திருமந்திரம்/ஒன்பதாம் தந்திரம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

ஒன்பதாம் தந்திரம்[தொகு]

1.குருமட தரிசனம்[தொகு]

2648.
பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியும்எம் ஈசன் றனக்கென்றே உள்கிக்
குவியுங் குருமடங் கண்டவர் தாம்போய்த்
தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே.

2649.
இவனில்ல மல்லது அவனுக்கங் கில்லை
அவனுக்கும் வேறில்லம் உண்டா அறியில்
அவனுக் கிவனில்லம் என்றென் றறிந்தும்
அவனைப் புறம்பென் றரற்றுகின் றாரே.

2650.
நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்
கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி
தேட வரியன் சிறப்பிலி எம்மிறை
ஓடம் உலகுயி ராகிநின் றானே.

2651.
இயம்புவன் ஆசனத் தோடு மலையும்
இயம்புவன் சித்தக் குகையும் மடமும்
இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்
இயம்புவன் ஈரா றிருநிலத் தோர்க்கே.

2652.
முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம்
அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி
அகம்பர மாதனம் எண்எண் கிரியை
சிதம்பரம் தற்குகை ஆதாரந் தானே.

2653.
அகமுக மாம்பீடம் ஆதாரம் ஆகும்
சகமுக மாஞ்சத்தி ஆதனம் ஆகும்
செகமுக மாந்தெய்வ மேசிவ மாகும்
அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே.

2654.
மாயை யிரண்டும் மறைக்க மறைவுறும்
காயமோ ரைந்துங் கழியத்தா னாகியே
தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள்
ஆய்பவர் ஞானாதி மோனத்தர் ஆமே.

2.ஞான குரு தரிசனம்[தொகு]

2655.
ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடின்
கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவபதம் மேலாய் அளித்திடும்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.

2656.
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய பரசிவம் யாவையும் ஆகி
விரிவு குவிவற விட்ட நிலத்தே
பெரிய குருபதம் பேசவொண் ணாதே.

2657.
ஆயன நந்தி அடிக்கென் தலைபெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்தவென் வாய்பெற்றேன்
நந்தியைக் காணவென் கண்பெற்றேன்
சேயன நந்திக்கென் சிந்தைபெற் றேனே.

2658.
கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயங்கெடு மாபோல்
குருவின் உருவங் குறித்தவப் போதே
திரிமலந் தீர்ந்து சிவனவன் ஆமே.

2659.
அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிட மாய்ந்துகொள் வார்களுக்(கு)
அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணின் அவனிவ னாமே.

2660.
தோன்ற அறிதலும் தோன்றல்தோன் றாமையும்
மான்ற அறிவும் மறிநன வாதிகள்
மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்றற
ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே.

2661.
சந்திர பூமிக் குடன்புரு வத்திடைக்
கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும்
பந்த மிலாத பளிங்கின் உருவினள்
பந்தம் அறுத்த பரங்குரு பற்றே.

2662.
மனம்புகுந் தானுல கேழும் மகிழ
நிலம்புகுந் தானெடு வானிலம் தாங்கிச்
சினம்புகுந் தான்றிசை எட்டும் நடுங்க
வனம்புகுந் தானூர் வடக்கென்ப தாமே.

2663.
தானான வண்ணமும் கோசமும் சார்தரும்
தானாம் பறவை வனமெனத் தக்கன
தானான சோடச மார்க்கந்தான் நின்றிடில்
தானம் தசாங்கமும் வேறுள்ள தானே.

2664.
மருவிப் பிரிவறியா எங்கள் மாநந்தி
உருவ நினைக்கநின் றுள்ளே உருக்கும்
கருவிற் கரந்துள்ளங் காணவல் லார்க்கிங்(கு)
அருவினை கண்சோரும் அழிவஈரகத்தே.

2665.
தலைப்படலாம் எங்கள் தத்துவன் றன்னைப்
பலப்படு பாசம் அறுத்தறுத் திட்டு
நிலைப்பெற நாடி நினைப்பற உள்கில்
தலைப்பட லாகும் திருமமுந் தானே.

2666.
நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளைமலர் சோதியி னானைத்
தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்
கனத்த மனத்தடைந் தாலுயர்ந் தாரே.

2667.
தலைப்படுங் காலத்துத் தத்துவன் றன்னை
விலக்குறின் மேலை விதியென்று கொள்க
அனைத்துல காய்நின்ற ஆதிப் பிரானை
நினைப்பறு வார்பத்தி நேடிக்கொள் வாரே.

2668.
நகழ்வொழிந் தாரவர் நாதனை யுள்கி
நிகழ்வொழிந் தாரெம் பிரானொடுங் கூடித்
திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தையி னுள்ளே
புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே.

2669.
வந்த மரகத மாணிக்க ரேகைபோல்
சந்திடு மாமொழிச் சற்குரு சன்மார்க்கம்
இந்த இரேகை இலாடத்தின் மூலத்தே
சுந்தரச் சோதியுட் சோதியு மாமே.

2670.
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்
கண்ணு மாயோகக் கடவுள் இருப்பது
மண்ணு நீரனல் காலொடு வானுமாய்
விண்ணு மின்றி வெளியானோர் மேனியே.

2671.
பரசு பதியென்று பார்முழு தெல்லாம்
பரசிவன் ஆணை நடக்கும் பாதியால்
பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்(கு)
உரிய பதியும்பா ராக்கிநின் றானே.

2672.
அம்பர நாதன் அகலிடம் பூம்பொழில்
தம்பர மல்லது தாமறி யோமென்பர்
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்
எம்பெரு மானருள் பெற்றிருந் தாரே.

2673.
கோவணங் கும்படி கோவண மாகிப்பின்
நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்
தேவணங் கோமினிச் சித்தந் தெளிந்தனம்
போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே.

3.பிரணவ சமாதி[தொகு]

2674.
தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை
பாலித்த சூக்குமம் மேலைச் சொரூபப்பெண்
ஆலித்த முத்திரை ஆங்கதிற் சூக்குமம்
மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.

2675.
ஓமெனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓமெனும் ஓங்காரத் துள்ளே உருவரு
ஓமெனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.

2676.
ஓங்காரத் துள்ளே உதித்த ஐம்பூதமும்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றன
ஓங்கார சீவன் பரசிவ ரூபமே.

2677.
வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும்
அருக்கஞ் சராசரம் ஆகும் உலகில்
தருக்கிய ஆதார மெல்லாந்தன் மேனி
சுருக்கமில் ஞானம் தொகுத்துணர்ந் தோரே.

2678.
மலையும் மனோபவம் மருள்வன ஆவன
நிலையில் தரிசனம் தீப நெறியாம்
தலமுங் குலமுந் தவஞ்சித்த மாகும்
நலமுஞ்சன் மார்க்கத் துபதேசந் தானே.

2679.
சோடச மார்க்கமுஞ் சொல்லும்சன் மார்க்கிகட்
காடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற்
கூடிய அந்தமும் கோதண்ட முங்கடந்
தேறிய ஞானஞே யாந்தத் திருக்கவே.

4.ஒளி[தொகு]

2680.
ஒளியை யறியில் உருவம் ஒளியும்
ஒளியும் உருவம் அறியில் உருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடனிருந் தானே.

2681.
புகலெளி தாகும் புவனங்கள் எட்டும்
அகலொளி தாயிரு ளாசற வீசும்
பகலொளி செய்தது மத்தா மரையிலே
இகலொளி செய்தெம் பிரானிருந் தானே.

2682.
விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்
துளங்கொளி பெற்றன சோதி யருள
வளங்கொளி பெற்றதே பேரொளி வேறு
களங்கொளி செய்து கலந்துநின் றானே.

2683.
இளங்கொளி ஈசன் பிறப்பொன்று மில்லி
துளங்கொளி ஞாயிறுந் திங்களுங் கண்கள்
வளங்கொளி அங்கி மற்றைக்கண் நெற்றி
விளங்கொளி செய்கின்ற மெய்காயம் ஆமே.

2684.
மேலொளி கீழதன் மேவிய மாருதம்
பாரொளி யங்கி பரந்தொளி ஆகாசம்
நீரொளி செய்து நெடுவிசும் பொன்றினும்
மேலொளி ஐந்தும் ஒருங்கொளி யாமே.

2685.
மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி
பன்னிய ஞானம் பரந்த பரத்தொளி
துன்னிய வாறொளி தூய்மொழி நாடொறும்
உன்னிய வாறொளி ஒத்தது தானே.

2686.
விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து
துளங்கொளி ஈசனைச் சொல்லுமெப் போதும்
உளங்கொளி யூனிடை நின்றுயிர்க் கின்ற
வளங்கொளி எங்கும் மருவிநின் றானே.

2687.
விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும்
துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்
அளங்கொளி ஆரமு தாகநஞ் சாரும்
களங்கொளி ஈசன் கருத்தது தானே.

2688.
இலங்கிய தெவ்வொளி யவ்வொளி ஈசன்
துலங்கொளி போல்வது தூங்கருட் சத்தி
விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி
உளங்கொளி யுள்ளே ஒருங்குகின் றானே.

2689.
உளங்கொளி யாவதென் உண்ணின்ற சீவன்
வளங்கொளி யாநின்ற மாமணிச் சோதி
விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி
வளங்கொளி யாயத்து ளாகிநின் றானே.

2690.
விளங்கொளி யாய்நின்ற விகிர்தன் இருந்த
துளங்கொளி பாசத்துள் தூங்கிருள் சோர
கலங்கிருள் நட்டமே கண்ணுத லாட
விளங்கொளி யுன்மனத் தொன்றிநின் றானே.

2691.
போது கருங்குழற் போனவர் தூதிடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
சோதியும் அண்டத்தப் பாலுற்ற தூவொளி
நீதியி னல்லிருள் நீக்கிய வாறே.

2692.
உண்டில்லை யென்னும் உலகத் தியற்கை
பண்டில்லை யென்னும் பரங்கதி யுண்டுகொல்
கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில்
விண்டில்லை யுள்ளே விளங்கொளி யாமே.

2693.
சுடருற ஓங்கிய ஒள்ளொளி யாங்கே
படருறு காட்சிப் பகலவன் ஈசன்
அடருறு மாயையின் ஆரிருள் வீசில்
உடலுறு ஞானத் துறவியின் ஆமே.

2694.
ஒளிபவ ளத்திரு மேனிவெண் ணீற்றன்
அளிபவ ளச்செம்பொன் ஆதிப் பிரானும்
களிபவ ளத்தினன் காரிருள் நீங்கி
ஒளிபவ ளத்தென்னோ டீசன்நின் றானே.

2695.
ஈசன்நின் றானிமை யோர்கள்நின் றார்நின்ற
தேசமொன் றின்றித் திகைத்திழைக் கின்றனர்
பாசமொன் றாலப் பழவினை பற்றற
வாசமொன் றாமலர் போன்றது தானே.

2696.
தானே யிருக்கும் அவற்றிற் றலைவனும்
தானே யிருக்கு மவனென நண்ணிடும்
வானா யிருக்குமாம் மாயிரு ஞாலத்துப்
பானா யிருக்கப் பரவலு மாமே.

5.தூல பஞ்சாக்கரம்[தொகு]

2697.
ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தா கமங்களும்
ஐம்ப தெழுத்தின் அடைவை அறிந்தபின்
ஐம்ப தெழுத்தே அஞ்செழுத் தாமே.

2698.
அகார முதலாக ஐம்பத்தொன் றாகி
உகார முதுலாக ஓங்கி யுதித்து
மகாரா இறுதியாய் மாய்ந்து மாய்ந்தேறி
நகார முதலாகும் நந்திதன் நாமமே.

2699.
அகராதி ஈரெண் கலந்த பரையும்
உகராதி தன்சத்தி உள்ளொளி ஈசன்
சிகராதி தான்சிவ வேதமே கோணம்
நகராதி தான்மூல மந்திர நண்ணுமே.

2700.
வாயொடு கண்டம் இருதய மருவுந்தி
ஆய இலிங்கம் அவற்றின்மே லேயவ்வாய்த்
தூயதோர் துண்டம் இருமத் தகஞ்செல்லல்
ஆயதீ றாமைந்தோ டாமெழுத் தஞ்சுமே.

2701.
கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக்
கரணங்கள் விட்டுயிர் தானெழும் போதும்
மரணங்கை வைத்துயிர் மாற்றிடும் போதும்
அரணங்கை கூட்டுவ தஞ்செழுத் தாமே.

2702.
ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர்
சேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும்
வாயுற வோதி வழுத்தலும் ஆமே.

2703.
தெள்ளமு தூறச் சிவாய நமவென்
றுள்ளமு தூற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமு தூறல் விரும்பி யுண்ணாதவர்
துள்ளிய நீர்போற் சுழல்கின்ற வாறே.

2704.
குருவழி யாய குணங்களி னின்று
கருவழி யாய கணக்கை அறுக்க
வரும்வழி மாள மறுக்கவல் லார்கட்
கருள்வழி காட்டுவ தஞ்செழுத் தாமே.

2705.
வெறிக்க வினைத்துயர் வந்திடும் போது
செறிக்கின்ற நந்தி திருவெழுத் தோதும்
குறிப்பது வுன்னிற் குரைகழல் கூட்டும்
குறிப்பறி வான்றவம் கோனுரு வாமே.

2706.
நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரானென்று
துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று
மஞ்சு தவழும் வடவரை மீதுறை
அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே.

2707.
பிரான் வைத்த ஐந்தின் பெருமை உணரா
திரா மாற்றஞ் செய்வார்கொல் ஏழை மனிதர்
பரா முற்றும் கீழொடு பல்வகை யாலும்
அரா முற்றுஞ் சூழ்ந்த அகலிடந் தானே.

6.சூக்கும பஞ்சாக்கரம்[தொகு]

2708.
எளிய வாதுசெய் வாரெங்கள் ஈசனை
ஒளியை யுன்னி யுருகு மனத்தராய்த்
தெளிய ஓதிச் சிவாய நமவென்னும்
குளிகை யிட்டுப்பொன் ஆக்குவன் கூட்டையே.

2709.
சிவன்சத்தி சீவன் செறுமல மாயை
அவஞ்சேர்த்த பாச மலமைந் தகலச்
சிவன்சத்தி தன்னுடள் சீவனார் சேர
அவஞ்சேர்த்த பாசம் அணுக கிலாவே.

2710.
சிவனரு ளாய சிவன்திரு நாமம்
சிவனருள் ஆன்மாத் திரோத மலமாயை
சிவமுத லாகச் சிறந்து நிரோதம்
பவம தகன்று பரசிவன் ஆமே.

2711.
ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டவ்
வாதி தனைவிட் டிறையருட் சத்தியால்
தீதில் சிவஞான யோகமே சித்திக்கும்
ஓதுஞ் சிவாய மலமற்ற உண்மையே.

2712.
நமாதி நனாதி திரோதாயி யாகித்
தமாதி யதாய்நிற்கத் தானந்தத் துற்றுச்
சமாதித் துரியந் தமதாக மாகவே
நமாதி சமாதி சிவவாதல் எண்ணவே.

2713.
அருள்தரு மாயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவள் உள்ளுறு மாயை
திரிமலம் நீங்கிச் சிவாயவென் றோதும்
அருவினை தீர்ப்பதும் அவ்வெழுத் தாமே.

2714.
சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவுந் தேர்ந்துள் அடங்கச்
சிவசிவ வாய தெளிவினுள் ளார்கள்
சிவசிவ வாகும் திருவரு ளாமே.

2715.
சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.

2716.
நமவென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவவென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்
பவமது தீரும் பரிசும தற்றால்
அவமதி தீரும் அறும்பிறப் பண்றோ.

7.அதிசூக்கும பஞ்சாக்கரம்[தொகு]

2717.
சிவாய நமஎனச் சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமைய தாக்கிச்
சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை
அவாயங் கெடநிற்க ஆனந்தம் ஆமே.

2718.
செஞ்சுடர் மண்டலத் தூடுசென் றப்புற
மஞ்சண வும்முறை ஏறி வழிக்கொண்டு
துஞ்சு மவன்சொன்ன காலத் திறைவனை
நெஞ்சென நீங்கா நிலைபெறல் ஆகுமே.

2719.
அங்கமும் ஆகம வேதம தோதினும்
எங்கள் பிரான்எழுத் தொன்றில் இருப்பது
சங்கைகெட் டவ்வெழுத் தொன்றையுஞ் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே.

2720.
பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே
விழித்தங் குறங்கும் விளைவறி வாரில்லை
எழுத்தறி வோமென் றுரைப்பர்கள் ஏதர்
எழுத்தை அழுத்தும் எழுந்தறி யாரே.

8.திருக்கூத்துத் தரிசனம்[தொகு]

2721.
எங்குந் திருமேனி எங்குஞ் சிவசத்தி
எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம்
எங்குஞ் சிவமா யிருத்தலாவ் எங்கெங்கும்
எங்குஞ் சிவனரு டன்விளை யாட்டே.

2722.
சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச்
சொற்பத மாமந்தச் சுந்தரக் கூத்தனைப்
பொற்பதிக் கூத்தனைப் பொற்றில்லைக் கூத்தனை
அற்புதக் கூத்தனை ஆரறி வாரே.

சிவானந்தக் கூத்து[தொகு]

2723.
தானந்த மில்லாச் சதானந்த சத்திமேல்
தேனுந்தும் ஆனந்த மாநடங் கண்டீர்
ஞானங் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கங்
கானந்தக் கூத்தாட ஆடரங் கானதே.

2724.
ஆனந்தம் ஆடரங் கானந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்
ஆனந்த மாக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்துகந் தானுக்கே.

2725.
ஒளியாம் பரமும் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகுஞ் சமயக்
களியார் பரமும் கருத்துறை யந்தத்
தெளிவாஞ் சிவானந்த நட்டத்தின் சித்தியே.

2726.
ஆன நடமைந் தகள சகளத்தர்
ஆன நடமாடி ஐங்கருமத் தாகம்
ஆன தொழிலருளா லைந்தொழில் செய்தே
தேன்மொழி பாகன் திருநட மாடுமே.

2727.
பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட
மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட
தாகாண்ட மைங்கரு மத்தாண்ட தற்பரத்
தேகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே.

2728.
வேதங்கள் ஆட மிகுஆ கமமாடக்
கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப்
பூதங்கள் ஆடப் புவன முழுதாட
நாதங்கொண் டாடினான் ஞானானந்தக் கூத்தே.

2729.
பூதங்க ளைந்திற் பொறியிற் புலனைந்தில்
வேதங்க ளைந்தில் மிகுமா கமந்தன்னில்
ஓதுங் கலைகாலம் ஊழி யுடன்அண்டம்
போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே.

2730.
தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
தாபதர் சத்தர் சமயஞ் சராசரம்
யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே.

சுந்தரக் கூத்து[தொகு]

2731.
அண்டங்கள் ஏழினுக் கப்புறத் தப்பால்
உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேல்
கண்டங் கரியான் கருணைத் திருவுருக்
கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே.

2732.
கொடுகொட்டி பாண்டரங் கோடு சங்காரம்
நடமெட்டோ டைந்தாறு நாடியின் நாடுந்
திடமுற் றெழுந்தேவ தாருவாந் தில்லை
வடமுற்ற மாவன மன்னவன் தானே.

2733.
பரமாண்டத் தூடே பராசத்தி பாதம்
பரமாண்டத் தூடே படரொளி ஈசன்
பரமாண்டத் தூடே படர்தரு நாதம்
பரமாண்டத் தூடே பரனடம் ஆடுமே.

2734.
அங்குச மென்ன எழுமார்க்கம் போதத்தில்
தங்கிய தொந்தி எனுந்தாள் ஒத்தினில்
சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்
பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே.

2735.
ஆனத்தி யாடிப் பின்னவக் கூத்தாடிக்
கானத்தி யாடிக் கருத்தில் தரித்தாடி
மூனச் சுழுனையுள் ஆடி முடிவில்லா
ஞானத்துள் ஆடி முடித்தான்என் நாதனே.

2736.
சத்திகள் ஐந்தும் சிவபேதந் தானைந்தும்
முத்திகள் எட்டும் முதலாம் பதமெட்டும்
சித்திகள் எட்டும் சிவபதம் தானெட்டும்
சுத்திகள் எட்டீசன் தொல்நடம் ஆடுமே.

2737.
மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்
தேகங்கள் ஏழும் சிவபாற் கரனேழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்
ஆகின்ற நந்தி யடிக்கீழ் அடங்குமே.

பொற்பதிக் கூத்து[தொகு]

2738.
தெற்கு வடக்குக் கிழக்குமேற் குச்சியில்
அற்புத மானதொ ரஞ்சு முகந்திலும்
ஒப்பில்பே ரின்பத் துபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடஞ் செய்யுமே.

2739.
அடியார் அரனடி யானந்தங் கண்டோர்
அடியா ரானவர் அத்தருள் உற்றோர்
அடியார் பவரே அடியவ ராமால்
அடியார்பொன் னம்பலத் தாடல்கண் டாரே.

2740.
அடங்காத என்னை அடக்கி அடிவைத்(து)
இடங்காண் பரானந்தத் தேயென்னை யிட்டு
நடந்தான் செயும்நந்த நன்ஞானக் கூத்தன்
படந்தான்செய் துள்ளுட் படிந்திருந் தானே.

2741.
உம்பரிற் கூத்தனை உத்தமக் கூத்தனைச்
செம்பொற் றிருமன்றுட் சேவகக் கூத்தனைச் சம்பந்தக் கூத்தனைத்
தற்பரக் கூத்தனை இன்புற நாடியென் அன்பில்வைத் தேனே.

2742.
மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்
பூணுற்ற மன்றுட் புரிசடைக் கூத்தனை
சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
ஆணிப்பொற் கூத்தனை ஆருரைப் பாரே.

2743.
விம்மும் வெருவும் விழுமெழும் மெய்சோரும்
தம்மையுந் தாமறி யார்கள் சதுர்கெடும்
செம்மை சிறந்த திருவம் பலக்கூத்துள்
அம்மலர்ப் பொற்பாதத் தன்புவைப் பார்கட்கே.

2744.
தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்
வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்
ஓட்டறும் ஆசை யறும்உளத் தானந்த
நாட்ட முறுக்குறு நாடகங் காணவே.

2745.
காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
கூளியோ டாடிக் குவலயத் தேயாடி
நீடிய நீர்தீகால் நீள்வா னிடையாடி
நாளுற அம்பலத் தேயாடும் நாதனே.

2746.
மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறும்
சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ
டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே.

2747.
பூதல மேருப் புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலைஒண் சுழுனையாம்
பாதி மதியோன் பயில்திரு அம்பலம்
ஏதமில் பூதாண்டத் தெல்லையின் ஈறே.

பொற்றில்லைக் கூத்து[தொகு]

2748.
அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டையா காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

2749.
குரானந்த ரேகையாய்க் கூர்த்த குணமாம்
சிரானந்தம் பூரித்துத் தென்றிசை சேர்ந்து
புராணந்த போகனாய்ப் பூவையுந் தானும்
நிரானந்த மாகி நிருத்தஞ்செய் தானே.

2750.
ஆதி பரனாட அங்கைக் கனலாட
ஓதுஞ் சடையாட உன்மத்த முற்றாடப்
பாதி மதியாடப் பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதாந்த நட்டமே.

2751.
கும்பிட அம்பலத் தாடிய கோனடம்
அம்பர னாடும் அகிலாண்ட நட்டமாம்
செம்பொரு ளாகுஞ் சிவலோகஞ் சேர்ந்துற்றால்
உம்பர மோனஞா னாந்தத்தில் உண்மையே.

2752.
மேதினி மூவேழ் மிகுமண்டம் ஒரேழு
சாதக மாகுஞ் சமயங்கள் நூற்றெட்டு
நாதமோ டந்த நடானந்த நாற்பதப்
பாதியோ டாடிப் பரனிரு பாதமே.

2753.
இடைபிங் கலையிம வானோ டிலங்கை
நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை
கடவுந் திலைவனங் கைகண்ட மூலம்
படர்வொன்றி யென்ற பரமாம் பரமே.

2754.
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறா நவதீர்த்த மிக்குள்ள வெற்பேழும்
பேறான வேதா கமமே பிறத்தலான்
மாறாத தென்றிசை வையகஞ் சுத்தமே.

2755.
நாதத் தினிலாடி நாற்பதத்தே யாடி
வேதத்தில் ஆடித் தழலந்த மீதாடிப்
போதத்தில் ஆடிப் புவன முழுதாடும்
தீதற்ற தேவாதி தேவர் பிரானே.

2756.
தேவரோ டாடித் திருவம் பலத்தாடி
மூவரோ டாடி முனிசனத் தோடாடிப்
பாவினு ளாடி பராசத் தியிலாடிக்
கோவினுள் ஆடிடும் கூத்தப் பிரானே.

2757.
ஆறு முகத்தில் அதிபதி நானென்றும்
கூறு சமயக் குருபரன் நானென்றும்
தேறினர் தெற்குத் திருவம் பலத்துளே
வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே.

2758.
அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொளி
உம்பர மாமைந்து நாதத்து ரேகையுள்
தம்பர மாய்நின்று தான்வந் தருளுமே.

2759.
ஆடிய காலும் அதிற்சிலம் பொலியும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலங் குருபரன் கொண்டாடத்
தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறே.

2760.
இருதயந் தன்னில் எழுந்த பிராணன்
கரசர ணாதி கலக்கும் படியே
அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்
குரவனாய் எங்கும் கூத்துகந் தானே.

அற்புதக் கூத்து[தொகு]

2761.
குருவுரு வன்றிக் குனிக்கும் உருவம்
அருவுரு வாவதும் அந்த அருவே
திரிபுரை யாகித் திகழ்தரு வாளும்
உருவரு வாகும் உமையவள் தானே.

2762.
திருவழி யாவது சிற்றம் பலத்தே
குருவடி வுள்ளாக் குனிக்கும் உருவே
உருவரு வாவதும் முற்றுணர்ந் தோர்க்கு
அருள்வழி யாவதும் அவ்வழி தானே.

2763.
நீடுஞ் சிரசிடைப் பன்னிரண் டங்குலம்
ஓடும் உயிரெழுந் தோங்கி உதித்திட்
நாடுமின் நாதாந்த நம்பெரு மானுகந்(து)
ஆடு மிடந்திரு வம்பலத் தானே.

2764.
வளிமேக மின்வில்லு வானக வோசை
தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல்
களியொறி யாறுங் கலந்துடன் வேறாய்
ஒளியுரு வாகி ஒளித்துநின் றானே.

2765.
தீமுத லைந்தும் திசையெட்டும் கீழ்மேலும்
ஆயும் அறிவினும் அப்புறம் ஆனந்தம்
மாயைமா மாயை கடந்துநின் றார்காண
நாயகன் நின்று நடஞ்செயு மாறே.

2766.
கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனுங் கூத்தியுங் கூத்தத்தின் மேலே.

2767.
இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொண்டு நின்றவிப் பல்லுயிர் எல்லாம்
அடங்கலுந் தாமாய்நின் றாடுகின் றாரே.

2768.
சத்தி வடிவு சகல ஆனந்தமும்
ஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாம்
சத்தி வடிவு சகளத் தெழுந்திரண்(டு)
ஒத்த ஆனந்தம் ஒருநட மாமே.

2769.
நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்
சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே.

2770.
அண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவம்
தண்டினிற் சாத்தவி சாம்பவி யாதனம்
தெண்டினில் ஏழுஞ் சிவாசன மாகவே
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

2771.
மன்று நிறைந்த விளக்கொறி மாமலர்
நன்றிது தானிதழ் நாலோடு நூறவை
சென்றது தானொரு பத்திரு நூறுள
நின்றது தானெடு மண்டல மாமே.

2772.
அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி
தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி
எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி
அண்ட னடஞ்செயும் ஆலயந் தானே.

2773.
ஆகாச மாமுடல் அங்கார் முயலகன்
ஏகாச மாந்திசை எட்டுந் திருக்கைகள்
மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக
மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே.

2774.
அம்பல மான தகில சராசரம்
அம்பல மாவது ஆதிப் பிரானடி
அம்பல மாவ தப்புத்தீ மண்டலம்
அம்பல மாவ தஞ்செழுத் தாமே.

2775.
கூடிய திண்முழ வங்குழ லோமென்ன
ஆடிய மானுடர் ஆதிப் பிரானென்ன
நாடிய நற்கண மாரம்பல் பூதங்கள்
பாடிய வாறொரு பாண்டரங் காமே.

2776.
அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்
தெண்டிரை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்
புண்டரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்
கண்டு சேவித்துக் கதிபெறு வார்களே.

2777.
புளிக்கண் டவர்க்குப் புனலூறு மாபோல்
களிக்குந் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம்
துளிக்கும் அருட்கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்
ஒளிக்குளா னந்தத் தமுதூறும் உள்ளத்தே.

2778.
திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது
உண்டார்க் குணர்வுண்டால் உன்மத்தஞ் சித்திக்கும்
கொண்டாடு மன்றுட் குளிக்குந் திருக்கூத்துக்
கண்டார் வருங்குணங் கேட்டார்க்கும் ஒக்குமே.

2779.
அங்கி தமருகம் அக்குமா லைப்பாசம்
அங்குசஞ் சூலங் கபால முடன்ஞானம்
தங்கு பயந்தரு நீல மும்முடன்
மங்கையோர் பாகமாய் மாநட மாடுமே.

2780.
ஆடல் பதினோ ருறுப்பும் அடைவாகக்
கூடிய பாதஞ் சிலம்புகை கொள்துடி
நீடிய நாதம் பராற்பர நேயத்தே
ஆடிய நந்தி புறமாகத் தானே.

2781.
ஒன்பது மாட ஒருபதி னாறாட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட
இன்புறும் ஏழினும் ஏழைம்பத் தாறாட
அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.

2782.
ஏழினில் ஏழாய் இகந்தெழுத் தேழதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்தமைந் தொன்றாய்
ஏழினிற் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழிசை நாடகத் தேஇசைந் தானே.

2783.
மூன்றினில் அஞ்சாகி
முந்நூற் றறுபதாய் மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்
முன்றினில் அக்க முடிவாகி முந்தியே
மூன்றினும் ஆடினான் மோகாந்தக் கூத்தே.

2784.
தாமுடி வானவர் தம்முடி மேலுறை
மாமணி ஈசன் மலரடித் தாளிணை
வாமணி யன்புடை யார்மனத் துள்ளெழும்
காமணி ஞாலங் கடந்துநின் றானே.

2785.
புரிந்தவ னாடிற் புவனங்க ளாடும்
தெரிந்தவ னாடும் அளவெங்கள் சிந்தை
புரிந்தவ னாடிற்பல் பூதங்கள் ஆடும்
எரிந்தவ னாடல்கண் டின்புற்ற வாறே.

2786.
ஆதி நடஞ்செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடஞ்செய்தல் ஆரும் அறிகிலர்
ஆதி நடமாடல் ஆரும் அறிந்தபின்
ஆதி நடமாட லாமருட் சத்தியே.

2787.
ஒன்பதோ டொன்பதாம் உற்ற இருபதத்
தன்புறு கோணம் அசிபதத் தாடிடத்
துன்புறு சத்தியுள் தோன்றிநின் றாடவே
அன்புறு மெந்தைநின் றாடலுற் றானே.

2788.
தத்துவம் ஆடச் சதாசிவம் தானாடச்
சித்தமும் ஆடச் சிவசத்தி தானாட
வைத்த சராசரம் ஆட மறையாட
அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.

2789.
இருவருங் காண எழிலன் பலத்தே
உருவோ டருவோ டுருபர ரூபமாய்த்
திருவருட் சத்திக்குள் சித்தனா னந்தனன்
அருளுரு வாகநின் றாடலுற் றானே.

2790.
சிவமாடச் சத்தியும் ஆடச் சகத்தில்
அவமாட ஆடாத அம்பரம் ஆட
நவமான தத்துவ நாதாந்த மாடச்
சிவமாடும் வேதாந்த சித்தாந்தத் துள்ளே.

2791.
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னந்தமும்
தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து
நாதப் பிரமம் சிவநடம் ஆமே.

2792.
சிவமாதி ஐவர்திண் டாட்டமுந் தீரத்
தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத்
தவமாம் பரனெங்குந் தானாக ஆடுந்
தவமாங் சிவானந்தத் தோர்ஞானக் கூத்தே.

2793.
கூடிநின் றானொரு காலத்துத் தேவர்கள்
வீடநின் றான்விகிர் தாவென்னும் நாமத்தைத்
தேடநின் றான்திக ழுஞ்சுடர் மூன்றொளி
ஆடநின் றானென்னை ஆட்கொண்ட வாறே.

2794.
நாதந் துவங்கடந் தாதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
நேதத துவமும் அவற்றொடு நேதியும்
பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே.

2795.
ஆனந்த மானந்த மென்பர் அறிவிலர்
ஆனந்த மாநடம் ஆரும் அறிகிலர்
ஆனந்த மாநடம் ஆரும் அறிந்தபின்
தானந்த மற்றிடம் ஆனந்த மாமே.

2796.
திருந்துநற் சீயென் றுதறிய கையும்
அருந்தவர் வாவென் றணைத்த மணிக்கையும்
பொருந்தில் இமைப்பிலி யவ்வென்ற பொற்கையும்
திருந்நத்தீ யாகும் திருநிலை மவ்வே.

2797.
மருவுந் துடியுடன் மன்னிய வீச்சும்
அருவிய அப்பும் அனலுடன் கையும்
கருவின் மித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமவென ஓதே.

2798.
அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம்
அரனங்கி தன்னில் அறையில் சங்காரம்
அரனுற் றணைப்பி லணையுந் திரோதாயி
அரனடி யென்று மனுக்கிரகம் என்னே.

2799.
தீத்திரட் சோதி திகழொளி உள்ளொளி
கூத்தனைக் கண்டவக் கோமளக் கண்ணினள்
மூர்த்திகள் மூவர் முதல்வ னிடைசெல்லப்
பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே.

2800.
நந்தியை எந்தையை ஞானத் தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி யதுகடந்
தந்தர வானத்தின் அப்புறத் தப்பர
சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே.

2801.
சீய குருநந்தி திருவம்ப லத்திலே
ஆயறு மேனியை யாரு மறிகிலர்
தீயறு செம்மை வெளுப்பொடு மத்தன்மை
யாயறு மேனி யணைபுக லாமே.

2802.
தானான சத்தியுந் தற்பரை யாய்நிற்குந்
தானாம் பரற்கும் உயிர்க்குந் தகுமிச்சை
ஞானாதி பேத நடத்து நடித்தருள்
ஆனா லரனடி நேயத்த தாமே.

9.ஆகாசப் பேறு[தொகு]

2803.
உள்ளத்துள் ஓமென ஈசன் ஒருவனை
உள்ளத்து ளேஅங்கி யாய ஒருவனை
உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை
உள்ளத்து ளேயுடல் ஆகாச மாமே.

2804.
பெருநில மாயண்ட மாயண்டத் தப்பால்
குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்
பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்
அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே.

2805.
அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியாற் பிதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்ட குறியைக் குலைத்தது தானே.

2806.
பயனுறு கன்னியர் போகத்தி னுள்ளே
பயனுறும் ஆதிப் பரஞ்சுடர்ச் சோதி
அயனொடு மலாறி யாவகை நின்றிட்டு
உயர்நெறி யாயொளி ஒன்றது வாமே.

2807.
அறிவுக் கறிவாம் அகண்ட ஒளியும்
பிறியா வலத்தினிற் பேரொளி மூன்றும்
அறியா தடங்கிடில் அத்தன் அடிக்குள்
பிறியா திருக்கிற் பெருங்காலம் ஆமே.

2808.
ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்(து)
ஏகாச மாசுண மிட்டங் கிருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்துநின் றப்புறம்
அகாச மாயங்கி வண்ணனும் ஆமே.

2809.
உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது
குயிற்கொண்ட பேதை குலாவி யுலாவி
வெயிற்கொண்டென் உள்ளம் வெளியது வாமே.

2810.
நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்
தணுகில் அகன்ற பெரும்பதி நந்தி
நணுகிய மின்னொளி சோதி வெளியைப்
பணியின் அமுதம் பருகலும் ஆமே.

2811.
புறத்துளா காசம் புவனம் உலகம்
அகத்துளா காசமெம் மாதி யறிவு
சிவத்துளா காசம் செழுஞ்சுடர்ச் சோதி
சகத்துளா காசம் தானஞ் சமாதியே.

10.ஞானோதயம்[தொகு]

2812.
மனசந் தியிற்கண்ட மன்னன வாகும்
கனவுற வானந்தங் காண்ட லதனை
வினவுற ஆனந்த மீதொழி வென்ப
இனமுற்றா னந்தியா னந்தம் இரண்டே.

2813.
கரியட்ட கையன் கபாலங்கை யேந்தி
எரியும் இளம்பிறை சூடுமெம் மானை
அரியன் பெரியனென் றாட்பட்ட தல்லால்
கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே.

2814.
மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறியே சென்று
புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை
நக்கார் கழல்வழி நாடுமின் நீவிரே.

2815.
விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கீல் விளக்கை விளக்க வல்லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.

2816.
தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு
தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை
தத்துவ ஞானத்தின் தன்மை யறிந்தபின்
தத்துவ னங்கே தலைப்படுந் தானே.

2817.
விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளே
அசும்பினின் றூறிய தாரமு தாகும்
பசும்பொன் திகழும் படர்சடை மீதே
குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே.

2818.
முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்
கொத்தும் பசும்பொன்னின் தூவொளி மாணிக்கம்
ஒத்துயர் அண்டத் துள்ளமர் சோதியை
எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே.

2819.
நானென்றுந் தானென்றும் நாடினேன் நாடலும்
நானென்று தானென் றிரண்டில்லை என்பது
நானென்ற ஞான முதல்வனே நல்கினான்
நானென்று நானும் நினைப்பொழிந் தேனே.

2820.
ஞானத்தின் நன்னெற நாதாந்த நன்னெறி
ஞானத்தின் நன்னெறி நானென் றறிவோர்தல்
ஞானத்தின் நல்யோக நன்னிலை யேநிற்றல்
ஞானத்தின் நன்மோன நாதாந்த வேதமே.

2821.
உய்யவல் லார்கட் குயிர்சிவ ஞானமே
உய்யவல் லார்கட் குயிர்சிவ தெய்வமே
உய்யவல் லார்கட் கொடுக்கம் பிரணவம்
உய்யவல் லாரறி வுள்ளறி வாமே.

2822.
காணவல் லார்க்கவன் கண்ணின் மணியொக்கும்
காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும்
பேணவல் லார்க்குப் பிழைப்பிலன் பேர்நந்தி
ஆணவல் லார்க்கே அவன்றுணை யாமே.

2823.
ஓமெனும் ஓரெழுத் துள்நின்ற ஓசைபோல்
மேனின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடி
ஆய்நின்ற தேவர் அகம்படி யாமே.

11.சத்திய ஞானானந்தம்[தொகு]

2824.
எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி
முப்பாழும் கீழுள முப்பாழு முன்னியே
இப்பாழும் இன்னவா றென்ப திலாவின்பத்
தற்பரஞா னானந்தந் தானது வாகுமே.

2825.
தொம்பதம் தற்பதம் சொன்ன துரியம்போல்
நம்பிய மூன்றாந் துரியத்து நன்றாகும்
அம்புவி யுண்ணா அதிசூக்க மப்பாலைச்
செம்பொரு ளாண்டருள் சீர்நந்தி தானே.

2826.
மன்னும்சத் தியாதி மணியொளி மாசோபை
அன்னதோ டொப்பம் இடலொன்றா மாறது
இன்னிய உற்பலம் ஒண்சீர் நிறமணம்
பன்னிய சோபை பகர் ஆறு மானதே.

2827.
சத்தி சிவன்பர ஞானமும் சாற்றுங்கால்
உய்த்த அனந்தம் சிவமுயர் ஆனந்தம்
வைத்த சொரூபத்த சத்தி வருகுரு
உய்த்த உடலிவை உற்பலம் போலுமே.

2828.
உருவுற் பலநிற மொண்மணஞ் சோபை
தரநிற்ப போலுயிர் தற்பரந் தன்னின்
மருவச் சிவமென்ற மாமுப் பதத்தின்
சொரூபத்தின் சத்தியா தோன்றநின் றானே.

2829.
நினையும் அளவின் நெகிழ வணங்கிப்
புனையில் அவனைப் பொதியலு மாகும்
எனையுமெங் கோனேந்தி தன்னருள் கூட்டி
நினையும் அளவில் நினைப்பித் தனனே.

2830.
பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
வாலிய பேரமு தாகு மதுரமும்
போலுந் துரியம் பொடிபட வுள்புக
சீல மயிர்க்கால் தொறுந்தேக் கிடுமே.

2831.
அமரத் துவங்கடந் தண்டங் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்தும் பனிமொழி மாதர்
துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே.

2832.
மத்திமம் ஆறாறு மாற்றி மலநீக்கிச்
சுத்தம தாகுந் துரியத் துரிசற்றுப்
பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றுச்
சத்தியஞா னானந்தஞ் சார்ந்தனன் ஞானியே.

2833.
சிவமாய் அவமான மும்மலந் தீர
பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்
தவமான சத்திய ஞானானந் தத்தே
துவமார் துரியஞ் சொரூபம தாமே.

12.சொரூப உதயம்[தொகு]

2834.
பரம குரவன் பரமெங்கு மாகித்
திரமுற எங்கணுஞ் சேர்ந்தொழி வற்று
நிரவு சொரூபத்துள் நீடுஞ் சொரூபம்
அரிய துரியது தணைந்துநின் றானே.

2835.
குலைக்கின்ற நீரிற் குவலய நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடா காசம்
நிலத்திடை வானிடை நீண்டகன் றானை
வரைத்து வலஞ்செயு மாறறி யேனே.

2836.
அங்குநின் றானயன் மால்முதல் தேவர்கள்
எங்குநின் றாரும் இறைவனென் றேத்துவர்
தங்கிநின் றான்றனி நாயகன் எம்மிறை
பொங்கிநின் றான்புவ னாபதி தானே.

2837.
சமையச் சுவடும் தனையறி யாமற்
கமையற்ற காமாதி காரணம் எட்டும்
திமிரச் செயலும் தெளிவுட னின்றோர்
அமரர்க் கதிபதி யாகிநிற் பாரே.

2838.
மூவகைத் தெய்வத் தொருவன் முதலுரு
வாயது வேறா மதுபோல் அணுப்பரன்
சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற
ஏயும் நெறியென் றிறைநூ லியம்புமே.

2839.
உருவன்றி யேநின் றுருவம் புணர்க்கும்
கருவன்றி யேநின்று தான்கரு வாகும்
மருவன்றி யேநின்ற மாயப் பிரானைக்
குருவன்றி யாவர்க்குங் கூடவொண் ணாதே.

2840.
உருவ நினைப்பவர்க் குள்ளுறுஞ் சோதி
உருவ நினைப்பவர் ஊழியுங் காண்பர்
உருவ நினைப்பவர் உம்பரும் ஆவர்
உருவ நினைப்பார் உலகத்தில் யாரே.

2841.
பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றாப்
பரஞ்சோதி என்னுட் படிந்ததற் பின்னைப்
பரஞ்சோதி யுண்ணான் படியப் படியப்
பரஞ்சோதி தன்னைப் பறையக்கண் டேனே.

2842.
சொரூபம் உருவம் குணந்தொல் விழுங்கி
அரியன உற்பலம் ஆமாறு போல
மருவிய சத்தியாதி நான்கு மதித்த
சொரூபக் குரவன் சுகோதயத் தானே.

2843.
உரையற்ற ஆனந்த மோன சொரூபத்தன்
கரையற்ற சத்தியாதி காணில் அகார
மருவுற் றுகார மகாரம தாக
உரையற்ற தாரத்தில் உள்ளொளி யாமே.

2844.
தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து
கலைநின்ற கள்வனிற் கண்டுகொண் டேனே.

2845.
ஆமா றறிந்தேன் அகத்தின் அரும்பொருள்
போமா றந்தேன் புகுமாறும் ஈதென்றே
ஏமாப்ப தில்லை இனியோ ரிடமில்லை
நாமா முதல்வனும் நனென லாமே.

13.ஊழ்[தொகு]

2846.
செற்றிலென் சீவிலென் செஞ்சாந் தணியிலென்
மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென்
வித்தகன் நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.

2847.
தான்முன்னஞ் செய்த விதிவழி தானல்லால்
வான்முன்னஞ் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை
கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று
நான்முன்னஞ் செய்ததே நன்னில மானரே.

2848.
ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே
கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை
நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்
பேறிட்டுஎன் உள்ளம் பிரியகில் லாவே.

2849.
வானின் றிடிக்கிலென் மாகடல் பொங்கிலென்
கானின்ற செந்தீக் கலந்துடன் வேகிலென்
தானொன்றி மாருதஞ் சண்டம் அடிக்கிலென்
நானொன்றி நாதனை நாடுவேண் நானே.

2850.
ஆனை துரக்கிலென் அம்பூ டறுக்கிலென்
கானத் துழுவை கலந்து வளைக்கிலென்
ஏனைப் பதியினில் எம்பெரு மான்வைத்த
ஞானத் துழவனை நானுழு வேனே.

2851.
கூடி கெடின்மற்றோர் கூடுசெய் வானுளன்
நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை
வீடு கெடின்மற்றோர் வீடுபுக் காலொக்கும்
பாடது நந்தி பரிசறி வார்க்கே.

14.சிவதரிசனம்[தொகு]

2852.
சிந்தைய தென்னச் சிவனென்ன வேறில்லை
சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளிவல் லார்கட்குச்
சிந்தையி னுள்ளே சிவனிருந் தானே.

2853.
வாக்கு மனமு மறைந்த மறைப்பொருள்
நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது
போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை
ஆக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.

2854.
பரனாய்ப் பராபர னாகியப் பாற்சென்(று)
உரனாய் வழக்கற்ற வொண்சுடர் தானாய்த்
தரனாய்த் தனாதென வாறறி வொண்ணா
அரனா யுலகில் அருள்புரிந் தானே.

15.சிவசொரூப தரிசனம்[தொகு]

2855.
ஓதும் மயிர்க்கால் தொறும்அமு தூறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொரூபங்கள் மூன்றகன் றப்பாலை
வேதகம் ஓதும் சொரூபிதன் மேன்மையே.

2856.
உணர்வும் அவனே உயிரும் அவனே
புணரும் அவனே புலனு மவனே
இணரும் அவன்தன்னை எண்ணலு மாகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.

2857.
துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாவிரு
முன்னி யவர்தங் குறையை முடித்திடும்
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றதோர் தேற்றத்த னாமே.

2858.
மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்
தன்னுற்ற சோதித் தலைவன் இணையிலி
பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியை
என்னுற் றறிவனான் என்விழித் தானே.

2859.
சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தன்
சித்தத்தி னில்லாச் சிவானந்தப் பேரொளி
சுத்தப் பிரம துரியந் துரியத்துள்
உய்த்த துரியத் துறும்பே ரொளியே.

2860.
பரனல்ல நீடும் பராபர னல்ல
உரனல்ல மீதுணர் ஒண்சுட ரல்ல
தரனல்ல தானவை யாயல்ல வாகும்
அரனல்ல ஆன்நதத் தப்புறத் தானே.

2861.
முத்தியுஞ் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலாற்
சுத்தி யகன்றோர் சுகானந்த போதரே.

2862.
துரிய அதீதஞ் சொல்லறும் பாழாம்
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியுங் குவியும் விள்ளா மிளிர்ந்தென்
உருவந் திரியும் உரைப்பதெவ் வாறே.

16.முத்தி பேதம் , கரும நிருவாணம்[தொகு]

2863.
ஓதிய முத்தி யடைவே உயிர்பர
பேதமி லச்சிவம் எய்துந் துரியமோ(டு)
ஆதி சொரூபம் சொரூபத்த தாகவே
ஏதமி லாநிரு வாணம் பிறந்ததே.

2864.
பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்
கற்றற் றவர்கற்றுக் கருதிய கண்ணுதல்
சுற்றற் றவர்சுற்றி நின்றஎன் சோதியைப்
பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.

17.சூனிய சம்பாஷணை[தொகு]

2865.
காயம் பலகை கவறைந்து கண்மூன்றா
ஆயம் பொருவதோர் ஐம்பத்தோ ரக்கரம்
ஏய பெருமா னிருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.

2866.
தூறு படர்ந்து கிடந்தது தூநெறி
மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை
மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு
ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே.

2867.
ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறு படுவன நான்கு பனையுள
ஏறற் கரியதோர் ஏணியிட் டப்பனை
ஏறலுற் றேன்கடல் ஏழுங்கண் டேனே.

2868.
வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது
தொழுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.

2869.
ஐயென்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்
செய்யுண்டு செய்யின் தெளிவறி வாரில்லை
மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்
பொய்யொன்று மின்றிப் புகஎளி தாமே.

2870.
பள்ளச்செய் யொன்றுண்டு பாடச்செய் இரண்டுள
கள்ளச்செய் யங்கே கலந்து கிடந்தது
உள்ளச்செய் யங்கே யுழவுசெய் வார்கட்கு
வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே.

2871.
மூவணை யேரு முழுவது முக்காணி
தாமணி கோலத் தறியுறப் பாய்ந்திடும்
நாவணை கோலி நடுவிற் செறுவுழார்
காலணை கோலிக் களருழு வாரே.

2872.
ஏற்றம் இரண்டுள் ஏழு துரவுள
மூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர்
பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில்
கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே.

2873.
பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள
குட்டிப் பசுக்களோ ரேழுள ஐந்துள
குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்
பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே.

2874.
ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள
ஊற்றுப் பசுக்கள் ஒருகுடம் பால்போதும்
காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்து
மாற்றுப் பசுக்கள் வரவறி யோமே.

2875.
தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல்
மொட்டா யெழுந்தது செம்பால் மலர்ந்தது
வட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத்
தட்டான் அதனைத் தகைந்து கொண்டானே.

2876.
அரிக்கின்ற நாற்றங்கால் அல்லற் கழனி
திரிக்கின்ற வொட்டஞ் சிக்கெனக் கட்டி
விரிக்கின்ற நல்லான் கறவையைப் பூட்டில்
விரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே.

2877.
இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக்
கிடாக்கொண்டு பூட்டிக் கிளறி முளையை
மிடாக்கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்
கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே.

2878.
விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது
விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்
விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்கு
விளைந்து கிடந்தது மேவுமுக் காதமே.

2879.
களருழு வார்கள் கருத்தை யறியோம்
களருழு வார்கள் கருதலு மில்லை
களருழு வார்கள் களரின் முளைத்த
வளரிள வஞ்சியின் மாய்தலு மாமே.

2880.
கூப்பிடு கொள்ளாக் குறுநரிக் கொட்டகத்(து)
ஆப்பிடு பாசத்தை யங்கியுள் வைத்திட்டு
நாட்பட நின்று நலம்புகுந் தாயிழை
ஏற்பட இல்லத் தினிதிருந் தானே.

2881.
மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ
உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.

2882.
பார்ப்பான் அகத்திலே பாற்பச ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே.

2883.
ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும்
தேமா இரண்டொடு திப்பிலி யொன்பதும்
தாமாக் குரங்கொளிற் றம்மனத் துள்ளன
மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே.

2884.
எழுதாத புத்தகத் தேட்டின் பொருளைத்
தெருளாத கன்னி தெளிந்திருந் தோத
மலராத பூவின் மணத்தின் மதுவைப்
பிறவாத வண்டு மணமுண்ட வாறே.

2885.
போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனி
ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்திபெற் றாரே.

2886.
மூங்கில் முளையல் எழுந்ததோர் வேம்புண்டு
வேம்பினிற் சார்ந்து கிடந்த பனையிலோர்
பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பாரின்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.

2887.
பத்துப் பரும்புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அத்தலை ஐவர் அமர்ந்துநின் றாரே.

2888.
இரண்டு கடாவுண்டு இவ்வூரி னுள்ளே
இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன்
இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கின்
இரண்டு கடாவும் ஒருகடா ஆமே.

2889.
ஒத்த மனக்கொல்லை யுள்ளே சமன்கட்டிப்
பத்தி வலையிற் பருத்தி நிறுத்தலால்
முத்தக் கயிறாக மூவர்கள் ஊரினுள்
நித்தம் பொது நிரம்பநின் றாரே.

2890.
கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
நாகையும் பூழும் நடுவில் உறைவன்
நாகையைக் கூகை நணுக லுறுதலும்
கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே.

2891.
குலைக்கின்ற நன்னகை யாங்கொங் குழக்கின்
நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்
உலைக்குப் புறமெனில் ஓடு மிருக்கும்
புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே.

2892.
காடுபுக் காரினிக் காணார் கடுவெளி
கூடுபுக் கானது ஐந்து குதிரையும்
ஓடுபுக் கானது ஆறுள ஒட்டகம்
மூடு புகாவிடின் மூவணை யாமே.

2893.
கூறையுஞ் சோறும் குழாயகத் தெண்ணெயும்
காறையும் நாணும் வளையலுங் கண்டவர்
பாறையி லுற்ற பறக்கின்ற சீலைபோல்
ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.

2894.
துருத்தியுள் ளக்கரை தோன்று மலைமேல்
விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்
வருந்தியுள் நின்ற மலையைத் தவிர்ப்பாள்
ஒருத்தியுள் ளாளவர் ஊரறி யோமே.

2895.
பருந்துங் கிளியும் படுபறை கொட்டத்
திருந்திய மாதர் திருமணப் பட்டார்
பெருந்தவப் பூதம் பெறலுரு வாகும்
இந்திய பேற்றினில் இன்புறு வாரே.

2896.
கூடும் பறவை இரைகொத்தி மற்றதன்
ஊடுபுக் குண்டி யறுக்குறில் என்னொக்கும்
சூடெறி நெய்யுண்டு மைகான் றிடுகின்ற
பாடறி வார்க்குப் பயனெனி தாமே.

2897.
இலையில்லை பூவுண் டினவண்டிங் கில்லை
தலையில்லை வேருண்டு தாளில்லை பூவின்
குலையில்லை கொய்யும் மலருண்டு சூடும்
தலையில்லை தாழ்ந்த கிளைபுல ராரே.

2898.
அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்
மிக்கவ ரஞ்சு துயரமுங் கண்டுபோய்த்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே. ‎‫

2899.
கூப்பிடு மாற்றிலே வன்கா டிருங்காதம்
காப்பிடு கள்ளர் கலந்துநின் றாருளர்
காப்பிடு கள்ளரை வெள்ளா தொடர்ந்திட்டுக்
கூப்பிடு மீண்டதோர் கூரைகொண் டாரே.

2900.
கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்
கட்டியுந் தேனுங் கலந்துண்ண மாட்டாதார்
எட்டிப் பழத்துக் கிளைக்கின்ற வாறே.

2901.
பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்
குடைகொண்ட பாசத்துக் கோலமுண் டானும்
கடைவண்டு தானுண்ணுங் கண்கலந் திட்ட
பெடைவண்டு தான்பெற்ற தின்பமு மாமே.

2902.
கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்தவன்
எல்லை கடப்பித் திறையடிக் கூட்டியே
வல்லசெய் தாற்றன் மதித்தபி னல்லது
கொல்லைசெய் நெஞ்சங் குறியறி யாதே.

2903.
தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரிற் குவளை எழுந்தது
விட்டத்தி னுள்ளே விளங்கவல் லார்கட்குக்
குட்டத்தி லிட்டதோர் கொம்மட்டி யாமே.

2904.
ஆறு பறவைகள் ஐந்தகத் துள்ளன
நூறு பறவை நுகிக்கொம்பின் மேலன
ஏறும் பெரும்பதி ஏழுங் கடந்தபின்
மாறுத லின்றி மனைபுக லாமே.

2905.
கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள்
வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங்
கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள்
ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாமே.

2906.
ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
ஆழும் விசும்பினில் அங்கி மழைவளி
தாழும் மிருநிலந் தன்மை யதுகண்டு
வாழ நினைக்கில தாலய மாமே.

2907.
ஆலிங் கனஞ்செய் தகஞ்சுடர் சூலத்துச்
சாலிங் கமைத்துத் தலைமை தவிர்த்தனர்
கோலிங் கமைத்தபின் கூபப் பறவைகள்
மாலிங்கன் வைத்தது முன்பின் வழியே.

2908.
கொட்டுக்குந் தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்குந் தாலிக்கும் பாரை வலிதென்பர்
கொட்டுக்குந் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே.

2909.
கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்
முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறையொன்று பூசல் பிடிப்பா னொருவன்
மறையொன்று கண்ட துருவம்பொன் னாமே.

2910.
கோரை எழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படுகின்றாற் போலல்ல நாதனார்
பாரை கிடக்கப் படிகின்ற வாறே.

2911.
கொல்லைமுக் காதமுங் காடரைக் காதமும்
எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி
எல்லை மயங்கா தியங்கவல் லார்கட்(கு)
ஒல்லை கடந்துசென் றூர்புக லாமே.

2912.
உழவொன்று வித்து ஒருங்கின காலத் (து)
எழுமழை பெய்யா திருநிலச் செவ்வி
தழுவி வினைசென்று தான்பய வாது
வழுவாது போவன் வளர்சடை யோனே.

2913.
பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ
மதுங்கிய வார்களி யாரமு தூறப்
பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே.

2914.
தோணியொன் றேறித் தொடர்ந்து கடல்புக்கு
வாணிபஞ் செய்து வழங்கி வளர்மகன்
நீலிக் கிறையுமே நெஞ்சின் நிலைதளர்ந் (து)
ஆலிப் பழம்போல் அளிக்கின்ற அப்பே.

2915.
முக்காத ஆற்றிலே மூன்றுள வாழைகள்
செக்குப் பழுத்த திரிமலங் காய்த்தன
பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்
நக்கு மலருண்டு நடுவுநின் றாரே.

2916.
அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி
முடியும் நுனியின்கண் முத்தலை முங்கில்
கொடியும் படையுங் கோட்சரன் ஐயைந்தும்
மடியும் வலம்புரி வாய்த்ததவ் வாறே.

2917.
பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்
தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக்
குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்
குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே.

2918.
மொட்டித் தெழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்
கட்டுவிட் டோடின் மலர்தலுங் காணலாம்
பற்றுவிட் டம்மனை பாழ்பட நோக்கினால்
கட்டுவிட் டார்க்கன்றிக் காணவொண் ணாதே.

2919.
நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம்
யாவரும் என்றும் அறியவல் லாரில்லை
கூரு மழைபொழி யாது பொழிபுனல்
தேரினிந் நீர்மை திடரினில் லாதே.

2920.
கூகை குருந்தம தேறிக் குணம்பயில்
மோகம் உலகுக் குணர்கின்ற காலத்து
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்
பாகனு மாகின்ற பண்பனு மாமே.

2921.
வாழையுஞ் சூரையும் வந்திடங் கொண்டன
வாழைக்குச் சூரை வலிது வலிதென்பார்
வாழையுஞ் சூரையும் வன்துண்டஞ் செய்திட்டு
வாழை யிடங்கொண்டு வாழ்கின்ற வாறே.

2922.
நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்
புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன்
விலக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையா
தருத்தமு மின்றி யடுவது மாமே.

2923.
தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டா னகத்தில்
விளிப்பதோர் சங்குண்டு வேந்தனை நாடிக்
களிக்குங் குசவர்க்குங் காவிதி யார்க்கும்
அளிக்கும் பதத்தொன் றாய்ந்துகொள் வார்க்கே.

2924.
குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை
படைகண்டு மீண்டது பாதி வழியில்
உடையவன் மந்திரி யுள்ளலும் ஊரார்
அடையார் நெடுங்கடை ஐந்தொடு நான்கே.

2925.
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடாவிடிற் பன்றியு மாமே.

2926.
பாசி படர்ந்து கிடந்த குளத்திடைக்
கூசி யிருக்குங் குருகிரை தேர்ந்துண்ணும்
தூசி மறவன் துணைவழி எய்திடப்
பாசங் கிடந்து பதைக்கின்ற வாறே.

2927.
கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு
வம்பாய் மலர்ந்ததோர் பூவுண்டப் பூவுக்குள்
வண்டாய்க் கிடந்து மணங்கொள்வன் ஈசனே.

2928.
வீணையுந் தண்டும் விரவி யிசைமூரல்
தாணுவும் மேவித் தகுதலைப் பெய்தது
வாணிபஞ் சிக்கென் றதுவடை யாமுன்னம்
காணியும் அங்கே கலக்கின்ற வாறே. ‎‫

2929.
கொங்குபுக் காரொடு வாணிபஞ் செய்தது
அங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லை
திங்கள்புக் கால்இரு ளாவ தறிந்திலர்
தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே.

2930.
போதும் புலர்ந்தது பொன்னிறங் கொண்டது
தாதவிழ் புன்னை தயங்கு மிருகரை
ஏதில் ஈசன் இயங்கு நெறியிது
மாத ரிருந்ததோர் மண்டலந் தானே.

2931.
கோமுற் றமருங் குடிகளுந் தம்மிலே
காமுற்ற கத்தி இடுவர் கடைதொறும்
மீவற்ற வெல்லை விடாது வழிகாட்டி
ஆமுற்ற தட்டினால் ஐந்துண்ண லாமே.

2932.
தோட்டத்தில் மாம்பழந் தோண்டி விழுந்தக்கால்
நாட்டின் புறத்தில் நரியிழைத் தென்செயும்
மூட்டிக் கொடுத்த முதல்வனை முன்னிட்டுக்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.

2933.
புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்
புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்
புலம்பி னவளோடும் போகம் நுகரும்
புலம்பனுக் கென்றும் புலர்ந்திலை போதே. ‎‫

2934.
தோணியொன் றுண்டு துறையில் விடுவது
வாணி மிதித்துநின் றைவர்கோ லூன்றலும்
வாணிபஞ் செய்வார் வழியிடை யாற்றிடை
ஆணி கலங்கில் அதுவது வாமே.

18.மோன சமாதி[தொகு]

2935.
நின்றார் இருந்தார் கிடந்தார் எனவில்லை
சென்றார் தருஞ்சித்த மோன சமாதியாம்
மன்றேயு மங்கே மறைப்பொரு ளொன்றுண்டு
சென்றாங் கணைந்தவர் சேர்கின்ற வாறே.

2936.
காட்டுங் குறியுங் கடந்தவர் காரணம்
ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன்
கூட்டுங் குருநந்தி கூட்டிடி னல்லது
ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.

2937.
உணர்வுடை யார்கட் குலகமுந் தோன்றும்
உணர்வுடை யார்கட் குறுதுயர் இல்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம்
உணர்வுடை யார்கள் உணர்ந்துகண் டாரே.

2938.
மறப்பது வாய்நின்ற மாயநன் னாடன்
பிறப்பினை நீங்கிய பேரரு ளாளன்
சிறப்புடை யான்திரு மங்கையுந் தானும்
உறக்கமில் போகத் துறங்கிடுந் தானே.

2939.
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய துரிய மதில்மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரையில் அநுபூதிகத்தினுள் ளானே.

2940.
உருவிலி ஊனிலி ஊனமொன் றில்லி
திருவிலி தீதிலி தேவர்க்குந் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்தென் மனம்புகுந் தானே.

2941.
கண்டறி யாரிந்தக் காயத்தில் நந்தியை
எண்டிசை யோரும் இறைவனென் றேத்துவர்
அண்டங் கடந்த அளவிலா ஆனந்தத்
தொண்டர் முகந்த துறையறி யோமே.

2942.
தற்பரம் அல்ல சதாசிவன் றானல்லன்
நிட்கள மல்ல சகள நிலையல்ல
அற்புத மாகி அநுகோக் காமம்போல்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.

2943.
முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்கனே.

2944.
அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரம் சேர்பரமும் விட்டுக்
கப்புறு சொற்பத மாளக் கலந்தமை
எப்படி அப்படி என்னுமவ் வாறே.


2945.
கண்டார்க் கழகிதாங் காஞ்சிரத் தின்பழம்
தின்றார்க் கறியலாம் அப்பழத் தின்சுவை
பெண்டா னிரம்பி மடவிய ளானால்
கொண்டான் அறிவன் குணம்பல தானே.

2946.
நந்தி இருந்தான் நடுவுத் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியி னுள்ளே உதித்தெழுஞ் சோதியை
புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனே.

2947.
விதறு படாவண்ணம் வேறிருந் தாய்ந்து
பதறு படாதே பழமறை பார்த்துக்
கதறிய பாழைக் கடந்தந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.

2948.
வாடா மலர்புனை சேவடி வானவர்
கூடார் அரனெறி நாடொறு மின்புறச்
சேடார் கமலச் செழுஞ்சுட ருட்சென்று
நாடார் அமுதுற நாடார் அமுதமே.

2949.
அதுக்கென் றிருவர் அமர்ந்தசொற் கேட்டும்
பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்
சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காண
மதுக்கொன்றைத் தாரான் வளந்தரு மன்றே.

2950.
தானும் அழிந்து தனமும் அழிந்துநீடு
ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்துபின்
நானும் அழிந்தமை நானறி யேனே.

2951.
இருளும் வெளியும் இரண்டையு மாற்றிப்
பொருளிற் பொருளாய்ப் பொருந்த வுள்ளாகி
அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே
உருளாத கன்மன முற்றுநின் றானே.

2952.
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே.

19.வரையுரை மாட்சி[தொகு]

2953.
தான்வரை வற்றபின் ஆரை வரைவது
தான்அவன் ஆனபின் ஆரை நினைவது
காமனை வென்றகண் ஆரை உகப்பது
தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே.

2954.
உரையற்ற தொன்றை உரைசெய்யும் ஊமர்காள்
கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போற் சிந்தை தெளிவார்க்குப்
புரையற் றிருந்தான் புரிசடை யோனே.

2955.
மனமாயை மாயைஇம் மாயை மயக்க
மனமாயை தான்மாயு மற்றொன்றும் இல்லை
பினைமாய்வ தில்லை பிதற்றவும் வேண்டா
தனையாய்த் திருப்பது தத்துவந் தானே.

20.அணைந்தோர் தன்மை[தொகு]

2956.
மலமில்லை மாசில்லை மானாபி மானம்
குலமில்லை கொள்ளுங் குணங்களும் இல்லை
நலமில்லை நந்தி ஞானத்தி னாலே
பலமன்னி அன்பிற் பதித்துவைப் போர்க்கே.

2957.
ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்
அழிந்தாங் கினிவரும் மார்க்கமும் வேண்டேன்
செழுஞ்சார் புடைய சிவனைக்கண் டேனே.

2958.
ஆலைக் கரும்பும் அமுதும் அக்காரமும்
சோலைத் தண்ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்
பீலிக்கண் அன்ன வடிவுசெய் வாளொரு
கோலப்பெண் ணாட்குக் குறைவொன்றும் இல்லையே.

2959.
ஆராலு மென்னை அமட்டவொண் ணாதினிச்
சீரார் பிரான்வந்தென் சிந்தை புகுந்தனன்
சீராடி யங்கே திரிவதல் லாலினி
யார்பாடுஞ் சாரா அறிவறிந் தேனே.

2960.
பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லு நிலையை
அரிந்தேன் வினையை அயிலமன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே.

2961.
ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண்டீர்உல கக்குயி ராவதும்
நன்றுகண் டீரினி நமச்சிவா யப்பழம்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.

2962.
சந்திரற் பாம்பொடுஞ் சூடும் சடாதரன்
வந்தென்னை யாண்ட மணிவிளக் கானவன்
அந்தமு மாதியும் இல்லா அரும்பொரள்
சிந்தையின் மேவித் தியக்கறுத் தானே.

2963.
பண்டெங்கள் ஈசன் நெடுமால் பிரமனைக்
கண்டங் கிருக்குங் கருத்தறி வாரில்லை
விண்டங்கே தோன்றி வெறுமன மாயிடில்
துண்டங் கிருந்ததோர் தூறது வாமே.

2964.
அன்னையும் அத்தனும் அன்புற்ற தல்லது
அன்னையும் அத்தனும் ஆரறி வாரென்னை
அன்னையும் அத்தனும் யானும் உடனிருந்து
அன்னையும் அத்தனை யான்புரந் தேனே.

2965
கொண்ட சுழியும் குலவரை யுச்சியும்
அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்துளே
உண்டனர் நானினி உய்ந்தொழிந் தேனே.

2966.
தானே திசையொடு தேவரு மாய்நிற்கும்
தானே வடவரை யாதியு மாய்நிற்கும்
தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும்
தானே உலகிற் றலைவனும் ஆமே.

2967.
நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம்வரும் சிந்தைக்குத் தான்எதிர் ஆமே.

2968.
சித்தஞ் சிவமாய் மலமூன்றுஞ் செற்றவர்
சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தம்
கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார்
சத்தம் பரவிந்து தானாமென் றெண்ணியே.

2969.
நினைப்பு மறப்பு மிலாதவர் நெஞ்சம்
வினைப்பற் றறுக்கும் விமலன் இருக்கும்
வினைப்பற் றறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறிலவன் நீளியன் ஆமே.

2970.
சிவபெரு மானென்று நானழைத் தேத்தத்
தவபெரு மானென்று தான்வந்து நின்றான்
அவபெரு மானென்னை ஆளுடை நாதன்
பவபெரு மானைப் பணிந்துநின் றேனே.

2971.
பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்
துணிந்துநின் றேனினி மற்றொன்றும் வேண்டேன்
அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத்
தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே.

2972.
என்னெஞ்சம் ஈசன் இணையடி தாஞ்சேர்ந்து
முன்னஞ்செய் தேத்த முழுதும் பிறப்பறும்
தன்னெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி
பின்னஞ்செய் தென்னைப் பிணக்கறுத் தானே.

2973.
பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத் தெண்ணும்
கணக்கறுத் தாண்டனன் காணந்தி என்னைப்
பிணக்கறுத் தென்னுடன் முன்வந்த துன்பம்
வணக்கலுற் றேன்சிவம் வந்தது தானே.

2974.
சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்
பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்
டவனெந்தை யாண்டருள் ஆதிப் பெருமான்
அவன்வந்தென் னுள்ளே அகப்பட்ட வாறே.

2975.
கரும்புந் தேனுங் கலந்ததோர் காயத்தில்
அரும்புங் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்புங் கைத்தது தேனும் புளித்ததே.

2976.
உள்ள சரியாதி ஒட்டியே மீட்டென்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்
செய்வன வெல்லாஞ் சிவமாகக் காண்டலான்
கைவள மின்றிக் கருக்கடந் தேனே.

2977.
மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று
தூண்டா விளக்கின் றகளிநெய் சோர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவனசூ டாமணி
மாண்டான் ஒருவன்கை வந்தது தானே.

2978.
ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலைக் கொம்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.

2979.
அன்புள் ளுருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் றானே.

2980.
மனம்வி ரிந்து குவிந்தது மாதவம்
மனம்வி ரிந்து குவிந்தது வாயுவும்
மனம்விரிந்து குவிந்தது மன்னுயிர்
மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே.

21.தோத்திரம்[தொகு]

2981.
மாயனை நாடி மனநெடுந் தேரேறிப்
போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடுந் திரிந்தெங்கள் செல்வனைக்
காயமின் னாட்டிடைக் கண்டுகொண் டேனே.

2982.
மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல்
இன்னிசை பாட இருந்தவ ராரெனில்
முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப்
பன்னினர் என்றே பாடறி வீரே.

2983.
முத்தனின் முத்தை முகிழிள ஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை
அத்தனைக் காணா தரற்றுகின் றேனையோர்
பித்தன் இவனென்று பேசுகின் றாரே.

2984.
புகுந்துநின் றானெங்கள் புண்ணிய மூர்த்தி
புகுந்துநின் றானெங்கள் போதறி வாளன்
புகுந்துநின் றானடி யார்தங்கள் நெஞ்சம்
புகுந்துநின் றானயே போற்றுகின் றேனே.

2985.
பூதக்கண் ணாடியிற் புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படும்
நீதிக்கண்ணாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியிற் கேட்டுநின் றேனே.

2986.
நாமமோ ராயிரம் ஓதுமின் நாதனை
ஏமமோ ராயிரத் துள்ளே இசைவீர்கள்
ஓமமோ ராயிரம் ஓதவல் லாரவர்
காமமோ ராயிரங் கண்டொழிந் தாரே.

2987.
போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகழ் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தைப்
போற்றுகின் றேன்எம் பிரானென்று நானே.

2988.
நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தினூடுசென் றப்புறம்
வானோ ருலகம் வழிப்பட மீண்டபின்
தேனார வுண்டு தெவிட்டலும் ஆமே.

2989.
வந்துநின் றானடி யார்கட் கரும்பொருள்
இந்திர னாதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர் துழனியொன் றல்லது
அந்தர வானத்தின் அப்புற மாமே.

2990.
மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்
எண்ணிற் கலங்கி இறைவ னிவனெனார்
உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்
தெண்ணிற் படுத்த சிவனவன் ஆமே.

2991.
மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத்தலஞ் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந்தொழிந் தேனே.

2992.
அமைந்தொழிந் தேன்அள வில்புகழ் ஞானம்
சமைந்தொழிந் தேன்தடு மாற்றமொன் றில்லை
புகைத்தெழும் பூதலம் புண்ணிய னண்ணி
வகைந்து கொடுக்கின்ற வள்ளலு மாமே.

2993.
வள்ளற் றலைவனை வானநன் னாடனை
வெள்ளப் புனற்சடை வேத முதல்வனைக்
கள்ளப் பெருமக்கள் காண்பர்கொ லோவென்று
உள்ளத்தி னுள்ளே ஒளித்திருந் தாறுமே.

2994.
ஆளு மலர்ப்பதந் தந்த கடவுளை
நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்குங் குரிசிலின்
வாளு மனத்தொடும் வைத்தொழிந் தேனே.

2995.
விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்
திருந்தில் அவனடி தீர்த்தமும் ஆகும்
வருந்தி அவனடி வாழ்த்தவல் லார்க்கே.

2996.
வானக மூடறுத் தானிவ் வுலகினில்
தானக மில்லாத் தனியாகும் போதகன்
கானக வாழைக் கனிநுகர்ந் துள்ளுறும்
பானகச் சோதியைப் பற்றிநின் றேனே.

2997.
விதியது மேலை அமரர் உறையும்
பதியது பாய்புனற் கங்கையும் உண்டு
துதியது தொல்வினைப் பற்றறு விக்கும்
பதியது வவ்விட்ட தந்தமும் ஆமே.

2998.
மேலது வானவர் கீழது மாதவர்
தானிடர் மானுடர் கீழது மாதனம்
கானது கூவிள மாலை கமழ்சடை
ஆனது செய்யும்எம் ஆருயிர் தானே.

2999.
சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை
ஏழு மிரண்டிலும் ஈசன் பிறப்பிலி
யாழுஞ் சுனையும் அடவியும் அங்குளன்
வாழும் எழுத்தைந்து மன்னனு மாமே.

3000.
உலகம தொத்துமண் ஒத்துயர் காற்றை
உலர்கதிர் அங்கியொத் தாதிப் பிரானும்
நிலவிய மாமுகில் நீரொத்து மீண்டச்
செலவொத் தமர்திகைத் தேவர் பிரானே.

3001.
பரிசறிந் தங்குளன் அங்கி அருக்கன்
பரிசறிந் தங்குளன் மாருதத் தீசன்
பரிசறிந் தங்குளன் மாமதி ஞானப்
பரிசறிந் தன்னிலம் பாரிக்கு மாறே.

3002.
அந்தங் கடந்தும் அதுவது வாய்நிற்கும்
பந்த வுலகினிற் கீழோர் பெரும்பொருள்
தந்த வுலகெங்குந் தானே பராபரன்
வந்து படைக்கின்ற மாண்பது வாமே.

3003.
முத்தண்ட வீரண்ட மேமுடி யாயினும்
அத்தன் உருவம் உலகே ழெனப்படும்
அத்தனின் பாதாளம் அளவுள்ள சேவடி
மத்தர் அதனை மகிழ்ந்துண ராரே.

3004.
ஆதிப் பிரானம் பிரானவ் வகலிடச்
சோதிப் பிரான்சுடர் மூன்றொளி யாய்நிற்கும்
ஆதிப் பிரான் அண்டத் தப்புறங் கீழவன்
ஆதிப் பிரானடு வாகி நின்றானே.

3005.
அண்டங் கடந்துயர்ந் தோங்கும் பெருமையன்
பிண்டங் கடந்த பிறவிச் சிறுமையன்
தொண்டர் நடந்த கனைகழல் காண்டொறும்
தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றாரே.

3006.
உலவுசெய் நோக்கம் பெருங்கடல் சூழ
நிலமுழு தெல்லாம் நிறைந்தன னீசன்
பலமுழு தெல்லாம் படைத்தனன் முன்னே
புலமுழு பொன்னிற மாகிநின் றானே.

3007.
பராபர னாகிப்பல் லூழிகள் தோறும்
பராபர னாயிவ் வகலிடந் தாங்கித்
தராபர னாய்நின்ற தன்மை யுணரார்
நிராபர னாகி நிறைந்துநின் றானே.

3008.
போற்றும் பெருந்தெய்வந் தானே பிறரில்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை யொடுக்கமும்
வேற்றுடல் தானேன் றதுபெருந் தெய்வமாம்
காற்றது வீசன் கலந்துநின் றானே.

3009.
திகையனைத் துஞ்சிவ னேயவ னாகின்
மிகையனைத் துஞ்சொல்ல வேண்டா மனிதரே
புகையனைத் தும்புறம் அங்கியிற் கூடு
முகையனைத் துமெங்க ஆதிப் பிரானே.

3010.
அகன்றான் அகலிடம் ஏழுமொன் றாகி
இவன்றா னெனநின் றெளியனு மல்லன்
சிவன்றான் பலபல சீவன மாகி
நவின்றான் உலகுறு நம்பனு மாமே.

3011.
கலையொரு மூன்றுங் கடந்தப்பால் நின்ற
தலைவனை நாடுமின் தத்துவ நாதன்
விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்பன்
நரையில்லை யுள்ளுறு முள்ளவன் றானே.

3012.
படிகால் பிரமன் செய்பாசம் அறுத்து
நெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச்
செடியார் தவத்தினிற் செய்தொழில் நீக்கி
அடியேனை உய்யவைத் தன்புகொண் டானே.

3013.
ஈசனென் றெட்டுத் திசையு மியங்கின
ஓசையி னின்றெழு சத்த முலப்பிலி
தேசமொன் றாங்கே செழுங்கண்ட மொன்பதும்
வாச மலர்போல் மருவிநின் றானே.

3014.
இல்லனும் அல்லன் உளனல்லன் எம்மிறை
கல்லது நெஞ்சம் பிளந்திடுங் காட்சியன்
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி
சொல்லருஞ் சோதி தொடர்ந்துநின் றானே.

3015.
உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானென்னும்
கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும்
வள்ளற் பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம்
அள்ளற் கடலை அறுத்துநின் றானே.

3016.
மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்
கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்
ஊறுவர் உள்ளத் தகத்தும் புறத்துளும்
வேறுசெய் தாங்கே விளக்கொளி யாமே.

3017.
விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன்
கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன்
பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன்
எண்ணிலா னந்தமும் எங்கள் பிரானே.

3018.
உத்தமன் எங்கு முகக்கும் பெருங்கடல்
நித்திலச் சோதியன் நீலக் கருமையன்
எத்தனை காலமும் எண்ணுவ ரீசனைச்
சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே.

3019.
நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்
அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்
மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்
புறம்பல காணினும் போற்றகி லாரே.

3020.
இங்குநின் றானங்கு நின்றன னெங்குளன்
பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன்
கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு
எங்குநின் றான்மழை போலிறை தானே.

3021.
உணர்வது வாயுமே யுத்தம மாயும்
உணர்வது நுண்ணறி வெம்பெரு மானைப்
புணர்வது வாயும் புல்லிய தாயும்
உணர்வுட லண்டமு மாகிநின் றானே.

3022.
தன்வலி யாலுல கேழுந் தரித்தவன்
தன்வலி யாலே அணுவினுந் தானொய்யன்
தன்வலி யான்மலை எட்டினுந் தான்சாரான்
தன்வலி யாலே தடங்கட லாமே.

3023.
ஏனோர் பெருமைய னாகிலு மெம்மிறை
ஊனே சிறுமையுள் கட்கலந் தங்குளன்
வானோ ரறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியுந் தவத்தின் அளவே.

3024.
பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளை
குண்டாலங் காய்த்துக் குதிரை பழுத்தது
உண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள்
பிண்டத்துட் பட்டுப் பிணங்குகின் றார்களே.

22.சர்வ வியாபி[தொகு]

3025.
ஏயுஞ் சிவபோகம் ஈதன்றி யோரொளி
ஆயும் அறிவையும் ஆயா உபாதியால்
ஏய பரிய புரியும் தனதெய்தும்
சாயும் தனது வியாபகந் தானே.

3026.
நானறிந் தப்பொருள் நாட இடமில்லை
வானறிந் தங்கே வழியுற விம்மிடும்
ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தானறிந் தெங்குந் தலைப்பட லாமே.

3027.
கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்(து)
உடலிடை வாழ்வுகொண்டுள்ளொளி நாடி
உடலிடை வைகின்ற உள்ளுறு தேனைக்
கடலின் மலிதிரைக் காணலும் ஆமே.

3028.
பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்
தெரிந்துடலாய்நிற்கும் தேவர் பிரானும்
இருஞ்சுடர் விட்டிட் டிகலிடம் எல்லாம்
பரிந்துடன் போகின்ற பல்கோரை ஆமே.

3029.
உறுதியி னுள்வந்த உள்வினைப் பட்டும்
சிறுதியின் வீழ்ந்தார் இரணம் தாகும்
இறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி
பெறுதியின் மேலோர் பெருஞ்சுடர் ஆமே.

3030.
பற்றி னுள்ளே பரமாய பரஞ்சுடர்
முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி
நெற்றியி னுள்ளே நினைவாய் நிலைதரும்
மற்றவ னாய்நின்ற மாதவன் தானே.

3031.
தேவனும் ஆகும் திசைதிசை பத்துளும்
ஏவனும் ஆம்விரி நீருல கேழையும்
ஆவனும் ஆம்அமர்ந் தெங்கும் உலகினும்
நாவனும் ஆகி நவிற்றுகின் றானே.

3032.
நோக்குங் கருடன் நொடிஏழ் உலகையும்
காக்கும் அவனித் தலைவனும் அங்குள
நீக்கும் வினையென் நிமலன் பிறப்பிலி
போக்கும் வரவும் புணரவல் லானே.

3033.
செழுஞ்சடை யன்செம் பொனேயொக்கும் மேனி
ஒழிந்தன வாயும் ஒருங்குடன் கூடும்
கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்
ஒழிந்தில கேழுல கொத்துநின் றானே.

3034.
உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலனும் அவனே
இணரும் அவன்றன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.

3035.
புலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தை
நலமையின் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்துநின் றானே.

3036.
விண்ணவ னாயுல கேழுக்கு மேலுளன்
மண்ணவ னாய்வலஞ் சூழ்கடல் ஏழுக்கும்
தண்ணவ னாயது தன்மையின் நிற்பதோர்
கண்ணவ னாகிக் கலந்துநின் றானே.

3037.
நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி
நின்றனன் தான்நிலங் கீழொடு மேலென
நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்
நின்றனன் தானே வளங்கனி யாயே.

3038.
புவனா பதிமிகு புண்ணியன் எந்தை
அவனே உலகில் அடர்பெரும் பாகன்
அவனே அரும்பல சீவனும் ஆகும்
அவனே இறையென மாலுற்ற வாறே.

3039.
உண்ணின் றொளிரும் உலவாப் பிராணனும்
விண்ணின் றியங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண்ணின் றியங்கும் வாயுவு மாய்நிற்கும்
கண்ணின் றிலங்கும் கருத்தவன் தானே.

3040.
எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்
பண்ணும் திறனும் படைத்த பரமனைக்
கண்ணிற் கவரும் கருத்தில் அதுஇது
உண்ணின் றுருக்கியோர் ஆயமும் ஆமே.

3041.
இருக்கின்ற எண்டிசை அண்டம் பாதாளம்
உருக்கொடு தன்னடு வோங்கவிவ் வண்ணம்
கருக்கொண்டே எங்குங் கலந்திருந் தானே
திருக்கொன்றை வைத்த செஞ்சடை யானே.

3042.
பலவுடன் சென்றஅப் பார்முழு தீசன்
செலவறி வாரில்லை சேயன் அணியன்
அலைவிலன் சங்கரன் ஆதிஎம் மாதி
பலவில தாய்நிற்கும் பான்மைவல் லானே.

3043.
அதுவறி வானவன் ஆதிப் புராணன்
எதுவறி யாவகை நின்றவன் ஈசன்
பொதுவது வான புவனங்கள் எட்டும்
இதுவறி வான்நந்தி எங்கள் பிரானே.

3044.
நீரும் நிலனும் விசும்பங்கி மாருதம்
தூரும் உடம்புறும் சோதியு மாய்உளன்
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்மிறை
ஊரும் சகலன் உலப்பிலி தானே.

3045.
மூலன் உரைசெய்த மூவாயிரந் தமிழ்
மூலன் உரைசெய்த முந்நூறு மந்திரம்
மூலன் உரைசெய்த முப்ப துபதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே.

23.வாழ்த்து[தொகு]

3046.
வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.