தமிழ் மருத்துவ வரலாற்றுத் தொன்மைகள்

விக்கிமூலம் இலிருந்து

தமிழ் மருத்துவம்[தொகு]

தமிழ் மருத்துவ முறைகள் 10000 முதல் 4400 B.C.E ஆகிய காலங்களில் தோன்றியதாக T.V.சாம்பசிவம் பிள்ளை குறிப்பிடுகிறார். (Sambasivam Pillai, Tamil-English Dictionary of Medicine, 3: 2089.)

மயன்[தொகு]

இலங்கை வேந்தன் இராவணனின் மனைவி மண்தோதரியின் தந்தை மயன். இவனின் சீடர்கள் பன்னிருவர். அவர்களில் ஒருவரே மூலர் என்று ‘வைசம்பாயணம்’ (பக்.118) கூறுகிறது. மேலும், மயன் மூலிகைச் செந்நூல் என்னும் நூலுக்கு ஆசிரியர் என்றும் கூறுகிறது. காவிரிப்பூம் பட்டினத்தில் தொடித்தோட் செம்பியனால் நடத்தப் பெற்ற இந்திர விழாவில் பொன்னாலும் மணியாலும் நியமிக்கப் பெற்ற தோரணவாயில் பட்டிமண்டபம் ஆகியவை மயனால் நியமித்துக் கொடுக்கப்பட்டவை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. (சிலப்ப.1: 5:100 - 110)

இராவணன்[தொகு]

இராவணன் பெயரிலுள்ள மருத்துவ நூல்களில் சில சிங்கள மொழியின் வழக்கில் இருந்து வருகின்றன. பதினைந்தாம் நூற்றாண்டளவில் சிங்களத்தில் எழுதப்பட்ட வைத்திய சிந்தாமணி பைசாஜ்ஜ சங்கிரகம் ( Vaidya Cintamani Bhaisadya Sangrahava ) என்னும் நூல் வைத்திய சிந்தாமணி என்னும் தமிழ் மருத்துவ நூலைத் தழுவி எழுதப் பட்டதாகும்.

இராவணனின் நாடிப் பரிட்சை (Nadi Pariksha), அர்க்கப் பிரகாசம்(Arka Prakashata ), ஒடிஷா சிகிட்ஷா (Uddisa Chiktsaya ), ஒடியா சிகிட்ஷா (Oddiya Chikitsa), குமார தந்த்ரயா (Kumara Tantraya ), வாடின பிரகாரனயா (Vatina Prakaranaya ) என்னும் நூல்கள் சிங்கள மொழியில் இயற்றப்பட்டு பின்னர் சமஸ்கிருத மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டன என்று (சிங்) கள எனும் இயக்கத்தைத் தோற்றுவித்த முனிதாச குமாரதுங்க கூறியுள்ளார்.

தாஸிஸ் இராவணன் என்னும் பெயருடையவன் அரசனாக, இராவணன் ‘அங்கவெட்டு’ எனப்படும் வர்மக்கலை, மருத்துவக்கலை, இசைக்கலை போன்ற பல கலைகளில் சிறந்து விளங்கியவனாக விளங்கினான் என்று சிங்கள மொழியின் தொன்மை நூலாகிய இராஜவலியா மற்றும் இராவண வலியா என்னும் நூல்கள் புகழ்ந்துரைக்கின்றன.

இராவணன் என்று பதினோரு பேர் இருந்துள்ளனர். அவர்களில் நள இராவணன், மனு இராவணன், புனு இராவணன், தாஸிஸ் இராவணன் என்பவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களில் தாஸிஸ் இராவணன் என்பவனுக்குப் பத்துவகையான ஆற்றல்களுடன் பத்து நாடுகளை ஆண்டான். அதனால் அவன் பத்துகலை இராவணன் என்று அழைக்கப்பட்டான் என்று குறிப்பிடுகிறது.

மன்னன் தாஸிஸ் இராவணன் கி.மு. 2554 – 2517 என்னும் காலத்துக்கு உரியவன். இவன் சிங்கள இனத்தின் பழங்குடி இனத்தவன். அங்கவெட்டு வீரன். மண்டோதரியின் கணவன் என்று சிங்கள வரலாறு கூறுகிறது.

இந்திய – ஆரியர்களின் கலப்பினத்தவர்களான சிங்களவர்கள் வட இந்தியாவிலிருந்து (ஒரிசா) இலங்கைக்குக் குடிபெயர்ந்ததே கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தான். அவ்வாறிருக்கும் போது சுமார் 5000 ஆண்டுக்கு முன் வாழ்ந்ததாகக் கூறப்படும் இராவணன் சிங்களன் என்றும் அவன் சிங்கள மொழியில் நூல் இயற்றினான் என்றும் சிங்கள இனத்தின் பழங்குடியைச் சார்ந்தவன் என்றும் கூறுகின்ற சிங்களர் வரலாறு, வரலாற்றுப் புரட்டு என்பது தெளிவாகிறது.

சிந்துவெளி திராவிடர் நாகரிகம்[தொகு]

சிந்துவெளி நாகரிகத்தின் அடிப்படையில் அமைந்த திராவிடர் நாகரிகம் கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன் இருந்தது என்றும்' அது ‘சைத்தவ பண்பாட்டு நாகரிகம்' என்று அழைக்கப்பட்டது என்று பேராசிரியர். கே. ஆர். ஸ்ரீ கண்ட மூர்த்தி குறிப்பிடுகின்றார்.

“சிந்துவெளி நாகரிக இனத்தின் பரம்பரையினர் என்று கருதப்படு கின்றவர்கள், தமிழ்நாட்டில் ‘திராவிடர்'களில் இன்னும் பிரபலமாக இருக்கின்ற ‘சித்த வைத்திய முறை'யைப் பின்பற்றுகிறவர்கள் என்றும், இவர்களே, ‘சைத்தவ நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள்' என்றும் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்" எனப் பேராசிரியர் எஸ். கே. இராமச்சந்திரராவ் தெரிவிக்கின்றார்.

இதனைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, ஆயுர்வேத மருத்துவ முறையை விடவும், இந்திய மருத்துவ முறைகளில் மிகவும் தொன்மையான மருத்துவ முறையாக இருந்து, தொடர்ந்து வந்து கொண்டிருப்பது சித்தமருத்துவ முறை என்பது தெளிவு.

தமிழ் மருத்துவர்களை ‘ஆயுள்வேதர்' என்று இளங்கோ வடிகள் குறிப்பிடுகிறார். “ஆயுள் வேதமாகிய வைத்திய நூல்கள் தமிழில் அளவிறந்த அளவில் இருக்கின்றன. சித்தர்கள் பதினெண் மரும் ஆயுள் வேத நூல்களை இயற்றியிருக்கின்றனர். அவற்றில் பெரும்பாலானவை இப்போதும் உள்ளன. சமஸ்கிருத மொழியிலும் ஆயுள்வேத நூல்கள் மிகுதியாக இருக்கின்றன. தமிழ் ஆயுள்வேதமும் சமஸ்கிருத ஆயுர்வேதமும் வேறு வேறானவை. தமிழ் ஆயுள் வேத நூல்கள் பலவற்றை இன்றும் தஞ்சை சரசுவதிமகால் நூல்நிலையத்தில் காணலாம் என்று உ.வே. சாமிநாதய்யர் கருத்துத் தெரிவிக்கின்றார்.

1927 வரை சித்த மருத்துவம் என்ற பெயர் இன்மையால்' இன்றைய ‘தமிழ் மருத்துவம்' ‘ஆயுள்வேதம்' என்றே வழங்கப்பட்டு வந்திருக்கிறது.

பண்டைக்காலத் தமிழகத்தில் மருந்து[தொகு]

பண்டைக்காலத் திராவிட மக்களாகிய தமிழர்கள், மருந்தையும் மருந்துப் பொருளையும் பயன்படுத்துவதில் வளர்ச்சியடைந்த நிலையில் சிறந்து காணப்பட்டார்கள் என்பதற்கு, சிந்துவெளி நாகரிகம் பற்றிய அகழாய்வில் கிடைத்துள்ள பொருள்கள் சான்றாக அமைகின்றன. இன்றைய தமிழ் மருத்துவர்களும் ஆயுர்வேத மருத்துவர் களும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகின்ற சிலாசித்து' மான்கொம்பு, பவழம்' தாளகம் போன்ற மருந்துப் பொருள்கள் அங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால், வேதகாலத்திற்கும் முன்பாகவே பழந்திராவிட மருத்துவம், இந்தியா முழுவதும் பரவி இருந்திருக்கிறது. அது பின்னாளில், மொழி, இடம், கொள்கை ஆகியவற்றிற் கேற்பப் பிரிந்து சித்த மருத்துவம், ஆயுர்வேதம் என இரண்டு நிலைகளில் வளர்ந்தது என்பர்.

அறுவை மருத்துவக் கருவி[தொகு]

புதை பொருள் அகழாய்வு ஆராய்ச்சியின்படி, சிந்து, கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்திருந்த பழந்திராவிட மக்கள், அறுவை மருத்துவத்துக்காகச் செப்புக் கத்திகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர் 2 என்பது தெரியவருகிறது. அறுவை மருத்துவத்துக்காகச் செம்பைப் பயன்படுத்தினால்' அது பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்னும் அறிவியல் உண்மையைப் பண்டைய தமிழர் அறிந்திருந்தனர் என்பது பெறப்படுகிறது. புதைந்த நாகரிக இனத்து மக்கள் மருந்து, மருத்துவம்' அறுவை மருத்துவம் ஆகியவற்றை அறிந்தும் பயன்படுத்தியும் வந்திருந்தனர் என்பதை உறுதிப் படுத்துகிறது.

அறுவை மருத்துவம்[தொகு]

போர்க் காலங்களில் போர்வீரர்களுக்கு ஏற்படுகின்ற விழுப்புண் பெரிய அளவில் இருந்தால் அப்புண்ணை மருந்துகளால் ஆற்றுவது கடினம் என்பதை உணர்ந்து' மருத்துவ வல்லார்களால் அப்புண்கள் தைக்கப்பட்டன. அதன் பின்னரே மருந்திட்டுக் கட்டுவதும் நிகழ்ந்துள்ளது. இதுவே இன்றைய நாளிலும் நடைமுறையிலுள்ளது. இவ்வாறு, விழுப்புண்ணைத் தைக்கும் முறையைப் பதிற்றுப் பத்து குறிப்பிகிறது.

"மீன்தேர் கொட்பின் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள்ளூசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்" – பதிற்றுப்பத்து 5: 2:1-3

நீரிலுள்ள மீனைக் கொத்துவதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியில் நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் சிரல் பறவையைப் போல, நெடிய வெள்ளூசி புண்ணுக்குள் நுழைந்து வெளியே வருகிறது என்கிறது. வெள்ளூசி என்பது வெள்ளியால் செய்யப்பட்ட தையல் ஊசியாக இருக்கலாம்.

மருந்துப் பொருள்கள்[தொகு]

இரசம், தாளகம் ஆகிய இரண்டும் சீனம், கிரேக்கம், இத்தாலி போன்ற மேலை நாடுகளில் உற்பத்தியாகின்றன. ஆனால் சங்க காலப் புலவராகிய நற்றத்தனார் – தாளகம், நளிர் சுரத்திற்கு மருந்தென்று குறிப்பிடுகின்றார்.

சக்தி பீசம் என்று கூறப்படுகின்ற கந்தகம், கந்தக பற்பம் என்னும் மருந்தைப்பற்றி மருத்துவ ஆற்றுப்படை என்னும் சங்க பாடல் குறிப்பிடுகிறது. கந்தகத்தினால் செய்யப்படுகின்ற மருந்து பால்வினை நோய்க்கும் உணவினால் ஏற்படக்கூடிய நஞ்சு நோய்க்கும் மருந்தாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இங்குலிகம் (சாதிலிங்கம்)[தொகு]

தமிழில் இங்குலிகம் என்று கூறப்படுகின்ற சாதிலிங்கம் சீனத்திலிருந்து இறக்குமதியாவதாகக் கூறப்படுகிறது. அந்த சாதிலிங்கம் பற்றிய குறிப்பு சங்க கால நூலில் காணப்படுவது சிறப்பாகும்.

"அஞ்சனக் குன்றுஏய்க்கும் யானை அமர் உழக்கி
இங்குலிகக் குன்றேபோல் தோன்றுமே - செங்கண்
வரிவரால் மீன் பிறழும் காவிரி நாடன்
பொருநரை அட்ட களத்து" (களவழி நாற்பது – 7 )

சிவந்த கண்களையுடை வரால் மீன்கள் தவழுகின்ற காவிரி நாடனாகிய சோழன் செங்கணான், தன் பகைவரோடு போர் புரிந்த போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கும் கருமையான குன்றைப் போன்ற யானை, இங்குலிகக் குன்றம் போல் தோன்றுகின்றது! என்று, புலவர் பொய்கையார் பாடுகின்றார்! என்றால், சங்க காலத்தில் சாதிலிங்கத்தின் பயன்பாடு அதிக அளவில் இருந்தது என்றே கருதலாம்.

மருத்துவப் பூக்கள்[தொகு]

சங்க இலக்கியமான பத்துப் பாட்டுள் ஒன்றான குறிஞ்சிப் பாட்டை இயற்றிய கபிலர்' 98 வகையான பூக்களைக் குறிப்பிடுகிறார். அவை அனைத்தும் மருத்துவக் குணங்களைக் கொண்ட மரம், செடி' கொடிகளாகும். அந்நூலுள், 98 வகையான பூக்களைக் கூற வேண்டிய சூழல் நேராமலேயே அவை உரைக்கப்பட்டிருப்பதாக அந்நூலைக் கற்பார் உணர்வர். அவர்' அவ்வாறு உரைக்கக் காரணம்? தானறிந்த வற்றைப் பிறரும் அறிந்து இன்பமடைய வேண்டுமென்ற நோக்கமே எனலாம்.

குரல் வளம் தரும் மருந்து[தொகு]

சேறை. அறிவனார் என்னும் இசை மேதையால் இயற்றப் பெற்றது பஞ்சமரபு. இசை' முழவு, தாளம்' கூத்து, அபிநயம் என்னும் ஐந்துக்கும் இலக்கணமாக அமைவது. இந்நூல், இசைப் பாடகர்கள் குரல் வளம் பெற மருந்தும் உரைக்கிறது.

"திப்பிலி தேன்மிளகு சுக்கினோ டிம்பூரல்
துப்பில்லா ஆன்பால் தலைக்காடைஒப்பில்லா
வெந்நீரும் வெண்ணெயு மெய்ச் சாந்தும் பூசவிவை
மன்னூழி வாழும் மகிழ்ந்து" – பஞ்சமரபு. செய்.63

என்னும் இச்செய்யுள் திப்பிலி, தேன்' மிளகு, சுக்கு' இம்பூரல், பசுவின்பால்' தலைக்காடை, மெய்ச்சாந்து இவற்றை வெண்ணெய் விட்டு அரைத்து வெந்நீரில் குழைத்துப் பூசிவரக் குரலின் வளம் அதிகப்படும் என்கிறது.

பஞ்சமரபு என்னும் இந்நூல், சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லாரால் அதிகமான மேற்கோள்களுக்காகப் பயன்பட்ட நூல். இது' சிலப்பதிகார காலத்திற்கும் முற்பட்ட சங்க இலக்கியக் காலத்தை ஒட்டிய காலத்தில் தோன்றிய நூல் என்பது குறிப்பிடத் தக்கது.

திருக்குறள் கூறும் மருத்துவம்[தொகு]

உற்ற நோயைப் போக்குவதற்குச் செய்யப்படுவது மருத்துவம். அந்நோயைப் போக்குவது மருந்து. மருந்து, மருத்துவத்தின் பகுதி யாகும். மருந்து மட்டும் நோய் தீர்க்கப் பயன்படுவதில்லை. நோயுற் றார்க்கு உற்ற நோய் என்ன வென்று உய்த்துணரும் மருத்துவன் வேண்டும். மருத்துவன் குறிப்பிட்டுரைக்கும் மருந்தை நோயுற் றானுக்கு ஊட்டுகின்ற மருத்துவத் துணைவன் வேண்டும். ஆக மருத்துவம் என்பது நோயாளி, மருத்துவன், மருந்து, மருத்துவத் துணைவன் என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டது. இதனை மருந்து என்னும் சொல்லால் திருக்குறள் உரைக்கும்.

"உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து" - திருக்குறள்.950

உற்றவன் - நோயுற்றவன்; தீர்ப்பான் - மருத்துவன்; மருந்து - மருத்துவனின் கருவியான நோய்தீர்க்கும் மருந்து; உழைச் செல்வான் - மருத்துவனுக்கும் நோயாளிக்கும் துணையாயிருந்து மருந்தூட்டுபவன் எனப் பொருள் உரைக்கிறது.

கூட்டு மருந்து[தொகு]

பல மருந்துகளைத் தொகையாகக் குறிப்பிடும் சொல் பழந்தமிழரிடையே காணப்படுகிறது. மருந்துகளைக் குறிக்கும் தொகைச் சொல் வழக்கில் இருந்திருந்ததைக் கொண்டு மருந்தியலின் வளர்ந்த நிலையினை உணரலாம்.

நிலவரைப்பு' என்பது மருந்தின் தொகைச் சொல். இச்சொல்லைப் பற்றிய கருத்துரை வழங்கிய அடியார்க்கு நல்லார், சல்லிய கரணி' சந்தான கரணி, சமனிய கரணி' மிருத சஞ்சீவினி என்னும் நான்கு மருந்துகளை உள்ளடக்கியதாகக் குறிப்பிடுகின்றார்.

கரணி என்பது அரைப்பு முறையால் செய்யப்படுகின்ற மருந்துகளைக் குறிப்பிடும்.

சந்தான கரணி- அருகிய பெருமருந்தென்பர். இது முறிந்த உறுப்புச் சந்து செய்யும் (இணைக்கும்) மருந்து.
சல்லிய கரணி - வேல்தைத்த புண்ணை ஆற்றும் மருந்து.
சமனிய கரணி - புண்ணின் தழும்பை ஆற்றும் (அ) மாற்றும் மருந்து.
மிருத சஞ்சீவினி - இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்யும் மருந்து.

மேற்கண்ட நான்குவித மருந்துகளின் வினைப்பயனை நோக்கும் போது, தமிழ் மருத்துவம் மிக உயர்ந்த நிலையில் இருந்தது தெரிய வருகின்றது. இம்மருந்துகளைப் போன்ற பயனுடைய மருந்துகள் மேலை மருத்துவமான அலோபதி மருத்துவத்திலும், இன்றைய நிலையிலுள்ள எந்த மருத்துவத்திலும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

அழகுக்கு மருந்து[தொகு]

நாட்டிய நாயகி கலைச் செல்வி மாதவி, தன் காதல் தலைவன் கோவலனுடன் உலாவி வர–தன்னை ஒப்பனை செய்து கொள்ள நீராடுகிறாள். மாதவி நீராடிய நன்னீரில், ‘பத்துவகைப் பட்ட துவர்', ‘ஐந்து வகைப்பட்ட விரை', ‘முப்பத்திரண்டு வகை ஓமாலிகை' ஆகிய நாற்பத்தேழு மருந்துப் பொருள்களும் ஊறிக் காய்ந்தது என்கிறது சிலம்பு. இவை' அழகுப் பொருள்களின் கூட்டு போலும். அப்பொருள்கள் ஊறிய நீரில் நீராடிய மாதவி ‘நிறம் பெற்றாள்' என்று குறிப்பிடுகிறது. மருந்து, நோய்க்கு மட்டும் அல்லாமல் உடல் வனப்பிற்கும் பயன்பட்டிருக்கிறது.

தமிழ் மருத்துவத்திற்குப் பயன்படுகின்ற ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு குணப் பண்பினைக் கொண்டது. அதேபோல், அம் மருந்துகள் ஒன்றோடொன்று கூடி வினையாற்றும் போது, நேர்வினை, எதிர்வினை ஆகியவற்றைத் தோற்றுவிக்கக் கூடியன. இந்த இரு வகைகளையும் மருத்துவ நூலார்' நட்பு, பகை என்னும் இரண்டு பண்புகளாகக் குறிப்பிடுகின்றனர். மருந்துப் பொருள்கள் பற்றிய தேர்ந்த பயிற்சியும் புலமையும் இருந்தால் மட்டுமே இவற்றை அறிய முடியும். அவ்வாறு அறிய நேர்ந்தால் மட்டுமே மருந்துகளைக் கூட்ட முடியும்.

நாற்பத்தேழு மருந்துப் பொருள்களும் ஒரே வகையான பண்புகள் உடையவை என்பதை அறிந்தே மருத்துவப் புலமையாளர்களால் இக்கூட்டு மருந்து உருவாகியிருக்க முடியும் என்பதால்' அக்காலத்து மருத்துவர்களின் புலமை பெறப்படுகிறது.

குழந்தை மருத்துவம்[தொகு]

பண்டைத் தமிழர்கள் வாழ்வில் இடம் பெற்றிருந்த மருத்துவம், எல்லாவிதமான மருத்துவமாகவும் விரிவடைந்து பரிணாம நிலையில் வளர்ந்து வந்திருப்பதாகத் தெரிகிறது. அவ்வாறு வளர்ந்து வந்த மருத்துவம் குழந்தை மருத்துவத் துறையையும் தன்னகத்தே கொண்டதாகக் திகழ்ந்திருக்கிறது.

இளங்குழந்தைகளுக்குச் செய்யப் படுகின்ற மருத்துவத்தை மிகவும் தேர்ந்தநிலை பெற்றதாகவே கருத வேண்டும். குழந்தைகள், நோயையோ, நோயின் குறியையோ கூறும் நிலையில் இருப்பதில்லை. குறிப்பறிந்தும்' சோதித்தறிந்துமே மருத்துவம் பார்க்க வேண்டியிருக்கும். அம்மாதிரியான மருத்துவத்தை மனையுறையும் பெண்டிரே செய்தனர் என்பதற்குச் சீவக சிந்தாமணி சான்றாகிறது.

"காடி யாட்டித் தராய்ச் சாறும் கன்னன் மணியும் நறு நெய்யும்
கூடச் செம்பொன் கொளத் தேய்த்துக் கொண்டு நாளும் வாயுறீஇப்
பாடற் கினிய பகுவாயும் கண்ணும் பெருக உகிர் உறுத்தித்
தேடித் தீந்தேன் திப்பிலி தேய்த்து அண்ணா உரிஞ்சி மூக்குயர்ந்தார்" – சீவகசிந்தாமணி – செய். 2703

பிரமிச்சாறு, கண்ட சருக்கரை' தேன், நறுநெய் ஆகியவற்றுடன் காடியைக் கூட்டி, பொன்னினால் தேய்த்துக் குழந்தைகள் உண்ணுகின்ற அளவிற்குப் பக்குவப்படுத்திய மருந்தாக்கி' தினமும் வாய்வழி ஊட்டினர் என்றதனால்' குழந்தை மருத்துவத்தினை மகளிரும் அறிந்திருந்தனர் என்பது பெறப்படுகின்றது.

விலங்கு' தாவர மருத்துவம்[தொகு]

பண்டைக் காலத்துத் தமிழ் மருத்துவ முன்னோர்கள் மனிதனுக்கு உற்ற நோயைப் போக்கும் மருந்துகளையும் மருத்துவத்தையும் கண்டறிந்திருந்ததைப் போல' மனிதனுக்கு உற்ற துணையாக இருந்த விலங்குகளுக்கும்' உணவுப் பொருளாகப் பயன்பட்ட தாவரங்களுக்கும் மருத்துவம் பார்த்ததுடன், அவை நோய் வராமல் பராமரிக்கவும் கற்றிருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது.

யானைக்கு வயா நோய்[தொகு]

பெண் யானை கருவுற்றிருக்கும் வேளையில் வரும் நோய் ‘வயா' எனப்படும். இந்நோய்க்கான மருத்துவம் கூறப்பட்டுள்ளது. - புறநானூறு. செய்.91

யானைக்குக் கருச்சிதைவு[தொகு]

கருவுற்ற யானையும் மூங்கிலின் முளையைத் தின்றால், அதன் கரு அழிந்துவிடும் என்று குறிப்பினால் உரைத்து' அம்மூங்கில் பெண்களுக்கும் கொடுத்தால் என்னவாகும் என்பதை அவரவர் முடிவிற்கே விட்டுவிடுவதைப் போல, ‘கருச்சிதைவிற்கு மூங்கில் முளை' என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

எள்ளின் "மகுளி' நோய்[தொகு]

தாவரங்களிலிருந்து பெறப்படுகின்ற எண்ணெய்களில் எள்ளின் பயன்பாடு, சங்க காலத்திலிருந்து இன்றுவரை சிறந்த இடத்தைப் பெறுகிறது. (எள்+நெய்=எண்ணெய்) எள்ளின் பயனைக் கருத்திற் கொண்டு எள்ளிற்கும் மருத்துவம் காணப்பட்டது. எள்ளிற்கு வரும் நோய் ‘மகுளி' என்றும், அவ்வாறு நோயுற்ற எள்ளின் சுவை கைப்புச் சுவை கொண்டதாக இருக்கு மென்றும் உரைக்கப்படுகிறது.

திரிகடுகம்[தொகு]

‘திரிகடுகம்' என்பது சுக்கு, மிளகு' திப்பிலி என்னும் மூன்று மருந்துகளின் கூட்டுப் பெயராகும். இம்மருந்து மூன்று மருந்துகளைக் கொண்டிருப்பதைப் போல' இந்நூலின் செய்யுள் ஒவ்வொன்றிலும் மூன்று கருத்துக்களைக் கூறி ஓர் அறநெறியை வலியுறுத்திக் கூறுவது போல் அமையும்.

சிறுபஞ்சமூலம்[தொகு]

‘சிறுபஞ்சமூலம்' என்பது கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி' பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகைகளின் வேர்களைக் கொண்ட கூட்டுப் பெயராகும். இந்நூலின் செய்யுள்கள் ஐந்து கருத்துகளைக் கூறி ஒரு நீதியை உரைப்பதாக அமையும்.

ஏலாதி[தொகு]

‘ஏலாதி' என்பது ஏலம், இலவங்கம்' சிறுநாகப்பூ, மிளகு' திப்பிலி, சுக்கு ஆகிய ஆறு பொருள்களின் கூட்டுப் பெயராகும். இதன் பாடல்கள் ஆறு கருத்துகளைக் கொண்டு ஒரு நெறியை உணர்த்துவதாக அமையும்.

மேற்கண்ட இம்மூன்று கூட்டு மருந்துகளும் சிறப்புடன் போற்றப்படுகின்ற மருந்துகளாக தமிழ் மருத்துவத்தில் இடம் பெறுவதாகும். இம்மருந்துகள் சித்த மருத்துவம்' ஆயுர் வேதம் என்னும் இரண்டு மருத்துவத்திலும் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், இம்மருந்தின் தோற்றம்' பழந்தமிழர் மருத்துவ முறை என்பது உணரத்தக்கதாகும்.

மேற்கண்ட இவையெல்லாம், இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், தமிழ் மருத்துவம் சார்ந்த குறிப்புகளாகும்.

சித்தர் காலம்[தொகு]

சித்தர்களின் காலத்தைக் குறிப்பிடும் ஆவணங்கள் தொகுக்கப்படாததனால், சித்தர் வரலாற்றை அறிந்துகொள்வது கடினமாக இருக்கிறது. ஆனால், சித்தர்களின் மரபை அறிந்துகொள்ள போதிய அளவு ஆவணங்கள் கிடைக்கின்றன.

ஆதிநாதர்[தொகு]

தமிழ் மருத்துவத்தின் அங்கமாகிய சித்த யோக மருத்துவ முறைகளைத் தோற்றுவித்தவர் ஆதிநாதர் என்று “ஹடயோக பிரதீபிகை” குறிப்பிடுகிறது.

வடநாட்டு நாதாந்த சித்தர்களுக்கு யோகமுறைகளைக் கற்பித்தவர் ஆதிநாதர். ஆதிநாதர் என்னும் பழமையான பெயர் சிவனைக் குறிக்கிறது.

சித்தர் சிவன்[தொகு]

உருத்திரன் என்றழைக்கப்பட்ட திராவிட இனத்தைச் சேர்ந்த சிவனே முதல் மருத்துவனாகவும், சிறந்த மருத்துவனாகவும் ரிக் வேதத்தினால் அடையாளம் காட்டப்படுகிறான். (ரிக் வேதம் – 2-33.4)

சித்தர் சிவபெருமானே முதல்சித்தர் என ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளதால், சிவபெருமானைப் பற்றிய குறிப்புகளையே சித்தர் வரலாற்று ஆவணமாகக் கருதலாம்.

கி.மு.5000 ஆண்டளவிலான நடராசர் உருவ முத்திரை ஈரானில் (மெசபடோமியா) கிடைத்துள்ளது.
கி.மு. 4000 ஆண்டளவிலான சிவபெருமானை வழிபடும் தமிழ்க் கல்வெட்டு போர்ச்சுகல் நாட்டில் கிடைத்துள்ளது.
சிந்து சமவெளியில் சிவன் யோக நிலையிலிருக்கும் முத்திரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நந்தீசர்[தொகு]

நந்தீசர் சிவன் – உமாதேவி மகன் என்கிறார். ஆகவே சிவனுக்குச் சமகாலத்தவராகவே நந்தீசரையும் குறிப்பிடலாம்.

திருமூலர்[தொகு]

நந்தீசர் திருமூலரின் ஆசிரியர் என்பதால், நந்தீசர் காலமும் திருமூலர் காலமும் ஒன்றெனலாம்.

போகர்[தொகு]

திருமந்திரச் சிறப்புப்பாயிரத்தில் போகரைப் பற்றிய குறிப்பு காணப்படுவதாலும், திருமூலரின் நூலைக் கண்டே 7000 இயற்றினேன் என்று போகர் கூறுவதாலும் போகர் திருமூலருக்குச் சமகாலத்தவர் எனலாம்.

சீனமொழியில் போகர் வரலாற்றுச் செய்தி:[தொகு]

在关于伯葛的所有故事中,最不可思议的一个是,据说公元300年的时候他游历到中国,借用一个中国年轻人的尸体复活,之后在中国的大地上传授他的学说,成了道教的创始人老子。他在中国留下《道德经》以后,就带着一个名叫“裕”(YU)的中国弟子回到了印度。泰米尔@纳德邦的帕拉泥山(PALANI MALAI)成为他活动的中心。 //

மொழி பெயர்ப்பு

All stories on Boge, the most incredible one is said to AD 300, when he traveled to China to borrow the body of a young Chinese resurrection, after the land in China to teach his doctrine became the Taoist founder of I. He left behind in China, "the moral" then, on with a man named "Yu" (YU) Chinese disciples returned to India.Tamil Nadu's Paradise @ mud hill (PALANI MALAI) became the center of his activities.

போகர் பிறப்பால் தமிழர் எனவும், அவர் இறந்த பிறகு ஒரு சீனர் உடலில் புகுந்து சீனத்துக்கு வந்து ’தவ் [Taoism]’ மதத்தை தோற்றுவித்தார் எனவும் குறிப்புகள் இருக்கின்றன.

காலாங்கிநாதர்[தொகு]

போகரின் ஆசிரியர் காலாங்கி நாதர் என்பதால், போகரின் காலமே காலாங்கி நாதரின் காலம் எனலாம்.

புலிப்பாணி[தொகு]

கலியாண்டு தமிழரின் தொடராண்டு முறையாக விளங்கியது. கலியாண்டு கி.மு.3102 இல் தொடங்குகிறது. இக்கலியாண்டு 205 இல் புலிப்பாணிச் சித்தர் வாழ்ந்தார் என்னும் குறிப்பு (புலிப்பாணி வைத்தியம் – 500. பா.145) காணப்படுவதால் இவர் கி.மு.2897 இல் வாழ்ந்தார் எனலாம்.

கருவூரார், கொங்கணவர், சட்டைமுனி, இடைக்காடர்[தொகு]

போகர் சீனாவுக்குச் செல்லுமுன், கருவூரார், கொங்கணவர், சட்டைமுனி, இடைக்காடர் ஆகிய இவர்களுக்கு ஆசிரியராக இருந்தார் என்பதால், இவர்களும் கி.மு.2897 ஆண்டளவில் வாழ்ந்தனர் எனலாம்.

கோரக்கர் சித்தர்[தொகு]

சோழநாட்டில் காவிரி நதிக்கரைக்கு அருகில் அமைந்துள்ள பரூர்ப்பட்டியில், பரிவிருத்தி நானூற்றெட்டு, ஐப்பசித் திங்கள், தசமி திதி, பரணி நாளில் சமாதி அடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறார். இவ்வாண்டைக் கலியாண்டாகக் கொண்டால் கி.மு. 2674 உம், கொல்லம் ஆண்டாகக் கொண்டால் கி.பி. 1233 ஆகிறது. கோரக்கர் திருமூலரையும் அகத்தியரையும் குறிப்பிடுவதால் கொல்லம் ஆண்டாகக் கருத முடியாது. எனவே, கோரக்கர் கி.மு. 2694 ஆம் ஆண்டு என்று கொள்வதே சரியாக இருக்கும்.

எனவே, சித்தர் களின் காலத்தைத் தனித்தனியே காணும் போதில் குழப்பமே மேலிடுகிறது. ஆனால், சித்தர் மரபின் காலம் கி.மு. 5000 த்தில் தொடங்கியது என்பதே சரியாகும்.

தொல்காப்பியம்[தொகு]

தொல்காப்பியம் தொன்னூல் மட்டுமல்லாமல் பண்டைத் தமிழ் நாகரிகத்தைப் பண்பாட்டை மரபைத் தாங்கி நிற்கும் பெருந்தூணாகும்.

“தொல்காப்பியம் நெடுகலும் ‘என்மனார் புலவர்’ ‘நுண்ணிதின் உணர்ந்தோர்’ ‘மொழிப’ ‘என்றிசினோரே’ ‘நுனித்தகு புலவர் கூறிய நூலே’ என்று முடித்திருப்பதால், தொல்காப்பியம் கூறும் இலக்கணச் செய்திகளெல்லாம் முந்து நூல்களில் கண்டவையே என்பது தெளிவு”. 1

"செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்" - சிறப்புப் பாயிரம்.

என்னும் பாயிரச் சூத்திரத்தினால், பழந்தமிழகத்தில் நூல்கள் பல பல்கியிருந்தன எனலாம். அவ்வகை நூல்களைக் கற்றறிந்து வரன்முறைகளை ஆராய்ந்து தொகுக்கப் பெற்ற நூலாகத் தொல்காப்பியமாக இலங்குகிறது.

தொல்காப்பியம் இயற்றுவதற்குத் திட்டமிடுதல்[தொகு]

ஒரு செயலைச் செய்வதற்குப் பொருள்கள் (திருக்.675) தேவைப்படுவதைப் போலத் தொல்காப்பியம் இயற்றுவதற்குத் தேவையாயிருந்த ‘பொருள்கள்’ தமிழ் மருத்துவத்தின் தொன்மைகள் மூலப்பொருளாக அமைந்துள்ளன.

தமிழ் மருத்துவர் மருந்து, வாதம், ஓகம், ஞானம் ஆகிய நான்கு உறுதிப்பொருள்களைக் குறியீடுகளாகக் குறித்தனர். அக்குறியீடுகள் தொல்காப்பியத்தில் அமைப்பு எண்களாக அமைந்துள்ளன.

தமிழ் மருத்துவத்தின் குறியீட்டு எண்கள் உடலியலைச் சுட்டுகிறது. அதைப் போலத்3, தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய அதிகாரங்களை மூன்றாகக் கொண்டுள்ளது.

"மூன்றே பொருளாய் முடிந்தது அண்டம்
மூன்றே பொருளாய் முடிந்தது பிண்டம்
மூன்றே பொருளாய் முடிந்தது மருந்து
மூன்றே பொருளாய் முடிந்தது வாதமே" - திருமந்திரம்.

அண்டம், பிண்டம், மருந்து, வாதம் ஆகியவை நான்கும் மூன்று பொருளாய் முடிந்தது4 என்கிறது, தமிழ் மருத்துவம். அந்த மூன்று மூலப்பொருள்களைக் கருத்திற்கொண்டு தொல்காப்பியத்தின் அதிகாரங்கள் மூன்றாக அமைந்தன.

மனித உடற்பகுதிகளில் தொடர்புடைய விண்மீன்களின் எண்ணிக்கை இருபத்தேழு என்பதால், அவ்வெண்கள் தொல்காப்பிய இயல்களின் எண்களாகக் கொள்ளப்பட்டன.

(இந்திய அணுக்கூடத்தில் ஒரு நியூட்ரானைக் கொண்டு ஒரு யுரேனியம் இடிக்கப்படுகிறது. அவ்வாறு இடிக்கப்படும் யுரேனியம், 1 > 3 > 9 > 27 > 81 > என நியூட்ரானை உருவாக்கிக் கொண்டே செல்கிறது. இந்த அணுச்செயலைப் போலவே தொல்காப்பியத்தில் 1 > 3 > 9 > 27 என்று அதிகாரங்களும் இயல்களும் அமைந்துள்ளன. )

எழுத்துகள் தோன்றுமிடம்[தொகு]

எழுத்துகள் தோன்றுமிடமே உயிர் இயங்குமிடமாகும். எழுத்தும் இசையும் தோன்றுமிடம் ஒன்றேயாகும். 5 மூலாதாரத்திலிருந்து எழுகின்ற எழுத்தின் ஒலியை இசை என்றும் பண் என்று பஞ்சமரபு கூறுகிறது.

"எழுத்தெனப் படுப
அகரமுத னகர விறுவாய்
முப்பஃ தென்ப" - நூன்மரபு. 1

அகரம் தானும் இயங்கித் தனிமெய்களை இயக்குதற் சிறப்பான் முன் வைக்கப்பட்டது. னகரம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின் வைக்கப்பட்டது என்பர் (இளம்பூரணம். பக்.26)

உடல் இயங்குவதற்கு ஏதுவாகிய அகரத்தை தொடக்கத்திலும், வீடு பேறடையும் ஆண்பாலைக் குறிக்கும் னகரத்தை இறுதியிலும் கொண்ட எழுத்துகளின் வைப்புமுறை அமைந்துள்ளதால் தொல்காப்பியம் ஓக முறைகளையே முதலாகக் கொண்டுள்ளது எனலாம்.

தமிழ் எழுத்துகள் முப்பது என்னும் அவ்வெண், திங்கள் ஒன்றுக்குரிய நாள்களைக் குறிப்பதாகும். உடம்பிலுள்ள உயிர் அமாவாசை தொடங்கி பௌர்ணமி வரையிலும், பௌர்ணமி தொடங்கி அமாவாசை வரையிலும் உள்ள முப்பது நாள்களும் உடலில், ‘அமுத நிலைகள்’ என்னும் உயிரின் சுழற்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது, அதன் சுழற்சி, ஒவ்வொரு நாளும் உடற்பகுதி ஒவ்வொன்றிலும் நின்று செல்லும் என்று தமிழ் மருத்துவம் குறிப்பிடுகிறது. உயிரின் சுழற்சியை குறிக்கும் நாள்களின் எண்ணிக்கையைக் குறிக்க எழுத்துகள் முப்பதாக அமைந்துள்ளன எனலாம்.

உயிரெழுத்து ஒலிகள்[தொகு]

(ச ரி க ப த என்னும் ஐந்து ஒலிகளையும் ச ரி க ம ப த நி என்னும் ஏழு ஒலிகளையும் சேர்த்து பன்னிரண்டு ஒலிகள் இசையொலிகளாகக் கொள்ளப்படுகின்றன.)
அ இ உ எ ஒ ஆகிய ஐந்து குற்றொலிகளையும் ஆ ஈ ஊ ஏ ஓ ஐ ஔ ஆகிய ஏழு நெட்டொலிகளையும் சேர்த்து உயிரொலிகளைப் பன்னிரண்டு எனத் தொல்காப்பியம் குறிக்கிறது.

குற்றொலி ஐந்தாகும் போது நெட்டொலியும் ஐந்தாகவே இருக்க வேண்டும்.

உள்ளங்கை இரண்டு உடையவர்க்குப் புறங்கையும் இரண்டாகத்தாம் இருக்கும். நான்காக முடியாது என்று நச்சினார்க்கினியர் விளக்குகிறார்.

"எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்” (புணரியல். 141)

உயிரும் உயிரும் புணருமிடத்து உடம்படுமெய் வடிவு தோன்றும் என்று இலக்கணம் வகுக்கும் தொல்காப்பியம், அ+இ = ஐ என்றும், அ+உ = ஔ என்றும் கூறப்பட்டதன் காரணம் யாதெனின், உயிரெழுத்தின் எண்ணிக்கை பன்னிரண்டாக அமைய வேண்டும் என்பதுவே யாகும். 6 உயிர் என்றாலே பன்னிரண்டு தான். அதாவது, உடம்பில் உயிர் நிலைத்திருக்க வேண்டுமென்றால், சூரிய கலையில் சுவாசத்தின் அளவு பன்னிரண்டாக அமைய வேண்டும்.

தமிழ் மருத்துவம் குறிப்பிடும் சூரிய கலையின் அளவு உயிரோட்டத்தின் அளவாகக் கருதிக்கொண்டு உயிரெழுத்துகள் பன்னிரண்டாக அமைக்கப்பட்டுள்ளன. உடம்பினுள் இயங்கும் சந்திரன், சூரியன், அக்கினி ஆகிய மூன்று கலைகளும் பதினாறு, பன்னிரண்டு, பத்து எனும் அளவுகளைக் கொண்டுள்ளன என்று மருத்துவம் குறிப்பிடுகிறது.

உயிரும் மெய்யும்[தொகு]

உயிரும் உடலும் நாள் ஒன்றுக்கு விடுகின்ற மூச்சின் எண்ணிக்கை 21600 ஆகும். இதுவே, உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும் பெருக்கினால் கிடைக்கின்ற எண்களாகும்.

12 x 18 x 100 = 21600

தமிழ் மருத்துவம் கூறும் உயிர் உடல் ஆகிய இரண்டின் இயக்கத்தை அறிந்தே தொல்காப்பியம் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையை அமைத்துள்ளது எனலாம்.

சார்பெழுத்து[தொகு]

எழுத்துகள் உயிர், மெய், சார்பு என மூன்று வகை என்றும், உயிரையும் மெய்யையும் சார்ந்து வருபவை சார்பெழுத்து என்றும் உரைக்கப்படுகிறது. சார்பெழுத்துகள் மூன்றும் உயிரையும் உடம்பையும் சார்ந்து இயங்குகின்ற வாதம், பித்தம், ஐயம் ஆகிய மூன்று வளி இயக்கங்களைக் குறிப்பவையாகும்.

அவை போல், மெய்யெழுத்துகள் ஆறு ஆறு எழுத்தாக வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. அவை உடம்பில் உள்ள மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆறு ஆதாரங்களையும் அவற்றின் இடையே ஊர்ந்து செல்லும் இடகலை, பிங்கலை, சுழுனை என்னும் மூன்று நாடிகளையும் உடலின் தன்மைகளான வன்மை, மென்மை, இடைமை எனக் குறிக்கின்றன.

எட்டு என்னும் எண்ணிக்கை[தொகு]

வனப்பு, மெய்ப்பாடு, உணவுப்பொருள் போன்றவை எட்டுவகையெனக் குறிக்கப்படுகின்றன. மெய் படும் பாடே மெய்ப்பாடு என்பதால், இவை அனைத்தும் உடலைச் சார்ந்தே உரைக்கப் பட்டவை.

உடலின் அளவும் உடலின் விருப்பும் வெறுப்பும் எட்டு.7 உடலோடு தொடர்புடைய எல்லாம் எட்டு என்பதால் வனப்பும் மெய்ப்பாடும் உணவும் எட்டாகக் கூறப்பட்டன. எட்டை அடிப்படையாகக் கொண்டே பழந்தமிழ் அளவுகள் அமைந்துள்ளன.8

தமிழ் மருத்துவத்தில் எட்டு என்பது ஓர் அடிப்படைக் கணக்காகும். மருத்துவப் பொருள்களை எட்டுக்கு ஒன்றாகக் காய்ச்சினால் மருந்தாகும். இல்லாவிட்டால் விருந்தாகும்.

"சொல்லிய நாழி கொண்டு
தூணியில் எட்டொன் றாக்கி
நன்னீர் விட்டே எட்டொன்றாய்
நாடிக் காய்ச்சிக் கொள்வீரே." - மேகநோய் நிதானம். 16-17

இவ்வாறு கண்டறியப் பெற்ற எட்டின் தத்துவம் மருந்துக்கு மட்டுமல்ல. மற்ற எல்லாவற்றுக்கும் பொருந்தும். சாதாரணமாகக் குடிக்கப் பயன்படுகின்ற வெந்நீர், எட்டுக்கு ஒன்றாகக் காய்ச்சினால் மருந்து என்று கண்டறியப்பட்டுள்ளது.

"இயம்பிட எளிதே வெந்நீர் இயம்புவன் சிறிது கேண்மின்
நயம்பெறத் தெளிந்த நீரை நன்றாக வடித்தெ டுத்துச்
சயம்பெற எட்டொன்றாக்கித் தான் குடித்திடுவீ ராகில்
வயன்பெறு பித்த வாத சொப்பனம் மாறும் மெய்யாய்"

என்று எவ்வகை மருந்துப் பொருளையும் சேர்க்காமல் தண்ணீரை மருந்தாக மாற்றும் முறையைக் கண்டறிந்துள்ளனர்.

பதினெட்டாக எண்ணும் வழக்கம்[தொகு]

மெய் என்னுஞ்சொல் உடலைக் குறிக்கும். உடலுக்கும் பதினெட்டு என்ற எண்ணுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. பதினெட்டின் சிறப்பைக் கருதியே சித்தர்கள், கீழ்க்கணக்கு, மேல்கணக்கு போன்ற நூல்கள் பதினெட்டு எனக் குறிப்பிட்டனர்.

"போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடாவிடிற் பன்றியுமாமே" - திருமந்.ஒன்பதாந். 61

10 வாயுக்கள் 8 விகாரங்கள் ஆகியவற்றையே புகுகின்ற பத்தெட்டு என்பர்.

“நேசமுடன் பத்தொடு எட்டுங் கொண்டு
நெடுங்காலம் வாழ்ந்திருப்பான் புவியின் மீதில்”
- சாம்பசிவம் பிள்ளை அகராதி. Vol.V. பக்கம். 146

எனத், தமிழ் மருத்துவம் பதினெட்டு எனும் எண்ணைக் கமுக்கமாகக் குறிப்பிடுகிறது. மெய்யை ஓம்புகின்ற தாந்திரீக ஓகமும், மாறணக்கலை (Alchemy) என்னும் வகார வித்தையும் பதினெட்டு வகைச் செயலையும் பொருளையும் கொண்டவை. (இரசம், கௌரி, கெந்தி, மனோசிலை, தாளகம், வீரம், சிங்கி, இலிங்கம், வெள்ளைத் தொட்டி, பொன்னம்பர், கபரி, கோழித்தலைக் கெந்தி, நிமிளை, இராசவர்த்தம், கார்முகி, குதிரைப்பல், பஞ்சபட்சி, எருமைத்தொட்டி என்னும் பதினெட்டும் மாறணக்கலைக்கு ஆதிச்சரக்குகளாகும்.) அகரமாகிய பாதரசத்தைப் பயன் படுத்தி வகார வித்தை (Alchemy) செய்யும் போது பாதரசத்தைப் பதினெட்டு வகையாகச் சுத்தி செய்யவேண்டும் என்று, இராவணன் இயற்றிய இரசராச சிந்தாமணி கூறுகிறது. இவை மரபுவழியாகக் கற்பிக்கப் படுகின்றமையால் இவை குழூஉக்குறியாக இருக்கின்றன. இத்தொழிலைச் செய்த சித்தர்களைப் பதினெட்டு என்னும் குறியீட்டினால் குறிக்கப்பட்டனர்.

எனவே, தொல்காப்பியர் காலத்தில் வழங்கி வந்த வகார வித்தையையும் தாந்திரீக ஓகத்தையும் குறிப்பால் உணர்த்தவே மெய்யெழுத்துகள் பதினெட்டாக அமைக்கப்பட்டன எனலாம்.

தமிழ் நூல்களின் அமைப்பு[தொகு]

"ஈர் ஐங் குற்றமும் இன்றி நேரிதின்
முப்பத் திருவகை உத்தியெடு புணரின்
நூல் என மொழிப நுணங்கு மொழிப்புலவர்" - தொல்.மரபியல். 1598.

தமிழ் நூல்கள், பத்துவகைக் குற்றமுமின்றி முப்பத்திரண்டு வகை உத்தியொடு இயற்றப் பெற வேண்டும் என்கிறது.

மனித உடல் பிணநாற்றம், உடல்நலக்குறைவு, மதுவின் நாற்றம், இளைப்பு, முகம்வேர்த்தல், குளிர்தல், பசிதாகம், கண்பஞ்சாடல், உடல்வியர்த்தல், மரணம் என்னும் பத்து வகைக் குற்றங்களைக் கொண்டுள்ளது. (அகத்தியர் வைத்திய வல்லாதி – 600. பாடல். 73-74) அவற்றை நீக்கினால் மட்டுமே உடல் அழியாதிருக்கும்.

தீட்சைகள்[தொகு]

காய சித்தி என்னும் சுத்தி முறைகளையே தீட்சை என்று கூறப்படுகிறது.

பத்துவகையான சுத்திகளைக் கொண்டு செய்யும் மருந்துகள் மூன்று. அந்த மருந்தே வீர மருந்து, விண்ணோர் மருந்து, நாரிமருந்து என்னும் கற்பங்களாகும். அவை முறையே கற்பம், யோக கற்பம், ஞான கற்பம் என்பனவாகும்.

அதேபோல், உடலில் 32 வகை உறுப்புகள், 32 பற்கள், முதுகுத்தண்டில் 32 வகை எலும்புத் துண்டுகள் இருக்கின்றன என்றாலும், உடம்பில் உண்டாகின்ற பத்துவகைக் குற்றங்கள் நீங்க முப்பத்திரண்டு வகை மருந்துகளைத் தமிழ் மருத்துவம் கூறுகிறது. ஆக, மருந்துகளால் நீங்குகின்ற உடற்குற்றம் போல, நூல் குற்றங்கள் நீங்க முப்பத்திரண்டு வகை உத்திகள் கூறப்பட்டுள்ளன.

மனித உடலின் அமைப்பைப் போலவே தமிழ் நூல்களும் சிறந்து அமைய வேண்டும் எனக் கருதியே, 10 வகைக் குற்றங்களும் 32 வகை உத்திகளும் கூறப்பட்டன.

பழந்தமிழ் மருத்துவ அறிஞர்கள்[தொகு]

தொல்காப்பியம் தாபத முனிவர், நோய்மருங்கு அறிநர் ஆகியோரைக் குறிப்பிடுகிறது. ‘வீடு பேறு அடைய முயல்வார்க்குரிய மார்க்கங்கள் எண்வகைப்படும். அவை ஓகம் இயமம், நியமம், ஆசனம், வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைதல், சமாதி என்பனவாகும்.9

‘நாலிரு வழக்கில் தாபதப் பக்கமும்’ - (தொல்.புறத்.1021.)

என்று, ஓக முனிவர் வழக்கங்களை குறிப்பிடுகிறது.

வளியிசை[தொகு]

ஓக முறையினை மேற்கொள்ளும் முனிவர்கள் உணரக்கூடிய ஒலி அதிர்வுகளை ‘வளியிசை’ (தொல்.எழுத்.பிறப்பியல்.20) என்று கூறுவர். இந் நுண்ணதிர்வுகள் ஓகம் புரிகின்றவர்களால் மட்டுமே உணர முடியும்.10என்பதால், தொல்காப்பிய ஆசிரியர் ஓகம் புரிந்தவராகக் கருதக் கூடியவராகிறார்.

ஐம்பூதக் கோட்பாடு[தொகு]

இயற்கையின் இயற்கையாகிய தமிழ் மருத்துவத்தின் ஐம்பூதக்கோட்டினை

"நிலம் தீ நீர் வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்’ - தொல்.மரபியல். 1589.

என்று கூறுகிறது.

ஐந்து திணையும் ஆறு பொழுதும்[தொகு]

தொல்காப்பியம் கூறும் பெரும்பொழுதும் சிறுபொழுதும் ஐந்திணைக் கோட்பாடும், தமிழ் மருத்துவத்தில் சிறப்பாகக் கூறப்படுகின்றன. நோய்களைக் கணிப்பதற்குச் சிறுபொழுதுகளும், மருந்துகளைச் செய்வதற்கும் நோய்பரவுதலை அறிவதற்கும் பெரும்பொழுதுகளும், நோயாளர் வாழும் பகுதியைக் கொண்டு நோயை அறிவதற்கு இருபொழுதுகளும் தமிழ் மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன.

காலக்கணியர்கள்[தொகு]

மூவகைக் காலத்தையும் ஆய்ந்து கூறும் காலக் கணிதர்கள், தொல்காப்பியக் காலத்திற்கும் முன் இருந்தார்கள் என்பதை,

"மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன்" - தொல்.புறத்.20

என்று, கூறுகிறது.

காலத்தை அறிந்த பின்பே மருத்துவம் பார்க்க வேண்டுமென்று தமிழ் மருத்துவம் விதி வகுத்துள்ளது.11

"மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை". களவியல் . 45.

என்னும் களவியல் இந்நூற்பா, காதலன் காதலியைச் சந்திக்கும் போது நாளும் கிழமையும் பார்த்துக் கொண்டிருப்பதில்லை என்று வானியல் செய்தியைக் குறிப்பிடுகிறது.

"நாள்முன் வரூஉம் வல்முதற் றொழிற்கே” - புணரியல்.141

இச்சூத்திரம் குறிக்கும் நாள், விண்மீனைக் குறிப்பதாகும். இலக்கணத்தில் குறிப்பிடும் அளவுக்கு வானியல் அறிவு வழக்கிலிருந்தது என்றுணரலாம். கலியாண்டை உருவாக்கிய வானியல் கணியர்கள் பழந்தமிழ் மருத்துவ அறிஞர்களாவர். கலியாண்டு கி.மு.3102 இல் தொடங்குகிறது என்பதால், தொல்காப்பியத்திற்கு முன் வானியலார்கள் இருந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

உணவும் சுவையும்[தொகு]

உணவின் சுவையையும் அதன் அளவையும் அறிந்தே ஆறு சுவை உணவை ‘அடிசில்’ 12 என்கிறது. உணவுப்பொருள் உடலைக் காக்கும். அதுவே நோயையும் வருவிக்கும்.13 எனத் தெரிகிறது. தமிழ் மருத்துவம் உணவின் சுவையையும் மூலிகை, சரக்கு, பாடாணம், மணிகள், நோய் ஆகியவற்றின் சுவையையும் தெரிவிக்கிறது.

உலோகங்களைப் பொன்னாக மாற்றும் மாறணக்கலை (Alchemy)[தொகு]

"அகரம் முதல் னகரம் இறுவாய்" தொல். எழுத்து. 1.

அகரம் என்னுஞ் சொல்லுக்கு இதள் (Mercury) என்று பொருள். தமிழ் மருத்துவர்கள் அறிந்த மாறணக்கலையை அகரம் குறிப்பிடுகிறது.

தமிழ் மருத்துவர்கள் அகரமாகிய பாதரசத்தைப் பயன் படுத்தி வகார வித்தை (Alchemy) செய்வதில் வல்லவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் செய்த செயற்கைப் பொன், நான்மணிக் கடிகை என்று வழங்கப்பட்டுள்ளது. புல்லன் (சாதரூபம் – 708 ), கிளிச்சிறை (108), ஆடகம் (500), நாவல் (சாம்பூநதம் – 1008)) என்னும் நான்கு வகைப் பொன்மணிகளாலான கடிகையாகும்.14 (செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி. Vol. II: part II ) (சிலப்ப. 2:14:201 – 202)

கொடிநிலை[தொகு]

சிந்துவெளியில் கண்டெடுக்கப் பெற்ற முத்திரைகளில், கொடிநிலையும் ஒன்றாகும். அம்முத்திரையைச் ‘சகம்பரி’ என்றும் அதுவே ‘லதா சாதனம்’ என்றும் கூறப்படுகிறது.

தந்திர வழிபாட்டின் குறியீட்டு அடையாளமே ‘லதா சாதனம்’ என்னும் சகம்பரி எனத் தேவி பிரசாத்15 (lbid.,pp, 301-302 ) உறுதிப் படுத்துகிறார்.

லதா – கொடி; சாதனம் – நிலை = கொடிநிலை.

தந்திர வழிபாட்டின் தொன்மை அடையாளத்தைக் கொடிநிலையைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. தந்திர வழிபாடு தமிழ் மருத்துவ மரபாகும்.

நோய்க் குறிப்புகள்[தொகு]

நோயின் குணத்தைக் கண்களால் காண முடியாது. கருத்தினால் மட்டுமே அறிய முடியும் என்னும் செய்தியைப் பதிவு செய்கிறது.17 தொல்காப்பியம். (பொருளியல். 53.)

"வாயுறை’ வாழ்த்தும் செவியறி வுறூஉம்
ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்” - (தொல்.பொருள்.புறத்.35.)

வாயுறை என்பது வாய் வழியே அருந்துகின்ற மருந்து என்று பொருள் தரும். உறை என்பது மருந்தைக் குறிக்கும். ஒப்புறை – ஒத்த குண மருந்து; எதிருறை – எதிர் குண மருந்து; கலப்புறை – இருவகை மருந்து ஆகிய மூன்றும் தமிழ் மருத்துவத்தில் மருத்துவ முறைகளாகும்.

‘அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி’ (தொல்.சொல். உயிரி. 794.)
‘பேஏய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்’ (தொல்.பொருள்.புறத்.77.)

‘தெருமரல்’ என்பது உள்ளத்தின் சுழற்சியை, மன இறுக்கத்தைக் குறிக்கும். ‘பேய் ஓம்பிய’ என்பது மன நோயின் குறிப்பு. மன நோய், தமிழ் மருத்துவத்தில் சிறப்பு மருத்துவமாகும்.

‘பையுள் சிறுமையும் நோயின் பொருள’ - தொல்.சொல்.உயிரி. 824.

பையுள் என்பது வலியைத் தருகின்ற நோயைக் குறிக்கும் சொல்லாகும்.

‘வயா என்கிளவி வேட்கைப் பெருக்கம்’ - தொல்.சொல்.உயிரி. 854.

வயா என்பது கருவுற்றிருக்கும் வேளையில் வரும் நோயைக் குறிக்கிறது. இந்நோய் விலங்கு, தாவரம், பெண் ஆகியோருக்கு ஏற்படும் நோயாகும்.

‘மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே’ - தொல்.மெய்ப். 6.

இளிவரல் நான்கும் நோயின் குறிப்பாகும்.

பெருந்திணை மெய்ப்பாடுகள்[தொகு]

பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகள் இருபதும் நோயுற்றவர் நிலையைக் குறிப்பால் உணர்த்துகின்றன.18

“இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல், எதிர்பெய்து பரிதல், ஏதம் ஆய்தல், பசியட நிற்றல், பசலை பாய்தல், உண்டியிற் குறைதல், உடம்பு நனிசுருங்கல், கண்துயில் மறுத்தல், கனவொடு மயங்கல், பொய்யாக் கோடல், மெய்யே என்றல், ஐயம் செய்தல், அவன்தமர் உவத்தல், அறன் அழித்துரைத்தல், ஆங்கு நெஞ்சழிதல், எம்மொழியாயினும் ஒப்புமை கோடல், ஒப்புவழி உவத்தல், உறுபெயர் கேட்டல், நலத்தக நாடின் கலக்கமும் அதுவே” என்பவை நோயுற்றவர் படுக்கையில் கிடக்கையாகக் கிடக்கும் போது நோயாளரின் செயல் எவ்வாறிக்கும் என்பதைப் பெருந்திணை மெய்ப்பாடாகக் கூறக் காணலாம்.

வீட்டு விலக்கம்[தொகு]

வீட்டு விலக்கம் என்னும் மூன்று நாளில் ஆண் பெண் இருவரும் கூடி கருவமைந்தால் அந்தக்கரு கூன், குருடு, செவிடு, பேடு போன்றவற்றில் ஒன்றாகப் பிறக்கும் என்பதால்,

‘பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீத்தகன் றுரையார் என்மனார் புலவர்’ - தொல்.பொருள்.1133 (46)

விலக்குடைய மூன்று நாளும் விலகி இரு என்பதும் மருத்துவச் செய்தியே ஆகும்.

இக்காலத்தில் உயிர்க்கொல்லி மருந்தாகப் பயன்படுத்தப் படுகின்ற வேம்பு சிந்துவெளி நதிக்கரை நாகரிக மக்களிடத்திலும் காணப்பட்டுள்ளது. வேப்பிலையைச் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்று அறிஞர் தீட்சிதர் கூறுகிறார்.19

‘வேம்பும் கடுவும் போல வெஞ்சொல்’ - தொல்.செய்யுளியல். 111.

தமிழ் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்ற வேம்பும் கடுக்காயும் குறிப்பிடக் காணலாம்.

போர்க்கள மருந்து – போரில் சூடும் பூக்கள்[தொகு]

போருக்குப் போகும் வேந்தர்கள் பூச்சூடிச் செல்வார்களாம்.20 (தொல்.புறம்.5) சேரர் பனம்பூவும் சோழர் ஆத்திப்பூவும் பாண்டியர் வேப்பம்பூவும் போர் மறவர்கள் வெட்சி, வஞ்சி, தும்பை, வாகை, காஞ்சி ஆகிய பூக்களைச் சூடிச் சென்றனர்.

வேந்தர்களும் மறவர்களும் சூடிச் செல்லும் பூக்கள் போர்க்களத்தில் (முதலுதவிப் பெட்டியைப் போல) அவசர சிகிச்சைக்காகப் பயன்படுத்தப் படுபவையாகும்.21

மருத்துவக்குலம்[தொகு]

பண்டைய காலத் தமிழர்கள் கலையிலும் கல்வியிலும் சிறந் திருந்ததைப் போல மருத்துவத்திலும் சிறந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றாக, ஆய், எயினன் என்னும் இரண்டு இனத்தவர்கள் அரசர்களின் படைத்தலைவர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் ‘வைத்திய சிகாமணி' என்று அரசர்களால் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களின் முன்னோர்கள் கைக்கொண்டு வந்த ‘மருத்துவக் குலத்தின்' குடிப்பெயரே ஆய் (இடையர்), எயினன்(வேடர்)எனப்படுவது. போர்க் கலைகளில் சிறந்து விளங்குகின்ற படைத்தலைவர்கள், போர் வீரர்களுக்கு ஏற்படுகின்ற புண்களுக்கும் நோய்களுக்கும் செய்யும் மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர்களாய் இருந்திருக்கின்றனர். எயினர் குலத்தில் வைத்தியத் தொழிலைப் பரம்பரையாகக் கொண்டிருந்த மருத்துவக் குடியில் பிறந்தவன், பாண்டியன் படைத்தலைவன் ‘மாறன்காரி' என்பது குறிப்பிடத்தக்கது என்று மு. இராகவையங்கார் குறிப்பிடுகின்றார்

தமிழ் மருத்துவம் தொல்காப்பியர் காலத்திற்கும் முந்தியது என்பதற்கு போதிய சான்றுகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. எனவே, தமிழ் மருத்துவம் தொல்காப்பியக் காலத்திற்கும் முந்தியதே என நிறுவுகிறேன்.

தொல்காப்பியத்துக்குப் பின்[தொகு]

தமிழ் இலக்கிய நூல்களின் அளவைவிடவும் இரு மடங்குக்கும் அதிகமான நூல்கள் தமிழ் மருத்துவ நூலாகக் கிடைக்கின்றன.

தமிழ் இலக்கியத்தைப் போலவே காப்பியம், காவியம், சிந்தாமணி, சூடாமணி, கல்லாடம், திருமந்திரம், சதகம், கரிசல், உலா, பிள்ளைத் தமிழ், பாரதம், நிகண்டு, திருப்புகழ், கோவை, தண்டகம், கற்பம், சூத்திரம், வைசூரி, நயனவிதி, கிறுக்குகள், பாலவாகடம், தலைநோய், கண்நோய், வல்லாதி, பரிபூரணம், வாதநூல், வர்மநூல், திறவுகோல், பரிபாஷை, சரக்குவைப்பு, கலைஞானம், பஞ்சமித்திரம், பஞ்ச ரத்தினம், சேகரப்பா, ஞானவெட்டியான், மாட்டுவாகடம், யானை வாகடம், குதிரை வாகடம், தரு, குடிநீர், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, நொண்டி, சிந்து, கும்மி, பள்ளு போன்ற பல நூல்கள் காணக் கிடைக்கின்றன.

தமிழ் மொழியைப் போலவே தமிழ் மருத்துவமும் காலத்தால் முதிர்ந்தது, தொன்மையானது, செம்மையானது. தமிழ் மொழியைச் செம்மொழியென அழைப்பது போலவே தமிழ் மருத்துவத்தையும் செம்மருத்துவம் என வழங்க வேண்டும். செம்மொழித் தமிழாய்வு நடைபெறுவதைப் போல, தமிழ்ச் செம்மொழி மருத்துவ ஆய்வுகள் நடைபெற வேண்டும்.

தமிழ் மொழிக்கெனத் “தமிழ்ப் பல்கலைக் கழகம் “ அமைந்துள்ளதைப் போலத் தமிழ் மருத்துவத்திற்கெனத், “தமிழ் மருத்துவப் பல்கலைக் கழகம்” அமைத்து தமிழ் மருத்துவத்தை நுண்ணாய்வு செய்து காத்து வளர்த்திட வேண்டுமெனப் பரிந்துரை செய்கின்றேன்.

துணை நூல்கள்:[தொகு]

1. தொல்காப்பியம் 2. பஞ்சமரபு 3. திருமந்திரம் 4. மேகநோய் நிதானம் 5. சிலப்பதிகாரம் 6. அகத்தியர் பின். 80 7. திருக்குறள் 8. யாப்பருங்கலம் / காரிகை 9. சங்க காலத்தில் ஆசீவகமும் ஐயனார் வழிபாடும் 10. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் 11. சாம்பசிவம் பிள்ளை மருத்துவக் கலைக்களஞ்சியம் 12. திராவிடக் கட்டிடச் செந்நூல் 13. சிற்பச் செந்நூல் 14. தமிழில் மருத்துவ இலக்கியங்கள் 15. தமிழ் மருத்துவ வரலாறு

குறிப்புகள்:

1. பாவாணர். தமிழர் வரலாறு,2. பக். 40-41

2. திருக்குறள்.675

3. போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்

ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடாவிடிற் பன்றியு மாமே - திருமந். ஒன்பதாந். 61.

4. ‘மூன்றே பொருளாய் முடிந்தது அண்டம்

மூன்றே பொருளாய் முடிந்தது பிண்டம்
மூன்றே பொருளாய் முடிந்தது மருந்து
மூன்றே பொருளாய் முடிந்த்து வாதமே’ - திருமந்திரம்

5. ‘துய்ய வுடம்பு தொண்ணூற்றா றங்குலியா

மெய்யெழுத்து நின்றியங்கு மெல்லத்தான் – வையத்
திருபாலு நாற்பதோ டேழ்பாதி நீக்கிக்
கருவாகும் ஆதாரம் காண். - பஞ்சமரபு. 42.

6. ‘பத்தும் இரண்டும் பகலோன் உயிர்கலை’

பத்தினோடு ஆறும் உயர்கலை பான்மதி
ஒத்தநல் அங்கியது எட்டெட்டு உயிர்கலை - திருமந்திரம். 854

7. உடம்பின் விருப்பும் வெறுப்பும்:

வசனம், கவனம், தானம், ஆனந்தம், விசர்க்கம், தாரஏடணை,
புத்திர ஏடணை, தன ஏடணை ஆகியவை.

8. பழந்தமிழ் அளவுகள்

இட வாய்பாடு

8 அணு கொண்டது 1 தேர்த்துகள்
8 தேர்த்துகள் கொண்டது 1 இம்மி
8 இம்மி கொண்டது 1 எள்ளு
8 எள்ளு கொண்டது 1 நெல்
8 நெல் கொண்டது 1 விரல்

கால வாய்பாடு

8 கணம் கொண்டது 1 லவம்
8 லவம் கொண்டது 1 காஷ்டம்
8 காஷ்டம் கொண்டது 1 நிமிடம்
8 நிமிடம் கொண்டது 1 துடி
8 துடி கொண்டது 1 குரு

9. திருமந்திரம். 552 10. மணிகடல் யானை வார்குழல் மேகம்

அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்க வொண்ணாதே - திருமந்திரம். 606

11. அகத்தியர்.பின்.80. செய்.36

12. தொல்.கற்பியல். 1092

13. சிலப்ப.1:3: 26 – 36 உரை

14. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல், அகர முதலி. Vol. II: part II; (சிலப்ப. 2:14:201 – 202)

15. lbid.,pp, 301-302

16.

17. தொல். பொருளியல். 53

18. இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல்,

எதிர்பெய்து பரிதல், ஏதம் ஆய்தல்,
பசியட நிற்றல், பசலை பாய்தல்,
உண்டியிற் குறைதல், உடம்பு நனிசுருங்கல்,
கண்துயில் மறுத்தல், கனவொடு மயங்கல்,
பொய்யாக் கோடல், மெய்யே என்றல்,
ஐயம் செய்தல், அவன்தமர் உவத்தல்,
அறன் அழித்துரைத்தல், ஆங்கு நெஞ்சழிதல்,
எம்மொழியாயினும் ஒப்புமை கோடல்,
ஒப்புவழி உவத்தல், உறுபெயர் கேட்டல்,
நலத்தக நாடின் கலக்கமும் அதுவே - தொல்.பொருள்.1216.

19. சிந்துவெளி தரும் ஒளி. பக்.84

20. தொல்.புறம். 5

21. வெட்சி – குருதியை அடக்கும்.

வஞ்சி - களைப்பைப்போக்கி இடுப்பை உறுதிப்படுத்தும்
தும்பை - மயக்கத்தைத் தெளிவிக்கும்
வாகை - புண்களை ஆற்றி காமத்தைப் பெருக்கும்
காஞ்சி - காமத்தை அடக்கும்
பனை - சுரத்தையும் நீர்க்கட்டையும் போக்கும்
ஆத்தி - வேள், வாள், ஈட்டி புண்ணைக் குணப்படுத்தும்
வேம்பூ - மூர்ச்சையைப் போக்கும்.