திருவிளையாடற் புராணம்/60

விக்கிமூலம் இலிருந்து

60 பரி நரியாகிய படலம்

கட்டி வைத்த பரிகள் அன்று இரவு உரு மாறின; கொட்டி வைத்த கொள்ளும் புல்லும் தின்னாமற் கிடந்தன. பரிகள் நரிகள் ஆயின. காட்டில் திரிந்து கொண்டிருந்த தம்மை இப்படிக் குதிரைகளாகக் கட்டிப் போட்டார்களே என்று அவை வருந்தின. நத்தையும் நண்டும் தின்று பழகிய தமக்கு இந்தச் சொத்தைப்புல்லைப் போட்டு வாட்டினார்களே என்று வேதனைப்பட்டன. எப்பொழுது விடுதலை பெறுவோம் என்று காத்துக் கிடந்தன.

கட்டிய கயிறுகளை அறுத்துக் கொண்டு ஓடுவதில் முனைந்தன. பிணமும் அழுகலும் தின்று பழகிய அவற்றிற்கு ஊனும் இறைச்சியும் தின்ன வேட்கை பெருகியது. ஏற்கனவே கட்டி வைத்த குதிரைகளைக் குதறித் தின்றன; அவை கதறி ஓலமிட்டன; ஊருக்குள் புகுந்து ஆடுகளையும் கோழிகளையும் கடித்துக் கொன்றன. குதிரைகளின், கனைப்பொலி கேட்ட கொட்டகைக் காவலர்கள் நரிகள் ஊளையிடும் குரலைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். நடு இரவில் கொள்ளை அடிக்கப் புகுந்த கள்வர்களைப் போல நரிகள் நாலாபுறமும் ஓடி ஊரை அல்லோலகப்படுத்தியது. அவரவர் தம் உடைமைகளாகிய ஆடு மாடுகளை நரிகள் குதறித் தின்பதைக் கண்டு கதறி முறையிட்டனர்,

ஊர்க் காவலர்கள் கடுக ஓடி அரசுக் காவலனிடம் இச்செய்தியை உரைத்தனர். பரிகள் என்று கட்டி வைத்த குதிரைகள் மாயமாய் மறைந்து விட்டன. அவை உருமாறி நரிகள் ஆகிவிட்டன. அவை ஏற்கனவே கட்டி வைத்திருந்த குதிரைகளையும் கடித்துக் குதறிவிட்டன. ஊரில் புகுந்து உயிர்களைக் கொன்றுவிட்டன. அவை அனைத்தும் காடு நோக்கி ஓடி விட்டன. முடமும் கிழமும் மட்டும் கட்டுக்குள் இருக்கின்றன" என்று கூறி முறையிட்டனர்.

நடந்தன எல்லாம் கனவோ களவோ என்று அறியாமல் அச்சமடைந்நான்; வாசகர் உரைத்தவை யெல்லாம் மோசடி என மதிப்பிட்டான். பித்தளையைப் பொன்னாக்கித் தருவோம் என்று சொல்லும் மோசடி வித்தையைப் போன்றது இது எனக் கருதினான். கொண்டு சென்ற பொன்னைக் கொட்டி அழுது விட்டுக் காட்டு நரிகளைக் கட்டிப்பிடித்து ஆடிய நாடகம் இது என மதித்தான். வந்தவர் அனைவரும் மோசடி செய்யும் வேடதாரிகள் என்று கணித்தான். குட்டிமத்தான் சாத்தான் கண்கட்டி வித்தை இது என்று முடிவு செய்தான்.

எல்லாம் இனிதே முடிந்தது என்று கதையை எழுதி வைத்து ஏடுகளை மூடி வைக்கும் எழுத்தாளனைப் போல அமைதியாக மன நிறைவோடு உறங்கி விழித்து எழுந்த மாணிக்க வாசகரைக் கட்டி இழுத்து வந்து காவலன் முன் நிறுத்தினர். அரசன் கடுஞ்சினத்தோடு ஏவலர்களுக்கும் ஆணை இட்டான். இவன் கொட்டி வைத்த பொன்னைக் கோயில் கட்டி வைக்க ஒழித்துவிட்டுக் காட்டு நரிகளை ஒட்டு குதிரைகளாக மாற்றிக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறான். கொண்டு சென்ற பொன்னை மீண்டும் வந்து நிறுத்தும் வரைக் கடும் வெய்யிலில் நிறுத்திக் கால் கடுக்கச் செய்து கோல் கடுக்க அடித்துக் கக்க வையுங்கள். யார் வீட்டுப் பணம் இது; மக்கள் பணம்; அவர்களைக் காக்கக் குதிரைகள் வாங்கச் சொன்னால் கோயில் கட்டிக் கும்மாளம் போடுகிறான் இவன். இவனைக் கட்டி வைத்து அடியுங்கள்" என்று அரிமர்த்தன பாண்டியன் அரி என முழங்கினான்.

வைகை ஆற்று மணலில் நடுப்பகலில் வாசகரை நிறுத்திவைத்து நிதி கொண்டுவந்து வைக்க என்று சொல்லிச் சவுக்கால் சாடினார். பட்டுப்போன்ற அவர்மேனி சல்லடைகள் ஆயின, குருதி வடியும் வடிவுகள் கண்ணீர் வடித்தன. தண்ணீர் இல்லாத அந்த வைகை குருதியாகிய தண்ணீரைத் தாங்கிச் செந்நிறம் பெற்றது

"இனி பொறுப்பதில்லை; அவன் கதறி அழுவதை நாம் தாங்கிக் கொள்ள முடியாது" என்று சிவனார் வைகைக்கு ஆணையிட்டார்.

நீ காட்டு யானைபோலச் சீறிப் பாய்க; கடல் உன்னிடம் தோற்க வேண்டும்; உன் மிடல் கொண்டு தாக்கு; கரைகளைப் போக்கு, ஊரை அழிக்க நீ புறப்படுக" என்று ஆணையிட்டார்.

காலைச் சுட்ட வெப்பம் தணிந்தது, வெள்ளம் வருதல் கண்டு ஊரவர் அஞ்சி அலறினர். அடைத்துக்கொண்டிருந்த ஆட்கள் தற்காப்புக்காக அந்த இடத்தை விட்டு அகன்றனர். கரை உடைத்துச் செல்லும் வெள்ளம் கண்டு மனக்கலக்கம் அடைந்தனர். தம் தட்டு முட்டுச் சாமான்களைக் கட்டி எடுத்து வைக்கத் தம் வீடுகள் போய்ச் சேர்ந்தனர். வாசகர் எல்லாம் இறைவனின் செயல் என்று நினைத்தவராய்ச் சோமசுந்தரக் கடவுள் திருக்கோயில் சென்று இறைவனைத் தியானித்துக் கொண்டு. சுற்றுப் புறத்தை மறந்து நின்றார். 

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவிளையாடற்_புராணம்/60&oldid=1124291" இலிருந்து மீள்விக்கப்பட்டது