தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1/001-003

விக்கிமூலம் இலிருந்து

தமிழ் நாடகத்
தலைமையாசிரியர்

நாடகத் தமிழை வளர்த்த தந்தை அவர்; நாடகாசிரியர்கள் பலருக்குப் பேராசிரியர் அவர். சென்ற ஐம்பது ஆண்டுகளுக்கிடையே அவரது பாடல்களையோ வசனங்களையோ உபயோகிக்காத நடிக நடிகையர் தமிழ் நாடக உலகில் இல்லையென்றே சொல்லிவிடலாம்.

நாடக உலகம் அப் பெரியாரைத் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றியது. எளிமையும் இனிமையும் ததும்பும் பாடல்களாலும் தேன் சொட்டும் தீந்தமிழ் வசனங்களாலும் அப் பெருமகனார் இயற்றியருளிய நாடகங்கள்தாம் தமிழ் நாடகக் கலைவளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வம் என்று கூறினால் அது மிகையாகாது.

முழுப் பெயரையும் சொல்ல வேண்டியதில்லை. சுவாமிகள் என்றாலே போதும். தமிழ் நாடக உலகில் அது சங்கரதாஸ் சுவாமிகள் ஒருவரைத்தான் குறிக்கும்.

சுவாமிகள் காலத்திலிருந்த மிகப் பெரிய புலவர்களும் நாடகாசிரியர்களுமான உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர், குடந்தை வீராசாமி வாத்தியார் முதலியோரெல்லாம் சுவாமிகளின் புலமைக்குத் தலைவணங்கிப் பாராட்டினர்.

ஆங்கில மோகத்தால் தாய்மொழியிற் பேசுவது கூடக் கெளரவக் குறைவென்று கருதப்பட்ட காலத்தில் நாடகமேடையின் மூலம் தமிழை வளர்த்த பெரியார் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். இசை யரங்குகளிலே தெலுங்குமொழி ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில் நாடக மேடையில் தீந்தமிழ்ப் பாடல்களைப் பொழிந்து தமிழுலகை மகிழ்வித்தவர் சங்கரதாஸ் சுவாமிகள்.

தோற்றம்

1867-ஆம் ஆண்டில் ஆவணித் திங்கள் 22-ஆம் நாள் தமிழ் மாநிலம் சுவாமிகளைத் தாங்கும் பேறு பெற்றது. தமிழர் வரலாற்றிலே அழியாத இடம் பெற்ற கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார், மகாகவி பாரதியார், வீர பாண்டியக் கட்டபொம்மன் முதலிய தியாகிகளையும், வீரர்களையும், புலவர்களையும் தந்த திருநெல்வேலி மாவட்டம் தான் நாடகப் புலவராகிய சங்கரதாஸ் சுவாமிகளையும் நமக்குத் தந்தது. தென் பாண்டி நாட்டின் துறைமுக நகரங்களில் ஒன்றான தூத்துக்குடியிலே, வெள்ளையரை விரட்டியடித்த 'வெள்ளையத் தேவன்' பரம்பரையிலே போரில் புறமுதுகு காட்டாத வீர மறக்குடியிலே தாமோதரக் கணக்கப் பிள்ளை என்பாரின் செல்வத் திருமகனாகப் பிறந்தார் சங்கர தாஸ் சுவாமிகள்.

கல்வி

தந்தையார் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய தமிழ்ப் புலவர். நகர மக்கள் அவரை 'இராமாயணப் புலவர்' என்ற சிறப்புப் பெயரிட்டு அழைத்தனர்.

"தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல் "

என்னும் தமிழ் மறையை நன்கறிந்த தாமோதரத் தேவர் தமது புதல்வனுக்குத் தாமே தமிழ்க் கல்வி புகட்டினார்.

அக்காலத்தில் 'புலவரேறு' என்று அறிஞர்களால் போற்றப்பட்ட பழனி தண்டபாணி சுவாமிகளிடம் நமது சுவாமிகள் பாடம் கேட்டுத் தமது தமிழறிவை வளர்த்துக் கொண்டார்.

தண்டபாணி சுவாமிகளிடம் தமிழ்ப் பாடம் கேட்ட போது நமது சுவாமிகளுக்கு உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர் அவர்கள் சக மாணவராயிருந்தார். கவிராயர் அவர்கட்கும் ஆசிரியர் சுவாமிகளுக்குமுள்ள அன்புத் தொடர்பு மிகப் பிரசித்தமானது. அதுபற்றிய சில குறிப்புக்களைப் பின்னர் அறிவோம்.

கணக்கர் கவிஞரானார்

தூத்துக்குடி உப்புப் பண்டகசாலையிலே சுவாமிகள் சிலகாலம் கணக்கராக வேலை செய்தார். தமது பதினாறாவது வயதிலேயே சுவாமிகள் வெண்பா, கலித்துறை, இசைப் பாடல்கள் முதலியனவற்றை எழுதத் தொடங்கினர். கவிதைப் புலமைக்கும் கணக்கு வேலைக்கும் போட்டி யேற்படவே சில ஆண்டுகளுக்குப் பின் சுவாமிகள் தமது இருபத்து நான்காவது வயதில் நாடகத் துறையில் பிரவேசித்தார்.

நடிகர்—நாடகாசிரியர்

முதன் முதலாகச் சுவாமிகளின் புலமையை அறிந்து பயன் படுத்திக் கொண்டது திருவாளர்கள் ராமுடு ஐயர், கல்யாணராமையர் ஆகிய பழம் பெரும் நடிகர்களின் நாடக சபையெனச் சொல்லப்படுகிறது, இச் சபையில் முதலில் நடிகராகவும் பின்னர் ஆசிரியராகவும் சுவாமிகள் சில ஆண்டுகள் பணியாற்றினர். இரணியன், இராவணன், எமதருமன், ‘நளதமயந்தி’ யில் சனீசுவரன் முதலிய வேடங்கள் சுவாமிகளின் நடிப்புத் திறமையை எடுத்துக்காட்டிய சிறந்த பாத்திரங்கள் என்று கருதப்பட்டன.

சூத்திரதார்

திருவாளர் சாமி நாயுடு அவர்களின் நாடக சபையில் சில காலம் சுவாமிகள் ஆசிரியராக இருந்தார். அப்போது சூத்திரதாராகவும் நடித்து வந்தார். சுவாமிகள் சூத்திரதாராக வந்து நாடக நுணுக்கங்களைப் பற்றியும், நடைபெற விருக்கும் நாடகத்தின் நீதிகளைப் பற்றியும் நிகழ்த்தும் விரிவுரையைக் கேட்க மக்கள் ஆவலோடு கூடுவார்கள்.

ஆண்டிக் கோலம்

நாயுடு அவர்களின் குழுவில் இருந்தபோது சுவாமிகள் வாழ்க்கையில் வெறுப்புற்று தமது வழிபடு கடவுளாகிய முருகப் பெருமானின் திருவருளை வேண்டிக் கையில் ஐம்பது ரூபாய்களுடன் ஒரு நாள் ஆண்டிக் கோலத்தோடு தீர்த்த யாத்திரை செய்யப் புறப்பட்டு விட்டார். இவ்வாறு கோவணாண்டிக் கோலத்துடன் தலங்களைச் சுற்றி வந்தபோதுதான் எல்லோரும் அவரைச் சுவாமிகள் என்று அழைக்கத் தொடங்கினர்.

தத்து புத்திரர்

தீர்த்த யாத்திரை முடிந்ததும் சில ஆண்டுகள் புதுக்கோட்டை மகா வித்துவான் கஞ்சிரா மான் பூண்டியா பிள்ளை அவர்களுடன் சுவாமிகள் இருக்க நேரிட்டது.

புலவர்களால் மிகக் கடினம் என்று கருதப்பட்ட வண்ணம், சந்தம், இவற்றைப் பாடுவதில் சுவாமிகள் மிகவும் வல்லவராயிருந்தார். அவரது ‘சந்தக் குழிப்பு’ க்களிலே காணப்படும் தாள விந்தியாசங்களையும், சொற் சிலம்பங்களையும் பார்த்துப் பரவசமடைந்த மகா வித்துவான் மான் பூண்டியா பிள்ளை அவர்கள் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளைத் தமது ‘தத்து புத்திரராக’ ஏற்றுக் கொண்டார்.

சக மாணவர்கள்

சுவாமிகளைச் சந்தங்கள் பாடச் சொல்லி விட்டுப் பிள்ளையவர்கள் ‘கஞ்சிரா’ வாசித்துத் தானே களிப்படைவாராம். இந்தச் சமயத்திலேதான் தமிழகத்தின் தலை சிறந்த மிருதங்க வித்வான்களான திருவாளர்கள் புதுக்கோட்டை தட்சிணுமூர்த்திப் பிள்ளை, பழனி முத்தையா பிள்ளை இருவரும் மகா வித்துவான் மான்பூண்டியா பிள்ளை அவர்களிடம் மாணவர்களாக இருந்து வந்தனர்.

மீண்டும் நாடகாசிரியர்

தமிழ்நாடு செய்த தவத்தின் பயனாக மகாவித்துவான் மான்பூண்டியா பிள்ளை அவர்கள் வேண்டுகோளின்படி சில ஆண்டுகளுக்குப் பின் சுவாமிகள் மீண்டும் நாடக ஆசிரியப் பொறுப்பை மேற் கொண்டார். பிள்ளை அவர்களையும் அடிக்கடி சென்று பார்த்து வருவதுண்டு. வள்ளி வைத்தியநாதய்யர், அல்லி பரமேஸ்வர ஐயர் ஆகியோர் நடத்தி வந்த நாடக சபைகளில் சுவாமிகள் சில ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். திருவாளர் பி. எஸ். வேலு நாயர் அவர்களின் ஷண்முகானந்த சபையிலும் நெடுங்காலம் சுவாமிகள் பணிபுரிந்தார். திரு. பி. எஸ். வேலு நாயர் அவர்களும், எனது தந்தையார் திரு. டி. எஸ். கண்ணுச்சாமிப் பிள்ளை அவர்களும் ஆசிரியர் சுவாமிகளின் அன்புக்குரிய மாணவர்களாவார்கள். திரு. வேலு நாயர் அவர்களின் குழுவிலிருந்தபோதுதான் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் ‘மனோஹரன்’ நாடகத்திற்குச் சுவாமிகள் பாடல்கள் இயற்றினார்.

மாணவ மாணவியர்

தமிழ் நடிகருலகில் திரு. வேலு நாயர் அவர்களின் பேச்சுத் தி ற னை ப் புகழாதாரில்லை. இத்தகயை நாவன்மை நாயர் அவர்களுக் கேற்பட்டது சுவாமிகள் அளித்த தனிப்பட்ட பயிற்சியினாலும், சுவாமிகளின்பால் நாயரவர்களுக்கிருந்த ஆசிரிய பக்தியினாலும்தான் என்று எனது தந்தையார் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அக் காலத்தில் தமிழ் நாட்டில் நடைபெற்று வந்த எல்லா நாடக சபைகளிலும் சுவாமிகள் ஆசிரியராக இருந்திருக்கிறார்.

சென்ற ஐம்பது ஆண்டுகளுக்கிடையே தமிழகத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய நடிகர்களான திருவாளர்கள் ஜி. எஸ். முனுசாமி நாயுடு, ஜெகந்நாத நாயுடு, சாமிநாத முதலியார், சீனிவாச ஆழ்வார். நடேசபத்தர், ராஜா வி. எம். கோவிந்தசாமிப் பிள்ளை, எம். ஆர். கோவிந்தசாமிப் பிள்ளை, சி. கன்னையா, சி. எஸ். சாமண்ணா ஐயர், மகாதேவய்யர், சூரிய நாராயண பாகவதர், சுந்தரராவ், கே. எஸ். அனந்தநாராயண ஐயர், கே. எஸ்.செல்லப்ப ஐயர், பைரவ சுந்தரம் பிள்ளை, சீனிவாச பிள்ளை முதலியோரெல்லாம் நமது சுவாமிகளிடம், பயிற்சி பெற்றவர்கள், அவரது பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. நடிகையரிலும் திருமதிகள் பாலாம்பாள், பாலாமணி, அரங்க நாயகி, வி. பி. ஜானகி, கோரங்கி மாணிக்கம், டி. டி. தாயம்மாள் முதலிய பலர் சுவாமிகளின் மாணவிகள் ஆவார்கள்.

சொந்த நாடகக் குழு

சமரச சன்மார்க்க நாடக சபை என்ற பெயரால் சுவாமிகள் தாமே சொந்தத்தில் ஒரு நாடக சபையையும் சில ஆண்டுகள் நடத்தினார். இந்த நாடகக் குழுவிலே தான் தமிழ் நாடக மேடையின் மங்காத ஒளி விளக்காகத் திகழ்ந்த எஸ். ஜி. கிட்டப்பாவும் அவரது சகோதரர்களும் பயிற்சி பெற்றனர். இசைப் புலவராக இன்று நம்மிடையே வாழும் மதுரை திரு. மாரியப்ப சுவாமிகளும் இந்த நாடகக் குழுவில் தோன்றியவரே.

சிறுவர் நாடகக் குழு

கால வேகத்தில் நடிகர்கள் சுவாமிகளின் பாடல்களை மட்டுமே உபயோகித்துக் கொண்டு உரையாடல்களைத் தம் தம் உளப் போக்கிற்கேற்றவாறு பேசத் தொடங்கினர். நாடக மேடை விவாத மேடையாயிற்று. நாடகக் கலை நலியத் தொடங்கியது. ஸ்பெஷல் நாடகங்களிலே போட்டியும் பூசலும் தாண்டவமாடின. பெரிய நடிகர்கள் பலரிடம் ஏற்பட்ட இந்தக் கட்டுப்பாடின்மையே சிறுவர்களை நடிகர்களாகக் கொண்ட நாடக சபைகளின் தோற்றத்திற்கும், வெற்றிக்கும் காரணமாக இருந்தன என்பது மறுக்க முடியாத உண்மை. மனம் போன போக்கில் பேசுபவர்கள்பால் வெறுப்புற்ற சுவாமிகள் கட்டு திட்டங்களுடன் அடங்கி நடிக்கும் முறையில் சிறுவர் நாடகக் குழுவைத் தோற்றுவித்தார்.

பால மீன ரஞ்சனி சபை

சுவாமிகள் ஆசிரியராக இருந்த முதல் ‘பாய்ஸ்’ கம்பெனி திரு. ஜெகந்நாத ஐயர் அவர்களின் பால மீன ரஞ்சனி சங்கீத சபை. பிற்காலத்தில் ஆசிரியப் பொறுப்பேற்று பல நடிக மணிகளைத் தோற்றுவித்த திருவாளர்கள் பி. டி. சம்பந்தம், எம். எஸ். முத்துகிருஷ்ணன், டி. பி. பொன்னுசாமிப் பிள்ளை, எம். வி. மணி, டி. பாலசுப்பிரமணியம், கே. சாரங்கபாணி, எஸ். வி. வெங்கட்ராமன், நவாப் டி. எஸ். இராஜ மாணிக்கம், எம். ஆர். ராதா முதலிய எண்ணிறந்த நடிகர்கள் மதுரை பாலமீன ரஞ்சனி சங்கீத சபையில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

தத்துவ மீனலோசனி சபை

சிலகாலம் அந்தச் சபையில் இருந்த பிறகு திரு. ஜெகந்நாதய்யர் அவர்களுடன் ஏற்பட்ட மனத் தாங்கலின் விளைவாகச் சுவாமிகள் மதுரைக்கு வந்து சில நண்பர்களின் கூட்டுறவோடு 1918-ஆம் ஆண்டில் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா என்ற நாடகக் குழுவைத் தோற்றுவித்து அதன் ஆசிரியராக அம்ர்ந்தாா.

எங்கள் குருநாதர்

இந்தக் குழுவில்தான் டி. கே. எஸ். சகோதரர்கள் என்று குறிக்கப்படும் நாங்கள் சேர்க்கப்பட்டோம்.

1918-ஆம் ஆண்டு முதல் 1922-ஆம் ஆண்டுவரை ஏறக்குறைய நான்காண்டுகள் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளிடம் நாடகக் கல்வி பயிலும் நற்பேற்றினைப் பெற்றேன். அவருடைய அறிவாற்றலைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள முடியாத பருவம். இன்று உணருகிறேன் எங்கள் குருநாதரின் பெருமையை.

நோயும் சிகிச்சையும்

1921-ஆம் ஆண்டின் இறுதியில் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையார் சென்னைக்குப் புறப்பட்ட போது சுவாமிகள் நோயுற்றதின் காரணமாகத் தூத்துக்குடிக்குச் சென்றார். சென்னையில் நாடகம் தொடங்கியதும் தூத்துக்குடியிலிருந்து வந்த செய்தி எங்களெல்லோரையும் திடுக்கிடச் செய்தது. ‘சுவாமிகள் பக்கவாத நோயினா பீடிக்கப்பட்டு வலது கால் வலது கை முடக்கப்
பட்டு வாயும் பேச முடியாத நிலையில் படுக்கையில் இருக்கிறார்’ என்றறிந்ததும் எல்லோரும் கண்ணீர் விட்டனர்.

கம்பெனியின் உரிமையாளர்களில் ஒருவரான திருவாளர் பழனியா பிள்ளை அவர்கள் சுவாமிகளைச் சென்னைக்கே அழைத்து வந்து சிகிச்சை செய்ய முனைந்தார். மருத்துவர்கள் பலர் வந்து பார்த்தனர். எவ்வித முயற்சியும் பயனளிக்கவில்லை.

இந்த நிலையிலிருந்தபோதும் சுவாமிகள் நாடகப் பணியிலிருந்து ஓய்வெடுத்துக் கொள்ளவில்லை. நாடக அரங்கிற்கு வந்து திரை மறைவில் ஒரு சாய்வு நாற்காலியில் படுத்தவாறே அவ்வப்போது கைகளால் சைகை காட்டித் தமது ஆசிரியப் பொறுப்பை நிறைவேற்றி வந்தார்.

மறைவு

இவ்வாறு ஆசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியராகவும், தமிழ் நாடக உலகின் தந்தையாகவும் பல ஆண்டுகளைக் கழித்த சுவாமிகள், இறுதிவரை பிரமச்சாரியாகவே இருந்து 1922-ஆம் ஆண்டு நவம்பர் ௴ 13-ந்தேதி திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு பிரஞ்சிந்தியாவைச் சேர்ந்த புதுச்சேரி நகரில் தமது பூதவுடலை நீத்தார்.

தமிழ் நாடகத் தாய் பெறற்கரிய தனது புதல்வனை இழந்தாள். நடிகர்கள் தங்கள் பேராசிரியரை இழந்தனர். கலையுலகம் ஓர் ஒப்பற்ற கலைஞரை இழந்து கண்ணீர் வடித்தது.


நாடக முறை வகுத்த பெரியார்

ஐம்பதாண்டுகளுக்கு முன்பெல்லாம் தமிழ் நாடக மேடையில் வசனங்கள் கிடையா. முழுதும் பாடல்களே பாடப்பட்டு வந்தன. அக் காலத்தில் நாடகங்களை இயற்றிய ஆசிரியர்கள் எல்லா நாடகங்களையும் இசை நாடகமாகவேதான் எழுதினார்கள். திருவாளர் அருணாசலக் கவிராயர் அவர்களின் ‘இராம நாடகம்’ இதற்குச் சான்று கூறும்.

சில ஆண்டுகளுக்குப் பின் இந்த நிலை மாறி நடிக நடிகையர் தமது திறமைக்கும் புலமைக்கும் ஏற்றபடி நாடகக் கதைக்குப் புறம்பாகப் போகாமல் கற்பனையாகவே பேசிக்கொள்ளும் முறை வழக்கத்தில் வந்தது. இவ்வாறு நடைபெறும் உரையாடல்கள் சில சமயங்களில் வரம்பு மீறிப் போய்விடுவது முண்டு.

இந்தச் சமயத்தில்தான் நமது சுவாமிகள் தமிழ் நாடக உலகில் ஒழுங்கும் கட்டுப்பாடும் நிலவ வழிகோலினார். அந்தக் காலத்திலே நடைபெற்று வந்த புராண, இதிகாச, கற்பனை நாடகங்களுக்கெல்லாம் பாடல்களும் உரையாடல்களும் எழுதி வரம்புக்குட்படுத்தியதோடு, புதிய நாடகங்கள் பலவற்றையும் இயற்றி உதவினார்.

இவ்வாறு எழுதப்பட்ட நாடகங்களே சென்ற இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் நாடக மேடைக்கலை அழிந்துபோகாமல் காப்பாற்றி வந்தன. இன்றும் ஸ்பெஷல் நாடக நடிகர்கள் பலருக்கு உயிர்கொடுத்து நிற்பவை சுவாமிகளின் கோவலனும், வள்ளி திருமணமும், பவளக்கொடியும்தாம்.

ஒரு நாடகம் சிறப்பாக இருக்கவேண்டுமானால், அந்நாடகத்தில் பங்கு கொள்ளும் நடிகர்களிடையே ஒழுங்கும் நியதியும் கட்டுப்பாடும் இருக்க வேண்டும். சுவாமிகள் தமது வாழ்நாள் முழுதும் இதையே வலியுறுத்தி வந்தார்.

தமிழகத்திலே முன்பு நடைபெற்று வந்த பல நாடகங்களை உங்களிற் சிலர் பார்த்திருக்கலாம். ஒரு சிலர் கேள்விப்பட்டுமிருக்கலாம். ஆனால், அந் நாடகங்களை இயற்றிய ஆசிரியர் இன்னாரென்பதை உங்களிற் பெரும்பாலோர் அறிந்திருக்க முடியாது. கோவலன், வள்ளி திருமணம், பவளக்கொடி, அல்லி அர்ஜூனா, சீமந்தனி, சதியனுசூயா, மணிமேகலை, லவகுசா, சாவித்திரி, சதிசுலோசனா, பிரகலாதன், சிறுத்தொண்டர், பிரபுலிங்கலீலை, பார்வதி கல்யாணம், வீரஅபிமன்யு, முதலிய பல நாடகங்கள் சுவாமிகளால் இயற்றப்பெற்றவை.

இந்த நாடகங்களையெல்லாம், ஒழுங்காக நாடகங்களை நடித்துவந்த எந்த நாடக சபையாரிடம் நீங்கள் பார்த்திருந்தாலும் அவர்கள் நமது சுவாமிகளின் பாடல்களையும் உரையாடல்களையுமே உபயோகப்படுத்தி யிருப்பார்கள் என்பதற் கையமில்லை.

மேற்குறிப்பிட்ட நாடகங்கள் அனைத்தும் இன்று சிலருக்குப் பிடிக்காதிருக்கலாம். ஆனால், இவைதாம் தமிழ் நாடக மேடையைப் பாதுகாத்துத் தந்தவை என்பதைத் தமிழர்கள் மறந்துவிடக் கூடாது. புராண இதிகாசக் கதைகள் என்பதற்காக அந்நாடகங்களிலே பொதிந்து கிடக்கும் பொன்னுரைகளையும், பேருண்மைகளையும், அவற்றைப் பல ஆண்டுகளுக்கு முன் இயற்றியருளிய புலவர்பெருமானின் நாடகத் திறனையும் நல்லிசைப் புலமையையும் அலட்சியப்படுத்துதல் கூடாது.

நாடகப் புலமை

சுவாமிகளின் நாடகப் புலமையை அக்காலத்தில் வியந்து பாராட்டாதாரில்லை. அவருடைய பாடல்களிலே உயர்ந்த கருத்துக்கள் நிறைந்திருக்கும்; அதே சமயத்தில் கல்லாதாருக்கும் பொருள் விளங்கக்கூடிய முறையில் எளிமையாகவுமிருக்கும்.

பாடல்கள் எழுதும்போது சுவாமிகள் சொற்களைத் தேடிக் கொண்டிருப்பதில்லை. எதுகை, மோனை, நயம், பொருள் இவற்றுடன் சொற்கள் அவரைத் தேடிவந்து நிற்கும். ஒரே நாளிரவில் ஒரு நாடகம் முழுவதையும் கற்பனையாக எழுதி முடிக்கும் அரும்பெரும் ஆற்றல் சுவாமிகளுக்கிருந்தது.

ஒரு முறை எழுதியதை அடித்துவிட்டுத் திருத்தி எழுதும் வழக்கம் சுவாமிகளிடம் இருந்ததில்லை. அடித்தல் திருத்தல் இல்லாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டே போவார். சிந்தனை செய்ய நேரும் சந்தர்ப்பங்களில் எழுதுவதை நிறுத்தாமல் சிவமயம், வேலும் மயிலுந் துணை என்று பலமுறை எழுதிக் கொண்டே இருப்பார். இரண்டொரு பக்கங்கள் இவ்வாறு எழுதியபின் மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து பாடலைப் பூர்த்திசெய்வார். சுவாமிகள் எழுதிய நாடகக் கையெழுத்துப் பிரதிகள் இந்த உண்மையை அறிவிக்கின்றன.