தியாக பூமி/இளவேனில்/கண் திறந்தது!

விக்கிமூலம் இலிருந்து

கண் திறந்தது!

அதே அர்த்தராத்திரிப் போதில் இன்னொர் ஆத்மா கண் விழித்துக் கொண்டிருந்தது. சம்பு சாஸ்திரி அன்றிரவு சாவடிக் குப்பத்திலிருந்து பிரயாணப்பட்டுப் போவதென்று தீர்மானித்திருந்தார். நல்லானிடமும் மற்றவர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு போவதென்பது அசாத்தியமான காரியம்; இராமாயணத்தில் இராமர் தம்மைப் பின் தொடர்ந்த அயோத்திவாசிகள் தூங்கும் போது போனது போல் தாமும் அர்த்த ராத்திரியில் கிளம்பிப் போய்விட வேண்டியது தான் என்று அவர் முடிவு செய்திருந்தார்.

சாவடிக் குப்பத்துக் குடிசையில் கடிகாரம் கிடையாது. ஆனாலும், ஏறக்குறைய நடுநிசியில் சாஸ்திரி கண் விழித்தெழுந்தார். வாசலில் போய்ப் பார்த்தார். அன்று பௌர்ணமி; சந்திரன் உச்சி வானத்தை கடந்து கொஞ்சம் மேற்கே சாய்ந்திருந்தது. உலகம் அப்போது தான் பாற்கடலில் முழுகி எழுந்திருந்தது போல் காணப்பட்டது. தென்னை மரங்களின் மட்டைகள் இளங்காற்றில் அசைந்த போது, முத்துச் சுடர் போன்ற நிலவின் ஒளியில் அவை பளிச் பளிச்சென்று மின்னின.

சாவடிக் குப்பத்தில் நிச்சப்தம் குடிகொண்டிருந்தது. ஏழை உழைப்பாளி ஜனங்கள், பகலெல்லாம் உடலை வருத்தி வேலை செய்து விட்டு வந்தவர்கள், இரவில் அசந்து தூங்கினார்கள்.

சாஸ்திரி திரும்பவும் உள்ளே சென்றார். அம்பிகையின் முன்னால் கைகூப்பிக் கொண்டு உட்கார்ந்தார். "தாயே! ஜகதம்பிகே! உன்னையே தஞ்சமாக அடைந்த என்னை இப்படியா கஷ்டப்படுத்துவது? எத்தனையோ துக்கங்களை நானும் பொறுத்திருக்கிறேன்; ஆனால் இந்தக் குழந்தையைப் பிரிந்த துக்கத்தைப் பொறுக்க முடியவில்லையே? ஏன் இப்படிப்பட்ட பாசத்தைக் கொடுத்தாய்? ஏன் இப்படி என்னை வருத்துகிறாய்? எதற்காக இப்படி என் இருதயத்தைப் பிழிகிறாய்?"

சாஸ்திரியின் கண்ணில் ஜலம் ததும்பிப் பிரவாகமாய் ஓடிற்று. சட்டென்று அவர் எழுந்திருந்து நின்றார்.

"அம்மா! இந்த ஏழையாலே உனக்கு ஏதோ காரியம் ஆகவேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் இப்படித் துன்புறுத்த மாட்டாய். உன் ஆக்ஞையை நான் மீற வில்லை. இதோ புறப்படுகிறேன். இந்தத் தடவை உன்னை கூட நான் எடுத்துப் போகவில்லை. நீ இங்கேயே இருந்து இந்த நல்ல ஜனங்களைக் காப்பாற்றிக் கொண்டிரு!"

இப்படிச் சொல்லிச் சம்பு சாஸ்திரி அம்பிகைக்கு நமஸ்காரம் செய்து விட்டு எழுந்தார். அந்தக் குடிசையின் முன் புறத்து அறைக்குள் வந்தார். கொடியில் கிடந்த வேஷ்டி அங்க வஸ்திரங்களை எடுத்து மடிசஞ்சிக்குள் அடைக்கத் தொடங்கினார்.

அப்போது பின்னால், "தாத்தா! தாத்தா!" என்று குழந்தையின் குரல் கேட்டது.

சாஸ்திரிக்குத் தூக்கி வாரிப் போட்டது. திரும்பிப் பார்த்தார். அளவிலாத ஆச்சரியத்தினால் திக்பிரமை கொண்டார்.

"இதென்ன அதிசயம்? யார் இது? குழந்தை சாரு தானா?" என்று சொல்ல்விட்டு, கண்ணைத் துடைத்துக் கொண்டு பார்த்தார்.

அப்போது சாரு, "ஐயோ! தாத்தா! நான் கண்ட சொப்பனம் சரியாப் போயிடுத்தே! உனக்குக் கண் தெரியலையா? - நான் சாரு தான். என்னைத் தொட்டுப் பாரு" என்று சொல்லித் தாத்தாவின் அருகில் வந்தாள். கீழே கிடந்த அவருடைய அங்கவஸ்திரத்தை எடுத்துக் கொடுத்து, "இதோ உன் மேல்வேஷ்டி; தடவிப் பாரு; மேலே போட்டுக்கோ! தாத்தா! என் கையைப் பிடிச்சுக்கோ! உனக்கு எங்கெல்லாம் போகணுமோ அங்கெல்லாம் நான் அழைச்சுண்டு போறேன்" என்றாள்.

சாஸ்திரி குழந்தையை அணைத்துக்கொண்டு மேலெல்லாம் தடவிக் கொடுத்துவிட்டு, "நிஜமா, என் கண்மணி சாருதான். எப்படியம்மா இந்தப் பாதி ராத்திரிலே வந்தே? தனியாவா வந்தே?..." என்றார்.

"உனக்குக் கண் பொட்டையாப் போனது சொப்பனத்திலே தெரிஞ்சு போச்சு. நான் இல்லாத போனா உன்னை யாரு கையைப் புடிச்சு அழைச்சுண்டு போவான்னு ஓடி வந்துட்டேன்." "கண் பொட்டையாப் போச்சா? இதென்ன சாரு என் கண் சரியாத்தானே இருக்கு?"

"நிஜம்மா...?"

"நிச்சயமா, சாரு!"

சாரு ஒரு கணம் யோசித்தாள். சாஸ்திரிக்கு முன்னால் மூன்று விரலைக் காட்டி, "இது எவ்வளவு விரல், சொல்லு!" என்று கேட்டாள்.

"மூணு விரல்!" என்றார் சாஸ்திரி.

சாரு கையைப் பின்னால் கொண்டு போய் மறுபடியும் முன்னால் கொண்டு வந்தாள். "இப்ப எவ்வளவு விரல்?" என்றாள்.

"அஞ்சு விரல்" என்றார் சாஸ்திரி.

உடனே, குழந்தை, "தாத்தாவுக்குக் கண் சரியாப் போச்சு, தாத்தாவுக்குக் கண் சரியாப் போச்சு!" என்று கூவிக்கொண்டு சம்பு சாஸ்திரியைச் சுற்றிச் சுற்றி வந்து ஆனந்தக் கூத்தாடினாள்.

சாஸ்திரி அவளைத் தூக்கி வாரி எடுத்துக் கொண்டார்.

சாரு, பொய்க் கோபத்துடன், "போ, தாத்தா! உன்னோடே நான் 'டூ' தாத்தா! நீதான் அந்த மாமியாத்திலே என்னைக் கொண்டுபோய் விட்டுட்டு, அப்புறம் வந்து பார்க்காமலேயே இருந்துட்டயே? நான் செத்துப் போயிருந்தேன்னா, நீ என்ன பண்ணுவே?" என்றாள்.

"அது என் பேரிலே தப்புத்தான், சாரு! அம்பாள் அந்தப் பணக்கார மாமியை அனுப்பி என்னைச் சோதனை பண்ணினாள். அது சோதனைன்னு தெரிஞ்சுக்காமே, உன்னை நான் அவள் கிட்டக் கொடுத்துட்டேன். இப்பத்தான் எனக்குக் கண் திறந்தது, சாரு!" என்றார் சாஸ்திரி.

தமக்குக் கண் பொட்டையாய்ப் போச்சுன்னா குழந்தை சொன்னாள்? இல்லை. தமக்குக் கண் பொட்டையாய்ப் போகவில்லை; எப்போதும் பொட்டையாகவே இருந்திருக்கிறது. இப்போதுதான் உண்மையில் கண் கிடைத்தது! - இந்த மாதிரி மனத்திற்குள் நினைத்து கொண்ட சம்பு சாஸ்திரி, "இனிமேல் அந்த மாதிரி தப்பு செய்யமாட்டேன், அம்மா! ஐசுவரியத்தைக் கண்டு ஏமாற மாட்டேன். நான் போகிற இடத்துக்கெல்லாம் உன்னையும் அழைச்சுண்டு போறேன். நீ வர்றயோ, இல்லையோ?" என்றார்.

"ஓ! ரெடியா வர்றேன்" என்று குழந்தை சொல்லித் தாத்தாவின் மடிசஞ்சியைத் தோள்மீது எடுத்து வைத்துக் கொண்டாள்.

இரண்டு பேருமாய்க் குடிசையை விட்டுக் கிளம்பினார்கள். சாவடிக் குப்பத்தைத் தாண்டி மோகனமான நிலவு வெளிச்சத்தில் கொஞ்ச தூரம் நடந்து சென்றார்கள். குறுக்குப் பாதை முடிந்து பெரிய சாலையை அவர்கள் அடைந்தபோது, கொத்தவால் சாவடிக்குச் சாமான் மூட்டை கொண்டு வந்த கட்டை வண்டிகள் சில திரும்பிப் போய்க் கொண்டிருந்தன.

ஒரு வண்டிக்காரனைப் பார்த்து சாஸ்திரி, "அப்பா வண்டிகளெல்லாம் எங்கே போவுது?" என்று கேட்டார்.

வண்டிக்காரன் தூங்கி வழிந்துகொண்டே, "செங்கற்பட்டுக்குப் போவுதுங்க" என்றான்.

"இந்தக் குழந்தையைக் கொஞ்சம் ஏத்தி விடட்டுமா? போது விடிஞ்சவுடனே இறக்கிக் கொள்கிறேன்" என்றார்.

"குழந்தையையும் ஏத்திவிடுங்க நீங்களும் ஏறிக்கிங்க, வெறும் வண்டிதானே, சாமி?" என்றான் வண்டிக்காரன்.

சாஸ்திரியும் சாருவும் அந்தக் கட்டை வண்டியில் ஏறிக் கொண்டார்கள். பஞ்சணை மெத்தையில் படுத்து நல்ல தூக்கம் இல்லாமல் புரண்டு கொண்டிருந்த சாரு, கட்டைவண்டியின் வைக்கோல் படுக்கையில் ஆனந்தமாகத் தூங்கினாள்.