திரைக்கவி திலகம் அ. மருதகாசி பாடல்கள்/பாவலர்க்குப் பாராட்டு!

விக்கிமூலம் இலிருந்து

பாவலர்க்குப் பாராட்டு!

கி.மு, கி.பி. என்று காலத்தைக் கணக்கிடுவார்கள். இந்திய மண்ணைப் பொறுத்தவரை சுதந்திரத்துக்கு முன் என்றும் பின்னென்றும் நம்மை நாம் கணக்கிட்டுக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். அந்த வகையில் இந்நூலாசிரியர் சுதந்திரத்துக்கு முற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஒரு நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் அவரும் ஒன்றாகவே கலையுலகில் காலடி எடுத்துவைத்தவர்கள். நான் ஒரு நாடகம் எழுதினேன். அதன் பெயர் : ”சூறாவளி” குடந்தையில் அரங்கேறிற்று அதன் பாடலாசிரியர் அவர்.

அவர் எழுத்திலே தமிழ் மரபிருக்கும், தமிழின் தரமிருக்கும், தமிழ்ப் பண்பாட்டின் பழைய மிடுக்கிருக்கும், புதிய பார்வையுமிருக்கும். அவர் ஒரு கவிஞர்; அல்ல, அதற்கும் மேலானவர். ஒரு நல்ல நண்பர்.

விலைக்கு எழுதும் வியாபார நோக்கு அவருக்கு இருந்ததில்லை. கலைக்கு எழுதும் கற்பனை போக்கு மிக்கவர். அவர்தான் மருதகாசி அவரை நான் மரியாதைகாசி என்பேன். அவர் தம் காரோட்டியைக் கூட அண்ணே வாங்க போங்க என்றே அழைப்பார்.

விவசாயி வியாபாரி ஆக முடியாது வியாபாரி விவசாயி ஆகக்கூடாது என்று ஆன்றோர் சொல்லுவர். பாரம்பரியமான இந்த விவசாயி, வியாபாரி ஆனார். அதுவும் திரைப்படத் தயாரிப்பில், அதுதான் தாளாத தளர்ச்சியையும் முதிர்ச்சியையும் அவருக்குத் தந்துவிட்டது.

அத்தடைகளையும் மீறி தமிழும் ஆர்வமும் அவரைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான படங்களுக்கு ஆயிரக்கணக்கில் பாடல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் ஒரு சில, தமிழ்க் கரங்களிலே தவழ ஒரு புத்தக வடிவெடுத்து வருகின்றன. தமிழ்த் திரைப்பட சரித்திரப் பாட்டையில் இது ஒரு சுவடு. பாடல்களுக்குப் பின்



ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. வரிசைப் படுத்தினால், இந்த இலக்கியம் நடந்து வந்த சுவடும், கடந்து வந்த காலப் போக்கும் இன்னதென்று புரியும். பாடல்களை இனம் பிரித்து வகைப்படுத்தியிருக்கிறார்.

"ஏர் முனைக்கு நேர் எதுவுமே இல்லை" என்று எழுதிய இவரது விவசாயப் பாடல்களுக்கு 'நேர்' திரைப் பாடல்களில் எதுவுமே இல்லை.

பல வருடங்களாக ஒவ்வொரு தைத்திங்களும், வானொலியில் ஒலிக்கும் இவரது "தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்" என்ற பாடலுடன் தான் பிறந்து கொண்டிருக்கிறது.

"கனியில் ஊறிடும் சுவையை மீறிடும் இனிமை தருவது உண்மைக் காதலே" ஆம்! கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்திடும் வண்ணத் தமிழ்ப் பெண்கள் உலா வரும், இவரது பாடல்களின் மேல் மக்களுக்கு உள்ள காதல் கனியில் ஊறிடும் சுவையை மீறிடும் இனிமையை இன்றும் தருவது உண்மையே.

"நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே" என்று நெஞ்சை உருக வைக்கும் சோக கீதங்கள்.

"வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே" எனும் தத்துவப் பாடல்கள், இப்படி இன்பம், துன்பம், சமூகம், தத்துவம், நகைச்சுவை, என்று எத்தனையோ வகையான இறவாப் பாடல்களை இவரது பேனா முனை தந்திருக்கிறது.

ஆக, கலையும் இலக்கியமும் நமக்கு இருக்கிறது என்பதற்குச் சான்றாகத் தம் அனுபவங்களையும், அறிவின் திறத்தையும் தமிழ்த் தொண்டாக்கி அரும்பணியாற்றிய பெருந்தகை திருமிகு மருதகாசி அவர்கள் நீடு வாழவும், நிறைபுகழ் பெறவும் இறைவனை வேண்டுகிறேன்.

அன்பன்
A. K. வேலன்