திருக்குற்றாலப்பதிகம்

விக்கிமூலம் இலிருந்து

திருக்குற்றாலப்பதிகம் நூலை எழுதியவர்: திருஞானசம்பந்தர்

பண்- குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர்வேங்கைக்

கொம்பார் சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம்

அம்பானெய்யோ டாட லமர்ந்தா னலர்கொன்றை

நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள்


பொடிகள் பூசித் தொண்டர் பின்செல்லப் புகழ்விம்மக்

கொடிக ளோடுந் நாள்விழ மல்கு குற்றாலம்

கடிகொள் கொன்றை கூவிள மாலை காதல்செய்

அடிகண் மேய நன்னகர் போலும் அடியீர்காள்


செல்வ மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்

கொல்லை முல்லை மெல்லரும் பீனும் குற்றாலம்

வில்லி னொல்க மும்மதி லெய்து வினைபோக

நல்கு நம்பான் நன்னகர் போலும் நமரங்காள்


பக்கம் வாழைப் பாய்கனி யோடு பலவின் தேன்

கொக்கின் கோட்டுப் பைங்கனி தூங்கும் குற்றாலம்

அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டோ ரனலேந்தும்

நக்கன் மேய நன்னகர் போலும் நமரங்காள்


மலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி

குலையார் வாழைத் தீங்கனி மாந்தும் குற்றாலம்

இலையார் சூல மேந்திய கையா னெயிலெய்த

சிலையான் மேய நன்னகர் போலும் சிறுதொண்டீர்


மைம்மா நீலக் கண்ணியர் சாரல் மணிவாரிக்

கொய்ம்மா வேன லுண்கிளி வோப்பும் குற்றாலம்

கைம்மா வேழத் தீருரி போர்த்த கடவுள்எம்

பெம்மான் மேய நன்னகர் போலும் பெரியீர்காள்


நீல நெய்தல் தண்சுனை சூழ்ந்த நீட்சோலைக்

கோல மஞ்ஞை பேடையொ டாடும் குற்றாலம்

காலன் தன்னைக் காலாற் காய்ந்த கடவுள்எம்

சூல பாணி நன்னகர் போலும் தொழுவீர்காள்


போதும் பொன்னு முந்தி யருவி புடைசூழக்

கூதன் மாரி நுண்டுளி தூங்குங் குற்றாலம்

மூதூரிலங்கை முட்டிய கோனை மிறைசெய்த

நாதன் மேய நன்னகர் போலும் நமரங்காள்


அரவின் வாயில் முள்ளெயி றேய்ப்ப வரும்பீன்று

குரவம் பாவை முருகமர் சோலைக் குற்றாலம்

பிரமன் னோடு மாலறி யாத பெருமைஎம்

பரமன் மேய நன்னகர் போலும் பணிவீர்காள்


பெருந்தட் சாரல் வாழ்சிறை வண்டு பெடைபுல்கிக்

குருந்தம் ஏறிச் செவ்வழி பாடுங் குற்றாலம்

இருந்துண் டேரும் நின்றுட் சமணும் எடுத்தார்ப்ப

அருந்தண் மேய நன்னகர் போலும் அடியீர்காள்


மாட வீதி வருபுனல் காழி யார்மன்னன்

கோட லீன்று கொழுமுனை கூம்புங் குற்றாலம்

நாட வல்ல நற்றமிழ் ஞான சம்பந்தன்

பாடல் பத்தும் பாடநம் பாவம் பறையுமே

--முற்றிற்று--

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குற்றாலப்பதிகம்&oldid=22333" இலிருந்து மீள்விக்கப்பட்டது