நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/ஆண்டவனின் பகைவனே!

விக்கிமூலம் இலிருந்து

91. ஆண்டவனின் பகைவனே!

சண்டை நடந்து கொண்டிருக்கும் போது அபூ ஸூப்யான் எதிரிலுள்ள குன்றின் மீதேறி, “இங்கே முஹம்மது இருக்கின்றாரா?” என்று கேட்டார்.

அதற்கு மறுமொழி கூற வேண்டாம் எனப் பெருமானார் கட்டளை இட்டிருந்ததால், யாருமே பதில் அளிக்காமல் இருந்தனர். அதன்பின், அபூபக்கர், உமர் இருவர் பெயரையும் சொல்லி அழைத்தார் அபூஸூப்யான்.

அதற்கும் பதில் கிடைக்காததால், “எல்லோரும் மாண்டுவிட்டனர். அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், பதில் கூறி இருப்பார்கள்” என்று உரக்கக் கூவினார் அபூஸூப்யான்.

அவர் அவ்வாறு கூறியதைப் பொறுக்க முடியாமல் ஹலரத் உமர், “ஆண்டவனின் பகைவனே! உன்னைக் கேவலப்படுத்துவதற்காகவே நாங்கள் எல்லோரும் உயிருடனேயே இருக்கிறோம்” என்று சொன்னார்கள்.

உடனே அபூஸூப்யான், “ஏ ஹூபலே (குறைஷிகளின் முக்கிய விக்கிரகம்) நீ உயர்ந்திருப்பாயாக" என்று கூறினார்.

அதைக் கேட்டதும் பெருமானார் அவர்களின் உத்தரவுப்படி தோழர்கள் எல்லோரும் “ஆண்டவனே உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கின்றான்” என உரக்கக் கூறினார்கள்.

ஆண்டவனுடைய ஏகத்துவத்துக்குப் பங்கம் உண்டாகக்கூடிய சொற்களை, அபூஸூப்யான் கூறியதைப் பெருமானார் அவர்கள் கேட்டதும், அவர்களால் மறுமொழி கூறாமல் இருக்க முடியவில்லை.

அதன்பின் அபூஸூப்யான், “ எங்களிடம் உஸ்ஸா (இதுவும் குறைஷிகளின் விக்கிரகத்தின் பெயர்) இருக்கின்றது. உங்களிடம் இல்லை” என்று கூறினார்.

உடனே, “ஆண்டவன் எங்களுக்கு எஜமானனாக இருக்கின்றான். உமக்கு எஜமானன் இல்லையே?" என்று சொன்னார்கள் தோழர்கள்.

அப்பொழுது அபூஸூப்யான், “இன்று பத்ருடைய நாளுக்குப் பழி வாங்கிவிட்டோம். எங்களுடைய படைகள், இறந்தவர்களின் காதுகளையும், மூக்குகளையும் அறுத்து எறிந்தன. அவ்வாறு செய்யுமாறு நான் கட்டளையிடவில்லை. ஆனால், அப்படிச் செய்ததாகத் தெரிந்ததும், அதைப் பற்றி எனக்கு வருத்தமும் இல்லை” என்று கூறினார்.