நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/கொலை செய்யச் சதி

விக்கிமூலம் இலிருந்து

101. கொலை செய்யச் சதி

யூதர்களுள் ஒரு பிரிவினரான பனூ நலீர் கூட்டத்தார் முஸ்லிம்களுக்கு விரோதமாகக் கிளம்பினார்கள்.

அவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் நட்புறவு உடன்படிக்கை முன்னர் ஏற்பட்டிருந்தது. அந்த உடன்படிக்கையின் படி, நஷ்டஈடு சம்பந்தமாக அவர்களும், முஸ்லிம்களுக்கு உதவி புரிய வேண்டியிருந்தது. அதைக் கேட்பதற்காகப் பெருமானார் அவர்கள், பனூ நலீர் கூட்டத்தாரிடம் சென்றார்கள். ஆரம்பத்தில் அந்தக் கூட்டத்தார் உதவி செய்வதாகப் பாவனை செய்தார்கள். ஆனால் பெருமானாரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க மறைமுகமாகச் சதி செய்திருந்தார்கள்.

பெருமானார் அவர்கள் ஒரு சுவரின் பக்கமாக உட்கார்ந்திருந்தார்கள். அந்தச் சுவரின் மேல் ஒரு பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது. அதைப் பெருமானார் அவர்களின் மீது தள்ளி விடுவதற்காக, ஒரு யூதர் மாடிக்குச் சென்றார். அந்தக் கல்லைத் தள்ள முயன்றும், அவருடைய நோக்கம் நிறைவேறவில்லை. பெருமானார் அவர்களுக்கு உதிப்பாக இச்செய்தி தெரிந்ததும் அங்கு இருந்து திரும்பி விட்டார்கள்.