நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/விருந்தில் விஷம்

விக்கிமூலம் இலிருந்து

145. விருந்தில் விஷம்

கைபரின் சண்டை முடிந்ததும், அங்குள்ள நிலைமைகளைச் சீர்படுத்தி, ஒழுங்கு செய்ய, பெருமானார் அவர்கள் சில நாட்கள் அங்கே தங்கினார்கள்.

நாயகம் அவர்கள், யூதர்களுக்கு அமைதியை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களுடன் சமாதானமாயிருந்தும், யூதர்களின் தொல்லை நீங்கியபாடில்லை.

பெருமானார் அவர்கள் கைபரில் தங்கி இருந்த போது, ஒரு யூதப் பெண் பெருமானார் அவர்களையும், அவர்களுடைய தோழர்கள் சிலரையும் விருந்துக்கு அழைத்தார்.

பெருமானார் அவர்களும் சம்மதித்து, அவள் வீட்டுக்குச் சாப்பிடச் சென்றார்கள்.

இறைச்சியில் நஞ்சு கலந்து பெருமானார் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் உணவு படைத்தாள்.

பெருமானார் அவர்கள் ஒரு இறைச்சித் துண்டை எடுத்து வாயில் வைத்ததுமே, நஞ்சு கலந்துள்ளதை அறிந்து, அதைத் துப்பி விட்டார்கள். உடன் இருந்த தோழர் பிஷ்ரு அந்த இறைச்சியை உண்டு உயிர் துறந்தார்.

பெருமானார் அவர்கள், அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்தார்கள்.

அந்தப் பெண், “தாங்கள் உண்மையில் நபிதானா என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்காகவே, நஞ்சைக் கலக்க ஏற்பாடு செய்தோம். தாங்கள் உண்மையில் நபியாய் இருந்தால், இந்த விஷம் தங்களை ஒன்றும் செய்யாது. அவ்வாறு இல்லாமல், தாங்கள் மற்ற அரசர்களைப் போன்று ஓர் அரசராக இருந்தால், இந்த விஷம் தங்களைக் கொன்று விடும். அதனால், தங்களிடமிருந்து விடுதலை கிடைக்கும்” என உண்மையைக் கூறினாள். தங்களைக் கொல்ல முயன்றதற்காக நாயகம் அவர்கள், அவளுக்குத் தண்டனை எதுவும் கொடுக்கவில்லை.