தென்னாட்டு காந்தி/வான் புகழ் வள்ளுவர்

விக்கிமூலம் இலிருந்து

◯ 60-ஆண்டு நிகழ்வு
◯ திருவள்ளுவரின்
◯ நினைவுக்குத்
◯ தாபல் தலைகள்
◯ சாட்சியாகின்றன.
◯ பாரதி, வ. உ. சி.
◯ கட்டபொம்மன்,
◯ கவிமணி போன்றோர்
◯ களையும் அரசு மதித்துப்
◯ போற்றவேண்டும்.
◯ தியாகமும் புலமையும்
◯ அப்போது தானே
◯ நிறக்க முடியும்!...


 
வான் புகழ் வள்ளுவர்
 

வான் புகழ் வள்ளுவர்

ஆம்; தமிழரசுக் கழகத்தின் நடை முறைச் சரித்திரப் புத்தகத்திலே மற்றுமொரு வெற்றி ஏடு நம் கண் முன்னர் விரிந்திருக்கிறது. ‘அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ என்னும் சிறப்புப் பெற்ற தமிழ் மறையை இயற்றியருளிக் காலத்தை வென்ற தெய்வத் திருவள்ளுவரின் இவ் வெற்றியே நமது வெற்றியுமாகும்.

தமிழ்ச் சமுதாயத்தின் சிறப்பு மிகுந்த வாழ்வுக்கும், சீர்கொண்ட வளத்துக்கும் ஏற்றம் தரும் வகையில், அன்றிலிருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறது தமிழரசுக் கழகம். நேர்மைமிக்க தமிழ் உள்ளங்களிலே தன்னேரில்லாத் தனித் தலைவராகக் கொலு வீற்றிருப்பவர் சிலம்புச் செல்வர் அவர்கள். தமது அயராத் தொண்டின் மூலமாகவும், சலியாத உழைப்பின் வாயிலாகவும் தமிழகத்திற்கு அவர்கள் செய்துள்ள நன்மைகள் பலவுண்டு. அந் நன்மைகளிலே மற்றுமொரு தலைசிறந்த வெற்றி-போற்றுதலுக்குகந்த ஒரு நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி பதினைந்தாம் நாளில் நடந்தது. அது சாமானியமான நிகழ்ச்சியல்ல; மத்திய அரசாங்க முத்திரை பெற்றதாகும். தபால் தலைகளிலே, வான் புகழ் வள்ளுவரின் திருவுருவப் படம் பொறிக்கப்பட்டிருக்கின்ற இன்ப நிகழ்ச்சியையே குறிப்பிடுகிறோம்.

வடதிசைக் கவிஞர்களின் உருவப் படங்களைத் தபால் தலைகளில் அரசினர் அமைத்த போழ்திருந்து, நம் தமிழ் மண்ணைச் சார்ந்த புலமை சான்ற கவிஞர் திலகங்களின் உருவங்களையும் தபால் தலைகளில் வெளியிட வேண்டுமென்று முதன் முதலில் அரசுக்கு எடுத்துச் சொல்லி, பின்னர் இந்நாள் வரை, நேரிலும், கடிதங்களின் தொடர்பிலும் வாதம் புரிந்து, இன்றைக்குச் சோதனைகள் பலவற்றிலிருந்து மீண்டும் சாதனை பெற்றிருக்கிறார் செந்தமிழ்ச் செல்வர்; தம்முடைய தனிப் பெரும் வெற்றியின் வழியாகத் தமிழகத்தின் மக்கள் அனைவருக்குமே அமைதியையும், ஆனந்தத்தையும் பெருமையையும் தேடித் தந்திருக்கிறார்.

அஞ்சல் துறையில் புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர் திரு டாக்டர் ப. சுப்பராயன் அவர்களை நாம் இதயம் ஒன்றிய நன்றியுணர்ச்சியுடன் பாராட்டுகின்றோம்; பணிவன்புடன் நன்றி நவில்கின்றோம். தமிழர் ஒருவர் மத்திய அரசியல் அமைச்சர் பதவி ஏற்றவுடன் தமிழகத்திற்கு விளைந்த இம்மூதல் வெற்றியை ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்றென்றும் நினைவிற்கொள்ளும்.

‘பாமுறை தேர் வள்ளுவர் முப்பாலான, ‘திருக் குறளின் அருமை பெருமை அளவிடற்பாலது. உலகத்தின் பிறமொழிகள் பலவற்றிலும் நம் தெய்வத் தமிழ் மறை மொழிபெயர்க்கப்பட்டிருப்பது ஒன்றே இதன் வெற்றிச் சிறப்புக்கு ஓர் உயரிய எடுத்துக்காட்டு. பொய் உலகில் அவதரித்து, நிலையில்லாத வாழ்வெனும் ஆடுகளத்தில் அங்கம் வகிக்கும் மனித ஜாதிக்கு. இந்தக் குறள் ஒளி காட்டும் ஒரு கைவிளக்கு. அரசியலாருக்குப் படிப்பினை தரும் அற்புதமான பாடப் புத்தகம் தமிழ்ப் பண்பு துலங்கும் மனைகளுக்கு இது ஒரு மனை விளக்கு! “திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளைத் தமிழின் மூலமே படிக்கவேண்டு மென்பது என்னுடைய ஆவலாகும்!” என்று அண்ணல் காந்தியடிகள் முன்னர் கூறியிருப்பதை யார் தாம் மறப்பர்?

இத்தகைய சிறப்புமிக்க தெய்வமறையை அருளிய திருவள்ளுவரின் திருவுருவத்தைச் சிறப்பாக வரைந்த திரு கே. ஆர். வேணுகோபால சர்மா அவர்களுக்கும் நம் பாராட்டு உரியது.

நாளது வைகாசி மாதத்தில் வரயிருக்கின்ற தெய்வப் புலவர் வள்ளுவனாரின் நினைவு நாளுக்கு இந்நிகழ்ச்சி நல்லதொரு முன்னோட்டம் போன்று அமைந்திருப்பதில் மகிழ்வு பெறுகிறோம், பாட்டுக்கொரு புலவன் பாரதி, கப்பலோட்டிய செம்மல் வ. உ. சி-இப்படி, தமிழகத்தின் பெருமைக்கும் தமிழ் மொழியின் நலனுக்கும் பணி புரிந்த தகைமையாளர்களின் திருவுருவங்களையும் தொடர்ந்து தபால் தலைகளில் அமைத்து வெளியிடுவதில் திரு சுப்பராயன் அவர்கள் மனப்பூர்வமாகக் கருத்துச் செலுத்துவாரென்றும் நாம் நம்புகின்றோம்.