நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/போர் முனைக்கு ஓடிவந்தனர்

விக்கிமூலம் இலிருந்து

94. போர்முனைக்கு ஓடி வந்தனர்

முஸ்லிம்களில் ஆண்களும், பெண்களும், பெருமானார் அவர்களிடத்தில், எத்தகைய அன்பும் விசுவாசமும் கொண்டிருந்தார்கள் என்பதை வரலாற்று நிகழ்ச்சிகள் நிரூபிக்கின்றன.

பகைவர்களின் தாக்குதல் பலமாயிருக்கும் போது, முஸ்லிம் வீரர்களில் சிலர் போர்முனையை விட்டு மதீனாவுக்கு ஓடி விட்டனர்.

அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றதும், அவர்களுடைய மனைவியர்களுக்கு நிகழ்ந்தவை தெரிந்ததும், “நாயகத்தைப் போர்க் களத்தில் விட்டு விட்டு, நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள்?” என்று இடித்துக் கூறினர்.

சண்டையின் நிலைமை மதீனாவுக்குத் தெரிந்ததும், எத்தனையோ பெண்கள் பெருமானார் அவர்களைக் காண்பதற்காகப் போர் முனைக்கு விரைந்தனர். அவர்கள் அனைவரும் போர்க் களத்தில் மாண்டு போன நெருங்கிய உறவினர்களுக்காகவோ அல்லது காயம் அடைந்தவர்களுக்காகவோ அவ்வளவு கவலையுறவில்லை. பெருமானார் அவர்களின் நலத்தைப் பற்றியே ஒவ்வொருவரிடமும் வழியெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.