தியாக பூமி/பனி/பாட்டு வாத்தியார்

விக்கிமூலம் இலிருந்து

பாட்டு வாத்தியார்

சம்பு சாஸ்திரி நெடுங்கரையை விட்டுக் கிளம்பிய போது அவருடைய மனம் எண்ணாததெல்லாம் எண்ணிற்று.

அவரை ஊரார் சாதிப் பிரஷ்டம் பண்ணி வைத்து, தீபாவளிக்கும் மாப்பிள்ளை வராமற் போனதிலிருந்து சாஸ்திரி மனம் சோர்ந்து போயிருந்தார். சாவித்திரியைப் புக்ககத்துக்கு அனுப்பிய பிறகு அவருடைய மனச் சோர்வு அதிகமாயிற்று. வீட்டிலே சாவித்திரி இல்லை. வெளியிலே நல்லான் இல்லை. முன்னைப் போல் பஜனைகளும் உற்சவங்களும் நடப்பதில்லை. இதனாலெல்லாம் நெடுங்கரை வாசமே அவருக்கு வெறுத்துப் போயிருந்தது. ஆனாலும் ஊரை விட்டுக் கிளம்பும்போது, அவருடைய இருதயம் ஏன் இவ்வளவு வேதனை அடையவேண்டும்?

'கூடாது; இத்தகைய பாசம் கூடாது, நம்மை இந்தப் பாசத்திலிருந்து விடுவித்து ரக்ஷிப்பதற்காகத்தான் அம்பிகை இவ்வாறு மாமியாரின் வாக்கின் மூலமாக ஆக்ஞாபித்திருக்கிறாள்' என்று எண்ணி மனத்தை உறுதிப் படுத்திக் கொண்டு கிளம்பினார்.

க்ஷேத்திர யாத்திரை செய்ய வேண்டுமென்ற விருப்பம் சாஸ்திரிக்கு வெகு காலமாக இருந்தது. அந்த விருப்பம் நிறைவேறுவதற்கு இப்போது சந்தர்ப்பம் வாய்த்தது. சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் முதலிய க்ஷேத்திரங்களுக்குச் சென்று அங்கெல்லாம் இரண்டு மூன்று நாள் தங்கி ஸ்வாமி தரிசனம் செய்துகொண்டு கடைசியாகச் சென்னைப்பட்டினம் வந்து சேர்ந்தார்.

சென்னையில் முதலில் அவருக்குத் திக்குத் திசை தெரியவில்லை. அப்புறம், கோவில்களை வைத்து ஒருவாறு அடையாளம் கண்டுபிடிக்கத் தெரிந்துகொண்டார். கபாலீசுவரர் கோயில், பார்த்தசாரதி கோவில், கந்தசாமி கோவில், ஏகாம்பரேசுவரர் கோவில் ஆகியவற்றில் ஸ்வாமி தரிசனம் செய்து பரவசமானார். அப்புறம் வந்த காரியத்தைக் கவனிக்கத் தொடங்கினார்.

சம்பு சாஸ்திரி கிராமத்தில் பெரிய மிராசுதாராயிருந்தவர். எல்லாருக்கும் உதவிசெய்து அவருக்குப் பழக்கமே தவிர, ஒருவரிடம் போய் நின்று ஓர் உதவி கேட்டு அறியாதவர். மேலும் இயற்கையிலேயே சங்கோச சுபாவமுடையவர். அடித்துப் பேசிக் காரியத்தை முடித்துக் கொள்ளும் சக்தி அவருக்குக் கிடையாது.

அப்படிப்பட்டவர், முன்பின் தெரியாதவர்களின் வீடு ஏறிச்சென்று அவர்களிடம் ஒரு காரியத்தைக் கேட்பது என்றால், இலேசான காரியமா? ஆனாலும், சாஸ்திரி பகவான்மேல் பாரத்தைப் போட்டு, நெஞ்சைத் திடப் படுத்திக் கொண்டு, இந்தக் காரியத்தைத் தொடங்கினார்.

காரியத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை மட்டும் அவருக்கு இல்லை. "நாகரிகம் மிகுந்த இந்தப் பட்டணத்திலேயாவது, பட்டிக்காட்டு மனுஷனாகிய நமக்குப் பாட்டு வாத்தியார் வேலை கிடைக்கவாவது?' என்ற அவநம்பிக்கை அவருடைய மனத்துக்குள் கிடந்தது. அவருக்கே தம்மிடம் நம்பிக்கை இல்லாதபோது மற்றவர்களுக்கு எப்படி நம்பிக்கை உண்டாகப் போகிறது?

சிலர் சம்பு சாஸ்திரியின் தோற்றத்தைப் பார்த்ததுமே அவருக்குச் சங்கீதம் எங்கே வரப்போகிறது என்று தீர்மானித்துவிட்டார்கள். ஒரு பெரிய மனுஷர் சம்பு சாஸ்திரியை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "ஏன் ஸ்வாமி உங்க ஊரிலே சங்கீதத்தைத் தராசிலே நிறுத்துக் கொடுக்கிறதா, மரக்காலிலே அளந்து கொடுக்கிறதா?" என்று கேட்டார்.

இந்தக் கேள்வி சம்பு சாஸ்திரியின் மனத்தை ரொம்பவும் உறுத்திற்று. கர்நாடக சங்கீதத்தின் ஜீவஸ்தானமாகிய சோழநாட்டில் அவர் பிறந்தவர். குழந்தைப் பிராயத்திலிருந்து மகா வித்வான்களுடைய சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டே வளர்ந்தவர். அப்படிப்பட்டவரைப் பார்த்து, இந்த மெட்ராஸ்காரன், தன்னிடம் பணம் இருக்கிற திமிரினால் தானே இப்படிக் கேட்டான்? "ஆமாம்; சங்கீதத்தைப் பணங் கொடுத்து வாங்குகிற இடத்திலே, மரக்காலில் அளந்தோ தராசில் நிறுத்தோதான் கொடுப்பார்கள். எங்கள் ஊரில் இப்படிக் கிடையாது." - இந்த மாதிரி சம்பு சாஸ்திரி சொல்லவில்லை; அந்த வீட்டைவிட்டுப் போகும் போது மனத்திற்குள் நினைத்துக் கொண்டு போனார்.

இன்னொரு பெரிய வக்கீலின் வீட்டில் பாட்டு வாத்தியார் வேண்டுமென்பதாகக் கேள்விப்பட்டுச் சம்பு சாஸ்திரி அந்த வீட்டுக்குள் சென்றார்.

வக்கீல் அவரைப் பார்த்ததும், யாரோ பட்டிக்காட்டிலிருந்து வந்திருக்கும் கட்சிக்காரர் என்று நினைத்துக் கொண்டார். "என்ன, ஐயா! ஏதாவது கேஸ், கீஸ் உண்டா?" என்று கேட்டார்.

"இல்லை - வந்து - கொஞ்சம் எனக்குச் சங்கீதம் தெரியும். ஆத்திலே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கச் சொன்னால்..."

வக்கீலுக்குக் குஷி பிறந்துவிட்டது. "என்ன சங்கீதமா? நீரா? நாசமாய்ப் போச்சு!" என்று அவர் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

அவருடைய சிரிப்பின் தாத்பர்யத்தைச் சம்பு சாஸ்திரி தெரிந்துகொண்டு, "வேணும்னா, பாடிக் காட்டுகிறேன்" என்றார்.

"பாடிக் காட்டுகிறீரா? நீரா?" என்றார் வக்கீல். உடனே, "சௌந்தரம்! சௌந்தரம்! இங்கே வா! ஒரு பிராமணன் பாடறேன்னு வந்திருக்கார்" என்றார். இந்த வேடிக்கையைத் தாம் மட்டும் அநுபவிப்பதில் அவருக்குத் திருப்தி இல்லை, தமது மனைவியும் கூட இருந்து அநுபவிக்க வேண்டும் என்று எண்ணினார்.

அவருடைய மனைவி வந்தாள். கூட அவளுடைய புதல்வியும் வந்தாள். "இவரா பாடப் போகிறார்?" என்று சௌந்தரம் கேட்டாள்.

"ஆமாம்! எங்கே உம்ம பாட்டை அவிழ்த்து விடுங்காணும்!" என்றார் வக்கீல்.

சம்பு சாஸ்திரி ஒரு கீர்த்தனம் பாடினார். அக்ஷர சுத்தமாகவும், சாஸ்திராரீதியாகவும், உருக்கம் கொடுத்தும் அற்புதமாய்ப் பாடினார்.

பாட்டின் போது ஒரு தடவை தாயாரைப் பார்த்துப் பெண் சிரித்தாள். ஏனென்றால், அந்தக் கீர்த்தனத்தை ஏற்கெனவே அந்தப் பெண் ஒரு பாட்டு வாத்தியாரிடம் கற்றுக் கொண்டிருந்தாள். அந்த மாதிரி இல்லாமல் இவர் தப்பாய்ப் பாடுகிறார் என்று பெண் சமிக்ஞையாகச் சிரித்தாள். தாயார், சமிக்ஞையிலேயே, "பேசாமலிரு" என்று பெண்ணை அடக்கினாள்.

பாட்டு முடிந்ததும், வக்கீல் நிதானமாக, "ஏன் ஸ்வாமி! நீர் இப்ப பாடியது பாட்டா, தெவச மந்திரமா?" என்று கேட்டார். அவருடைய மனைவி "வித்வானைப் பார்த்து அப்படியெல்லாம் சொல்லாதேயுங்கோ! உங்களுக்குப் பிடிக்கலேன்னா, வேண்டான்னுட்டுப் போங்களேன்!" என்றாள். சம்பு சாஸ்திரி எழுந்து வெளியே சென்றார்.

மற்றொரு பெரிய மனிதர் வீட்டில், சாஸ்திரிக்கு ஆர்மோனியப் பெட்டி வாசிக்கத் தெரியுமா என்று கேட்டார்கள். தெரியாது என்றதும் போகச் சொல்லி விட்டார்கள். ஒரு செட்டியார், "பிளேட் கிளேட் கொடுத்திருக்கீமா? ரேடியோவிலோ, கீடியோவிலோ பாடியிருக்கீமா?" என்று கேட்டார். சாஸ்திரி, "இல்லை" என்றதும், "சரிதான், போய் வாரும்" என்று சொல்லி விட்டார்.

இம்மாதிரி வீடு வீடாகவும் பங்களா பங்களாவாகவும் நுழைந்து வெளியே வந்து சாஸ்திரி ரொம்பவும் அலுத்துப் போனார். அவர் மனம் ரொம்பவும் சோர்ந்து விட்டது. ஒரு நாள் அவர் ஒரு பெரிய பங்களாவுக்குள் நுழைந்த போது, 'இதுதான் கடைசி தடவை; இந்த இடத்தில் நமக்கு வேலை கிடைக்காவிட்டால், பகவானுக்கு விருப்பமில்லை என்று தீர்மானிக்க வேண்டியதுதான்' என்று எண்ணிக் கொண்டு சென்றார்.

அந்தப் பங்களாவின் எஜமானர் அப்போது பங்களாவின் முன் வாசல் தோட்டத்தில் தம் சிநேகிதருடன் உட்கார்ந்து சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தார். சம்பு சாஸ்திரியை அங்கேயே உட்காரச் சொல்லி, "எங்கே, பாடுங்கள், பார்க்கலாம்" என்றார்.

இவர்களுக்கு என்ன பாட்டுப் பாடினால் பிடிக்கும் என்று சாஸ்திரி சற்று யோசித்தார். கடைசியில் அம்பிகையைத் தியானம் செய்து கொண்டு "சிருங்கார லஹரி" என்ற கீர்த்தனத்தைப் பாடி, அதற்கு ஸ்வரமும் விஸ்தாரமாகப் பாடத் தொடங்கினார்.

பங்களாவின் எஜமானர் பாட்டை நடுவிலேயே நிறுத்திவிட்டார். "இந்தக் காலத்திலே உங்க சங்கீதமெல்லாம் செல்லாது, ஸ்வாமி! இப்போ 'டேஸ்டெ'ல்லாம் மாறியிருக்கு. கொஞ்சம் இந்துஸ்தானி - கிந்துஸ்தானி அப்படியிருக்க வேண்டும்; போய் வாரும்" என்று சொல்லி அனுப்பினார்.

ஆனால், சாஸ்திரி அங்கே பாடிய பாட்டை ஓர் ஆத்மா அநுபவித்துப் பரவசப்பட்டுக் கொண்டிருந்தது. அவன், நல்லானுடைய மைத்துனன் சின்னசாமிதான். இந்தப் பங்களாவில் சின்னசாமி தோட்ட வேலை செய்து கொண்டிருந்தான், பாட்டைக் கேட்டுவிட்டு அருகில் வந்து பார்த்து, 'நம்ம நெடுங்கரை சாஸ்திரி ஐயா!' என்று அவன் தெரிந்து கொண்டு, 'இவர் எப்படி இங்கே வந்தாரு?' என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தான்.

ஆகவே, சாஸ்திரி திரும்பி வெளியே சென்று கொண்டிருந்தபோது, அவன் ஓடிவந்து விழுந்து நமஸ்காரம் செய்து, "சாமி! சாமி! என்னைத் தெரியுதுங்களா?" என்று கேட்டான்.

சாஸ்திரிக்கு அந்தப் பங்களாவில் உண்டாகியிருந்த ஏமாற்றத்தினால், மனம் குழம்பிப் போயிருந்தது. இவனை எங்கே அடையாளம் தெரியப் போகிறது?

"யார் தெரியவில்லையே, அப்பா!" என்றார்.

"நான் தானுங்க, நல்லானுக்கு மச்சான், சின்னசாமி. இப்பத் தெரியுதுங்களா?" என்றான்.

"ஞாபகம் வருகிறது. நல்லான் எங்கே அப்பா இருக்கான்? சௌக்கியமாயிருக்கானா?" என்று சாஸ்திரி கேட்டார்.

"நாங்க எல்லோரும் சாவடிக் குப்பத்திலே இருக்கோமுங்க. அவரு எப்போதும் உங்களைப் பத்தியும் உங்க நல்ல குணத்தைப் பத்தியுமே பேசிக்கிட்டிருப்பாருங்க. நீங்க அவசியம் வந்துட்டுப் போகணுங்க!" என்றான்.

"அதுக்கென்னப்பா, பார்க்கலாம்! எங்கே இருந்தாலும் சௌக்கியமாயிருந்தால் சரி" என்று சாஸ்திரி சொல்லிவிட்டு மேலே நடந்தார்.

"சாவடிக்குப்பங்க, கட்டாயம் வர்றணுங்க" என்று சின்னசாமி கூவினான்.

'ஸ்வாமி! ஸ்வாமி! இந்தத் திக்கற்ற நிலைமையில் நான் பட்டிக்கார நல்லானிடத்திலே போக வேண்டுமா? அவனிடம் என்னை வைத்து ரக்ஷிக்கும்படி கேட்க வேணுமா? வேண்டாம்! வேண்டாம்! இந்த உலக வாழ்க்கையே இனிமேல் வேண்டாம்! பூனூலை அறுத்து எறிந்துவிட்டுக் காஷாயம் கட்டிக்கொள்ள வேண்டியது; சாப்பாடு கிடைத்த இடத்தில் சாப்பிட வேண்டியது; திறந்த வெளியில் தூங்க வேண்டியது; பகவானுடைய பெயரைச் சொல்லிக் கொண்டு ஊர் ஊராகப் போக வேண்டியது. க்ஷேத்திரங்களைத் தரிசிக்க வேண்டியது. இத்தனை நாளும் கிருகஸ்தாசிரமம் நடத்தியதெல்லாம் போதும்; மற்றவர்களுக்காகக் கவலைப் பட்டதும் போதும், இனிமேலாவது நாம் போகிற வழிக்குக் கதி தேடிக் கொள்வோம்.' ... இந்த மாதிரி யோசனை செய்து கொண்டு சாஸ்திரி மேலே நடந்தார்.

சம்பு சாஸ்திரி நெடுங்கரையை விட்டுக் கிளம்பிய போது அவருடைய மனம் எண்ணாததெல்லாம் எண்ணிற்று.

அவரை ஊரார் சாதிப் பிரஷ்டம் பண்ணி வைத்து, தீபாவளிக்கும் மாப்பிள்ளை வராமற் போனதிலிருந்து சாஸ்திரி மனம் சோர்ந்து போயிருந்தார். சாவித்திரியைப் புக்ககத்துக்கு அனுப்பிய பிறகு அவருடைய மனச் சோர்வு அதிகமாயிற்று. வீட்டிலே சாவித்திரி இல்லை. வெளியிலே நல்லான் இல்லை. முன்னைப் போல் பஜனைகளும் உற்சவங்களும் நடப்பதில்லை. இதனாலெல்லாம் நெடுங்கரை வாசமே அவருக்கு வெறுத்துப் போயிருந்தது. ஆனாலும் ஊரை விட்டுக் கிளம்பும்போது, அவருடைய இருதயம் ஏன் இவ்வளவு வேதனை அடையவேண்டும்?

'கூடாது; இத்தகைய பாசம் கூடாது, நம்மை இந்தப் பாசத்திலிருந்து விடுவித்து ரக்ஷிப்பதற்காகத்தான் அம்பிகை இவ்வாறு மாமியாரின் வாக்கின் மூலமாக ஆக்ஞாபித்திருக்கிறாள்' என்று எண்ணி மனத்தை உறுதிப் படுத்திக் கொண்டு கிளம்பினார்.

க்ஷேத்திர யாத்திரை செய்ய வேண்டுமென்ற விருப்பம் சாஸ்திரிக்கு வெகு காலமாக இருந்தது. அந்த விருப்பம் நிறைவேறுவதற்கு இப்போது சந்தர்ப்பம் வாய்த்தது. சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் முதலிய க்ஷேத்திரங்களுக்குச் சென்று அங்கெல்லாம் இரண்டு மூன்று நாள் தங்கி ஸ்வாமி தரிசனம் செய்துகொண்டு கடைசியாகச் சென்னைப்பட்டினம் வந்து சேர்ந்தார்.

சென்னையில் முதலில் அவருக்குத் திக்குத் திசை தெரியவில்லை. அப்புறம், கோவில்களை வைத்து ஒருவாறு அடையாளம் கண்டுபிடிக்கத் தெரிந்துகொண்டார். கபாலீசுவரர் கோயில், பார்த்தசாரதி கோவில், கந்தசாமி கோவில், ஏகாம்பரேசுவரர் கோவில் ஆகியவற்றில் ஸ்வாமி தரிசனம் செய்து பரவசமானார். அப்புறம் வந்த காரியத்தைக் கவனிக்கத் தொடங்கினார்.

சம்பு சாஸ்திரி கிராமத்தில் பெரிய மிராசுதாராயிருந்தவர். எல்லாருக்கும் உதவிசெய்து அவருக்குப் பழக்கமே தவிர, ஒருவரிடம் போய் நின்று ஓர் உதவி கேட்டு அறியாதவர். மேலும் இயற்கையிலேயே சங்கோச சுபாவமுடையவர். அடித்துப் பேசிக் காரியத்தை முடித்துக் கொள்ளும் சக்தி அவருக்குக் கிடையாது.

அப்படிப்பட்டவர், முன்பின் தெரியாதவர்களின் வீடு ஏறிச்சென்று அவர்களிடம் ஒரு காரியத்தைக் கேட்பது என்றால், இலேசான காரியமா? ஆனாலும், சாஸ்திரி பகவான்மேல் பாரத்தைப் போட்டு, நெஞ்சைத் திடப் படுத்திக் கொண்டு, இந்தக் காரியத்தைத் தொடங்கினார்.

காரியத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை மட்டும் அவருக்கு இல்லை. "நாகரிகம் மிகுந்த இந்தப் பட்டணத்திலேயாவது, பட்டிக்காட்டு மனுஷனாகிய நமக்குப் பாட்டு வாத்தியார் வேலை கிடைக்கவாவது?' என்ற அவநம்பிக்கை அவருடைய மனத்துக்குள் கிடந்தது. அவருக்கே தம்மிடம் நம்பிக்கை இல்லாதபோது மற்றவர்களுக்கு எப்படி நம்பிக்கை உண்டாகப் போகிறது?

சிலர் சம்பு சாஸ்திரியின் தோற்றத்தைப் பார்த்ததுமே அவருக்குச் சங்கீதம் எங்கே வரப்போகிறது என்று தீர்மானித்துவிட்டார்கள். ஒரு பெரிய மனுஷர் சம்பு சாஸ்திரியை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "ஏன் ஸ்வாமி உங்க ஊரிலே சங்கீதத்தைத் தராசிலே நிறுத்துக் கொடுக்கிறதா, மரக்காலிலே அளந்து கொடுக்கிறதா?" என்று கேட்டார்.

இந்தக் கேள்வி சம்பு சாஸ்திரியின் மனத்தை ரொம்பவும் உறுத்திற்று. கர்நாடக சங்கீதத்தின் ஜீவஸ்தானமாகிய சோழநாட்டில் அவர் பிறந்தவர். குழந்தைப் பிராயத்திலிருந்து மகா வித்வான்களுடைய சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டே வளர்ந்தவர். அப்படிப்பட்டவரைப் பார்த்து, இந்த மெட்ராஸ்காரன், தன்னிடம் பணம் இருக்கிற திமிரினால் தானே இப்படிக் கேட்டான்? "ஆமாம்; சங்கீதத்தைப் பணங் கொடுத்து வாங்குகிற இடத்திலே, மரக்காலில் அளந்தோ தராசில் நிறுத்தோதான் கொடுப்பார்கள். எங்கள் ஊரில் இப்படிக் கிடையாது." - இந்த மாதிரி சம்பு சாஸ்திரி சொல்லவில்லை; அந்த வீட்டைவிட்டுப் போகும் போது மனத்திற்குள் நினைத்துக் கொண்டு போனார்.

இன்னொரு பெரிய வக்கீலின் வீட்டில் பாட்டு வாத்தியார் வேண்டுமென்பதாகக் கேள்விப்பட்டுச் சம்பு சாஸ்திரி அந்த வீட்டுக்குள் சென்றார்.

வக்கீல் அவரைப் பார்த்ததும், யாரோ பட்டிக்காட்டிலிருந்து வந்திருக்கும் கட்சிக்காரர் என்று நினைத்துக் கொண்டார். "என்ன, ஐயா! ஏதாவது கேஸ், கீஸ் உண்டா?" என்று கேட்டார்.

"இல்லை - வந்து - கொஞ்சம் எனக்குச் சங்கீதம் தெரியும். ஆத்திலே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கச் சொன்னால்..."

வக்கீலுக்குக் குஷி பிறந்துவிட்டது. "என்ன சங்கீதமா? நீரா? நாசமாய்ப் போச்சு!" என்று அவர் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

அவருடைய சிரிப்பின் தாத்பர்யத்தைச் சம்பு சாஸ்திரி தெரிந்துகொண்டு, "வேணும்னா, பாடிக் காட்டுகிறேன்" என்றார்.

"பாடிக் காட்டுகிறீரா? நீரா?" என்றார் வக்கீல். உடனே, "சௌந்தரம்! சௌந்தரம்! இங்கே வா! ஒரு பிராமணன் பாடறேன்னு வந்திருக்கார்" என்றார். இந்த வேடிக்கையைத் தாம் மட்டும் அநுபவிப்பதில் அவருக்குத் திருப்தி இல்லை, தமது மனைவியும் கூட இருந்து அநுபவிக்க வேண்டும் என்று எண்ணினார்.

அவருடைய மனைவி வந்தாள். கூட அவளுடைய புதல்வியும் வந்தாள். "இவரா பாடப் போகிறார்?" என்று சௌந்தரம் கேட்டாள்.

"ஆமாம்! எங்கே உம்ம பாட்டை அவிழ்த்து விடுங்காணும்!" என்றார் வக்கீல்.

சம்பு சாஸ்திரி ஒரு கீர்த்தனம் பாடினார். அக்ஷர சுத்தமாகவும், சாஸ்திராரீதியாகவும், உருக்கம் கொடுத்தும் அற்புதமாய்ப் பாடினார்.

பாட்டின் போது ஒரு தடவை தாயாரைப் பார்த்துப் பெண் சிரித்தாள். ஏனென்றால், அந்தக் கீர்த்தனத்தை ஏற்கெனவே அந்தப் பெண் ஒரு பாட்டு வாத்தியாரிடம் கற்றுக் கொண்டிருந்தாள். அந்த மாதிரி இல்லாமல் இவர் தப்பாய்ப் பாடுகிறார் என்று பெண் சமிக்ஞையாகச் சிரித்தாள். தாயார், சமிக்ஞையிலேயே, "பேசாமலிரு" என்று பெண்ணை அடக்கினாள்.

பாட்டு முடிந்ததும், வக்கீல் நிதானமாக, "ஏன் ஸ்வாமி! நீர் இப்ப பாடியது பாட்டா, தெவச மந்திரமா?" என்று கேட்டார். அவருடைய மனைவி "வித்வானைப் பார்த்து அப்படியெல்லாம் சொல்லாதேயுங்கோ! உங்களுக்குப் பிடிக்கலேன்னா, வேண்டான்னுட்டுப் போங்களேன்!" என்றாள். சம்பு சாஸ்திரி எழுந்து வெளியே சென்றார்.

மற்றொரு பெரிய மனிதர் வீட்டில், சாஸ்திரிக்கு ஆர்மோனியப் பெட்டி வாசிக்கத் தெரியுமா என்று கேட்டார்கள். தெரியாது என்றதும் போகச் சொல்லி விட்டார்கள். ஒரு செட்டியார், "பிளேட் கிளேட் கொடுத்திருக்கீமா? ரேடியோவிலோ, கீடியோவிலோ பாடியிருக்கீமா?" என்று கேட்டார். சாஸ்திரி, "இல்லை" என்றதும், "சரிதான், போய் வாரும்" என்று சொல்லி விட்டார்.

இம்மாதிரி வீடு வீடாகவும் பங்களா பங்களாவாகவும் நுழைந்து வெளியே வந்து சாஸ்திரி ரொம்பவும் அலுத்துப் போனார். அவர் மனம் ரொம்பவும் சோர்ந்து விட்டது. ஒரு நாள் அவர் ஒரு பெரிய பங்களாவுக்குள் நுழைந்த போது, 'இதுதான் கடைசி தடவை; இந்த இடத்தில் நமக்கு வேலை கிடைக்காவிட்டால், பகவானுக்கு விருப்பமில்லை என்று தீர்மானிக்க வேண்டியதுதான்' என்று எண்ணிக் கொண்டு சென்றார்.

அந்தப் பங்களாவின் எஜமானர் அப்போது பங்களாவின் முன் வாசல் தோட்டத்தில் தம் சிநேகிதருடன் உட்கார்ந்து சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தார். சம்பு சாஸ்திரியை அங்கேயே உட்காரச் சொல்லி, "எங்கே, பாடுங்கள், பார்க்கலாம்" என்றார்.

இவர்களுக்கு என்ன பாட்டுப் பாடினால் பிடிக்கும் என்று சாஸ்திரி சற்று யோசித்தார். கடைசியில் அம்பிகையைத் தியானம் செய்து கொண்டு "சிருங்கார லஹரி" என்ற கீர்த்தனத்தைப் பாடி, அதற்கு ஸ்வரமும் விஸ்தாரமாகப் பாடத் தொடங்கினார்.

பங்களாவின் எஜமானர் பாட்டை நடுவிலேயே நிறுத்திவிட்டார். "இந்தக் காலத்திலே உங்க சங்கீதமெல்லாம் செல்லாது, ஸ்வாமி! இப்போ 'டேஸ்டெ'ல்லாம் மாறியிருக்கு. கொஞ்சம் இந்துஸ்தானி - கிந்துஸ்தானி அப்படியிருக்க வேண்டும்; போய் வாரும்" என்று சொல்லி அனுப்பினார்.

ஆனால், சாஸ்திரி அங்கே பாடிய பாட்டை ஓர் ஆத்மா அநுபவித்துப் பரவசப்பட்டுக் கொண்டிருந்தது. அவன், நல்லானுடைய மைத்துனன் சின்னசாமிதான். இந்தப் பங்களாவில் சின்னசாமி தோட்ட வேலை செய்து கொண்டிருந்தான், பாட்டைக் கேட்டுவிட்டு அருகில் வந்து பார்த்து, 'நம்ம நெடுங்கரை சாஸ்திரி ஐயா!' என்று அவன் தெரிந்து கொண்டு, 'இவர் எப்படி இங்கே வந்தாரு?' என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தான்.

ஆகவே, சாஸ்திரி திரும்பி வெளியே சென்று கொண்டிருந்தபோது, அவன் ஓடிவந்து விழுந்து நமஸ்காரம் செய்து, "சாமி! சாமி! என்னைத் தெரியுதுங்களா?" என்று கேட்டான்.

சாஸ்திரிக்கு அந்தப் பங்களாவில் உண்டாகியிருந்த ஏமாற்றத்தினால், மனம் குழம்பிப் போயிருந்தது. இவனை எங்கே அடையாளம் தெரியப் போகிறது?

"யார் தெரியவில்லையே, அப்பா!" என்றார்.

"நான் தானுங்க, நல்லானுக்கு மச்சான், சின்னசாமி. இப்பத் தெரியுதுங்களா?" என்றான்.

"ஞாபகம் வருகிறது. நல்லான் எங்கே அப்பா இருக்கான்? சௌக்கியமாயிருக்கானா?" என்று சாஸ்திரி கேட்டார்.

"நாங்க எல்லோரும் சாவடிக் குப்பத்திலே இருக்கோமுங்க. அவரு எப்போதும் உங்களைப் பத்தியும் உங்க நல்ல குணத்தைப் பத்தியுமே பேசிக்கிட்டிருப்பாருங்க. நீங்க அவசியம் வந்துட்டுப் போகணுங்க!" என்றான்.

"அதுக்கென்னப்பா, பார்க்கலாம்! எங்கே இருந்தாலும் சௌக்கியமாயிருந்தால் சரி" என்று சாஸ்திரி சொல்லிவிட்டு மேலே நடந்தார்.

"சாவடிக்குப்பங்க, கட்டாயம் வர்றணுங்க" என்று சின்னசாமி கூவினான்.

'ஸ்வாமி! ஸ்வாமி! இந்தத் திக்கற்ற நிலைமையில் நான் பட்டிக்கார நல்லானிடத்திலே போக வேண்டுமா? அவனிடம் என்னை வைத்து ரக்ஷிக்கும்படி கேட்க வேணுமா? வேண்டாம்! வேண்டாம்! இந்த உலக வாழ்க்கையே இனிமேல் வேண்டாம்! பூனூலை அறுத்து எறிந்துவிட்டுக் காஷாயம் கட்டிக்கொள்ள வேண்டியது; சாப்பாடு கிடைத்த இடத்தில் சாப்பிட வேண்டியது; திறந்த வெளியில் தூங்க வேண்டியது; பகவானுடைய பெயரைச் சொல்லிக் கொண்டு ஊர் ஊராகப் போக வேண்டியது. க்ஷேத்திரங்களைத் தரிசிக்க வேண்டியது. இத்தனை நாளும் கிருகஸ்தாசிரமம் நடத்தியதெல்லாம் போதும்; மற்றவர்களுக்காகக் கவலைப் பட்டதும் போதும், இனிமேலாவது நாம் போகிற வழிக்குக் கதி தேடிக் கொள்வோம்.' ... இந்த மாதிரி யோசனை செய்து கொண்டு சாஸ்திரி மேலே நடந்தார்.