திருமந்திரம்/நான்காம் தந்திரம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

நான்காம் தந்திரம்[தொகு]

1.அசபை[தொகு]

884.
போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை
ஏற்றுகின் றேன்எம் பிரான்ஓர் எழுத்தே.

885.
ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி
ஈரெழுத் தாலே இசைந்தங் கிருவராய்
மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மாவெழுத் தாலே மயக்கம துற்றதே.

886.
தேவர் உறைகின்ற சிற்றம் பலமென்றுந்
தேவர் உறைகின்ற சிதம்பர மேயென்றுந்
தேவர் உறைகின்ற திருஅம் பலமென்றுந்
தேவர் உறைகின்ற தென்பொது வாமே.

887.
ஆமேயொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத் தனவரத தாண்டவம்
ஆமே பிரளய மாகும்அத் தாண்டவம்
ஆமேசங் காரத் தருந்தாண் டவங்களே.

888.
தாண்டவ மான தனியெழுத் தோரெழுத்
தாண்டவ மான தனுக்கிர கத்தொழில்
தாண்டவங் கூத்துத் தனிநின்ற தற்பரந்
தாண்டவங் கூத்துத் தமனியந் தானே.

889.
தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்குந்
தானே அகார உகாரம தாய்நிற்குந்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலந் தானே.

890.
தராதல மூலைக்குத் தற்பர மாபரன்
தராதலம் வெப்பு நமவா சியவாம்
தராதலஞ் சொல்லிற் றானவா சியவாகுந்
தராதல யோகந் தயாவாசி யாமே.

891.
ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறியா விடம்என்ப
ஆமே திருக்கூத் தடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதி ஆனந்த மாமே.

892.
ஆனந்த மூன்றும் அறிவிரண் டொன்றாகும்
ஆனந்தகுஞ் சிவாய அறிவார் பலரில்லை
ஆனந்த மோடும் அறியவல் லார்கட்கு
ஆனந்தக் கூத்தாய் அகப்படுந் தானே.

893.
படுவ திரண்டும் பலகலை வல்லார்
படுவ தோங்கார பஞ்சாக் கரங்கள்
படுவது சங்காரத் தாண்டவப் பத்தி
படுவது கோணம் பரந்திடும் வாறே.


894.
வாறே சதாசிவ மாறிலா ஆகமம்
வாறே சிவகதி வண்டுறை புன்னையும்
வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள்
வாறே பொதுவாகு மன்றின் அமலமே.

895.
அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம்
அமலந் திரோதாயி யாகுமா னந்தமாம்
அமலஞ்சொல் ஆணவ மாயை காமியம்
அமலந் திருக்கூத்தங் காடு மிடந்தானே.

896.
தானே தனக்குத் தலைவனு மாய்நிற்கும்
தானே தனக்குத் தனமலை யாய்நிற்கும்
தானே தனக்குத் தன்மய மாய்நிற்கும்
தானே தனக்குத் தலைவனு மாமே.

897.
தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்
தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்
தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்
தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.

898.
இணையார் திருவடி எட்டெழுத் தாகும்
இணையார் கழலிணை யீரைஞ்ச தாகும்
இணையார் கழலிணை ஐம்பத்தொன் றாகும்
இணையார் கழலிணை ஏழா யிரமே.

899.
ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்
ஏழா யிரத்தும் எழுகோடி தானாகி
ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்
ஏழா யிரண்டாய் இருக்கின்ற வாறே.

900.
இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்
இருக்கின்ற மந்திரம் இத்திறம் இல்லை
இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி
இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணந் தானே

901.
தானே தனக்குத் தகுநட்டந் தானாகுந்
தானே அகார உகாரம தாய்நிற்குந்
தானே ரீங்காரத் தத்துவக் கூத்துக்குத்
தானே உலகில் தனிநடந் தானே.

902.
நடமிரண் டொன்றே நளினம தாகும்
நடமிரண் டொன்றே நமன்செய்யுங் கூத்து
நடமிரண் டொன்றே நகைசெயும் மந்திரம்
நடஞ்சிவ லிங்க நலஞ்செம்பு பொன்னே.

903.
செம்புபொன் னாகுஞ் சிவாயநம வென்னிற்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரஞ்
செம்புபொன் னாகும் ஸ்ரீயுங் கிரீயுமெனச்
செம்பொன் னான திருவம் பலமே.

904.
திருவம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத்
திருவம் பலமாக வீராறு கீறித்
திருவம் பலமாக விருபத்தைஞ் சாக்கித்
திருவம் பலமாகச் செபிக்கின்ற வாறே.

905.
வாறே சிவாய நமச்சி வாயநம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே யருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கல் வரும்செம்பு பொன்னே.

906.
பொன்னான மந்திரம் புகலவு மொண்ணாது
பொன்னான மந்திரம் பொறிகிஞ்சு கத்தாகும்
பொன்னான மந்திரம் புகையுண்டு பூரிக்கிற்
பொன்னாகும் வல்லார்க் குடம்புபொற் பாதமே.

907.
பொற்பாதங் காணலாம் புத்திர ருண்டாகும்
பொற்பாதத் தாணையே செம்புபொன் னாயிடும்
பொற்பாதங் காணத் திருமேனி யாயிடும்
பொற்பாத நன்னடஞ் சிந்தனை சொல்லுமே.

908.
சொல்லு மொருகூட்டிற் புக்குச் சுகிக்கலாம்
நல்ல மடவார் நயந்துட னேவருஞ்
சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடுஞ்
சொல்லுந் திருக்கூத்தின் சூக்குமந் தானே.

909.
சூக்கும மெண்ணா யிரஞ்செபித் தாலுமேற்
சூக்கும மான வழியிடைக காணலாஞ்
சூக்கும மான வினையைக் கெடுக்கலாஞ்
சூக்கும மான சிவனதா னந்தமே.

910.
ஆனந்த மொன்றென் றறைந்திட வானந்தம்
ஆனந்தம் ஆ-ஈ-ஊ-ஏ ஓமொன் றைந்திடம்
ஆனந்த மானந்தம் மஞ்சும தாயிடும்
ஆனந்தம் -அம்-ஹ்ரீம்-அம்-க்ஷம்-ஆம் ஆகுமே

911.
மேனி யிரண்டும் விளங்காமல் மேற்கொள்ள
மேனி யிரண்டு மிக்கார விகாரியா
மேனி யிரண்டும் -ஊ-ஆ-ஈ-ஏ-ஓ என்னும்
மேனி யிரண்டும்-ஈ-ஓ-ஊ-ஆ-ஏ- கூத்துவே.

912.
கூத்தே சிவாய நமசி வாயிடுங்
கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம்-சிவாயநம வாயிடுங்
கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம்-சிவாயநம வாயிடுங்
கூத்தே இ-ஊ-ஆ-ஏ-ஓம் நமசிவாய கோளொன்று மாறே

913.
ஒன்றிரண் டாடவோ ரொன்று முடனாட
ஒன்றினின் மூன்றாட வோரேழு மொத்தாட
ஒன்றினா லாடவோ ரொன்பது முடனாட
மன்றினி லாடினான் மாணிக்கக் கூத்தே.

2.திருவம்பலச்சக்கரம்[தொகு]

914.
இருந்தவிவ் வட்டங்க ளீராறி ரேகை
இருந்த விரேகைமே லீரா றிருத்தி
இருந்த மனைகளு மீராறு பத்தொன்
றிருந்த மனையொன்றி லெய்துவன் றானே.

915.
தானொன்றி வாழிடந் தன்னெழுத் தேயாகுந்
தானொன்று மந்நான்குந் தன்பே ரெழுத்தாகுந்
தானொன்று நாற்கோணந் தன்னைந் தெழுத்தாகுந்
தானொன்றி லேயொன்று மவ்வரன் றானே.

916.
அரகர என்ன அரியதொன் றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப் பன்றே.

917.
எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்
எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்
பட்டது மந்திரம் பான்மொழி பாலே.

918.
மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்
ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்டவல் லாருயிர் காக்கவல் லாரே.

919.
ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்
ஆலய மாக அமர்ந்தவித் தூலம்பேர்
ஆலய மாக வருகின்ற சூக்குமம்
ஆலய மாக அமர்ந்திருந் தானே.

920.
இருந்தவிவ் வட்ட மிருமூன்றி ரேகை
இருந்த வதனு ளிரேகை யைந்தாக
இருந்த வறைக ளிருபத்தைஞ் சாக
இருந்த வறையொன்றி லெய்து மகாரமே.

921.
மகார நடுவே வளைந்திடுஞ் சத்தியை
ஒகாரம் வளைந்திட் டும்பிளந் தேற்றி
யகாரந் தலையா யிருகண் சிகாரமாய்
நகார வகாரநற் காலது நாடுமே.

922.
நாடும் பிரணவ நடுவிரு பக்கமும்
ஆடு மவர்வா யமர்ந்தங்கு நின்றது
நாடு நடுவுண் முகநம சிவாய
வாடுஞ் சிவாயநம புறவட்டத் தாயதே.

923.
ஆயுஞ் சிவாய நமமசி வாயந
வாயு நமசிவா யயநம சிவாயந
வாயுமே வாய நமசியெனு மந்திர
மாயுஞ் சிகாரந் தொட்டந்தத் தடைவிலே.

924.
அடைவினில் ஐம்பதும் ஐயைந் தறையின்
அடையும் அறையொன்றுக் கீரெழுத் தாக்கி
அடையு மசுாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்தைம் பத்தொன்றும் அமர்ந்ததே

925.
அமர்ந்த அரகர வாம்புர வட்டம்
அமர்ந்த அரிகரி யாமத னுள்வட்டம்
அமர்ந்த அசபை யாமத னுள்வட்டம்
அமர்ந்தவி ரேகையும் ஆகின்ற சூலமே.

926.
சூலத் தலையினில் தோற்றிடுஞ் சத்தியுஞ்
சூலத் தலையினில் சூழும்ஓங் காரத்தால்
சூலத் திடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்
தாலப் பதிக்கும் அடைவது வாமே.

927.
அதுவாம் அகார இகார உகாரம்
அதுவாம் எகாரம் ஒகார மதஞ்சாம்
அதுவாகுஞ் சக்கர வட்டமேல் வட்டம்
பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே.

928.
பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது
சோர்வுற்ற சக்கர வட்டத்துட் சந்தியின்
நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்
ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே.

929.
இயலுமிம் மந்திரம் எய்தும் வழியின்
செயலும் அறியத் தெளிவிக்கு நாதன்
புயலும் புனலும் பொருந்தங்கி மண்விண்
முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே.

930.
ஆரெட் டெழுத்தின்மே லாறும் பதினாலும்
ஏறிட் டதன்மேலே விந்துவும் நாதமுஞ்
சீரிட்டு நின்று சிவாய நமவென்னக்
கூறிட்டு மும்மலங் கூப்பிட்டுப் போமே.

931.
அண்ணல் இருப்ப தவளங் கரத்துளே
பெண்ணினல் லாளும் பிரானக் கரத்துளே
எண்ணி இருவர் இசைந்தங் கிருந்திடப்
புண்ணிய வாளர் பொருளறி வார்களே.

932.
அவ்விட்டு வைத்தங் கரவிட்டு மேல்வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும்
அவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந் தாமே.

933.
அவ்வுண்டு சவ்வுண் டனைத்துமங் குள்ளது
கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாரில்லை
கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாளர்க்குச்
சவ்வுண்டு சத்தி சதாசிவன் தானே.

934.
அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்
அஞ்செழுத் தாகிய வக்கர சக்கரம்
அஞ்செழுத் துள்ளே அமர்ந்திருந் தானே.

935.
கூத்தனைக் காணுங் குறிபல பேசிடிற்
கூத்த னெழுத்தின் முதலெழுத் தோதினார்
கூத்தனொ டொன்றிய கொள்கைய ராய்நிற்பர்
கூத்தனைக் காணும் குறியது வாமே.

936.
அத்திசைக் குள்நின்ற அனலை எழுப்பியே
அத்திசைக் குள்நின்ற நவ்வெழுத் தோதினால்
அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை
அத்திசைக் குள்ளுற வாக்கினன் தானே.

937.
தானே யளித்திடுந் தையலை நோக்கினால்
தானே யளித்திட்டு மேலுற வைத்திடுந்
தானே யளித்த மகாரத்தை ஓதிடத்
தானே யளித்ததோர் கல்லொளி யாகுமே.

938.
கல்லொளி யேயென நின்ற வடதிசை
கல்லொளி யேயென நின்றனன் இந்திரன்
கல்லொளி யேயென நின்ற சிகாரத்தைக்
கல்லொளி யேயெனக் காட்டிநின் றானே.

939.
தானே யெழுகுணத் தண்சுட ராய்நிற்குந்
தானே யெழுகுணம் வேதமு மாய்நிற்கும்
தானே யெழுகுண மாவதும் ஓதிடில்
தானே யெழுந்த மறையவ னாமே.

940.
மறையவ னாக மதித்த பிறவி
மறையவ னாக மதித்திடக் காண்பர்
மறையவன் அஞ்செழுத் துண்ணிற்கப் பெற்ற
மறையவன் அஞ்செழுத் தாமது வாகுமே.

941.
ஆகின்ற பாதமு மந்நவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்
ஆகின்ற சீயிரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற வச்சுட ரவ்வியல் பாமே.

942.
அவ்வியல் பாய இருமூன் றெழுத்தையுஞ்
செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்
ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடிற்
பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.

943.
பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்
வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரஞ் சூழ்பகை போக
உரந்தரு மந்திரம் ஓமென் றெழுப்பே.

944.
ஓமென் றெழுப்பித்தன் உத்தம நந்தியை
நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை
ஆமென் றெழுப்பியவ் வாற்றி வார்கள்
மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே.

945.
ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும்
பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத் தோரெழுத் துள்நிற்கப்
பாகொன்றி நிற்கும் பராபரன் தானே.

946.
பரமாய அஞ்செழுத் துள்நடு வாகப்
பரமாய நவசிம் பார்க்கில் மவயநசி
பரமாய சியநம வாமபரத் தோதிற்
பரமாய வாசி மயநமாய் நின்றே.

947.
நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.

948.
நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்
மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக்
கன்றது வாகக் கறந்தனன் நந்தியுங்
குன்றிடை நின்றிடுங் கொள்கைய னாமே.

949.
கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல
கொண்டஇச் சக்கரத் துள்ளே குறியைந்து
கொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்தைந்துங்
கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.

950.
வெளியி லிரேகை யிரேகையி லத்தலை
சுளியில் உகாரமாஞ் சுற்றிய வன்னி
நெளிதரு கால்கொம்பு நேர்விந்து நாதந்
தெளியும் பிரகாரஞ் சிவமந் திரமே.

951.
அகார வுகார சிகார நடுவாய்
வகாரமோ டாறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவன்சிந்தை செய்ய
ஒகார முதல்வன் உவந்துநின் றானே.

952.
அற்ற விடத்தே அகாரம் தாவது
உற்ற விடத்தே யுறுபொருள் கண்டிடச்
செற்றம் மறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்
குற்றம் அறுத்த பொன்போலுங் குளிகையே.

953.
அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால்
உவ்வென்ற முத்தி யுருகிக் கலந்திடும்
மவ்வென்றென் னுள்ளே வழிபட்ட நந்தியை
எவ்வணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.

954.
நீரில் எழுத்திவ் வுலகா ரறிவது
வானில் எழுத்தொன்று கண்டறி வாரில்லை
யாரிவ் வெழுத்தை அறிவா ரவர்கள்
ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே

955.
காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பது மாவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
மூலம் நடுவுற முத்திதந் தானே.

956.
நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று
பாவிக ளத்தின் பயனறி வாரில்லை
ஓவிய ராலும் அறியவொண் ணாதது
தேவியுந் தானுந் திகழ்ந்திருந் தானே.

957.
அவ்வொடு சவ்வென்ற தரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிகிலர்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிந்தபின்
அவ்வொடு சவ்வும் அனாதியு மாமே.

958.
மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநிற்குஞ்
சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலர்
சந்தி தொழுதுபோ யார்த்தகன் றார்களே.

959.
சேவிக்கு மந்திரஞ் செல்லுந் திசைபெற
ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன
பூவுக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே

960.
அருவினில் அம்பரம் அங்கெழு நாதம்
பெருகு துடியிடை பேணிய விந்து
மருவி யகார சிகார நடுவாய்
உருவிட வூறு முறுமந் திரமே

961.
விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடிச்
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
அந்தர வானத் தமுதம்வந் தூறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி யாமே

962.
ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலார்
ஆறெழுத் தொன்றாக ஓதி உணரார்கள்
வேறெழுத் தின்றி விளம்பவல் லார்கட்கு
ஓரெழுத் தாலே உயிர்பெற லாமே

963.
ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள் வீரே.

964.
விந்துவி லுஞ்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவி பதினாறு கலையதாய்க்
சுந்தர வாகரங் காலுடம் பாயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே.

965.
ஐம்ப தெழுத்தே அனைத்தும்வே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்
ஐம்ப தெழுத்தேயு மாவ தறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.

966.
அஞ்செழுத் தாலைந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தாற்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தாலிவ் வகலிடந் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே.

967.
வீழ்ந்தெழ லாம்விகிர் தன்திரு நாமத்தைச்
சேர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச்
சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்
போந்திடும் என்னும் புரிசடை யோனே.

968.
உண்ணு மருந்தும் உலப்பிலி காலமும்
பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும்
விண்ணின் றமரர் விரும்பி அடிதொழ
எண்ணின் றெழுத்தஞ்சு மாகிநின் றானே.

969.
ஐந்தின் பெருமையே அகலிட மாவதும்
ஐந்தின் பெருமையே ஆலய மாவதும்
ஐந்தின் பெருமையே யறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனு மாமே.

970.
வேரெழுத் தாய்விண்ணாய் அப்புற மாய்நிற்கும்
நீரெழுத் தாய்நிலந் தாங்கியும் அங்குள்ள
சீரேழுத் தாயங்கி யாயுயி ராமெழுத்
தோரெழுத் தீசனும் ஒண்சுட ராமே.

971.
நாலாம் எழுத்தோசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று
நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு
நாலாம் எழுத்தது நன்னெறி தானே.

972.
இயைந்தனள் ஏந்திழை என்னுள மேவி
நயந்தன ளங்கே நமசிவ என்னும்
பயந்தனை யோரும் பதமது பற்றும்
பெயர்ந்தனன் மற்றும் பிதற்றறுத் தேனே.

973.
ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினை
ஓமத்தி லேயுதம் பண்ணும் ஒருத்திதன்
நாம் நமசிவ என்றிருப் பாருக்கு
நேமத் தலைவி நிலவிநின் றாளே.

974.
பட்டம் பரிசே பரமஞ் செழுத்ததின்
இட்ட மறிந்திட் டிரவு பகல்வர
நட்டம் தாடு நடுவே நிலயங்கொண்
டட்டதே சப்பொரு ளாகிநின் றாளே.

975.
அகாரம் உயிரே உகாரம் பரமே
மகார மலமாய் வருமுப்ப தாறிற்
சிகாரஞ் சிவமாய் வகாரம் வடிவமாய்
அகாரம் உயிரென் றறையலு மாமே.

976.
நகார மகார சிகார நடுவாய்
வகாரம் இரண்டு வளியுடன் கூடி
ஒகார முதற்கொண் டொருக்கால் உறைக்க
மகார முதல்வன் மனத்தகத் தானே.

977.
அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவன
அஞ்சையுங் கூடத் தடுக்கவல் லார்கட்கே
அஞ்சாதி யாதி அகம்புக லாமே.

978.
ஐந்து கலையில் அகாராதி தன்னிலே
வந்த நகாராதி மாற்றி மகாராதி
நந்தியை மூலத்தே நாடிப் பரையொடுஞ்
சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே.

979.
மருவுஞ் சிவாயமே மன்னும் உயிரும்
அருமந்த யோகமும் ஞானமு மாகுந்
தெருள்வந்த சீவனார் சென்றிவற் றாலே
அருள்தங்கி யச்சிவ மாவது வீடே.

980.
அஞ்சுக அஞ்செழுத் துண்மை அறிந்தபின்
நெஞ்சகத் துள்ளே நிறையும் பராபரம்
வஞ்சக மில்லை மனைக்கும் அழிவில்லை
தஞ்ச மிதுவென்று சாற்றுகின் றேனே.

981.
சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச்
சிவாயவொ டவ்வே சிவனுரு வாகுஞ்
சிவாயவொ டவ்வுந் தெளியவல் லார்கள்
சிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே.

982.
சிகார வகார யகார முடனே
நகார மகார நடுவுற நாடி
ஒகார முடனே ஒருகா லுரைக்கு
மகார முதல்வன் மதித்துநின் றானே.

983.
நம்முதல் ஓரைந்தின் நாடுங் கருமங்கள்
அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சிம்முத லுள்ளே தெளியவல் லார்கட்குத்
தம்முத லாகுஞ் சதாசிவந் தானே.

984.
நவமுஞ் சிவமும் உயிர்பர மாகுந்
தவமொன் றிலாதன தத்துவ மாகுஞ்
சிவமொன்றி யாய்பவ ராதர வாலச் வாலச்
சிவமென்ப தானாம் எனுந்தெளி வுற்றதே.

985.
கூடிய எட்டும் இரண்டுங் குவிந்தறி
நாடிய நந்தியை ஞானத்து ளேவைத்து
ஆடிய ஐவரும் அங்குற வாவர்கள்
தேடி அதனைத் தெளிந்தறி யீரே.

986.
எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே

987.
எட்டு வரையின் மேலெட்டு வரைகீறி
இட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்
வட்டத்தி லேயறை நாற்பத்தெட் டுமிட்டுச்
சிட்டஞ் செழுத்துஞ் செபிசீக் கிரமே.

988.
தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்
ஆனவிம் மூவரோ டாற்றவ ராதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமுஞ்
சேனையுஞ் செய்சிவ சக்கரந் தானே.

989.
பட்டன மாதவ மாற்றும் பராபரம்
விட்டனர் தம்மை விகிர்தா நமவென்பர்
எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே.

990.
சிவமுதல் மூவரோ டைவர் சிறந்து
அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றான
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.

991.
வித்தாஞ் செகமய மாக வரைகீறி
நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின்
உத்தாரம் பன்னிரண் டாதி கலைதொகும்
பத்தாம் பிரம சடங்குபார்த் தோதிடே.

992.
கண்டெழுந் தேன்கம லம்மல ருள்ளிடை
கொண்டொழிந் தேனுடன் கூடிய காலத்துப்
பண்பழி யாத பதிவழி யேசென்று
நண்பழி யாமே நமவென லாமே

993.
புண்ணிய வானவர் பூமழை தூவிநின்(று)
எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்
நண்ணுவர் நண்ணி நமஎன்னு நாமத்தைக்
கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.

994.
ஆறெழுத் தாலவ் வாறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலையெழுத் தொன்றுள
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.

995.
எட்டினில் எட்டறை யிட்டோ ரறையிலே
கட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச்
சுட்டி இவற்றைப் பிரணவஞ் சூழ்ந்திட்டு
மட்டும் உயிர்கட் குமாபதி யானுண்டே.

996.
நம்முதல் அவ்வொடு நாவின ராகிய
யம்முத லாகிய எட்டிடை யுற்றிட்டு
உம்முத லாகவே உணர்பவர் உச்சிமேல்
உம்முத லாயவன் உற்றுநின் றானே.

997.
நின்ற அரசம் பலகைமேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகந்
துன்று மெழுகையுள் பூசிச் சுடரிடைத்
தன்ற வெதும்பிடத் தம்பனங் காணுமே.

998.
கரண விறளிப் பலகை யமன்றிசை
மரணமிட் டேட்டின் மகார வெழுத்திட்டு
வரணமி லைங்காயம் பூசி யடுப்பிடை
முரணிற் புதைத்திட மோகன மாகுமே.

999.
ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்திற்
பாங்கு படவே பலாசப் பலகையில்
காங்கரு மேட்டிற் கடுப்பூசி விந்துவிட்(டு)
ஓங்காரம் வைத்திடு உச்சாட னத்துக்கே.

1000.
உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையிற்
பச்சோலை யிற்பஞ்ச காயத்தைப் பாரித்து
முச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திடு
வைச்சபின் மேலோர் மாரணம் வேண்டிலே.

1001.
ஏய்ந்த வரிதார மேட்டின்மேலே பூசி
ஏய்ந்த வகாரம் உகாரம் எழுத்திட்டு
வாய்ந்ததோர் வில்வப் பலகை வசியத்துக்
கேய்ந்தவைத் தெண்பதி னாயிரம் வேண்டிலே

1002.
எண்ணாக் கருடனை ஏட்டின் யகாரமிட்(டு)
எண்ணாப் பொன்னாளில் எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவற் பலகையிலிட்டுமேற் கேநோக்கி
எண்ணா வெழுத்தொடெண் ணாயிரம் வேண்டிலே

3.அருச்சனை[தொகு]

1003.
அம்புய நீலங் கழுநீ ரணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளஞ் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.

1004.
சாங்கம் தாகவே சந்தொடு சந்தனந்
தேங்கமழ் குங்குமங் கர்ப்பூரங் காரகில்
பாங்கு படப்பனி நீராற் குழைத்துவைத்(து)
ஆங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே

1005.
அன்புட னேநின் றமுதமும் ஏற்றியே
பொன்செய் விளக்கும் புகைதீபந் திசைதொறுந்
துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்
இன்புட னேவந் தெய்திடும் முத்தியே.

1006.
எய்தி வழிப்படில் எய்தா தனவில்லை
எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமும்
எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே.

1007.
நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார்
மண்ணிய நைவேத் தியமனு சந்தான
நண்ணிய பஞ்சாங்க நண்ணுஞ் செபமென்னு
மன்னு மனபவ னத்தொடு வைகுமே.

1008.
வேண்டார்கள் கன்மம் விமலனுக் காட்பட்டோர்
வேண்டார்கள் கன்ம மதிலிச்சை யற்றபேர்
வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்
வேண்டார்கள் கன்மம் மிகுதியோ ராய்ந்தன்பே

1009.
அறிவரு ஞானத் தெவரும் அறியார்
பொறிவழி தேடிப் புலம்புகின் றார்கள்
நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்
எறிமணி யுள்ளே இருக்கலு மாமே

1010.
இருளும் வெளியும்போல் இரண்டாம் இதயம்
அருளறி யாமையும் மன்னு மறிவு மருளியவை விட்டெறி யாமை மயங்கு
மருளுஞ் சிதைத்தோ ரவர்களா மன்றே.

1011.
தானவ னாக அவனேதா னாயிட
ஆன இரண்டில் அறிவன் சிவமாகப்
போனவ னன்பிது நாலாம் மரபுறத்
தாவை னாகுமோ ராதித்த தேவரே.

1012.
ஓங்கார முந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள்கண்டத் தாயிடும்
பாங்கார் நகாரம் பயில்நெற்றி யுற்றிடும்
வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே.

1013.
நமவது வாசன மான பசுவே
சிவமது சித்திச் சிவமாம் பதியே
நமலற வாதி நாடுவ தன்றாஞ்
சிவமாகு மாமோனஞ் சேர்தல்மெய் வீடே.

1014.
தெளிவரு நாளிற் சிவஅமு தூறும்
ஒளிவரு நாளில் ஓரெட்டில் உகளுங்
ஒளிவரு அப்பதத் தோரிரண் டாகில்
வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே

4.நவகுண்டம்[தொகு]

1015.
நவகுண்ட மானவை நானுரை செய்யின்
நவகுண்டத் துள்ளெழு நற்றீபந் தானும்
நவகுண்டத் துள்ளெழு நன்மைகள் எல்லாம்
நவகுண்ட மானவை நானுரைப் பேனே.

1016.
உரைத்திடுங் குண்டத்தின் உள்ளேமுக் காலும்
நகைத்தெழு நாற்கோண நன்மைகள் ஐந்தும்
பகைத்திடு முப்புரம் பாரங்கி யோடே
மிகைத்திடு குண்டங்கள் மேலறி யோமே.

1017.
மேலறிந் துள்ளே வெளிசெய்த வப்பொருள்
காலறிந் துள்ளே கருத்துற்ற செஞ்சுடர்
பாரறிந் தண்டஞ் சிறகற நின்றது
நானறிந் துள்ளே நாடிக்கொண் டேனே.

1018.
கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியால்
அண்டங்கள் ஈரேழு மாக்கி அழிக்கலாம்
பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்
இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே.

1019.
எடுத்தவக் குண்டத் திடம்பதி னாறிற்
பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்
கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே
கொதித்தெழு வல்வினை கூடகி லாவே.

1020.
கூடமுக் கூடத்தின் உள்ளெழு குண்டத்துள்
ஆடிய ஐந்தும் அகம்புறம் பாய்நிற்கும்
பாடிய பன்னீ ரிராசியும் அங்கெழ
நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே

1021.
நற்சுட ராகுஞ் சிரமுக வட்டமாங்
கைச்சுட ராகுங் கருத்துற்ற கைகளிற்
பைச்சுடர் மேனி பதைப்புற் றிலிங்கமும்
நற்சுட ராயெழு நல்லதென் றாளே.

1022.
நல்லதென் றாளே நமக்குற்ற நாயகஞ்
சொல்லதென் றாளே சடர்முடி பாதமா
மெல்லநின் றாளை வினவகில் லாதவர்
கல்லதன் றாளையுங் கற்றும்வின் னாளே.

1023.
வின்னா விளம்பிறை மேவிய குண்டத்துச்
சொன்னால் இரண்டுஞ் சுடர்நாகந் திக்கெங்கும்
பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
என்னாகத் துள்ளே இடங்கொண்ட வாறே.

1024.
இடங்கொண்ட பாதம் எழிற்சுட ரேக
நடங்கொண்ட பாதங்கள் நன்னீ ரதற்குச்
சகங்கொண்ட கையிரண் டாறுந் தழைப்ப
முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே.

1025.
முக்கணன் றானே முச்சுட ராயவன்
அக்கணன் றானே அகிலமும் உண்டவன்
திக்கணனாகித் திசையெட்டுங் கண்டவன்
எட்கணன் றானுக்கும் எந்தை பிரானே.

1026.
எந்தைபிரானுக் கிருமூன்று வட்டமாய்த்
தந்தைதன் முன்னே சண்முகந் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலான்
மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே.

1027.
மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள்
ஆட்டிய காலொன்றும் இரண்டாய் அலர்ந்திடும்
வாட்டிய கையிரண் டொன்று பதைத்தெழு
நாட்டுஞ் சுரரிவர் நல்லொளி தானே

1028.
நல்லொளி யாக நடந்த வுலகெங்குங்
கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும்
சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம்
கல்லொளி கண்ணுள மாகிநின் றாளே.

1029.
நின்றஇக் குண்டம் நிலையாறு கோணமாய்ப்
பண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறுங்
கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழ
விண்ணுளும் என்ன எடுக்கலு மாமே.

1030.
எடுக்கின்ற பாதங்கண் மூன்ற தெழுகை
கடுத்த முகம்இரண் டாறுகண் ணாகப்
படித்தெண்ணு நாவெழு கொம்பொரு நாலும்
அடுத்தெழு கண்ணான தந்தமி லாற்கே.

1031.
அந்தமில் லானுக் ககடலிந் தானில்லை
தந்தமில் லானை அளப்பவர் தாமில்லை
தந்தமில் லானுக் கடுத்த சொற் றானில்லை
அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே.

1032.
பத்திட்டங் கெட்டிட் டாறிட்டு நாலிட்டு
மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்தமெய் யாகமும்
பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.

1033.
பார்ப்ப பாகன் பரந்தகை நாலைஞ்சு
காற்பதி பத்து முகம்பத்துக் கணகளும்
பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி
நாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே.

1034.
அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும்
அஞ்சிட்ட குண்டமலர்ந் தங்கிருத்தலால்
பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்
கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதன் முத்தியே.

1035.
முத்தநற் சோதி முழுச்சுட ராயவன்
கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
பற்றற நாடிப் பரந்தொளி யூடுபோய்
செற்றற் றிருந்தவர் சேர்ந்திருந் தாரே.

1036.
சேர்ந்த கலையஞ்சுஞ் சேருமிக் குண்டமும்
ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
பாய்ந்தஜம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
காய்ந்தவர் என்றுங் கலந்தவர் தாமே.

1037.
மெய்கண்ட மாழ்விரி நீருல கேழையும்
உய்கண்டஞ் செய்த ஒருவனைச் சேருமின்
செய்கண்ட ஞானந் திருந்திய தேவர்கள்
பொய்கண்டம் இல்லாப் பொருள்கலந் தாரே.

1038.
கலந்திரு பாதம் இருகர மாகும்
மலர்ந்திரு குண்ட மகாரத்தோர் மூக்கு
மலர்ந்தெழு செம்முக மற்றைக்கண் நெற்றி
உணர்ந்திரு குஞ்சியங் குத்தம னார்க்கே.

1039.
உத்தமன் சோதி உளனொரு பாலனாய்
மத்திம னாகி மலர்ந்தங் கிருந்திடும்
பச்சிம திக்கும் பரந்து குழிந்தன
சத்திமா னாகத் தழைத்த கொடியே.

1040.
கொடியாறு சென்று குலாவிய குண்டம்
அடியிரு கோணமாய் அந்தமும் ஒக்கும்
படியே முலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதன மாமே

1041.
மாதன மாக வளர்கின்ற வன்னியைச்
சாதன மாகச் சமைந்த குருவென்றும்
போதன மாகப் பொருந்த உலகாளும்
பாதன மாகப் பரிந்தது பார்த்தே.

1042.
பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை
ஆத்தம தாகவே யாய்ந்தறி வாரில்லை
காத்துட லுள்ளே கருதி இருந்தவர்
மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.

1043.
உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும்
பயங்கண்டு கொண்டவிப் பாய்கரு வொப்பச்
சகங்கண்டு கொண்டது சாதன மாமே

1044.
சாதனை நாலு தழல்மூன்று வில்வயம்
வேதனை வட்டம் விளையாறு பூநிலை
போதனை போதைஞ்சு பொற்கய வாரண
நாதனை நாடு நவகோடி தானே.

5.சத்தி பேதம் - திரிபுரைச் சக்கரம்[தொகு]

1045.
மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை உள்ளொளி ஓராறு கோடியில்
தாமான மந்திரஞ் சத்திதன் மூர்த்திகள்
ஆமா யலவாந் திரிபுரை யாங்கே.

1046.
திரிபுரை சுந்தரி அந்தரி சுந்துரப்
பரிபுரை நாரணி யாம்பல வண்ணத்தி
இருள்புரை ஈசி மனோன்மணி என்ன
வருபல வாய்நிற்கு மாமாது தானே.

1047.
தானா அமைந்தவம் முப்புரந் தன்னிடைத்
தானான மூவுரு வோருருத் தன்மையள்
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள்கல்வி
தானான போகமும் முக்தியும் நல்குமே.

1048.
நல்குந் திரிபுரை நாதநா தாந்தங்கள்
பல்கும் பரவிந்து பாரண்ட மானவை
நல்கும் பரையபி ராமி அகோசரி
புல்கு மருளுமப் போதாந்தந் தாளுமே.

1049.
தாளணி நூபுரஞ் செம்பட்டுத் தானுடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.

1050.
குண்டலக் காதி கொலைவில் புருவத்தள்
கொண்ட வரத்தினின் மன்னுகோ லத்தள்
கண்டிகை யாரங் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே.

1051.
நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிருக் குஞ்சிகை
நன்றறி கண்டிகை நாற்காற் கரீடணி
துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.

1052.
சுத்தவம் பாரத் தனத்தி சுகோதயன்
வத்துவ மாயா ளுமாசத்தி மாபரை
அத்தகை யான மனோரணி தானுமாய்
வைத்தவக் கோல மதியவ ளாகுமே.

1053.
அவளை யறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி யூர்புகு மாறறி யேனே.

1054.
அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பார்
அறிவார் அறிவுரு வாமவள் என்பார்
அறிவார் கரும மவளிச்சை என்பார்
அறிவார் பரனு மவளிடத் தானே.

1055.
தானெங் குளதங் குளதையன் மாதேவி
ஊனெங் குளஅங் குள்ளுயிர்க் காவலன்
வானெங் குளஅங் குளேவந்து மப்பாலாம்
கோனெங்கும் நின்ற குறிபல பாரே.

1056.
பராசத்தி மாசத்தி பல்வகை யாலுந்
தராசத்தி யாய்நின்ற தன்மை யுணரா
உராசத்தி ஊழிகள் தோறும் உடனே
புராசத்தி புண்ணிய மாகிய போகமே.

1057.
போகஞ்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகஞ்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகஞ்செய் தாங்கே அடியவர் நாடொறும்
பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.

1058.
கொம்பனை யாளைக் குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவர் நாடியைச்
செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை
நம்பிஎன் உள்ளே நயந்துவைத் தேனே.

1059.
வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பராபரைச்
சித்தக் கரணச் செயல்களுஞ் செய்திடுஞ்
சத்தியும் வித்தைத் தலையவ ளாமே.

1060.
தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவஞ்செயுஞ் தூய்நெறித் தோகை
கலைபல வென்றிடுங் கன்னியென் னுள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.

1061.
நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந் தேழுல குந்தொழ
மன்றது வொன்றி மனோன்மணி மங்கலி
ஒன்றென்ன வொன்றநின் றொத்தடைந் தாளே.

1062.
ஒத்தடங் குங்கும லத்திடை யாயிழை
அத்தகை செய்கின்ற வாய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மணி மங்கலி
சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.

1063.
உணர்ந்துட னேநிற்கும் உள்ளொளி யாகி
மணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும்
புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்
கணிந்தெழு வார்க்குக் கதியளிப் பானே.

1064.
அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போலுள்ள நோக்கித்
தெளியுறு சித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யவுண் டாளே.

1065.
உண்டில்லை என்ற துருச்செய நின்றது
வண்டில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தம்மொடு
மண்டல மூன்றுற மன்னிநின் றாளே.

1066.
நின்றா ளவன்றன் உடலும் உயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகியே
நின்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.

1067.
ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை
பாடுந் திருமுறை பார்ப்பனி பாதங்கள்
சூடுமென் சென்னிவாய் தோத்திரஞ் சொல்லுமே.

1068.
தோத்திரஞ் செய்து தொழுது துணையடி
வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிரும்
பரர்த்திடு மங்குச பாசம் பசுங்கரும்
பார்த்திடும் பூம்பிள்ளை யாகுமாம் ஆதிக்கே.

1069.
ஆதி விதமிகுத் தண்டந்த மால்தங்கை
நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பல்காற் பயில்விரேல்
சோதி மிகுத்துமுக் காலமுந் தோன்றுமே.

1070.
மேதாதி ஈரெட்டு மாகிய மெல்லியல்
வேதாதி நூலின் விளங்கும் பராபரை
ஆதார மாகியே ஆய்ந்து பரப்பினன்
நாதாதி நாதத்து நல்லரு ளாளே.

1071.
அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தை புவனா பதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி யருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவன் நானே.

1072.
ஆன வராக முகத்தி பதத்தினள்
ஈன வராகம் இடிக்கும் முசலத்தோ(டு)
ஏனை யுழுபடை ஏந்திய வெண்ணகை
ஊன மறவுணர்ந் தாருளத் தோங்குமே.

1073.
ஓங்காரி என்பா ளவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை யுடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு ரீங்காரத் துள்ளே யினிதிருந் தாளே.

1074.
தானே தலைவி யெனநின்ற தற்பரை
தானே யுயிர்வித்துத் தந்த பதினாறும்
வானோர் தலமும் மனமும்நற் புத்தியுந்
தானே சிவகதி தன்மையு மாமே.

6.வயிரவி மந்திரம்[தொகு]

1075.
பன்னிரண் டாங்கலை யாதி பயிரவி
தன்னில் அகரரமு மாயையுங் கற்பித்துப்
பன்னிரண் டாதியோ டந்தப் பதினாலுஞ்
சொன்னிலை சோடச மந்தமென் றோதிடே.

1076.
அந்தப் பதினாலும் அதுவே வயிரவி
முந்து நடுவும் முடிவும் முதலாகச்
சிந்தைக் கலசத் தெழுகின்ற மாசத்தி
அந்தமும் ஆதியு மாகிநின் றாளே.

1077.
ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர்
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறம்
போகுந் திரிபுரை புண்ணியத் தோரே.

1078.
புண்ணிய நந்தி புன்தன் திருவாகும்
எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி
பண்ணிய வன்னி பகலோன் மதியீறு
திண்ணிய சிந்தையன் தென்னனு மாமே.

1079.
தென்னன் திருநந்தி சேவகன் தன்னொடும்
பொன்னங் கீரியிற் பூதலம் போற்றிடும்
மன்னும் பரிபிடி யந்தம் பகவனோ(டு)
உன்னுந் திரிபுரை ஓதிநின் றானுக்கே.

1080.
ஓதிய நந்தி உணருந் திருவருள்
நீதியில் வேத நெறிவந் துரைசெய்யும்
போதம் இருபத் தெழுநாள் புணர்மதி
சோதி வயிரவி சூலம்வந் தாளுமே.

1081.
சூலங் கபாலங்கை ஏந்திய சூலிக்கு
நாலாங் கரமுள நாகபா சாங்குச
மாலங் கயனறி யாத வடிவுக்கு
மேலங்க மாய்நின்ற மெல்லிய லாறே.

1082.
மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி
சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை
கல்லியல் ஒப்பது காணுந் திருமேனி
பல்லிய லாடையும் பன்மணி தானே.

1083.
பன்மணி சந்திர கோடி திருமுடி
சொன்மணி குண்டலக் காதி யுழைக்கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.

1084.
பூரித்த பூவிதழ் எட்டினுக் குள்ளேயோர்
அரியத் தாளுண்டங் கெண்மர் கன்னியர்
பாரித்த பெண்கள் அறுபத்து நால்வருஞ்
சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே.


1085.
கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை யோகி இறைவி பராசத்தி
அண்டமோ டெண்டிசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்தினுட் பூசனை யாளே.

1086.
பூசனை கந்தம் புனைமலர் மாகோடி
யோசனை பஞ்சத் தொலிவந் துரைசெய்யும்
வாசமி லாத மணிமந் திரயோகம்
தேசந் திகழுந் திரிபுரை காணே.

1087.
காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்
பேணுஞ் சிவனும் பிரமனும் மாயனுங்
காணுந் தலைவிநற் காரணி காணே.

1088.
காரண மந்திரம் ஓதுங் கமலத்துப்
பூரண கும்ப விரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடுவங் குரைசெய்த
ஆரண வேதநூல் அந்தமு மாமே.

1089.
அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி யுரைசெய்யுஞ்
செந்தமி ழாதி தெளிந்து வழிபடு
நந்தி இதனை நவமுரைத் தானே.

1090.
உரைத்த நவசத்தி ஒன்று முடிய
நிரைத்த விராசி நெடுமுறை எண்ணிப்
பிரைச்சதம் எட்டுமுன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமஞ்செய் தானே.

1091.
தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற
வேமத் திருளற வீசும் இளங்கொடி
ஓமப் பெருஞ்சுடர் உள்ளெழு நுண்புகை
மேவித் தமுதொடு மீண்டது காணே.

1092.
காணும் இருதய மந்திர முங்கண்டு
பேணு நமவென்று பேசுந் தலைமேலே வேணு நடுவு மிகநின்ற வாகுதி
பூணு நடுவென்ற வந்தஞ் சிகையே.

1093.
சிகைநின்ற வந்தக் கவசங்கொண் டாதிப்
பகைநின்ற லங்கத்தைப் பாரென்று மாறித்
தொகைநின்ற நேத்திர முத்திரை சூலம்
வகைநின்ற யோனி வருத்தலு மாமே.

1094.
வருத்த மிரண்டுஞ் சிறுவிரன் மாறிப்
பொருத்தி அணிவிரற் சுட்டிப் பிடித்து
நெறித்தொன்ற வைத்து நெடிது நடுவே
பெருத்த விரலிரண் டுள்புக்குப் பேசே.

1095.
பேசிய மந்திரம் இகாரம் பிரித்துரை
கூசமி லாத சகாரத்தை முன்கொண்டு
வாசிப் பிராணன் உபதேச மாகைக்குக்
கூசிய விந்து வுடன்கொண்டு கூவே.

1096.
கூவிய சீவன் பிராணன் முதலாகப்
பாவிய சவ்வுடன் பண்ணும் யகாரத்தை
மேவிய மாயை விரிசங்கு முத்திரை
தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.

1097.
நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடுஞ் சாற்றியே.

1098.
சாற்றிய வேதஞ் சராசரம் ஐம்பூதம்
நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி
தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை
ஆற்றலொ டாய்நிற்கும் ஆதி முதல்வியே.

1099.
ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி
ஓதி யுணரில் உடலுயிர் ஈசனாம்
பேதை உலகிற் பிறவிகள் நாசமாம்
ஓத வுலவாத கோலமொன் றாகுமே.

1100.
கோலக் குழலி குலாய புருவத்தள்
நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன்னமு தானந்த சுந்தரி
மேவிச் சிவத்தை வெளிப்படுத் தாளே.

1101.
வெளிப்படு வித்து விளைவறி வித்துத்
தெளிப்படு வித்தென் சிந்தையி னுள்ளே
களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதியை
ஒளிப்படு வித்தென்னை உய்யக்கொண் டாளே.

1102.
கொண்டனள் கோலங் கோடி அநேகங்கள்
கண்டனள் எண்ணெண் கலையின்கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையுந்
தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே.

1103.
தையல்நல் லாளைத் தலத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவமினி மேவகி லாவே.

1104.
வேயன தோளி விரையுறு மென்மலர்
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை
தூய சடைமுடிச் சூலினி சுந்தரி
ஏயென துள்ளத் தினிதிருந் தாளே.

1105.
இனியதென் மூலை இருக்குங் குமரி
தனியொரு நாயகி தானே தலைவி
தனிப்படு வித்தனள் சார்வு படுத்து
நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே.

1106.
நாடிய கண்மூன்று நடுவெழு ஞானத்துக்
கூடி இருந்த குமரி குலக்கன்னி
ஆடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலி
ஊடக மேவி உறங்குகின் றாளே.

1107.
உறங்கு மளவின் மனோன்மணி வந்து
கறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்
பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்
டுறங்கலை யாவென் றுபாயஞ்செய் தாளே.

1108.
உபாயம் அளிக்கும் ஒருத்தியென் உள்ளத்
தபாயம் அறக்கெடுத் தன்பு விளைத்துச்
சுவாவை விளக்குஞ் சுழியகத் துள்ளே
அவாவை அடக்கிவைத் தஞ்சலென் றாளே.

1109.
அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க்
கிஞ்சொல் அளிக்கம் இறைவியென் றாரே.

1110.
ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை
காரியல் கோதையள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடுங்
கோரியென் உள்ளங் குலாவிநின் றாளே.

1111.
குலாவிய கோலக் குமரியென் னுள்ளம்
நிலாவி இருந்து நெடுநாள் அணைந்தும்
உலாவி யிருந்துணர்ந் துச்சியி னுள்ளே
கலாவி யிருந்த கலைத்தலை யாளே.

1112.
கலைத்தலை நெற்றியோர் கண்ணுடைக் கண்ணுள்
முலைத்தலை மங்கை முயங்கி இருக்குஞ்
சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி
அலைத்தபூங் கொம்பினள் அங்கிருந் தாளே.

1113.
இருந்தனள் ஏந்திழை என்னுள்ள மேவிப்
பொருந்திரு நால்விரல் புக்கனள் புல்கித்
திருந்திய தானுவிற் சேர்ந்துடன் ஒன்றி
அருந்தவ மெய்தினள் ஆதியி னாளே.

1114.
ஆதி யனாதி யகாரண காரணி
சோதிய சோதி சுகபர சுந்தரி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதியென் னுள்ளத் துடனியைந் தாளே.

1115.
இயைந்தனள் ஏந்திழை என்னுள்ள மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
அயன்தனை யோரும் பதமது பற்றும்
பெயர்ந்தனள் மற்றும் பிதற்றறுத் தாளே.

1116.
பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முத்தி அருளும் முதல்வி
கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய்
முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே.

1117.
உள்ளத் திதயத்து நெஞ்சத் தொருமுன்றுள்
பிள்ளைத் தடமுளே பேசப் பிறந்தது
வள்ளற் றிருவனை வயிற்றினுள் மாமாயைக்
கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே.

1118.
கன்னியுங் கன்னி அழிந்திலள் காதலி
துன்னியங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகைவரும் அங்குள
என்னேஇம் மாயை இருளது தானே.

1119.
இருளது சத்தி வெளியதெம் அண்ணல்
பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருளது சிந்தையைத் தெய்வமென் றெண்ணி
அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே.

1120.
ஆதி அனாதியும் ஆய பராசத்தி
பாதி பராபரை மேலுறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதுமென் னுள்ளத் துடன்முகிழ்ந் தாளே.

1121.
ஓதிய வெண்ணெண் கலையின் உயர்கலை
ஆதியில் வேதமே யாமென் றறிகிலர்
சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பள்
ஆதியென் றோதினள் ஆவின் கிழத்தியே.

1122.
ஆவின் கிழத்திநல் லாவடு தண்டுறை
நாவின் கிழத்தி நலம்புகழ்ந் தேத்திடும்
தேவின் கிழத்தி திருவாஞ் சிவமங்கை
மேவுங் கிழத்தி வினைகடிந் தாளே.

1123.
வினைகடிந் தாருள்ளத் துள்ளொளி
மேவித் தனையடைந் தோர்க்கெல்லாந் தத்துவ மாய்நிற்பள்
எனையடி மைகொண்ட ஏந்திழை ஈசன்
கணவனைக் காண அனாதியு மாமே.

1124.
ஆதி அனாதி அகாரண காரணி
வேதம தாய்ந்தனள் வேதியர்க் காய்நின்ற
சோதி தனிச்சுடர் சொரூப மாய்நிற்கும்
பாதி பராபரை பன்னிரண் டாதியே.

7.பூரணசத்தி[தொகு]

1125.
அளந்தேன் அகலிடத் தந்தமும் ஈறும்
அளந்தேன் அகலிடத் தாதிப் பிரானை
அளந்தேன் அகலிடத் தாணொடு பெண்ணும்
அளந்தேன் அவளருள் ஆய்ந்துணர்ந் தேனே.

1126.
உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே.

1127.
கும்பக் களிறைந்துங் கோலொடு பாகனும்
வம்பில் திகழும் மணிமுடி யண்ணலும்
இன்பக் கல்வி இனிதுறை தையலும்
அன்பிற் கலவியு ளாயொழிந் தாரே.

1128.
இன்பக் கலவியில் இட்டெழு கின்றதோர்
அன்பிற் புகவல்ல னாம்எங்கள் அப்பனும்
துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள்
என்பிற் பராசத்தி என்னம்மை தானே.

1129.
என்னம்மை என்னப்பன் என்னுஞ் செருக்கற்று
உன்னம்மை ஊழித் தலைவனும் அங்குளன்
மன்னம்மை யாகி மருவி யுரைசெய்யும்
பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே.

1130.
தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன்
பார்மேல் இருப்ப தொறுநூறு தானுள
பூமேல் உறைகின்ற போதகம் வந்தனள்
நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே.

1131.
ஆணைய மாய்வருந் தாது ளிருந்தவர்
மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின்
பாணைய மாய பரத்தை அறிந்தபின்
தாணைய மாய தனாதனன் தானே.

1132.
தானே எழுந்தஇத் தத்துவ நாயகி
வானோர் எழுந்து மதியை விளக்கினள்
தேனோர் எழுகின்ற தீபத் தொளியுடன்
மானே நடமுடை மன்றறி யீரே.

1133.
அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத்
தறிவான மங்கை அருளது சேரிற்
பிறியா அறிவறி வாருள்ளம் பேனும்
நெறியாய சித்த நினைந்திருந் தாளே.

1134.
இரவும் பகலும் இலாத விடத்தே
குரவஞ்செய் கின்ற குழவியை நாடி
அரவஞ்செய் யாமல் அருளுடன் தூங்கப்
பருவஞ்செய் யாததோர் பாலனு மாமே.

1135.
பாலனு மாகும் பராசத்தி தன்னொடு
மேலணு காவிந்து நாதங்கள் விட்டிட
மூலம தாமெனும் முத்திக்கு நேர்படச்
சாலவு மாய்நின்ற தற்பரத் தாளே.

1136.
நின்ற பராசத்தி நீள்பரன் தன்னொடு
நின்றறி ஞானமும் இச்சையு மாய்நிற்கும்
நின்றறி யுங்கிரி யாசத்தி நண்ணவே
மன்றன வற்றுள் மருவிடுந் தானே.

1137.
மருவொத்த மங்கையுந் தானும் உடனே
உருவொத்து நின்றமை ஒன்றும் உணரார்
கருவொத்து நின்று கலக்கின்ற போது
திருவொத்த சிந்தைவைத் தெந்தைநின் றானே.

1138.
சிந்தையி னுள்ளே திரியுஞ் சிவசத்தி
விந்துவும் நாதமு மாயே விரிந்தனள்
சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தமொ டாதிய தாம்வண்ணத் தாளே.

1139.
ஆறி யிருந்த அமுத பயோதரி
மாறி யிருந்த வழியறி வாரில்லை
தேறி யிருந்துநல் தீபத் தொளியுடன்
ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே.

1140.
உடையவன் அங்கி உருத்திர சோதி
விடையவன் ஏறி விளங்கி யிருக்குங்
கடையவர் போயிடுங் கண்டவர் நெஞ்சத்
தடையது வாகிய சாதகர் தாமே.

1141.
தாமேல் உறைவிடம் ஆறித ழானது
பார்மேல் இதழ்பதி னெட்டிரு நூறுள
பூமேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள்
பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே.

1142.
பைந்தொடி யாளும் பரம னிருந்திடத்
திண்கொடி யாகத் திகழ்தரு சோதியாம்
விண்கொடி யாகி விளங்கி வருதலாற்
பெண்கொடி யாக நடந்த துலகே.

1143.
நடந்தது வம்மலர் நாலுடன் அஞ்சாய்
இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப்
படர்ந்தது தன்வழிப் பங்கயத் துள்ளே
தொடர்ந்தது உள்வழி சோதி யடுத்தே.

1144.
அடுக்குந் தாமரை ஆதி இருப்பிடம்
எடுக்குந் தாமரை இலக்கத் துள்ளது
மடுக்குந் தாமரை மத்தகத் தேசெல
முடுக்குந் தாமரை முச்சது ரத்தே.

1145.
முச்சது ரத்தே எழுந்த முளைச்சுடர்
எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக்
கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற
எச்சது முத்தும் இருந்தனள் தானே.

1146.
இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்ப்
பரந்தன வாயு திசை தோறுங்
குவிந்தன முத்தின் முகவொளி நோக்கின்
நடந்தது தேறல் அதோமுகம் அம்பே.

1147.
அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மணி
கொம்பன்ன நுண்ணிடைக் கோதை குலாவிய
செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும்
நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.

1148.
நவிலும் பெருந்தெய்வம் நான்மறைச் சத்தி
துகிலுழை யாடை நிலம்பொதி பாதம்
அகிலமும் அண்ட முழுதுஞ்செம் மாந்து
புகலுமுச் சோதி புனையநிற் பாளே.

1149.
புனையவல் லாள்புவ னத்திறை எங்கள்
வனையவல் லாள்அண்ட கோடிகள் உள்ளே
புனையவல் லாள்மண்ட லத்தொளி தன்னைப்
புனையவல் லாளையும் போற்றி யென்பேனே.

1150.
போற்றியென் பேன்புவ னாபதி அம்மையென்
ஆற்றலுள் நிற்கும அருந்தவப் பெண்பிள்ளை
சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை
கூற்றந் துரக்கின்ற கோள்பைந் தொடியே.

1151.
தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி
வடிவார் திரிபுரை யாமங்கை கங்கைச்
செடியார் வினைகெடச் சேர்வரை என்றென்
றடியார் வினைகெடுத் தாதியு மாமே.

1152.
மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி
பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி
புல்லிசைப் பாவையைப் போகத் துரந்திட்டு
வல்லிசைப் பாவை மனம்புகுந் தாளே.

1153.
தாவித் தவப்பொருள் தானவன் எம்மிறை
பாவித் துலகம் படைக்கின்ற காலத்து
மேவிப் பராசத்தி மேலொடு கீழ்தொடர்ந்
தாவிக்கு மப்பொருள் தானது தானே.

1154.
அதுவிது என்பார் அவனை அறியார்
கதிவர நின்றதோர் காரணங் காணார்
மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை
திதமது உன்னார்கள் தேர்ந்தறி யாரே.

8.ஆதார ஆதேயம்[தொகு]

1155.
நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு
தானித ழானவை நாற்பத்து நாலுள
பாலித ழானவள் பங்கய மூலமாய்த்
தானித ழாகித் தரித்திருந் தாளே.

1156.
தரித்திருந் தாளவள் தன்னொளி நோக்கி
விரித்திருந் தாளவள் வேதப் பொருளைக்
குறித்திருந் தாளவள் கூறிய ஐந்து
மறித்திருந் தாளவள் மாதுநல் லாளே.

1157.
மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்
பாதிநல் லாளும் பகவனு மானது
சோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல்
வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.

1158.
வெள்ளடை யானிரு மாமிகு மாமலர்க்
கள்ளடை யாரக் கமழ்குழ லார்மனம்
அள்ளடை யானாம் வகைத்திற மாய்நின்ற
பெண்ணொரு பாகம் பிறவிபெண் ணாமே.

1159.
பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதமை
பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண்ணிடை ஆணென் பிறப்பறிந் தீர்க்கின்ற
பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே.

1160.
பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை
மாச்சற்ற சோதி மனோன்மணி மங்கையாங்
காச்சற்ற சோதி கடவு ளுடன்புணர்ந்
தாச்சென்ற னுட்புகுந் தாலிக்குந் தானே.

1161.
ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மணி
பாலித் துலகிற் பரந்துபெண் ணாகும்
வேலைத் தலைவியை வேத முதல்வியைப்
பாலித் தொருவன் உகந்துநின் றானே.

1162.
உகந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோ
டுகந்துநின் றான்நம் முழைபுக நோக்கி
உகந்துநின் றான்இவ் உலகங்கள் எல்லாம்
உகந்துநின் றான்அவடன்றோ டொகுத்தே.

1163.
குத்த முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி
புத்தகச் சீறடிப் பாவை யுணர்வினைத்
தொத்த கருத்துச் சொல்லகி லேனே.

1164.
சொல்லவொண் ணாத அழற்பொதி மண்டலஞ்
சொல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள்
வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகி
மல்லவொண் ணாத மனோன்மணி தானே.

1165.
தானே இருநிலந் தாங்கிவிண் ணாய்நிற்குந்
தானே சுடுமங்கி ஞாயிறுந் திங்களுந்
தானே மழைபொழி தையலு மாய்நிற்குந்
தானே வடவரைத் தண்கடற் கண்ணே.

1166.
கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர்
மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணாப்
பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர்
விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே.

1167.
கண்டெண் டிசையுங் கலந்து வருங்கன்னி
பண்டெண் டிசையும் பராசத்தி யாய்நிற்கும்
விண்டெண் டிசையும் விரைமலர் கைக்கொண்டு
தொண்டெண் டிசையுந் தொழநின்ற கன்னியே.

1168.
கன்னி ஒளியென நின்றவிச் சந்திரன்
மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறஞ்
சேர்பதின சென்னி யிருப்பிடஞ் சேர்பதி னாறுடன்
பன்னி யிருப்பப் பராசத்தி யாமே. னாறுடன் சத்தி யாமே.

1169.
பராசத்தி யென்றென்றும் பல்வகை யாலுந்
தராசத்தி யான தலைப்பிர மாணி
இராசத்தி யாமள வாகமத் தாளாகுங்
குராசத்தி கோலம் பலவுணர்ந் தேனே.

1170.
உணர்ந்துல கேழையும் யோகினி சத்தி
உணர்ந்துயி ராநிற்கு முன்னதன் ஈசன்
புணர்ந்தொரு காலத்துப் போகம தாகி
இணைந்து பரமென் றிசைந்தது தானே.

1171.
இதுவப் பெருந்தகை எம்பெரு மானும்
பொதுவக் கலவியும் போகமு மாகி
மதுவக் குழலி மனோன்மணி மங்கை
அதுவக் கலவியுள் ஆயுழி யோகமே.

1172.
யோகநற் சத்தி ஒளிபீடந் தானாகும்
யோகநற் சத்தி ஒளிமுகந் தெற்காகும்
யோகநற் சத்தி உதர நடுவாகும்
யோகநற் சத்திதாள் உத்தரந் தேரே.

1173
.தேர்ந்தெழு மேலாஞ் சிவனங்கி யோடுற
வார்ந்தெழு மாயையு மந்தம தாய்நிற்கும்
ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிடக்
கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே.

1174.
தானான வாறெட்ட தாம்பரைக் குண்மிசை
தானான வாறுமீ ரேமுஞ் சமைகலை
தானான விந்து சகமே பரமெனுந்
தானாம் பரவா தனையெனத் தக்கதே.

1175.
தக்க பராவித்தை தானிரு பானேழிற்
றக்கெழு மோருத் திரஞ்சொல்லச் சொல்லவே
மிக்கிடும் எண்சத்தி வெண்ணிற முக்கண்ணி
தொக்க கதையோடு தொன்முத்திரை யாளே.

1176.
முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தால்
அத்துவ மாயல்ல வாய சகலத்தள்
வைத்த பராபர னாய பராபரை
சத்தியு மானந்த சத்தியுங் கொங்கே.

1177.
கொங்கீன்ற கொம்பின் குரும்பைக் குலாங்கன்னி
பொங்கிய குங்குமத் தொளிபொ ருந்தினள்
அங்குச பாச மெனுமகி லங்கனி
தங்கு மவள்மனை தானறி வாயே.

1178.
வாயு மனமுங் கடந்த மனோன்மணி
பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவுங் கடந்த அரனுக்குத்
தாயும் மகளுநல் தாரமு மாமே.

1179.
தாரமு மாகுவள் தத்துவ மாய்நிற்பள்
காரண காரிய மாகுங் கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பாரள வாந்திசை பத்துடை யாளே.

1180.
பத்து முகமுடை யாள்நம் பராசத்தி
வைத்தனள் ஆறங்க நாலுடன் றான்வேதம்
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே
நித்தமாய் நின்றாளெம் நேரிழை கூரே.

1181.
கூரிய கண்ணி குலாய புருவத்தள்
சீரிய ளாயுல கேழுந் திகழ்ந்தவள்
ஆரிய நங்கை யமுத பயோதரி
பேருயி ராளி பிறிவறுத் தாளே.

1182.
பிறிவின்றி நின்ற பெருந்தகை பேதை
குறியொன்றி நின்றிடுங் கோமளக் கொம்பு
பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே
அறிவொன்ற நின்றனள் ஆருயி ருள்ளே.

1183.
உள்ளத்தி னுள்ளே யுடனிருந் தைவர்தங்
கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளற் றலைவி மருட்டிப் புரிந்தே.

1184.
புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார்
பொருந்தி யிருந்த புதல்விபூ வண்ணத்
திருந்த விலக்கில் இனிதிருந் தாளே.

1185.
இருந்தனள் ஏந்திழை என்னுள மேவித்
திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந் துன்னி
நிரந்தர மாகிய நிரதி சயமொடு
பொருந்த விலக்கிற் புணர்ச்சி அதுவே.

1186.
அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதிபல ராள்சொன்ன மண்டல மூன்றே.

1187.
மூன்றுள மண்டல மோகினி சேர்விடம்
ஏன்றுள ஈரா றெழுகலை உச்சியில்
தோன்று மிலக்குற வாகுதல் மாமாயை
ஏன்றனள் ஏழிரண் டிந்துவொ டீறே.

1188.
இந்துவி னின்றெழு நாதம் இரவிபோல்
வந்துபின் நாக்கின் மதித்தெழுங் கண்டத்தில்
உந்திய சோதி இதயத் தெழும்ஒலி
இந்துவின் மேலுற்ற ஈறது தானே.

1189.
ஈறது தான்முதல் எண்ணிரண் டாயிர
மாறுதல் இன்றி மனோவச மாயெழில்
தூறது செய்யுஞ் சுகந்தச் சுழியது
பேறது செய்து பிறந்திருந் தாளே.

1190.
இருந்தனள் ஏந்திழை ஈறதி லாகத்
திருந்திய ஆனந்தஞ் செந்நெறி நண்ணிப்
பொருந்து புவனங்கள் போற்றிசெய் தேத்தி
வருந்த இருந்தனள் மங்கைநல் லரளே.

1191.
மங்கையும் மாரனுந் தம்மொடு கூடிநின்
றங்குலி கூடி அகம்புறம் பார்த்தனர்
கொங்கைநல் லாளுங் குமரரர்கள் ஐவரும்
தங்களின் மேவிச் சடங்குசெய் தாரே.

1192.
சடங்கது செய்து தவம்புரி வார்கள்
கடந்தனி னுள்ளே கருதுவ ராகில்
தொடர்ந்தெழு சோதி துணைவழி ஏறி
அடங்கிடும் அன்பின தாயிழை பாலே.

1193.
பாலித் திருக்கும் பனிமல ராறினும்
ஆலித் திருக்கும் அவற்றின் அகம்படி
சீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திர
மூலத்து மேலது முத்தது வாமே.

1194.
முத்து வதனத்தி முகந்தொறு முக்கண்ணி
சத்தி சதிரி சகளி சடாதரி
பத்துக் காத்தி பராபரன் பைந்தொடி
வித்தகி என்னுள்ள மேவிநின் றாளே.

1195.
மேவிய மண்டலம் மூன்றுடன் கீழெரி
தாவிய நற்பதத் தண்மதி யங்கதிர்
மூவருங் கூடி முதல்வியா முன்னிற்பார்
ஓவினு மேவிடும் உள்ளொளி யாமே.

1196.
உள்ளொளி மூவிரண் டோங்கிய அங்கங்கள்
வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடுங்
கள்ளவிழ் கோனைக் கலந்துட னேநிற்குங்
கொள்ள விசுத்திக் கொடியமு தாமே.

1197.
கொடிய திரேகை குருவுள் இருப்பப்
படியது வாருணைப் பைங்கழ லீசன்
வடிவது வானந்தம் வந்து முறையே
இடுமுதல் ஆறங்கம் ஏந்திழை யாளே.

1198.
ஏந்திழை யாளும் இறைவர்கள் மூவருங்
காந்தார மாறுங் கலைமுதல் ஈரெட்டும்
ஆந்த குளத்திய மந்திர ராயுவுஞ்
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே.

1199.
சத்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கும் நாயகி என்ப தறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போற் கதறுகின் றாரே.

1200.
ஆரே திருவின் திருவடி காண்பார்கள்
நேரேநின் றோதி நினையவல் லார்க்குக்
காரேய் குழலி கமல மலரன்ன
சீரேயுஞ் சேவடி சிந்தைவைத் தாளே.

1201.
சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து
முந்தையில் வைத்துத்தம் மூலத்தி லேவைத்து
நிந்தையில் வையா நினைவதி லேவைத்துச்
சந்தையில் வைத்துச் சமாதிசெய் வீரே.

1202.
சமாதிசெய் வார்கட்குத் தான்முத லாகிச்
சிவாதியி லாருஞ் சிலைநுத லாளை
நவாதியி லாத நயந்தது ஓதில்
உவாதி அவளுக் குறைவில தாமே.

1203.
உறைபதி தோறும் முறைமுறை மேவி
நறைகமழ் கோதையை நாடொறு நண்ணின்
மறையுட னேநிற்கு மற்றுள்ள நான்கும்
இறைதினைப் போதினில் எய்திட லாமே.

1204.
எய்திட லாகும் இருவினை யின்பயன்
கொய்தளிர் மேனிக் குமரி குலாங்கன்னி
மைதவழ் கண்ணிநன் மாரிதுர்க் கையொடு
கைதவம் இன்றிக் கருத்துறும் வாறே.

1205.
கருத்துறுங் காலங் கருது மனமுந்
திருத்தி யிருந்தவை சேரு நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மண்மேல்
இருத்திடு எண்குணம் எய்தலும் ஆமே.

1206.
ஆமையொன் றேறி அகம்படி யானென
ஓம்என் றோதிஎம் உள்ளொளி யாய்நிற்கும்
நாம நறுங்குழல் தையலைக் கண்டபின்
சோம நறுமலர் சூடிநின் றாளே.

1207.
சூடிடும் அங்குச பாசந் துணைவழி
கூடும் இருவளைக் கோலக்கைக் குண்டிகை
நாடும் இருபத நன்னொடு ருத்திரம்
ஆடிடுஞ் சீர்புனை ஆடக மாமே.

1208.
ஆமயன் மாலரன் ஈசன் சதாசிவன்
தாமடி சூடிநின் றெய்தினர் தம்பதங்
காமனுஞ் சாமன் இரவி கனலுடன்
சோமனும் வந்தடி சூடநின் றாளே.

1209.
சூடும் இளம்பிறை சூலி கபாலினி
நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை
நாடும் நடுவிடை ஞான முருவநின்
றாடு மதன்வழி அண்ட முதல்வியே.

1210.
அண்ட முதலாய் அவனி பரியந்தங்
கண்டதொன் றில்லைக் கனங்குழை யல்லது
கண்டனுங் கண்டியு மாகிய காரணங்
குண்டிகை கோளிகை கண்டத னாலே.

1211.
ஆலமுண் டானமு தாங்கவர் தம்பதஞ்
சாலவந் தெய்துதந் தவத்தின்பந் தான்வருங்
கோலிவந் தெய்துங் குவிந்த பதவையோ
டேலவந் தீண்டி இருந்தனள் மேலே.

1212.
மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்தெய்தக்
காலால் வருந்திக் கழிவர் கணத்திடை
நாலா நளினநின் றேத்திநட் டுச்சிதன்
மேலா மெழுத்தின ளாமத்தி னாளே.

1213.
ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள்
ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள்
நாம நமசிவ என்றிருப் பார்க்கு
நேமத் துணைவி நிலாவிநின் றாளே.

1214.
நிலாமய மாகிய நீள்படி கத்தின்
சிலாமய மாகுஞ் செழுந்தர ளத்தின்
சுலாமய மாகுஞ் சுரிகுழற் கோதை
கலாமய மாகக் கலந்துநின் றாளே.

1215.
கலந்துநின் றாள்கன்னி காதல னோடுங்
கலந்துநின் றாளுயிர் கற்பனை எல்லாங்
கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாங்
கலந்துநின் றாள்கன்னி காலமு மாயே.

1216.
காலவி எங்குங் கருத்தும் அருத்தியுங்
கூலவி ஒன்றாகுங் கூடல் இழைத்தனள்
மாலினி மாகுலி மந்திர சண்டிகை
பாலினி பாலவன் பாகம தாமே.

1217.
பாகம் பராசத்தி பைம்பொன் சடைமுடி
ஏகம் இருதயம் ஈரைந்து திண்புயம்
மோக முகமைந்து முக்கண் முகந்தொறும்
நாகம் உரித்து நடஞ்செய்யும் நாதர்க்கே.

1218.
நாதனு நாலொன் பதின்மருங் கூடிநின்
றோதிடுங் கூட்டங்கள் ஓரைந் துளஅவை
வேதனும் ஈரொன்ப தின்மரும் மேவிநின்
றாதியும் அந்தமு மாகிநின் றாளே.

1219.
ஆகின்ற நாள்கலை ஐம்பத் தொருவர்கள்
ஆகிநின் றார்களில் ஆருயி ராமவள்
ஆகிநின் றாளுட னாகிய சக்கரத்
தாகிநின் றானவன் ஆயிழை பாடே.

1220.
ஆயிழை யாளொடு மாதிப் பரமிடம்
ஆயதொ ரண்டவை யாறும் இரண்டுள
வாய மனந்தொ ற்றுமுக மவைதனில்
ஏயவார் குழலி இனிதுநின் றாளே.

1221.
நின்றனள் நேரிழை யோடுடல் நேர்பட
இன்றெ னகம்படி ஏழும் உயிர்ப்பெய்தும் கட
துன்றிய வோரொன் பதின்மருஞ் சூழலுள்
ஒன்றுயர் வோதி யுணர்ந்துநின் றாளே.

1222.
உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே
மணந்தெழு மாங்கதி யாகிய தாகுங்
குணர்ந்தெழு சூதனுஞ் சூதியுஞ் வடிக்
கணந்தெழுங் காணுமக் காமுகை யாமே.

1223.
ஆமது வங்கியும் ஆதியும் ஈசனும்
ஆமது மண்டல மாருத மாதியும்
ஏமது சீவன் சிகைபங் கிருண்டிடக்
கோமலர்க் கோதையுங் கோதண்ட மாகுமே

1224.
ஆகிய கோதண்டத் தாகு மனோன்மணி
ஆகிய ஐம்ப துடனே அடங்கிடும்
ஆகும் பராபரை யோடப் பரையவள்
ஆகு மவளைங் கருமத்தள் தானே.

1225.
தானிகழ் மோகினி சார்வான யோகினி
போன மயமுடை யாரடி போற்றுவர்
ஆனவ ராவியி னாகிய வச்சிவந்
தானாம் பரசிவ மேலது தானே.

1226.
தானந்த மேலே தருஞ்சிகை தன்னுடன்
ஆனந்த மோகினி யாம்பொற் றிருவொடு மற்
மோனையில் வைத்து மொழிதரு கூறது
வானவை யோமெனும் அவ்வுயிர் மார்க்கமே.

1227.
மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி மங்கலி
யார்க்கும் அறிய வரியா ளவளாகும்
வாக்கு மனமும் மருவியொன் றாய்விட்ட
நோக்கும் பெருமைக்கு நுண்ணறி வாமே.

1228.
நுண்ணறி வாகும் நுழைபுலன் மாந்தர்க்குப்
பின்னறி வாகும் பிரானறி வத்தடஞ்
சென்னெறி யாகுஞ் சிவகதி சேர்வார்க்குத்
தன்னெறி யாவது சன்மார்க்க மாமே.

1229.
சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமுந்
துன்மார்க்க மானவை எல்லாம் துரந்திடும்
நன்மார்க்கத் தேவரும் நன்னெறி யாவதுஞ்
சன்மார்க்கத் தேவியுஞ் சத்தியென் பாளே.

1230.
சத்தியும் நானுஞ் சயம்புவும் அல்லது
முத்தியை யாரும் முதலறி வாரில்லை
அத்திமேல் வித்திடில் அத்தி பழுத்தக்கால்
மத்தியி லேற வழியது வாமே.

1231.
அதுவிது வென்றவ மேகழி யாதே
மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப்
பதிமது மேவிப் பணியவல் லார்க்கு
விதிவழி தன்னையும் வென்றிட லாமே.

1232.
வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிட லாகும் விழைபுலன் தன்னையும்
வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே.

1233.
ஓரைம் பதின்மருள் ஒன்றியே நின்றது
பாரம் பரியத்து வந்த பரமிது
மாரங் குழலாளும் அப்பதி தானுமுன்
சாரும் பதமிது சத்திய மாமே.

1234.
சத்தியி னோடு சயம்புவும் நேர்படில்
வித்தது வின்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை யாகிய ஐம்பத் தொருவருஞ்
சித்தது மேவித் திருந்திடு வாரே.

1235.
திருந்து சிவனுஞ் சிலைநுத லாளும்
பொருந்திய வானவர் போற்றிசெய் தேத்த
அருந்திட அவ்விடம் ஆரமு தாக
இருந்தனள் தானங் கிளம்பிறை என்றே.

1236.
என்றும் எழுகின்ற வேரினை எய்தினார்
அன்றது வாகுவர் தார்குழ லாளொடு
மன்றரு கங்கை மதியொடு மாதவர்
துன்றிய தாரகை சோதிநின் றாளே.

1237.
நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட
ஒன்றிய வுள்ளொளி யாலே யுணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடு ஞானங்கள் தோன்றிடுந் தானே.

1238.
தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி
ஈன்றிடு மாங்கவள் ஏய்திய பல்கலை
மான்றரு கண்ணியும் மாரனும் வந்தெதிர்
சான்றது வாகுவர் தாமவ ளாயுமே.

1239.
ஆயும் அறிவுங் கடந்தணு வாரணி
மாயம் தாகி மதோமதி யாயிடுஞ்
சேய அரிவை சிவானந்த சுந்தரி
நேயம் தாநெறி யாகிநின் றாளே.

1240.
நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்
பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடுங்
குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும்
அறிவொடு ஆங்கே அடங்கிட லாமே.

1241.
ஆமயன் மாலரன் ஈசன்மா லாங்கதி
ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேமய னாளுந் தெனாதென என்றிடும் மாமய மானது வந்தெய்த லாமே.

1242.
வந்தடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதலாக எண்டிசை யோர்களுங்
கொந்தணி யுங்குழ லாளொடு கோனையும்
வந்தணை செய்யும் வழிநவில் வீரே

1243.
நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபங்
கவற்றிய கந்தங் கவர்ந்தெரி தீபம்
பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை
அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை தானே.

1244.
தாங்கி உலகில் தரித்த பராபரன்
ஓங்கிய காலத் தொருவன் உலப்பிலி
பூங்கிளி தங்கும் புரிகுழ லாளன்று
பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.

1245.
பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவர்
அற்கொடி மாதுமை யார்வத் தலைமகள்
நற்கொடி மாதை நயனங்கள் மூன்றுடை
விற்கொடி மாதை விரும்பி விளங்கே.

1246.
விளங்கொளி யாய விரிசுடர் மாலை
துளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கக்
களங்கொள் மணியுடன் காம வினோதம்
உளங்கொ ளிலம்பியம் ஒன்று தொடரே.

1247.
தொடங்கி உலகினிற் சோதி மணாளன்
அடங்கி இருப்பதென் அன்பின் பெருமை
விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை
ஓரக்கி யுமையொடும் ஓருரு வாமே.

1248.
உருவம் பலவுயி ராய்வல்ல நந்தி
தெருவம் புகுந்தமை தேர்வுற நாடிற்
புரிவளைக் கைச்சியெம் பொன்னணி மாதை
மருவி இறைவன் மகிழ்வன மாயமே.

1249.
மாயம் புணர்க்கும் வளர்சடை யானடி
தாயம் புணர்க்குஞ் சலநதி அமலனைக்
காயம் புணர்க்குங் கலவியுள் மாசத்தி
ஆயம் யுணர்க்குமவ் வியோனியு மாமே.

1250.
உணர்ந்தொழிந் தேனவ னாமெங்கள் ஈசனைப்
புணர்ந்தொழிந் தேன்புவ னாபதி யாரை
அணைந்தொழிந் தேனெங்கள் ஆதிதன் பாதம்
பிணைந்தொழிந் தேன்றன் அருள்பெற்ற வாறே.

1251.
பெற்றாள் பெருமை பெரிய மனோன்மணி
நற்றாள் இறைவனே நற்பயன் என்பர்
கற்றான் அறியுங் கருத்தறி வார்கட்குப்
பொற்றாள் உலகம் புகல்தனி யாமே.

1252.
தனிநா யகன்றனோ டென்னெஞ்சம் நாடி
இனியார் இருப்பிடம் ஏழுல கென்பர்
பனியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக்
கனியாய் நினைவதென் காரணம் அம்மையே.

1253.
அம்மனை அம்மை அரிவை மனோன்மணி
செம்மனை செய்து திருமங்கை யாய்நிற்கும்
இம்மனை செய்த இருநில மங்கையும்
அம்மனை யாகி அமர்ந்து நின்றாளே.

1254.
அம்மையும் அத்தனும் அன்புற்ற தல்லது
அம்மையும் அத்தனு மாரறி வாரென்னை
அம்மையொ டத்தனும் யானும் உடனிருந்
தம்மையொ டத்தனை யான்புரிந் தேனே.

9.ஏரோளிச் சக்கரம்[தொகு]

1255.
ஏரொளி யுள்ளெழு தாமரை நாலிதழ்
ஏரொளி விந்துவி னாலெழு நாதமாம்
ஏரொளி யக்கலை எங்கும் நிறைந்தபின்
ஏரொளிச் சக்கர மந்நடு வன்னியே.

1256.
வன்னி யெழுத்தவை மாபலம் உள்ளன
வன்னி யெழுத்தவை வானுற ஓங்கின
வன்னி யெழுத்தவை மாபெருஞ் சக்கரம்
வன்னி யெழுத்திடு வாறது சொல்லுமே.

1257.
சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாஞ்
சொல்லிடு மப்பதி யவ்வெழுத் தாவன
சொல்லிடு நூறொடு நாற்பத்து நாலுரு
சொல்லிடு சக்கர மாய்வரு மேலதே.

1258.
மேல்வரும் விந்துவு மவ்வெழுத் தாய்விடும்
மேல்வரு நாதமும் ஓங்கும் எழுத்துடன்
மேல்வரு மப்பதி யவ்வெழுத் தேவரின்
மேல்வரு சக்கர மாய்வரு ஞாலமே.


1259.
ஞாலம் தாக விரிந்தது சக்கரம்
ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம தாயிடு மப்பதி யோசனை
ஞாலம தாக விரிந்த தெழுத்தே.

1260.
விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும்
விரிந்த எழுத்தது சக்கர மாக
விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி
விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே.

1261.
அப்பது வாக விரிந்தது சக்கரம்
அப்பினில் அப்புறம் அவ்வன லாயிடும்
அப்பினில் அப்புறம் மாருத மாயெழ
அப்பினில் அப்புறம் ஆகாச மாமே.

1262.
ஆகாச அக்கர மாவது சொல்லிடில்
ஆகாச அக்கரத் துள்ளே எழுத்தவை
ஆகாச அவ்வெழுத் தாகிச் சிவானந்தம்
ஆகாச அக்கர மாவ தறிமினே.

1263.
அறிந்திடுஞ் சக்கரம் ஐயஞ்சு விந்து
அறிந்திடுஞ் சக்கர நாத முதலா
அறிந்திடும் அவ்வெழுத் தப்பதி யோர்க்கும்
அறிந்திடும் அப்பக லோனிலை யாமே.

1264.
அம்முதல் ஆறுமவ் வாதி எழுத்தாகும்
அம்முதல் ஆறுமவ் வம்மை எழுத்தாகும்
அம்முதல் நாலும் இருநடு வன்னியே
இம்முத லாகும் எழுத்தவை எல்லாம்.

1265.
எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்
எழுத்தவை யாறது வந்நடு வன்னி
எழுத்தவை யந்நடு வச்சுட ராகி
எழுத்தவை தான்முதல் அந்தமு மாமே.

1266.
அந்தமும் ஈறு முதலா னவையற
அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால்
அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின்
அந்தமும் இந்துகை யாருட மானதே.


1267.
ஆவின மானவை முந்நூற் றறுபது
மாவின மப்பதி னைந்தின மாயுறு
மாவின மப்பதி னெட்டுட னாயுரு
மாவின மக்கதி ரோன்வர வந்ததே.

1268.
வந்திடும் ஆகாசம் ஆறது நாழிகை
வந்திடும் அக்கரம் முப்பதி ராசியும்
வந்திடு நாளது முந்நூற் றறுபதும்
வந்திடு ஆண்டு வகுத்துரை யவ்வியே.

1269.
அவ்வின மூன்றுமவ் வாடது வாய்வரும்
செவ்வின மூன்றுங் கிளர்தரு வேரதாம்
எவ்வின மூன்றுந் தழைத்திடுந் தண்டதாம்
இவ்வின மூன்றும் இராசிக ளெல்லாம்.

1270.
இராசியுட் சக்கரம் எங்கும் நிறைந்தபின்
இராசியுட் சக்கர மென்றறி விந்துவாம்
இராசியுட் சக்கர நாதமும் ஒத்தபின்
இராசியுட் சக்கரம் நின்றிடு மாறே.

1271.
நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெலாம்
நின்றிடு நாதம் ஓங்கும் எழுத்துடன்
நின்றிடு மப்பதி யவ்வெழுத் தேவரில்
நின்றிடு மப்புறந் தாரகை யானதே.

1272.
தாரகை யாகச் சமைந்தது சக்கரந்
தாரகை மேலோர் தழைத்தது பேரொளி
தாரகை சந்திரன் நற்பக லோன்வரத்
தாரகை தாரகை தாரகை கண்டதே.

1273.
கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம்
கண்டிடு நாதமுந் தன்மேல் எழுந்திடக்
கண்டிடு வன்னிக் கொழுத்தன வொத்தபின்
கண்டிடு மப்புறங் காரொளி யானதே.

1274.
காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும்
பாரொளி நீரொளி சாரொளி காலொளி
வானொளி ஒக்க வளர்ந்து கிடந்தபின்
நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே.

1275.
நின்றது அண்டமும் நீளும் புவியெலாம்
நின்றவிவ் வண்டம் நிலைபெறக் கண்டிட
நின்றவிவ் வண்டமு மூல மலமொக்கும்
நின்றவிவ் வண்டம் பலமது விந்துவே.

1276.
விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில்
விந்துவும் நாதமும் ஒக்க விரையதாம்
விந்திற் குறைந்திடு நாதம் எழுந்திடில்
விந்துவை எண்மடி கொண்டது வீசமே.

1277.
வீசம் இரண்டுள நாதத் தெழுவன
வீசமும் ஒன்று விரைந்திடு மேலுற
வீசமும் நாதமும் எழுந்துடன் ஒத்தபின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே.

1278.
விரிந்தது விந்துவுங் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத் தளவினில்
விரிந்தது வட்கட்ட எட்டெட்டு மாகில்
விரிந்தது விந்து விரையது வாமே.

1279.
விரையது விந்து விளைந்தன எல்லாம்
விரையது விந்து விளைந்த உயிரும்
விரையது விந்து விளைந்தவிஞ் ஞானம்
விரையது விந்து விளைந்தவன் தாளே.

1280.
விளைந்த எழுத்தது விந்துவும் நாதமும்
விளைந்த எழுத்தது சக்கர மாக
விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும்
விளைந்த எழுத்தவை மந்திர மாமே.

1281.
மந்திரஞ் சக்கர மானவை சொல்லிடில்
தந்திரத் துள்ளெழு தோன்றெறி வட்டமாங்
கந்திரத் துள்ளுமி ரேகையில் ஒன்றில்லை
பந்தம தாகும் பிரணவம் உன்னிடே.

1282.
உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை
தன்னிட் டெழுந்த தகைப்பறப் பின்னிற்கப்
பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே.

1283.
பார்க்கலு மாகும் பகையறு சக்கரங்
காக்கலு மாகுங் கருத்தில் தடமெங்கும்
நோக்கலு மாகும் நுணுக்கற்ற நுண்பொருள்
ஆக்கலு மாகும் அறிந்துகொள் வார்க்கே.

1284.
அறிந்திடுஞ் சக்கர மாதி யெழுத்து
விரிந்திடுஞ் சக்கர மேலெழுத் தம்மை
பரிந்திடுஞ் சக்கரம் பாரங்கி நாலும்
குவிந்திடுஞ் சக்கரங் கூறலு மாமே.

1285.
கூறிய சக்கரத் துள்ளெழு மந்திரம்
மாறியல் பாக அமைந்து விரிந்திடுந்
தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரண
மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே.

1286.
மதித்திடும் அம்மையும் மாமாது மாகும்
மதித்திடும் அம்மையு மங்கனல் ஒக்கும்
மதித்தங் கெழுந்தவை காரண மாகில்
கொதித்தங் கெழுந்தவை கூடகி லாவே.

1287.
கூடிய தம்பனம் மாரணம் வசியம்
மாடியல் பாக அமைந்து செறிந்திடும்
பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்
தேடியுள் ளாகத் தெளிந்துகொள் வார்க்கே.

1288.
தெளிந்திடுஞ் சக்கர மூலத்தி னுள்ளே
அளிந்த வகாரத்தை யந்நடு வாக்கிக்
குளிந்த வரவினைக் கூடியுள் வைத்து
வளிந்தவை யங்கெழு நாடிய காலே.

1289.
காலரை முக்கால் முழுதெனும் மந்திரம்
ஆலித் தெழுந்தமைந் தூறி எழுந்ததாய்ப்
பாலித் தெழுந்து பகையற நின்றபின்
மாற்ற மந்திர மாறிக்கொள் வார்க்கே.

1290.
கொண்டவிம் மந்திரங் கூத்தன் எழுத்ததாய்ப்
பண்டையுள் நாவிற் பகையற விண்டபின்
மன்றுள் நிறைந்த மணிவிளக் காயிடும்
இன்றும் இதயத் தெழுந்து நமவெனே.

10.வயிரவச் சக்கரம்[தொகு]

1291.
அறிந்த பிரதமையோ டாறு மறிஞ்சு
அறிந்தவச் சத்தமி மேலிவை குற்றம்
அறிந்தவை யொன்றுவிட் டொன்றுபத் தாக
அறிந்த வலமது வாக நடவே.

1292.
நடந்த வயிரவன் சூல கபாலி
கடந்து பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த வயிரது வண்ணும் பொழுது
படர்ந்த உடல்கொடு பந்தாட லாமே.

1293.
ஆமேவப் பூண்டரு ளாதி வயிரவன்
ஆமே கபாலமுஞ் சூலமுங் கைக்கொண்டங்
காமே தமருக பாசமுங் கையது
வாமே சிரத்தொடு வாளது கையே.

1294.
கையது வாறுங் கருத்துற நோக்கிடு
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்யரு ளத்தில் துளங்குமெய் யுற்றதாய்ப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.

1295.
பூசனை செய்யப் பொருந்தியோ ராயிரம்
பூசனை செய்ய மதுவுட னாடுமால்
பூசனை சாந்து சவாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.

1296.
வேண்டிய வாறு கலகமு மாயிடும்
வேண்டிய வாறினுண் மெய்யது பெற்றபின்
வேண்டிய வாறு வரும்வழி நீநட
வேண்டிய வாறது வாகுங் கருத்தே.

11.சாம்பவி மண்டல சக்கரம்[தொகு]

1297.
சாம்பவி மண்டலச் சக்கரஞ் சொல்லிடில்
ஆம்பதம் எட்டாக விட்டிடின் மேலதாம்
காண்பதந் தத்துவ நாலுள் நயனமும்
நாம்பதங் கண்டபின் நாடறிந் தோமே.

1298.
நாடறி மண்டலம் நல்லவிக் குண்டத்துக்
கோடற வீதியுங் கொணர்ந்துள் இரண்டழி
பாடறி பத்துடன் ஆறு நடுவீதி
ஏடற நாலைந் திடவகை யாமே.

1299.
நாலைந் திடவகை யுள்ளதோர் மண்டலம்
நாலுநல் வீதியுள் நல்ல இலிங்கமாய்
நாலுநற் கோணமும் நந்நாலி லிங்கமாய்
நாலுநற் பூநடு நண்ணலவ் வாறே.

1300.
ஆறிரு பத்துநா லஞ்செழுத் தஞ்சையும்
வேறுரு வாக விளைந்து கிடந்தது
தேறு நிருமல சிவாய நமமென்று
கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே.


1301.
குறைவதும் இல்லை குரைகழற் கூடும்
அறைவது மாரண மவ்வெழுத் தாகித்
திறமது வாகத் தெளியவல் லார்க்கு
இறவில்லை என்றென் றியம்பினர் காணே.

1302.
காணும் பொருளும் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமுந் தானாகக்
காணும் கனகமும் காரிகை யாமே.

1303.
ஆமே எழுத்தஞ்சு மாம்வழி யேயாகப்
போமே யதுதானும் போம்வழி யேபோனால்
நாமே நினைத்தன செய்யலு மாகும்
பார்மேல் ஒருவர் பகையில்லை தானே.

1304.
பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாளும் நன்மைக ளாகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகைவில்லை தானுஞ் சலமது வாமே.

1305.
ஆரும் உரைசெய்ய லாமஞ் செழுத்தாலே
யாரும் அறியாத ஆனந்த ரூபமாம்
பாரும் விசும்பும் பகலும் மதியதி
ஊனும் உயிரும் உணர்வது வாமே.

1306.
உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே
அணைந்தெழு மாங்கத னாதிய தாகுங்
குணர்ந்தெழு சூதனுஞ் சூதியுங் கூடிக்
கணந்தெழுங் காணுமக் காமுகை யாலே.

12.புவனாபதி சக்கரம்[தொகு]

1307.
ககராதி யோரைந்துங் காணிய பொன்மை
அகராதி யோரா றரத்தமே மேலும்
சகராதி யோர்நான்குந் தான்சுத்த வெண்மை
மகராதி மூவித்தை காமிய முத்தியே.

1308.
ஒரில் இதுவே உரையும்இத் தெய்வத்தைத்
தேரிற் பிறிதில்லை யானொன்று செப்பக்கோள்
வாரித் திரிகோண மனமின்ப முத்தியுந்
தேரில் அறியுஞ் சிவகாயந் தானே.

1309.
ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே
ஆகம் பராவித்தை யாமுத்தி சித்தியே
ஏகம் பராசத்தி யாகச்
சிவகுரு யோகம் பராசத்தி உண்மை எட்டாமே.

1310.
எட்டா கியசத்தி எட்டாகும் யோகத்துக்
கட்டாகு நாதாந்தத் தெட்டுங் கலப்பித்த
தொட்டாத விந்துவுந் தானற் றொழிந்தது
கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.

1311.
ஏதும் பலமா மியந்திரா சன்னடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங்கெடச் செம்பிற் சட்கோணந் தானிடே.

1312.
சட்கோணந் தன்னில் ஸ்ரீம்ஹிரீம் தானிட்டு
அக்கோண மாறின் தலையில்ரீங் காரமிட்டு
எக்கோண முஞ்சூழ எழில்வட்டம் இட்டுப்பின்
மிக்கீரேட் டக்கர மம்முதன் மேலிடே.

1313.
இட்ட இதழ்கள் இடையந் தரத்திலே
அட்டஹவ் விட்டதின் மேலே உவ்விட்டுக்
கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம்
இட்டுவா மத்தாங் கிரோங்கென்று மேவிடே.

1314.
மேவிய சக்கர மீது வலத்திலே
கோவை யடைவே குரோங்சிரோங் கென்றிட்டுத்
தாவில்ரீங் காரத்தாற் சக்கரஞ் சூழ்ந்து
பூவை புவனா பதியைப்பின் பூசியே.

1315.
பூசிக்கும் போது புவனா பதிதன்னை
ஆசற் றகத்தினில் ஆவா கனம்பண்ணிப்
பேசிய பிராணப் பிரதிட்டை யதுசெய்து
தேசுற் றிடவே தியான மதுசெய்யே.

1316.
செய்ய திருமேனி செம்பட் டுடைதானுங்
கையில் படையங் குசபாசத் தோடபயம்
மெய்யில் அணிகலம் இரத்தின மாமேனி
துய்ய முடியும் அவயவத்தில் தோற்றமே.

1317.
தோற்போர்வை நீக்கித் துதித்தடைவிற் பூசித்துப்
பாற்போ னகமந் திரத்தாற் பயின்றேத்தி
நாற்பால நாரதா யாகவா காஎன்று
சீர்ப்பாகச் சேடத்தை மாற்றிப்பின் சீவியே.

1318.
சீவிப் பதன்முன்னே தேவியையுத் வாகனத்தாற்
பாவித் திதய கமலம் பதிவித்தங்
கியாவர்க்கும் எட்டா இயந்திர ராசனை
நீவைத்துச் சேமி நினைந்தது தருமே.

13.நவாக்கரி சக்கரம்[தொகு]

1319.
நவாக்கரி சக்கர நானுரை செய்யின்
நவாக்கரி ஒன்று நவாக்கரி யாக
நவாக்கரி எண்பத் தொருவகை யாக
நவாக்கரி யக்கிலீ சௌமுத லீறே.

1320.
சௌமுதல் அவ்வொடு ஹெளவுட னாங்கிரீம்
கௌவு ளுமையுளுங் கலந்திரீம் சிரீமென்று
ஒவ்வில் எழுங்கிலீ மந்திர பாதமாச்
செவ்வுள் எழுந்து சிவாய நமவெனே.

1321.
நவாக்கரி யாவது நானறி வித்தை
நவாக்கரி யுள்ளெழும் நன்மைகள் எல்லாம்
நவாக்கரி மந்திர நாவுளே ஓத
நவாக்கரி சத்தி நலந்தருந் தானே.

1322.
நலந்தரு ஞானமுங் கல்வியும் எல்லாம்
உரந்தரு வல்வினை யும்மைவிட் டோடும்
சிரந்தரு தீவினை செய்வ தகற்றி
வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே.

1323.
கண்டிடுஞ் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை
கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை
வென்றிடு மண்டலம் வெற்றி தருவிக்கும் நின்றிடுஞ் சக்கரம் நினைக்கு மளவே.

1324.
நினைத்திடு மச்சிரீ மக்கிலீ மீறா
நினைத்திடுஞ் சக்கர மாதியு மீறு
நினைத்திடு நெல்லொடு புல்லினை யுள்ளே
நினைத்திடும் அருச்சனை நேர்தரு வாளே.

1325.
நேர்தரு மத்திரு நாயகி யானவள்
யாதொரு வண்ணம் அறிந்திடும் பொற்பூவை கார்தரு வண்ணங் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.

1326.
நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாங்
கடந்திடுங் காலனும் எண்ணிய நாளும்
படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போல
அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே.

1327.
அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடு மாதி யருளுந் திருவும்
அடைந்திடும் அண்டத் தமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.

1328.
அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத்
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
பரிந்திடும் வானவன் பாய்புனல் சூடி
முரிந்திடு வானை முயன்றிடு நீரே.

1329.
நீர்பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
பாரணி யும்ஹிரீ முன்ஸ்ரீ மீறாந்
தாரணியும்புகழ்த் தையல்நல் லாள்தனைக்
காரணி யும்பொழிற் கண்டுகொள் ளீரே.

1330.
கண்டுகொள் ளுந்தனி நாயகி தன்னையும்
மொண்டுகொ ளும்முக வசியம தாயிடும்
பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர்
நின்றுகொ ளும்நிலை பேறடை யாளையே.

1331.
பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில்
நாடுடை யார்களும் நம்வச மாகுவர்
மாறுடை யார்களும் வாழ்வது தானிலை
கூறுடை யாளையுங் கூறுமின் நீரே.

1332.
கூறுமின் எட்டுத் திசைக்குந் தலைவியை
யாறுமின் அண்டத் தமரர்கள் வாழ்வென
மாறுமின் வையம் வரும்வழி தன்னையுந்
தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே.

1333.
சேவடி சேரச் செறிய இருந்தவர்
நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர்
பூவடி யிட்டுப் பொலிய இருந்தவர்
மாவடி காணும் வகையறி வாரே.

1334.
ஐம்முத லாக வளர்ந்தெழு சக்கரம்
ஜம்முத லாக அமர்ந்திரீ மீறாகும்
அம்முத லாகி யவர்க்குடை யாடனை
ஐம்முத லாக வழுத்திடு நீயே.

1335.
வழுத்திடு நாவுக் கரசிவள் தன்னைப்
பகுத்திடும் வேதமெய் யாகம மெல்லாந்
தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை
முகத்துளும் முன்னெழக் கண்டுகொ ளீரே.

1336.
கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடில்
கொண்டஇம் மந்திரங் கூத்தன் குறியதாம்
மன்றினுள் வித்தையு மானுடர் கையதாய்
வென்றிடும் வையக மெல்லியல் மேவியே.

1337.
மெல்லிய லாகிய மெய்ப்பொரு ளாள்தனைச்
சொல்லிய லாலே தொடர்ந்தங் கிருந்திடும்
பல்லியல் பாகப் பரந்தெழு நாட்பல
நல்லியல் பாலே நடந்திடுந் தானே.

1338.
நடந்திடு நாவினுள் நன்மைகள் எல்லாந்
தொடர்ந்திடுஞ் சொல்லொடு சொற்பொருள் தானும்
கடந்திடுங் கல்விக் கரசிவ ளாகப்
படர்ந்திடும் பாரிற் பகையில்லை தானே.

1339.
பகையில்லை கெளமுத லையது வீறா
நகையில்லை சக்கர நன்றறி வார்க்கு
மிகையில்லை சொல்லிய பல்லுரு வெல்லாம்
வகையில்லை யாக வணங்கிடுந் தானே.

1340.
வணங்கிடுந் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடு நல்லுயி ரானவை யெல்லாங்
கலந்திடுங் காம வெகுளி மயக்கந்
தொடங்கிடுஞ் சொல்லிய சூழ்வினை தானே.

1341.
தானே கழறித் தணியவும் வல்லனாய்
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
தானே தனிநடங் கண்டவள் தன்னையுந்
தானே வணங்கித் தலைவனு மாமே.

1342.
ஆமே யனைத்துயி ராகிய அம்மையுந்
தாமே சகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே யவளடி போற்றி வணங்கிடிற்
போமே வினைகளும் புண்ணிய னாகுமே.

1343.
புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்
கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடுந்
தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்
அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே.

1344.
தானது கிரீம் கெளவது ஈறாம்
நானது சக்கர நன்றறி வார்க்கெலாம்
கானது கன்னி கலந்த பராசத்தி
கேளது வையங் கிளரொளி யானதே.

1345.
ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரிற்
களிக்கும்இச் சிந்தையிற் காரணங் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வமுண் டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே.

1346.
அறிந்திடுஞ் சக்கரம் அருச்சனை யோடே
எறிந்திடும் வையத் திடரவை காணல்
மறிந்திடு மன்னனும் வந்தனை செய்யும்
பொறிந்திடுஞ் சிந்தை புகையில்லை தானே

1347.
புகையில்லை சொல்லிய பொன்னொளி யுண்டாங்
தகையில்லை கொல்வ திலாமையி னாலே
வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாஞ்
சிகையில்லை சக்கரஞ் சேர்ந்தவர் தாமே.

1348.
சேர்ந்தவர் என்றுந் திசையொளி யானவர்
காய்ந்தெழு மேல்வினை காணகி லாதவர்
பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறொளி தானே.

1349.
ஒளியது ஹௌமுன் கிரீமது ஈறாங்
களியது சக்கரங் கண்டறி வார்க்குத்
தெளிவது ஞானமுஞ் சிந்தையுந் தேறப்
பணிவது பஞ்சாக் கரமது வாமே.

1350.
ஆமே சதாசிவ நாயகி யானவள்
ஆமே அதோமுகத் துள்ளறி வானவள்
ஆமே சுவையொளி யூறோசை கண்டவள்
ஆமே யனைத்துயிர் தன்னுளு மாமே.

1351.
தன்னுளு மாகித் தரணி முழுதுங்கொண்
டென்னுளு மாகி இடம்பெற நின்றவள்
மண்ணுளும் நீரனல் காலுளும் வானுளுங்
கண்ணுளும் மெய்யுளுங் காணலு மாமே.

1352.
காணலு மாகுங் கலந்துயிர் செய்வன
காணலு மாகுங் கருத்து ளிருந்திடிற்
காணலு மாகுங் கலந்து வழிசெயக்
காணலு மாகுங் கருத்துற நில்லே.

1353.
நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டிடும் உள்ளங் கலந்தெங்குந் தானாகக்
கொண்டிடும் வையங் குணம்பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.

1354.
மெய்ப்பொரு ளெளமுதல் ஹௌவது ஈறாக்
கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம்
தற்பொரு ளாகச் சமைந்தமு தேஸ்வரி
நற்பொரு ளாக நடுவிருந் தாளே.

1355.
தாளதி னுள்ளே சமைந்தமு தேஸ்வரி
காலது கொண்டு கலந்துற வீசிடில்
நாளது நாளும் புதுமைகள் கண்டபின்
கேளது காயமுங் கேடில்லை காணுமே.

1356.
கேடில்லை காணுங் கிளரொளி கண்டபின்
நாடில்லை காணும் நாண்முத லற்றபின்
மாடில்லை காணும் வரும்வழி கண்டபின்
காடில்லை காணுங் கருத்துற் றிடத்துக்கே.

1357.
உற்றிட மெல்லாம் உலப்பில்பா ழாக்கிக்
கற்றிட மெல்லாங் கடுவெளி யானது
மற்றிட மில்லை வழியில்லை தானில்லை
சற்றிட மில்லை சலிப்பற நின்றிடே.

1358.
நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்
நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானொக்கும்
நின்றிடுஞ் சத்தி நிலைபெறக் கண்டிட நின்றிடும் மேலை விளக்கொளி தானே.

1359.
விளக்கொளி ஸௌமுத லெளவது ஈறா
விளக்கொளி சக்கரம் மெய்ப்பொரு ளாகும்
விளக்கொளி யாகிய மின்கொடி யாளை
விளக்கொளி யாக விளங்கி நீயே.

1360.
விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்
விளங்கிடு மெல்லிய லானது வாகும்
விளங்கிடு மெய்ந்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.

1361.
தானே வெளியென எங்கும் நிறைந்தவள்
தானே பரம வெளியது வானவள்
தானே சகலமு மாகி அழித்தவள்
தானே யனைத்துள அண்ட சகலமே.

1362.
அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினுங்
கண்டத்தில் நின்ற கலப்பறி யார்களே.

1363.
கலப்பறி யார்கடல் சூழுல கெல்லாம்
உலப்பறி யாருட லோடுயிர் தன்னைச்
சிறப்பறி யார்சில தேவரை நாடித்
தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே.

1364.
தானே எழுந்தஅச் சக்கரஞ் சொல்லிடின்
மானே மதிவரை பத்திட்டு வைத்தபின்
தேனே யிரேகை திகைப்பற ஒன்பதில்
தானே கலந்தவரை யெண்பத் தொன்றுமே.

1365.
ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்
வென்றிகொள் மேனி மதிவட்டம் பொன்மையாம்
கன்றிய ரேகை கலந்திடுஞ் செம்மையில்
என்றிய லம்மை எழுத்தவை பச்சையே.

1366.
ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய
வாய்ந்தஇப் பெண்ணெண்பத் தொன்றில் நிரைத்தபின்
காய்ந்தவி நெய்யுட் கலந்துடன் ஓமமும்
ஆய்ந்தலத் தாமுயி ராகுதி பண்ணுமே.

1367.
பண்ணிய பொன்னைப் பரப்பற நீபிடி
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்
நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்தபின்
துண்ணென நேயநற் சேர்க்கலு மாமே.

1368.
ஆகின்ற சந்தனங் குங்கமங்
கத்தூரி போகின்ற சாந்து சவாது புழுகுநெய்
ஆகின்ற கற்பூர மாகோ சனநீருஞ்
சேர்கின்ற ஒன்பதுஞ் சேரநீ வைத்திடே.

1369.
வைத்திடும் பொன்னுடன் மாதவ நோக்கிடிற்
கைச்சிறு கொங்கை கலந்தெழு கன்னியைத்
தச்சிது வாகச் சமைந்தஇம் மந்திரம்
அர்ச்சனை யாயிரம் ஆயிரஞ் சிந்தியே.

1370.
சிந்தையி னுள்ளே திகழ்தரு சோதியாய்
எந்தை கரங்கள் இருமூன்றும் உள்ளது
பந்தமா சூலம் படைபாசம் வில்லம்பு
முந்த கிலீமெழ முன்னிருந் தாளே.

1371.
இருந்தனர் சத்திகள் அறுபத்து நால்வர்
இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர்
இருந்தனர் சூழ எதிர்சக் கரத்தே
இருந்த கரமிரு வில்லம்பு கொண்டே.

1372.
கொண்ட கனகங் குழைமுடி யாடையாய்க்
கண்டஇம் முத்தங் கனல்திரு மேனியாய்ப்
பண்டமர் சோதிப் படரித ழானவள்
உண்டங் கொருத்தி உணரவல் லாருக்கே.

1373.
உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கிற
கலந்திருந் தெங்குங் கருணை பொழியும்
மணந்தெழும் ஓசை யொளியது காணுந்
தணந்தெழு சக்கரத் தான்தரு வாளே.

1374.
தருவழி யாகிய தத்துவ ஞானங்
குருவழி யாகுங் குணங்களுள் நின்று
கருவழி யாகுங் கணக்கை யறுத்துப்
பெருவழி யார்க்கும் பேரொளி

1375.
பேரொளி யாய பெரிய பெருஞ்சுடர்
சீரொளி யாகித் திகழ்தரு நாயகி
காரொளி யாகிய கன்னிகை பொன்னிறம்
பாரொளி யாகிப் பரந்துநின் றாளே.

1376.
பரந்த கரம்இரு பங்கயம் ஏந்திக்
குவிந்த கரமிரு கொய்தளிர்ப் பாணி
பரிந்தருள் கொங்கைகள் முத்தார் பவளம்
இருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே.

1377.
மணிமுடி பாதஞ் சிலம்பணி மங்கை
அணிபவ ளன்றி யிருளில்லை யாகுந்
தணிபவர் நெஞ்சினுள் தன்னரு ளாகிப்
பணிபவர்க் கன்றோ பரகதி யாமே.

1378.
பரந்திருந் துள்ளே அறுபது சத்தி
கரந்தன கன்னிகள் அப்படி சூழ
மலர்ந்திரு கையின் மலரவை ஏந்தச்
சிறந்தவர் ஏத்துஞ் சிரீம்தன மாமே.

1379.
தன்மது வாகிய தையலை நோக்கி
மனமது வோடி மரிக்கிலோ ராண்டி
கனமவை யற்றுக் கருதிய நெஞ்சந்
தினகர னாரிட செய்திய தாமே.

1380.
ஆகின்ற மூலத் தெழுந்த முழுமலர்
போகின்ற பேரொளி யாய மலரதாய்ப்
போகின்ற பூரண மாக நிறைந்தபின்
சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே.

1381.
ஆகின்ற மண்டலத் துள்ளே அமர்ந்தவள்
ஆகின்ற ஐம்பத் தறுவகை யானவள்
ஆகின்ற ஐம்பத் தறுசத்தி நேர்தரு
ஆகின்ற ஐம்பத் தறுவகை சூழவே.

1382.
சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமாய்
ஆங்கணி முத்தம் அழகிய மேனியா
தாங்கிய கையவை தார்கிளி ஞானமாய்
ஏந்து கரங்கள் எடுத்தமா பாசமே.

1383.
பாசம தாகிய வேரை யறுத்திட்டு
நேசம தாக நினைந்திரு மும்முளே
நாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டிற்
காசினி மேலமர் கண்ணுத லாகுமே.

1384.
கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி
பண்ணுறு நாதம் பகையற நின்றிடில்
விண்ணமர் சோதி விளங்க ஹ்ரீங்கார
மண்ணுடை நாயகி மண்டல மாகுமே.

1385.
மண்டலத் துள்ளே மலர்ந்தெழு தீபத்தைக்
கண்டகத் துள்ளே கருதி யிருந்திடும்
விண்டகத் துள்ளே விளங்கி வருதலால்
தண்டகத் துள்ளவை தாங்கலு மாமே.

1386.
தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்
தோங்கி எழுங்கலைக் குள்ளுணர் வானவள்
ஏங்க வரும்பிறப் பெண்ணி யறுத்திட
வாங்கிய நாதம் வலியுட னாகுமே.

1387.
நாவுக்கு நாயகி நன்மணி பூணாரம்
பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாம்
பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தாள்
ஆவுக்கு நாயகி அங்கமர்ந் தாளே.

1388.
அன்றிரு கையில் அளந்த பொருள்முறை
இன்றிரு கையில் எடுத்தவெண் குண்டிகை
மன்றது காணும் வழியது வாகவே
கண்டங் கிருந்தவர் காரணி காணுமே.

1389.
காரணி சத்திகள் ஐம்பத் திரண்டெனக்
காரணி கன்னிகள் ஐம்பத் திருவராய்க்
காரணி சக்கரத் துள்ளே கரந்தெங்குங்
காரணி தன்னரு ளாகிநின் றாளே.

1390.
நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடிற்
கண்டஇவ் வன்னி கலந்திடும் ஓராண்டிற்
கொண்ட விரதநீர் குன்றாமல் நின்றிடின்
மன்றினி லாடு மணியது காணுமே.

1391.
கண்டஇச் சத்தி இருதய பங்கயங்
கொண்டஇத் தத்துவ நாயகி யானவள்
பண்டையவ் வாயுப் பகையை யறுத்திட
இன்றென் மனத்துள் இனிதிருந் தாளே.

1392.
இருந்தவிச் சத்தி இருநாலு கையிற்
பரந்தஇப் பூங்கிளி பாச மழுவாள்
கரந்திடு கேடகம் வில்லம்பு கொண்டங்
குரத்தங் கிருந்தவள் கூத்துகந் தாளே.

1393.
உகந்தனள் பொன்முடி முத்தார மாகப்
பரந்த பவளமும் பட்டாடை சாத்தி
மலர்ந்தெழு கொங்கை மணிக்கச் சணிந்து
கழைந்தங் கிருந்தவள் தான்பச்சை யாமே.

1394.
பச்சை இவளுக்குப் பாங்கிமார் ஆறெட்டு
கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலாற்
கச்சணி கொங்கைகள் கையிரு காப்பதாய்
எச்ச விடைச்சி இனிதிருந் தாளே.

1395.
தாளதி னுள்ளே தாங்கிய சோதியைக்
காலது வாகக் கலந்துகொள் என்று
மாலது வாக வழிபாடு செய்துநீ
பாலது போலப் பரந்தெழு விண்ணிலே.

1396.
விண்ணமர் நாபி இருதய மாங்கிடைக்
கண்ணமர் கூபங் கலந்து வருதலாற்
பண்ணமர்ந் தாதித்த மண்டல மானது
தண்ணமர் கூபந் தழைத்தது காணுமே.

1397.
கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள
தாபத்துச் சத்தி தயங்கி வருதலால்
ஆபத்துக் கைகள் அடைந்தன நாலைந்து
பாசம் அறுக்கப் பரந்தன சூலமே.

1398.
சூலந்தண் டொள்வாள் சுடர்பறை ஞானமாய்
வேலம்பு தமருக மாகிளி விற்கொண்டு
காலம்பூப் பாசம் மழுகத்தி கைக்கொண்டு
கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே.

1399.
எண்ணமர் சத்திகள் நாற்பத்து நாலுடன்
எண்ணமர் சத்திகள் நாற்பத்து நால்வராம்
எண்ணிய பூவித முள்ளே யிருந்தவள்
எண்ணிய எண்ணங் கடந்துநின் றாளே.

1400.
கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு
தொடர்ந்தணி முத்து பவளங்கச் சாகப்
படர்ந்தல்குற் பட்டாடை பாதச் சிலம்பு மடந்தை சிறியவள் வந்துநின் றாளே.

1401.
நின்றஇச் சத்தி நிரந்தர மாகவே
கண்டிடு மேரு வணிமாதி தானாகிப்
பண்டைய வானின் பகட்டை யறுத்திட
ஒன்றிய தீபம் உணர்ந்தார்க் குண்டாமே.

1402.
உண்டோர் அதோமுகம் உத்தம மானது
கண்டஇச் சத்தி சதாசிவ நாயகி
கொண்ட முகமைந்து கூறுங் கரங்களும்
ஒன்றிரண் டாகவே மூன்றுநா லானதே.

1403.
நன்மணி சூலங் கபாலங் கிளியுடன்
பன்மணி நாகம் மழுசத்தி பந்தாகுங்
கண்மணி தாமரைக் கையில் தமருகம்
பொன்மணி பூணாரம் பூசனை யானதே.

1404.
பூசனைச் சத்திகள் எண்ணைவர் சூழவே
நேசவள் கன்னிகள் நாற்பத்து நேரதாய்க்
காசினிச் சக்கரத் துள்ளே கலந்தவள்
மாசடை யாமல் மகிழ்ந்திருந் தார்களே.

1405.
தாரத்தி னுள்ளே தங்கிய சோதியைப்
பாரத்தி னுள்ளே பரந்துள் எழுந்திட
வேரது வொன்றிநின் றெண்ணு மனோமயங்
காரது போலக் கலந்தெழு மண்ணிலே.

1406.
மண்ணில் எழுந்த அகார உகாரங்கள்
விண்ணில் எழுந்து சிவாய நமவென்று
கண்ணில் எழுந்தது காண்பரி தன்றுகொல் கண்ணில் எழுந்தது காட்சி தரஎன்றே.

1407.
என்றங் கிருந்த அமுத கலையிடைச்
சென்றங் கிருந்த அமுத பயோதரி
கண்டங் கரமிரு வெள்ளிபொன் மண்ணடை
கொண்டங் கிருந்தது வண்ணம் அமுதே.

1408.
அமுதம தாக அழகிய மேனி
படிகம தாகப் பரந்தெழு முள்ளே
குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக்
கெமுதம தாகிய கேடிலி தானே.

1409.
கேடிலி சத்திகள் முப்பத் தறுவரும்
நாடிலி கன்னிகள் நாலொன் பதின்மரும்
பூவிலி பூவிதழ் உள்ளே யிருந்தவர்
நாளிலி தன்னை நணுகிநின் றார்களே.

1410.
நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்டது சோதி கருத்தில் இருந்திடக்
கொண்டது வோராண்டு கூடி வருகைக்கு
விண்ட வௌகாரம் விளங்கின அன்றே.

1411.
விளங்கிடு வானிடை நின்றவை யெல்லாம்
வணங்கிடு மண்டலம் மன்னுயி ராக
நலங்கிளர் நன்மைகள் நாரண னொத்துச்
சுணங்கிடை நின்றிவை செல்லலு மாமே.

1412.
ஆமே அதோமுக மேலே அமுதமாய்த்
தாமே யுகாரந் தழைத்தெழுஞ் சோமனும்
காமேல் வருகின்ற கற்பக மானது
பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.

1413.
பொற்கொடி யாளுடைப் பூசனை செய்திட
அக்களி யாகிய ஆங்காரம் போயிடும்
மற்கட மாகிய மண்டலந் தன்னுள்ளே
பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே.

1414.
பேதை யவளுக்குப் பெண்மை அழகாகும்
தாதை யிவளுக்குத் தாணுவு மாய்நிற்கும்
மாதை யிவளுக்கு மண்ணுந் திலகமாய்க்
கோதையர் சூழக் குவிந்திடம் காணுமே.

1415.
15 குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர்
நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப்
பரந்தித ழாகிய பங்கயத் தள்ளே
இருந்தனள் காணும் இடம்பல கொண்டே.

1416.
கொண்டங் கிருந்தனர் கூத்தன் ஒளியினைக்
கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளது
பண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமால்
இன்றென் மனத்துளே இல்லடைந் தாளுமே.

1417.
இல்லடைந் தானுக்கும் இல்லாத தொன்றில்லை
இல்லடைந் தானுக் கிரப்பது தானில்லை
இல்லடைந் தானுக் கிமையவர் தாமொவ்வார்
இல்லடைந் தானுக்கு இல்லாதில் லானவே.

1418.
ஆனை மயக்கும் அறுபத்து நாற்றறி
ஆனை யிருக்கும் அறுபத்து நாலொளி
ஆனை யிருக்கும் அறுபத்து நாலறை
ஆனையுங் கோடும் அறுபத்து நாலிலே.