நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/2. இளமை நிலையாமை

விக்கிமூலம் இலிருந்து

2. இளமை நிலையாது
(இளமை நிலையாமை)

கறுப்பு நிறத்து அழகி; விருப்புற்று அவள் பின் அலைகிறான்; அவனுக்குச் சுருட்டைமயிர் மருட்ட அதனை வாரி முடிக்கிறான்; ‘அழகன்’ என்று தான் அவளிடம் சென்று குழைகிறான்; “அட அறிவிலி! இந்த முடி நரைக்கும்; வெளுக்கும்; மற்றவர்களைப் பார்த்துச் சிரிக்கும்.

இளமை உன் சொத்து; அதனைப் பத்திரப்படுத்து; பவித்திரமான செயல்களைச் செய்க; பாபம் பழி இவற்றை நாடி மருளாதே. இளமையிலேயே சுகங்களைத் துறக்கப் பழகு; அது உனக்கு மிகவும் நல்லது. குழவிப் பருவத்திலிருந்தே பற்றுகளை நீக்குக; துறவு! அதனொடு நீ உறவு கொள்க.

“நீ ஓர் ஆண் அழகன், செல்வன்; அதனால் உன்னைச் சுற்றிப் பெண்விழிகள் வட்டமிடுகின்றன; நண்பர்கள் சுற்றி வருகின்றனர்; அன்பு காட்டி அகமகிழ்கின்றனர். இந்த வாழ்வு என்றும் நிலைக்குமா? உன் சுருள் முடி திரை இடுகிறது; கறைபடிகிறது; முதுமைக்கு உன்னை இழுத்துச் செல்கிறது; நோய் உனக்கு நெருங்கிய நண்பன்; வைத்தியன் இடுக்கண் களைய மறுக்கிறான்; கைவிரித்து விடுகிறான்; வந்தவர் கூடி இருந்தவர், “சீசீ இந்தப் பழம் புளிக்கும்” என்று கூறும் குள்ளநரிகளாகின்றனர்; உன்னை விட்டு விலகுகின்றனர்.

சாவு வெற்றி கொள்கிறது; சங்கு முழங்குகிறது; இதுதான் உன் வாழ்வு; இப்பொழுது இளமை வளர் பிறை; பின் தேய்பிறை; முடிவு இருள்நிறை அமாவாசை.

“பள்ளிக்குச் சென்றவன் வருவான், விரைந்து கொள்ளிபோட,” என்று காத்திருக்கிறார்கள் அவன் சுற்றத்தினர்; வேகாத உடம்போடு ஏகாதே வைத்திருக்கிறார்கள். அவள் அவனுக்குத் தாய்; தாய்க்கு அவன் தலைப்பிள்ளை; அவன் என்ன சொல்கிறான்?

“இவள் எனக்குத் தாய்! இவள் எங்கே சென்றாள், தனக்குத் தாயாகிய ஒருத்தி இருக்கும் இடம் தேடிச் சென்றாள்; அவள் தாய், தன் தாயை நாடிச் சென்றாள். இப்படித் தாயர் சென்ற இடங்களுக்கு என்தாய் சென்றுவிட்டாள். அழுது பயன் இல்லை” என்று ஆறுதல் அடைகிறான். நிலையாமை எது என்று அந்த இளமை உணர்கிறது.

வெறி ஆடும் களத்திற்குச் செம்மறி ஆட்டை அந்த நெறி கெட்ட பூசாரி, கயிறு கட்டி இழுத்துச் செல்கிறான். கையில் பசுந்தழை காட்டி, அதன் பசியை மூட்டி விடுகிறான். பூசாரியை ஆடு நம்புகிறது; எதுவும் சிந்தியாமல் அவன் பின் செல்கிறது. வாலிபப் பிள்ளைகள்! இவர்களுக்கு யார் என்ன சொல்ல முடியும்? மயக்கம்! அவர்கள் காட்டுவது இல்லை தயக்கம்; விரும்புகின்றனர் மகளிர் முயக்கம்; அவர்கள் கதை? முடிவு? நாம் ஏன் சொல்வோம் அதனை மயக்குகிறாள் ஒரு மாது; அழகிறான் இந்தச் சாது; இது இவன் வாழ்க்கைக்கு ஒவ்வாது.

‘வேல் கண்ணள் இவள்’ என்று கருதி, அவள் பின் செல்கிறான்; அவள் ஒரு காலத்தில் கோல் கண்ணள் ஆவது உறுதி; கோல் ஊன்றி நடக்கப் போவது இறுதி; இஃது அவனுக்கு மறதி.

இவனும் கிழம்; முதிர்ந்துவிட்ட பழம்.

“ஏன்யா? எப்படி இருக்கிறாய்? பல் என்ன செய்கிறது?”

“பல்லவி பாடுகிறு!”

“சோறா கஞ்சியா ரொட்டியா?”

“வெறும் இட்டலிதான்”

“எழுபதா எண்பதா? இது வயதைப் பற்றியது.”

இப்படிக் கேட்ட காலம் பழைய காலம். இப்பொழுது சர்க்கரை, கொழுப்பு, இரத்தக் கொதிப்பு இவற்றிற்கு இப்பொழுது எடைகள், அறிவிப்புக் கருவிகள் திசை காட்டுகின்றன.

முதியவர்களைப் பார்த்து மற்றவர்கள் கேட்கும் வினாக்கள் இவை. அவர்களுக்கே பதில் சொல்லிச் சொல்லி அலுத்து விடுகிறது. வேறு என்ன வினவ முடியும்? பிள்ளைகள், பேரன்கள், பேர்த்திகள் என்று கேட்டு அலுத்துவிட்டனர்.

இந்த உடம்பினைத் தவிர்த்து வேறு கேள்விகளில் அவர்கள் தடம் புரள்வதில்லை; அவர்கள் நோக்கம் என்ன? ஏன் இப்படிக் கேட்கிறார்கள்? அவன் உலகுக்குச் சுமை; ஏன் இப்படி இழுபறியாக இருக்கிறான்?” என்பதுதான் வினா. இளமை நில்லாது; முதுமை விலை போகாது; யாரும் மதிக்க மாட்டார்கள், இஃது இயற்கையின் நியதி.

“சரி, வயது ஆகட்டும்; காலம் வரும்; பிறகு தருமம் செய்யலாம்; இப்பொழுது வளமாக வாழலாம்” என்று இயம்புகிறான்.

இறுமாப்பு உடைய இளைஞன் அவன்.

“தம்பி! காற்றடித்தால் பழம் மட்டும் உதிர்வது இல்லை; செங்காயும் சிதைகிறது; உதிர்கிறது; நீண்ட நாள் வாழ்வது உறுதி இல்லை; அதனால், முடிந்த, வாய்ப்புள்ள நாள்களில் எல்லாம் அறம் செய்க! அதுவே தக்கது.

“ஆள் தேடும் படலத்தில் அந்தக் கறுத்தவன் சுற்றிக் கொண்டே இருக்கிறான்; ‘மாதம் இத்தனை வழக்கு’ என்று பதிவு செய்ய வேண்டும் என்பது காவல்துறைக் கட்டளை போலும்! சும்மா இருப்பவனையும்

“வாடா நிலையத்துக்கு” என்று இழுத்துச் செல்வது பழக்கம்; அது காவல் நிலையம்; இந்தக் கறுத்தவனும் இதைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறான். “சின்னப் பையன்தான்; என்றாலும், கள்ள வோட்டுப் போடும் வயது; வா” என்று இழுத்துச் செல்கிறான். அவள் தாய் அலறுகிறாள்! “என்னை அழைத்துப் போகக் கூடாதா! என்று கத்துகிறாள்.

அதனை முன்னால் சொல்லி இருக்கலாமே; அவளுக்கு அந்த யோசனை வரவே இல்லை; பின்புத்தி, இழுத்துச் செல்பவன் காத்து நிற்கிறான்; அதனால் தம்பி! தருமம் செய்; இஃது உன் வாழ்வின் கருமம்.