நான்மணிக்குறள்/நீத்தார் பெருமை

விக்கிமூலம் இலிருந்து


                                   3. நீத்தார் பெருமை


                          1. புலன்களை வென்ற புனிதன் பெருமை
                            நிலத்தினும் தான்பெரிதாம் நீடு.
                          2. வாழ்வெலாம் தொண்டாற்றித் தூயநெறி நின்றாரை
                            வாழ்கின்ற தெய்வமென வாழ்த்து.
                          3. தன்னல மின்றிப் பொதுநலமே பேணுவார்
                            இன்னலையும் செய்தவமா ஏற்று.
                          4. நீத்தாரைத் துன்புறுத்தின் செய்துன்பம் தீங்குதனை
                            கோர்த்தார்மேல் செல்லும் குறித்து.  
                          5. யாவர்க்கும் துன்பின்றி நோற்பார்க்குத் துன்புசெயின்
                            கூவி அழைத்திடுமாம் கூற்று.   
                          6. நோற்பார் பொறுமையை எள்ளற்க, எள்ளுவார்
                             தோற்பார் முயற்சி தொடர்ந்து.
                     
                          7. எல்லா உயிரும் தமதென்றே எண்ணுவோரைப்
                            பொல்லாரும் போற்றும் புகழ்ந்து.
                          8. மனம்வாக்குக் காயம் கடந்த, மறை யோனை
                            நினைவில் இறையாய் நிறுத்து!
                          9. ஐம்புலக் கள்வர்களை வென்றடிமை கொள்பவர்கள்
                            இம்மையில்யாம் கண்ட இறை.
                         10. உலகும் அரசும் உயர்தெய்வம் யாவும்
                            நிலவுமவர் வாக்கினில் நீடு.