நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு.நாராயணசாமி பிள்ளை

விக்கிமூலம் இலிருந்து
திரு.நாராயணசாமி பிள்ளை

இவர் சுப்பிராயாசாரி கம்பெனியில் அரிச்சந்திரா நாடகத்தில் மயானத் தோட்டியாக நடித்தவர். அந்த கம்பெனி பிரிந்த பிறகு தானாக ஒரு நாடக கம்பெனியை ஏற்படுத்தி முக்கிய பாத்திரங்களை நடித்து வந்தார். இவரது சங்கீதம் அவ்வளவு உயர் தரம் அல்ல. ஆயினும் நடிப்பதில் கெட்டிக்காரர். இவர் நடித்ததைப் பன்முறை பார்த்திருக்கிறேன்; ஒரு முறை தன் கம்பெனியை அழைத்துக் கொண்டு இலங்கைக்குப் போய் பல நாடகங்கள் நடித்தார். இவர் தமிழ் நாடகத்திற்கு முக்கியமாக செய்த தொண்டு, அச் சமயம் இலங்கையில் பிரபலமாயிருந்த கண்டிராஜன் கதையை நாடகமாக எழுதச் சொல்லி மிகவும் நன்றாய் நடித்ததேயாம். அந்த நாடகத்திற்காக கண்டி அரசர்கள் முதலியோர் அக் கதை நிகழ்ந்த காலத்தில் எந்தெந்த உடையை தரித்தார்களோ அதே மாதிரியாக கொஞ்சமும் மாறுபாடில்லாமல் நடிகர்களை உடைகள் தரிக்கச் செய்து நடத்தியதேயாம். இது தான் முதல் முதல் காலத்திற்கேற்ற கோலம் நடிகர்கள் பூண்டது என்று ஒருவாறு நான் கூறக்கூடும் இதன் பிறகுதான் மற்ற நாடக சபைகள் (சுகுண விலாச சபையார் உட்பட) இந் நல் வழக்கத்தைத் தொடர ஆரம்பித்தது என்று கூறலாம்.