திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மாற்கு நற்செய்தி/அதிகாரங்கள் 14 முதல் 16 வரை

விக்கிமூலம் இலிருந்து

அதிகாரம் 14

மானடமகன் முழுமையாய் வெளிப்படுத்தப்படல் இயேசுவைக் கொல்ல சதித்திட்டம் (மத் 26:1 - 5; லூக் 22:1 - 2; யோவா 11:45 - 53) 1 பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நிகழ இன்னும் இரண்டு நாள்கள் இருந்தன. தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்யலாம் என்று வழிதேடிக் கொண்டிருந்தனர்;2 ஆயினும், ' விழாவின்போது வேண்டாம்; ஒரு வேளை மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும் ' என்று நினைத்தனர்.3 இயேசு, பெத்தானியாவில் தொழு நோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கே பந்தியில் அமர்ந்திருந்தபோது இலாமிச்சை நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் வந்தார். அந்தத் தைலம் கலப்பற்றது, விலையுயர்ந்தது. அவர் அப்படிகச் சிமிழை உடைத்து இயேசுவின் தலையில் ஊற்றினார்.4 ஆனால் அங்கிருந்த சிலர் கோபமடைந்து, ' இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை முந்நூறு தெனாரியத்துக்கும் மேலாக விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே, ' என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.5 அப்பெண் மீதும் சீறி எழுந்தனர்.6 இயேசு அவர்களிடம், ' அவரை விடுங்கள். ஏன் அவருக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது முறையான செயலே.7 ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள். நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யமுடியும். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை.8 இவர் தம்மால் இயன்றதைச் செய்தார். என் அடக்கத்திற்காக இவர் முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசிவிட்டார்.9 உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இவர் செய்ததும் எடுத்துக் கூறப்படும்; இவரும் நினைவு கூறப்படுவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்று கூறினார்.

இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாசு உடன்படுதல் (மத் 26:14 - 16; லூக் 22:3 - 6) 10 பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான்.11 அவர்கள் அதை அறிந்து மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். அவனும் அவரை எப்படிக் காட்டிக்கொடுக்கலாம் என்று வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தல் (மத் 26:17 - 19; லூக் 22:7 - 14, 21 - 23) 12 புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், ' நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ' என்று கேட்டார்கள்.13 அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: ' நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள்.14 அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், ' நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே? ' என்று போதகர் கேட்கச் சொன்னார் ' எனக் கூறுங்கள்.15 அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள். ' 16 சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

யூதாசின் சூழ்ச்சி வெளியாகுதல் (மத் 26:20 - 25; லூக் 22:21 - 23; யோவா 13:21 - 30) 17 மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார்.18 அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தபொழுது இயேசு, ' என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.19 அவர்கள் வருத்தமுற்று, ஒருவர் பின் ஒருவராக, ' நானோ? நானோ? ' என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.20 அதற்கு அவர், ' அவன் பன்னிருவருள் ஒருவன்; என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவன்.21 மானிடமகன் தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளவாறே போகிறார். ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும் ' என்றார்.

ஆண்டவரின் திருவிருந்து (மத் 26:26 - 30; லூக் 22:15 - 20; 1கொரி 11:23 - 25) 22 அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ' இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல் ' என்றார்.23 பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர்.24 அப்பொழுது அவர் அவர்களிடம், 'இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்.இதன் கிரேக்கச் சொல்லை சிலர் 'எல்லேருடைய' என மொழிபெயர்க்கின்றனர். 25 இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.26 அவர்கள் புகழ்ப்பாடல் பாடிவிட்டு ஒலிவமலைக்குச் சென்றார்கள்.

பேதுரு மறுதலிப்பார் என முன்னறிவித்தல் (மத் 26:31 - 35; லூக் 22:31 - 34; யோவா 13:36 - 38) 27 இயேசு அவர்களிடம், ' நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். ஏனெனில், ' ஆயரை வெட்டுவேன்; அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளது.28 ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப் போவேன் ' என்றார்.29 பேதுரு அவரிடம், ' எல்லாரும் ஓடிப்போய்விட்டாலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன் ' என்றார்.30 இயேசு அவரிடம், ' இன்றிரவில் சேவல் இருமுறை கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உனக்குச் சொல்கிறேன் ' என்றார்.31 அவரோ, ' நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன் ' என்று மிக அழுத்தமாகச் சொன்னார். அப்படியே அவர்கள் அனைவரும் சொன்னார்கள்.

கெத்சமனித் தோட்டத்தில் இயேசு (மத் 26:36 - 46; லூக் 22:39 - 46) 32 பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம் சீடரிடம், ' நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள் ' என்று கூறி,33 பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்.34 அவர், ' எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள் ' என்று அவர்களிடம் கூறினார்.35 சற்று அப்பால் சென்று தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார்.36 ″ அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும் ″ என்று கூறினார்.37 அதன்பின்பு அவர் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், ' சீமோனே, உறங்கிக் கொண்டா இருக்கிறாய்? ஒரு மணிநேரம் விழித்திருக்க உனக்கு வலுவில்லையா?38 உங்கள் மனம் ஆர்வம் உடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் ' என்றார்.39 அவர் மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி இறைவனிடம் வேண்டினார்.40 அவர் திரும்பவும் வந்தபோது அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவருக்கு என்ன மறுமொழி கூறுவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.41 அவர் மூன்றாம் முறை வந்து அவர்களை நோக்கி, ' இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? போதும், நேரம் வந்துவிட்டது. மானிடமகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படப் போகிறார்.42 எழுந்திருங்கள், போவோம். இதோ, என்னைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான் ' என்று கூறினார்.

இயேசுவைக் காட்டிக் கொடுத்தலும் கைது செய்தலும் (மத் 26:47 - 56; லூக் 22:47 - 53; யோவா 18:3 - 12) 43 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது.44 அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவன், ' நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு, அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள் ' என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.45 அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி, ' ரபி ' எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.46 அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர்.47 அருகில் நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்.48 இயேசு அவர்களைப் பார்த்து, ' கள்வனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைது செய்ய வந்தது ஏன்?49 நான் நாள்தோறும் கோவிலில் கற்பித்துக் கொண்டு உங்களோடு இருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே! ஆனால் மறைநூலில் எழுதப்பட்டுள்ளவை நிறைவேற வேண்டும் ' என்றார்.50 அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.51 இளைஞர் ஒருவர் தம் வெறும் உடம்பின் மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக் கொண்டு அவர் பின்னே சென்றார்; அவரைப் பிடித்தார்கள்.52 ஆனால் அவர் துணியை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்.

தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் இயேசு (மத் 26:57 - 68; லூக் 22:54 - 55, 63 - 71; யோவா 18:13 - 14, 19 - 24) 53 அவர்கள் இயேசுவைத் தலைமைக் குருவிடம் கூட்டிச் சென்றார்கள். எல்லாத் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் ஒன்று கூடினார்கள்.54 பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். தலைமைக் குருவின் வீட்டு உள்முற்றம் வரை வந்து காவலரோடு உட்கார்ந்து நெருப்பின் அருகே அவர் குளிர்காய்ந்து கொண்டிருந்தார்.55 தலைமைக் குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகச் சான்று தேடினார்கள். ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை.56 பலர் அவருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொன்னார்கள். ஆனால் அச்சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தன.57 சிலர் எழுந்து, ' மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்து விட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை58 மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம் ' என்று அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று கூறினர்.59 அப்படியும் அவர்களுடைய சான்று ஒத்துவரவில்லை.60 அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவர்களின் நடுவே நின்று, ' இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி ஒன்றும் கூற மாட்டாயா? ' என்று இயேசுவைக் கேட்டார்.61 ஆனால் அவர் பேசாதிருந்தார். மறுமொழி ஒன்றும் அவர் கூறவில்லை. மீண்டும் தலைமைக் குரு, ' போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ? ' என்று அவரைக் கேட்டார்.62 அதற்கு இயேசு, ' நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள் ' என்றார்.63 தலைமைக் குருவோ தம் அங்கியைக் கிழித்துக்கொண்டு, ' இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா?64 இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக் கேட்டீர்களே; உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ' என்று கேட்க, அவர்கள் அனைவரும், ' இவன் சாக வேண்டியவன் ' என்று தீர்மானித்தார்கள்.65 பின்பு சிலர் அவர்மேல் துப்பவும், அவர் முகத்தை மூடி அவரைக் கையால் குத்தி, ' இறைவாக்கினனே, யார் எனச் சொல் ' என்று கேட்கவும் தொடங்கினர். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர்.

பேதுரு மறுதலித்தல் (மத் 26:69 - 75; லூக் 22:56 - 62; யோவா 18:15 - 18, 25 - 27) 66 அப்பொழுது பேதுரு கீழே முற்றத்தில் இருக்க, தலைமைக் குருவின் பணிப் பெண் ஒருவர் வந்து,67 பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருக்கக் கண்டு அவரைக் கூர்ந்து நோக்கி, ' நீயும் இந்த நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்தானே ' என்றார்.68 அவரோ, 'நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, புரியவுமில்லை' என்று மறுதலித்து, வெளி முற்றத்திற்குச் சென்றார். (அப்பொழுது சேவல் கூவிற்று).அடைப்புக் குறிக்குள் உள்ள 'அப்பொழுது சேவல் கூவிற்று' என்னும் சொற்றொடர் பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை. 69 அந்தப் பணிப்பெண் அவரைக் கண்டு சூழ இருந்தவர்களிடம், ' இவனும் அவர்களைச் சேர்ந்தவன்தான் ' என்று மீண்டும் கூறத் தொடங்கினார்.70 அவர் மீண்டும் மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின் சூழ இருந்தவர்களும், ' உண்மையாகவே நீ அவர்களைச் சேர்ந்தவனே. ஏனெனில் நீ ஒரு கலிலேயன் ' என்று மீண்டும் பேதுருவிடம் கூறினார்கள்.71 அவரோ, ' நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த மனிதனை எனக்குத் தெரியாது ' என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார்.72 உடனே இரண்டாம் முறை சேவல் கூவிற்று. அப்பொழுது, ' சேவல் இருமுறை கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் ' என்று இயேசு தமக்குக் கூறிய சொற்களைப் பேதுரு நினைவு கூர்ந்து மனம் உடைந்து அழுதார். அதிகாரம் 15

இயேசுவைப் பிலாத்திடம் கொண்டு செல்லுதல் (மத் 27:1 - 2, 11 - 14; லூக் 23:1 - 5; யோவா 18:28 - 38) 1 பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று பிலாத்திடம் ஒப்புவித்தனர்.2 பிலாத்து அவரை நோக்கி, ' நீ யூதரின் அரசனா? ' என்று கேட்க அவர், ' அவ்வாறு நீர் சொல்கிறீர் ' என்று பதில் கூறினார்.3 தலைமைக் குருக்கள் அவர்மீது பல குற்றங்களைச் சுமத்தினார்கள்.4 மீண்டும் பிலாத்து, ' நீ பதில் ஒன்றும் சொல்ல மாட்டாயா? உன் மீது இத்தனை குற்றங்களைச் சுமத்துகிறார்களே! ' என்று அவரிடம் கேட்டான்.5 இயேசுவோ எப்பதிலும் கூறவில்லை. ஆகவே பிலாத்து வியப்புற்றான்.

இயேசுவுக்கு மரணதண்டனை விதித்தல் (மத் 27:15 - 26; லூக் 23:13 - 25; யோவா 18:39 - 19:16) 6 விழாவின்போது மக்கள் கேட்டுக் கொள்ளும் ஒரு கைதியை அவர்களுக்காகப் பிலாத்து விடுதலை செய்வதுண்டு.7 பரபா என்னும் கைதி ஒருவன் இருந்தான். ஒரு கலகத்தில் கொலை செய்த கலகக்காரரோடு பிடிபட்டவன் அவன்.8 மக்கள் கூட்டம் வந்து, வழக்கமாய்ச் செய்வதுபோல ஒரு கைதியை விடுதலை செய்யுமாறு பிலாத்துவை வேண்டத் தொடங்கியது.9 அதற்குப் பிலாத்து, ' யூதரின் அரசரை உங்களுக்காக நான் விடுதலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா? ' என்று கேட்டான்.10 ஏனெனில் தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் அவரை ஒப்புவித்திருந்தார்கள் என்று அவன் உணர்ந்திருந்தான்.11 ஆனால் தலைமைக் குருக்கள் தங்களுக்குப் பரபாவையே அவன் விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்குமாறு கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள்.12 பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து, ' அப்படியானால் நீங்கள் யூதரின் அரசர் என்று குறிப்பிடும் இவனை நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டான்.13 அவர்கள், ' அவனைச் சிலுவையில் அறையும் ' என்று மீண்டும் கத்தினார்கள்.14 அதற்குப் பிலாத்து, ' இவன் செய்த குற்றம் என்ன? ' என்று கேட்க, அவர்கள், ' அவனைச் சிலுவையில் அறையும் ' என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள்.15 ஆகவே பிலாத்து கூட்டத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பரபாவை விடுதலை செய்து, இயேசுவைக் கசையால் அடித்து, சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.

படைவீரர்கள் இயேசுவை ஏளனம் செய்தல் (மத் 27:27 - 31; யோவா 19:2 - 3) 16 பிறகு படைவீரர் அவரை ஆளுநர் மாளிகையின் முற்றத்திற்கு இழுத்துக்கொண்டு போய்ப் படைப்பிரிவினர் அனைவரையும் கூட்டினர்;17 அவருக்குச் செந்நிற ஆடையை உடுத்தினர்; ஒரு முள் முடி பின்னி அவருக்குச் சூட்டி,18 ' யூதரின் அரசே வாழ்க! ' என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்;19 மேலும் கோலால் அவர் தலையில் அடித்து, அவர்மீது துப்பி, முழந்தாள்படியிட்டு அவரை வணங்கினர்.20 அவரை ஏளனம் செய்த பின் செந்நிற ஆடையைக் கழற்றி விட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக வெளியே கூட்டிச் சென்றனர்.

இயேசுவைச் சிலுவையில் அறைதல் (மத் 27:32 - 44; லூக் 23:26 - 43; யோவா 19:17 - 27) 21 அப்பொழுது அலக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். படைவீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.22 அவர்கள் ' மண்டைஓட்டு இடம் ' எனப்பொருள்படும் ' கொல்கொதா ' வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள்;23 அங்கே அவருக்கு வெள்ளைப் போளம் கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை.24 பிறகு அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; குலுக்கல் முறையில் யாருக்கு எது என்று பார்த்து அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள்.25 அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி.26 அவரது மரண தண்டனைக்கான காரணத்தை அறிவிக்க ' யூதரின் அரசன் ' என்று அவர்கள் எழுதிவைத்தார்கள்;27 அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக,28 இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்.″ இவ்வாறு, 'கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்' என்ற மறைநூல் வாக்கு நிறைவேறிற்று″ என்னும் இவ்வசனம் சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் மட்டுமே காணப்படுகிறது. 29 அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, ' ஆகா, திருக்கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே,30 சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே விடுவித்துக்கொள் ' என்று அவரைப் பழித்துரைத்தார்கள்.31 அவ்வாறே தலைமைக் குருக்கள் மறைநூல் அறிஞர்களுடன் சேர்ந்து அவரை ஏளனம் செய்து, ' பிறரை விடுவித்தான், தன்னையே விடுவிக்க முடியவில்லை ' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.32 அவர்கள், ' இஸ்ரயேலின் அரசனாகிய மெசியா இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் கண்டு நம்புவோம் ' என்றார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவர்களும் அவரை இகழ்ந்தார்கள்.

இயேசு உயிர் விடுதல் (மத் 27:45 - 56; லூக் 23:44 - 49; யோவா 19:28 - 30) 33 நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ' எலோயி, எலோயி, லெமா சபக்தானி? ' என்று உரக்கக் கத்தினார். ' என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? ' என்பது அதற்குப் பொருள்.35 சூழ நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக்கேட்டு, ' இதோ! எலியாவைக் கூப்பிடுகிறான் ' என்றனர்.36 அப்பொழுது அவர்களுள் ஒருவர் ஓடிச்சென்று கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்துக்கொண்டே, ' பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம் ' என்றார்.37 இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.38 அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது.39 அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, ' இம்மனிதர் உண்மையாகவே இறைமகன் ' என்றார்.40 பெண்கள் சிலரும் தொலையில் நின்று உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். அவர்களுள் மகதலா மரியாவும் சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும், சலோமி என்பவரும் இருந்தனர்.41 இயேசு கலிலேயாவில் இருந்த போது அவர்கள் அவரைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்தவர்கள், அவருடன் எருசலேமுக்கு வந்திருந்த வேறுபல பெண்களும் அங்கே இருந்தார்கள்.

இயேசுவின் அடக்கம் (மத் 27:57 - 61; லூக் 23:50 - 56; யோவா 19:38 - 42) 42 இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று ஓய்வுநாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால்,43 அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்.44 ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து, ' அவன் இதற்குள் இறந்து விட்டானா? ' என்று கேட்டான்.45 நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான்.46 யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார்; அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார்.47 அவரை எங்கே வைத்தனர் என்பதை மகதலா மரியாவும் யோசேப்பின் தாய் மரியாவும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதிகாரம் 16

இயேசு உயிர் பெற்று எழுதல் (மத் 28:1 - 8; லூக் 24:1 - 12; யோவா 20:1 - 10) 1 ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் அவரது உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கினர்.2 வாரத்தின் முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் அவர்கள் கல்லறைக்குச் சென்றார்கள்.3 ' கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்? ' என்று அவர்கள் ஒருவரோடு ஒருவர் கேட்டுக் கொண்டார்கள்.4 ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல்.5 பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள்.6 அவர் அவர்களிடம், ' திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம்.7 நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ' உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள் ' எனச் சொல்லுங்கள் ' என்றார்.8 அவர்கள் கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்; நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள்.

4.முடிவுரை உயிர்த்தெழுந்த இயேசு தோன்றுதல் (மத் 28:9 - 10; யோவா 20:11 - 18) 9 ( வாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார்.10 மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள்.11 அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.

சீடர் இருவருக்கு தோன்றுதல் (லூக் 24:13 - 15) 12 அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார்.13 அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை.14 இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதை நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார்.

நற்செய்தி பறைசாற்ற அனுப்புதல் (மத் 28:16 - 20; லூக் 24:36 - 49; யோவா 20:19 - 23; திப 1:6 - 8) 15 இயேசு அவர்களை நோக்கி, ' உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்;18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் ' என்று கூறினார்.

இயேசுவின் விண்ணேற்றம் (லூக் 24:50 - 53; திப 1:9 - 11) 19 இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.20 அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.)