நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/வி. வெங்கடாசலையா

விக்கிமூலம் இலிருந்து

வி. வெங்கடாசலையா

இவர் ஒரு தெலுங்கு பிராமணர். ஆயினும் தமிழில் எழுதவும் படிக்கவும் நன்றாய் கற்றவர். மேற்சொன்ன ஓரியண்டல் டிராமடிக் சொசைட்டியில் முதலில் பல வருடங்கள் நடித்தவர். இவர் சில்லரை பாத்திரங்கள் ஆடுவதில் சமர்த்தர் என்று பெயர் பெற்றார். ஆயினும் தோட்டி முதல் தொண்டமான் வரையில் ஆடுவதில் நிபுணர். ஆயினும் நாடக வேஷம் தரிப்பதிலும் மற்றவர்களுக்குப் போடுவதிலும் இவருக்கு இணையில்லை என்றே நான் கூறவேண்டும். ஓ, டி. சொசைட்டி கலைந்த பிறகு சுகுண விலாச சபையைச் சேர்ந்தார், சேர்ந்து ஆயுள் பர்யந்தம் எங்களுக்கெல்லாம் வேஷம் போடுவதில் சந்தோஷமாய் கழித்தார் என்றே நான் சொல்ல வேண்டும். இவர் உயிருடன் இருந்த வரையில் இவரே எனக்கு வேஷம் போடவேண்டுமென்று பிடிவாதம் பிடிப்பேன், இவர் எங்கள் சபைக்காக நந்தனார் சரித்திரத்தை தெலுங்கில் எழுதிக்கொடுத்தார். அன்றியும் பாரிஜாத அபகரணம், ராணி சம்யுக்தா முதலிய நாடகங்களை எழுதியதுமன்றி தக்கபடி நடிகர்களை தேற்றுவித்து தானும் நடித்து தெலுங்கு பிரிவில் நல்ல பெயர் பெற்றார். மேலும் மாலியர் என்னும் பிரெஞ்சு தேசத்து ஹாஸ்ய நாடகக்கவி எழுதிய ஓர் நாடகத்தை தெலுங்கில் மொழி பெயர்த்து வெகு விமரிசையாய் நடத்தினார். அந்நாடகத்தின் பெயர் 'விதிலோக வயித்தியுடு' என்பதாம். இவர் ஒரு முறை உத்தர ராம சரித்திரத்தில் ஒரே இரவில் பதினோறு வேடங்கள் தரித்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. அன்றியும் புதிய சமூக நாடகத்திற்கு எங்கள் சபையார் பொற் பதக்கம் அளிக்க முன்வந்தபோது தெலுங்கில் 'உபய பிரஷ்டம்' என்னும் நாடகத்தை எழுதி பொற்பதக்கம் பரிசு பெற்றார். இவரது அகால மரணம் எங்கள் சபை செய்த துரதிர்ஷ்டமாகும்.