பழமையான ஆலயம் உண்டென்று சாசனம் கூறும்.20 அக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஈசன் வடதீர்த்த நாதர் என்று பிற்காலக் கல்வெட்டுக்களிற் குறிக்கப்படுதலும் இதனை வலியுறுத்துவதாகும். வடதீர்த்தம் என்பது ஆலந்துறையைக் குறிக்கும் வடசொல்.

திருப்பழுவூர் ஆலந்துறை

திருவையாற்றுக்கு வடக்கே பத்து மைல் தூரத்தில் உடையார் பாளைய வட்டத்தில் திருப்பழுவூர் என்னும் பழம்பதி யொன்று உள்ளது. அது திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றதாகும். அங்கு ஆலமரச் சோலையில் ஆண்டவன் கோயில் கொண்டமையால் ஆலந்துறை யென்பது அதன் பெயராயிற்று.21 ஆலந்துறையில் அமர்ந்தருளும் ஈசனை இந் நாளில் வட மூலநாதர் என்பர். பிற்காலத்தில் பழுவூர், கீழப்பழுவூர் எனவும், மேலப் பழுவூர் எனவும் இரண்டாகப் பிரிந்தது. பாடல் பெற்ற பழுவூர் கீழப் பழுவூர் ஆகும்.

ஏமப்பேருர் ஆலந்துறை

தென்னார்க்காட்டிலுள்ள ஏமப்பேரூர் என்னும் வைப்புத் தலத்தில் விளங்கும் ஆலயத்தின் பெயரும் ஆலந்துறை என்பதாகும்.22 திருவாலந்துறையுடைய பெருமானுக்கு மூன்று கால வழிபாடு நாள்தோறும் முறையாக நடைபெறும் வண்ணம் நலவூர் வாசிகள் நல்கிய நிவந்தம் கல்வெட்டிற் காணப் படுகின்றது.23 அநபாயன் என்னும் விருதுப் பெயர் தாங்கிய இரண்டாம் குலோத்துங்க சோழன் அநபாய நல்லூர் என்ற ஊரை உண்டாக்கி, அதனை ஆலந்துறை யுடையாருக்கு அளித்தான்.

இடையாறு மருதந்துறை

பெண்ணையாற்றின் அருகேயுள்ள பதிகளுள் ஒன்று இடையாறு. அங்கு ஈசன் கோயில்கொண்ட இடம் மருதந்துறை என்று சாசனம் அறிவிக்கின்றது. ‘பெண்ணைத் தெண்ணீா், ஏற்றுமூர் எய்த மானிடையா றிடை மருதே’ என்று சுந்தரர் தேவாரத்தில் அமைந்ததும் இத் துறையே. தென்னார்க்காட்டுத் திருக்கோயிலூர் வட்டத்தில் இப்பொழுது இடையார் என வழங்கும் ஊரே மருதந் துறையையுடைய இடையாறாகும்.24

குரக்குத்துறை

திருச்சி நாட்டைச் சேர்ந்த முசிரிக்கு மேற்கே ஆறு மைல் தூரத்தில் குரங்குநாதன் கோயில் ஒன்று உண்டு. அக்கோயிலையுடைய ஊர் மகேந்திர மங்கலம் என்றும் அது வடகரை மழநாட்டுப் பிரமதேயம் என்றும் கல்வெட்டுக் கூறுகின்றது.25 பழமையான குரங்குநாதன் கோயில் குரக்குத்துறை யென்று பெயர் பெற்றிருந்தது. கட்டுமானத்தில் அது காஞ்சிக் கயிலாச நாதர் கோயிலை ஒத்திருக்கின்றது.26 இப்பொழுது அக்கோயிலுள்ள ஊர் ஸ்ரீநிவாச நல்லூர் என வழங்கும்.27

இந் நாளில் நெல்லை நாட்டில் அம்பாசமுத்திரம் என்று வழங்கப்படுகின்ற ஊர் ஆதியில் இளங்கோக்குடி என்னும் பெயர் வாய்ந்து விளங்கிற்று. சாலைத்துறை என்பது திருச்சாலைத்துறை

அங்குள்ள திருக்கோயிலின் பெயர். அவ்வூரில் அமைந்த சிவாலயம் திருப்போத்துடையார் கோவில் என்று பெயர் பெற்றிருந்தது. அஃது இன்று எரிச்சாவுடையார் கோவில் என வழங்குவதாகும்.28

செந்நெறி

துறை யென்பது கோவிற் பெயராக வழங்குதல் போன்று நெறி யென்று பெயர் பெற்ற சிவாலயங்களும் சில உண்டு. திருச்சேறைப் பதியில் அமைந்த கோயில் செந்நெறி யென்று பெயர் பெற்றது.29 அதனைச் செந்நெறி யுடையார் கோயில் என வழங்கலாயினர். அது நாளடைவில் உடையார் கோயில் ஆயிற்று.

நீள்நெறி

தண்டலை யென்பது ஒரு பாடல் பெற்ற தலம். அங்குள்ள ஆலயம் நீணெறி என்று தேவாரத்திற் போற்றப்படுகின்றது. மீளா நெறியாகிய நெடு நெறி காட்டும் இறைவன் அமர்ந்தருளும் ஆலயம் (நீணெறி) நீள்நெறி என்று பெயர் பெற்றது போலும்!

அரநெறி

திருவாரூரில் அமைந்த திருக் கோயில்களுள் ஒன்று அரநெறி யென்னும் பெயர் பெற்று விளங்கிற்று.

“அருந்தவனை அரநெறியில் அப்பன் தன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே”

என்று பாடினார் திருநாவுக்கரசர். தவநெறி

தென்னார்க்காட்டுக் கடலூர் வட்டத்தில் திருத்தளூர் என வழங்கும் திருத்துறையூரில் உள்ள சிவாலயத்தின் பெயர் தவநெறி என்பது சாசனத்தால் அறியப்படுகின்றது.30


அடிக் குறிப்பு

1. பராய் என்பது Paper tree என்று ஆங்கிலத்தில் வழங்கப்பெறும்.

2. திருஞான சம்பந்தர் புராணம், 347.

3. இராகவய்யங்கார் ஆராய்ச்சித் தொகுதி, u 287.

4. நல்லக்குடி யென்பது இந்நாளில் நல்லத்துக்குடி என மருவி வழங்குகின்றது.

5.“இம்மையே தரும் சோறும் கூறையும்

ஏத்தலாம் இடர் களையலாம் அம்மையே சிவலோக மாள்வதற்கு

யாதும் ஐயுற வில்லையே”
- என்ற சுந்தரர் தேவாரத்தில் சோறு என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது.

6. M. E. R. , 1931-32.

7. புதுக்கோட்டை நாட்டில் பெருந்துறை என்னும் பெயருடைய ஊர் ஒன்றுண்டு. அங்குள்ள பழுதுற்ற சிவாலயத்திற் கண்ட சாசனங்களால் அவ்வூர் பழைய கான நாட்டைச் சேர்ந்த தென்பது புலனாகின்றது. பெருந்துறை என்ற பெயர் ஆதியில் அத்திருக் கோயிலுக்கு அமைந்து, பிறகு ஊரின் பெயரா யிருத்தல் கூடும். 404 of 1906.

8. இத் தலத்தை வணங்கிய வாலி, அரக்கர் வேந்தனாகிய இராவணனை வென்றுயர்ந்த கிஷ்கிந்தை யரசனே என்பது.

“நீலமாமணி நிறத்தரக்கனை இருபது கரத்தோடொல்க
வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில்”

என்னும் திருஞான சம்பந்தர் வாக்கால் தெளிவாகும்.

-வடகுரங்காடு துறைப்பதிகம்.

9. 32 of 1913.

10. மயிலாடுதுறை. மயூரபுரமாகி, மயூரவரமாகி, மாயவரமாகிய செய்தி பின்னர்க் கூறப்படும்.

11. காடவர்கோன் திருவெண்பாவில், “கழுகு கழித்துண்டலை யாமுன் காவிரியின் தென்பால் குழித்தண்டலை யானைக் கூறு" என்று கடம்பந்துறையைப் பாடியுள்ளார்.

12. இத் தலத்தைக் குறித்துக் 'கடம்பூர் கோயில் உலா’ என்னும் பிரபந்தம் ஒன்று உண்டு.

13. M. E. R., 1925.

14. இது திருச்சி நாட்டுப் பெரம்பலூர் (பெரும்புலியூர்) வட்டத்தில் உள்ளது.

15. 316 of 1903 ஈசான மங்கலத்துத் திருச்செந்துறையில் முதற் பராந்தக சோழன் மகனாகிய அரிகுல கேசரியின் மனையாள், தென்னவன் இளங்கோ வேளாரின் திருமகள் எடுப்பித்த கற்றளியைக் குறிப்பது இச் சாசனம். S. I. I. Vol III, ஐ. 228.

16. 568 of 1908; 575 of 1908.

17. தஞ்சை நாட்டுத் திருத்துறைப்பூண்டியும் கோயிலடியாகப் பிறந்த ஊர்ப்பெயராகத் தெரிகின்றது. திருத்துறையென்ற ஆலயத்தையுடைய பூண்டி திருத்துறைப்பூண்டியாயிற்று போலும்; 477 of 1912 இவ்வாறன்றித் திருத்தருப்பூண்டி யென்னும் பெயரே திருத்துறைப்பூண்டியெனத் திரிந்தது என்று கொள்வாரும் உளா்.

18. 210 of 1929.

19. திருஞான சம்பந்தர் புராணம், 342

20. I. M. P., Trichinopoly,371,374. 21. பழுமரம் என்னும் சொல் ஆலமரம் என்று பொருள் படுதலால், பழுவூர் என்பது ஆலமரமுடைய ஊரைக் குறித்தது போலும்! வடமூலநாதன் என்னும் சொல் ஆலந்துறை இறைவன் என்று பொருள்படும்.

22. 533 of 1921.

23. 513 of 1921.

24, 276 of 1928.

25. 594 of 1904.

26. Trichinopoly Gazetteer, Vol. I. p. 289.

27. திருச்சி நாட்டு முசிரி வட்டத்தில் உள்ளது.

28. போத்து என்பது எருது. எனவே, போத்துடையார் எருதுவாசன முடைய ஈசன். எருத்தாவுடையார் என்று அப்பெயர் மொழிபெயர்க்கப்பட்டு, எரிச்சாவுடையாரால் சிதைந்ததென்று தோன்றுகின்றது.

29. காஞ்சிபுரத்தில் அமைந்த பாடல்பெற்ற கோவில் ஒன்று ‘கச்சி நெறிக் காரைக்காடு' என்னும் பெயருடையது. அதனைப் பாடிய திருஞான சம்பந்தர் பாசுரந்தோறும் 'நெறிக் காரைக் காட்டாரே' என்று போற்றும் பான்மையைக் கருதும் பொழுது நெறியென்பது ஆலயத்தின் பெயராக இருத்தல் கூடும் எனத் தோன்றுகின்றது. காஞ்சியில் அமைந்த நெறியாதலின் கச்சிநெறி எனப்பட்டது போலும்! இப்பொழுது காரைக்காடு திருக்காலிக்காடு என்றும், திருக்கோவில் திருக்காலீஸ்வரன் கோயில் என்றும் வழங்கும்.

3O. M. E. R., 1924-25.

அட்டானமும் அம்பலமும்

துறையும் நெறியும் கோயிற் பெயர்களாக அமைந்தவாறே அட்டானம், அம்பலம் என்னும் ஆலயப் பெயர்களும் உண்டு.

வீரட்டானம்

தமிழ் நாட்டில் வீரட்டானம் என்று விதந்துரைக்கப்படும் சிவப் பதிகள் எட்டு என்பர். “அட்டானம் என்றோதிய நாலிரண்டும்” என்று திருஞான சம்பந்தர் அவற்றைக் குறித்துப் போந்தார். கெடில நதியின் கரையில் அமைந்த அதிகை வீரட்டானம் முதலாக விற்குடி வீரட்டானம் ஈறாக உள்ள எட்டுத் தலங்களின் சீமை, திருப்பாசுரங்களாலும் சில சாசனங்களாலும் இனிது விளங்கும். சிவபெருமானது வீரம் விளங்கிய தலம் வீரட்டானமாகும்.1

திரு அதிகை வீரட்டம்

தென் ஆர்க்காட்டுப் பதிகளுள் சாலச் சிறந்த பெருமை வாய்ந்தது திருவதிகை என்பர். சூலை நோயுற்ற திருநாவுக்கரசர் அப்பிணி தீருமாறு உருக்கமாகப் பாட்டிசைத்த பெருமையும் அப்பதிக்கே உரியது.

“ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத் துறையம் மானே”

என்பது அவர் பாட்டு. கெடில நதிக் கரையில் அதிகையென்னும் ஊரில் வீரட்டானக் கோயிலுள் அமர்ந்த இறைவனை இவ்வண்ணம் உள்ளமுருகிப் பாடினார் திருநாவுக்கரசர். திரிபுரங்களில் அமைந்து தீங்கிழைத்த தீயோரை இறைவன் சுட்டெரித்தமையால் அவ்விடம் வீரட்டானம் என்று பெயர் பெற்ற தென்பர். “ஒன்னார் புரங்கள் செற்றவர் வாழும் திருவதிகைப்பதி” என்று சேக்கிழார் கூறுமாற்றால் இவ் வைதிகம் விளங்குவதாகும்.

கெடில நதித் துறையில் அமைந்த அவ் வீரட்டானத் திறைவனைக் கெடிலவாணர் என்றும், கெடிலப் புனலுடையார் என்றும் திருநாவுக்கரசர் பாடி யருளினார். இங்ஙனம் கெடில நதியுடைய பெருமானாய் விளங்கிய ஈசனை,

“அறிதற் கரியசீர் அம்மான் தன்னை
அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னை
எறிகெடிலத் தானை இறைவன் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே”

என்று அவர் இரங்கிப் பாடினார். இப்பாட்டில் காணும் அதியரைய மங்கையே அதிகை யெனக் குறுகி வழங்கலாயிற்று.

திருக்கோவலூர்-வீரட்டம்

மற்றொரு வீரட்டானம் திருக்கோவலூர் ஆகும். அது பெண்ணை யாற்றின் தென்கரையில் உள்ளது. முன்னாளில் சேதி நாடென்றும், மலாடென்றும் பெயர் பெற்றிருந்த நாட்டின் தலைநகரமாகத் திருக் கோவலூர் விளங்கிற்று.2 பின்னாளில் அவ்வூர் மேலுார் என்றும், கீழுர் என்றும் பிரிவுற்றது. மேலுாரே திருக்கோயிலூர் என இன்று வழங்கி வருகின்றது.3 தேவாரப் பாமாலை பெற்ற வீரட்டானம் கீழுரில் உள்ளது. குறுக்கை- விரட்டம்

மாயவரத்திற்கு வடமேற்கே ஐந்து மைல் அளவில் உள்ள குறுக்கையிலுள்ள திருக்கோயிலும் வீரட்டானம் என்று திருநாவுக்கரசர் தேவாரம் குறிக்கின்றது. கண்ணப்பர் முதலிய அடியார்க்கு அருள்புரிந்த ஆண்டவனது பெருங்கருணையைக் குறுக்கையில் நினைந்து போற்றுகின்றார் நாவரசர்.

“நிறைகடல் மண்ணும் விண்ணும்
நீண்ட வானுலகும் எல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலும்
குறுக்கை வீரட்ட னாரே’

என்னும் திருப்பாசுரத்தால் அரந்தை கெடுத்து வரந்தரும் இறைவன் பெருமை இனிது விளங்குவதாகும். ஈசன்மீது மலர்க்கணை தொடுத்த மன்மதன் அவர் கண்ணழலாற் காய்ந்திடக் கண்டது குறுக்கை வீரட்டம் என்பர்.

திருக்கடவூர்- விரட்டம்

மாசற்ற பூசை புரிந்த மார்க்கண்டனுக்காகக் காலனைக் காலால் உதைத்த ஈசனது பெருங்கருணைத் திறம் தேவாரத்தில் பாசுரங்களிற் பாராட்டப்படுகின்றது. திருக்கடவூரில் அமைந்த வீரட்டானம் அவ் வைதிகத்தைக் காட்டுவதாகும்.

“மாலினைத் தவிர நின்ற .
மார்க்கண்டர்க் காக அன்று
காலனை உதைப்பர் போலும்
கடவூர் வீரட்ட னாரே"

என்று திருநாவுக்கரசர் அவ்வூரைப் பாடியுள்ளார். கடவூர் வீரட்டானத்து இறைவனைக் காலகால தேவர் என்று கல்வெட்டுக் குறிக்கின்றது.4 திருக்கண்டியூர் - வீரட்டம்

திருவையாற்றுக்குத் தென்பால் உள்ள திருக்கண்டியூரில் அமைந்த கோயிலும் வீரட்டானமாகும். பிரமதேவனது செருக்கை அழிக்கக் கருதிய சிவபெருமான். அவன் சிரங்களில் ஒன்றையறுத்திட்ட செய்தியை இப் பதியோடு பொருத்தித் தேவாரம் போற்றுகின்றது. அச் செயலை “ஊரோடு நாடறியும்” என்று அருளினார் திருநாவுக்கரசர்.5

திருப்பறியலூர்- வீரட்டம்

இந் நாளில் பரசலூர் என வழங்கும் திருப்பறியலுரில் அமைந்த வீரட்டானத்தைத் திரு ஞான சம்பந்தர் பாடியுள்ளார்.

“திரையார் புனல்சூழ் திருப்பறிய லூரில் விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே”

என்பது அவர் தேவாரம். தருக்குற்ற தக்கன் தலையறு பட்ட இடம் திருப்பறியலூர் என்பர்.

வழுவூர்-வீரட்டம்

மாயவரத்துக்குத் தெற்கே நான்கு மைல் அளவில் உள்ளது வழுவூர் வீரட்டானம். அது சயங்கொண்ட சோழ வளநாட்டில் திருவழுந்துர் நாட்டைச் சேர்ந்த தென்று சாசனம் கூறும்.6 இரண்டாம் இராசராசன் முதலாய இடைக்காலச் சோழ மன்னர் அவ் வீரட்டானத்தை ஆதரித்த பான்மை கல்வெட்டுக்களால் விளங்குகின்றது.7

தஞ்சை நாட்டு நன்னில வட்டத்திலுள்ள விற்குடியில் அமைந்த கோயிலும் வீரட்டானம் என்று தேவாரம் கூறுகின்றது. “விடைய தேறும் எம்மான் அமர்ந்து இனிதுறை விற்குடி வீரட்டம்” என்று திருஞான சம்பந்தர் அதனைப் போற்றினார். சலந்தரன் என்னும் அசுரனை ஈசன் சங்காரம் செய்த இடம் அவ் வீரட்டம் என்பர்.

ஆருர்-மூலட்டானம்

திருவாரூர் பழமையும் பெருமையும் வாய்ந்த பல திருக்கோயில்களையுடையது.அவற்றுள்ளே தலை சிறந்தது பூங்கோயில் என்னும் புகழ் பெற்ற மூலட்டான மாகும். அங்குப் பழங்காலத்தில் புற்றிலே ஈசன் வெளிப்பட்டமையால் புற்றிடங் கொண்டார் என்றும், வன்மீகநாதர் என்றும் அவர் வழங்கப் பெறுவர்.

“இருங்கனக மதிலாரூர் மூலட்டானத்
தெழுந்தருளி யிருந்தானை"

என்ற திருநாவுக்கரசர் பாசுரத்தில் மூலட்டானம் குறிக்கப் பட்டுள்ளது.

பொன்னம்பலம்

தமிழ்நாட்டுக் கோயில்களுள் தலை சிறந்து விளங்குவது தில்லைச் சிற்றம்பலம் ஆகும். “அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்” என்று தேவாரம் பாடிற்று. அங்கு ஆனந்த நடனம் புரியும் இறைவனை அம்பலவாணன் என்பர். சிற்றம் பலத்தின் சீர்மையறிந்த தமிழ் மன்னர் அதனைப் பொன்னம்பலம் ஆக்கினர். ஆகவே, கனகசபை என்ற வடமொழிப் பெயரும் அதற்கு அமைந்தது.9

வெள்ளியம்பலம்

மதுரை யம்பதியில் ஆலவாய் என்னும் திருக்கோயிலில் ஓர் அம்பலம் உண்டு. அது வெள்ளியம்பலம் எனப்படும். அம்பலவாணர்க்கு அவ்வம்பலமும் உரியதென்பர்.

“அதிராச் சிறப்பின் மதுரை மூதுர்க்
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில் வெள்ளி யம்பலத்து நள்ளிருட் கிடந்தேன்”

என்று சிலப்பதிகாரப் பதிகம் அதனைக் குறிக்கின்றது. - பொன்னம்பலம், வெள்ளியம்பலம் ஆகிய இரண்டும் தமிழ் நாட்டுப் பஞ்ச சபைகளுள் சிறந்தனவாகப் பாராட்டப் பெறும்.10

அடிக் குறிப்பு

1.வீரஸ்தானமே வீரட்டானம் என்பர். அவற்றைத் தொகுத்துக் கூறுகின்றது ஒரு பாட்டு.

“பூமன் திருக்கண்டி அந்தகன் கோவல் புரம் அதிகை
மாமன் பறியல் சயந்தான் விற்குடி மாவழுவூர் கர்மன் குறுக்கை நமன்கடவூர் இந்தக் காசினிக்குள்
தேமன்னு கொன்றைச் சடையான் பொருதிட்ட சேவகமே”

2.திருத் தொண்டர்களுள் ஒருவராகிய மெய்ப் பொருள் நாயனார் திருக்கோவலூரில் இருந்து அரசாண்ட குறுநில மன்னர் என்பது திருத்தொண்டர் புராணத்தால் அறியப்படும்.

“சேதிநன் னாட்டின் நீடு திருக்கோவ லுரின் மன்னி மாதொரு பாகர் அன்பின் வழிவரும் மலாடர் கோமான்”

என்று அவர் குறிக்கப்படுகின்றார். மலையமான் நாடு மலாடென்றும், அந் நாட்டினர் மலாடர் என்றும்,அவர்தம் மன்னர் மெய்ப்பொருள் நாயனார் என்றும் கூறுவர். (திருத்தொண்டர் புராண வுரை, ப.578.) 3.இப்பாகத்தில் ஆழ்வார்கள் மூவரால் மங்களா சாசனம் செய்யப்பெற்ற இடைக்கழி என்னும் பெருமாள் கோயில் இருக்கின்றது.

4.22 of 1906.

5.“பண்டங் கறுத்ததொர் கையுடையான்
படைத்தான் தலையை
உண்டங் கறுத்ததும் ஊரொடு -
நாடவை தானறியும்” - திருக்கண்டியூர்ப் பதிகம்,3

6.418 of 1912. w

7.419 of 1912, 423 of 1912. -

8.'அட்டானம்' என்று ஒதிய எட்டுப் பதிகளையும் ஒரு திருப்பாசுரத்திலே குறித்தருளிய திருநாவுக்கரசர் விற்குடி வீரட்டத்தை விடுத்துக் கோத்திட்டைக்குடி வீரட்டத்தைக் கூறுகிறார். கோத்திட்டை பாடல் பெற்ற தலவரிசையிற் காணப் படாமையால் அது வைப்புத் தலமாகக் கருதப்படுகின்றது. அட்டானம் எட்டுக்குமேல் இல்லை என்பது அட்டான மென்றோதிய நாலிரண்டும்” என்ற திருஞான சம்பந்தர் வாக்கால் தெளிவாகும். எனவே, திருநாவுக்கரசர் அட்டானத் திருப்பாசுரத்திற் குறித்த கோத்திட்டைக்குடி விற்குடிதானோ என்பது ஆராய்தற் குரியது.

9.மலையாளத்திலும் அம்பலம் என்பது கோயிலைக் குறிக்கும். அம்பலப் புழை முதலிய ஊர்ப் பெயர்கள் இதற்குச் சான்றாகும்.

10.ஏனைய சபைகள்: திருநெல்வேலியில் தாமிரசபை, திருக்குற்றாலத்தில் சித்திரசபை, திருவாலங்காட்டில் இரத்தின சபை, 

மாடமும் மயானமும்

தூங்கானைமாடம்

மாடம் என்னும் பெயர் அமைந்த இரண்டு திருக்கோயில்கள் தேவாரத்திற் குறிக்கப் பட்டுள்ளன.அவற்றுள் ஒன்று கடந்தையென்னும் பெண்ணாகடத்தில் உள்ள தூங்கானை மாடம்,

“கடந்தைத் தடங் கோயில் சேர்
தூங்கானை மாடம் தொழுமின்கனே”

என்று தேவாரம் அம்மாடத்தைப் போற்றுகின்றது.

தான்தோன்றிமாடம்

இன்னும்,ஆக்கூரில் உள்ள சுயம்பு வடிவான ஈசன் திருக்கோவில் தான்தோன்றி மாடம் என்னும் பெயர் பெற்றது.முன்னாளில் அறத்தால் மேம்பட்டிருந்த ஊர்களில் ஆக்கூரும் ஒன்றென்பர்.அங்குச் சிறப்புற்று வாழ்ந்த வேளாளரின் வள்ளன்மையைத் தேவாரத் திருப்பாட்டில் அமைத்துப் புகழ்ந்தார் திருஞானசம்பந்தர்.

“வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும்
தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே”

என்பது அவர் வாக்கு.அங்குள்ள மாடக்கோயிலில், இயற்கையுருவாக ஈசன் விளங்குதலால், தான் தோன்றி மாடம் என்பது திருக்கோயிலின் பெயராயிற்று.1

நாலூர்-மயானம்

மயானம் சுடுகாடும் ஈசனது கோயிலாகும். “கோயில் சுடுகாடு, கொல்புலித்தோல் நல்லாடை” என்று பாடினார் மாணிக்கவாசகர். “காடுடைய சுடலைப் பொடி பூசி, என துள்ளங் கவர் கள்வன்” என்று ஈசன் மேனியில் விளங்கும் வெண்ணிற்றின் பெருமையை விளக்கினார் திருஞான சம்பந்தர். இத் தகைய சீர்மை வாய்ந்த மயானங்களில் மூன்று தேவாரத்திற் கூறப்பட்டுள்ளன. அவை நாலூர் மயானம், கடவூர் மயானம், கச்சி மயானம் என்பன.

“நல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானத்தைச் சொல்லா தவரெல்லாம் செல்லாதார் தொன்னெறிக்கே”

என்று தேவாரம் கூறுமாற்றால் நாலூர் மயானத்தின் பெருமை நன்கு விளங்கும். அம் மயானம் இப்பொழுது திருநாலூர் எனனும் ஊருககு ஒரு மைல துரத்தில் உள்ளது; திருமெய்ஞ்ஞானம் என வழங்குகின்றது.

திருக்கடவூர்-மயானம்

திருக்கடவூர் மயானம் மூவர் தேவாரமும் பெற்றது. அங்கமர்ந்த இறைவன் திருநாமம் பெருமானடிகள் என்று குறிக்கப்படுகின்றது.

“கரிய மிடறும் உடையார் கடவூர்
மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவார் அவர்எம்
பெருமான் அடிகளே”

என்று பாடினார் திருஞான சம்பந்தர்.2 அம் மயானம் திருக்கடையூர் என வழங்கும் ஊருக்குக் கிழக்கே ஒரு மைல் தூரத்தில் உள்ளது. திருமயானம் என்பது அதன் பெயர்.

கச்சி-மயானம்

காஞ்சி மாநகரில் அமைந்த சிவாலயங்களுள் கச்சி மயானமும் ஒன்றென்பது, “மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் என்னும் திருநாவுக்கரசர் திருப்பாசுரத்தால் விளங்கும். கொடுமை புரிந்த பண்டாசுரன் என்பவனைக் கச்சி-மயானம் காஞ்சிபுரத்தில் வேள்வித் தியில் இட்டு ஈசன் ஒழித்தார் என்றும், அன்று முதல் அவ்விடம் என்று பெயர் பெற்ற தென்றும் காஞ்சிப் புராணம் கூறுகின்றது.3

“அண்ணுதற் கரிய அன்று தொட்டிலிங்க மாகிப் புண்ணிய மயான லிங்கம் எனப்பெயர் பொலிவுற் றன்றே”

என்ற பாட்டு கச்சி மயானத்தின் வரலாற்றைக் காட்டுவதாகும்.

அடிக் குறிப்பு

1.தான்தோன்றி என்பது தமிழ்ச்சொல்; சுயம்பு என்பது வடசொல்.

2.“திருமால் பிரமன் இந்திரற்கும்
தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமாள் அடிகளே -சுந்தரர் தேவாரம்

3.காஞ்சிப் புராணம்: கச்சி மயானப் படலம், 19. 

தலமும் கோவிலும்


கருவூர்-ஆனிலை

பழங்காலத்தில் தமிழ்நாட்டிற் சிறந்து விளங்கிய நகரங்களுள் ஒன்று கருவூர் ஆகும். அதன் பெருமையைச் சங்க நூல்களும் சமய நூல்களும் எடுத்துரைக்கின்றன.'திருமா வியனகர்க் கருவூர்' என்று, அகநானூறும்,“தொன் னெடுங் கருவூர்"- என்று திருத்தொண்டர் புராணமும் கூறுதலால் அதன் செழுமையும் பழமையும் நன்கு புலனாகும். ஆன்பொருநை என்னும் ஆம்பிராவதி யாற்றின் வடகரையில் அமைந்த கருவூர் பண்டைச் சோழ மன்னர் முடி புனைந்து கொண்ட பஞ்ச நகரங்களுள் ஒன்று என்பர். அங்குள்ள சிவாலயம் ஆனிலை என்னும் பெயருடையது.1 “அரனார் வாழ்வது ஆனிலை யென்னும் கோயில்” என்பது சேக்கிழார் திருவாக்கு.அக்கோயிலுக்குப் பசுபதீச்சரம் என்ற வடமொழிப் பெயரும் உண்டு.

கருவிழி-கொட்டிட்டை

பிறப்பும் இறப்பும் அற்றவன் ஈசன் என்று சைவ சமயம் கூறும்.அந்த முறை பற்றியே இளங்கோவடி களும் “பிறவா யாக்கைப் பெரியோன்” என்று சிலப்பதிகாரத்தில் சிவபெருமானைக் குறித்துப் போந்தார். பிறப்பற்ற தன்மையைக் கருவிலி என்னும் சொல் உணர்த்துவ தாகும்.அதுவே ஒரு பாடல் பெற்ற தலத்தின் பெயராகவும் வழங்கு கின்றது. தஞ்சை நாட்டு நன்னில வட்டத்தில் கருவிலி என்னும் ஊர் உள்ளது. பரமன் பெயரே பகுதிக்கு அமைந்தது போலும்! அங்கு ஈசன் கோயில் கொண்ட இடம் கொட்டிட்டை என்று தேவாரம் கூறும்.2 அக்கோயிற் பெயர் சாசனங்களிலும் வழங்குகின்றது.3 இந்நாளில் அவ்வூர்ப் பெயர் கருவேலி என மருவியுள்ளது.

குருகாவூர்-வெள்ளடை

சோழ நாட்டில் சோலையும் குருகாவூர்- வயலும் சூழ்ந்த குருகாவூரில் ஈசன் வெள்ளடை கோயில் கொண்ட இடம் வெள்ளடை என்று பெயர் பெற்றது.4

"வளங்கனி பொழில்மல்கு
வயலணிந் தழகாய்
விளங்கொளி குருகாவூர்
வெள்ளடை யுறைவானை”

என்று பாடினார் சுந்தார்.

திருஆனைக்கா-வெண்நாவல்

திருச்சிராப்பள்ளிக்கு அருகேயுள்ள திருஆனைக்கா என்னும் சிவஸ்தலம் பண்டைச் சோழ மன்னரால் பெரிதும் கொண்டாடப்பட்ட தென்பர். ஈசனார்க்குப் பல மாடக்கோயில் கட்டி மகிழ்ந்த கோச்செங்கட் சோழன் சிவனருள் பெற்ற இடம் திரு ஆனைக்காவே யாகும்.5 காவிரிக்கரையில் அமைந்த ஆனைக் காவில் வெண்ணாவல் மரத்தில் விளங்கிய தன்மையையும், சோழ மன்னனுக்கு அருள் புரிந்த செம்மையையும் திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.

“செங்கட் பெயர் கொண்டவன் செம்பியர்கோன்
அங்கட் கருணை பெரிதா யவனே
வெங்கண் விடையாய்எம் வெணாவலுளாய்

என்ற தேவாரத்தால் வெண்ணாவலே ஈசன் கோயில் என்பது நன்கு விளங்குகின்றது. இக் கோயில் வடமொழியில் ஜம்புகேசுரம் எனப்படும்.

சாத்தமங்கை-அயவந்தி

இக்காலத்தில் செய்யாத்த மங்கையென வழங்கும். திருச்சாத்த மங்கை தேவாரப் பாடல் பெற்ற பழம்பதி. அழகிய சோலை சூழ்ந்த அப்பதியினை “ஆர்தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்தி” என்று சேக்கிழார் குறித்தருளினார். சாந்தை என்பது சாத்த மங்கையின் குறுக்கம். அப்பதியில் அமைந்த திருக்கோயிலின் பெயர் அயவந்தியாகும். “அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தி” என்று திருநாவுக்கரசர் குறித்துப் போந்த ஆலயம் இதுவே.

அயவந்தியில் அமர்ந்து அடியாரது அரந்தை கெடுத்தருளும் இறைவனை,

“கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழச் செய்தபாவம் அற்றவர் நாளும் ஏத்த அயவந்தி அமர்ந்தவனே.”

என்று திருஞான சம்பந்தர் பாடியருளினார். எனவே, அயவந்தி என்பது சாத்தமங்கையில் உள்ள ஆண்டவன் கோயில் என்பது இனிது அறியப்படும்.

கரையூர்-பாண்டிக்கொடுமுடி

கொங்கு நாட்டைச் சேர்ந்த திருப்பாண்டிக் கொடுமுடி பாடல் பெற்றதொரு பழம்பதி. காவிரியாற்றின் கரையில் இனிதமைந்துள்ள இப் பதியை,

“பரந்திழி காவிரிப் பாங்கர்ப்
காண்டிக் கொடுமுடி யாரே”

என்று பாடினார் திருஞான சம்பந்தர். இங்ஙனம் ஈசனார் அமர்ந்தருளும் பாண்டிக் கொடுமுடி என்னும் திருக்கோயில் கறையூர் என்ற ஊரைச் சேர்ந்த தென்பது தேவாரப் பாட்டால் விளங்குவதாகும்.

“கற்றவர்தொழு தேத்தும் சீர்க்கறை
யூரில் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உனைநான் மறக்கினும்
சொல்லும்நா நமச்சி வாயவே”

என்பது சுந்தரர் தேவாரம்.இக்காலத்தில் கறையூர் என்னும் பெயர் மறைந்து, கொடுமுடி என்ற கோயிற் பெயரே ஊருக்கு அமைந்துவிட்டது. எனினும், இறைவன் கறையூரில் உறைகின்றான் என்பது,

“கறையூர் கருப்பறியல் கன்றாப் பூரும்
கயிலாய நாதனையே காண லாமே”

என்ற திருநாவுக்கரசர் வாக்கால் தெளியப்படும்.

திருந்துதேவன்குடி-அருமருந்து

இந்நாளில் வேப்பத்தூர் என வழங்கும் திருந்து தேவன் குடியில் அமைந்த ஈசன் கோயில் அருமருந்து என்னும் பெயர் பெற்றிருந்ததாகத் தெரிகின்றது. அருமருந்துடைய ஆண்டவனைப் பாடினார் திருஞான சம்பந்தர்.

“திருமருவும் பொய்கை சூழ்ந்த தேவன்குடி அருமருந்தாவன அடிகள் வேடங்களே”

என்று அவர் பாடியுள்ள பான்மையால் அருமருந்து என்பது முதலில் இறைவன் திருநாமமாக அமைந்தது. பின்பு அவர் கோயில் கொண்ட தலத்தைக் குறிப்பதாயிற்றென்று தோற்றுகின்றது. நல்லூர்-பெருமணம்

சைவ உலகம் தலைக்கொண்டு போற்றும் திருத் தொண்டராகிய திருஞான சம்பந்தர் இறைவனது சோதியிற் கலந்த இடம் நல்லூர்ப் பெருமணம் என்று அவர் வரலாறு கூறுகின்றது. நல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவாலயத்தின் பெயர் பெருமணம் என்பதாகும்.

“நாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய வேதன் தாள்தொழ வீடெளி தாமே.”

என்று திருஞான சம்பந்தர் பாடுதலால் இவ்வுண்மை விளங்கும்.பெருமணம் என்னும் சிறந்த திருக்கோயிலைத் தன்னகத்தேயுடைய நல்லூர்,பெருமனநல்லூர் என்றும் வழங்க லாயிற்று.இந்நாளில் அப்பழம் பெயர்கள் மறைந்து ஆச்சாபுரம் என்று அவ்வூர் அழைக்கப்படுகின்றது.

நாகை-காரோணம்

காரோணம் என்னும் பெயர் பூண்ட திருக்கோயில் தமிழ்நாட்டில் மூன்று உண்டு.அவற்றுள் ஒன்று, சோழநாட்டுக் கடற்கரையில் அமைந்த நாக பட்டினத்தில் உள்ளது.தேவாரத்தில் அது கடல் நாகைக் காரோணம் என்று போற்றப்படும்.

“கற்றவர் பயிலும் நாகைக் காரோணம் கருதியேத்தப்
பெற்றவர் பிறந்தார் மற்றுப்பிறந்தவர் பிறந்திலாரே”

என்று திருநாவுக்கரசர் அதன் பெருமையை எடுத்து ரைத்தார்.காயாரோகணம் என்னும் சொல் காரோணம் என மருவிற்றென்பர்.

குடந்தை-காரோணம்

கும்பகோணம் என்னும் குடமூக்கில் பாடல் பெற்ற கோயில்களுள் ஒன்று காரோணமாகும்.

“தெரிய வரிய தேவர் செல்வம்
திகழும் குடமூக்கில்
கரிய கண்டர் கால காலர்
காரோணத் தாரே”

என்று அத்திருக்கோயில் திருஞான சம்பந்தரால் பாடப்பெற்றது. கும்பகோணம் மகாமகக் குளத்தின் வடகரையில் காசி விசுவநாதர் கோயில் என்னும் பெயர் கொண்டு விளங்கும் ஆலயமே பழைய காரோணம் என்பர்.

காஞ்சி-காரோணம்

காஞ்சி மாநகரில் அமைந்த திருக்கோயில்களுள் ஒன்று காயாரோகணம். அயனும் மாலும் அந்தம் வந்துற்றபோது அங்குள்ள ஈசனிடம் ஒடுங்குதலால் காயாரோகணப் பெயர் அதற்கு அமைந்ததென்று காஞ்சிப் புராணம் கூறும்.6 “காஞ்சிக்கு உயிரெனச் சிறந்த உத்தமத் திருக்காரோணம்” என்று புராணம் கூறுமாற்றால் அதன் பெருமை இனிது விளங்கு வதாகும்.

அடிக் குறிப்பு

1.“கண்ணுளர் கருவூருள் ஆனிலை
அண்ணலார் அடியார்க்கு நல்லரே”

-திருஞான சம்பந்தர், தேவாரம்.


2.“கங்கைசேர் சடையான்தன் கருவிலிக்
கொங்கு வார்பொழில் கொட்டிட்டை சேர்மினே

எனப் பணித்தார் திருநாவுக்கரசர்.

3.224 of 1923.

4.வெள்ளடை யென்பது வெள்விடையின் திரியென்று கொள்வாரும் உளர். 5.மற்றொரு சோழமன்னன் காவிரியில் நீராடும்பொழுது கழன்று விழுந்த மணியாரத்தைச் சிவார்ப்பணம் செய்தலும், அது திருமஞ்சனக் குடத்திற் புகுந்து ஆனைக்காவுடையார்க்கு அணியாயிற் றென்பர். இதனை,

“தார மாகிய பொன்னித் தண்துறை யாடிவிழுந்தும்
நீரின் நின்றடி போற்றி நின்மலா கொள்ளென. ஆரங் கொண்ட எம்மானைக் காவுடை ஆதியை”

என்ற சுந்தரர் தேவாரத்தால் அறியலாம்.

6.“இருவரும் ஒருங்கே இறவருங் காலை
எந்தையே ஒடுக்கி ஆங்கவர்தம்
உருவம்.மீ தேற்றிக் கோடலால் காயா
ரோகணப் பெயர்அதற் குறுமால்”

-காஞ்சிப்புராணம், காயாரோகணப் படலம்,6
.

கோயிலும் வாயிலும்

மாடக்கோயில்

தமிழகத்தில் ஈசனார்க்குரிய கோயில்கள் எண்ணிறந்தன.அவற்றுள் மன்னரும் முனிவரும் எடுத்த கோயில்கள் பலவாகும். சோழ நாட்டை யாண்ட செங்கணான் என்னும் கோமகன் “எண் தோள் ஈசற்கு எழில்மாடம் எழுபது செய்தான்” என்று திருமங்கையாழ்வார் கூறிப் போந்தார். அம் மன்னன் எடுத்த திருக்கோயில்களைப் பற்றிய சில குறிப்புகள் தேவாரத்தில் உண்டு. தஞ்சை நாட்டைச் சேர்ந்த நன்னிலத்தில் உள்ள பெருங்கோயில் அவன் செய்ததென்று சுந்தரர் தெரிவிக்கின்றார்.1

இன்னும் வைகல் என்னும் பதியிலுள்ள மாடக் கோவில் கோச்செங்கணான் கட்டியதென்பது,

“வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச் செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே”

என்ற திருஞான சம்பந்தர் வாக்கால் விளங்கும்.

அரிசிலாற்றங் கரையில் அமைந்த திரு அம்பர் மாநகரில், செங்கணான் கட்டிய கோயிலில் சிவபெருமான் வீற்றிருந்த செம்மை,

“அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க் குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே”

என்னும் தேவாரத்தால் விளங்குகின்றது.

திரு ஆனைக்காவில் வெண்ணாவல் மரத்தில் வெளிப் பட்ட ஈசனுக்கு அவ் வேந்தன் திருக்கோயில் எடுத்தான் என்று சேக்கிழார் அருளிப் போந்தார்.2 பெருங்கோயில்

ஈசனார் வீற்றிருக்கும் பெருங்கோயில் எழுபத்தெட்டு என்று கணக்கிட்டார் திருநாவுக்கரசர்.

“பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும் கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில் கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்”

என்று அவர் பாடுகின்றார். இப்பாசுரத்திற் குறிக்கப்பட்ட பெருங்கோயில் அனைத்தும் இக் காலத்திற் காணப்படாவிடினும் தேவாரத்தில் அவற்றைப் பற்றிய சில குறிப்புண்டு.

இந்நாளில் கொடவாசல் என வழங்கும் குடவாயிற் பதியில் ஒரு பெருங்கோயில் இருந்தது. நாகபட்டினத்திற்கு அண்மையிலுள்ள கீழ் வேளுரில் அமைந்த ஆலயமும் பெருங்கோயில் என்று பேசப்படுகின்றது. அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள கலய நல்லூர் என்னும் பதியில் ஒரு பெருங் கோயில் உண்டு. பூங்கமலப் பொய்கையின் இடையே அழகுற இலங்கிய அவ்வாலயத்தைச் சுந்தரர் பாட்டில் எழுதிக் காட்டியுள்ளார்.

“தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்தில்
தடங்கொள் பெருங்கோயில் தனில்தக்க வகையாலே”

எழுந்தருளிய ஈசனை அவர் மகிழ்ந்து போற்றுகின்றார்.

தலைச்சங்காடு என்னும் பதியில் பிறிதொரு பெருங் கோயில் இருந்ததென்பது,

“தண்டலையா ர்தலையாலங் காட்டி னுள்ளார் தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்தாம்”

என்னும் திருநாவுக்கரசர் திருவாக்கால் அறியப்படுகின்றது. பெருந்திருக்கோயில்

வட ஆர்க்காட்டு வந்தவாசி வட்டத்தில் மருதநாடு என்ற பழமையான ஊரொன்று உள்ளது. அங்கமைந்த ஆலயத்தின் பெயர் பெருந்திருக் கோயில் என்பது சாசனத்தால் விளங்கு கின்றது. இராஜராஜன் முதலாய பெருஞ் சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள் அங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன. சில காலம் விக்கிரம சோழ நல்லூர் என்ற மறுபெயரும் அதற்கு வழங்கியதாகத் தெரிகின்றது. பெருந்திருக்கோயில் என்பது இக்காலத்தில் புரந்தீஸ்வரர் கோயில் எனத் திரிந்து வழங்கு கின்றது.5

சிறுதிருக்கோயில்

தென்னார்க்காட்டுச் சிதம்பர வட்டத்தில் கொள்ளிட நதியின் வடகரையில் உள்ள எழும்பூர் என்னும் உருமூர் ஒரு பழமையான ஊர்.இடைக்காலத்தில் விக்கிரம சோழ சதுர் சிறுதிருக்கோயில் வேதிமங்கலம் எனவும் அவ்வூர் வழங்கிற்று. அங்குள்ள கோயிலிற் கண்ட சாசனங்கள் சிறு திருக் கோயில் என்று அதனைக் குறிக்கின்றன. இப்பொழுது கடம்பவனேஸ்வரர் கோயில் என்று கூறப்படுவது அதுவே.

சுரக்கோயில்

பாடல் பெற்ற கடம்பூரில் அமைந்துள்ள கோயில் கரக் கோயிலாகும்.

“நன்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
கரக்கோயில் தன் கடம்பைத் திருக்கரக்கோயிலான்”

என்று தேவாரம் இக்கோயிலைப் போற்றுகின்றது.

ஞாழங்கோயில்

நறுஞ் சோலைகளின் நடுவே யமைந்தது ஞாழற் கோயில் என்று தேவாரம் பாடிற்று.தஞ்சை நாட்டில் விளநகர் என வழங்கும் விளைநகரில் அமைந்த கோயில் திருஞாழற் கோயிலாகும்.ஞாழல் என்பது கொன்றை மரத்தின் ஒரு வகை. புலிநகக் கொன்றை என்றும் அதனைக் கூறுவர். கொன்றை மாலை சூடும் ஈசன் கொன்றையஞ் சோலையைக் கோயிலாகக் கொண்டார் போலும். ஆற்றங் கரையில் அழகுற அமர்ந்த திருஞாழற் கோயிலுடையார்க்கு அர்த்தயாமக் கட்டளைக்காக உத்தம சோழனுடைய முதற்பெருந் தேவியார் அளித்த நிவந்தம் சாசனத்திற் காணப்படுகின்றது.7

கொகுடிக்கோயில்

முல்லைக் கொடிகள் தழைத்துப் படர்ந்து மணங் கமழ்ந்த சூழலிற் கோவில் கொண்டார் சிவபெருமான். அது கொகுடிக் கோயில் என்று பெயர் பெற்றது கருப்பறியலூர் என்ற பழம் பதியிற் பொருந்திய அக்கோயில் தேவாரத்தில் இனிது எழுதிக் காட்டப்படுகின்றது.

“கடிநாறும் பூம்பொய்கைக் கயல்வாளை குதிகொள்ளும் கருப்பறியலூர்க்
கொடியேறி வண்டினமும் தண்தேனும்
பண்செய்யும் கொகுடிக் கோயில்”

என்னும் சுந்தரர் திருப்பாட்டில் முல்லைக் கோயிலின் கோலம் மிளிர்வதாகும். இத்திருக் கோயிலில் அமர்ந்த ஈசனைப் பிழையெல்லாம் பொறுத்தருளும் பெருமானாகக் கண்டு போற்றினார் திருஞான சம்பந்தர்.

“குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில் கற்றென இருப்பது கருப்பறிய லுரே”

என்றெழுந்த அவர் திருவாக்குக் கேற்ப அங்குள்ள இறைவன் திருநாமம் குற்றம் பொறுத்த நாதர் என்றே இன்றும் வழங்கி வருகின்றது. இன்னும், இறைவன் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களைத் தொகுத்துரைக்க விரும்பிய திருநாவுக்கரசர்.

“இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் வீழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே”

என்று பாடிப் போந்தார். இப்பாசுரத்திற் குறிக்கப் பெற்ற கோயில்களைத் தேவாரத்தாலும், சாசனங்களாலும் ஒருவாறு அறியலாகும்.

மேலே குறித்த கடம்பூரில் ஈசனார்க்குத் திருக்கரக்கோயிலோடு இளங்கோயில் என்னும் மற்றோர் ஆலயமும் இருந்ததாகத் தெரிகின்றது.

“கடம்பை இளங்கோயில் தன்னின் உள்ளும்
கயிலாய நாதனையே காண லாமே.”

என்றார் திருநாவுக்கரசர். இளங்கோயில்கடம்பூரில் திருக்கரக் கோயிலுக்குக் கிழக்கே ஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளதென்பர்.8

தஞ்சை நாட்டுப் பேரளத்திற்கு அருகே மற்றோர் இளங்கோயில் உண்டு.

“நெஞ்சம் வாழி நினைந்திடு மீயச்சூர்
எந்தமை உடையார் இளங்கோயிலே”

என்னும் திருநாவுக்கரசர் திருவாக்கால் இவ்விளங்கோயில் திருமீயச்சூரைச் சேர்ந்ததென்பது விளங்கும்.

சித்தூர் நாட்டில் இக்காலத்தில் திருச்சானூர் என வழங்கும் ஊரில் ஈசனார் அமர்ந்தருளும் இடம் இளங்கோயில் என்பது சாசனங்களால் விளங்குகின்றது. திருவேங்கடக் கோட்டத்துக் கடவூர் நாட்டுத் திருச் சொகினூரில் உள்ள இளங்கோயிற் பெருமான் என்பது சாசன வாசகம். இவ்வூரின் பெயர் திருச்சுகனுர் என்றும், சித்திரதானுர் என்றும் சிதைந்து வழங்கும்.10

ஆலக்கோயில்

தொண்டை நாட்டில் ஆலக்கோயில் எனச் சிறந்து விளங்கும் ஆலயங்கள் இரண்டு உண்டு பாடல் பெற்ற திருக்கச்சூரில் அமைந்த ஆலக் கோயில் ஒன்று; மதுராந்தகத்திற்கு அண்மையில் உள்ள ஆலக்கோயில் மற்றொன்று. திருக்கச்சூர் ஆலக் கோயிலைப் பாடினார் சுந்தரர்.

“கோலக் கோயில் குறையாக் கோயில்
குளிர்பூங் கச்சூர் வடபாலை
ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ்
அறங்கட் டுரைத்த அம்மானே”

என்று கல்லாலின் கீழிருந்து அறமுரைத்த பெருமானை ஆலக்கோயிலிற் கண்டு அகமகிழ்ந்து போற்றினார் சுந்தரர்.

மதுராந்தகத்திற்கு அருகே குளத்தூர்க் கோட்டத்துக் குளத்தூரில் அமைந்த ஆலக்கோயில் பெருஞ்சோழ மன்னரால் பெரிதும் ஆதரிக்கப் பெற்றதாகத் தெரிகின்றது.அநபாயன் என்னும் இரண்டாம் குலோத்துங்க சோழன் அரும்பாக்கத்தைச் சேர்ந்த சில நிலங்களுக்கு அநபாய நல்லூர் என்று பெயரிட்டு, ஆலக்கோயிலுக்கு அளித்தான்.11 மேலும், வல்ல நாட்டு நென்மலியைச் சேர்ந்த சில நிலங்களுக்குக் குலோத்துங்க சோழன் திருநீற்றுச் சோழ நல்லூர் என்று பெயரிட்டு அக் கோயிலுக்கே வழங்கினான்.12 நாளடைவில் அக்கோயிலையுடைய ஊர் திருவாலக் கோயில் என்று அழைக்கப்படுவதாயிற்று. இன்று திருவானக் கோயில் என வழங்குவது இதுவே யாகும்.13

பழைய ஊர்ப் பெயர்கள் மறைந்து கோயிற் பெயர்களால் இக் காலத்தில் வழங்கும் பதிகள் பலவாகும். பாண்டி நாட்டில் பாடல்பெற்ற கானப்பேர் என்னும் ஊர் காளையார் கோயில் ஆயிற்று. ஆப்பனூர், திருவாப்புடையார் கோயில் என அழைக்கப்படுகின்றது. மாணிக்கவாசகரை ஈசன் ஆட்கொண்டருளிய திருப்பெருந்துறை, ஆவுடையார் கோயிலாகத் திகழ்கின்றது. சோழ நாட்டுக் கடம்பந்துறை, கடம்பர் கோயில் எனவும், கடிக்குளம், கற்பகனார் கோயில் எனவும், கடுவாய் நதிக்கரையிலமைந்த புத்தூர், ஆண்டான் கோயில் எனவும் வழங்குகின்றன.

அம்புக்கோயில்

புதுக்கோட்டை நாட்டிலுள்ள அம்புக் கோயில் என்பது ஆதியில் அழும்பில் என்னும் பெயர் பெற்றிருந்தது. கல்வெட்டுக்களிலும் பழந்தொகை நூல்களிலும் குறிக்கப்பட்டுள்ள இவ்வூரில் மாணவிறல் வேள் என்னும் குறுநில மன்னன் அரசாண்டான் என்று மதுரைக்காஞ்சி கூறும். இவ்வூரில் எழுந்த சிவன் கோயில் அழும்பிற் கோயில் என வழங்கலாயிற்று. அழும்பிற் கோயில் அம்புக் கோயில் என மருவிற்று. நாளடைவில் கோயிற் பெயரே ஊர்ப் பெயராயிற்று.

பெரிச்சி கோயில்

இராமநாதபுரம் நாட்டில் திருப்பத்தூர் வட்டத்தில் பெரிச்சி கோயில் என்னும் ஊர் ஒன்று உள்ளது. அங்கமைந்த, பழமையான சிவாலயம் திருமட்டுக்கரை என்னும் பெயரால் சாசனத்திற் குறிக்கப்படுகின்றது. அவ் வாலயத்திலுள்ள பெரிய நாச்சியார் என்பது அம்பிகையின் பெயர். அந் நாச்சியார் வழிபாடு சிறப்புற நடைபெறுவதாயிற்று. சோணாடு வழங்கிய சுந்தர பாண்டியன் காலத்துச் சாசனம் ஒன்று பெரிய நாச்சியாருக்கு விதந்து அளித்த நிபந்தத்தை விளக்குகின்றது.16 நாளடைவில் பெரிய நாச்சியார் கோயில் என்று அக்கோயில் பெயர் பெற்றது. அதுவே பெரிச்சி கோயில் என மருவிற்று.

சங்கர நயினார் கோயில்

நெல்லை நாட்டுச் சிறந்த கோயில்களுள் ஒன்று சங்கர நயினார் கோயில். ஆதியில் அது புற்றுக் கோயிலாக இருந்திருக்க வேண்டும் என்று தோற்றுகின்றது. இன்றும் பாமர மக்கள் அதனைப் பாம்புக்கோவில் என்றே வழங்குவர். அங்குள்ள புற்று மருந்து என்னும் திருமண் எவ்வகைப் பிணியையும் தீர்க்க வல்லதென்று கருதப் படுகின்றது .அக்கோயிலையுடைய ஊர் முன்னாளில் இராசபுரம் என வழங்கிற்று. இதனா லேயே இராசை என்னும் பெயர் இலக்கியத்தில் அவ்வூரைக் குறிப்பதாயிற்று. பிற்காலத்தில் கோயிற் பெயரே ஊர்ப் பெயராகக் கொள்ளப் பட்டது.

பூரத்துக் கோயில்

திருச்சி நாட்டைச் சேர்ந்த குழித்தலை வட்டத்தில் பூரத்துக் கோயில் என்னும் ஊர் ஒன்று உண்டு. ஊரின் பெயர் கோயிலடியாக வந்ததென்பது வெளிப்படை.ஆதியில் பூலத்தூர் என்று அவ்வூர் பெயர் பெற்றிருந்தது. “உரத்துர்க் கூற்றத்துக் கடுவங்குடிப் பற்றிலுள்ள பூலத்தூர்” என்று சாசனம் கூறும்.18 பூலத்தூரில் முத்தீச்சுரம் என்னும் சிவாலயம் எழுந்தது. மாறவர்மன் முதலிய பாண்டி மன்னருள் பிறரும் அக் கோயிலுக்கு நிவந்தங்கள் அளித்துள்ளார்கள். நாளடைவில் முத்தீச்சுரம் பூலத்துர்க்கோயில் என்றே வழங்கலாயிற்று.அப்பெயர் பூரத்துக் கோயிலெனத் திரிந்து ஊரின் பெயராயிற்று.

அண்ணல் வாயில்

சிவபெருமான் வீற்றிருந்தருளும் வாயிற்பதிகளை வகுத்துரைக்கப் போந்த திருநாவுக்கரசர்,

<poem“கடுவாயர் தமைநீக்கி என்னை யாட்கொள் கண்ணுதலோன் நண்ணுமிடம் அண்ணல் வாயில் நெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில் நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்”</poem>

என்று பாடிச் செல்கின்றார்.

இத் திருப்பாசுரத்திற் குறிக்கப்பெற்ற அண்ணல் வாயில் இப்பொழுது சித்தன்ன வாசல் என்னும் பெயரோடு புதுக்கோட்டை நாட்டில் உள்ளது. “மலர்ந்ததார்வாள் மாறன் மன் அண்ணல் வாயில்” என்னும் பழம் பாட்டாலும் அப்பதியின் பெருமை அறியப்படும்.19 அண்ணல் வாயிலில் அமைந்த குகைக் கோயில் மிகப் பழமை வாய்ந்தது; சிற்ப வேலைப்பாடு உடையது. பல்லவ மன்னனாகிய மகேந்திரவர்மன் காலத்தில் வண்ண ஓவியங்கள் அக் கோயிலில் உண்டு.20 நெடுவாயில்

நெடுவாயில் என்னும் பெயருடைய பதிகள் தமிழ் நாட்டிற் பலவாகும். எனினும், அவற்றுள் சாலப் பழமை வாய்ந்ததும், சிவாலயச் சிறப்புடையதும் ஆகிய ஊர் தஞ்சை நாட்டில் பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள நெடு வாசலே என்று சாசனம் கூறும்.21 அச்சிவாலயம் பழுதுற்றிருப்பதாகத் தெரிகின்றது.

நெய்தல் வாயில்

காவிரிப்பூம்பட்டினத்தின் அருகேயுள்ள நெய்தல் வாயில் இக்காலத்தில் நெய் வாசல் என வழங்கும். திருவெண்காட்டுக்கும், பட்டினத்துப் பல்லவனீச் சுரத்திற்கும் இடையே உள்ளது அப்பழம்பதி.

திருமுல்லைவாயில்

காவிரியாற்றின் வட கரையில் கடலருகே யுள்ளது திருமுல்லைவாயில். அது திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றது.

“வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து
மிளிர்கின்ற பொன்னி வடபால்
திரைவந்து வந்து செறிதேறல் ஆடு
திருமுல்லை வாயில் இதுவே”

என்னும் திருப் பாட்டில் கடற்கரையி லமைந்த முல்லை வாயிலின் கோலம் நன்கு விளங்கு கின்றது. அங்குக் கோயில் கொன்டுள்ள ஈசன் முல்லைவன நாதர் என்று அழைக்கப் பெறு கின்றார்.

ஞாழல் வாயில் என்பதும், முன்னே சொல்லிய ஞாழற் கோயில் என்பதும் ஒன்றெனத் தோன்றுகின்றன.23 இன்னும், சிவபெருமான் கோயில் கொண்டருளும் வாயிற் பதிகளைக் குறித்து,

“மடுவார்தென் மதுரைநகர் ஆல வாயில் மறிகடல்சூழ் புனல்வாயில் மாடநீடு
குடவாயில் குணவாயில் ஆன எல்லாம்
புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே”

என்று கூறியருளினார் திருநாவுக்கரசர்.

திருஆலவாயில்

பாண்டி நாட்டுத் தலைநகராகிய மதுரையில் அமைந்த ஆலயம் ஆலவாயில் என்று தேவாரத்திற் குறிக்கப்படுகின்றது.

“ஞாலம் நின்புகழே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே”

என்று திருஞான சம்பந்தர் அதனைப் போற்றி யருளினார். இவ் வண்ணமே வாயிற் பதிகளை யெல்லாம் தொகுத் துரைத்த திருநாவுக்கரசரும், மதுரை நகர் ஆலவாயில் மருவும் இடங்களில் ஒன்றாகக் குறித்துப் போந்தார். ஆல வாயில் என்பது ஆலவாய் எனவும் வழங்கிற்று. ஆலவாயிற் கோயிற் கொண்ட ஆண்டவனை ஆலவாயான் என்றார் திருஞான சம்பந்தர்.

இக்கருத்துக்களை ஆராயும் பொழுது மதுரை யம்பதியில் அலகிலாத் திருவிளையாடல் புரிந்தருளிய ஈசன் ஆலந்தருவில் அமர்ந்திருந்தான் என்பது நன்கு விளங்கு வதாகும.

பாம்பாறு கடலிற் பாயும் இடத்திற்கு அருகே திருப்புன வாயில் என்ற தலம் அமர்ந்திருக்கின்றது. அவ்வூரின் தன்மையை,

“கற்குன்றும் துறும் கடுவெளியும்

கடற்கானல் வாய்ப்

புற்கென்று தோன்றிடும் எம்பெருமான்

புன வாயிலே”

புனவாயில் என்னும் சுந்தரர் தேவாரம் நன்குணர்த்துவதாகும். தஞ்சை நாட்டு அறத்தாங்கி வட்டத்தில் திருப்புன வாசல் என்ற பெயரோடு விளங்குகின்றது அப்பதி.

குடவாயில் தஞ்சை நாட்டில் குடவாசல் என விளங்கும் ஊரே குடவாயில் என்னும் பழம்பதி யாகும். முற்காலத்தில் சிறந்து விளங்கிய ஒரு பெரு நகரின் மேல வாசலாக அமைந்த இடம் பிற்காலத்தில் ஓர் ஊராயிற் றென்று தோன்றுகின்றது. அங்கிருந்த பழைய கோட்டை மதில்கள் தேவாரத்திலும் குறிக்கப்படுகின்றன. -

“வரையார் மதில்சூழ் குடவாயில் மன்னும்
வரையார் பெருங்கோயில் மகிழ்ந்தவனே.”

என்பது திருஞான சம்பந்தர் பாட்டு. கோட்டையூராகிய குடவாசலில் ஈசன் விளங்குமிடம் பெருங்கோயில் என்று போற்றப்பட்டுள்ளது.

குணவாயில் குணவாயில் என்னும் பெயருடைய ஊர்கள் பலவுண்டு.24 சேர நாட்டின் தலை நகரமாகச் சிறந்திருந்த வஞ்சியின் அருகே ஒரு குணவாயில் இருந்ததென்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகின்றது. அந்நூலுக்கு உரை கண்ட ஆசிரியர் இருவரும் . குண வாயிலைத் திருக்குனவாயில் என்று குறிப்பிடும் பான்மையைக் கருதும்பொழுது அது தெய்வ நலம் பெற்ற ஊரென்று தோன்றுகின்றது. திருக்குணவாயில் என்பது ஒர் ஊர் என்றும், அது வஞ்சியின் கீழ்த்திசைக்கண் உள்ள தென்றும், உரை ஆசிரியராகிய அடியார்க்கு நல்லார் கூறுகின்றார்.

திருவிடை வாயில்

இன்னும், சில வாயிற்பதிகளின் பெருமை சாசனங்களால் விளங்கும். நன்னில வட்டத்தில் உள்ள திருவிடை வாய்க்குடி நெடுங்காலமாக வைப்புத் தலங்களுள் ஒன்றாக வைத்தெண்ணப் பட்டது.அத்தலத்தைப் பற்றிய குறிப்பு, திருத் தொண்டர் புராணத்திலும் காணப்படவில்லை. எனினும்,திருவிடைவாய் என்னும் திரு விடை வாயில் திருஞான சம்பந்தால் பாடப் பற்றதென்பது கல்வெட்டால் விளங்கிற்று.25 தஞ்சை நாட்டு நன்னில வட்டத்தில் இப்போது திருவிடை வாசல் என வழங்கும் ஊரே இத்தலம் என்பது தெளிவாயிற்று. “மறியார் கரத்தெந்தை” என்றெடுத்து, “மாறில் பெருஞ் செல்வம் மலி விடைவாயை, நாறும் பொழில் காழியர் ஞான சம்பந்தன் கூறும் தமிழ் வல்லவர் குற்றமற்றோரே" என்று அழகுற முடித்த திருப்பதிகம் வடிவாகக் கல்வெட்டிலே காணப்படுகின்றது.26

திருவேங்கை வாயில்

திருவேங்கை வாசல் என்னும் ஊர் புதுக்கோட்டை நாட்டில் உள்ளது. திரு மேற்றளி என்பது அங்குள்ள கோயிலின் பெயராகும்.பெருநாட்டுத் தேவதான மாகிய வாயில் திருவேங்கை வாயிலிற் கோயில் கொண்ட திருமேற்றளி மகாதேவர் என்று இராஜராஜ சோழனது சாசனம் கூறுமாற்றால்,அதன் பழமை விளங்குவதாகும்.27 திருவேங்கை வாயிலுடையார் கோயிலில் நிகழும் சித்திரைத் திருவிழாவில் சந்திக் கூத்து என்னும் ஆடல் புரியும் நாட்டிய மாதுக்கு விக்கிரம சோழன் விட்ட மானியம் ஒரு சாசனத்தால் விளங்குகின்றது.28

திருவள்ளை வாயில்

செங்கற்பட்டைச் சேர்ந்த பொன்னேரி வட்டத்தில் திருவள்ளை வாயில் என்னும் பழம்பதியுண்டு. அவ்வூர்ப் பெயர் இப்பொழுது திருவேளவாயில் என மருவி வழங்குகின்றது. சுவாமீச்சுரம் என்று பெயர் பெற்ற ஆலயத்தில் அமர்ந்த ஈசனார்க்கு நான்கு ஊர் வாசிகள் நல்கிய நிவந்தம் அக்கோயிற் கல்வெட்டிற் காணப்படுகின்றது.29 எனவே, வள்ளை வாயிலைப் பழைய வாயிற் பகுதிகளுள் ஒன்றாகக் கொள்ளலாகும்.

திருப்பில வாசல்

தொண்டை நாட்டிலே திருப்பில வாயில் என்னும் பதியொன்று உண்டு. அங்குக் கோயில் கொண்ட ஈசன் திரும்பில வாயிலுடையார் என்று கல்வெட்டிற் குறிக்கப்படுகின்றார். அக்கோயிலின் பழமை அங்குள்ள பல்லவ சாசனத்தால் நன்கு விளங்கு வதாகும்.30 பிற்காலத்தில் பிலவாயில் என்பது பிலவாயலூர் என மருவி வழங்கலாயிற்று. இராஜராஜன் காலத்தில் ஜனநாத நல்லூர் என்னும் மறுபெயர் பெற்றது அவ்வூர்.31 ஆயினும், பழம் பெயரே பெரும்பாலும் வழங்கி வந்ததாகத் தெரிகின்றது. கால கதியில் அப்பெயர் வாயலூர் எனக் குறுகிப் பின்பு வயலூர் எனத் திரிந்து வழங்குகின்றது. அவ்வூர் வியாக்ரபுரி என்னும் வடமொழிப் பெயரும் பெற்றிருந்ததாகத் தெரிகின்றது.32 பில வாயிலூர் என்பதைப் புலிவாயிலூர் எனப் பிறழவுணர்ந்த காரணத்தால் அப்பெயர் அதற்கு அமைந்தது போலும்!

அடிக் குறிப்பு

1.“கோடுயர் வெங்களிற்றுத் திகழ்
கோச் செங்கணான் செய் கோயில்
நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில்”

-சுந்தரர் தேவாரம்

2.“ஞானச் சார்வாம் வெண்ணாவல்
உடனே கூட நலஞ் சிறக்கப்
பானற் களத்துத் தம் பெருமான்
அமருங் கோயிற் பணி சமைத்தார்”

-கோச் செங்கட் சோழர் புராணம்,13.

3.“கொன்னற் படையான் குடவாயில்தனில் மன்னும் பெருங் கோயில் மகிழ்ந்தவனே”

-திருஞான சம்பந்தர் தேவாரம்.

4.“சுருண்டவார்குழல் சடையுடைக்
குழகனை அழகமர் கீழ்வேளுர்த்
திரண்ட மாமறை யவர்தொழும்
பெருந்திருக் கோயிலெம் பெருமானை”

-திருஞான சம்பந்தர் தேவாரம்.

5.407 of 1912.

6.384 of 1913.

7.165 of 1925.

8.சிவஸ்தல மஞ்சரி, ப. 91.

9.262 of 1904.

10.I.M.P. p.47.

11. 359 of 1911. 12. 363 of 1911.

13. 409 of 1912; 407 of 1912.

14.“விளங்கு பெருந்திருவின் மான விறல்வேள் அழும்பில் அன்னநாடு”

- மதுரைக் காஞ்சி, 344-45

15. 64 of 1924.

16. 75 of 1924.

17. T. A. S., Vol. I. p. 90.

18. 740 of 1909.

19. பெருந் தொகை, 10:19,

20. இந்தியர் வரலாறு (கோவிந்தசாமி) 1329.

21. Sewell’s Antiquities Vol. 1, p. 283.

22. தொண்டை நாட்டில் மற்றொரு முல்லைவாயில் உண்டு. அது வடமுல்லை வாயில் எனப்படும். அப் பதியும் தேவாரப்பாடல் பெற்றுள்ளது.

23. கோயில் என்ற தலைப்பின் கீழ்க் கூறிய ஞாழற் கோயிலைக் காண்க.

24. குணவாயில் கொங்கு நாட்டில் உள்ள தென்பர் சிலர். (ஆராய்ச்சித் தொகுதி, ப. 247) திருவஞ்சிக் குளம் என வழங்கும் திருவஞ்சைக் களத்தின் அருகேயுள்ள தென்பர் சிலர். திரு வஞ்சைக் களம் என்னும் திருக்கோயிலையுடைய கொடுங் கோளுரில் (Cranganore) குணவாய் என்ற ஊர் உள்ளதென்று ‘உண்ணியாடி சரிதம் என்னும் மலையாளக் காவியம் கூறுகின்றது. இது பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப் பட்டதென்பர். வடமொழியில் இவ்வூர் குனகபுரம் எனவும், குணகா எனவும் வழங்கப்பெற்றுள்ளது. சில காலத்திற்கு முன்னர் வரைத் திருக்கனா மதிலகம் என்ற பெயர் இவ்வூர்க்கு வழங்கிற் றென்றும் அங்கிருந்த படிவத்தைப் போர்ச்சுகீசியர் அப்புறப் படுத்தினர் என்றும் சொல்லப்படுகின்றது. இப்பொழுது இவ்வூர் மதிலகம் எனக் குறுகி வழங்குகின்றது. (இச் செய்திகளை அறிவித்தவர் சென்னைப் பல்கலைக் கழகத்து மலையாளப் பேராசிரியர் டாக்டர் C. A. மேனன் ஆவர்.)

25. 1800f1894, இது, முதற் குலோத்துங்க சோழன் காலத்துச் சாசனம்.

26. இப்பதிகம் இப்பொழுது திருஞான சம்பந்தர் அருளிய மூன்று திரு முறைகளுக்கும் பின்னே இணைக்கப்பட்டிருக் கின்றது. (திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் தேவாரம் சைவ சித்தாந்த மகாசமாசப் பதிப்பு, ப. 655)

27. 240 of 1914.

28. 253 of 1914.

29. 248 of 1912.

30. 368 of 1908. இப் பல்லவ சாசனத்திற் கண்ட குடி வழி பல்லவர் சரித்திரத்தை ஒழுங்குபடுத்துவதற்குப் பெரிதும் பயன் படுவதாயிற்று.

31. 364 of 1908.

32. I.M.P.,469. 

தளியும் பள்ளியும்

திருவாரூர்-மண்தளி

குகைக் கோயில்களும் கற்கோயில்களும் தோன்று முன்னே, மண்ணாலயங்கள் பல இந்நாட்டில் இருந்திருத்தல் வேண்டும் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. பழமையான நகரமாகிய திருவாரூரில் உள்ள பாடல் பெற்ற கோயில்களுள் ஒன்று மண்தளி என்று குறிக்கப்படு கின்றது. அம் மண்தளியில் அமர்ந்த மகாதேவனை,

“தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர்
அம்மானே பரவையுள் மண்டளி யம்மானே”

என்று சுந்தரர் பாடும் பான்மையால், தமிழ்ப் புலமை வாய்ந்தோரைத் தலையளித் தாட்கொண்டருளும் ாசன் கருணை இனிது விளங்குவதாகும். அத்தளியில் அமர்ந்த ஈசனை மண்தளி யுடைய மகாதேவர் என்று சாசனம் குறிக்கின்றது.1

கச்சிப் பலதளி

தொண்டை நாட்டின் தலைநகரமாகிய காஞ்சியில் திருக்கோயில்கள் பலவுண்டு. அவற்றைக் கண்டு விம்மிதமுற்ற திருநாவுக்கரசர்,

“கச்சிப் பலதளியும் ஏகம்பத்தும்
கயிலாய நாதனையே காணலாமே”

என்று பாடினார். அந் நகரிலுள்ள பழமையான தளிகளுள் ஒன்று திருமேற்றளி என்பதாகும்.

“பாரூர் பல்லவனுர் மதிற்கச்சி மாநகர்வாய்ச்
சிரூ ரும்புறவில் திருமேற் றளிச்சிவனை”

என்று பாடினார் சுந்தரர். அத்திருக்கோவில் இப்பொழுது காஞ்சி மாநகரின் ஒரு பாகமாகிய பிள்ளைப் பாளையத்தில் உள்ளது. இன்னும், காஞ்சியில் உள்ள மற்றொரு கோயில் ஒனகாந்தன் தளி. அது கச்சி ஏகம்பத்திற்கு மேற்கே அரை மைல் தூரத்தில் அமைந்திருக்கின்றது."ஒனகாந்தன் தளியுளிரே என்று சுந்தரராற் பாடப்பட்ட ஆலயம் அதுவே.

பழையாறை-வடதளியும், மேற்றளியும்

"பாரின் நீடிய பெருமை சேர்பதி பழையாறை” என்று சேக்கிழாரால் புகழப்பட்ட பதியில் இரண்டு தளிகள் உள்ளன. அவற்றுள் வடதளி என்னும் திருக்கோயிலைச் சமணர் மறைத்து வைத்திருந் தனர் என்றும், திருநாவுக்கரசர் உண்ணா நோன்பிருந்து அதனை வெளிப்படுத்தினர் என்றும் தேவாரம் கூறும். இன்னும், பழையாறைப் பதியில் மேற்றளி என்ற திருக்கோயிலும் உண்டென்பது,

“திருவாறை மேற்றளியில்
திகழ்ந்திருந்த செந்தீயின் உருவாளன்”

என்னும் சேக்கிழார் வாக்கால் விளங்கும்.

ஓமாம் புலியூர் வடதளி

ஓமாம் புலியூர் என்னும் பாடல் பெற்ற பதியில் உள்ள ஈசன் கோயில் வடதளி யென்பது தேவாரத்தால் தெரிகின்றது.

“உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம் ஓமாம்புலியூர் புலியூரெம் உத்தமனைப் புரமூன் றெய்த
வடதளி சிலையானை வடதளியெம் செல்வம்
தன்னை”

என்பது திருநாவுக்கரசர் வாக்கு. திருப்பத்தூர் திருத்தளி

பாண்டி நாட்டுப் பாடல் பெற்ற பதிகளுள் ஒன்று திருப்புத்துர் ஆகும். அங்குள்ள சிவா திருப்புத்துர் லயம் திருத்தளி என்று பெயர் பெற்றது. திருத்தளி சாசனங்களிலே குறிக்கப்படுகின்ற இக் கோயிற் பெயர் தேவாரத்திலும் காணப்படும்.

“தேராரும் நெடுவீதித் திருப்புத் துரில் திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே”

என்பது திருநாவுக்கரசர் பாட்டு. எனவே, திருப்புத்துர்க் கோயிலின் பெயர் திருத்தளி என்பது தெளிவாகும்.

திருமேற்றளி

புதுக்கோட்டையைச் சேர்ந்த குடுமியான் மலையில் உள்ள கோயில் திருமேற்றளி என்னும் பெயருடையகென்ப சாசனங்களால் மேற்றுளி ரு தனபது திருமேற்ற தெரிகின்றது.

முடியூர்-ஆற்றுத்தளி

திருமுனைப்பாடி நாட்டுத் திருமுடியூர் என்ற ஊரில் அமைந்த சிவன் கோயில், ஆற்றுத்தளி என்னும் பெயர் பெற்றது. பராந்தக சதுர்வேதி மங்கலம் என இடைக்காலத்தில் வழங்கிய அவ்வூர் இப்பொழுது கிராமம் என்னும் பெயரோடு தென்னார்க்காட்டுத் திருக் கோயிலூர் வட்டத்தில் உள்ளது.

குரக்குத்தளி

குரக்குத்தளி என்னும் கோவில் கொங்கு நாட்டு வைப்புத் தலம் என்பது “கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய்” என்னும் தேவாரக் குறிப்பினால் தெரிகின்றது. கொங்கு மண்டலத்தைச் சேந்த நாடுகள் இருபத்து நான்கில் குறும்பு நாடும் ஒன்றென்பர். அந்நாட்டு முகுந்தனுரில் அமைந்த திருக்கோயிலே குரக்குத்தளி என்பது சாசனங் களால் விளங்கும்.5 இக்காலத்தில் சர்க்கார் பெரிய பாளையம் என்னும் பெயர் பெற்றுள்ள முகுந்தனுரில் காணப்படும் பழைய சிவாலயமே குரக்குத்தளியாகும். அங்கு வானரத் தலைவனாகிய சுக்கிரீவன் ஈசனை வழிபட்டான் என்பது ஐதிகமாதலின், சுக்கிரீவேஸ்வரர் கோயில் என்ற பெயர் அதற்கு அமைந்துள்ளது.6

ஈசனார்க்குரிய பள்ளிகளுள் சிலவற்றைத் தொகுத் துரைத்தார் திருநாவுக்கரசர்.

“சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி
செழுநனி பள்ளி தவப்பள்ளி சீரார் பரப்பள்ளி யென்றென்று பகர்வோர் எல்லாம்
பரலோகத் திணிதாகப் பாலிப் பாரே”

என்னும் பாசுரத்திற் கண்ட பள்ளிகளைத் தமிழ்ப் பாடல்களாலும் சாசனங்களாலும் ஒருவாறு அறிந்து கொள்ளலாகும்.

சிரப்பள்ளி

பண்டைச் சோழ நாட்டின் தலைநகராக விளங்கிய உறையூரின் அருகே நின்ற குன்றில் அமர்ந்த ஈசனைச் ‘சிராப் பள்ளிக் குன்றுடையான் என்று சிரப்பள்ளி பாடினார், திருஞான சம்பந்தர். அக் குன்றம் சிரகிரி எனவும் வழங்கப்பெற்றது.

“தாயும் தந்தையும் ஆனோய், சிரகிரித்
தாயு மான தயாபர மூர்த்தியே”

என்று தாயுமானவர் சிரகிரிப் பெருமானைப் பாடித் தொழுதார். எனவே, சிரகிரியில் அமைந்த பள்ளியைத் திருநாவுக்கரசர் சிரப்பள்ளி எனக் குறித்தார் என்று கொள்ளுதல் பொருந்தும். சிரகிரியையுடைய ஊர் சிரபுரம் என்று பெயர் பெற்றுப் பின்பு திருசிரபுரம் ஆகச் சிறந்து, இறுதியில் திரிசிரபுரம் என்று ஆயிற்று.8

சிவப்பள்ளி

தஞ்சை நாட்டு மாயவர வட்டத்தில் உள்ள திருச்சம்பள்ளி என்ற ஊர் பழைய சிவப்பள்ளி என்று கொள்ளப்படுகின்றது. சிவன் பள்ளி , என்னும் கோயிற் பெயர் சிவம் பள்ளியென மருவி, திரு என்ற அடைபெற்றுத் திருச்சிவம் பள்ளியாகிப் பின்பு திருச்சம் பள்ளி எனச் சிதைவுற்றிருக்கலாம் என்று தோன்றுகின்றது.

செம்பொன் பள்ளி

இன்னும், மாயவர வட்டத்திலுள்ள மற்றொரு பள்ளி திருச் செம்பொன் பள்ளி. செம்பனார் கோவில் என்பது அதற்கு இப்பொழுது வழங்கும் பெயர். காவிரி யாற்றங்கரையில் களித்திலங்கும் அப்பள்ளியை,

“வரையார் சந்தோ டகிலும் வரும்பொன்னித்
திரையார் செம்பொன் பள்ளி"

என்று திருஞான சம்பந்தர் போற்றினார்.

நனிபள்ளி

மூவர் தேவாரமும் பெற்று விளங்கும் பதிகளுள் ஒன்று திருநனிபள்ளி. தலைச்சங்காட்டின் அருகேயமைந்துள்ள இப் பதியை,

“பங்காய மாமுகத் தாளுமை பங்கன்

உறைகோயில்

செங்கயல் பாயும் வயற்றிரு ஊர்நனி

பள்ளியதே
என்று பாடினார் சுந்தரர். இவ்வூர் புஞ்சை என்னும் பெயரோடு தஞ்சை நாட்டு மாயவர வட்டத்தில் உள்ளது.9

பரன்சேர்பள்ளி

கோவை நாட்டுத் தாராபுர வட்டத்தில் பரன்சேர் பள்ளி யென்னும் திருக்கோயில் உண்டென்பது கல்வெட்டுக்களால் தெரிகின்றது. அக்கோயில் நட்டூர் என்ற ஊரில் இருந்தமையால் மத்திய புரீஸ்வரர் என்னும் பெயர் அங்குக் கோயில் கொண்ட ஈசனுக்கு அமைந்தது. காங்கய நாட்டுப் பரன்சேர் பள்ளியிலுள்ள நட்டூர் அமர்ந்தார் என்பது சாசன வாசகம்.10 இப்பெயர் பரஞ்சேர்வலியென மருவியுள்ளது. திருநாவுக்கரசர் குறித்தருளிய பரப்பள்ளி இப் தியாயிருத்தல் கூடும் எனத் தோன்றுகின்றது.

அறைப்பள்ளி

“கொல்லிக் குளிர் அறைப்பள்ளி"யும் இறைவன் உறையும் பள்ளிகளுள் ஒன்றென்று அருளிப் போந்தார் திருநாவுக்கரசர். கொல்லி மலை கொங்கு நாட்டைச் சேர்ந்ததாகும்.11 அம்மலையில் அமைந்த அறைப்பள்ளியைச் சாசனம் குறிக்கின்றது. சேலம் நாட்டு நாமக்கல் வட்டத்திலுள்ள வளப்பூர் நாடு என்ற ஊரிற் கண்ட சாசனத்தால் அப்பள்ளியின் தன்மையை அறியலாகும்.12 கொல்லிப் பாவை என்று குறுந் தொகை முதலிய பழந்தமிழ் நூல்களிற் கூறப்படும் தெய்வப் பாவை அறைப்பள்ளிக்கு மேற்றி சையில் உள்ள தென்பர்.13 இன்னும், இறைவன் அமர்ந்தருளும் பள்ளிகளுள் சிலவற்றைத் தொகுத்துப் பாடியுள்ளார் திருஞான சம்பந்தர்.

“அறப்பள்ளி அகத்தியான் பள்ளி வெள்ளைப் பொடியூசி நீறணிவான் அமர் காட்டுப்பள்ளி”

என்பது அவர் திருவாக்கு.

அகத்தியான் பள்ளி

வேதாரண்யம் என்னும் திருமறைக் காட்டுக்குத் தென்பாலுள்ளது அகத்தியான் பள்ளி. அகத்திய முனிவர் ஈசனை வழிப்ட்டுப் பேறு பெற்ற இடம் அப்பள்ளி என்பர். அம்முனிவரது வடிவம் திருக் கோயிலிற் காணப்படுதல் அதற்கொரு சான்றாகும். "மாமயில் ஆலும் சோலை சூழ் அகத்தி யான் பள்ளி" யென்று தேவாரம் பாடுதலால், அழகிய பொழில் சூழ்ந்த தலத்தில் ஆண்டவன் கோயில் கொண்டிருந்தான் என்பது விளங்குகின்றது. இக் காலத்தில் கோயிற் பெயர் ஊர்ப் பெயராகவும் வழங்கும்.

கீழைத் திருக்காட்டுப்பள்ளி

காட்டுப்பள்ளி யென்னும் பெயருடைய தலங்கள் இரண்டு உள்ளன. ஒன்று காவிரியாறு கடலிற்பாயும் இடத்திற்கு அணித்ததாக உள்ளது.

“பலபல வாய்த்தலை யார்த்து மண்டிப்
பாய்ந்திழி காவிரிப் பாங்களின்வாய்க்
கலகல நின்றதி ருங்கழலான்
காதலிக் கப்படும் காட்டுப்பள்ளி"

என்று அதன் வளத்தைக் குறித்தருளினார் திருஞான சம்பந்தர். பாடல் பெற்ற திருவெண் காட்டுக்கு மேற்கே ஒரு மைல் துரத்திலுள்ள இக்காட்டுப்பள்ளி, இப்பொழுது ஆரணியேசுரர் கோயிலென வழங்குகின்றது. மேலைத் திருக்காட்டுப்பள்ளி

காவிரியாற்றினின்று குடமுருட்டியாறு பிரிந்து செல்லும் இடத்தில் உள்ள மற்றொரு திருக்காட்டுப்பள்ளியும் பாடல் பெற்றதாகும்.

“கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே”

என்று பணித்தார் திருநாவுக்கரசர். இக்காலத்தில் திருக்காட்டுப் பள்ளியிலுள்ள ஆலயம் அக்கினிசுரர் கோயில் என்ற பெயர் கொண்டு நிலவுகின்றது.

மகேந்திரப்பள்ளி

இன்னும், சோழநாட்டில் உள்ள மகேந்திரப் பள்ளியையும், சக்கரப் பள்ளியையும் குறித்தருளினார் திருஞான சம்பந்தர்.

“...............சீர்மகேந்திரத்துப்
பிறப்பில்லவன் பள்ளி வெள்ளச் சடையான்
விரும்பும் இடைப்பள்ளி வண்சக்கரமால் உறைப்பால் அடிபோற்றக் கொடுத்தபள்ளி
உணராய் மடநெஞ்சமே உன்னிநின்றே”

என்று எழுந்த திருப்பாசுரத்தில் அமைந்த மகேந்திரப் பள்ளி ஆச்சாபுரத்துக்கு அண்மையில் உள்ளது. இந்திரன் முதலிய இறையவர் வழிபட அங்கிருந்த ஈசனை

“சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும் இந்திரன் வழிபட இருந்தநம் இறையவன்”

என்று சம்பந்தர் போற்றியுள்ளார்.

சக்கரப்பள்ளி

இந்நாளில் ஐயம்பேட்டையென வழங்கும் ஊருக்கு அண்மையில் உள்ளது சக்கரப்பள்ளி. அப்பதியில் ஈசன் கோவில் கொண்ட இடம் ஆலந்துறையாகும். “வண்சக்கரம் மால் உறைப்பால் அடி போற்றக் கொடுத்த பள்ளி” என்று தேவாரம் கூறுதலால், அவ்வூர்ப் பெயரின் காரணம் விளங்கும் என்பர்.

அடிக்குறிப்பு


1. 577 of 1904. மண்தளி இப்பொழுது சத்திய வாகேஸ்வரர் கோயில் என வழங்கும்.

2. “தலையெலாம் பறிக்கும் சமண் கையருள், நிலையினால் மறைத்தால் மறைக்கொண்ணுமோ, அலையினார் பொழில் ஆறை வடதளி” என்பது திருநாவுக்கரசர் பாசுரம். இப்பொழுது வடதளி, வள்ளலார் கோயில் என வழங்கும். பழையாறை என்ற நகரத்தினிடையே திருமலைராயன் என்னும் ஆறு செல்கின்றது. அது நானுறு ஆண்டுகளுக்கு முன்பு திருமலைராயன் பட்டினத்திலிருந்து ஆட்சி செய்த மாலைப்பாடித் திருமலைராயன் என்ற அரசனால் வெட்டுவிக்கப்பட்ட தென்பர். - மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம், 2-ஆம் பாகம், 41-42.

3. 739 of 1905.

4. கொங்கு மண்டல சதகம்: ஊர்த்தொகை, அந்நாட்டிலுள்ள 32 ஊர்களில் முகுந்தை என்னும் முகுந்தனுரும் ஒன்று.

5, 305 of 1908.

6. I. M. P., 536

7. தவப்பள்ளியும் தவத்துறையும் ஒன்றெனின் இப்போது லால்குடியென வழங்கும் ஊரிலுள்ள சிவாலயமே அதுவாகும்.

8. இலங்கை நாட்டிலுள்ள கோணமலை (Trincomalee) திரிகோண மலையாகிய முறை இதற்கு ஒர் எடுத்துக்காட்டாகும். திரிசிரபுரம், புராணத்தில் திரிசிரன் என்ற இலங்கை அரக்கனோடு தொடர்புறுவதாயிற்று. 9. “செழுந்தரளப் பொன்னி சூழ் திருநன்னிபள்ளி’ என்றும், “பானல்வாயல் திருநன்னிபள்ளி என்றும் சேக்கிழார் பெரிய புராணத்தில் இப் பதியின் செழுமையைப் பாராட்டியுள்ளார். (திருஞான சம்பந்தர் புராணம், 112, 114)

10. 559 of 1908.

11. கொல்லி முதலிய பதினாறு மலைகள் கொங்கு நாட்டில் உண்டென்று கொங்கு மண்டல சதகம் கூறும்.

-கொங்கு மண்டல சதகம்,5,26
,

12. M. E. R., 1929-30.

13. “கொல்லிக் கருங்கட்டெய்வம்” என்பது குறுந்தொகை. அறப்பளிசுரர் ஆலயம் என வழங்கும் அறைப்பள்ளிக்கு அண்மையில் கொல்லிப்பாவை உறையுமிடம் உள்ளதென்று கொல்லிமலை அகராதியில் சொல்லப்பட்டுள்ளதாம்.

-கொங்கு மண்டல சதகம், ப. 28.


ஈச்சுரம்

நந்தீச்சுரம்

ஈசன் என்னும் பெயராற் குறிக்கப்படுகின்ற சிவபிரான் உறையும் கோயில் ஈச்சுரம் எனப்படும். தேவாரப் பாமாலை பெற்ற ஈச்சுரங்கள் பல உண்டு. அவற்றுள் சிலவற்றைத் தொகுத்துரைத்தார் திருநாவுக்கரசர்.

“நாடகமாடிடம் நந்திகேச்சுரம் மாகாளேச்சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கான
கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம்
குக்குடேச்சுரம் அக்கீச்சுரம்”

என்று கூறிச் செல்கின்றது அவர் திருப்பாசுரம். இக் காலத்தில் மைசூர் என்று பெயர் பெற்றுள்ள எருமை நாட்டில் நந்தீச்சுரம் என்னும் சிவாலயம் நந்தீச்சுரம் முன்னாளிற் சிறந்து விளங்கிற்று. தமிழ் மன்னர் அக்கோயிலின் பெருமையை அறிந்து போற்றினார்கள் என்பது சாசனத்தால் புலனாகின்றது. நந்தீச்சுரமுடையார்க்கு முதற் குலோத்துங்க சோழன் பசும் பொன்னாற் செய்த பட்டம் சாத்தினான் என்று ஒரு சாசனம் கூறும். இக் கோவிலைத் தன்னகத்தேயுடைய ஊர் நந்தி என்று வழங்கலாயிற்று. எனவே, நந்தியில் உள்ள நந்தீச்சுரம் திருநாவுக்கரசரால் குறிக்கப்பட்ட வைப்புத்தலம் என்று கருதலாகும்.

மாகாளேச்சுரம்

மாகாளம் என்னும் பெயர் பெற்ற திருக்கோயில் மூன்றுண்டு. அரிசிலாற்றங் கரையில் உள்ள அம்பர் மாகாளம் ஒன்று.

“மல்குதண் துறை அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்”

என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.

தொண்டை நாட்டில் உள்ள இரும்பை மாகாளம் மற்றொன்று. அதன் சீர்மை,

“எண்திசையும் புகழ்போய் விளங்கும்
இரும்பை தன்னுள்
வண்டுகீதம் முரல் பொழில் கலாய்
நின்ற மாகாளமே”

என்னும் தேவாரத் திருப்பாட்டால் விளங்கும்.3

உஞ்சேனை மாகாளம் என்னும் பெயருடைய பிறிதொரு திருக்கோயில் வைப்புத் தலங்களுள் ஒன்றாக வைத்து எண்ணப்படுகின்றது.

நாகேச்சுரம்

கும்பகோணத்துக்கு அண்மையில் உள்ள திருநாகேச்சுரம் தேவாரப் பாமாலை பெற்ற பழம் பதியாகும். அது பழங்காவிரி யாற்றின் தென் கரையில் உள்ளது என்பது,

“பாய்புனல் வந்தலைக்கும் பழங்காவிரித் தென்கரை
நாயிறும் திங்களும் கூடி வந்தாடும் நாகேச்சுரம்”

என்னும் திருப் பாட்டால் விளங்கும். நாளடைவில் கோயிற் பெயரே ஊர்ப் பெயரும் ஆயிற்று. திருத்தொண்டர் புராண மியற்றிய சேக்கிழாருடைய உள்ளங் கவர்ந்த கோயில் திருநாகேச்சுரம். நாகேச்சுர நாதனை நாள்தோறும் வழிபடக் கருதிய அப் பெரியார் தாம் வாழ்ந்த தொண்டை நாட்டுக் குன்றத்துரில் ஒரு நாகேச்சுரம் கட்டுவித்தார் என்று அவர் வரலாறு கூறுகின்றது.4 நாகளேச்சுரம்

தஞ்சை நாட்டு நன்னில வட்டத்தில் குழிக்கரை என்னும் ஊரில் பழைய சிவாலயம் ஒன்று உண்டு. அதன் பெயர் திரு நங்காளிச்சுரம் என்று சாசனம் கூறும்.5 திருநாவுக்கரசர் குறித்த நாகளேச்சுரம் இத் திருக் கோயிலாயிருக்கலாம் என்று தோன்றுகின்றது.

கோடிச்சுரம்

தஞ்சை நாட்டில் கும்பகோணத்திற்கு அருகே காவிரி யாற்றின் வடபால் கோடீச்சுரம் கோடிச்சுரம் அமைந்துள்ளது. திருநாவுக்கரசர் தேவாரத்தில்,

“கொடியொடு நெடுமாடக் கொட்டை யூரில்
கோடீச் சுரத்துறையும் கோமான் தானே"6

என்று போற்றும் பெருமை சான்றது இப்பதியே யாகும்.கொடியாடும் மாடங்கள் நிறைந்த கொட்டை யூரில் கோடீச்சுரம் என்னும் திருக்கோயிலில் இறைவன் வீற்றிருக்கும் பான்மை இப் பாசுரத்தால் இனிது விளங்கும். கொட்டைச் செடிகள் நிறைந்திருந்த காரணத்தால் கொட்டையூர் என்னும் பெயர் அவ்வூருக்கு அமைந்த தென்பர். அத் தலத்திற் கோயில் கொண்ட பெருமானது திருமேனி பல சிவலிங்கங்களால் அமைந்த தென்பதும், அவரை வழிபட்டார் கோடி லிங்கங்களை வணங்கிய பயனைப் பெறுவர் என்பதும் புராணக் கொள்கை.

கொண்டீச்சுரம்

நன்னிலத்துக் கருகேயுள்ளது கொண்டீச்சுரம் என்னும் சிவாலயம். இது திருநாவுக்கரசரால் கொண்டிச்சுரம் பாடப்பெற்றது; திருக்கண்டீஸ்வரம் என இப்பொழுது வழங்குகின்றது. ஆலயத்தின் பெயரே ஊர்ப் பெயரும் ஆயிற்று. திண்டீச்சுரம்

ஈசனார் கோயில் கொண்ட திண்டீச்சுரம் என்னும் திருக்கோயில் ஓய்மானாட்டுக் கிடங்கிற் பதியில் அமைந்திருந்ததாகச் சாசனங்கள் கூறும்.7 முன்னாளில் சிறப்புற்று விளங்கிய கிடங்கில் என்னும் ஊர் இப்பொழுது திண்டிவனத்தின் உட்கிடையாக ஒடுங்கியிருக்கின்றது. எனவே, திண்டீச்சுரம் என்று திண்டிச்கரம் தேவாரத்தில் குறிக்கப்பட்ட தலம் திண்டிவனத்தின் கண்ணுள்ள சிவன் கோயிலேயாகும். இக்கோயில் இராஜராஜன் முதலாய சிறந்த சோழ மன்னர்களால் ஆதரிக்கப்பட்ட தென்பது கல்வெட்டுகளால் அறியப்படுவது. திண்டீச்சுரத்தில் தினந்தோறும் இன்னிசை நிகழ்தல் வேண்டும் என்று எண்ணிய இராஜராஜன்,வீணை வாசிக்க வல்லார் ஒருவருக்கும்,வாய்ப்பாட்டில் வல்லார் ஒருவருக்கும் நன்கொடையாக நிலங்கள் வழங்கிய சாசனம் அக் கோயிலின் தெற்குச் சுவரில் காணப்படும்.8

சோழீச்சுரம்

இந்நாளில் சிற்றுார் (சித்துர்) நாட்டைச் சேர்ந்துள்ள புங்கனூர் பெருஞ் சோழ மன்னரது ஆதரவு பெற்ற ஊராக விளங்கிற்று. அவ்வூர்க் கோயிலிற் கண்ட சாசனங்களால் அது பெரும் பாணப் பாடிப் புலிநாட்டில் உள்ளதென்பதும், திருக்கோழிச்சுரம் என்பது சிவாலயத்தின் பெயர் என்பதும் விளங்குகின்றன.9 கங்கை கொண்டான் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற பெருஞ் சோழன் அவ்வூரில் கட்டிய ஏரி, இராசேந்திர சோழப் பெரியேரி என்று வழங்கிற்று. இங்ஙனம் பாண குல மன்னராலும், சோழகுலப் பெரு வேந்தராலும் ஆதரிக்கப்பெற்ற சோழிச்சுரம் திருநாவுக்கரசர் தேவாரத்திற் குறித்த குக்குடேச்சுரமாயிருத்தல் கூடும். :

அக்கீச்சுரம்

தஞ்சை நாட்டில் காவிரியின் வட கரையில் உள்ள கஞ்சனூர் திருநாவுக்கரசரது பாமாலை பெற்ற பதியாகும். அங்கித் தேவன் அங்கு ஈசனை வழிபட்டான் என்னும் ஐதீகம், “அனலோன் போற்றும் காவலனை கஞ்சனூர் ஆண்ட கோவை” என்னும் தேவாரத்தால் அறியப்படும். அக்காரணத்தால் கஞ்சனூர்ச் சிவாலயம் அக்கீச்சுரம் என்று பெயர் பெற்றது. இப்பொழுது அக்கினிசுரர் கோயில் என வழங்கும் திருக்கோயிலிற் பொறிக்கப்பட்டுள்ள சாசனம் திருவக்கீச்சுரம் என்று அதனைக் குறிக்கின்றது. எனவே, திருநாவுக்கரசர் கூறியருளிய அக்கீச்சுரம் கஞ்சனூரிலுள்ள ஆலயம் என்று கொள்ளலாகும்.

இன்னும், ஈசனார்க் குரிய கோயில்களைக் கூறும் அத் திருப்பாசுரத்தில்,

“ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனிச்சுரம்
அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அந்தண்காணல்
ஈடுதிரை இராமேச்சுரம் என்றென் றேத்தி
இறைவன்உறை சுரம்பலவும் இயம்பு வோமே”

என்று அருளிப் போந்தார் திருநாவுக்கரசர். இவ்விச் சுரங் களை முறையாகக் காண்போம்:

ஆடகேச்சுரம்

திருவாரூரில் உள்ள திரு மூலட்டானம் என்னும் பூங் கோயிலின் உட் கோயிலாக ஆடகேச்சுரம் அமைந் துள்ளது. புற்றிடங் கொண்டார் கோயிலுக்குத் தென் கிழக்கே நாகபிலம் என்று சொல்லப்படும் ஆலயமே ஆட கேச்சுரம் என்பர். அக் கோயில் ஒரு கல்லால் மூடப் பட்டிருக்கின்றது.

“இப்பெரும் பிலத்தில் அநாதியாய் உமையோடு
இலங்கொளி ஆடகேச் சுரப்பேர்
ஒப்பிலா மூர்த்தி உலக மெல்லாம் உய்ய
ஊழிதோ றுழிவிற் றிருக்கும்”

என்று திருவாரூர்ப் புராணம் கூறும்.11 எனவே, ஆட கேச்சுரம் என்பது திருவாரூர்ப் பூங்கோயிலில் உள்ள நாகபிலமே யாகும்.

அகத்தீச்சுரம்

நாஞ்சில் நாட்டில் கன்னியா குமரிக்கு அண்மையில் அகத்தீச்சுரம் என்னும் ஊர் காணப்படுகின்றது. ஆலயத்தின் பெயரே ஊர்ப் பெயராயிற் றென்பது தேற்றம். அக்கோயிலில் உள்ள கல்வெட்டில் குமரி மங்கலத்துக்குத் திரு அகத்தீஸ்வரமுடைய மாதேவன் என வரும் தொடரால் குமரிமங்கலம் என்பது ஊரின் பெயராகவும்,அகஸ்தீசுரம் என்பது ஆலயத்தின் பெயராகவும் கொள்ளலாகும். குலோத்துங்க சோழன் அகத்தீச்சுரமுடைய ஈசனார்க்கு வழங்கிய நிவந்தம் அச்சாசனத்திற் குறிக்கப்படுகின்றது.12

அயனீச்சுரம்

வட ஆர்க்காட்டு நாட்டிலே வழுவூர் என்னும் ஊர் உண்டு. அவ்வூரில் அமைந்த பழமையான கோயிலின் பெயர் அயனிச்சுரம் ஆகும். மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திரு அயனிச்சுரக் கோவிலிற் பழுது பார்ப்பதற்காகவும், பூசனை நிகழ்வதற்காகவும் சாம்புவராயர் என்பார் தேவ தானமாக அளித்த நிவந்தம் கல்வெட்டிற் காணப்படுகின்றது.13 எனவே, அயனீச்சுரம் என்பது வழுவூர்த் திருக்கோயில் ஆகும். சித்தீச்சுரம்

திருநறையூர் என்னும் பாடல் பெற்ற பகுதியில் அமைந்த சிவாலயம் சித்தீச்சுரம். அதன் சிறப்பினைத் திருஞான சம்பந்தர் பாசுரம் தெரிவிக்கின்றது.

“ஈண்டு மாடம் எழிலார் சோலை இலங்கு கோபுரம் தீண்டு மதியம் திகழும் நறையூர்ச் சித்தீச் சரத்தாரே"

என்னும் திருப்பாட்டால் நறையூரின் செல்வமும் அங்குள்ள சோலையின் செழுமையும் நன்கு விளங்குவனவாகும்.

இராமேச்சுரம்

இலங்கையில் வாழ்ந்த அரக்கரை வென்றழித்த இராமன் திரும்பி வரும் பொழுது கடற்கரையில் அமைந்த திருக்கோயில் இராமேச்சுரம் ஆகும்.

“தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமாமுகன் பூவியலும் முடி பொன்றுவித்த பழிபோயற ஏவியலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்”

என்பது திருஞான சம்பந்தர் தேவாரம். சேது காவலர் என்னும் சிறப்புப் பெயருடைய இராம நாதபுர மன்னரால் இப்பொழுதுள்ள கோயில் கட்டப்பட்டதென்று அறிந்தோர் கூறுவர். இந்திய நாடு முழுவதும் புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்று இராமேச்சுரம்.

இங்ஙனம் ஈச்சுரப் பகுதிகளைத் தொகுத்துரைத்த திருநாவுக்கரசர், இறுதியில், “இறைவனுறை சுரம் பலவும் இயம்புவோமே” என்று கூறுதலால் இன்னும் பல ஈச்சுரங்கள் உண்டு என்பது இனிது விளங்கும். பாடல் பெற்ற பல பதிகளில் உள்ள திருக் கோயில்கள் ஈச்சுரம் என்னும் பெயரால் தேவாரத்திற் போற்றப்பட்டுள்ளன. பசுபதீச்சுரம்

“அங்கணர்க் கிடமாகிய பழம்பதி ஆவூர்” என்று சேக்கிழாரால் சிறப்பிக்கப் பெற்ற ஆவூரில் அமைந்தது பசுபதீச்சுரம்.

“பத்திமைப் பாடல் அறாத அவ்வூர்ப்
பசுபதி ஈச்சுரம் பாடு நாவே”

என்று அத் திருக்கோயிலைத் திருஞான சம்பந்தர் பாடியருளினார். ஆன்ம கோடிகளாகிய பசுபதீச்சுரம் பசுக்களுக் கெல்லாம் பதியாக விளங்கும் ஈசனைப் பசுபதி யென்று போற்றுதல் சைவமுறை யாதலின், அவர் உறையும் கோயில் பசுபதீச்சுரம் என்னும் பெயர் பெற்றது.

பாதாளீச்சுரம்

தஞ்சை நாட்டு மன்னார்க்குடிக்கு வடபாலுள்ளது பாதாளீச்சுரம். திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றுள்ள அக்கோயில் அமைந்துள்ள இடம் பாம்புணி என்று முற்காலத்தில் பெயர் பெற்றிருந்த தென்பது சாசனத்தால் புலனாகின்றது. இப்பொழுது அப்பெயர் பாமணியென மருவியுள்ளது. பாம்பு வடிவுடைய முனிவர் சிலை யொன்று பாதாளிச்சுரத்திற் காணப்படுகிறது.

முண்டீச்சுரம்

பெண்ணையாற்றங் கரையில் திரு வெண்ணெய் நல்லூருக்குக் கிழக்கே யுள்ளது திருமுண்டீச்சுரம். அச் சிவாலயத்தில் அமர்ந்த ஈசனைச் சிவலோகன் என்று போற்றினார்.

“பரிந்தவன்காண் பனிவரைமீப் பண்டமெல்லாம்
பரித்துடனே நிமிர்ந்துவரு பாய்நீர்ப் பெண்ணை திரிந்துலவு திருமுண்டிச் சுரத்துமேய
சிவலோகன் காண்அவன்என் சிந்தையானே"

என்னும் தேவாரத்தில் பெண்ணையாற்றங்கரை யிலமைந்த திருமுண்டீச்சுரத்தின் அழகும், அங்குச் சிவலோகநாதன் காட்சி தரும் கோலமும் நன்கு விளங்குகின்றன.இந்நாளில் முண்டீச்சுரம் சிவலோகநாதர் கோவில் என்றே வழங்குகின்றது. அக்கோவிலைத் தன்னகத்தே யுடைய ஊர் முன்னாளில் முடியூர் என்று பெயர் பெற்றிருந்தது. 14 பராந்தக சோழன் காலத்தில் அது பராந்தக சதுர்வேதி மங்கலம் எனவும் வழங்கியதாகத் தெரிகின்றது. முடியூர் என்ற தமிழ்ப் பெயர் பிற்காலத்தில் மெளளி கிராமம் என வட மொழியில் வழங்கப்பெற்ற தென்பதும், அப்பெயர் கிராமம் எனக் குறுகிற் றென்பதும், சாசனங்களால் விளங்கு வனவாகும். எனவே, பாடல் பெற்ற திருமுண்டீச்சுரம், கிராமம் என்ற ஊரிலுள்ள திருக்கோயில் என்பது தெளிவுறுகின்றது. தென்னார்க்காட்டுத் திருக்கோயிலுர் வட்டத்தி லுள்ளது இப் பழம்பதி.

முக்கீச்சுரம்

சோழ நாட்டின் பழைய நகரமாகிய உறையூரில் முக்கீச்சுரம் என்னும் திருக்கோயில் விளங்கிற்று. தமிழ்நாட்டு மூவேந்தரும் சேர்ந்து வழிபடும் பெருமை சான்ற முக்கீச்சுரத்தைப் பாடியருளினார் திருஞான சம்பந்தர்.

“சீரினால் அங்கொளிர் தென்னவன்
செம்பியன் வில்லவன்
சேரும் முக்கீச்சரத் தடிகள்
செய்கின் றதோர் செம்மையே”

என்பது அவர் திருப் பாசுரம். இப்பொழுது முக்கீச்சுரம் திருச்சிராப்பள்ளியின் ஒரு சார் அமைந்த உறையூரிற் காணப்படுகின்றது.

கபாலீச்சுரம்

சென்னையைச் சார்ந்த மயிலாப்பூரில் உள்ள பாடல் பெற்ற பழங்கோயில் கபாலீச்சுரம் என்னும் பேருடையதாகும்.இக்கோயிலின் முன்னே நின்றும் பூம்பாவை என்ற பெண்ணுக்கு உயிர் தருமாறு சம்பந்தர் பாடிய திருப்பதிகத் தில், “கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சுரம்” என்றும், “கண்ணார் மயிலைக் கபாலீச்சுரம்” என்றும் அத்திருக் கோவிலைப் போற்றியருளினார்.

கணபதீச்சுரம்

செயற்கரிய செயல் செய்து சிவனருள் பெற்ற சிறுத்தொண்டருடைய ஊர் திருச் செங்காட்டங் குடியாகும். அங்குள்ள திருக்கோயிலின் பெயர் கணபதீச்சுரம். விநாயகப் பெருமான் ஈசனை அங்கு வழிபட்டமையால் அப்பெயர் ஆலயத்துக்கு அமைந்த தென்று கந்த புராணம் கூறும்.17 செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாகக் கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே என்று திருஞான சம்பந்தர் மனமுருகிப் பாடியுள்ளார்.

சோமீச்சுரம்

கும்பகோணம் என வழங்கும் குடமூக்குப் பல்லாற்றானும் பெருமை சான்றது.

“குடமூக்கே என்பீ ராகில்
கொடுவினைகள் தீர்ந்து அரனைக் கூடலாமே”

என்பது தேவாரம்.இத்தகைய பழம் பதியில் பாடல் பெற்ற சிவாலயம் இரண்டு உண்டு; ஒன்று, குடந்தைக் காரோணம்; மற்றொன்று, குடந்தைக் கீழ்க்கோட்டம். இந் நாளில், முன்னது கும்பேசுரர் கோயில் சோமீச்சுரம் எனவும், பின்னது நாகேஸ்வரர் கோயில் வழங்கும். நாகேஸ்வரர் கோயில் என்னும் கீழ்க் கோட்டத்தில் சூரியன் வழிபட்டதாகச் சொல்லப்படுகின்றது. மூலத்தானத்து மூர்த்தியின் மீது இன்றும் சில நாட்களில் சூரியன் கதிர்கள் வீழ்வது அதற்குச் சான்றாகும் என்பர். சூரியன் வழிபட்டவாறே சந்திரனும் குடமூக்கில் ஈசனிடம் வரங் கிடந்தான். அவன் பேறு பெற்ற ஆலயம் சோமீச்சுரம் எனப்பட்டது. இப்பொழுது அது சோமநாதர் கோயில் என வழங்கும்.18

தேவீச்சுரம்

தேவீச்சுரம் என்னும் திருக்கோயில் தென்னாட்டில் உள்ளதென்பது “திரிபுராந்தகம் தென்னார் தேவீச்சுரம்” என்ற திரு வாக்கால் விளங்கும். தென்னாடாகிய நாஞ்சில் நாட்டில் கன்னியா குமரிக்கு அணித்தாகத் தேவி ஈசனை வழிபட்டுப் பேறு பெற்ற தலம் ஒன்றுண்டு. தேவீஸ்வரர் என்பது அங்குள்ள ஈசன் திரு நாமமாக இன்றும் வழங்கி வருகின்றது.அழகிய நாயகி என்று பெயர் பெற்றுள்ள வடிவுடையம்மை யின் பெருமையால் முன்னாளில் தேவீச்சுரம் என்று அழைக்கப்பெற்ற திருக்கோயில் இந் நாளில் வடிவீச்சுரம் என வழங்குகின்ற தென்பர். கோயிற்பெயர் ஊர்ப் பெயராயிற்று. வீமீச்சுரம்

முன்னாளில் இடர்க்கரம்பை என்னும் பெயர் பெற்றிருந்த ஊரில் வீமீச்சுரம் என்ற சிவாலயம் விளங்கிற்றென்பது ஒரு சாசனப் பாட்டால் தும் தெரிகின்றது. முதற் குலோத்துங்க சோழன் காலத்ததாகக் கருதப்படும் அச்சாசனத்தில்,

"இம்பர் நிகழவிளக் கிட்டான் இடர்க்கரம்பைச் செம்பொன்ணி வீமீச் சரந்தன்னில்-உம்பர்தொழ விண்ணுய்ய நின்றாடு வானுக்கு வேலைசூழ் மண்ணுய்ய நின்றாடு வான்”

என்ற பாட்டு உள்ளது. இடர்க்கரம்பையில் செம்பொற் கோயிலாய் இலங்கிய வீமீச்சுரத்தில் அழகிய நடம் புரியும் இறைவனுக்குக் குலோத்துங்கன் திரு விளக்கு வைத்த செய்தி அதனால் அறியப்படும்.19 அம்மன்னன் ஆணை தாங்கிக் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து, வெற்றி மாலை புனைந்த கருணாகரத் தொண்டைமான் இடர்க் கரம்பைத் திருக் கோயிலுக்கு நன்கொடை வழங்கினான் என்று மற்றொரு சாசனம் தெரிவிக்கின்றது.20 இங்ஙனம் சோழ மன்னராலும், தண்டத் தலைவராலும் கொண்டாடப்பட்ட கோயில் இப்பொழுது கோதாவரி நாட்டில் திராகூடிராமம் என்ற பெயர் கொண்டுள்ள ஊரில் பீமேச்சுரர் ஆலயமாக மிளிர்கின்றது.

கேதீச்சுரம்

ஈழ நாடு எனப்படும் இலங்கையில் சிறந்த சிவாலயங்கள் சில உண்டு. அவற்றுள் மாதோட்டம் என்னும் பதியில் அமைந்த திருக் கோயில் திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றதாகும். “இருங் கடற்கரையில் எழில் திகழ் மாதோட்டம்” என்று அவர் கூறுமாற்றால் அஃது ஓர் அழகிய கானலஞ் சோலை என்பது விளங்கும். அச் சோலையில் நின்ற கோவில் கேதீச்சுரம் என்று குறிக்கப்படுகின்றது.

“மாவும் பூகமும் கதலியும் நெருங்குமா
தோட்ட நன்னகர் மன்னித்
தேவி தன்னொடும் திருந்துகே தீச்சரத்
திருந்த எம்பெரு மானே”

என்பது திருஞான சம்பந்தர் திருவாக்கு. இராஜராஜ சோழன் ஈழ மண்டலத்தை வென்று அதற்கு மும்முடிச் சோழமண்டலம் என்று பெயரிட்டபொழுது, மாதோட்டம் என்னும் ஊர் இராசராசபுரம் என்றும், திருக்கேதீச்சரம் இராசராசேச்சரம் என்றும் பெயர் பெற்றது.21

தாடகேச்சுரம்

திருப்பனந்தாள் என்னும் பதியிலுள்ள சிவாலயம் தாடகேச்சுரம் ஆகும். “தண்பொழி சூழ் பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே” என்று தேவாரம் . அதனைப் போற்றுகின்றது. தாடகை யென்னும் மாது செய்த பூசைக்கிரங்கி ஈசன் தண்ணளி புரிந்தமையால் அத்திருக்கோயில் தாடகேச்சுரம் என்னும் பெயர் பெற்ற தென்று புராணம் கூறும்.22

வர்த்தமானீச்சரம்

சோழநாட்டுச் சிறந்த பதிகளுள் ஒன்றாகிய திருப்புகலூர் மூவர் தேவாரமும் பெற்றதோடு, திருநாவுக்கரசர் முத்தியடைந்த சீர்மையும் உடையதாகும். அவ்வூர் ஆலயத்தின் வடபால் உட்கோயிலாக விளங்குவது வர்த்தமானீச்சரம். முருகன் என்னும் சிவனடியார் நித்தலும் அன்போடு பூமாலை சாத்தி வர்த்தமானீச்சரப் பெருமானை வழிபட்ட செய்தி தேவாரத்தால் அறியப்படுவதாகும்.

“மூசுவண் டறைகொன்றை முருகன்
முப்போதும் செய்முடிமேல்
வாசமா மலருடையார் வர்த்தமானிச் சரத்தாரே”

என்று திருஞான சம்பந்தர் முருக நாயனாரது தொண்டின் திறத்தினைக் குறித்தருளினார்.

இன்னும், பழமையான சில ஈச்சுரங்களின் பெருமையைக் கல்வெட்டுக்களால் அறியலாகும். அவற்றுள் சில இப்பொழுது ஊர்ப் பெயர்களாகவும் வழங்கி வருகின்றன.

தொண்டீச்சுரம்

திருமுனைப்பாடி என முன்னாளில் பெயர் பெற்றிருந்த நன்னாட்டில் தேவாரம் பாடிய இருவர் பிறந்தருளினர்.

“அறந்தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும் பிறந்தருள உளதானால் நம்மளவோ பேருலகில் சிறந்ததிரு முனைப்பாடித் திறம்பாடும் சீர்ப்பாடு”

என்னும் சேக்கிழார் திருவாக்கால் திருநாவுக்கரசரையும் சுந்தர மூர்த்தியையும் ஈன்ற பெருமை அந்நாட்டுக்குரிய தென்பது இனிது விளங்கும்.திருவெண்ணெய் நல்லூரில் தன்னை ஆட்கொண்ட இறைவனது கருணைத் திறத்தினை வியந்து திருநாவலூரிலே பாடினார் சுந்தரர்.

“நாதனுக்கூர் நமக்கூர் நரசிங்க முனையரையன்
ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும்.ஊர் அணி நாவலூர்”

என்னும் ஆர்வ மொழிகள் அவர் திருவாக்கிலே பிறந்தன. இத்தகைய வாய்ந்த திருநாவலூரில் ஈசனார் கோயில் கொண்ட ஈச்சுரங்கள் சாசனத்திற் குறிக்கப்பெற்றுள்ளன. தொண்டீச்சுரம் என்பது ஒரு திருக் கோயிலின் பெயர். அகத்தீச்சுரம் என்பது மற்றொரு திருக்கோயில்.

தண்டீச்சுரம்

தொண்டை மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்துக் கோட்டுர் நாட்டில் வெளிச்சேரி என்னும் பழமையான ஊர் உள்ளது.அவ்வூரில் உள்ள சிவாலயத்தின் பெயர் தண்டீச்சுரம் என்பது சாசனங்களால் தண்டிச்சுரம் அறியப்படுவதாகும். கண்டராதித்தன் முதலாய சோழ மன்னர்கள் காலத்தில் தண்டீச்சுரம் சிறப்புற்று விளங்கிற்று.24

கண்டீச்சுரம்


தென்னார்க்காட்டு நெல்லிக்குப்பத்துக்கு வடமேற்கே திருக்கண்டீச்சுரம் என்னும் ஊர் உண்டு. அங்கமைந்த திருக்கோயில் மிகப் பழமையான தென்பது சாசனங்களால் விளங்கும்.அக்கோயிலின் பெயரே ஊர்ப் பெயராயிற் றென்று தோன்றுகின்றது.25

வாலீச்சுரம்

திருச்சி நாட்டில் பச்சை மலைக்கும் கொல்லி மலைக்கும் இடையே பாங்குற அமைந்த ஊர் வாலீச்சுரம் என வழங்குகின்றது.26 பெரம்பலூர் என்னும் வாலீச்சுரம் பெரும் புலியூர் வட்டத்திலுள்ள வாலி கண்டபுரத்திலும் வாலீச்சுரம் என்ற சிவாலயம் உண்டு.

அனந்தீச்சுரம்

தொண்டை நாட்டுத் தென்னேரி என்னும் திரையனேரியில் அமைந்த ஆலயத்தின் பெயர் அனந்தீச்சுரம் என்பது.27 வட ஆர்க்காட்டில் உள்ள பாதுர் என்னும் வாதவூரில் மற்றோர் அனந்தீச்சுர அனந்தீச்சுரம் விளங்கிற்று.28 மயிண்டீச்சுரம்

திருஞான சம்பந்தர் தேவாரத்தில் மயிண்டீச்சுரம் எனக் குறிக்கப்பெற்ற தலம் சேலம் நாட்டுத் தருமபுரி வட்டத்திலுள்ள அதமன் கோட்டைச் சிவாலயமாகும். அங்குள்ள சோமேசுரர் கோயிற் சாசனத்தில் மயிந்தீசுரமுடையார் என்று அவ்விறைவன் குறிக்கப்படுதலால் இவ்வுண்மை விளங்குகின்றது.29

கார்க்கோடீச்சுரம்

காமரச வல்லி என்னும் ஊரில் அமைந்துள்ள பழமையான சிவாலயம் கார்க்கோடீச்சுரம் என்று பெயர் பெற்றிருந்தது. ஆதியில் அவ்வூர் திரு நல்லூர் என வழங்கிற்றென்பது கல்வெட்டால் அறியப்படும். பிற்காலத்தில் அது காமரவல்லி சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரை எய்திற்று. “விறைக் கூற்றத்துப் பிரம தேயமாகிய காமரவல்லி சதுர்வேதி மங்கலத்தில் திரு நல்லூரிலுள்ள கார்க் கோடீச்சுரம்” என்பது சாசனம்.30 நாளடைவில் நல்லூர் என்னும் பெயர் மறைந்து காமரவல்லி என்பதே ஊரின் பெயர் ஆயிற்று. பாடல் பெற்ற திருப்பழு ஆருக்குப் பன்னிரண்டு மைல் துரத்தில் இப்போது காமரசவல்லியாக விளங்குவது இவ்வூர்.

அடிக் குறிப்பு

1. “பகவனே ஈசன், மாயோன், பங்கயன், சினனே புத்தன்” சூடாமணி நிகண்டு.

2, 180 of 1911.

3. அம்பர் மாகாளம் தஞ்சை நாட்டு நன்னில வட்டத்திலும்,இரும்பை மாகாளம் தென்னார்க்காட்டுத் திண்டிவன வட்டத்திலும் உள்ளன. 4. திருத்தொண்டர் புராண வரலாறு, 19.

5. 82 Gf 19 ! l.

6. கோடீச்சுரக் கோவை நூன்முகம், சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள், ப.14.

7, 143 of 1900.

8. 14; of 1900.

9. திருக்கோழிச்சுரத்திற்கு ஒரு தலைவன் நித்திய பூசைச் செலவுக்காகத் திட்டம் வகுத்து, அதற்காக நாலாயிரத்து இருநூறு குழி நிலம் நன்கொடையாக விட்ட செய்தி இச் சாசனத்தில் விரித்துரைக்கப் பட்டுள்ளது. 541 of 1906.

10. M. E. R. 1930-31.

11. திருவாரூர்ப் புராணம்-ஆடகேச்சரச் சருக்கம், 7.

12. T. A. S. Vol. 1.R. 243-44. தஞ்சை நாட்டில் பாடல் பெற்ற அகத்தியன் பள்ளியில் உள்ள திருக் கோயிலின் பெயரும் அகச்தீச்சுரம் ஆகும்.

13. 158 of 908.

14, 189 of 1906.

15. 193 Qf 1906.

16. 735 of 1905.

17. கந்த புராணம், கயமுகன் உற்பத்திப் படலம், 264,

18. South India Shrines by P.V. Jagadisan. p. 321.

19. S. I. I., Vol. IV., p. 337.

20. 466 of 1911.

21. முதல் இராசராச சோழன் (உலகநாதபிள்ளை) 85.

22. திருவிளையாடல் - அருச்சனை, 20.

23. 335 of 1903; 325 of 1903. 24. 306 of 1911.

25. H.M.P. South, Arcot, 242-65.

26. Trichinopoly Gazetteer. Vol. I, P. 291

27. 224 of 1922.

28. 413 of 1922

29. ஆராய்ச்சித் தொகுதி, மு. ரா. 296

30. 64 of 1914. 

அரசரும் ஈச்சுரமும்

தமிழ் அரசர் பலர் தம் பெயரை ஆலயங்களோடு இணைத்து அழியாப் பதம் பெற ஆசைப்பட்டார்கள். அன்னார் எடுத்த திருக் கோயில்கள் பெரும்பாலும் ஈச்சுரம் என்று பெயர் பெற்றன;தேவார காலத்திற்கு முன்னரே இப்பழக்கம் எழுந்ததாகத் தெரிகின்றது.எனினும்,பிற்காலத்தில் எழுந்த ஈச்சுரங்கள் மிகப் பலவாகும்.

பல்லவனீச்சுரம்

பல்லவ குல மன்னர் சிவாலயங்கள் பல கட்டினர். சோழ நாட்டின் துறைமுக நகரமாகிய காவிரிப் பூம்பட்டினத்தில் பல்லவனீச்சுரம் என்னும் திருக் கோயில் விளங்கிற்று.அதனைத் திருஞான சம்பந்தர் பாடியருளினார். பல்லவ மன்னன் ஒருவனால் அக்கோயில் எடுக்கப்பட்டதென்பது வெளிப்படை.

குணதரவீச்சுரம்

குணதரன் என்னும் விருதுப் பெயர் கொண்ட மகேந்திர வர்மன் திருநாவுக்கரசரால் சிவ நெறியிலே சேர்க்கப்பட்ட பல்லவ மன்னன். அக் காலத்தில் சமணர்கள் சிறந்து வாழ்ந்த பாடலி புத்திரம் என்ற ஊரில் பாழிகளும் பள்ளிகளும் பல இருந்தன.சமண மதத்தை விட்டுச் சைவ மதத்தைச் சார்ந்த அம் மன்னன் அங்கிருந்த பாழிகளையும் பள்ளிகளையும் இடித்து திருவதிகை நகரில் சிவபெருமானுக்கு ஒரு கோயில் எடுத்து, அதற்குக் குணதர ஈச்சுரம் என்னும் பெயர் கொடுத்தான். இன்னும், வட ஆர்க்காட்டுச் சீய மங்கலத்தில் மகேந்திர வர்மன் குடைந்தெடுத்த குகைக் கோயில் பல்லவேச்சுரம் என்னும் பெயர் பெற்றது.2

ராஜசிம்மேச்சுரம்

இராஜ சிம்மன் என்ற பல்லவ மன்னன் சிவனடி போற்றிய சீலன். காஞ்சிபுரத்தில் கயிலாச நாதர் கோயில் கட்டியவன் இவனே. அக்கோயில் ராஜ சிம்மேச்சுரம் என்று சாசனத்திற் குறிக்கப் படுகின்றது.3 தொண்டை நாட்டுத் திருத்தொண்டருள் ஒருவராகிய பூசலார் நாயனார் ஈசனார்க்கு மனக் கோயில் கட்டிய பொழுது இராஜ சிம்மன் அவர்க்குக் கற்கோயில் கட்டினான் என்பர்.

“காடவர்கோன் கச்சிக் கற்றளி எடுத்து முற்ற மாடெலாம் சிவனுக்காகப் பெருஞ்செல்வம் வகுத்தல் செய்வான்”

என்று திருத் தொண்டர் புராணம் கூறும் கற்றளி இதுவே போலும்!

பல்லவேச்சுரம்

மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரம் தேவாரத்திற் குறிக்கப்படவில்லை யெனினும் அங்கே சிவாலயங்கள் உண்டு என்பது திருமங்கை யாழ்வார் திருப் பாசுரத்தால் தெரிகின்றது.

“பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு இணங்குதிருச் சக்கரத்தெம் பெருமானார்க் கிடம்விசும்பில்
கணங்கள்இயங் கும்மல்லைக் கடல்மல்லைத் தலசயனம்”

என்னும் பாட்டால் தலசயனம் என்ற திருமால் கோவிலுக்கு அருகே சிவன் கோயில் உள்ள தென்பது தெள்ளிதின் விளங்கும். மாமல்லபுரத்தில் பல்லவ மன்னனால் கட்டப்பட்டிருந்த இரண்டு சிவாலயங்கள் சாசனத்தித் குறிக்கப்படுகின்றன.அவற்றுடன் பள்ளி கொண்டார் கோவிலையும் சேர்த்துச் சாசனம் கூறுதலால், மூன்று கோவில்களும் ஒன்றை யொன்று அடுத்திருந்த பான்மை அறியப்படும்4 அவற்றுள் இராஜசிம்ம பல்லவேச்சுரம் என்னும் சிவாலயம் இராஜ சிம்மனால் எடுக்கப்பட்டதாகும். எனவே, காஞ்சிபுரத்தில் இராஜசிம்மேச்சுரம் என்னும் கைலாசநாதர் கோயில் கட்டிய பல்லவனே மாமல்ல புரத்தில் பல்லவேச்சுரமும் கட்டினான் என்று தெரிகின்றது. மல்லையில் உள்ள மற்றொரு சிவாலயம் கூடித்திரிய சிம்ம பல்லவேச்சுரம் என்ற பெயரால் குறிக்கப்படுகின்றது. இராஜ சிம்மனுக்கு கூடித்திரிய சிகாமணி யென்னும் விருதுப் பெயர் இருந்ததாகத் தெரிகின்றமையால் இக் கோவிலும் அவனே உண்டாக்கினான் என்பர்.5

பரமேச்சுரப் பல்லவன் காஞ்சிபுரத்திற்கு அண்மையி லுள்ள கூரம் என்னும் ஊரில் தன் பெயரால் ஒரு சிவாலயம் கட்டி அதற்குப் பரமேஸ்வர மங்கலத்தைத் தானமாக வழங்கிய செய்தி கூரத்துச் செப்பேடுகளில் கூறப்படு கின்றது.

பஞ்சவனீச்சுரம்

பாண்டி நாட்டிலும் பல ஈச்சுரங்கள் இருந்தன. மதுரையைச் சூழ்ந்திருந்த தலங்களுள் ஒன்று பஞ்சவனீச்சுரம் என்னும் பெயர் பெற்றிருந்த தென்பது கல்லாடத்தால் அறியப்படும்.6 பாண்டீச்சுரம்

பாண்டி நாட்டு ஆழ்வான் கோயில் என்னும் ஊரில் திருப் பாண்டீச்சுரம் அமைந்திருந்த தென்று பழனி வட்டத்திலுள்ள பெரிய கோட்டைச் சாசனம் கூறுகின்றது.7

சோழீச்சுரம்

குறுநில மன்னராகிய முத்தரசரிடமிருந்து தஞ்சை நகரைக் கைப்பற்றி அரசாண்ட விசயாலயசோழன் பெயரால் அமைந்த கற்கோயில் புதுக் கோட்டையைச் சார்ந்த நாரத்தா மலையில் உள்ள தென்பர். விசயாலய சோழீச்சுரம் என்பது அதன் பெயர்.8

ஆதித்தேச்சுரம்

திரு நல்லம் என்பது தேவாரப் பாடல் பெற்ற நகரம்.

“நல்லம் நல்லம் எனும்பெயர் நாவினால்
சொல்ல வல்லவர் துநெறி சேர்வரே”

என்ற திருப்பாட்டு பெற்றது அப்பதி. திருநல்லச் சடை யார்க்குச் செம்பியன் மாதேவி கற்கோவில் கட்டினாள் என்றும், அக்கோயிலுக்குத் தன் கணவராகிய கண்டராதித்தர் பெயரை அமைத்தாள் என்றும் கல்வெட்டுக் கூறுகின்றது.9 இங்ஙனம் அவர் பெயரால் அமைந்த திருக்கோயில் ஆதித்தேச்சுரம் என வழங்கலாயிற் றென்பர். அங்குள்ள ஈசன் திருவடியைத் தொழுகின்ற பான்மையில் கண்டராதித்தர் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.10

இராஜராஜேச்சுரம்

தஞ்சை நகரத்தின் நல்லணியாகத் திகழும் பெரிய கோவில் இராஜராஜன் என்னும் பெருநில மன்னனது சீர்மைக்கு ஒரு சிறந்த சான்றாக நின்று நிலவுகின்றது. அத்திருப்பணியை மிக்க ஆர்வத்தனமாய்ச் செய்து முடித்தான் அம்மன்னன் என்பது சாசனங்களால் விளங்குகின்றது. இராஜராஜேச்சுரம் என்று பெயர் பெற்ற அக்கோவில் தமிழகத்தின் பண்பாட்டை விளக்கும் கலைக் கோயிலாகவும் அமைந்துள்ளது. அங்கு இறைவன் திருவுருவத்தை நிறுவும் பொழுது உடனிருந்து உதவிய கருவூர்த் தேவர் பாடிய பாட்டு திருவிசைப்பா என வழங்குகின்றது. “இஞ்சிசூழ் தஞ்சை இராஜராஜேச்சுரத்தின் ஏற்றமும் தோற்றமும் அப்பாட்டில் இனிது காட்டப்படுகின்றன. விண்ணளாவி நின்ற திருக்கோவிலில் கண்ணையும் கருத்தையும் கவரும் ஆடல் பாடல்கள் நிகழ்ந்தன என்பது,

“மின்னெடும் புருவத் திளமயில் அனையார்
விலங்கல்செய் நாடக சாலை
இன்னடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை
இராஜரா ஜேச்சுரத் திவர்க்கே”

என்னும் திருவிசைப் பாவால் இனிது விளங்கும்.

தொண்டை நாட்டு மனவிற் கோட்டத்துப் புரிசை நாட்டில் இராஜராஜேச்சுரம் என்னும் சிவாலயம் ஒன்று எழுந்தது.11 அக்கோயிற் சிறப்பினால் சிவபுரம் என்னும் பெயர் அவ்வூருக்கு வழங்கலாயிற்று.

திரு விந்தனுர் நாட்டைச் சேர்ந்த குளத்தூரில் பெருமா நம்பி என்னும் பல்லவராயர் ஒரு சிவாலயம் கட்டி, அதற்கு இராஜராஜேச்சுரம் என்று பெயரிட்டார். இப்போது அவர் பெயரால் வழங்கும் பல்லவராயன் பேட்டையில் உள்ள ஆலயம் அதுவே.12 கழிக்குடி யென்னும் மறு பெயருடைய கன்னியா குமரியில் மற்றோர் இராஜராஜேச்சுரம் காணப்படுகின்றது. இப்பொழுது கிலமுற்றிருக்கும் குகைநாதர் கோவிலே பழைய இராஜராஜேச்சுரம் என்பர்.13

இக்கோவில் நந்தா விளக்குக்காகச் சோழகுல வல்லி அளித்த நன்கொடை கல்வெட்டால் அறியப்படுகின்றது.14 இராஜேந்திர சோழன் காலத்தில் கன்னியாகுமரி கங்கை கொண்ட சோழபுரம் என்னும் பெயர் பெற்றது.

தாராசுரம்

தாராசுரம் என்பது கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள ஓர் ஊர். அங்குள்ள சிவன் கோவில் இராஜராஜேச்சுரம் என்று கல்வெட்டுக் களில் குறிக்கப்படுகின்றது. ராஜராஜ புரத்திலுள்ள ராஜ ராஜேக்சுரம் என்னும் சாசனத் தொடரால்15 இராஜராஜ சோழனுக்கும் அவ்வூருக்கும் உள்ள தொடர்பு நன்கு விளங்குகின்றது. ராஜராஜேச்சுரம் என்பது நாளடைவில் ராராசுரம் ஆகக் குறுகிற்று.16 ராராசுரம் தாராசுரமாகத் திரிந்தது. தாராசுரக் கோயிலின் கட்டுமானமும் தஞ்சைப் பெருங் கோயில் முறையில் அமைந்துள்ளது.

அரிஞ்சயேச்சுரம்

திருவல்லத்துக்கு வடக்கேயுள்ள மேற்பாடி என்னும் ஊரில் உள்ள சிவாலயத்தின் பெயர் அரிஞ்ச யேச்சுரம், முதற் பராந்தக சோழனுடைய மகன் அரிஞ்சயன். அவன் நெடுநாள் அரசாளவில்லை என்று தோன்றுகின்றது. பாணர் நாட்டின் மீது படையெடுத்துச் சென்ற அம்மன்னன் போர்க் களத்தில் வீழ்ந்து பட்டான் என்று கருதுவர் பலர். பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டி நாட்டை யாண்ட வீர பாண்டியன் சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் என்று கல்வெட்டுக்களிற் குறிக்கப் படுதலால், அரிஞ்சயன் தலை கொண்டவன் அவனே போலும் இவ்வாறு அகால மரணமடைந்த அரிஞ்சயன் பெயரால் இராஜராஜ சோழன் பள்ளிப் படையாகக் கட்டிய ஆலயம் அரிஞ்சயேச்சுரம் என்று வழங்கப்பெற்றது.17 இக் காலத்தில் அக்கோயிலின் பெயர் சோழேச்சுரம் என்பதாகும்.

கங்கைகொண்ட சோழேச்சுரம்

இராஜேந்திர சோழனது விருதுப் பெயரால் அமைந்த நகரம் கங்கை கொண்ட சோழபுரம். அந் நகரில் அம்மன்னன் கட்டிய சிவன் கோவில் கங்கை கொண்ட சோழேச்சுரம் என்று பெயர் பெற்றது. அந்நாளில் ஆறு கோபுரங்களோடும், அழகிய மதில்களோடும் விளங்கிய அவ்வாலயம் இன்று மதில் இழந்து, மாண்பிழந்து நிற்கின்றது. ஆறு கோபுரங்களில் எஞ்சியுள்ளது ஒன்றே. ஒன்பது அடுக்குள்ள அக்கோபுரத்தின் உயரம் நூற்றெழுபது அடி என்பர். தஞ்சைப் பெருங் கோயிலைப் பாடிய கருவூர்த் தேவர் கங்கை கொண்ட சோழேச்சுரத்தையும் பாடியுள்ளார்.

“பண்ணிநின் றுருகேன் பணிசெயேன் எனினும்
பாவியேன் ஆவியுட் புகுந்தென்
கண்ணினின் றகலா என்கொலோ கங்கை
கொண்டசோ ழேச்சரத் தானே"

என்ற திருவிசைப் பாவால் அதன் பெருமை இனிது விளங்கும்.

சோழேச்சுரம்

நாஞ்சில் நாட்டில் உள்ள கோட்டாறு என்னும் நகரைக் குலோத்துங்க சோழன் வென்று கைக்கொண்ட பின்னர், அங்கு சிவன் கோவில் ஒன்று சோழேச்சுரம் கட்டுவித்து அதற்கு இராசேந்திர சோழேச்சுரம் என்று பெயரிட்டான். அத் திருக் கோயிலைச் சூழ்ந்த இடம் சோழபுரம் என்னும் பெயர் பெற்றது. இக்காலத்தில் நாகர் கோயிலின் ஒரு பகுதி சோழபுர மென்றும், அங்குள்ள கோவில் சோழேச்சுரம் என்றும் சொல்லப்படுகின்றன.18

இந்நாளில் வேப்பத்துர் (தஞ்சை நாடு) என வழங்கும் திருந்துதேவன் குடியில் கங்கை கொண்ட சோழேச்சுரம் என்ற சிவாலயம் ஒன்று இருந்ததாகத் தெரிகின்றது.19 முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் திருச்சி நாட்டிலுள்ள மேலப் பழுவூரில் இருந்த பழமையான செங்கற் கோவில் புதுப்பிக்கப்பட்டுக் குலோத்துங்க சோழேச்சுரம் என்னும் பெயர் பெற்றது.20

அடிக் குறிப்பு!

1. திருநாவுக்கரசர் புராணம், 146.

2. Pallavas, P. 17 .

3. S. I. I., Vol. i. p. 13.

4. 3 of 1887.

5. ஆழ்வார்கள் கால நிலை, 137.

6.“வெள்ளி யம்பலம் நள்ளா றிந்திரை
பஞ்சவ னிச்சரம் அஞ்செழுத் தமைந்த
சென்னி மாபுரம் சேரன் திருத்தளி”

-கல்லாடம் 61.

7. 468 of 1907.

8. முதல் இராசராச சோழன் (T. W. உலகநாத பிள்ளை) 11

9. 450 of 1908.

10. S. I. I., Voi. III. p. 396.

11. 18 of 1896.

12, A. R. E., 1923. 24, p. 103

13. T. A. S., Vol. I, p. 161, 14. சோழ் குல வல்லி என்பவள் இராஜேந்திர சோழனுக்குத் திருவமுது சமைத்திட்டவள் என்பதும், அவள் புலியூர் நாட்டுப் பாலையூர்த் திட்டையைச் சேர்ந்தவள் என்பதும் சாசனத்தால் விளங்குகின்றன. T. A. S., Vol. i.p. 61.

15. 21 of 1908 கும்பகோணத்துக் கும்பேசுரர் கோயிலுக்குப் பத்து மைல் சுற்றளவுக் குட்பட்ட பதினெட்டுப் பெரிய கோயில்களுள் ஒன்று தாராசுரம்.

16. 23 of 1908.

17. S. I. I. Vol. III, Nos. 15, 16, 17

18. S. I. I., Vol. III, p. 159.

19. 51 of 1910.

20. 393 of 1914.

திருமேனியும் தலமும்

திருவிற்கோலம்

தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்று திருவிற்கோலம். அங்குள்ள ஈசன் கோயில் திரிபுராந்தகம் எனப்படும். திரிபுரங்களில் இருந்து தீங்கிழைத்த அவுணரை அழிக்கத் திருவுளங் கொண்ட இறைவன் வில்லெடுத்த கோலம் அங்கு விளங்குதலால் விற்கோலம என்ற பெயர் அதற்கு அமைந்ததென்பர். “திரிதருபுரம் எரிசெய்த சேவகன் உறைவிடம் திருவிற் கோலமே” என்று தேவாரமும் இச்செய்தியைத் தெரிவிக்கின்றது. எனவே, ஈசனது திருமேனியின் கோலத்தைக் குறித்த சொல், நாளடைவில் அவர் உறையும் கோயிலுக்கும் பெயராயிற் றென்பது விளங்கும். இத் தகைய விற்கோலம் கூகம் என்ற ஊரிலே காட்சியளித்தது.

“கோடல்வெண் பிறையனைக் கூகம் மேவிய
சேடன் செழுமதில் திருவிற் கோலத்தை”

என்று திருஞான சம்பந்தர் பாடுதலால், கூகம் என்பது ஊரின் பெயரென்றும், திருவிற்கோலம் அங்குள்ள ஆலயத்தின் பெயரென்றும் அறியலாகும். இக்காலத்தில் கூவம் என்பது அத் தலத்தின் பெயராக வழங்குகின்றது.

திருமேனிநாதபுரம்

தஞ்சை நாட்டுப் பட்டுக்கோட்டை வட்டத்தில் திருஆவணம் என்று வழங்கிய தலமொன்று உண்டு. அங்கு எழுந்தருளிய ஈசன் திருமேனிநாதர் என்னும் திரு நாமம் பெற்றார். இப்பொழுது அப்பெருமான் பெயரால் திருமேனி நாதபுரம் என்று அவ்வூர் அழைக்கப்பெறுகின்றது.1 ஆப்பனூர்

மதுரைக்கு அருகே வைகையாற்றின் கரையில் ஓர் ஆப்பிலே தோன்றிய ஈசன் ஆப்பன் என்று பெயர் பெற்றார். அவர் அமர்ந்த இடம் ஆப்பனுளர் ஆயிற்று. அப்பதியைப் பாடினார் திருஞான சம்பந்தர். இப்பொழுது ஆப்பனூர் திருவாப்புடையார் கோயில் என்று குறிக்கப்படுகிறது.

கன்றாப்பூர்

சோழ நாட்டில் கன்று கட்டிய ஒரு முளையினின்றும் இறைவன் வெளிப்பட்டமையால் கன்றாப்பூர் என்னும் பெயர் அவ்வூருக்கு அமைந்த தென்பர்.

“கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே”

என்னும் தேவாரத்தில் நடுதறி என்பது அங்குக் கோயில் கொண்ட ஈசன் திருநாமம் என்று தெரிகின்றது. இவ்வூர் இப்பொழுது கண்ணாப்பூர் என வழங்கும்.2

கானுார்

கானகத்தில் அமைந்த கானுர் என்ற ஊரிலே செழுஞ்சோலையினிடையே முளைத்தெழுந்த இறைவன் திருவுருவத்தைக் கானுர் முளையென்று போற்றினார் திருநாவுக்கரசர். “காமற் காய்ந்தவன் கானுர் முளைத்தவன்” - என்பது அவர் திருவாக்கு. இப்பொழுது அங்கு ஊரில்லை. கோயில் மட்டும் உள்ளது.3

பெருமுளை

கானூர் முளைபோல் எழுந்த மற்றொரு கோயில் மாயவர வட்டத்தில் உள்ளது. அங்கு முளைத்த பெருமுளை மூர்த்தியைப் பெருமுளை என்று அழைத்தனர். அப் பெயரே ஊர்ப்பெயரும் ஆயிற்று. இப்பொழுது பெருமுளை என்னும் ஊரில் உள்ள சிவாலயம் சுயம்பு நாதர் கோயில் என வழங்குகின்றது.4

அவிநாசி

இறைவனுடைய திரு நாமமே ஊர்ப் பெயராதலும் உண்டு. கொங்கு நாட்டில் இன்று அவிநாசி யென்று வழங்கும் ஊரின் பழம் பெயர் தேவாரத்தால் விளங்கும். அங்கு முதலை வாயினின்றும் ஒரு பாலனை மீட்பதற்காகச் சுந்தரர் பாடிய திருப்பாசுரத்தில்,

“புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே”

என்று வேண்டுதலால் புக்கொளியூர் என்பது அவ்வூரின் பெயர் என்பதும், அவிநாசி யென்பது ஆண்டவன் திருநாமம் என்பதும், தெளிவாகத் தெரிகின்றன.5 நாளடைவில் ஊர்ப் பெயர் வழக்கா றிழந்துவிட்டது. அவிநாசி யென்பது ஊர்ப் பெயராயிற்று.

திருக்கோளிலி

இவ்வாறே, திருவாரூருக்குத் தென்கிழக்கே அமைந்த திருக்கோளிலி என்ற ஊரின் பெயரும் இறைவன் பெயராகவே தோற்று கின்றது. கேடில்லாத பரம்பொருளைக் கோளிலி என்னும் சொல் குறிப்பதாகும். அவிநாசி யென்ற வடசொல்லுக்கும், கோளிலி யென்ற தமிழ்ச் சொல்லுக்கும் பொருள் ஒன்றே. இந்த நாளில் திருக்கோளிலி என்பது திருக் குவளை யெனச் சிதைந்து வழங்குகின்றது.

ஒக்கணாபுரம்

வட ஆர்க்காட்டு வேலூர் வட்டத்தில் ஒக்கனாபுரம் என்றும், வக்கணாபுரம் என்றும் வழங்கும் ஊர் ஒன்று உள்ளது. சாசனத்தின் வாயிலாக ஆராயும் பொழுது அவ்வூர்ப் பெயரின் வரலாறு விளங்குகின்றது. அங்குள்ள திருக் கோயிலில் அமர்ந்த ஈசன் ஒக்க நின்றான் என்னும் திருநாமம் பெற்றுள்ளார். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து நிற்கும் பரம்பொருளை ஒக்க நின்றான் என்ற சொல் உணர்த்துவதாகும்.6 ஒக்க நின்றானையுடைய ஊர், ஒக்க நின்றான் புரம் என்று பெயர் பெற்றது. அதுவே ஒக்கணாபுரம் என மருவிற்று.

தான்தோன்றீச்சுரம்

இராமநாதபுரம் என்னும் சேது நாட்டில் சிவபுரி என்ற ஊர் உள்ளது. சுயம்பு வடிவத்தில் சிவன் அங்கு வெளிப்பட்டமையால் சிவபுரி என்னும் பெயர் அதற்கு அமைந்த தென்பர். அவ்வூரில் உள்ள பழமையான சிவாலயம் தான்தோன்றீச்சுரம் என்று சாசனங்களிற் குறிக்கப்படுகின்றது.7

பழைய கொங்கு நாட்டுப் பேரூர்களில் ஒன்று நம்பி பேரூர் ஆகும்.8 இப்பொழுது அதன் பெயர் நம்பியூர் என மருவியுள்ளது. அங்குள்ள சிவாலயத்தின் பெயர் தான்தோன்றீச்சுரம்.9 எனவே, அப் பதியிலும் ஈசன் சுயம்பு வடிவத்தில் வெளிப்பட்டான் என்பது விளங்குகின்றது.

அடிக் குறிப்பு

1. M. E. R., 1930-31.
2. இது நாகபட்டின வட்டத்தில் உள்ளது.
3. திருக்கோயிலும் மண்ணுள் மூழ்கி மறைந்திருந்த தென்றும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பெரியார் முயற்சியால் அது,

தோண்டியெடுக்கப்பட்டதென்றும் கூறுவர். திருக்கானூரைச் “சோலைக் கானுர்” என்று ஐந்து பாசுரத்திற் பாடிய திருஞான சம்பந்தர் கடைசிப் பாட்டில் “கழுது துஞ்சும் கங்கு லாடும் கானுர்” என்று கூறுதல் காண்க.

4. M. E. R., 1917, 221.

5. விநாசம் இல்லாத பொருள் (அழிவில்லாத பொருள்) அவிநாசி எனப்படும்.

6. S. I. I. Vol. I. p. 92.

7. 35 of 1929.

8. நம்பியூர் கோயம்புத்துர் நாட்டுக் கோபி செட்டிப் பாளைய வட்டத்தில் உள்ளது.

9. I. M. P., Coimbattore, 278-283.



இறையவரும் உறைவிடமும்

இரு சுடர்

இந் நில வுலகிற்கு ஒளி தரும் சூரியனையும் சந்திரனையும் நெடுங் காலமாகத் தமிழகம் போற்றி வருகின்றது. சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்துரைக்கு மிடத்து ஞாயிறு, திங்கள் என்னும் இரு சுடர்களையும் போற்றுதல் இதற்கொரு சான்றாகும்.1

பரிதி நியமம்

தேவாரத்தில் பரிதி நியமம் என்ற கோயில் பாடப் பெற்றுள்ளது. நியமம் என்பது கோயில்.2 எனவே, பரிதி நியமம் என்பது சூரியன் கோயில் ஆகும். பிற்காலத்தில் பரிதியப்பர் என்னும் பெயர் அக் கோயிற் பெருமானுக்கு அமைந்தது. பரிதியப்பர் கோயில் பருத்தியப்பர் கோயில் என மருவி, இப்பொழுது பருத்திச் செடியோடு தொடர்பு கொண்டுள்ளது.

சூரியனார் கோயில்

இன்னும், திருவிடை மருதூருக்கு அருகே சூரியன் கோவில் ஒன்று உள்ளது. அது முதற் குலோத்துங்க சோழனாற் கட்டப்பட்ட தென்று சாசனம் கூறும். மூல ஸ்தானத்தில் சூரியன் வடிவம் காணப்படுகின்றது. மற்றைய கிரகங்களும் தனித்தனி இடம் பெற்றுள்ளன. இக் கோயிலை யுடைய தலமும் சூரியனார் கோயில் என வழங்கும்.4

சந்திரனைக் குறிக்கும் பழந் தமிழ்ச் சொல் திங்கள் என்பதாகும். சோழ நாட்டில் திருவையாற்றுக் கருகே திங்களூர்

திங்களூர் என்ற ஊர் உண்டு. அவ்வூரில் அப்பூதியடிகள் என்ற திருத்தொண்டர் அறம் வளர்த்த வரலாறு பெரிய புராணத்தில் விளக்கப் படுகின்றது.5 கோவை வட்டத்தில் மற்றொரு திங்களுர் உள்ளது. இவ்வூர் இரண்டும் சந்திரனோடு தொடர்புடையன போலும்!

இரு சேய்கள்

பிள்ளையார்

ஈசனருளாலே தோன்றிய பிள்ளையாரும் முருகனும் தமிழ்நாடெங்கும் வணங்கப் பெறுவர். ஒவ்வொரு சிவாலயத்திலும் அவ் விருவருக்கும் தனித் தனி இடமுண்டு. கோயில் இல்லாத சிற்றுார்களிலும் பிள்ளையார் என்னும் விநாயகர் ஆற்றங்கரை, குளக்கரை, அரசமரம் முதலிய இடங்களில் அமர்ந்திருப்பார். அப் பெருமானுக்குரிய பல பெயர்களுள் பிள்ளையார், கணபதி என்ற இரண்டும் ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கக் காணலாம்.6

பிள்ளையார்பட்டி

பாண்டி நாட்டில் குன்னக்குடிக்கு அருகேயுள்ளது பிள்ளையார்பட்டி என்னும் ஊர்.7 முற்காலத்தில் அது மருதங்குடி என்று வழங்கியதாகத் தெரிகின்றது. அங்குப் பழமையான குகைக் கோயில் ஒன்றுண்டு. அச் சிவாலயத்தின் ஒரு சார் உள்ள பாறையில் பிள்ளையார் வடிவம் அமைக்கப்பட்டது. நாளடைவில் கற்பகப் பிள்ளையார் என்னும் பெயர் வாய்ந்த பெருமான் வரதமுடைய மூர்த்தியாக வணங்கப்பட்டார்; அவர் பெயரே ஊருக்கும் அமைவதாயிற்று.8 இன்னும், நெல்லை நாட்டிலுள்ள பிள்ளையார் குளமும், சேலம் நாட்டிலுள்ள கணபதி நல்லூரும், வட ஆர்க்காட்டிலுள்ள கணபதி மடுவும், தஞ்சை மாநகரத்தில் புதிதாகத் தோன்றியுள்ள கணபதி நகரமும் விநாயகர் பெயர் தாங்கி நிலவும் ஊர்களாகும்.

முருகன்

முருகன் வழிபாடு இந் நாட்டில் தொன்று தொட்டு நிகழ்ந்து வருகின்றது. தொல்காப்பியத்தில் குறிஞ்சி நிலம் அவர்க் குரியதாகக் கூறப்படும். முருகன், கந்தன், குமரன், சேயோன் முதலிய பல பெயர்களால் தமிழகம் அப்பெருமானைப் போற்றும்.

திருமுருகன்பூண்டி

கொங்கு நாட்டில் திரு முருகன் பூண்டி என்பது தேவாரப் பாமாலை பெற்ற பழம் பதி. முருகன் பெயர் தாங்கிய அவ்வூரில் ஆறலைக்கும் வடுக வேடர் பலர் இருந்தனர் என்று தேவாரம் கூறுகின்றது.9 அப் பூண்டியிலுள்ள முருகனை அருணகிரி நாதர் பாடியுள்ளார்.

சேய்நல்லூர்

சோழ நாட்டில் மண்ணியாற்றின் தென் கரையில் விளங்கும் சீர்மை வாய்ந்த சிவப் பதிகளுள் ஒன்று சேய் நல்லூர். அசுர வீரனாகிய சூரனை வென்றழிக்கப் போந்த முருகப்பெருமான் - மண்ணியாற்றங் கரையில் தங்கி ஈசனார்க்குப் பூசனை இயற்றிய காரணத்தால் அவ்விடம் சேய்நல்லூர் என்று பெயர் பெற்ற தென்பர்.10 அறுபத்து மூன்று சிவனடியார்களுள் சிறப்பாக ஆலயங்களில் வணங்கப்படுகின்ற சண்டேச்சுரர் பிறந்த ஊர் இந்த ஊரே யாகும். அவ்வூரைப் பாடியுள்ளார் திருஞான சம்பந்தர். திருச்சேய் நல்லூர் என்னும் பெயர் இப்பொழுது திருச்செங்கனுர் என மருவி வழங்குகின்றது.

வட ஆர்க்காட்டிலுள்ள சேனூரும் முருகனோடு தொடர்புடையதாகத் தோன்றுகின்றது. முன்னாளில் அவ்வூர் சேய் நல்லூர் என வழங்கிற்று.11 அப் பெயரே சேனூர் என்று மருவியுள்ளது.

திருச்செந்தில்

தமிழகத்தில் முருகவேள் காட்சி தரும் பழம்பதிகளை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் எடுத்துரைத்தார்.

“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்

ஏரகமும் நீங்கா இறைவன்”

என்பது அவர் பாட்டு. தென்பாண்டி நாட்டில் கடற் கரைக் கோவிலாக விளங்குவது செந்திலம்பதி. நீலத்திரைக் கடல் ஓரத்திலே நின்று நிலவும் செந்தில் மாநகர்க் கந்தன் கோவில் திருச்சீர் அலைவாய் என்று நக்கீர தேவரால் திருமுருகாற்றுப் படையிலே பாடப் பெற்றுள்ளது. இளங்கோவடிகள் புகழ்ந்தவாறே நக்கீரரும் செந்திற் பதியில் வீற்றிருக்கும் அலைவாய்க் கோயிலை,

“உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்”

என நிறைந்த மொழிகளால் போற்றினார். கடல் சூழ்ந்த வீர மகேந்திரத்தில் அரசு புரிந்த சூரன் என்னும் அசுரனை வென்று, அறத்தை நிலை நிறுத்தக் கருதிய முருகவேள் செந்திற் பதியைப் படை வீடாகக் கொண்டார் என்று கந்த புராணம் கூறும்.12 எனவே, முருகப் பெருமானை வெற்றி வீரனாகக் கண்ட செந்தில் மாநகரம் உலகம் புகழும் ஓங்குயர் சீர்மை பெற்று விளங்குவதாயிற்று.

திருச்செங்கோடு

சேலம் நாட்டிலுள்ள செங்கோடு என்னும் மலையும் முருகன் விரும்பி யுறையும் பழம் பதிகளுள் ஒன்று என்பதை முன்னமே கண்டோம். அம் மலையடிவாரத்தில் அமைந்த ஊர் செங்குன்றூர் என்று தேவாரத்தில் பாடப் பெற்றுள்ளது. “குன்றன்ன மாளிகை திருச்செங்கோடு சூழ் கொடி மாடச் செங்குன்றூர்” என்று திருஞான சம்பந்தர் இப்பதியின் சீர்மையை எடுத்துரைத்தார். அழகிய கொடிகளையுடைய நெடு மாடங்களை அவ்வூரிற் கண்களிப்பக் கண்ட காழிக் கவிஞர் கொடி மாடங்களை ஊரோடு இணைத்துப் பாடினார் போலும்! செங்குன்றில் உள்ள சிகரம் செங்கோடு என்னும் பெயர் பெற்றது.

வெண்குன்று

கொங்கு நாட்டில் பவானி நதியும் சிந்தாமணியாறும் கலந்து கூடுமிடத்தில் தவளகிரி என்னும் மலையொன்று உண்டு. அங்கு முருகன் கோயில் கொண்டு விளங்கினான் என்பது சாசனத்தால் அறியப்படும்.13 வெண் கோடு என்ற தமிழ்ச் சொல்லுக்கு நேரான வடமொழிப்பதம் தவளகிரி யாதலால் இளங்கோவடிகள் குறித்த முருகப்பதி அதுவாயிருத்தல் கூடும்.

திருஏரகம் கும்பகோணத்திற்கு மேற்கேயுள்ள சுவாமி மலையே திரு ஏரகம் என்பர். அங்குக் கோயில் கொண்டுள்ள முருகன் சுவாமிநாதன் என்னும் பெயருடையார் மூலமந்திரமாகிய பிரணவத்தின் உட்பொருளை ஈசனார் மனங்குளிர எடுத்துரைத்த காரணத்தால் சிவகுரு என்றும், சுவாமி நாதன் என்றும் முருகன் பெயர் பெற்றார் என்பர். சுவாமி நாதனுக்குரிய மலை சுவாமி மலை என்று அழைக்கப்படுகிறது.

திருஆவிநன்குடி

முருகவேளுக்குரிய படை வீடுகளுள் ஒன்றாகிய பழனி மலையும் பழம் பெருமை வாய்ந்ததாகும். ஆதியில் அது பொதினி என்று பெயர் பெற்றிருந்தது. வேளிர் குலத்தலைவர்கள் அம் மலையையும் அதைச் சார்ந்த நாட்டையும் ஆண்டு வந்தனர்.

“முழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி
பொன்னுடை நெடுநகர்ப் பொதினி”

என்னும் அகநானூற்றுப் பாட்டால் வேளிர் குலத்தைச் சேர்ந்த ஆவி என்ற குறுநில மன்னன் பொதினி என்னும் நகரத்தில் ஆட்சி புரிந்தான் என்பது அறியப்படும். இங்ஙனம் ஆவியர் குடியினரால் நெடுங்காலமாக ஆளப் பெற்ற நகரம் ஆவிநன்குடி என்று பெயர் பெற்றது. அப் பதியில் அமர்ந்த முருகனை, “ஆவிநன்குடி அமர்தலும் உரியன்” என்று திரு முருகாற்றுப்படை போற்றுகின்றது.

சித்தன் வாழ்வு

சித்தன் வாழ்வு என்ற பெயரும் ஆவிநன்குடிக்கு உண்டு என்பர். சித்தன் என்பது முருகனுக்குரிய பெயர்களுள் ஒன்றாதலால், சித்தன் வாழ்வு

என்னும் பெயர் பெற்றதென்பர்.14

“நல்லம்பர் நல்ல குடியுடைத்து; சித்தன்
வாழ்வு இல்லந்தொறும் மூன்றெரி யுடைத்து”

என்று ஒளவையார் சித்தன் வாழ்வைச் சிறப்பித்துப் பாடினார்.

திருவிடைக்கழி

சோழ நாட்டில் முருகப் பெருமான் தண்ணருள் புரியும் தலங்களுள் ஒன்று திருவிடைக் கழியாகும். அத்தலத்தின் பெயர் விடைக்கழி எனவும் இடைக் கழி திருவிடைக்கழி எனவும் வழங்கும்.15 அங்கு நறுமணம் கமழும் மகிழஞ் சோலையில் குரவமரத் தடியில் அமர்ந்துள்ள குமாரக் கடவுளை,

“குலவிடைக் கழியின் மகிழ்வனத்தில் ஒரு
குரவடிக்கணமர் நீபமாலைப்புய வேளைப் புரக்கவே”

என்று போற்றினார் திருவிடைக்கழி முருகன் பிள்ளைத் தமிழுடையார். இவ்வூர் தஞ்சை நாட்டு மாயவர வட்டத்தில் உள்ளது.

சாத்தனும் பலதேவனும்

சாத்தான்

சாத்தான் பெயரால் அமைந்த ஊர்கள் தமிழ் நாட்டிற் பலவுண்டு. அவ்வூர்களிற் பெரும்பாலும் சாத்தன் இன்றும் சாத்தன் வழிபாடு சிறப்பாக நடைபெறக் காணலாம். சாத்தனாரை ஐயனார் என்றும் அழைப்பதுண்டு. சோழ நாட்டில் திருவாவடுதுறைக்கு அருகில் ஒரு சாத்தனூர் உள்ளது. திரு விசைப்பாவிலும், திருத் தொண்டர் புராணத்திலும் அவ்வூர் குறிக்கப்படுகின்றது. அங்கே சிறப்பு வாய்ந்த ஐயனார் கோவில் ஒன்று விளங்குகின்றது. எனவே, ஐயனார் பெயரே ஊர்ப் பெயராக வழங்கலாயிற் றென்பது வெளிப்படை. பலதேவர்

பழந் தமிழ் நாட்டில் பலதேவன் வழிபாடு நிகழ்ந்த தென்பது இலக்கியங்களால் அறியப்படும். வெண்ணிறம் வாய்ந்த அத்தேவனை, “வால்வளை மேனி வாலியோன்” என்று சிலப்பதிகாரம் குறிக்கின்றது. அவரை வெள்ளை மூர்த்தி என்றும், பல தேவன் என்றும் பண்டைத் தமிழர் அழைப்பாராயினர்.16 காவிரிப் பூம்பட்டினத்திலும், மதுரையம் பதியிலும் அவர்க்குக் கோயில் இருந்ததாகத் தெரிகின்றது. மதுரையில் இருந்த பலதேவர் கோயிலை “வெள்ளை நகரம்” என்று சிலப்பதிகாரம் குறிக்கும்.17 உத்தரமேரூர் என்னும் ஊரில் வெள்ளை மூர்த்தி கோயில் ஒன்று இருந்த தென்பது சாசனத்தால் விளங்குகின்றது.18 தாமிரபரணி யாற்றின் கரையில் வெள்ளைக் கோயில் துறை ஒன்றுண்டு. பழைய பலதேவர் வழிபாட்டை அது நினைவூட்டுவதாகும்.

அடிக் குறிப்பு

1. “திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்”
“ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்-”

-மங்கல வாழ்த்துப் பாடல்.

2. நியமம், கோயில் என்பது “உவணச் சேவல் உயர்த்தோன் நியமனம்” என்று திருமால் கோயில் சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படுதலாலும் உணரப்படும்-ஊர்காண் காதை, 8.

3. பரிதி நியமம், சூரியன் ஈசனை வழிபட்ட ஸ்தலம் என்று கொள்ளலு மாகும்.

4. சூரியனார் கோயிலைப் பற்றிய சாசனங்களும், அங்குள்ள நவக்கிரகங்களின் அமைப்பும், அவற்றின் படங்களும் ஜெகதீசய்யர் எழுதிய நூலிற் காண்க -indian Shrinesp. 3 1 3 - 6.

5. அந்தணரின் மேம்பட்ட அப்பூதியடிகள் திருநாவுக் கரசரைப் போற்றி அவர் பெயரால் அறம் புரிந்தவர். அடிகளின் மைந்தனைப் பாம்பு தீண்டிய போது, திருநாவுக்கரசர் ஆண்ட வனைப் பாடி விஷத்தைப் போக்கிய செய்தி தேவாரத்தால் அறியப்படும்.

6. சங்க நூல்களில் பிள்ளையாரைப்பற்றிய குறிப்பொன்றும் கிடைக்கவில்லை. “பிடியதன் உரு உமைகொள” என்ற தேவாரத்தில், “கணபதி வர அருளினன்” என்று பாடியுள்ளார் திருஞான சம்பந்தர்.

7. இராமநாதபுரம் நாட்டில் திருப்பத்தூர் வட்டத்தில் உள்ளது பிள்ளையார்பட்டி.

8. M. E. R., 1935-36,

9. “கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்....

ஆறலைக்குமிடம்” என்றும், “முசுக்கள் போல் பல வேடர் வாழ் முருகன் பூண்டி” என்றும் பாடினார் சுந்தரர்.

-திருமுருகன் பூண்டிப் பதிகம் 1, 3
.

10."ஏந்தும் அயில்வேல் நிலைகாட்டி
இமையோர் இகல்வெம் படைகடக்கும்
சேந்தன் அளித்த திருமறையோர்
மூதூர் செல்வச் சேய்ஞலூர்”

என்று சேக்கிழார் கூறியருளினார். (சண்டேசுரர் புராணம், 1)

இப்பதியில் ஆறுமுகப் பெருமான் பூசனை புரிந்து ஈசனிடம் பாசுபதாஸ்திரம் பெற்ற வரலாறு கந்த புராண உற்பத்திக் காண்டத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

11. 394 of 1811.

12. உற்பத்திக் காண்டம், திருச்செந்திற் படலத்திற் காண்க. 13. 181 of 1910.

14. சித்தன் என்பது முருகக் கடவுளின் திரு நாமம் என்பர் நச்சினார்க்கினியர். திருமுருகாற்றுப்படை, 176 - உரை. -

15. மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரிதம், முதற் பாகம், 212.

16. “வால்வளை மேனி வாலியோன்” என்பதற்கு “வெள்ளிய வளை (சங்கு) போலும் நிறத்தையுடைய வெள்ளை மூர்த்தி” என்று பொருள் உரைத்தார் அடியார்க்கு நல்லார்.

17. ஊர்காண் காதை, 9.

18, 181 of 1923.

திருவாக்கும் ஊர்ப் பெயரும்

தேவாரம் பாடிய மூவருக்கும் சைவ உலகத்தில் அளவிறந்த பெருமை யுண்டு. அவர்கள் திருவாக்குப் பொன் வாக்காகப் போற்றப்படும். இத் தகைய சீர்மையைச் சில ஊர்ப் பெயர்களால் உணரலாகும்.

அழகார்திருப்பத்தூர்

தேவாரப் பாமாலை பெற்ற ஊர்களில் புத்தூர் என்னும் பெயருடைய பதிகள் பல வுண்டு. அவற்றுள் வேற்றுமை தெரிதற் பொருட்டு ஒரு புத்துரைத் திருப்புத்தூர் என்றும், மற்றொரு புத்துரைக் கடுவாய்க்கரைப் புத்தூர் என்றும், பிறிதொரு புத்தூரை அரிசிற்கரைப் புத்தூர் என்றும் தேவாரம் குறிப்பதாயிற்று. அவற்றுள் அரிசிற்கரைப் புத்தூர், அரிசில் ஆற்றங்கரையில் அமைந்ததாகும்.1 கண்ணுக்கினிய செழுஞ் சோலையின் நடுவே நின்ற அவ்வூரை அழகார் திருப்புத்தூர் என்று ஆறு திருப்பாட்டிற் பாடினார் சுந்தரர்.

“அலைக்கும் புனல்சேர் அரிசில் தென்கரை
அழகார் திருப்புத்துர் அழகன் நீரே”

என்பது அவர் திருப் பதிகத்தின் முதற் பாட்டு. அத் தேவாரத்தை ஆர்வத்தோடு ஒதிய அன்பர் உள்ளத்தில் அழகார் திருப்புத்தூர் என்னும் தொடர் அழுந்திப் பதிவதாயிற்று. நாளடைவில் அரிசிற் கரைப்புத்தூர் என்ற பெயர் மாறி அழகார் திருப்புத்தூர் என்பது அதன் பெயராயிற்று. அப்பெயர் அழகாதிரிப் புத்தூர் என இந்நாளில் மருவி வழங்கும். சிந்துபூந்துறை

திருநெல்வேலியின் வழியாகச் செல்லும் பொருநை யாற்றில் உள்ள துறைகளுள் சாலப் பழமை வாய்ந்தது பூந்துறையாகும். திருஞான சம்பந்தர் o தம் தேவாரத்தில் பூந்துறையைப் புகழ்ந்து போற்றியுள்ளார்; நெல்லை யம் பதியில் அவர் கண்களைக் கவர்ந்தது அத் துறை. அதன் இரு மருங்கும் நின்ற நெடுஞ் சோலைகளில் நன்னிற மலர்கள் நறுமணம் கமழும் நலத்தினையும், மந்திகள் அங்கு மிங்கும் பாய்ந்து மரக் கிளைகளைப் பற்றி உலுப்பும் போது அவற்றி லுள்ள நாண் மலர்கள் அழகிய தேன் துளிகளைச் சிந்தும் தன்மையையும் அறிந்து, அக மகிழ்ந்தார் திருஞான சம்பந்தர். அக் காட்சியை ஒரு திருப் பாசுரத்திலே பாடியருளினார்.

“கந்தமார் தருபொழில்
மந்திகள் பாய்தர மதுத் திவலை
சிந்துபூந் துறைகமழ்
திருநெல் வேலியுறை செல்வர்தாமே”

என்பது அவர் திருவாக்கு. பூவார் சோலையின் இடையே அமைந்த அழகிய துறையை “மதுத்திவலை சிந்து பூந்துறை” என்று அவர் குறித்தார். அப் பாசுரத்தின் ஈற்றடியிலே முத லெடுப்பாகவுள்ள சிந்து பூந்துறை என்ற தொடரையே அத்துறையின் பெயராகக் கொண்டு பொதுமக்கள் வழங்கத் தலைப்பட்டார்கள். இப்போது அத்துறையும், அதன்கண் அமைந்த ஊரும் சிந்துபூந்துறை என்றே அழைக்கப் படுகின்றன.

தூவாய் நயினார் கோயில்

திருவாரூரில் அமைந்த மண்தளி என்னும் பழமையான திருக் கோயில் பாடல் பெற்றதாகும். அத்தளியிற் கோயில் கொண்ட ஈசனை நோக்கி, “தூவாயா, தொண்டு செய்வார்படு துக்கங்கள் காவாயா"2

என்று உருக்கமாகப் பாடியருளினார் சுந்தரர். அத்திருப் பாட்டின் அடியாகத் தூவாய் நயினார் என்ற பெயர் அப்பெருமானுக்கு கோயில் வழங்கலாயிற்று. நாளடைவில் அப் பெயர் துலா நயினார் என மருவிற்று. எனவே, பழைய மண்தளி இப்பொழுது துலா நயினார் கோயில் என வழங்குகின்றது.3

வைத்தீஸ்வரன் கோயில்

சிதம்பரத்துக்கு அண்மையில் உள்ள புள்ளிருக்கு வேளுர் என்னும் ஊர், பாடல் பெற்றதாகும். அங்கு அமர்ந்தருளும் பெருமானைச் சடாயு என்ற வைத்தீஸ்வரன் புள்ளும், நால் வேதங்களுள் கோயில் ஒன்றாகிய இருக்கு வேதமும், முருக வேளும் தொழுது அருள் பெற்றமையால், புள்ளிருக்கு வேளுர் என்னும் பெயர் அதற்கு அமைந்ததென்று புராணம் கூறும். அப் பதியில் கோயில் கொண்ட ஈசனை அருமருந்தாகக் கண்டு போற்றினர் திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும்.

“செடியாய உடல் தீர்ப்பான்
தீவினைக்கோர் மருந்தாவன்”

- என்பது திருஞான சம்பந்தர் திருவாக்கு. “மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீரா நோய் தீர்த்தருள வல்லான்” என்பது திருநாவுக்கரசர் பாட்டு. இருவர் திருவாக்கின் பண்பும் பயனும் உணர்ந்த அடியார்கள், வினை தீர்த்தான் என்றும், வைத்தீஸ்வரன் என்றும் புள்ளிருக்கு வேளுர்ப் பெருமானைப் போற்றுவா ராயினர்.4 இக் காலத்தில் வைத்தீஸ்வரன் கோயில் என்பது திருக் கோயிலின் பெயராகவும், அக்கோயிலையுடைய ஊரின் பெயராகவும் வழங்குகின்றது.

காளையார் கோயில்

பாண்டி நாட்டுக் கானப்பேர் என்னும் ஊர் பாடல் பெற்ற பழம் பதியாகும். அங்கே கோயிற் கொண்ட ஈசன் மீது ஆசையுற்றுப் பாடினார் சுந்தரர். அவர் பாடிய பத்துப் பாட்டிலும் “கானப்பேர் உறை காளை” என்று இறைவனைக் குறித்துப் போந்தார். அத்திரு வாக்கின் சீர்மையால் காளையார் என்னும் பெயர் அவர்க்கு அமைந்தது. காளையார் அமைந்தருளும் கோயில் காளையார் கோயி லாயிற்று. கோயிற் பெயரே நாளடைவில் ஊர்ப் பெயராகவும் கொள்ளப்பட்டது.

அடிக் குறிப்பு

1. “அன்னம் படியும் புனலார் அரிசில் அலைகொண்டு
பொன்னும் மணியும் பொருதென் கரைமேல் புத்துரே”

-திருஞான சம்பந்தர் தேவாரம்.

2. துவாயா - தூய வாயை யுடையோனே, ஈசனைத் “துமறை பாடும் வாயான்” என்று சேக்கிழாரும் குறித்தல் காண்க. தடுத்தாட்கொண்ட புராணம்.

3. இக்கோவிலைத் துர்வாசர் கோயில் என்றும் கூறுவர். அதற்கேற்பக் கோயிலுள் விநாயகர் பக்கத்தில் துர்வாசருடைய உருவம் நிறுவப்பட்டிருக்கிறது.

4. வினை தீர்த்தான் கோயிலைக் குறித்த பாட்டொன்றுண்டு. “வாதக்காலாம் தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவாம். போதப் பெருவயிறாம் புத்திரற்கு - மாதரையில் வந்த வினை தீர்க்க வகையறியான் வேளுரான், எந்த வினை தீர்த்தான் இவன்” என்று இகழ்வார் போல் புகழ்ந்தார் காளமேகம். இதனை வீரமா முனிவர் பாட்டென்டாருமுளர்.

–Besse’s “Life of Beschi.”

இதிகாசமும் ஊர்ப் பெயரும்

பாரதமும் இராமாயணமும்

நெடுங்காலமாகத் தமிழ் நாட்டில் பாண்டவர் கதையும், இராமகதையும் வீட்டுக் கதைகளாக வழங்கி வருகின்றன. தமிழ் நாட்டு மூவேந்தருள் பாண்டியன் குலம் பஞ்ச பாண்டவரோடு இணைக்கப்பட்டுள்ளது. தீர்த்த யாத்திரை செய்த பார்த்திபன் தென்னாட்டிற் போந்து பாண்டி மன்னன் திருமகளைக் காதலித்து மணந்தான் என்று பழங் கதை கூறுகின்றது. சேர மன்னன் ஒருவன் பாரதப் போர் புரிந்த பெரும் படைக்கு உணவளித்துப் பெருஞ் சோற்றுதியன் சேரலாதன் என்று புகழப்பெற்றான்.

திருவேட்களம்

இத்தகைய கதைகள் தமிழ் நாட்டில் வழங்கி வந்தமையால் பல ஊர்ப் பெயர்களில் பாரதக் கதை இடம் பெற்றது. சிதம்பரத்திற்கு அண்மை யிலுள்ள திருவேட்களம் என்னும் சீரூர் அர்ச்சுனனோடு தொடர்புற்றது. சிவபெருமானிடம் பாசுபதம் பெறக் கருதி நெடுங்காலம் அர்ச்சுனன் வேள்வி செய்த இடமே வேட்களம் என்று பெயர் பெற்றதென்பர். மகாபலிபுரத்திலுள்ள கற்கோயில் ஐந்தும் பஞ்ச பாண்டவ ரதம் என்று குறிக்கப் படுகின்றன.

ஐவர்மலை

பழனி மலைக்கு அருகே அயிரை யென்ற மலை யொன்றுண்டு. அம் மலையில் கொற்றவை யென்னும் தெய்வத்தை அமைத்துப் பழந் தமிழ் மன்னர் வழிபட்டனர். நாளடைவில் அயிரைமலை யென்பது ஐவர் மலை யெனத்திரிந்தது. ஐவராகிய பாண்டவர் அம் ஐவர் மலை மலையில் தங்கியிருந்தணர் என்னும் கதை எழுந்தது. அங்குக் கோயில் கொண்டிருந்த கொற்றவை ஐவர்க்குந் தேவி அழியாத பத்தினி” என்று போற்றப்படும் பாஞ்சாலியாயினாள்.3

லாடபுரம்

இன்றும், லாடபுரம் என்னும் ஊரைக் குறித்து ஒரு கதை வழங்குகின்றது. அவ்வூரின் ஆதிப் பெயர் விராடபுரம் என்றும், பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் செய்தபோது அவரை ஆதரித்த விராட மன்னனுக்குரியது அவ்வூர் என்றும் கருதப்படுகின்றன.அங்குள்ள இடிந்த கோட்டையை அவன் அரண்மனையெனக் காட்டுகின்றார்கள். அப் பகுதியில் ஆடு, மேய்க்கும் இடையர்கள் இன்றும் அர்ச்சுனன் வில்லைச் சில வேளைகளில் காண்பதாகச் சொல்வர்.

திருப்புல்லாணி

இனி, இராம கதையோடு தொடர்புடைய ஊர்களில் சிலவற்றைப் பார்ப்போம்; இராமன் இலங்கையை நோக்கிப் படையெடுத்துச் செல்லும் பொழுது கோடிக்கரையை அடைந்தான் என்றும், அங்கு நின்ற நெடுங்கடலைக் கடப்பதற்கு வழி தரும்படி வருண தேவனை வணங்கி வரங் கிடந்தான் என்றும், அங்ஙனம் வேண்டுங்கால் திருப்புல்லைத் தலையணையாக வைத்துப் பாடுகிடந்த இடம் திருப்புல்லணை என்று பெயர் பெற்றதென்றும் கூறுவர். வடமொழியில் தர்ப்பசயனம் என்று அவ்விடம் குறிக்கப்படுகின்றது. இவ்வாறு நெடும் பொழுது வேண்டி யும் வருணன் வாராமையால் அவன் மீது சீற்றமுற்ற இராமன், தன் வில்லை வளைத்துச் சுடுசரம் துரந்த இடம் தனுக்கோடி என்று பெயர் பெற்ற தென்பர்.

இராமன் நிகழ்த்திய பெரும்போரில் பங்குகொண்ட வானரத் தலைவரின் பெயர்கள் சில ஊர்ப் பெயர்களில் அமைந்துள்ளன. அனுமந்தக்குடி என்னும் ஊர் அனுமன் பெயரைத் தாங்கி நிற்கின்றது. காவிரிக் கரையில் அமைந்த குரங்காடு துறைகளில் வாலியும் சுக்கிரீவனும் ஈசனை வணங்கினர் என்று சொல்லப்படுகின்றது. வாலி கண்டபுரம், வாலி நோக்கம் முதலிய ஊர்ப் பெயர்களில் வானர மன்னனாகிய வாலி குறிக்கப்படுகின்றான்.

புள்ளிருக்கு வேளுர் என்ற ஊரில் இராமனுக்கு உதவி செய்த சடாயு, இறைவனை வழிபட்டான் என்று தேவாரம் பகர்கின்றது. நெல்லை நாட்டிலுள்ள மாயமான் குறிச்சியும், சேலம் நாட்டிலுள்ள மாயமான் கரடு என்னும் ஊரும் மாரீசனோடு தொடர்புற்று விளங்குகின்றன.

திரிசிரபுரம்

இனி, திருச்சிராப்பள்ளியில் திரிசிரன் புகுந்த முறையும் அறியத்தக்க தாகும். சோழ நாட்டின் பண்டைத் தலைநகராக விளங்கிய உறையூரின் அருகே நின்ற மலை,சிராப்பள்ளிக் குன்றம் என்று தேவாரத்தில் குறிக்கப் பெற்றது.4 பாடல் பெற்றமையால் சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி யாயிற்று.அப்பதியில் இராவணன் தம்பியாகிய திரிசிரன் வழிபாடு செய்தான் என்ற கதை பிற்காலத்தில் பிறந்தது. அதற் கிணங்க அவ்வூர்ப் பெயரிலுள்ள திரு என்னும் அடையைத் திரியாகத் திரித்தனர்.5 அதனால் திருச்சிராப்பள்ளி என்றும், திரிசிரபுரம் என்றும் வழங்கலாயிற்று.


ஊர்ப்பெயரும் வழக்காறும்

முற்காலத்தில் தமிழ்ப் பெயர் பெற்றிருந்த சில ஊர்கள் இக் காலத்தில் வடமொழிப் பெயர்களால் அழைக்கப் படுகின்றன. அங்ஙனம் மாறிய சில ஊர்ப் பெயர்களைக் காண்போம்:

மாயவரம்

காவிரியாற்றின் பழந்துறைகளுள் ஒன்று மயிலாடு துறை என்று பெயர் பெற்றிருந்தது. நீல நிறம் வாய்ந்த கோல மாமயில் காவிரிச் சோலையில் தோகையை விரித்துக் களி நடம் புரியும் காட்சி நம் மனக்கண் எதிரே மிளிரும் வண்ணம் மயிலாடு துறை என்று முன்னோர் அதற்குப் பெயரிட்டனர். தேவாரத் திருப்பாசுரங்களில் மயிலாடுதுறை என்றே அவ்வூர் குறிக்கப்படுகின்றது.ஆயினும், பிற்காலத்தில் அப்பெயரை வடமொழியில் பெயர்த்து அமைக்கத் தலைப்பட்டார்கள். மயில் என்பதற்கு வடசொல் மாயூரம். அவ்வட சொல்லோடு துறை என்பதைக் குறிப்பதற்குப் புரம் என்னும் சொல்லைச் சேர்த்தார்கள். எனவே, அவ்வூர்ப் பெயர் மாயூரபுர மாயிற்று. அப் பெயரிலுள்ள புரம் வரமாகத் திரிந்து மாயூரவர மாயிற்று. மாயூரவரம் நாளடைவில் மாயவரமாக மாறியுள்ளது. இப் பெயரிலே தோகை மயிலின் தோற்றமும், துறையின் அழகும் அறவே மறைந்து போய்விட்டன.

விருத்தாசலம்

தென்னார்க்காட்டிலுள்ள சிறந்த சிவ ஸ்தலங்களில் ஒன்று திருமுதுகுன்றம். அப் பதியில் கோயில் கொண்டுள்ள இறைவனைப் பழமலை நாதர் என்று இன்றும் சைவர்கள் போற்றுகின்றார்கள். அவ்வூரின் பெயர் வட மொழியில் விருத்தாசலம் எனப் பெயர்த்து அமைக்கப்பட்டது. இன்று பழம் பெயர் மறைந்து புதுப் பெயரே வழங்கி வருகின்றது.

கும்பகோணம்

சோழ நாட்டில் தெய்வ நலம் சிறக்கப் பெற்ற ஒரு தலம் குடமூக்கு என்னும் பெயர் பெற்றிருந்தது. அது குடந்தை எனத் தேவாரப் பாடல்களிலும், ஆழ்வார் திருப் பாசுரங்களிலும் குறிக்கப் படுகின்றது. அவ்வூரின் பெயர் கும்பகோணம் என்று இப்போது வழங்குகின்றது.

இவ்வாறு பெயர் மாறிய ஊர்கள் இன்னும் பல உண்டு. திருமறைக்காடு வேதாரண்யமாக விளங்குகின்றது. கீழைத் திருக்காட்டுப்பள்ளி ஆரணிசுவரர் கோயிலாக அமைந்திருக்கின்றது.

இருபெயர்கள்

இன்னும், சில ஊர்கள் பழைய தமிழ்ப் பெயரோடு வடமொழி நாமங்களையும் உடன் கொண்டு வழங்கக் காணலாம். திருவையாறு என்ற தமிழ்ப் பெயரோடு பஞ்சநதம் என்னும் வடமொழிப் பெயரும் வழங்குகின்றது. திருவிடை மருதூருக்கு மத்தியார்ச்சுனம் என்ற வடமொழிப் பெயரும் உண்டு. திருப்புல்லணை (திருப்புல்லாணி) என்னும் தென் சொல்லும், தர்ப்பசயனம் என்னும் வடசொல்லும் ஒரு பதியையே குறிப்பனவாகும். இன்னும், வானமாமலை தோத்தாத்திரி எனவும், திருக்கழுக்குன்றம் வேதாசலம் எனவும், திரு நீர்மலை தோயாசலம் எனவும் வழங்கக் காணலாம். இன்னோரன்ன தலப் பெயர்கள் பலவுள்ளன.

திரு

தமிழ்நாட்டில் தெய்வ நலம் பெற்ற ஊர்கள் பெரும்பாலும் திரு என்னும் அடை பெற்று வழங்கும். ஆயினும், சில ஊர்ப் பெயர்களில் திரு. இப்பொழுது உருக்குலைந்திருக் கின்றது. சோழ நாட்டுத் திருவழுந்துர் தேரழுந்துர் ஆயிற்று. தேவாரம் பெற்ற திருத்தினை நகர், தீர்த்த நகரி எனத் திரிந்தது. திருநெய்த்தானம் என்னும் பழம் பதியின் பெயர் தில்லைத்தானம் என வழங்கு கின்றது. இங்ஙனம் சிதைவுற்ற திருப்பெயர்கள் பலவாகும்.

ஸ்ரீ

இன்னும், சில ஊர்ப்பெயர்கள் ஸ்ரீ என்ற வட சொல்லை அடைமொழியாகக் கொண்டு வழங்குகின்றன. வைணவ உலகத்தில் தலை சிறந்து விளங்கும் பதி ஸ்ரீரங்கம் ஆகும். ஆழ்வார்கள் பாடியருளிய திருப்பாசுரங்களில் திருவரங்கம் என்று அவ்வூர் போற்றப்படுகின்றது. தென்னாட்டில் ஆழ்வார் திருநகரிக்கு அருகேயுள்ள பழம்பதி ஸ்ரீ வைகுந்தம் என்று பெயர் பெற்றுள்ளது. பெரியாழ்வாரும் ஆண்டாளும் பிறந்தருளும் பேறு பெற்ற புத்துர் ஸ்ரீவில்லிபுத்துராக விளங்குகின்றது. மெய்ஞானச் செல்வராகிய இராமானுஜர் பிறந்த ஊர் ஸ்ரீபெரும்பூதுர் ஆகும்.

தேவாரப் பாடல் பெற்ற ஊர்களில் சீகாழி என்னும் ஊர் சாலச் சிறப்பு வாய்ந்தது. தேவாரம் பாடிய மூவருள் ஒருவராகிய ஞான சம்பந்தர் அவ்வூரிலே பிறந்து சிவஞான சம்பந்தர் ஆயினார். இத் தகைய செம்மை வாய்ந்த ஊரின் பெயராக வழங்கும் சீகாழி என்ற சொல்லின் முதலெழுத்து அடைமொழி என்பதில் ஐயமில்லை. ஸ்ரீ என்ற வட சொல்லே சீ யாயிற்றென்பர் சிலர். சீர்காழி என்பதே சீகாழி யென வழங்கலாயிற்றென்பர் வேறு சிலர். தேவாரப் பாசுரத் தில் சீர் திகழ்காழி” என்று குறிக்கப் பட்டிருத்தல் பின்னவர் கொள்கைக்கு ஆதாரமாகும்.6

சித்திமுற்றம்

இங்ஙனம் சிதைவுற்ற சில ஊர்ப் பெயர்களின் அடியாகப் பிற்காலத்தில் பல கதைகள் முளைத்து எழுந்தன. சோழநாட்டில் கும்பகோணத்துக்கு அருகே சத்தி முற்றம் என்ற ஊர் உள்ளது. அங்கு அமர்ந்து அருள் புரியும் இறைவனை, “திருச்சத்தி முற்றத் துறையும் சிவக்கொழுந்தே” என்று போற்றியுள்ளார் திருநாவுக்கரசர். அவ்வூர்ப் பெயர் சத்திமுத்தம் என மருவி வழங்கலாயிற்று. அதனடியாக ஒரு கதை எழுந்தது. பரா சத்தி யாகிய பார்வதியம்மை பரமசிவனை முத்தமிடக் கண்ட பெருமை அவ்வூருக்கு உரியதென்று புனைந்துரைத்தனர் புராண முடையார். அதற்கேற்ப, அங்குள்ள திருக்கோயிலில் சத்தி, சிவனுக்கு முத்தமிடும் கோலத்தில் ஒரு திருவுருவ மும் பிற்காலத்தில் அமைவதாயிற்று.

திருவெண்டுறை

தஞ்சை நாட்டிலுள்ள மன்னார்குடிக்கு அருகே திரு வெண்டுறை என்னும் சிவஸ்தலம் உள்ளது. பிற்காலத்தில் அப்பெயர் திருவண்டுதுறை எனத் திரிந்தது. பிருங்கி முனிவர் வண்டுருவம் கொண்டு ஈசனை வணங்கிய இடம் அதுவே எனப் புராணமியற்றிய புலவர்கள் காரணம் கற்பிப்பா ராயினர்.

மகாபலிபுரம்

இன்னும், மல்லை என்று ஆழ்வார்கள் திருப் பாசுரத்திலும், மாமல்லபுரம் என்று சாசனங்களிலும் குறிக்கப்படுகின்ற ஊர் மகாபலிபுரம் மகாபலிபுரம் எனத் திரிந்து, மகாபலி மன்னனோடு தொடர்புறு வதாயிற்று. அக்கதைக்குச் சான்றாக அக்கோயிற் பாதையில் மகாபலி மன்னன் அரசு வீற்றிருக்கும் கோலத்தில் ஒரு சிற்பமும் காணப்படுகின்றது.7

தென்காசி உத்திரகாஞ்சி

பெருமை வாய்ந்த ஊர்ப் பெயர்களின் வாசியைப் போற்றும் ஆசை இந்நாட்டில் என்றும் உண்டு. காசியும், காஞ்சியும் முன்னாளிற் சிறந்து விளங்கிய நகரங்கள். வடகாசியின் மீதுள்ள ஆசையால் தமிழ் நாட்டில் தென்காசி என்னும் ஊர் தோன்றிற்று. காஞ்சியின் பெருமையறிந்த ஆந்திர தேசத்தார் கோதவரி நாட்டில் உத்தர காஞ்சி என்று ஓர் ஊருக்குப் பெயரிட்டார்கள். மானாமதுரை;வடமதுரை

பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையும் ஆன்ற பெருமை வாய்ந்ததாகும். தமிழும் சைவமும் தழைத் தோங்கக் கண்ட அந்நகரின் பெயரை ஏற்றுத் திகழ்வது மானா மதுரை.மான வீரன் மதுரை என்பது மானா மதுரை யாயிற்று என்பர். சோழ நாட்டில் ஓர் ஊர் வடமதுரை என்று பெயர் பெற்றுள்ளது.

திருஆலவாய் நல்லூர்

மதுரையில் அமைந்துள்ள சிவாலயம் திரு ஆலவாய் ஆகும். அத்திருக்கோயிலின் பெயரைக் கொண்ட திரு ஆலவாய் நல்லூர் என்ற ஊர் மதுரை நாட்டு நிலக்கோட்டை வட்டத்தில் உள்ளது.

திரு இராமேச்சுரம்

பாண்டி நாட்டிலுள்ள இராமேச்சுரம் பெரும் புகழ் வாய்ந்தது. அங்குள்ள மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றையும் சைவ உலகம் தலைக் கொண்டு போற்றும். அதன் பெருமையால் சோழ நாட்டிலும் ஓர் இராமேச்சுரம் உண்டாயிற்று. நெடு மணல் என்று முன்னாளில் பெயர் பெற்றிருந்த ஊரில் இராமேச்சுரம் என்ற கோயில் எழுந்ததென்பது சாசனத்தால் விளங்கும்.9 இப்பொழுது கோயிற் பெயரே ஊர்ப் பெயராயிற்று.

குற்றாலம்

தென்பாண்டி நாட்டில் இயற்கை அழகும் இறைவன் அருளும் வாய்ந்த சீருர் திருக்குற்றாலம்.அதன் பெருமையைக் கண் களிப்பக் கண்ட திருஞான சம்பந்தர்,

“கொம்பார் சோலைக் கோலவண்டு யாழ்செய் குற்றாலம்" என்று பாடி மகிழ்ந்தார்.இத்தகைய குற்றாலத்தின் பெயரைச் சோழ நாட்டிலுள்ள திருத்துருத்தி என்னும் பாடல் பெற்ற தலம் ஏற்றுக்கொண்டது. காவிரித் துருத்தி என்று தேவாரத்திலும், வீங்குநீர்த் துருத்தி என்று சாசனங்களிலும் வழங்கப் பெற்ற அவ்வூர் பிற்காலத்தில் குலோத்துங்க சோழன் குற்றாலம் என்று பெயர் பெற்றது.10 இப்பொழுது குற்றாலம் என்பதே அதன் பெயராகும்.11

திருப்பூவணம்

பாண்டி நாட்டில் மூவர் தேவாரமும் பெற்ற பழம் பதிகளுள் ஒன்று திருப்பூவணம் ஆகும். அப்பதி முடியுடைய தமிழ் வேந்தர் மூவராலும் வணங்கப் பெற்றதென்று திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.

“ஆரா அன்பில் தென்னர் சேரர்
சோழர்கள் போற்றிசைப்பத்
தேரார் வீதி மாடம் நீடும்
தென்திருப் பூவணமே”

என்பது அவர் தேவாரம். வைகை யாற்றின் மருங்கே வளமார்ந்த சோலை சூழ்ந்த திருப்பூவணக் கோயிலில் எழுந்தருளிய ஈசனைப் “பொழில் திகமும் பூவணத் தெம்புனிதன்” என்று திருநாவுக்கரசர் போற்றி யருளினார்.அத்திருக் கோயில் இப்போது புஷ்பவனேஸ்வரம் என்ற பெயரோடு இராமநாதபுரத்தைச் சேர்ந்த சிவகங்கை வட்டத்தி லுள்ளது.

தென்பாண்டி நாடெனப்படும் நெல்லை நாட்டில் மற்றொரு திருப்பூவணம் உண்டாயிற்று. வடக்கே பாடல் பெற்ற திருப்பூவணம் ஒன்று இருத்தலால், இதனைத் தென் திருப்பூவணம் என்றார்கள். முள்ளி நாட்டுத் தென் திருப்பூவணம் என்று சாசனத்திற் குறிக்கப்படுகின்ற இவ்வூர், தென் திருப்புவனம் என்னும் பெயரோடு அம்பாசமுத்திர வட்டத்தில் உள்ளது. இங்குள்ள திருக் கோயிலும் புஷ்பவனேஸ்வரம் என்றே வழங்குவதாகும்.12

திருவரங்கம்

காவிரியாற்றின் நடுவே அமைந்த திருவரங்கம் வைணவ உலகத்தில் தலைசிறந்து திகழும் திருப்பதியாகும். அதன் பெருமை யறிந்த தென்னார்க்காட்டு மக்கள் கள்ளக்குறிச்சி வட்டத்தில் பெருமாளுக்கு ஒரு திருக்கோவில் கட்டி, அதற்கு உத்தர திருவரங்கம் என்று பெயரிட்டார்கள் திருமாலிடம் தலை சிறந்த அன்பு வாய்ந்த கிருஷ்ண தேவராய மன்னர் காலத்தில் உத்தர திருவரங்கத்தில் உள்ள அரங்கநாதர் கோவிலுக்கு மூன்று ஊர்கள் வழங்கப்பட்ட செய்தி கல்வெட்டால் விளங்குகின்றது.13 இக்காலத்தில் திருவரங்கம் என்பதே அவ்வூரின் பெயர்.

திருநாகேச்சுரம்

சோழ நாட்டிலுள்ள பாடல் பெற்ற திருநாகேச்சுரம் திருத்தொண்டர் புராணமியற்றிய சேக்கிழார் உள்ளத்தைக் கவர்ந்த சிறந்த சிவஸ்தலம்.

“நித்தன்உறை திருநாகேச் சுரத்தில் அன்பு நிறைதலினால் மறவாத நிலைமை மிக்கார்”

என்று அவர் வரலாறு கூறும். அருட்செல்வமும் பொருட் செல்வமும் ஒருங்கே பெற்ற சேக்கிழார், தமது ஊராகிய குன்றத்தூரில் ஒரு திருக்கோயில் கட்டி, அதற்குத் திருநாகேச்சுரம் என்று பெயரிட்டார்.

“செம்பியார்கோன் திருநாகேச் சுரம்போல் எதும்
திருநாகேச் சுரமெனவே திருப்பேர் சாற்றி"ச்<poem>

சேக்கிழார் வழிபட்டார் என்பது சரித்திரம். ஆகவே, சோழ நாட்டுத் திருநாகேச்சுரத்தின் பெயர் தாங்கித் தொண்டை நாட்டுக் குன்றத்துருக்கு அருகே மற்றொரு திருநாகேச்சுரம் இன்று விளங்கு கின்றது.

வட பழனி

பழம் பெருமை வாய்ந்த முருகப் பதிகளுள் ஒன்று பழனி என்பதை முன்னமே கண்டோம்.அப்பதியில் தண்டாயுத பாணியாகக் காட்சி தரும் முருகனை இப்பொழுது சென்னை மாநகர்க்கு அருகேயுள்ள கோடம்பாக்கத்திற் கண்டு அன்பர்கள் வழிபடத் தொடங்கியுள்ளார்கள். அங்கு எழுந்துள்ள முருகன் கோயில் வடபழனி என்று வழங்கப் பெறுகின்றது.

அடிக் குறிப்பு



1. இதனால் பஞ்சவன் என்ற பெயரும் பாண்டியற்குரிய தாயிற் றென்பர்.

2. திருவக்குளம் என வழங்கும் திருவேட்களமே இப்பொழுது அண்ணாமலை நகரமா யிருக்கின்றது. அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பெற்ற ஐதிகம் இத்தலத்திற் கொண்டாடப்படுகின்றது.

3. சேரன் செங்குட்டுவன் (மு. ரா.)

<poem>4.நன்றுடையானைத் தீயதில்லானை..சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே.”

- திருஞான சம்பந்தர் தேவாரம்.

5. இவ்வாறு திரு என்ற அடை, திரி என மாறுதலைத் திருகோணமலை திரிகோணமலை யென வழங்குதலாலும்

அறியலாம்.

6.“நீறுபூசிய உருவர் நெஞ்சினுள் வஞ்சமொன்
றின்றித் தேறுவார்கள் சென்றேத்தும்
சீர்திகழ் காழிநன் னகரே.”

- திருஞான சம்பந்தர் தேவாரம்.

தேவாரத் திருமுறையைத் தலவரிசையாகப் பதிப்பித்த சுவாமிநாத பண்டிதர் சீர்காழியென்றே குறித்துள்ளார்.

- தேவாரத் திருமுறை, ப. 108,

7. I. M. P., p. 327-329.

8. வாணர வீரன் மதுரை என்பது மானா மதுரை யாயிற் றென்பது புராணக் கொள்கை.

9, i53 of 1911.

10. 483 of 1907.

11. குத்தாலம் என்பது ஒருவகை ஆத்தி மரம் என்றும், அம் மரத்தின் பெயர் பெற்ற ஊர் தற்காலத்தில் குற்றாலம் ஆயிற்றென்றும் கூறுவதுண்டு. மீ.ச. முதற்பாகம், 295.

12, No. 475 of the Madras Epigraphical Collection for 1916; T. A. S., Vol. IZ, p. 25. 13. 66 of 1906.

வைப்புத் தலங்கள்

தேவாரப் பாமாலை பெற்ற தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் என்றும், அப் பாசுரங்களில் பெயர் குறிக்கப் பெற்ற தலங்கள் வைப்புத் தலங்கள் என்றும் கூறப்படும். எனவே, திருப்பாசுரத் தொடர்களையும், சாசனங்களையும் துணைக் கொண்டு வைப்புத் தலங்களுள் சிலவற்றை அறிந்து கொள்ளலாம்.

பேரூர்

பேரூர் என்னும் பெயருடைய சில ஊர்கள் சிறந்த சிவஸ்தலங்களாய் விளங்குகின்றன. “பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான், பிறவா நெறியானே” என்று சுந்தரர் பேரூர் இறைவனைக் குறித்தருளினார். கொங்கு நாட்டில் ஒரு பேரூர் உண்டு. தேவாரத்தில்,

“ஆரூரன் தம்பிரான் ஆரூரன்
மீகொங்கில் அணிகாஞ்சிவாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச்
சிற்றம்பலத்தே பெற்றாமன்றே”

என்று சுந்தரர் அப்பேரூரைப் பாடியருளினார். அவர் திருப் பாட்டால் கொங்கு நாட்டில் காஞ்சி நதிக் கரையில் அவ்வூர் அமைந்துள்ள தென்பது அறியப்படும் காஞ்சி நதி இப்பொழுது நொய்யலாறு என்று அழைக்கப்படுகின்றது. சைவ உலகத்தில் பேரூர் மேலைச் சிதம்பரம் என்று போற்றப்படுவதாகும். திருப்பேரூர்

பழைய எயில் நாட்டில் ஒரு பேரூர் சிவஸ்தலமாகச் சிறந்திருந்தது.அங்குள்ள சிவாலயம் சோழ மன்னராலும், விஜய நகர மன்னராலும் ஆதரிக்கப்பட்ட தென்பது கல்வெட்டுக்களால் விளங்கும்.1 இந்நாளில் அவ்வூர்ப் பெயர் திருப்பத்தூர் எனத் திரிந்துவிட்டது. வட ஆர்க்காட்டில் திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள திருப்பத்துர் அதுவே யாகும்.

பேராவூர்

"பேரூர் பிரமபுரம் பேராவூர்" என்ற திருநாவுக்கரசர் பாசுரத்தால் பேராவூர் ஒரு சிவஸ்தலம் என்பது விளங்கும். சோழ மண்டலத்தில் பேராவூர் என்னும் ஊர் உள்ள தென்று சாசனம் கூறும்.2 பாடல் பெற்ற சிறந்த தலமாகிய திருவாவடுதுறை பேராவூர் நாட்டைச் சேர்ந்ததாகும். இப்போது மாயவர வட்டத்திலுள்ள பேராவூரே அவ்வூர். அங்குள்ள பழமையான திருக்கோயில் ஆதீச்சரம் என்னும் பெயருடைய தென்பது சாசனத்தால் அறியப்படுகின்றது.3

இரும்புதல்

இரும்புதல் என்பது ஒரு பழைய திருக் கோயிலின் பெயர். “இரும்புதலார் இரும்பூளையுள்ளார்” என்று பாடினார் திருநாவுக்கரசர். சோழ நாட்டில் ஆவூர்க் கூற்றத்தில் அவ்வாலயம் அமைந்திருந்தது. இரும்பு தலுடைய மகா தேவர்க்கு இராஜராஜன் முதலாய பெருமன்னர் விட்ட நிவந்தங்கள் சாசனத்தில் காணப்படும். அக்கோயில் மனுகுல சூளாமணி சதுர் வேதி மங்கலம் என்ற ஊரில் இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆயினும் நாளடைவில் கோவிற் பெயரே ஊர்ப் பெயராயிற்றென்று தோன்று கின்றது. இந்நாளில் தஞ்சை நாட்டுப் பாபநாச வட்டத்தில் உள்ள இரும்புதலை என்னும் ஊரே பழைய இரும்புதல் ஆகும்.

ஏமநல்லூர்

ஏமநல்லூர் ஒரு வைப்புத் தலம் என்பது, “எச்சிலிளமர் ஏமநல்லூர்” என்னும் திருநாவுக்கரசர் வாக்கால் அறியப்படும். தஞ்சைப் பெருங்கோயிற் சாசனம் ஒன்றில், “மண்ணி நாட்டு ஏம நல்லூராகிய திரை லோக்கிய மகாதேவி சதுர் வேதி மங்கலம்” என்ற வாசகம் வருகின்றது5 அச்சாசனத்தால் முற்காலத்தில் ஏம நல்லூர் என்று பெயர் பெற்றிருந்த ஊர் பிற்காலத்தில் ஒரு மாதேவியின் பெயர் கொண்ட மங்கலமாயிற் றென்பது விளங்கும். இந்நாளில் தஞ்சை நாட்டுக் கும்ப கோண வட்டத்திலுள்ள திரை லோக்கி என்ற ஊரே பழைய ஏமநல்லூர்.

ஏமப்பேரூர்

ஏமப்பேரூர் என்னும் வைப்புத் தலம் தென்னார்க் காட்டுத் திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ளதென்று தெரிகின்றது. இப்பொழுது ஏமப்பேர் என வழங்கும் அவ்வூரில் பழமையான சிவாலயம் ஒன்று உண்டு. அதன் பெயர் திரு ஆலந்துறை என்று சாசனம் அறிவிக்கின்றது.இராசராசன் காலத்துக் கல்வெட்டு ஆலந்துறைக் கோயிலிற் காணப்படுதலால் அதன் பழைமை நன்கு விளங்கும். திருவாரூருக்குத் தெற்கே ஆறு மைல் தூரத்தில் மற்றோர் ஏமப்பேரூர் உண்டு. அது நமிநந்தியடிகள் என்னும் திருத்தொண்டர் பிறந்த பதியாகும். மந்தாரம்

மாயவரத்துக்கு அருகேயுள்ள ஆற்றுார் என்னும் பழம் பதியில் மந்தார வனத்தில் இறைவன் வெளிப்பட்டானாதலின், அதற்கு மந்தாரம் என்ற பெயரும் மந்தாரம் வழங்கலாயிற்று. 'வக்கரை மந்தாரம் வாரணாசி' என்ற திருத்தாண்டகத் தொடரில் குறிக்கப்பெற்றுள்ளது.

“ஓங்கு மந்தார வனத்து மேவும்
உத்தமனே இஃதொன்று கேள்நீ”

என வரும் ஆற்றுர்ப் புராணத்தால் மந்தாரம் ஈசன் திருக் கோயில் கொண்ட இடம் என்பது இனிது விளங்கும்.7

மாறன்பாடி

மூவர் தேவாரமும் பெற்ற திருநெல்வாயில் அரத்துறையில் அருகே அமைந்த வைப்புத் தலம் திருமாறன் பாடியாகும். திருஞான சம்பந்தர் வரலாற்றில் சிறந்த தொரு நிகழ்ச்சியைக் காணும் பேறு பெற்றது அப்பாடி விருத்தாசலம் என்னும் முதுகுன்றத்தையும், திருப்பெண்ணாகடத்தையும் வணங்கிய திருஞான சம்பந்தர் அடி வருந்த வழி நடந்து அரத்துறையை நோக்கிச் சென்றார். மாறன் பாடியை அடைந்தபோது அந்தி மாலை வந்துற்றது. அடியார்களோடு அன்றிரவு அங்குத் தங்கினார் சம்பந்தர்.8

திருஞான சம்பந்தரது வருகையை அறிந்த திரு அரத்துறை வேதியர்கள் ஈசனளித்த முத்துச் சிவிகையும், மணிக்குடையும் மற்றைய சின்னங்களும் கொண்டு,திருமாறன் பாடிக்குச் சென்று அவரை ஆர்வத்துடன் அழைத்து வந்தார்கள். அந்நிலையில் இறைவனது பெருங்கருணையை நினைந்து மனமுருகிப் பாடினார் சம்பந்தர்.

“எந்தை ஈசன் எம்பெருமான்
ஏறமர் கடவுளென் றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லால்
சென்று கைகூடுவ தன்றால்”

என்னும் திருப்பாசுரம் அப்பொழுது எழுந்ததாகும்.

இங்ஙனம் திருத்தொண்டர் புராணத்தில் சிறப்பிக்கப் படுகின்ற மாறன்பாடி, சாசனத்திலும் குறிக்கப்படுகின்றது. திருவடத்துறை என வழங்கும் திருவரத்துறைக் கோயிற் சாசனத்திற் சேக்கிழார் பாலறாவாயன் என்னும் களப்பாள ராயன் அளித்த நன்கொடை என்று குறிக்கப்படுகின்றது. திருவரத் துறைப் பெருமான் மாறன் பாடிக்கு எழுந்தருளு கின்ற மாசித் திரு நாளிலும்,வைகாசி விழாவிலும் திருவமுது வழங்குவதற்காக விட்ட நிவந்தம் அச்சாசனத் தால் விளங்குவதாகும். இதனால் மாறன் பாடிக்கும் அரத் துறைக்கும் அந் நாளில் இருந்த தொடர்பு நன்கு அறியப் படும்.

கஞ்சாறு

ஈசன் காட்சி தரும் தலங்களுள் கஞ்சாறு என்ற ஊரும் ஒன்று.

“கஞ்சனுர் கஞ்சாறு பஞ்சாக்கையும்
கயிலாய நாதனையே காணலாமே”

என்று திருநாவுக்கரசர் திருவாக்கு எழுந்தது. இவ்வூரிலே பிறந்து சிவனடியாராகச் சிறந்தவர் மானக் கஞ்சாறனார் என்று பெயர் பெற்றார். சோலையும் வயலும் சூழ்ந்த இப்பழம் பதியின் செழுமையை,

“கோலாறு தேன்பொழியக் கொழுங்கனியின் சாறொழுகும்
காலாறு வயற்கரும்பின் கமழ்சாறுர் கஞ்சாறுர்”

என்று அழகுற எழுதிக் காட்டினார் சேக்கிழார். தஞ்சை நாட்டைச் சேர்ந்த மாயவர வட்டத்தில் ஆனந்த தாண்டவபுரத்திற்கு அண்மையில் உள்ள கஞ்சா நகரமே இத்தலம் என்பர்.10

கருந்திட்டைக்குடி

தஞ்சை நகரத்தைச் சேர்ந்த சிற்றூர்களில் ஒன்று கருந்திட்டைக்குடி, முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் அவ்வூர் சுங்கந் தவிர்த்த சோழ நல்லூர் என்னும் பெயர் பெற்றது.அது வைப்புத் தலங் களில் ஒன்றென்பது,“கற்குடி,தென்களக்குடி, செங்காட்டங்குடி,கருந்திட்டைக்குடி,கடையக்குடி” என்ற திருநாவுக்கரசர் பாட்டால் விளங்கும். அவ்வூர்ப் பெயர் இப்பொழுது கரந்தட்டாங்குடி என மருவி வழங்கும்.

தக்களூர்

'தஞ்சைத் தளிக்குளத்தார் தக்களூரார்' என்று திருநாவுக்கரசரால் குறிக்கப்பெற்ற தக்களூர் இப்பொழுது காரைக்கால் நாட்டில் திருநள்ளாறு என்னும் பாடல் தக்களுர் பெற்ற பதிக்கு அருகேயுள்ளது. திருநள்ளாற்று நாதனை வழிபட்ட திருஞான சம்பந்தர் அதனருகே அமைந்த பல பதிகளையும் வணங்கிச் சாத்தமங்கை சார்ந்தார் என்று சேக்கிழார் கூறுதலால்,தக்களூரும் அவரால் வழிபடப்பட்டதென்று கொள்ளத் தகும்.

துடையூர்

திருநாவுக்கரசர் அருளிய தலக்கோவையில் துடையூர் என்பது ஒரு தலம். “துறையூரும் துடையூரும் தொழ, இடர்கள் தொடரா வன்றே” என்னும் திருப்பாசுரப் பகுதியில் துடையூர் குறிக்கப்பட்டுள்ளது. அவ்வூர் பழமையான சிவஸ்தலம் என்பது சாசனத்தாலும் - அறியப்படும். திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த லால்குடி வட்டத்திலுள்ள துறையூரே பழைய துடையூராகும். இது பாடல் பெற்ற பாச்சில் (திருவாசி) பதிக்கு அருகே அமைந்துள்ளது. இங்குள்ள திருக்கோயில் கடம்பந்துறை என்று சாசனம் கூறுகின்றது.11

மூவலூர்

மூவலூர் என்னும் ஊரும் இறைவன் கோவில் கொண்ட இடங்களுள் ஒன்றென்பது “மூவலூரும் முக்கண்ணன் ஊர் காண்மினே” என்றும் திருநாவுக்கரசர் வாக்கால் அறியப்படும். இவ்வூர் மாயவரம் என்னும் மயிலாடு துறைக்கருகே காவிரி யாற்றங்கரையில் உள்ளதென்று திருத்தொண்டர் புராணம் கூறும். இந்நாளில் குற்றாலம் என வழங்கும் திருத்துருத்தியில் அமர்ந்த பெருமானை வழிபட்டுப் பதிகம் பாடிய திருஞான சம்பந்தர், “மூவலூர் உறை முதல்வரைப் பரவி"12ப் பின்பு திருமயிலாடு துறையினில் வந்தார் என்று கூறப்படுதலால் பாடல் பெற்ற துருத்திக்கும் மயிலாடு துறைக்கும் இடையே அமைந்தது மூவலூர் என்பது இனிது விளங்குகின்றது. புன்னாக வனம் என்று புராணங்களிற் பேசப் படுகின்ற மூவலூர் மாயவரத்துக்கு அண்மையில் உள்ளது.

முழையூர்

பழையாறையும் முழையூரும் பரமன் கோயில் கொண்டருளும் பதிகள் என்பது, “முழையூர் பழையாறை சத்தி முற்றம்” என்னும் திருநாவுக்கரசர் வாக்கால் தெரியலாகும். பாடல் பெற்ற பழையாறையும் வைப்புத் தலமாகிய முழையூரும் ஒன்றை யொன்று அடுத்துள்ள இடங்களாகும்.

சேலூர்

காவிரி நாட்டுத் தலங்களுள் ஒன்று திருச்சேலூர், திருத்தொண்டர் புராணம் இத்தலத்தைக் குறிக்கின்றது. திருப்புள்ள மங்கையில் ஈசனை வழிபட்டுப் பாமாலை திருஞான சம்பந்தர் சேலூரைச் சேவித்துத் திருப்பாலைத் துறை என்னும் பதியைச் சேர்ந்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.13 இவ்வூர் தஞ்சை நாட்டுப் பாபநாச வட்டத்திலுள்ள தேவராயன் பேட்டையே என்பது சாசனத்தால் தெளிவுறுகின்றது.14 இங்குள்ள திருக்கோயிற் கல்வெட்டுக்களில் திருச் சேலூர் மகாதேவர்க்குப் பழங்காலத்தில் மன்னரும் பிறரும் விட்ட நிவந்தங்கள் குறிக்கப்பட்டுள்ளன.15 அக்காலத்தில் இஃது இராஜகேசரி சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்திருந்த தென்பதும் விளங்கு கின்றது. இன்று அக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஈசன் மச்சபுரீஸ்வரர் என வழங்கப் பெறுகின்றார். சேல் என்பது ஒருவகை மீனின் பெயராதலால் சேலூர் என்னும் ஊர் மச்சபுரி என வட மொழியில் பெயர் பெற்றது.16 எனவே, திருஞான சம்பந்தர் வழிபட்ட சேலூர்த் திருக்கோயில் தேவராயன் பேட்டை யிலுள்ள மச்சபுரி ஈஸ்வரர் கோயிலே என்பது தெளிவாகும்.

ஊற்றத்தூர்

திருச்சி நாட்டைச் சேர்ந்த பெரம்பலூர் வட்டத்தில் உள்ள ஊற்றத்தூரும் ஒரு பழைய சிவஸ்தலம் ஆகும். “உறையூர் கடலொற்றியூர் ஊற்றத்தூர்” என்றெடுத்துப் பாடினார் திரு நாவுக்கரசர். அவ்வூரில் அமர்ந்த இறைவன் தொகுமாமணி நாயகர் என்று கல்வெட்டுக்களிற் குறிக்கப் படுகிறார்.17 பிற்காலத்தில் குலோத்துங்க சோழீச்சுரம் என்னும் திருக்கோயிலும் அவ்வூரில் எழுந்தது. இரண்டாம் இராஜராஜன் அச்சோழீச்சுர முடையார்க்கு உழுத்தம்பாடியூரைத் தேவதானமாக வழங்கிய செய்தியைக் கல்வெட்டிற் காணலாம்.18 ஊற்றத்தூர் என்னும் பெயர் இக்காலத்தில் ஊட்டத்துர் ஆயிற்று.19

காட்டூர்

இன்னும், ஈசனார் கோயில் கொண்டருளும் ஊர்களுள் ஒன்று காட்டுர் ஆகும். “காட்டுர்க் கடலே, கடம்பூர் மலையே கானப் பேரூராய்” என்று சுந்தரர் காட்டுர் காட்டுரிலே காட்சி தரும் பெருமானைப் பாடிப் பரவினார். செங்கற்பட்டு நாட்டைச் சேர்ந்த மதுராந்தக வட்டத்தில் காட்டுர் என்னும் பழமையான பதி யொன்று காணப் படுகின்றது. அங்குள்ள ஈசன் கோவில் திருவள்ளிச்சுரம். அவ்வாலயத்திற்கு இராஜராஜன் முதலாய சோழ மன்னர் வழங்கிய நிவந்தங்களைச் சாசனங்களிற் காணலாம்.20 எனவே, சுந்தரர் குறித்தருளிய இப்பழம் பதியாயிருத்தல் கூடும் என்று தோன்றுகின்றது.

குண்டையூர்

இந்நாளில் திருக்குவளை என வழங்கும் கோளிலி என்னும் பழம் பதி மூவராலும் பாடப் பெற்றதாகும். அவ்வூரின் அருகேயுள்ள குண்டையூர் இனிய சோலை சூழ்ந்த மருத நிலத்தில் அமைந்திருந்த தென்பது சுந்தரர் திருப்பாட்டால் விளங்குகின்றது. அங்குச் சுந்தரர் உணவுப் பொருளாகிய நெல்லை இறைவனிடம் வேண்டிப் பெற்றார்; அதனைத் தம் வீட்டிற் சேர்ப்பதற்கு வேலையாட்கள் இல்லாமையால் திருக்கோளிலிப் பெருமானிடம் போந்து தம் குறையை முறையிட்டார்;

“கோளிலி எம்பெருமான்
குண்டை யூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான்
அவை அட்டித்தரப் பணியே”

என்று பாடினார். இவ்வாறு சுந்தரர் தேவாரத்தில் வைப்புத் தலமாகக் குறிப்பிட்டுள்ள குண்டையூர், இக்காலத்தில் தஞ்சை நாட்டில் நாகப்பட்டின வட்டத்தில் குன்னியூர் என்னும் பெயரோடு விளங்குகின்றது. -

சடைமுடி

திருநாவுக்கரசர், “சடைமுடி சாலைக்குடி தக்களுர்” என்று குறித்தருளிய பாசுரத்திலுள்ள சடைமுடி என்ற ஊர் இப்பொழுது கோவிலடி என வழங்குகின்றது. திருச்சடை முடியுடைய மாதேவர் கோயில், பழைய திருப்பேர் நகரத்தின் ஒருசார் அமைந்திருந்ததென்பதும், அக்கோயில், திருப்புறம் என்று பெயர் பெற்று இருந்த தென்பதும் சாசனங்களாற் புலனாகும்.21 திருப்பேர் நகரம் ஆழ்வார்களாற் பாடப்பெற்ற பெருமாள் கோயிலையும் உடையது. சடை முடியார் கோயில் திருமால் கோயிலுக்குக் கிழக்கே அரை மைல் தூரத்தில் உள்ளது.

சிவாலயமாகிய திருப்புறத்தையுடைய நகர்ப் பகுதி திருப்பேர்ப்புறம் என வழங்கிற்று. பண்டைத் தமிழ் மன்னர் காலத்தில் ஒரு பெரும்போர் நிகழக் கண்டது அவ்வூர். கோச்செங்கட்சோழன், சேரமான் கணைக்கால் இரும்பொறை என்னும் சேர நாட்டு மன்னனை வென்று சிறை பிடித்த களம் திருப்பேர்ப் புறமாகும். எனவே, சைவ, வைணவக் கோயில்களை யுடைமையால் சிறப்புற்ற திருப்பேர் என்ற ஊர் சரித்திர சம்பந்தமும் உடையதென்று தெரிகின்றது.

சாத்தங்குடி

திருவாரூர்த் திருத்தாண்டகத்தில் சாத்தங்குடியிற் காட்சி தரும் ஈசன் பெருமை பேசப்படுகின்றது.

“எல்லோரும் சாத்தங் குடியிற்காண இறைப்பொழுதில் திருவாரூர்ப் புக்கார் தாமே”

என்பது திருநாவுக்கரசர் பாட்டு. இப் பாசுரத்திற் குறித்த சாத்தங்குடி, பாடல் பெற்ற திருப்புன்கூருக்கு ஒன்றரை மைல் தூரத்தில் உள்ளது. தனிச் சாத்தங்குடி என்று திருநாவுக்கரசர் குறித்தவாறே இன்றும் அவ்வூர் முற்றும் கோயிலுக்கே உரியதாக உள்ளது.22

உருத்திரகோடி

திருக்கழுக் குன்றத்தின் அடிவாரத்தி லுள்ள சங்கு தீர்த்தம் என்னும் திருக்குளத்திற்குத் தென் கிழக்கில் உருத்திர கோடீச்சுரம் உள்ளது.

கொண்டல்

“கொண்டல் நாட்டுக் கொண்டல்” ஈசன் கோயில் கொண்ட இடம் என்பது சுந்தரர் தேவாரத்தால் அறியப்படும். சீர்காழிக்கு மேற்கே மூன்று மைல் தூரத்தில் உள்ள கொண்டல் வண்ணன் குடியே இப் பதி என்பர். கொண்டல் வண்ணனாகிய திருமால் விரும்பிய வண்ணம் ஈசன் எழுந்தருளி, முருக வேளால் சிறையிடப்பட்ட பிரமதேவனை விடுவித்த பெருமையை அவ்வூர்ப் பெயர் உணர்த்தும் என்பது புராணக் கொள்கை இதற்கேற்ப அங்கு முருகப்பெருமான் இன்றும் சிறப்பாக வழிபடப் பெறுகின்றார். பிரமதேவனை விடுவித்த பின்னர், தாரக மந்திரமாகிய பிரணவத்தின் பொருளை முருகன் வாயிலாகக் கேட்டு மகிழ்ந்தமையால் தாரக பரமேகரம் என்னும் நாமம் அங்குள்ள ஈசனுக்கு அமைந்தது. ஆலயத்தின் ஒரு புறம் திருமாலின் திருவுருவம் காணப்படுகின்றது. இங்ஙனம் கந்தனார் தந்தையார் விரும்பியுறையும் இடம் இப்பொழுது கொண்டல் வள்ளுவக்குடி என்னும் பெயரால் வழங்குகின்றது.

மிழலை

மூவர் தேவாரமும் பெற்ற மூதூர்களில் ஒன்று திருவிழிமிழலை. இவ்வூர் வெண்ணி நாட்டில் உள்ளதென்று சாசனம் கூறும். மாதொரு பாகற்குரிய மற்றொரு மிழலையும் உண்டு என்று சுந்தரர் அருளிப் போந்தார். அது “மிழலை நாட்டு மிழலை" யாகும். மிழலை நாடெனப்படுவது மாயவரத்திற்கு அண்மையில் அமைந்ததாகும். அப் பகுதியில் மாயவரத்திற்கு மேற்கே பன்னிரண்டு மைல் தூரத்தில் பாழடைந்த ஊராக இம்மிழலை காணப்படுகின்றது.

நாங்கூர்

நாங்கூர் நாட்டு நாங்கூர் நாதன் உறையும் இடம் என்றார் சுந்தரர். இத்தலம் சீர்காழிக் கருகேயுள்ள திருநாங்கூர் - ஆகும். இவ்வூரிலுள்ள சிவாலயம் பழுதுற்றிருப்பதாகத் தெரிகின்றது. சிதம்பரத்தில் நடம் புரியும் இறைவன்மீது திருஇசைப்பாவும் பல்லாண்டும் பாடிய சேந்தனார் பிறந்த ஊர் திரு நாங்கூரே. புரிசை

புரிசை நாட்டுப் புரிசையும் இறைவன் உறையும் இடங்களுள் ஒன்றென்று குறித்தார் சுந்தரர். காஞ்சிபுர வட்டத்தில் உள்ள புரிசை என்னும் பதி சாலப் பழமை வாய்ந்ததாகும்.மணவிற் கோட்டத்தி லுள்ள புரிசை நாட்டுப் புரிசை என்று சாசனம் இவ்வூரைக் குறிக்கின்றது.23 திருப்படக் காடு என்னும் பெயரால் விளங்கிய புரிசைக் கோயில் தமிழரசரது ஆதரவைப் பெற்றிருந்தது. ஆதலால், புரிசையில் அமர்ந்த படக் காடுடைய பரம னையே சுந்தரர் குறித்தார் என்று கருதுதல் பொருந்தும்.

பழையனூர்

‘தொண்டை நன்னாடு சான்றேர் உடைத்து' என்னும் வாய்மொழிக்குச் சான்றாக நிற்பது பழையனுர் ஆகும். இச்சிற்றூரில் வாழ்ந்த வேளாளர் எழுபதின்மரும் வழிப்போக்கனாகிய வணிகன் ஒருவனுக்குக் கொடுத்த வாக்குப் பிழையாமல் தீப்பாய்ந்து உயிர் துறந்த சீலம் தமிழ் நாட்டில் நெடுங்கதையாக நிலவுகின்றது. திருவாலங் காட்டுக்கும் பழையனுருக்கும் இடையேயுள்ள குட்டைக் கரையில் காணப்படுகின்ற சதுரக் கோயிலிலே செதுக்கப்பட்டுள்ள உருவங்கள், அச்சத்திய சீலரின் ஞாபகச் சின்னம் என்று சொல்லப்படுகின்றன. பழனையென்று திருநாவுக்கரசர் பாசுரத்திற் குறிக்கப்பட்ட பழையனுரில் கொழுந்தீசர் கோயில் என்னும் பழமையான ஆலயம் உள்ளது. ஊருக்குக் கிழக்கே கைலாச நாதர் கோயிலும் உண்டு. ஆதலால், திருவாலங் காட்டுக்கு அணித்தாகவுள்ள பழையனுரும் வைப்புத் தலங்களுள் ஒன்றாகும். புலிவலம்

இன்னும் திருக்கயிலாச நாதர் காட்சி தரும் இடங்களைத் தொகுத்துக் கூறும் திருப்பாசுரத்தில்,

“புலிவலம் புத்துர் புகலூர் புன்கூர்
புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்”

என்று எடுத்துப் பாடலுற்றார் திருநாவுக்கரசர். இவற்றுள் புலிவலமும், பொய்கை நல்லூரும் வைப்புத் தலங்களாகும். செங்கற்பட்டு நாட்டிலுள்ள மதுராந்தக வட்டத்தில் உத்தரமேரூரின் அருகே திருப் புலிவனம் என்ற ஊர் உண்டு. அங்குள்ள பழமையான சிவாலயத்திற்குப் பராந்தக சோழன் முதலாய சிறந்த மன்னர் விட்ட நிவந்தங்கள் உத்தர மேரூர்ச் சாசனங்களிற் குறிக்கப்படுகின்றன. அவற்றில் அப்பதி திருப்புலிவல்ம் என்று காணப்படுதலால், திருநாவுக்கரசர் குறித்த தலம் அதுவே என்று கொள்ளுதல் கூடும்.

பொய்கைநல்லூர்

தொண்டை நாட்டுத் தாமற் கோட்டத்தில் பொய்கை நல்லூர் என்ற பழமையான ஊர் உள்ளது. அவ்வூரில் அமைந்த அகத்தீச்சுரம் என்னும் பொய்கைநல்லூர் சிவாலயத்திற்கு வயிர மேக வர்மன் வழங்கிய நிவந்தம் ஒரு சாசனத்திற் குறிக்கப்படுகின்றது. தேவார வைப்புத் தலங்களுள் ஒன்றாகிய இப் பொய்கைநல்லூர் இப்போது அரக்கோண வட்டத்திற் காணப்படும்.25

திருக்காரிக்கரை

தொண்டை நாட்டுத் தலங்களை வழிபட்ட திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் காளத்திநாதனைக் காணச் செல்லும் வழியில் திருக்காரிக் கரையைத் தொழுதார் என்று இருவர் வரலாறும் கூறுகின்றன. எனவே, திருக்காரிக்கரை தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்றென்பது தெளிவாகும்.

அத்தலம் தொண்டை நாட்டுக் குன்றவர்த்தனக் கோட்டத்தில் உள்ளதென்று கல்வெட்டுக் கூறுகின்றது. “குன்ற வர்த்தனக் கோட்டத்து நடுவில் மலையிலுள்ள திருக் காரிக்கரை யுடையார்” என்பது சாசனத் தொடர்.26 எனவே, காரிக்கரை என்பது திருக்கோயிலின் பெயராகத் தெரிகின்றது. இராஜராஜன் முதலாய பெருஞ்சோழ மன்னர்கள் அக்கோயிலுக்கு அளித்த நிவந்தங்கள் கல்வெட்டிற் காணப்படும்.இந்நாளில் செங்கற்பட்டு நாட்டில் பொன்னேரி வட்டத்தில் ராமகிரி என்னும் பெயரால் அத்தலம் விளங்கு கின்றது.

திரிப்புராந்தகம்

தொண்டை நாட்டு மணவிற் கோட்டத்தில் அமைந்த கூகம் என்னும் ஊர் மிகப் பழமை வாய்ந்தது. திருஞான சம்பந்தரால் பாடப் பெற்ற திருவிற் , கோலமுடையார் அமர்ந்தருளும் பதி இப்பதியே. கோலத்தில் ஈசன் விளங்குமிடம் திருவிற் கோலம் என்பர்.27 திருவிற்கோலமுடையாரது ஆலயம் திரிபுராந்தகம் என்று பெயர் பெற்றது. இன்றும், திரிபுராந்தகம் என்பதே அங்குள்ள இறைவன் திருநாமம். இவ்வூர் மதுராந்தக நல்லூர் என்றும், தியாக சமுத்திர நல்லூர் என்றும் சாசனங்களிற் பேசப்படுகின்றது.

அடிக் குறிப்பு

1. 252 of 1909, 248 of 1909, அச் சிவாலயம் பிரமீஸ்வரம் என்று பெயர் பெற்றுள்ளது.

2. “உய்யக்கொண்டார் வளநாட்டுப் பேராவூர் நாட்டுத் திருவாவடுதுறை யுடையார்” என்பது சாசனத் தொடர். பேராவூர்ச் சபையார் விற்றுக் கொடுத்த நிலவிலை ஆவணம் இச் சாசனம் (109 of 1925).

3. 364 of 1925.

4. 33 of 1910.

5.S.I.I Vol. H. 345, 336.

6. 513 of 1921.

7. மீ. ச. முதற் பாகம், ப. 218.

8.“அற்றை நாள்இர வப்பதி யின்னிடைச்
சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிடப்
பெற்றம் ஊர்ந்த பிரான்கழல் பேணுவார்
வெற்றி மாதவத் தோருடன் மேவினார்”

என்றார் சேக்கிழார்.

9, 221 of 1929

10. ஆனந்த தாண்டவபுரம் இருப்புப் பாதை நிலையத்திலிருந்து ஊருக்குள் கிழக்கே கால் நாழிகை தொலைவில் பழைய சிவாலயம் ஒன்று உண்டு. இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுவாமி பெயர் பஞ்சவடீசுவரர். இதுவே வைப்புத் தலம் என்பார், C. K. சுப்பிரமணிய முதலியார்.

(திருத்தொண்டர் புராண உரை, பக். 1161, 1427)

11. M. E. R., 1937-38.

12. திருஞான சம்பந்தர் புராணம், 486, 487.

13. “இன்னிசைத் தமிழ் புனைந்திறைவர் சேலூருடன் பன்னுபாலைத் துறைப் பதிபணிந் தேகினார்”

14. இவ்வூர், கோயில் தேவராயன் பேட்டை எனவும் வழங்கும். பண்டார வாடைக்கு அருகேயுள்ளது. இதற்கு ஒரு மைல் தூரத்தில் ராஜகிரி என்னும் ராஜகேசரி சதுர்வேதி மங்கலம் அம்ைந் திருக்கின்றது.

15. A. R. E., 1923 P. 99. 16. சேல்-கெண்டை மீன்.

17. 492 of 1912.

18. 531 of 1912.

19. ஊற்றத்தூர் என்னும் ஊர்ப்பெயர் ஊறை எனவும் குறுகி வழங்கும். இவ்வூரைத் தலைநகராகக் கொண்ட நாடு ஊறை நாடு எனப்பட்டது. ஊறைப் பதிற்றுப்பத் தந்தாதி” என்னும் பெயரால் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பாடிய பிரபந்தம் ஊற்றத்துரைப் பற்றியதாகும். (மீ. ச. முதற்பாகம், 22.)

20. S. I. I., Vol., IV. PP. 307-08.

21. ஆராய்ச்சித் தொகுதி, ப. 245.

22. அங்குள்ள ஈசன் விசுவநாதர் என்றும், அம்பிகை விசாலாட்சி என்றும், தீர்த்தம் சிவகங்கை என்றும் வழங்குதலால் பண்டைச் சைவர்கள் காசியின் செம்மையை இத்தலத்திற் கண்டனர் என்று கூறுவர்.

23. 252 of 1910.

24, 87 of 1898.

25. Pallavas, P. 144.

26. 646 of 1904.

27.“சிற்றிடை உமையொரு பங்கன் அங்கையில்
உற்றதோர் எரியினன் ஒருச ரத்தினால் வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச் செற்றவன் உறைவிடம் திருவிற் கோலமே"

- என்பது திருஞான சம்பந்தர் தேவாரம்.

இறையும் அறமும்

சிவபாத சேகர நல்லூரும் மங்கலமும்

சைவ சமயத்தைச் சார்ந்த பெரு மன்னர்கள் தமிழ் நாட்டில் அரசு வீற்றிருந்தபோது சிவம் மணக்கும் சொற்களை ஊர்ப் பெயராக்கினார்கள். சிவபாத சேகரன் என்னும் சிறப்புப் பெயர் பூண்ட இராஜராஜன் உண்டாக்கிய சிவபாத சேகரபுரம் இப்பொழுது சிவாயம் என வழங்குதலை முன்னரே கண்டோம்.அம்மன்னன் பாண்டி நாட்டில் திருநெல்வேலிக்கு மேற்கேயுள்ள கல்லூரில் சில நிலத்திற்குச் சிவபாத சேகர நல்லூர் என்று பெயரிட்டு, அதனைச் சேரவன் மாதேவிக் கயிலாச நாதர் கோயிலுக்கு தேவதானமாக விட்ட செய்தி சாசனத்தால் விளங்குகின்றது.1 இன்னும் சிவபாத சேகர மங்கலம் என்ற ஊர் திருக்கடவூர்க் கோயிற் சாசனத்தில் குறிக்கப் படுகின்றது.2 ஆகவே, சிவபாதசேகரன் பெயரால் அமைந்த புரமும், நல்லூரும், மங்கலமும் தமிழ் நாட்டில் சைவ சமயத்தின் பெருமையை விளக்கி நின்றன.3

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம் என்பது சைவ சமயத்தார் போற்றும் செம்மை சேர் நாமம். தில்லை மன்றத்தின் பெயராகிய திருச்சிற்றம்பலத்தின் பெருமை தமிழக முழுவதும் பரவி நின்றது. தேவாரப் பாமாலை பெற்ற திருச்சிற்றேமம் என்னும் சிவாலயம் திருச்சிற்றம்பலம் என மாறி வழங்கலாயிற்று.4 குலோத்துங்க திருநீற்றுச் சோழ நல்லூர்

சோழன் திருச்சிற்றம்பல நல்லூர் என்ற ஊரை இறையிலி யாக்கித் திருப்பாலைத் துறையுடையார்க்குத் தேவதானமாக அளித்தான் என்று சாசனம் கூறும்.5

“மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு” என்று திருஞான சம்பந்தர் பாடியருளிய திருநீறு சைவர்கள் அணிந்து போற்றும் சிவ சின்னமாகும். சைவப் பெருமன்னர் இருவர் தம்மைத் திருநீற்றுச் சோழன் என்று கூறிக்கொள்ள ஆசைப்பட்டார்கள். அவருள் ஒருவன் முதற் குலோத்துங்க சோழன். அம்மன்னன் செங்கற்பட்டைச் சேர்ந்த முன்னலூர் என்னும் ஊருக்குத் திருநீற்றுச் சோழ நல்லூர் என்று பெயரிட்டு, அதனைத் திருசூலத்திலுள்ள சிவாலயத்திற்கு நன்கொடையாக வழங்கினான் என்று ஒரு சாசனம் கூறும்.6

இரண்டாம் குலோத்துங்க சோழனும் திருநீற்றுச் சோழன் என்னும் விருதுப் பெயர் பூண்டான். அவன் செங்கற்பட்டைச் சேர்ந்த களத்தூரில் உள்ள திரு ஆலக் கோயில் என்னும் சிவாலயத்திற்குக் குலோத்துங்க சோழன் திருநீற்றுச் சோழ நல்லூர் என்ற ஊரைத் தேவ தானமாகக் கொடுத்தான்.7

இன்னும், தஞ்சை நாட்டில் திருக்கண்ணபுரத்துக்கு அண்மையில் திருநீற்றுச் சோழபுரம் என்ற ஊர் இருந்ததாகத் தெரிகின்றது.8 சிதம்பரக் கோயிற் சாசனத்தில் திருநீற்றுச் சோழ மங்கலம் குறிக்கப்படுகின்றது.9 இன்னும், திருநீறு என்னும் பெயருடைய ஊர் ஒன்று திருப்பாசூர்ச் சாசனத்திற் கூறப்பட்டுள்ளது. திருநீறு என்ற ஊரில் வாழ்ந்த வணிகர், மற்றும் ஒன்பதுார் வணிகருடன் சேர்ந்து, ஓர் ஊரை விலைக்கு வாங்கித் திருப்பாசூர்க் கோயிலுக்குத் தேவதானமாக வழங்கிய செய்தியைக் கூறுவது அச்சாசனம்.10

திருத்தொண்டத்தொகை மங்கலம்

திருத்தொண்டத் தொகை என்பது திருத்தொண்டர் களாகிய சிவனடியாரின் செம்மையைப் போற்றும் தேவாரத் திருப்பதிகம்.“தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்றெடுத்துச் சுந்தரர் பாடிய அப்பதிகமே திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்திற்கு அடிப்படை யாயிற்று.இத்தகைய திருத் தொண்டத்தொகையில் ஈடுபட்ட சைவ மன்னர் அப்பெயரைச் சில ஊர் களுக்கு இட்டார்கள். திருக்கடவூர் மயானத்துச் சிவாலயத்தில் உள்ள சாசனத்தில் திருத் தொண்டத் தொகை மங்கலம் என்ற ஊர் குறிக்கப்பட்டுள்ளது.11

தேவதானம்

திருக்கோயிலுக்கு அரசர் இறையிலியாக விட்ட நிலங்களும், ஊர்களும் தேவதானம் எனப்பட்டன. இத்தகைய தானம் தமிழ் நாட்டிற் சிறந்திருந்த தென்பது சாசனங்களாலும் ஊர்ப் பெயர்களாலும் அறியப்படும்.செங்கற்பட்டுப் பொன்னேரி வட்டத்தில் தேவதானம் என்னும் ஊர் உண்டு. தஞ்சை நாட்டு மன்னார்குடி வட்டத்தில் மற்றொரு தேவதானம் உள்ளது. இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீவில்லி புத்துர் வட்டத்தில் இன்னொரு தேவதானம் இருக்கின்றது. மதுரை நாட்டுப் பெரியகுள வட்டத்தில் தேவதானப் பட்டி என்பது ஓர் ஊரின் பெயர். மங்கலம்

நன்மையானவற்றை யெல்லாம் மங்கலம் என்னும் சொல் குறிப்பதாகும். தமிழ்நாட்டில் பல ஊர்ப் பெயர்களில் மங்கலச் சொல் அமைந்திருக்கக் காணலாம். தேவாரப் பாடல் பெற்ற ஊர்களில் ஒன்று திருமங்கலக்குடி. காவிரியாற்றின் வட கரையில், வளமெலாம் வாய்ந்து விளங்கிய அப்பதியைச் "செல்வம் மல்கு திருமங்கலக்குடி” என்று திருநாவுக்கரசர் பாடினார்.

மங்கை

மங்கலம் என்பது மங்கை எனவும் குறுகி வழங்கும். திருவாசகம் பெற்ற பட்ட மங்கையும்,12 தேவாரம் பெற்ற சாத்த மங்கை, புள்ள மங்கை, விசய மங்கை என்னும் ஊர்களும், திரு வாய்மொழி பெற்ற வரகுண மங்கையும் இதற்குச் சான்றாகும்.

பிற்காலத்தில் தமிழ் மன்னர்கள் உண்டாக்கிய ஊர்களில் மங்கலப் பேர் இடம் பெற்றது. தஞ்சை நாட்டு மாயவர வட்டத்தில் உள்ள திருமங்கலம் இராஜராஜனால் உண்டாக்கப் பட்டதாகும்.13 பாண்டி நாட்டுத் திருமங்கல வட்டத்திலுள்ள விக்கிர மங்கலம், விக்கிரம சோழபுரம் என்று சாசனத்தில் வழங்குகின்றது.14 இன்னோரன்ன மங்கலங்கள் தமிழகத்தில் பல உண்டு.

சதுர்வேதி மங்கலம்

வேதம் நான்கையும் கற்றுணர்ந்த வேதியர்க்கு விடப் பட்ட ஊர் சதுர்வேதி மங்கலம் என்று பெயர் பெற்றது. தமிழ் நாட்டு மன்னரும் அவர் தேவியரும் உண்டாக்கிய சதுர்வேதி மங்கலங்கள் பலவாகும். மதுராந்தகன், சோழாந்தகன் முதலிய விருதுப் பெயர்களோடு இணைந்த சதுர்வேதி மங்கலம் சோழ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் உள்ளன. செங்கற்பட்டைச் சேர்ந்த மதுராந்தகம் என்னும் ஊர் மதுராந்தகன் நிறுவிய சதுர்வேதி மங்கலம், அவ் வண்ணமே மதுரைக் கருகேயுள்ள சோழ வந்தான் என்ற ஊர் சோழாந்தகனால் உண்டாக்கப்பட்ட சதுர்வேதி மங்கலம்.

தஞ்சை நாட்டு மன்னார்குடி வட்டத்தில் பெரு வளந்தான் என்னும் ஊர் உள்ளது. பெரு வாழ்வு தந்த பெருமாள் சதுர்வேதி மங்கலம் என்பது அதன் முழுப் பெயராகும்.15

பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த செம்பி நாட்டில் வீரநாரா யண சதுர்வேதிமங்கலம் என்னும் ஊர் விளங்கிற்று. திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ் பாடிப் பெருமை யுற்ற பகழிக் கூத்தர் அவ்வூரிலே பிறந்தவர். “செம்பி நாட்டு வீர நாராயணச் சதுர்வேதி மங்கலம் விளங்க வந்தவர்”16 என்று சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன்று கூறுதலால் இவ்வுண்மை விளங்கும். சன்னாசி கிராமம் என்று அவ்வூர் இந்நாளில் வழங்கும். -

வட ஆர்க்காட்டுப் போனார் வட்டத்தில் மகாதேவ மங்கலம் என்னும் ஊர் ஒன்று உள்ளது. அதன் பழம் பெயர் மகாதேவி மங்கலம் என்பதாகும்.17 செங்கற்பட்டில் உள்ள மணிமங்கலம் என்ற ஊர் இராஜராஜன் தேவியாகிய உலக மாதேவியின் பெயரால் அமைந்த சதுர்வேதி மங்கலம்.18

தஞ்சை வட்டத்தில் மன்னார் சமுத்திரம் என்னும் மறு பெயருடைய செந்தலை என்ற ஊர் உள்ளது. சந்திரலேகை சதுர்வேதி மங்கலம் என முற்காலத்தில் வழங்கிய பெயரே பிற்காலத்தில் செந்தலை யெனச் சிதைந்தது.19

வட ஆர்க்காட்டில் தீன சிந்தாமணியின் பெயர் கொண்ட சதுர்வேதி மங்கலம் ஒன்றுண்டு. தீன சிந்தாமணி என்பது முதற் குலோத்துங்கனுடைய தேவியின் பெயராதலால், அவ்வூர் அவரால் உண்டாக்கப்பட்டதென்று கொள்ளலாகும்.20 கடைக்கோட்டுப் பிரம தேசம் என்பது அதன் மறு பெயராகச் சாசனத்தில் வழங்குகின்றது. இப்பொழுது பிரமதேசம் என்பது அதன் பெயர்.21

பட்டவிருத்தி

கற்றுயர்ந்த பார்ப்பனர்க்கு இறையிலியாக அரசரால் விடப்படும் நிலம் பட்டவிருத்தி யெனப்படும். பட்ட விருத்தி யென்ற ஊர் ஒன்று மாயவர வட்டத்தில் உள்ளது. பட்ட விருத்தி அய்யம்பாளையம் என்ற ஊர் கோவை நாட்டுக் கோபி வட்டத்தில் உண்டு.

பட்ட மங்கலம்

இன்னும், பட்டமங்கலம் என்னும் பெயருடைய ஊர்கள் தமிழ் நாட்டிற் பலவாகும். பாண்டி நாட்டுத் திருப்பத்தூரில் ஒரு பட்டமங்கலம்; சோழ நாட்டு மாயவரத்தில் மற்றொரு பட்ட மங்கலம், நாகபட்டினத்தில் இன்னொரு பட்ட மங்கலம், இன்னோரன்ன மங்கலம் இன்னும் சிலவுண்டு.

அகரம்

அகரம் என்பது அக்கிரகாரத்தின் குறுக்கம் என்பர்.22 தமிழகத்தில் அகரம் என்னும் பெயருடைய ஊர்கள் பலவுண்டு. தென்னார்க் காட்டிலுள்ள அகரம் ஜனநாத சதுர்வேதி மங்கலம் என்று குறிக்கப் படுதலால், ஜனநாத சோழன் என்னும் இராச ராசன் அதனை அமைத்திருக்கலாம் எனத் தோன்றுகின்றது.23

இராசேந்திரன் என்னும் கங்கை கொண்ட சோழன் தொண்டை நாட்டில் ஓர் அகரம் உண்டாக்கினான்; வானவன் மாதேவி என்னும் தன் தேவியின் பெயரை அவ்வூருக்கு இட்டான்; வானமங்கை என்று வழங்கப் பெற்ற அப் பதியில் பிராமணர்களைக் குடியேற்றினான்.24 அங்குக் கைலாச நாதர் கோவிலும் கட்டினான். இங்ஙனம் கங்கை கொண்ட சோழன் கண்ட நகரம் இன்று செங்கற்பட்டில் அகரம் என்னும் பெயரோடு விளங்குகின்றது.25

செங்கற்பட்டு நாட்டுச் செங்கற்பட்டு வட்டத்தில் இரண்டு அகரங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று, வானவன் மாதேவியால் உண்டாக்கப்பட்டது.26 மற்றொன்று, பிற்காலத்தில் திம்மப்ப நாயக்கரால் ஏற்பட்டதென்று சாசனம் தெரிவிக்கின்றது. நெல்லிக் குப்பம் முதலிய மூன்று ஊர்களினின்றும், இரண்டாயிரம் குழி நிலத்தைப் பிரித்தெடுத்து அந் நாயக்கர் உண்டாக்கிய அக்கிர காரம் அகரம் என வழங்கலாயிற்று.27

வட ஆர்க்காட்டில் அக்கிரகாரம் என்றும், அக்கிர காரப்பாளையம் என்றும் இரண்டு. ஊர்கள் உள்ளன. நெல்லை நாட்டில் மேலகரமும், திருச்சி நாட்டில் காட்டகரமும் தென்னார்க்காட்டில் புத்தகரமும், வட ஆர்க்காட்டில் கோட்டகரமும் காணப்படும்.

தானமும் தருமமும்

“பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார எரித்ததும் தர்மம் வளர்த்ததும்”

தானம்

தமிழ் நாட்டார் நன்கறிந்து போற்ற வேண்டும் என்று முறையிட்டார் பாரதியார். அம் மன்னர் அளித்த தான தருமங்கள் சில ஊர்ப் பெயர்களால் இன்றும் அறியக் கூடியன. தஞ்சை நாட்டில் உள்ள அன்னதானபுரம், தருமதானபுரம், மகாதானபுரம், உத்தமதானபுரம் முதலிய ஊர்கள் முற்காலத்தில் அற நிலையங்களாக விளங்கின என்பதற்கு அவற்றின் பெயர்களே சான்றாகும்.

தருமம்

இன்னும், அறஞ் செய விரும்பிய அரசரும் செல்வரும் பலவிடங்களில் சத்திரமும், சாவடியும், விடுதியும் அமைத்தார்கள். அவற்றின் பெயர்கள் இப்பொழுது ஊர்ப் பெயர்களாக வழங்குகின்றன. நெல்லை நாட்டிலுள்ள பாவூர்ச் சத்திரமும், திருச்சி நாட்டிலுள்ள செட்டி சத்திரமும், அம்மா சத்திரமும், தர்மசாலையால் பெயர் பெற்ற ஊர்கள் என்பது வெளிப்படை. செட்டி சாவடி, குறும்பன் சாவடி, சத்திரச் சாவடி முதலிய ஊர்ப் பெயர்கள் சாவடி யமைந்திருந்த இடங்களைக் காட்டுகின்றன. தஞ்சை நாட்டிலுள்ள சென்னியவிடுதியும், திருச்சி நாட்டிலுள்ள பால விடுதியும், வழிப்போக்கர் தங்குமிடங்களை உடையனவாயிருந்தன, என்று கூறலாம். சத்திரம், விடுதி முதலிய அறநிலையங்களைப் பேணி வளர்ப்பதற்கு விடப்பட்ட நிலம் சாலாபோகம் எனப்படும். தஞ்சை நாட்டில் சாலாபோகம் என்பது ஓர் ஊரின் பெயர். இங்ஙனம் அற நிலையங்களை மன்னரும் செல்வரும் ஆதரித்தமையால் தமிழ் நாடு, அறம் வளரும் திரு நாடாய்த் திகழ்ந்தது.

அடிக் குறிப்பு

1. 612 of 1916.

2. 642 of 1916.

3. சாமந்தருள் ஒருவனாகிய சோழகங்க தேவன் அரசனிட மிருந்து பெற்ற ஐந்து வேலி நிலத்திற்குச் சிவபாத சேகர மங்கலம் என்று பெயரிட்டுத் திருச்சிற்றம்பல முடையார்க்கு நிவந்தமாக விட்ட செய்தி சாசனத்தால் அறியப்படும். 185 of 1929.

4. M. E. R., 1925 - 26, 189 of 1926.

5. 434 of 1912.

6. 312 of 1901.

7, 363 of 1911

8. 505 of 1922.

9, 280 of 1913,

10. 120 of 1930. Cholas Vol.II. p. 418.

11. 54 of 1906. -

12. “பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங்(கு)

அட்டமா சித்தி அருளிய அதுவும்”

- கீர்த்தித் திருவகவல், 62-63

13. M. E. R., 1926-27.

14. I. M. P., p. 1039.

15, 193 of 1908,






16. பெருந்தொகை, 1665.

17. M. E. R., 1933 - 34.

18.144 of 1919.

19.L. M. P., PP. 1398-1400

20.671 of 1919.

21. 271 of 1915.

22. எனினும், வேளாளர் அகரம் என்பது தஞ்சை நாட்டு மாயவர வட்டத்தில் உள்ளது.

23.326 of 1922.

24.232 of 1931.

25.Cholas. Vol. I, p. 549.

26.M. E. R., 1930 - 31.

27.M. E. R., 1934 - 35.

திருமாலும் திருப்பதிகளும்

      தொன்று தொட்டுத் தமிழ் நாட்டார் வழிபடும் தெய்வமாகிய திருமாலின் திருக்கோலம், பண்டை இலக்கியங்களிலும் திருப்பாசுரங்களிலும் அழகுற எழுதிக் காட்டப்படுகின்றது. திருவேங்கடம் என்னும் திருப்பதி மலையில்,

“நன்னிற மேகம் நின்றது போலச்
செங்கண் நெடியோன் நின்ற வண்ணம்”

சிலப்பதிகாரத்தில் இலங்குவதாகும். அவர் நின்றருளும் நீர்மையால் அம் மலை “நெடியோன் குன்றம்” என்னும் பெயர் பெற்றது.

இருதிருப்பதிகள்

திரு அரங்கத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகின்றார் திருமால். திருவரங்கம் என்றும், ஶ்ரீரரங்கம் என்றும் வழங்கும் அப் பதியே வைணவர்களால் கோயில் என்றும், பெரிய கோயில் என்றும் கொண்டாடப்பெறும். திருவேங்கடமும் திருவரங்கமும் வைணவ உலகத்தின் இரு கண்களாக விளங்குகின்றன.

திருமால் நின்றும், இருந்தும், பள்ளிகொண்டும் அடியார்க்குச் சேவை சாதிக்கின்றார். தென்பாண்டி நாட்டில் இம் மூன்று திருக் கோலத்தையும் மூன்று திருப்பதிகளிற் கண்டு போற்றினார் நம்மாழ்வார்.

பாண்டித் திருப்பதிகள்

“புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கை இருந்து
வைகுந்தத்துள் நின்று”

அருள்கின்றார் திருமால் என்பது அவர் திருவாய் மொழி.' இருந்தையூர்

இத் தகைய திருக்கோலங்களால் எழுந்த ஊர்ப் பெயர்களும் தமிழ் நாட்டில் உண்டு. பாண்டி நாட்டில் வைகை யாற்றின் கரையில் அழகராகிய பெருமாள் இருந்தருளும் கோலம் பரிபாடலால் விளங்குவதாகும்.

“மருந்தாகும் தீநீர் மலிதுறை
மேய இருந்தையூர் அமர்ந்த செல்வ”

என்று திருமாலின் இருந்த திருக்கோலம் குறிக்கப்படுகின்றது. இவ்வண்ணம் பெருமாள் காட்சியளித்த இடம் “இருந்த வளம்” என்று பெயர் பெற்றது. இருந்தை என்று பாட்டில் வரும் பெயர் இருந்த வளம் என்றதன் குறுக்கம் ஆகும். அப் பெருமாளை இருந்த வளமுடையார் என்று அழைத்தனர் பழந் தமிழ் நாட்டார். இந் நாளில் கூடலழகராக விளங்கும் பெருமாளே இருந்தையூர்ச் செல்வன் என்பர். இருந்தையூர்க் கொற்றன் புலவன் என்பார் பாடிய பாட்டொன்று குறுந்தொகையிலே காணப்படுகின்றது. அப் புலவர் இவ்வூரைச் சேர்ந்தவர் என்று கருதலாகும்.

திரு நின்றவூர்

இன்னும், திருமால் நின்றருளும் கோலத்தைக் காணும் பேறு பெற்ற ஊர் ஒன்று நின்றவூர் என்று பெயர் பெற்றது. பாடல் பெற்ற திருப்பதிகளுள் அதுவும் ஒன்று. “கருமுகிலை எம்மான் தன்னை, நின்றவூர் நித்திலத்தை” என்று அங்குள்ள பெருமாளைப் பாடினார் திருமங்கை யாழ்வார். திரு நின்றவூர் என்னும் அருமைத் திருப் பெயர் இப்பொழுது தின்னனூர் என மருவி வழங்குகின்றது. சலசயனம்

மகாபலிபுரத்தில் திருமால் பள்ளிகொண்ட கோலத்தில் விளங்குகின்றார். அவ்வூர்க் கடற்கரைக் கோவிலிற் கண்ட சாசனம் ‘ஜலசயனம்’ என்று அக் கோயிலைக் குறிக்கின்றது. ஜலசயனத்துப் பள்ளி கொண்டருளிய தேவர் என்று அச் சாசனம் கூறுதலால் கடலருகேயிருந்த திருமால் கோவில் அப் பெயரால் வழங்கிற் றென்று தெரியலாம்.

தலசயனம்

இனி, திருமால் பள்ளிகொண்ட கோலத்தில் உள்ள மற்றொரு கோயிலும் மகாபலிபுரத்தில் உண்டு. அது நகரினுள்ளே காணப்படுகின்றது. அதன் பழமை அங்குள்ள கல்வெட்டுக்களால் விளங்குவதாகும். தல சயனம் என்பது அதன் பெயர். எனவே, மகாபலிபுரத்தில் சலசயனம், தலசயனம் என்ற கோயில்கள் பழமையாகவே சிறப் புற்றிருந்தன என்பது புலனாகும்.3

திருவலவெந்தை

தலசயனத்தில் பூமி தேவியை வலப்பக்கத்தில் வைத்துத் திருமால் காட்சி தருதலால் திருவல வெந்தை என்னும் பெயர் அவர்க்கு அமைந்தது.

“ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில்கொண்டான்
வானத்தின் அவர்முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள
கானத்தின் கடன்மல்லைத் தலசயனத் துறைகின்ற
ஞானத்தின் ஒளியுருவை நினைவார்என் நாயகமே”

என்று திருமங்கை யாழ்வார் இத் திருக்கோலத்தைப் பாடியருளினார். திருவிடவெந்தை

தொண்டை நாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று திருவிடவெந்தை என்று பெயர் பெற்றது. அங்குள்ள பெருமாள் திருமங்கையாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப் பெற்றவர். எந்தை என்பது அவர் திருநாமம். ஸ்ரீ வராக மூர்த்தி வடிவாகவுள்ள அப் பெருமாள் தமது இடப் பக்கத்தில் பூமி தேவியை ஏந்திய கோலமாகக் காட்சி தருதலால் இட எந்தை எனப் பெயர் பெற்றார் என்பர்.

“அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆலயம் மாயனே அருளால் என்னும்இன் தொண்டர்க் கின்னருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை”

என்று ஆழ்வார் பாடுதலால் அவர் திருநாமம் இட வெந்தை என்பது இனிது விளங்கும். கொங்கு நாட்டில் அவிநாசி யெனும் ஈசன் பெயர் ஊர்ப் பெயராக வழங்குதல் போன்று, இடவெந்தை என அத் தலத்திற்கு வழங்க லாயிற்று. இப்பொழுது மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரத்திற்கு அருகே திருவடந்தை என்ற பெயர் கொண்டு விளங்கும் பதி அதுவே. எனவே, தொண்டை நாட்டில் பூதேவியை வலமும் இடமும் வைத்து, வலவெந்தை யெனவும், இடவெந்தை யெனவும் வணங்கப்பெற்ற திருமால் பெருமை இனிது தோன்றும்.

திருக்கண்ணபுரம்

கண்ணனுக்குரிய திருப்பதிகளுள் விதந்தெடுத்துரைக்கப் படுபவன ஐந்து. அவை “பஞ்ச கிருஷ்ணசேஷத்திரங்கள்” என்று பாராட்டப்படும். தஞ்சை நாட்டு நன்னிலத்துக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ள திருக்கண்ணபுரம் அவற்றுள் ஒன்று. “மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் அரணமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து” ள்ளான் என்று நலமுறப் பாடியருளினார் நம்மாழ்வார். திருமங்கை யாழ்வார் நூறு திருப்பாசுரங்களால் அக் கண்ணபுரப் பெருமாளைப் போற்றினார். “கருவரை போல் நின்றானைக் கண்ணபுரத் தம்மானை” என்று அவர் பாடிய பாசுரத்தால் அப்பதியில் நின்று காட்சி தரும் நெடுமாலின் கோலம் நன்கு விளங்கும்.

திருக்கண்ணன்குடி

தஞ்சை நாட்டு நாகை வட்டத்தில் உள்ளது திருக்கண்ணன்குடி. அங்கு நின்றருளும் திருக்கண்ணனை திருமங்கை யாழ்வார் பாடியுள்ளார்.

“செழுமையார் பொழில்கள் தழுவும் நன்மாடத்
திருக்கண்ணங் குடியுள் நின்றானே”

என்பது அவர் திருவாக்கு.

திருக்கண்ணமங்கை

திருவாரூருக்கு வடமேற்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது திருக்கண்ணமங்கை என்னும் திருப்பதி.

“கன்னலைக் கரும்பி னிடைத்தேறலைக்
கண்ண மங்கையுள் கண்டு கொண் டேனே”

என்று இப் பதியில் நின்றிலங்கும் பக்தவத்சலனைத் திருமங்கை யாழ்வார் பாடித் தொழுதார்.

கபிஸ்தலம்

தஞ்சை நாட்டுப் பாபநாசத்துக்கு அண்மையிலுள்ள கவித்தலத்தைக் ‘கண்ணன் கவித்தலம்’ என்பர். கவிக்குல நாயகனாகிய அனுமனுக்கு அருள் புரிந்த இடமாதலால் அவ்வூர் கவித்தலம் கபிஸ்தலம்-என்று பெயர் பெற்றதாகக் கருதப்படுகின்றது. திருக்கோவலூர்

இனி, ஐந்தாம் கிருஷ்ண சேஷத்திரம் திருக்கோயிலூர் என வழங்கும் திருக்கோவலூர் ஆகும். வட மொழியில் அவ்வூர் கோபாலபுரம் எனப்படும். கோபாலனாகிய திருமால் எழுந்தருளி யிருக்கும் தலமாதலால் அதற்குக் கோவலூர் என்னும் பெயர் அமைந்த தென்பர். அது கோவல் எனவும் முன்னாளில் வழங்கிற்று.

கண்ணனூர்

இன்னும், கண்ணன் பெயரால் எழுந்த ஊர் திருச்சி நாட்டு முசிரி வட்டத்தில் உண்டு. கண்ணனூர் என வழங்கும் அவ்வூரில் அழகப் பெருமாள் கோயில் விளங்கு கின்றது.

விண்ணகரம்

தமிழ் நாட்டில் ஈசனது கோவில் ஈச்சரம் என்று பெயர் பெற்றாற்போன்று, விஷ்ணுவின் கோவில் விஷ்ணுகிரகம் என வழங்கிற்று. அப்பெயர் விண்ணகரம் என்று மருவிற் றென்பர்.5 வைணவ உலகம் தலைக்கொண்டு போற்றும் நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஆறு விண்ணகரங்கள் உள்ளன.

திருவிண்ணகரம்

கும்பகோண்த்திற்கு மூன்று மைல் அளவில் உள்ள திருமால் கோவில் திருவிண்ணகரம் என்று விதந்துரைக்கப்பட்டது.6 ஆழ்வார்களில் நால்வர் அதற்கு மங்களா சாசனம் செய்துள்ளனர்.

“திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன்
தந்தனன் தனதாள் நிழலே"

என்று நம்மாழ்வார் திருவிண்ணகரத்து அப்பனைப் பாடி யருளினார். அவர் திருவாக்கின் அடியாக ஒப்பிலியப்பன் என்னும் திருநாமம் அப் பெருமாளுக்கு அமைந்தது. அது நாளடைவில் உப்பிலியப்பன் என மருவிற்று. அப்பெயருக்கு ஏற்ப உப்பில்லாத நிவேதனம் அந்த அப்பனுக்குச் சிறந்ததாகக் கருதப்படுகின்றது.

சீராம விண்ணகரம்

சீகாழிப் பதியில் உள்ள திருமங்கை யாழ்வாரால் பாடப் பெற்ற பழம் சிராம விண்ணகரம் பதியாகும் பதிகத்தின் முதற் பாசுரத்தில் ஈரடியால் உலகளந்த திருமாலின் பெருமையைப் பாடினார் அவ்வாழ்வார்.

“ஒருகுறளாய் இருநிலம் மூவடிமண் வேண்டி
உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் தருகளினா மாவலியைச் சிறையில் வைத்த
தாடாளன் தாளணைவீர்”

என்றெழுந்த திருவாக்கின் மகிமையால் 'தாடாளன் கோயில்' என்னும் பெயர் அவ்விண்ணகர்க்கு இன்று வழங்கி வருகின்றது.

வைகுந்த விண்ணகரம் அரிமேய விண்ணகரம்

தஞ்சை நாட்டுச் சீகாழி வட்டத்திலுள்ள பதினொரு திவ்ய தேசமும் திருநாங்கூர்த் திருப்பதிகள் என்று வைணவ உலகத்தில் வழங்கப் பெறும். அவற்றுள் இரண்டு, விண்ண கரங்கள் ஆகும். வைகுந்த விண்ணகரம் ஒன்று, அரிமேய விண்ணகரம் விண்ணகரம் மற்றொன்று. “மாறாத பெருஞ் செல்வம் வளரும் மணி நாங்கூர், வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே" என்றும், “அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர், அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே" என்றும் அவற்றைத் திருமங்கை யாழ்வார் பாடியருளினார்.

மணிமாடக்கோயில் செம்பொன் செய்கோயில்

இன்னும், மணிமாடக் கோயில், செம்பொன் செய்கோயில் என்னும் இரண்டும் திருநாங்கூர்த் திருப்பதிகளாகும். மணிமாடக் கோயிலில் அமர்ந்த பெருமானை “நந்தாவிளக்கே நாநாரணனே” என்று ஆழ்வார் ஆதரித்து அழைத்து மங்களா சாசனம் செய்தமையால் அத்திரு நாமம் இரண்டும் அவர்க்கு அமைந்துள்ளன. செம்பொன் செய்கோயிலில் திருமாலின் நின்ற திருக்கோலம் விளங்குகின்றது. அதனைக் கண்களிப்பக் கண்ட ஆழ்வார், “செம்பொன் செய் கோயிலின் உள்ளே, உயர்மணி மகுடம் சூடி நின்றானைக் கண்டு கொண்டு உய்ந் தொழிந் தேனே என்று பாடித் தொழுதார்.7

மகேந்திர விண்ணகரம்

தமிழ்நாட்டை யாண்ட மன்னர் தம் பெயரால் அமைத்த விண்ணகரங்கள் பலவாகும். பல்லவ மன்னனாகிய மகேந்திரவர்மன் மகேந்திர புர நகரத்தில் ஒரு குன்றத்தைக் குடைந்து எடுத்து அக் கோவிலுக்கு மகேந்திர விஷ்ணு கிரகம் என்று பெயரிட்டான்.8

பரமேச்சுர விண்ணகரம்

காஞ்சிபுரத்திலுள்ள வைகுந்தப் பெருமாள் கோவில் முன்னாளில் பரமேச்சுர விண்ணகரம் என்னும் பெயரால் விளங்கிற்று. திருமங்கை யாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப் பெற்ற திவ்ய தேசங்களில் ஒன்று அவ்விண்ணகரம்.பரமேச்சுரன்

என்னும் இயற்பெயருடைய இரண்டாம் நந்திவர்மனால் அக்கோயில் கட்டப்பட்டது என்பர்.”9

நந்திபுர விண்ணகரம்

திருமங்கையாழ்வார் பாடிய மற்றொரு விண்ணகரம் கும்பகோணத்திற்குத் தெற்கே நான்கு மைல் துரத்திலுள்ள நந்திபுரம் என்னும் பல்லவ நகரத்தில் அமைந்தது. நந்தி பணி செய்த நகர் நந்திபுர விண்ணகரம்” என்று அவர் பாடும் நந்தி வர்மன் அக்கோவிற் பணியில் ஈடுபட்டிருந்தான் என்பது இனிது விளங்கும். அவ் விண்ணகரப் பெருமாள் ஜெகநாதன் என்னும் திருநாமம் உடையார். நாளடைவில் ஜெகநாதன் கோயிலாகிய விண்ணகரம் நாதன் கோயில் என வழங்கலாயிற்று. அதுவே பின்னர் ஊர்ப் பெயரும் ஆயிற்று.

வீர நாராயண விண்ணகரம்

புதுவை நாட்டில் (புதுச்சேரி) உள்ள திரிபுவனி என்னும் திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலத்தில் வீர நாராயண விண்ணகரம் விளங்கிற் றென்று சாசனம் கூறுகின்றது.10 வீர நாராயணன் என்பது பராந்தக சோழனது வீரநாராயண விருதுப் பெயர்களில் ஒன்று. முதற் விண்ணகரம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருநாராயண பட்டர் என்ற கவிஞர் குலோத்துங்க சோழன் சரிதை என்னும் பெயரால் ஒரு காவியம் இயற்றினார் என்றும், அஃது அரசன் ஆணைப்படி வீரநாராயண விண்ணகரத் திருமுற்றத்தில், ஊர்ச் சபையார் முன்னிலையில் அரங்கேற்றப் பட்டதென்றும், காவியம் பாடிய புலவர்க்குச் சபையார் சம்மானம் அளித்தனர் என்றும் தெரிகின்றன.11 இராசராச விண்ணகரம்

தென்னார்க்காட்டு விழுப்புர வட்டத்தில் உள்ள எண்ணாயிரம் என்னும் ஊரில் இராசராச விண்ணகரம் ஒன்று உள்ளது. அங்குத் திருவாய் மொழி ஒதுதற்காக விட்ட நிவந்தம் சாசனத்தால் விளங்குகின்றது.12

தாராபுரம் என்னும் இராசராச புரத்தில் குந்தவைப் பிராட்டியார் கட்டிய பெருமாள் கோயில் குந்தவை விண்ணகரம் என்று பெயர் பெற்றது.13

இராசேந்திரசோழ விண்ணகரம்

உத்தர மேரூரில் இராசேந்திர சோழ விண்ணகரம் விளங்கிற்று.14 இராசேந்திர சோழ சதுர்வேதி மங்கலம் என்னும் மறுபெயர் பெற்ற உத்தரமேரூரில் கொங்கரையர் ஒருவர் அவ் விண்ணகரத்தைக் கட்டுவித்தார் என்பது கல்வெட் டால் விளங்குகின்றது.15

நெல்லை நாட்டு அம்பா சமுத்திர வட்டத்தில் மன்னார்கோயில் என்ற ஊர் உள்ளது. அழகிய மன்னார் என்னும் திருநாமமுடைய பெருமாள் அங்குக் கோயில் கொண்டிருத்தலால் மன்னார்கோயில் என்று அது பெயர் பெற்ற தென்பர். பிற்காலத்தில் இராஜேந்திர சோழ விண்ணகரம் என்னும் திருக்கோயிலும் அவ்வூரில் எழுந்தது. அக்கோயிலைக் கட்டியவன் இராஜசிம்மன் என்ற சேர மன்னன்.16 அவன் இராஜேந்திரனுக்கு அடங்கி ஆட்சி புரிந்தமையால் சோழ மன்னன் பெயரை அவ்விண்ணகரத்துக்கு அளித்தான் போலும்!

குலோத்துங்கசோழன் விண்ணகரம்

தஞ்சை நாட்டு உடையார் கோயில் என்ற ஊரில் குலோத்துங்க சோழ விண்ணகரம் உள்ளதென்று சாசனம் உணர்த்துகின்றது. அது முதற் குலோத்துங்கனால் கட்டப்பட்டதாகும்.17 திருச்சி நாட்டு உடையார் பாளையத் தில் உள்ள கீழப்பழுவூரில் வீரசோழ விண்ணகரம் விளங்கிற் றென்று சாசனம் கூறும்.18

திருப்பொதியில் விண்ணகரம்

கோவில்குளம் என்பது நெல்லை நாட்டு அம்பாசமுத்திர வட்டத்திலுள்ள ஒரு ஊரின் பெயர். அவ்வூரில் தென்னழகர் என்னும் பெருமாள் கோயில் கொண்டுள்ளார். பழமையான பல வட்டெழுத்துச் சாசனங்கள் அக்கோயிலிற் காணப் படுகின்றன. திருப்பொதியில் என்னும் பெயர் முற் காலத்தில் அதற்கமைந்திருந்த தென்பது அக் கல்வெட்டுக்களால் அறியப்படும்.19 புகழ் வாய்ந்த பொதிய மலையின் அடிவாரத்தில் அமைந்த கோவில், பொதியில் விண்ணகரம் என்று பெயர் பெற்றது மிகப் பொருத்தமாகத் தோன்று கின்றது.அக்கோயிலின் பெருமையாலேயே முன்பு குளம் என்னும் பெயருடையதாயிருந்த ஊர், கோவில் குள மாயிற்று.20

விண்ணபள்ளி

கோவை நாட்டுக் கோபி வட்டத்தில் உள்ள விண்ணபள்ளி யென்னும் ஊர் அங்குக் கோயில் கொண்டுள்ள பெருமாள் பெயராற் பெருமை யுற்றதாகும். ஆதி நாராயணப் பெருமாளின் கோவிலடியாக விண்ணபள்ளி என்ற பெயர் அதற்கு அமைந்தது.21

மாமணிக் கோயில்

திருமால் நீலமேனியன் என்றும், மணிவண்ணன் என்றும் தமிழ் நூல்கள் கூறும். தஞ்சையில் கோயில் கொண்ட திருமாலைத் தஞ்சை மாமணி என்று ஆழ்வார்கள் போற்றினர்.22 அதனால் அத்தலம் தஞ்சை மாமணிக் கோயில் என்னும் திரு நாமம் பெற்றது. நூற்றெட்டுத் திருப்பதி களுள் ஒன்றாகிய மாமணிக் கோயில் தஞ்சாவூருக்கு வடக்கே மூன்று மைல் தூரத்தில் உள்ளது.

“வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை
மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்”

என்ற திருமங்கை யாழ்வார் திருமொழியைப் பெற்றது இத்தலமே யாகும்.

பச்சைப்பெருமாள் கோயில்

திருமால், “பச்சைமா மலைபோல் மேனியர் என்று ஆழ்வார்களால் பாடப்பட்டிருத்தலால் பச்சைப் பெருமாள் எனவும் அவரை வழங்குவர். காஞ்சிபுரத்தில் பச்சை வண்ணர் கோயில் ஒன்று உண்டு. பூவிருந்தவல்லிக்கு மேற்கே பெருமாள் கோயில் என வழங்குவது, பச்சை வண்ணப் பெருமாள் வீற்றிருக்கும் தலமாகும்.

சிங்கப்பெருமாள் கோயில்

சின்னக் காஞ்சிபுரம் என வழங்கும் அத்தியூரில் வேளுக்கை என்னும் திருமால் கோயில் உள்ளது. “மன்னு மதிட்கச்சி வேளுக்கையாளரியை” என்று திருமங்கையாழ்வார் இப்பெருமாளையே பாடினர் என்பர். இன்னும், சிங்கப் பெருமாள் கோயில் என்னும் தலம் செங்கற்பட்டுக்கு வடபால் உள்ளது. சிங்கர் குடி

புதுச்சேரிக்கு தென்மேற்கே ஆறு மைல் தூரத்தில் சிங்கர்குடி என்னும் ஊர் உள்ளது. அங்குப் பழமையான பெருமாள் கோவில் ஒன்று கானப் படுகின்றது. நரசிங்கப் பெருமாள் கோயில் என்பது அதன் பெயர். நரசிங்க மூர்த்தியின் பெயரே ஊருக்கு அமைந்ததாகத் தோற்றுகின்றது. நரசிங்கர் குடி என்பது சிங்கர்குடி என வழங்கலாயிற்று.

சம்பங்கிகுடி

வட ஆர்க்காட்டு வேலூர் வட்டத்திலுள்ள ஊர் ஒன்று சம்பங்கி நல்லூர் என வழங்கப்படுகின்றது. செண்பகப் பெருமாள் நல்லூர் என்னும் பெயரே இங்ஙனம் சிதைந்துள்ள தென்பது கல்வெட்டுக் களால் விளங்கும்.23

சோழிங்கர்

வட ஆர்க்காட்டு வாலாஜா வட்டத்தில் சோழிங்கர் என்ற ஊர் உள்ளது. சோழ சிம்மபுரம் என்னும் பெயரே அவ்வாறு மருவிற்றென்று குரு பரம்பரை கூறும்.24 அவ்வூரிலுள்ள கடிகாசலம் என்ற குன்றின் மீது கோயில் கொண்டுள்ள நரசிங்கப் பெருமாளை பேயாழ்வாரும், திருமங்கை யாழ்வாரும் பாடியுள்ளார்கள்.இந்நாளில் கடிகாசலப் பெருமாள் கோவில் சாலச் சிறப்புற்று விளங்குகின்றது.

திருநாராயணபுரம்

நாராயணன் என்னும் நாமம் பல ஊர்ப் பெயர்களில் விளங்குவதாகும். திருச்சி நாட்டிலுள்ள திரு நாராயணபுரம், அங்குக் கோயில் கொண்டருளும் வேத நாராயணப் பெருமாள் பெயரால் நிலவுகின்றது.25 திருச்சானூர்

கீழைத் திருப்பதிக்கு மூன்று மைல் தூரத்தில், சுவர்ணமுகி யென்னும் பொன் முகலி யாற்றங் கரையில் உள்ளது திருச்சானூர். முன்னாளில் இராசேந்திர மண்டலத்துத் திருவேங்கடக் கோட்டத்தில் குடவூர் நாட்டில் திருச்சானூர் என்னும் சுகனூர் இருந்ததென்று சாசனம் கூறும்.26 திருச்சுகனுரில் இப்பொழுது சிறந்து விளங்குவது அலர்மேல் மங்கையின் கோயிலாகும். ஆயினும், பழங்காலத்தில் திப்பலா தீச்சுரம் என்னும் சிவாலயமும் அங்குச் சிறந்திருந்ததாகத் தெரிகின்றது. திருப்பதி மலையில் கோயில் கொண்டுள்ள வேங்கடாசலபதியின் தேவியாகிய அலர்மேல் மங்கையின் திருக்கோயில் இக் காலத்தில் அங்கு சிறப்புற்று விளங்குதலால் அலர்மேலு மங்கை புரம் என்னும் பெயரும் அதற்குண்டு.

அடிக் குறிப்பு

1. புளிங்குடி, இப்பொழுது திருப்புளியங்குடி என வழங்கும். வைகுந்தம் ஸ்ரீவைகுண்டம் எனப்படும்.

2. ஆராய்ச்சித் தொகுதி, 242.

3. திருமங்கை யாழ்வார் கடல்மல்லையைப்பற்றிப் பாடிய பதிகங்கள் இரண்டனுள் முன் பதிகம், தல சயனத்தைப் பற்றிய தென்றும், கடற்கரைக் கோயிலைப்பற்றிய பின்பதிகம் சலசயனத்தைப் பற்றிய தென்றும் பிற்காலத்தில் இரண்டு பதிகங்களுமே தல சயனத் திருமாலைப் பற்றியனவாகக் கருதப்பட்டுப் பாடமாறலாயின என்றும் ஊகிக்க இடம் ஏற்படுகின்றது என்பர்.

(ஆழ்வார்கள் கால நிலை, ப. 144)

4. M. E. R., 1935-36. 5. தேவலோகம் போன்ற தென்ற காரணம் பற்றி விண்ணதாடு என்னும் பெயர் வந்தது என்பாரும் உளர் - நாலாயிரம், நூற்றெட்டுத் திருப்பதிப் பிரபாவம், 33.

6. திருநாகேச்சுரம் என்னும் சிவாலயமும் திருவிண்ணகரமும் ஒன்றையொன்று அடுத்திருந்தமையால், அவ்வூர் திருவிண்னகர் திருநாகேச்சுரம் என்று முற்காலத்தில் வழங்கிற்று. திரைமூர நாட்டுத் தேவதானமாகிய திருவிண்ணகர் திருநாகேச்சுரம் என்ப்து சாசனம். 218 of 1911, .

7. இன்னும், திருமணிக்கூடமும், தெற்றி யம்பலமும், காவளம் பாடியும், தேவனார் தொகையும், வெள்ளக் குளமும், வண்புருடோத்தமும், பார்த்தன் பள்ளியும் மற்றைய திருநாங்கூர்ப் பதிகள் ஆகும்.

8. Ep. Ind. Vol. IV. p. 125.

9. Pallavas, p. 131.

10, 186 of 1919.

11. 198 of 1919.

12. 333 of 1917.

13. 8 of {9}9.

14. 184 of 1923.

15, 174 of 1923.

16. 112 of 1905.

17. 399 of 1902.

18. S. I. H. Vol. HI. 154.

19. 551 of 1911.

20. 551 of 1911.

21. M. E. R., 1935-36.

22. மா என்பது நீல நிறத்தைக் குறிக்கும். “மாயிரும் பீலி மணி நிற மஞ்ஞை” என்னும் சிலப்பதிகாரத் தொடருக்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார், மா-கருமை என்று கூறுதல் காண்க. மனை யறம் படுத்த காதை, 53.

23/ S. I. I., p. 74.

24. சோழலிங்கபுரம் என்ற பெயரே சோழங்கிபுரம் ஆயிற்றென்றும் கூறுவர். (N. A. Manual. (1, p. 435) அவ்வூரின் நடுவே உள்ள சோழேச்சுரத்தி லுள்ள சுயம்பு லிங்கம் அதற்குச் சான்றாகக் காட்டப்படுகின்றது.

25. இவ்வூர் முசிரி வட்டத்தில் உள்ளது.

26. 265 of 1904,

27. திப்பலாதீஸ்வரர் என்பது தெலுங்கில் குன்றுடையார் (The Lord of the Hills) என்று பொருள்படும் என்பர். இப்பொழுது இக் கோயில் பராசரேஸ்வரர் கோயில் என வழங்கப்படுகிறது.

சமணமும் சாக்கியமும்

எட்டு மலைகள்

முன்னாளில் சமண சமயம் தமிழ் நாட்டில் பல பாகங்களிற் பரவியிருந்ததாகத் தெரிகின்றது. சமண முனிவர்கள் பெரும்பாலும் தலைமை நகரங்களின் அருகே தம் தவச் சாலைகளை அமைத்துச் சமயப்பணியாற்றுவாராயினர். பாண்டி நாட்டில், நெடுமாறன் அரசு புரிந்த ஏழாம் நூற்றாண்டில் சமண மதம் எங்கும் ஆதிக்க முற்றிருந்த பான்மையைப் பெரிய புராணம் குறிப்பிடுகின்றது.1 அக்காலத்தில் மதுரையின் அருகேயுள்ள குன்றுகளைச் சமண முனிவர்கள் தம் உறையுளாகக் கொண்டிருந்தார்கள் என்பது திருஞான சம்பந்தர் தேவாரத்தால் தெரிகின்றது. ஆனை மாமலை ஆதியாய இடங்களில் சமணர் வாழ்ந்தனர் என்று அவர் குறித்தவாறே மற்றொரு பழம் பாட்டும் எட்டு மலைகளை எடுத்துரைக் கின்றது.

“பரங்குன்று ஒருவகம் பப்பாரம் பள்ளி அருங்குன்றம் பேராந்தை ஆனை-இருங்குன்றம் என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச் சென்றெட்டு மோபிறவித் தீங்கு”

என்ற பாட்டிலுள்ள பரங்குன்றம் என்பது மதுரைக்குத் தென் மேற்கிலுள்ள திருப்பரங் குன்றமாகும். ஆனையென்பது வடகிழக்கிலுள்ள ஆனை மலை; இருங்குன்றம் என்பது அழகர் மலை. இவ்வெட்டு . இருந்த சமண முனிவர் எண்ணாயிரவர் என்பர்.3 சிராப்பள்ளி

சோழநாட்டின் தலைநகரமாக விளங்கிய உறையூரின் அருகேயமைந்த சிராப்பள்ளிக் குன்றத் திலும் சமண முனிவர்கள் இருந்ததாகத் தெரிகின்றது. அக்குன்றின் மீதுள்ள குகைக் கோயிலில் சிவபெருமானது திருவுருவத்தை நிறுவிய மன்னன் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகேந்திர வர்மன் என்பது சாசனத்தால் விளங்கும்.4

திருமலை

வட ஆர்க்காட்டில் திருமலை என்னும் குன்றம் ஒன்றுண்டு. அது வைகானுரை அடுத்திருத்தலால் வைகைத் திருமலை எனவும் வழங்கும். மன்னரால் மதிக்கப் பெற்ற சமண முனிவர்கள் அம்மலையில் வாழ்ந்ததாகத் தெரிகின்றது. இராஜராஜ சோழன் காலத்தில், “கொலை புரியும் படையரசர் கொண்டாடும் குண வீரமா முனிவன்” என்று புகழப்படுகின்ற ஒரு முனிவர் திருமலை யேரிக்குக் கலிங்கு கட்டி, வைகை மலையின் இரு மருங்கும் நெல் விளையக் கண்டு களித்தார் என்று அம்மலைக் கல்வெட்டொன்று கூறுகின்றது.5

இராஜராஜன் தமக்கையாராகிய குந்தவைப் பிராட்டியார் வைகைத் திருமலையில் ஒரு ஜினாலயம் அமைத்தார். அது குந்தவை ஜினாலயம் என்று பெயர் பெற்றது.6 பொன்னுரைச் சேர்ந்த ஒரு நங்கை அம்மலையில் அருகன் திருவுருவை நிறுவினாள். “பொன்னெயில் நாதனை வைகைத் திருமலைக்கு ஏறியருளப் பண்ணினாள் அந் நல்லாள் என்று சாசனம் கூறுகின்றது.7 இங்ஙனம் சிறப்புற்று விளங்கிய வைகைத் திருமலையை அருகதேவனுக்குரிய மலையாகச் சமணர் கருதுவாராயினர். தமிழ் நாட்டின் வடக்கெல்லையிலுள்ள வேங்கடமலை நெடியோன் குன்றம் என்று கூறப்படுதல் போலவும், பொதிய மலை அகத்தியர்மலை என்று குறிக்கப்படுதல் போலவும், அருகதேவன் வீற்றிருந்த திருமலை “எண் இறை திருமலை” என்று கல்வெட்டிற் கொண்டாடப்படு கின்றது. எண்குணன் என்பது அருகனைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று. எனவே, அருகதேவனுக் குரிய மலைகளுள் மிகச் சிறந்ததாக இத்திருமலை கொள்ளப்பட்டதென்பது இனிது விளங்கும்.8

திருவோத்தூர்

ஆர்க்காட்டு நாட்டில் செய்யாற்றின் வடகரையிலுள்ள திருவத்துர் என்னும் திருவோத்துர் சமண சமயத்தார் சிறந்து வாழ்ந்த தலங்களுள் ஒன்றென்று தெரிகின்றது. அவ்வூரில் சைவத்திற்கும் சமணத்திற்கும் நிகழ்ந்த புனல் வாதத்தில் தோல்வியுற்ற சமணர்கள் பலவகையான கொடுமைகளுக்கு உள்ளாயினர் என்று புராணம் கூறும். இதற்குச்சான்றாக அங்குள்ள சிவாலயச் சுற்றுச் சுவரில் சில சிற்பங்களும் உள்ளன. அழிந்து போன சமணக் கோயிலின் அடிப்படை இன்றும் காணப்படும். ஒத்து என்பது சமண சமயத்தில் வேதத்தைக் குறிப்பதற்குப் பெரிதும் வழங்குகின்ற சொல்லாதலால், வேதப் பெயரைச் சமணர் அவ்வூருக்கு இட்டிருந்தார்கள் என்று தோற்றுகின்றது. திரக்கோல்

வந்தவாசிக்கு எட்டு மைல் தூரத்தில் திரக்கோல் என்னும் ஊர் உள்ளது. அங்குள்ள குன்றின் மீது மூன்று குகைகளும், மூன்று ஜினாலயங்களும் காணப்படுகின்றன. அக்கோயில்களின் அடியாகத் திருக்கோயில் என்னும் பெயர் அவ்விடத்திற்கு அமைந்த தென்றும், அதுவே திரக்கோல் ஆயிற்றென்றும் தெரிகின்றன.10

திருநாதர் குன்றம்

வட ஆர்க்காட்டுச் செஞ்சி மலையில் திருநாதர் குன்றம் என்னும் பெயருடைய பெரும் பாறை யொன்று உண்டு.அங்கு இருபத்து நான்கு ஜைன வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இன்றும் அக் குன்றில் திருநாதர் வழிபாடு நடைபெறுகின்றது. அவரைப் போற்றிப் பாடிய பதிகமும் உண்டு.11

திருப்பருத்திக் குன்றம்

தொண்டை நாட்டில் வேகவதியாற்றின் கரையிலுள்ள திருப்பருத்திக் குன்றம் முன்னாளில் காஞ்சிமாநகரின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. செம்பொற் குன்று என்ற பெயரும் அக்குன்றுக்கு உண்டு என்பது அங்குள்ள கல்வெட்டுக்களால் அறியப்படுவதாகும். சாசனங்களில் ஜின காஞ்சி (சமண காஞ்சி) யென்று அப்பகுதி குறிக்கப் படுகின்றது. பொற்குன்றம் என்ற பெயரே பருத்திக் குன்றம் என மருவிற் றென்று கூறுவர் சிலர். அருணகிரி யென்னும் வடமொழிப் பெயரும் அதற்கு வழங்கியதாகத் தெரிகின்றது. அருணன் என்பதும், பரிதி யென்பதும் சூரியனைக் குறிக்கும் சொற்களாதலால் பரிதிக்குன்றம் என்று அம் மலை பெயர் பெற்றுப் பின்பு பருத்திக் குன்றமாயிற் றென்று கருதலும் ஆகும்.14 திருப்பருத்திக் குன்றத்தில் சிறந்து விளங்குவது வர்த்தமான திருக்கோயில்.

அப்பதியில் சீலமும் புலமையும் வாய்ந்த முனிவர் பலர் முன்னாளில் வாழ்ந்தார்கள். அன்னவருள் ஒருவர் வாமன முனிவர். மேரு மந்தர புராணம் என்னும் தமிழ் நூலின் ஆசிரியர் இவரே. “துயதவன் ராசராசன்” என்று வாமனர் போற்றப்பட்டிருத்தலால், தவ நெறியிலே தலை நின்றவர் இவர் என்பது விளங்கும். வட மொழியும் தென் மொழியும் நிலைகண்டுணர்ந்த இம் முனிவர்க்கு மல்லிஷேணர் என்ற பெயரும் உண்டென்று சாசனம் கூறும்.

இவருடைய மாணாக்கராகிய புஷ்பசேன முனிவர், சீலமும் புகழும் வாய்ந்து விளங்கினார். முனி புங்கவன் என்றும், பரவாதி மல்லன் என்றும் சாசனங்கள் கூறுமாற்றால் இவருடைய தவப்பெருமையும் வாதத் திறமையும் இனிது அறியப்படும். அக் காலத்தில் விஜய நகர அரசாங்கத்தில் படைத் தலைவராகவும், மந்திரத் தலைவராகவும் அமர்ந்து, ஆன்ற சிறப்புடன் வாழ்ந்த இருகப்பர் என்பவர் இம் முனிவரிடம் மிகவும் ஈடுபட்டிருந்தார். இவர் ஆணையைச் சிரமேற் கொண்டு ஒழுகினார்; திருப்பருத்திக் குன்றத்தில் இருகப்பர் கட்டிய சங்கீத மண்டபம் இன்றும் காணப்படுகின்றது. விஜய நகர மன்னரது ஆன்ம நலத்தின் பொருட்டு மகேந்திர மங்கலம் என்னும் ஊரைத் திருப்பருத்திக் குன்றத்து நாயனார்க்கு இவர் வழங்கினார்.15 திருக்கோயிலின் மருங்கே பழமையான குராமர மொன்று உள்ளது. “தென் பருத்திக் குன்றமர்ந்த கொங்கார் தருமக்குரா” என்று புகழப்படுகின்ற அத்தருவின் அடியில் முனிவர் மூவர் அமர்ந்து நெடுந்தவம் முயன்றனர் என்று சாசனம் கூறும்.16 அம் மரம் இன்றும் தெய்வத் தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

முன்னாளில் காஞ்சியில் வாழ்ந்தவரும், பெளத்தரை வாதில் வென்று ஈழநாட்டிற்கு ஓட்டியவருமாகிய அகளங்கன் என்னும் சமண முனிவர் பெருமை, திருப்பருத்திக் குன்றத்தில் கர்ண பரம்பரையாக வழங்குகின்றது. அவருக்குப் பின்பு வந்த முனிவர்கள் பலரெனினும் சிலரைப் பற்றிய செய்தியே இப்பொழுது கிடைத்திருக்கின்றது. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில், சந்திர கீர்த்தி யென்ற முனிவரும், அவர் மாணாக்கராகிய அனந்த வீரியரும் திருப்பருத்திக் குன்றத்தில் விளங்கினர். எனவே, கல்வியே கரையிலாத காஞ்சிமா நகரம் என்ற புகழுரைக்குச் சான்றாக நின்ற சமண காஞ்சியில் ஆன்றோர் பலர் வாழ்ந்தனர் என்பது நன்கு அறியப்படும்.

திருப்பறம்பூர்

காஞ்சிபுரத்திற்குப் பத்து மைல் அளவிலுள்ள திருப்பறம்பூரில் பாடல் பெற்ற ஒரு ஜினாலயம் உள்ளது. பெளத்தரை வாதில் வென்று பெரும் புகழ் பெற்ற அகளங்கன் என்னும் முனிவர் அங்குள்ள முனி கிரியில் தவம் புரிந்து மேம்பட்டார் என்று வரலாறு கூறுகின்றது. இன்றும் அவ்வூரில் சமணர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அருங்குளம்

திருத்தணிகை மலைக்குக் கிழக்கே எட்டு தூரத்தில் அருங்குளம் என்னும் சிற்றுாா் ஒன்று உள்ளது. அவ்வூரில் சமண சமயத்தார்க்குரிய கோயில் இன்றும் காணப்படுகின்றது. தர்மசாகரர் என்னும் தீர்த்தங்கரர் அங்கு அமர்ந்துள்ளார். ஆதியில் அருகன் குளம் என்று பெயர் பெற்ற ஊர் இப்போது அருங்குளம் என வழங்குகின்றது.17

அருங்குன்றம்

திருத்தணிகை மலைக்கு ஐந்து மைல் தூரத்தில் உள்ளது அருங்குன்றம். அங்குக் காணப்படுகின்ற அழகிய ஜினாலயம் கார் வெட்டு நகரக் குறுநில மன்னரால் கட்டப்பட்டதென்பர். தமிழ்ச் சிறு காப்பியங்களுள் சிறந்ததாக மதிக்கப்படும் சூளாமணியின் ஆசிரியராகிய தோலா மொழித் தேவர் இவ்வாலயத்தில் அமைந்த தரும தீர்த்தங்கரரை வழிபட்ட செய்தி அந்நூற் பாயிரத்தால் அறியப்படுகின்றது. எனவே, அருகன் குன்றம் என்னும் பெயர் அருங்குன்றமெனக் குறுகிற்றென்று கொள்ளுதல் பொருந்தும்.


திருநறுங் கொண்டை

நடு நாட்டிலுள்ள திருநறுங் கொண்டை என்ற ஊர் சமணர்கள் சிறந்து வாழ்ந்த இடங்களுள் ஒன்றாகும். அங்குள்ள அப்பாண்ட நாதர் கோயிலிற் & பழைய கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.18 அவற்றுள் ஒன்றில் இராஜாதி ராஜன் என்னும் சோழ மன்னன் மேலிற் பள்ளித் (மேலைக் கோயில்) திரு விளக்குக்காக அளித்த நன்கொடை குறிக்கப்பட்டுள்ளது. குலோத்துங்க சோழன் காலத்தில் வீர சேகர காடவராயன் என்பான் நாற்பத் தெண்ணாயிரப் பெரும் பள்ளிக்கு வழங்கிய வரிக் கொடையும் சாசனத்திற் கூறப்படுகின்றது. இக்குறிப்புக்களால் நறுங் கொண்டை என்னும் பதி சமணர்களாற் பெரிதும் போற்றப்பட்ட தென்பது புலனாகும்.

சீனாபுரம்

கொங்கு மண்டலத்துக் குறுப்பு நாட்டில் உள்ள சனகை என்ற சனகாபுரம் சமணர்க் குரிய சிறந்த பதிகளுள் ஒன்று. நன்னூல் என்னும் தமிழ் இலக்கண நூல் இயற்றிய பவணந்தி முனிவர் அவ்வூரிலே பிறந்தவர். ஆதிநாத தீர்த்தங்கரருக்கு அங்கு ஒரு கோயில் உண்டு. இந்நாளில் சீனாபுரம் என வழங்கும் அவ்வூர் கோவை நாட்டு ஈரோடு வட்டத்தில் பெருந்துறைக்கு அருகேயுள்ளது.

அம்மணம்பாக்கம்

அருக தேவன் பெயர் தாங்கி நிலவும் ஊர்கள் தமிழ் நாட்டிற் பல பாகங்களில் உண்டு. தென் பாண்டி நாட்டில் அருகன் குளம் என்னும் ஊர் உள்ளது. சேலம் நாட்டில் அருக நத்தம் என்பது ஓர் ஊரின் பெயர்.

அருக சமயம் தமிழ் நாட்டில் சமணம் என்றும், அமணம் என்றும் பெயர் பெற்றது. அமணம் என்பது அம்மணம் எனவும் வழங்கலாயிற்று. தொண்டை நாட்டிலும் அதை அடுத்துள்ள நாடுகளிலும் அம்மணம் என்னும் பெயருடைய சில ஊர்கள் காணப்படுகின்றன. செங்கற்பட்டு வட்டத்தில் அம்மணம்பாக்கம் என்ற ஊரும், மதுராந்தக வட்டத்தில் மற்றோர் அம்மணம் பாக்கமும் உண்டு. தென் ஆர்க்காட்டுத் திண்டிவன வட்டத்தில் பிறிதோர் அம்மணம்பாக்கம் உள்ளது. விழுப்புர வட்டத்தில் அம்மணங் குப்பம் என்பது ஓர் ஊர். இவ்வூர்கள் எல்லாம் சமண மணம் கமழ்ந்த இடங்களாக இருந்திருத்தல் வேண்டும்.

பேரமனூர்

தொண்டை மண்டலத்துச் செங்குன்ற நாட்டைச் சேர்ந்த பேரமனூர் என்னும் ஊர் சமண சம்பந்தமுடையதென்பது அதன் பெயரால் விளங்குவதாகும். இக்காலத்தில் பேரமனுர் என வழங்கும் அவ்வூர் செங்கற்பட்டு வட்டத்தில் உள்ளது.19

போதிமங்கை

முன்னாளில் புத்தர்கள் சிறந்து வாழ்ந்த ஊர்களில் ஒன்று போதி மங்கை. அது புதுவை நாட்டில் தெளிச்சேரி யென்னும் பாடல்பெற்ற பதியின் அருகே இருந்ததாகத் தெரிகின்றது. போதிமரம் புத்தர் போற்றும் புனிதமுடைய தாதலின் அதன் பெயரால் அமைந்த ஊர் போதிமங்கை எனப் பட்டது போலும் அங்குப் புத்தமத வேதமாகிய பிடக நூலையும், அளவை நூலையும் துறைபோகக் கற்றுப் பிற சமய வாதிகளை அறை கூவி வாது செய்ய அழைக்கும் அறிஞர் பலர் இருந்தனர் என்று சேக்கிழார் கூறுகின்றார். பர சமய கோளரியாக விளங்கிய திருஞான சம்பந்தர்,

“சீர்நிலவு திருத்தெளிச்சே ரியினைச் சேர்ந்து சிவபெருமான் தனைப்பரவிச் செல்லும் போது
சார்வறியாச் சாக்கியர்தம் போதி மங்கை”

யின் வழியே போந்தாரென்றும், அங்கும் புகைந்து எழுந்த புத்த நந்தி பொன்றி வீழ்ந்தான் என்றும், சாரிபுத்தன் என்னும் சாக்கிய அறிஞன் அவ்வூர்ச் சத்திர மண்டபத்தில் திருஞான சம்பந்தரோடு வாது செய்து தோற்றான் என்றும் பெரிய புராணத்திலே கூறப்படுகின்றது. இவ் வரலாற்றால் ஏழாம் நூற்றாண்டில் புத்தர்கள் போதி மங்கை முதலிய ஊர்களில் சிறந்து வாழ்ந்தனர் என்பதும், அவர்களுள் கலை பயில் தெளிவும் கட்டுரை வன்மையும் உடையார் பலர் இருந்தனர் என்பதும் நன்கு விளங்கும்.

அறப்பணஞ்சேரி

ஐம்பெருங்காவியங்களுள் ஒன்றாகிய மணிமேகலையில் அறவண அடிகள் என்னும் பெளத்த முனிவரின் பெருமை விரிந்துரைக்கப் படுகின்றது. காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்த புத்த சங்கத்தைச் சேர்ந்தவர் இம்முனிவர். மதுரையம்பதியில் கோவலன் கொலையுண் டிறந்ததை அறிந்து அருந்துயரடைந்த மாதவி இவரைச் சரணடைந்து தவ நெறியை மேற்கொண்டாள்.

“மறவண நீத்த மாசறு கேள்வி
அறவண அடிகள் அடிமிசை வீழ்ந்து”

தன் ஆற்றாமையை அறிவித்த மாதவிக்கு அடிகள் ஐவகைச் சீலத் தமைதியும் காட்டி உய்வகை உணர்த்தினார் என்று மணிமேகலை கூறும்.20

காவிரிப்பூம் பட்டினத்தைக் கடல் கொண்ட பின்பு இவர் காஞ்சி மாநகரம் போந்து நெடுங்காலம் தவம் புரிந்தார். காஞ்சிபுரத்தில் இன்றும் இவர் வாழ்ந்த இடம் அறப்பணஞ் சேரி என்று வழங்குவதாகும். கொங்கு நாட்டில் அறவண நல்லூர் என்னும் ஊர் உண்டென்று கொங்கு மண்டல ஊர்த் தொகை கூறுகின்றது.21 முன்னாளில் சோழ மண்டலக் கரையில் சிறந்ததொரு துறைமுக நகரமாக விளங்கிய நாகப்பட்டினத்தில் பெளத்த மதத்தைச் சார்ந்தோர் பலர் இருந்தனர். அவர் பொருட்டுத் கடாரத் தரசனாகிய ரீமாரன் என்பவன் புத்தவிகாரம் ஒன்று கட்ட விரும்பினான்.22 அப்போது சோழ நாட்டில் அரசு வீற்றிருந்தவன் இராஜராஜன் என்னும் பெருவேந்தன், அவன் சைவப் பற்றுடையவனாயினும் புறச் சமயங்களையும் ஆதரிக்கும் பெருமை வாய்ந்தவன். ஆதலால், நாகையில் புத்த விகாரம் கட்டிக் கொள்ள அவன் ஆணை தந்தான். கடாரத்தரசன் மன மகிழ்ந்து சூடாமணி வர்மன் என்னும் தன் தந்தையின் பெயரால் ஒரு பத்ம விகாரம் கட்டத் தொடங்கினான். இராஜராஜன், ஆனைமங்கலம் என்னும் ஊரை அதற்குப் பள்ளிச் சந்தமாக அளித்தான். ஆயினும், பத்ம விகாரத் திருப்பணி முற்றுப் பெறு முன்னே சோழமன்னன் காலம் சென்றான். அவன் மைந்தனாகிய இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படையெடுத்து, வென்று, மீண்ட பின்னர்த் தன் தந்தையார் சூடாமணி பத்ம விகாரத்திற்குக் கொடுத்த நன்கொடையைச் சாசன வாயிலாக உறுதிப்படுத்தினான்.23

இராஜேந்திர சோழன் மகனான வீர ராஜேந்திரன் புத்த மித்திரன் என்பவரை ஆதரித்தான். இவர் பொன் பற்றி என்னும் ஊரினர்; புலமை வாய்ந்தவர்; வீர சோழியம் என்னும் தமிழிலக்கணம் இயற்றியவர். இவர் புத்த மதத்தைச் சார்ந்தவர் என்பது வெளிப்படை. மிழலைக் கூற்றத்திலுள்ள பொன்பற்றி மன்னன் என்று இவர் குறிக்கப்படுதலால் வீரசோழன் காலத்தில் ஒரு குறுநில மன்னராக இவர் வாழ்ந்தவர் எனக் கருதலாம்.

“ஈண்டுநூல் கண்டான் எழில்மிழலைக் கூற்றத்துப் பூண்டபுகழ் பொன்பற்றி காவலனே மூண்டவரை வெல்லும் படைத்தடக்கை வெற்றிபுனை வீரன்தன் சொல்லின் படியே தொகுத்து"24

என்னும் பாட்டால் வீரசோழன் விருப்பத்திற் கிணங்கி இவர் இலக்கண நூல் இயற்றினார் என்பது நன்கு விளங்கு கின்றது.எனவே, வீரசோழன் அரசு புரிந்த பதினொன்றாம் நூற்றாண்டின் பிற் பகுதியில் புத்த மதத்தைச் சேர்ந்த சிற்றரசரும் இருந்ததாகத் தெரிகின்றது. தஞ்சை நாட்டு அறந்தாங்கி வட்டத்திலுள்ள பொன் பேத்தி என்ற ஊரே புத்த மித்திரனார்க்குரிய பொன்பற்றி எனக் கருதப்படுகின்றது.

பள்ளிச் சந்தம்

பண்டைத் தமிழரசர் சைன பெளத்தக் கோயில் களுக்கு இறையிலியாக விட்ட நிலமும் ஊரும் பள்ளிச் சந்தம் என்று பெயர் பெற்றன. முற் காலத்தில் சிறந்திருந்த சில பள்ளிகளின் பெயர்கள் சாசனங்களால் அறியப்படுகின்றன. செங்கற்பட்டு நாட்டிலுள்ள ஆனந்த மங்கலத்தில் ஜினகிரிப் பள்ளி இருந்தது.25 தென்னார்க்காட்டில் உள்ள திருநறுங்கொண்டையில் பெரிய பள்ளியும்,26 இராஜேந்திரபுரத்தில் கங்காசூரப் பெரும் பள்ளியும்27 ஜனநாத புரத்தில் சேதிகுல மாணிக்கப் பெரும் பள்ளி, கங்ககுல சுந்தரப் பெரும் பள்ளி என்னும் இரு பள்ளிகளும்,28 இன்னோரன்ன பிற பள்ளிகளும் இருந்தன என்பது கல்வெட்டுக்களால் அறியப்படும். அத்தகைய பள்ளிகளைத் தமிழரசர் ஆதரித்த பான்மை பள்ளிச்சந்தம் என்று பெயர் பெற்றுள்ள ஊர்களால் விளங்கும்.

தென்னார்க்காட்டுத் திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள பள்ளிச் சந்தம் என்னும் ஊர் அங்குள்ள சமணப் பள்ளியால் பெயர் பெற்றதென்பது சாசனத்தால் விளங்குகின்றது. கண்டராதித்தப் பெரும் பள்ளி அருகே சிறப்புற்று விளங்கிய பான்மையும், நேமிநாதர் என்பவர் அதனைப் பரிபாலனம் செய்த முறையும் அவ்வூரிற் கண்ட சாசனம் ஒன்றால் அறியப் படுவனவாகும்.சீ தஞ்சை நாட்டு நாகப்பட்டின வட்டத்தில் ஒரு பள்ளிச் சந்தமும், இராமநாதபுரச் சிவகங்கை வட்டத்தில் மற்றொரு பள்ளிச் சந்தமும் உள்ளன.இத்தகைய நன்கொடை களால் தமிழ் வேந்தர் சமண சாக்கிய மதங் களையும் வேற்றுமையின்றி ஆதரித்தனர் என்னும் உண்மை இனிது விளங்குவதாகும்.

அடிக் குறிப்பு

1.“கன்னிநா டமனர் தம்மால் கட்டழிந் திழிந்து தங்கள்
மன்னனும் அவர்கள் மாயத் தழுந்த”

-திருஞான சம்பந்தர் புராணம், 613

2. பெருந்தொகை, 183.

3. பெருந்தொகை, 1560, 2020. அழகர் மலையில் இப்பொழுது பஞ்ச பாண்டவர் படுக்கை என வழங்குவது சமண முனிவர்கள் வதிந்த இடம் போலும்.

4. S. I. I., Vol. I, pp. 28, 30,

5. S. I. I., Vol. I, p. 95.

6, 1 bid, p. 97.

7. I bid, p. 102.

8. I bid, p. 106.

9. North Ancot Manual. Vol. II, 308.

10. Sewell’s Antiquities. p. 170. 11. திருநாதர் குன்றப் பதிகம்.

12. Tiruparauttikunram and its Temples, by T. N. Ramachandran. p. 2.

13. திருப்பருத்திக் குன்றத்தில் சமய முனிவர்கள் சமாதி கொண்ட இடம் இன்றும் அருணகிரி மேடு என்று வழங்கும்.

14. பரிதி நியமம் என்னும் பாடல் பெற்ற தலம் இப்போது பருத்தியப்பர் கோயில் என வழங்குதல் காண்க.

15. Tiru- Paruttikunram and its Temples, p. 57.

16. bid, p. 59.

17. North Arcot Manual, Vol. II, 387.

18. இக்கோயிலில் உள்ளவர் ரிஷப் தீர்த்தங்கரர் என்றும், அவர் அப்பர் என்னும் திருநாவுக்கரசரை ஆண்டருளிய காரணத்தால் அப்பரை யாண்ட நாதர் என்று அழைக்கப்பட்டார் என்றும், அப்பெயரே அப்பாண்ட நாதர் என மருவிற்றென்றும் ஒரு கதை வழங்குகின்றது. -

19. M. E. R., 1934-35.

20. மணிமேகலை, கதை, 2,60

21. கொங்கு மண்டல ஊர்த்தொகை, 8.

22. ஸ்ரீமார விஜயோத்துங்க வர்மன் என்பது அவன் (popGuust I. M. P. P., 1345.

23. சோழர் சரித்திரத்திற்குப் பேருதவியாயுள்ள லிடன் சாசனம் என்பது இதுவேயாகும்.

24. பெருந்தொகை 1467.

25. 430 of 1922.

26. 385 of 1902.

27. 277 of 1916.

28. 392 of 1907.

29. M. E. R., 1937-38.