தியாக பூமி/பனி/நல்லானின் கோபம்

விக்கிமூலம் இலிருந்து

நல்லானின் கோபம்

சாவித்திரியை ரயிலேற்றி அனுப்பி விட்டுச் சம்பு சாஸ்திரி நெடுங்கரைக்குத் திரும்பி வந்தபோது, அவருடைய வீடு ரகளைப்பட்டுக் கொண்டிருந்தது.

அவர் வருவதற்குச் சற்று முன்னால்தான் நல்லான் வியர்க்க விருவிருக்க விரைவாக நடந்து வந்து அவருடைய வீட்டுக்குள் நுழைந்தான். அப்போது கூடத்தில் உட்கர்ந்து ஏதோ காரியம் செய்து கொண்டிருந்தாள் மங்களம்.

"இது என்ன அம்மா அக்கிரமம்? வயத்தைப் பத்திக்கிட்டு எரியுதே?" என்று நல்லான் அலறினான்.

மங்களத்துக்கு ஒன்றும் புரியவில்லை. நல்லான் எப்போதும் எஜமானுக்கும் குழந்தைக்கும் பரிந்து பேசுவதுதான் வழக்கம். மங்களத்திடம் சில சமயம் அவன் சண்டை பிடிப்பதும் உண்டு. 'பெரியம்மா'வை அதாவது மங்களத்தின் தாயாரை அவனுக்குக் கட்டோ டே பிடிக்காது. 'சொர்ணம்மாள்' என்பதற்குப் பதிலாக 'சொரணை கெட்ட அம்மாள்' என்பான். அவள் வீட்டில் இருக்கும்போது, தாகத்துக்கு மோர்த் தண்ணி கூடக் கேட்க மாட்டான். அப்படிப்பட்டவன் இப்போது வந்து இப்படி அலறியதும், மங்களம் தன்னுடைய தாயார் பேரில் ஏதோ புகார் சொல்லத்தான் வந்திருக்கிறான் என்று எண்ணினாள்.

முகத்தைக் கடுகடுப்பாய் வைத்துக் கொண்டு "என்னடா அக்கிரமம் நடந்து போச்சு! யார் குடியை யார் கெடுத்திட்டா?" என்று கேட்டாள்.

"குடி கெட்டுத்தானுங்க போச்சு! உங்க குடியும் போச்சு; என் குடியும் போச்சு! நன்செய் புன்செய் பத்து வேலியையும் சாஸனம் பண்ண எப்படித்தான் ஐயாவுக்கு மனசு வந்ததோ தெரியலைங்களே!" என்றான்.

இதைக் கேட்டுக் கொண்டே சொர்ணம்மாள் கையிலே வைத்திருந்த தயிர்ச்சட்டியுடன் அங்கு வந்து, "ஐயையோ! பொண்ணே இதென்னடி அநியாயம்?" என்று ஒரு பெரிய சத்தம் போட்டாள். அவள் கையிலிருந்த தயிர்ச் சட்டி தொப்பென்று கீழே விழுந்து சுக்கு நூறாய் உடைந்தது.

மங்களத்துக்குத் தலையில் இடி விழுந்தது போலிருந்தது. "என்னடா, நல்லான்? என்ன சொல்கிறாய்?" என்று திகைப்புடன் கேட்டாள்.

"ஆமாங்க; எசமான் நிலத்தையெல்லாம் வித்துட்டாராம்! இனிமேல், அந்த வயல்வெளிப் பக்கம் நான் எப்படிப் போவேனுங்க?" என்று நல்லான் மறுபடி அலறினான்.

சொர்ணம்மாள், "ஐயையோ! குடி முழுகித்தா? - கிளியை வளர்த்துப் பூனை கையிலே கொடுப்பதுபோலே, இந்தப் பிராமணனுக்கு உன்னைக் கொடுத்தேனே? வேறே ஒண்ணும் இல்லாட்டாலும், சோத்துக்குத் துணிக்காவது பஞ்சமில்லைன்னு நினைச்சுண்டிருந்தேனே! - அதுவும் போச்சே! - இப்படியாகும்னு நான் நினைக்கலையே! - மோசம் பண்ணிட்டானே பிராமணன்!" என்று சொல்லிக் கொண்டே, ஒவ்வொரு பேச்சுக்கும் ஒரு தடவை வயிற்றில் அடித்துக் கொண்டாள்.

இதைப் பார்த்ததும் நல்லானுக்கு, "இதென்னடா சனியன்? இவர்களிடம் வந்து சொல்லப் போனோமே?" என்று தோன்றிவிட்டது.

இந்தச் சமயத்தில், ஏற்கெனவே பாதி திறந்திருந்த வாசற் கதவு நன்றாய்த் திறந்தது. சம்பு சாஸ்திரி வாசற்படியண்டை நின்றார்.

"நல்லான்! இது என்ன இது?" என்று உரத்த குரலில் கேட்டார். சாஸ்திரியைப் பார்த்ததும் நல்லானுக்கு மறுபடியும் ஆத்திரமும் துக்கமும் பொங்கிக் கொண்டு வந்தது. அவன் வாசற்படியண்டை நின்று, கை கூப்பிக் கொண்டு, "ஏன் சாமி! எல்லாரும் சொல்றது நிஜந்தானா, சாமி? பத்து வேலி நிலத்தையும் வித்துட்டீங்கன்னு சொல்றாங்களே? பரம்பரையா வந்த பிதிரார்ச்சித நிலமாச்சே! எப்படி சாமி, உங்களுக்கு மனசு வந்தது?" என்று கதறினான்.

சாஸ்திரி, "நல்லான்! இதென்ன நீ கூட இப்படி ஆரம்பிச்சுட்டே? நிலமாவது, நீச்சாவது? பிறக்கிற போது கொண்டு வந்தமா! போறபோது கொண்டு போகப் போறமா? நம் செயலில் என்ன இருக்கிறது, நல்லான்? ஸ்வாமி கொடுத்தார், ஸ்வாமி எடுத்துண்டார்!" என்றார்.

அதற்கு நல்லான், "இதோ பாருங்க. இனிமே, சாமி - பூதம்னு எங்கிட்ட ஒண்ணும் சொல்லாதீங்க. சாமிக்குக் கண் இருக்குதா? சாமிக்குக் கண் இருந்தா இந்த மாதிரியெல்லாம் நடக்குமா?" என்றான்.

சாஸ்திரி, "நல்லான்! உன் மனசு இப்போ சரியான நிலைமையில் இல்லை. வீட்டுக்குப் போய்விட்டு அப்புறம் சாவகாசமாய் வா!" என்றார்.

நல்லான், "போறேனுங்க. ஆனா, ஒண்ணு மாத்திரம் சொல்லிடறேனுங்க உங்ககிட்ட பட்டிக்காரனாய் வேலை பார்த்துட்டு, இந்த ஊரிலே இன்னொருத்தர்கிட்ட நான் வேலை பார்க்கமாட்டேனுங்க. பட்டணத்திலே என் மச்சான் தோட்ட வேலை பார்த்துக்கிட்டு இருக்கானே, அவன் ரொம்ப நாளாய் என்னைக் கூப்பிட்டுக்கிட்டு இருக்கான். அங்கே போயிடறேனுங்க" என்று சொல்லிவிட்டு விரைவாக நடந்து போனான்.

நல்லான் போனதும் சாஸ்திரி உள்ளே வந்தார். அவரைக் கண்டதும், சொர்ணம்மாள் மறுபடியும் வயிற்றில் அடித்துக் கொள்ள ஆரம்பித்தாள். சாஸ்திரி உடனே கடுமையான குரலில், "நீங்கள்லாம் பேசாம இருக்கப் போறயளா, இல்லாட்டா நான் இப்படியே திரும்பிப் போயிடட்டுமா?" என்றார்.

மங்களம் தாயைப் பிடித்துத் தள்ளியபடி, "நீ உள்ளே போடியம்மா! உனக்கென்னடி வந்தது?" என்றாள். சொர்ணம்மாள் கொல்லைக் கட்டுக்குச் சென்று, முணமுணக்கும் குரலில் பலாக்கணம் பாடி அழத் தொடங்கினாள்.

அவள் போன பிறகு சாஸ்திரி மங்களத்தைப் பார்த்து "இதோ பார், மங்களம்! உன்னைச் சோத்துக்குத் துணிக்கு இல்லாமல் நான் விட்டு விடவில்லை. உங்க அம்மா சொல்றதைக் கேட்டுண்டு நீ வீணா மனதைப் புண் பண்ணிக்காதே. இந்த வீடும் பதினைஞ்சு மாநிலமும் பாக்கியிருக்கு. அதையெல்லாம் உன் பேரிலே எழுதி வைச்சுடறேன், நீ கவலைப்படாதே!" என்றார்.

கோபத்துடன் சாஸ்திரியின் வீட்டிலிருந்து சென்ற நல்லானுக்கு, அன்று சாவித்திரி ஊருக்குக் கிளம்பிய சமயத்தில் நடந்த பேச்சு ஞாபகம் வந்தது. சாவித்திரி வண்டியில் ஏறி உட்கார்ந்தாள். இன்னும் சாஸ்திரியார் உட்காரவில்லை. அப்போது நல்லான் மேல் அவள் பார்வை விழுந்தது. "நல்லான்! எசமானை நீதான் ஜாக்கிரதையாக் கவனிச்சுக்கணும். அடிக்கடி வீட்டிலே வந்து விசாரிச்சுக்கோ!" என்றாள். "அதெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க. குழந்தை! கடவுள் நம்ம ஐயாவுக்கு ஒரு குறையும் வைக்கமாட்டாரு" என்று பதில் சொன்னான் நல்லான். அந்தப் பேச்சு இவ்வளவு சீக்கிரம் பொய்யாய்ப் போய்விட்டதே! கடவுள் இப்படிப் பண்ணிவிட்டாரே!