நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/சமாதான உடன்படிக்கை

விக்கிமூலம் இலிருந்து

9. சமாதான உடன்படிக்கை

அரேபியாவில் குறைஷி வம்சத்தாருக்கும், கைஸ் வம்சத்தினருக்கும் பெரிய சண்டை நடந்தது. இச்சண்டையில் குறைஷி இனத்தவர் அனைவரும் ஈடுபட்டிருந்தனர்.

இச்சண்டைக்கு அபூதாலிப் அவர்களும் செல்ல வேண்டியதாயிற்று. பெருமானார் அவர்களும் உடன் சென்றார்கள்.

சண்டையோ வெகு உக்கிரமாக நிகழ்ந்தது. முதலில் குறைஷி இனத்தார் வெற்றி பெற்றனர். அடுத்து கைஸ் இனத்தவர் வெற்றி பெற்றனர். முடிவில் இரு தரப்பாரும் சமாதானம் ஏற்படுத்திக் கொண்டனர்.

சண்டையின்போது பெருமானார் அவர்கள் அங்கே இருந்த போதிலும் அதில் அவர்கள் ஈடுபடவில்லை. அவர்களுக்கு அப்பொழுது வயது பதினான்கு!

இத்தகைய சண்டைகள் நாட்டில் அடிக்கடி நிகழ்ந்து வந்ததால், கொலைகள், கொள்ளைகள் பெருகி, அதனால் பல குடும்பங்கள் அழிந்து போயின; எனவே இவை தலைவர்கள் பலருக்கு வேதனையை உண்டாக்கின. ஆகையால் இனி இத்தகைய சண்டைகள் நிகழாமல் இருப்பதற்காக, அவர்கள் ஒரு சங்கத்தை நிறுவி, ஓர் உடன்படிக்கையை உருவாக்கினார்கள்; அதில் கீழ்க் காணும் ஐந்து நிபந்தனைகள் முக்கியமானவை:

1. தீய நடவடிக்கையை ஒழிக்கவேண்டும்.

2. மக்கள் அனைவரும் அச்சமின்றி வாழுமாறு செய்ய வேண்டும்.

3. வழிப்போக்கருக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரவேண்டும்.

4. ஏழை-எளியவர்களுக்கு உதவி புரிய வேண்டும்.

5. துன்புறுத்துபவனைத் தண்டித்து, துன்பப்படுபவனுக்குப் பரிகாரம் தேடிக் கொடுக்க வேண்டும்.

இந்த உடன்படிக்கை நிறைவேறுவதற்குப் பெருமானார் அவர்களே முக்கிய காரணமாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.