நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/தீங்கும் - கடனும்

விக்கிமூலம் இலிருந்து

201. தீங்கும்-கடனும்

பெருமானார் அவர்கள், அருகில் இருந்தவர்களை நோக்கி “எவருக்காவது நான் தீங்கு இழைத்திருந்தால், அதற்கு ஈடு செய்ய இப்பொழுது நான் தயாராக இருக்கிறேன்” என்றார்கள்.

எவருமே அதற்குப் பதில் சொல்லவில்லை.

பின், “யாருக்காவது நான் கடன்பட்டிருந்தால், என்னிடத்தில் இருப்பவற்றைக் கொண்டு, அதைத் தீர்க்கத் தயாராக இருக்கிறேன்.” என்று கூறினார்கள் பெருமானார் அவர்கள்.

கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து, "ஆண்டவனுடைய தூதரே! முன்பு ஒரு சமயம், தங்களிடம் வந்து கேட்ட ஓர் ஏழைக்கு, மூன்று நாணயங்கள் கொடுக்கும்படி எனக்கு உத்தரவிட்டீர்கள். அப்போது நான் கொடுத்திருக்கிறேன். தாங்கள் எனக்குத் தர வேண்டியதிருக்கிறது” என்று சொன்னார்.

உடனே பெருமானார் அவர்கள், அம்மூன்று நாணயங்களை, அப்போதே அவருக்குக் கொடுத்து விடுமாறு பஸ்லுப்னு அப்பாஸ் (பெருமானாரின் ஒன்று விட்ட சகோதரர்) அவர்களுக்குக் கட்டளையிட்டு விட்டு, “மறு உலகில் நான் வெட்கப்படுவதைக் காட்டிலும், இவ்வுலகில் வெட்கம் அடைவது மேலானது” என்று கூறினார்கள்.

பின்னர், பெருமானார் அவர்கள், அங்கு வந்திருப்பவர்களுக்காகவும், பகைவர்களின் கொடுமையினால், உயிர் துறந்த முஸ்லிம்களுக்காகவும் பிரார்த்தனை செய்தார்கள். அதன்பின், "மதக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற வேண்டும் என்றும், சமாதானத்துடனும், நல்லெண்ணத்துடனும் இருக்கவேண்டும்", என்றும் கூறி விட்டுக் கடைசியாக, “உலகத்தில் பெருமையை நாடாமலும், மற்றவர்களுக்குக் கெடுதலைத் தேடாமலும், இருந்தவர்களுக்காகவே மறுமை உலக வீட்டை வைத்திருக்கிறோம். ஆண்டவனுக்குப் பயப்பட்டுப் பாவச் செயல்களிலிருந்து விலகிய வர்களுக்கு நன்மையான முடிவு ஏற்படும்” என்ற கருத்துள்ள திருக்குர்ஆன் வாசகத்தை ஓதி முடித்து வீட்டுக்குச் சென்றார்கள்.

அதற்குப்பின் பெருமானார் அவர்கள் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லவில்லை.