நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/19. பெருமை

விக்கிமூலம் இலிருந்து

19. பேருண்மைகள்
(பெருமை)

எது உண்மை? நன்மை தருவது உண்மை; அதுவே மெய்ப்பொருள் ஆகும். இந்த வாழ்க்கைக்கு என்ன பொருள்? பிறர்க்கு ஈய முடிவதில்லை; அதற்கு வேண்டிய உள்ளம் குறைகிறது; பொருளும் அருகுகிறது. வாரி வழங்கக்கூடிய வழி இல்லை. எதற்காக வாழ்வது? இளமை நாம் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே நம்மை விட்டு அகல்கிறது இளமை இன்பம் தருவது. ஆனால் அதை நம்ப முடிவதில்லை; காதலித்துக் கூடிய காரிகையரும் பேதலித்து விட்டு விலகுகின்றனர். தாய்மை அவர்களை ஈர்ப்பதால் கட்டியவனோடு தொடர்ந்து உறவாடுவது இல்லை; அவர்களும் ஏதோ பேருண்மை காண்பதில் நாட்டம் கொண்டு இயங்குகின்றனர். காதல் மக்களும் முற்றிய முதுமையில் நம்மை விட்டு விலகிவிடுகின்றனர்; ஊன்று கோலாக இருப்பவர் என்று எண்ணியது தவறு ஆகி விடுகின்றது. பாசம் வைத்த மக்கள் நேசம் மறந்து தனித்துப் போய்விடுகின்றனர். அதனால் இந்த உலக வாழ்வில் பற்றுக் கொள்ளுதலும் அதற்காக நம்மை நாம் விற்றுக் கொள்ளுதலும் அறியாமை ஆகும். பற்றுகள் நீக்கில் அடுத்தது யாது? மெய்ப் பொருள் என்று காண்பதற்கு அடிப்படை துறவுள்ளம்; அந்தத் துறவோடு உறவு கொள்வதே உறுதிபயப்பதாகும்.

இல்வாழ்க்கைதான் நல்வாழ்க்கை என்று அதில் அகப்பட்டு உழல்கின்றோம். அதுதான் காப்பு; இங்கு அதுதரும் இன்பமும் சுகமும் எதுவும் தராது என்று எப்பொழுதும் அந்தச் சிறு உலகத்தைச் சுற்றியே நம் கற்பனைகள் சென்று வருகின்றன. என் வீடு, என் மனைவி, என் மக்கள் என்று எண்ணி எண்ணி அதற்காகவே அல்லும் பகலும் உழைத்து வருகிறோம். என்ன சுகம் காண்கிறோம்? சிக்கல் நிறைந்தது இல்வாழ்க்கை; எப்பொழுதும் ஏதாவது ஒரு பிரச்சனை உருவாகி வருகிறது! என்றுமே ஏதாவது தொல்லைகள் நம் எல்லைகள் என அமைகின்றன. எனக்கு என்ன குறை? வசதிகளைப் பற்றிப் பேசி இவைதாம் வாழ்வியல் என்று கருதி உயர் உண்மைகளை நம் கட்டுக்குள் மறந்து வாழ். எதுவும் நிலைப்பது இல்லை, நம் கட்டுக்குள் அடங்குவது இல்லை; இவ்வளவும் தெரிந்தும் அதே சேற்றில்தான் உழல்கிறோமே தவிரக் காற்று வாங்கிச் சுகப்பட விரும்புவதில்லை. வெட்ட வெளிதனை மெய் என்று கருதித் தூய வெளிச்சம், காற்று இவற்றையும் சுவாசிக்க முயற்சி செய்வோமாக, மேலான பொருள்களைப் பற்றியும் சிந்தித்து உண்மை காண்போமாக.

வாழ்க்கை ஒரு தொடர்கதை; எங்கேயும் முடிக்க முடிவது போல அமைவது இல்லை. ஏதாவது ஒரு புதிய பிரச்சனை உருவாகிக் கொண்டுதான் வருகின்றது. இளைஞன் “மணமாகிவிட்டால் எல்லாம் சரியாகிப் போய்விடும்; எந்தக் குறையும் இருக்காது. கைப்பிடித்தவள் பானை பிடிப்பாள், அவள் வந்த பாக்கியம் எல்லாம் சிலாக்கியமாக முடியும்” என்று கனவு காண்கின்றான். வந்தபின் எத்தனை போராட்டங்கள்? அமைதி எங்கே? எந்த மூலை முடுக்குகளில் தேடிப்பார்க்கிலும் கிடைக்கவில்லை. புதிதாக வந்தவள் இந்தக் குடும்பத்துப் பிரஜை களை நேசிப்பது இல்லை; பெற்ற தாயும் தந்தையும் அந்நியப்படுத்தப்படுகின்றனர் பின்பு குழந்தைகள் படிப்பு: அவர்களை நிலைநிறுத்துவது; அப்பப்பா முடிவே இல்லை. இவற்றைக் கண்டு மயங்கி இதுதான் இன்ப சுகம் என்று ஆழ்ந்துவிடாதே. இதைவிட மேலான இன்ப சுகம் இல்லை என்று ஆழ்ந்துவிடாதே. இதைவிட மேலான வாழ்வு அமைத்துக் கொள்ள முடியும். சிந்தித்துப்பார். அறிவு உலகம் அழைக்கிறது. மெய்ப்பொருள் காண முயல்க.


மழை பெய்கிறது; பருக நீராக அமைகிறது. ஆனால் மழை எப்பொழுதும் பெய்துகொண்டே இருப்பது இல்லை; கிணற்று நீர் ஊற்றுகள் இருந்து சுரந்து கொண்டே இருக்கிறது. அதுபோல மேன்மக்கள் வருவாய் குறைந்துவிட்டாலும் தாம் சேர்த்து வைத்து செல்வம் கொண்டு பிறர்க்கு உதவிக்கொண்டே இருப்பர். அவர்கள் நன்மை செய்வதிலிருந்து பின்வாங்குவது இல்லை. கீழ்மக்கள் தாழ்நிலையில் இருந்தே செயல்படுவர். செல்வம் மிக்கு இருந்தாலும் பிறர் அல்லல் தீர்க்க முன்வர மாட்டார்கள். பேருண்மை கண்டு பெருமிதத் தோடு வாழ்வதே வாழ்க்கையாகும். உள்ளம் உயர்ந்து பிறர் துன்பத்தைக் குறைக்க முயல்வதே வாழ்வின் மெய்ம்மையாகும்; மெய்யறிவு என்பதும் அதுவே ஆகும்.

ஆற்றுப் பெருக்கு நீர்ப்பெருக்கால் நிலம் செழிக்கச் செய்து பயிர் வளர்க்கும்; உணவு பெருக வழி செய்கிறது. மக்கள் உயிர் வாழ்வுக்கு அடிப்படையாக விளங்குகிறது. மழை இன்மையால் நீர்ப் பெருக்கு இல்லாவிட்டாலும் ஊற்றுநீர்க் கொண்டு மக்கள் நீர் வேட்கையைத் தீர்க்கிறது; குடிக்க நீராகிறது. மேன்மக்கள் இருக்கும் காலத்தில் வாரி இறைப்பர்; இல்லாத காலத்தும் உதவிக் கொண்டே இருப்பர். பசையற்ற நெஞ்சோடு அவர்கள் வாழ்வது இல்லை. உயிர்களிடத்து நசைவுற்ற வாஞ்சையோடு வாழ்வர்; மக்களை எப்பொழுதும் நேசிப்பர்; இதுவும் வாழ்வின் மெய்ம்மையாகும்.

வெள்ளெருதுமேல் சூடுபோட்டால் அது பளிச்சென்று பலர் கண்ணிலும் படும்; “பாவிகள் எருதுக்குச் சூடு போட்டுவிட்டார்களே” என்று பழி பேசுவர். சான்றோர் சிறு தவறு செய்தாலும் அதைப் பறை சாற்றி இகழ்வர்; பெரிதுபடுத்துப் பேசுவர். அதுவே கீழ்மக்கள் எருதைக் கொன்று புசித்துவிடுவர். யாரும் அதைப்பற்றி ஏதும் எடுத்துப் பேசமாட்டார்கள். வெளுத்த துணிமேல் கறை பளிச்சென்று காட்டிவிடும். அதனால் சான்றோர் தவறு செய்வது தவிர்ப்பது நல்லது.

நகைச் சுவை என்பது மென்மையானது. நுட்பமானது; அதைச் சுவைக்க மனஇயல்பு நன்றாக இருக்க வேண்டும். எள்ளிப் பேசுவது மனத்துள்ளலால் விளைவது; பிறரை மகிழ்விப்பது; ரசனையே இல்லாத மண்டுகளிடம் சிரிப்புவரப் பேச முயன்றால் அவர்கள் தம்மை இழிவுபடுத்துவதற்காகவே இவ்வாறு பேசிவிட்டார் என்று சீற்றம் காட்டுவார். அறிவு நிரம்பிய சான்றோர் சலனமற்று வாழ்வர்; அவர்களிடம் குத்தலாகப் பேசினாலும் அவர்கள் குறையாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்; பெருமை பெருமைதான்; சிறுமை சிறுமைதான்.

யாரிடம் எப்படிப் பேசவேண்டும்? எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். புதிதாக மணந்து கொண்டவளிடம் அவள் மகிழப் பேசவேண்டும். “உன் முக்கு என்ன சப்பையாக இருக்கிறதே; நெற்றி மேடாக இருக்கிறதே” என்று விவரித்தால் அவள் உன்னைக் கேடாக நினைப்பாள். “அதி சுந்தரி நீ; வனிதாமணி” என்றால் அவள் உன் உறவுக்கு உடனே படிவாள்; தடித்தனமாக அவளிடம் நடந்துகொள்ளக் கூடாது.

பயில்வானிடம் சண்டைபோடச் செல்கிறாய்; அங்கே அவனிடம் மெல்ல வருடிக் கொண்டு இருக்க முடியாது; தூக்கி எறிய முனையவேண்டும்; முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். வஞ்சகரை நயமாகப் பேசி அவர்களை வெற்றி கொள்ள வேண்டும். நல்லவர்களிடம் நன்மை தோன்ற நடந்து கொள்ள வேண்டும். எங்கே யாரிடம் பேசுகிறோம் என்பது அறிந்து பேசுவது வாழ்க்கையில் வெற்றி தரும்.

முடுக்கிக் கசப்பான வார்த்தைகளைச் சொல்லி இடுக்கிவிட விரும்புகிறான் ஒருவன். கோள் சொல்லி நல்லவனாக நடிக்க விரும்புகிறான். இல்லாதது பொல்லாதது சேர்த்துக் கூட்டிப் பேசுகிறான். நமக்கு நன்மை செய்வது போல் காட்டி அவன் நம் நண்பர்களைப் பிரித்து வைக்க முற்படுவான். அப்பொழுது தலை அசைக்கலாம். ஆனால் நிலைகெடக் கூடாது; ஒளிவிடும் விளக்குப் போல் தம் நிலைமாறாமல் அவன் கூறுவதை எடுத்துக்கொள்ளாமல் அவனை அனுப்பிவிடுவதே தக்கது ஆகும். யார் எது சொன்னாலும் சீர்தூக்கி ஆராய்வது பெருமை தரும்.

உண்பதற்கு முன் அவர்கள் கண் நான்கு பக்கம் பார்க்க வேண்டும். முதற்பிடியை மற்றவர்க்கு என்று எடுத்து வைத்துவிட்டு மற்றபடி உண்ணத் தொடங்க வேண்டும். பிறர் பசித்திருக்கத் தான் உண்பவன் நற்கதியைச் சாரான்; அவன் மனம் அழுக்குப் படிந்ததாக விளங்கும். மனம் மாசு பெற்று மங்கிவிடுவான்.