நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/24. கூடா நட்பு

விக்கிமூலம் இலிருந்து

24. கழுத்தறுப்புகள்
(கூடாநட்பு)

இருக்கும் வீடு ஓலையிட்ட கூரை, அது கிழிச்சல்; சுவர்கள் கசிவு; நீர் அதனைக் குளிர்சாதன அறை ஆக்குகிறது; தரை சேறு, சறுக்கி விளையாடலாம்; வெள்ளம் அணை தேடிக் கதவை முட்டுகிறது. நீர்ப்பஞ்சம் இனி இருக்காது; ஏன் வீடே அடித்துச் சென்றுவிடும். என் செய்வான் பாவம்! நீரை எறித்துக் கரை ஏற்றுகிறான். பெட்டி படுக்கை தட்டு முட்டு ஒட்டை உடைச்சல் இவை தாக்கப்படுகின்றன. அவை காக்கப்படுகின்றன; அந்த வீட்டை விட்டு ஏன் வெளியேற மறுக்கிறான்? அது அவமானம்; பலஹீனம், சுகஈனமும் ஆகிவிடும். நூறு குறையிருந்தாலும் அதைவிட்டு வேறு இடம் பார்ப்பது இல்லை. பொறுத்தே செயலாற்ற வேண்டும். அங்கு வாழவே முடியாது என்றால் அதை விட்டு விலகத்தான் வேண்டும். நட்பும் அப்படித்தான்; பழகியவன் பெருச்சாளி; அடித்து விரட்ட முடியாது. பொறுத்துக் கொண்டு மெல்ல அவனிடம் இருந்து வெளியேறுவதுதான் புத்திசாலித்தனம்.

சீர்மிக்க நல்லோர் நட்பு கார் காலத்து மழை போன்றது; வாழ்வுக்கு உதவுவது. பேர்கெட்ட தீயோர் நட்பு வற்றிய வறற்காலம் போன்றது.

சுவர்க்கம், நரகம் இவை நாம் தேடிக்கொள்வன; நுண்ணுணர்வு மிக்க கண்ணியவான்களின் தொடர்பு சுவர்க்கம்; அறிவு என்பதன் அகராதி இல்லாத முகராசிகளுடன் தொடர்பு சுவர்க்க நீக்கம்; நரகம், இவை நாம் படைத்துக் கொள்வன.

பந்தமோ பாசமே இல்லாது வந்து சேர்ந்த நட்பினர் தொடர்பு காட்டுத் தீ போலப் பற்றும்; வைக்கோற் போர் போல் வானை முட்டும்; பிறகு நெருப்பு இருந்த இடம் கூடத் தெரியாமல் மறைந்துவிடும். மிக்க ஒளிவிட்ட நட்பு தோன்றிய கணத்தில் மறைந்துவிடுகிறது. இது கூடா நட்பு.

நண்பன் என்று அவனை நாடுகிறாய்; வானத்தை வளைத்துக் கயிறாக ஆக்கித் தருகிறேன் என்கிறான்.

8 நிதானமாகச் செய்யத்தக்க காரியங்களையும் செய்யாது ஏய்க்கிறான் “இதோ இன்று; அதோ அன்று” என்று என்றும் பேசிக் காலம் கழிக்கும் குன்று.அவன். அவனைச் சுற்றிக் கொண்டிருப்பது நன்று அன்று; நட்புதான் ஆனால் அதுகூடாத ஒன்று; பயனற்றது.

தொட்டகுளம் ஒன்றுதான்; வெட்ட வெறிச்சம்; அதில் கழுநீர்ப்பூவும் ஆம்பலும் பக்கத்துப் பக்கத்துக் குடி வாசிகள்தாம்; கழுநீர் வழுவுடையது; ஆம்பல் விழுப்பம் மிக்கது; வாசனைகள் வேறு; இது அது ஆகாது. அது இது ஆகாது. கீழோர் கீழ் மக்கள் தாம்; மேலோர் மேவ்மக்கள் தாம். பிறப்புக்குணம் அவரவர் களை விட்டுவிலகாது; அத்தகையவர் உறவு உனக்கு ஆகாது.

குட்டிக் குரங்குதான்; அது தன் நெட்டைத் தந்தையுடன் ஒட்டி உறவாட மறுக்கிறது.தந்தைக் குரங்கு கையகத்துப் பலாவைத் தட்டிப் பறித்துச் செல்கிறது. அப்பனுக்கும் மகனுககும் எவ்வளவு நெருங்கிய ஒற்றுமை; மட்டு மரியாதை மறந்துவிட்டால் இனி அப்பன் என்ன சுப்பன் என்ன? உறவு ஒட்டவில்லை என்றால் எட்டிப் போவது நல்லது.

ஆபத்துக்கு உதவாத அவன் பாவத்திற்கும் அஞ்சமாட்டான். உயிரையும் தந்து காப்பதாக உறுதி கொடுத்த தோழன் பெயரையும் கூறாமல், “வந்தது சொல்ல வேண்டாம்” என்று இவன் படுக்கையில் கிடந்தாலும் நெகிழ்ந்து விடுகிறான். “இவன் எல்லாம் உன் தோழன்” என்று ஆழமான நட்பைக் காட்டினாயே அவன் உன்னைக் குழி தோண்டிப் புதைக்கும்போது விழிகளில் நீர்மல்க வந்து அழுது நடிப்பான்; துடிப்பான்; பழம் நட்புப் பேசிப் படிப்பான்; கவலைப்படாதே! அழுவதற்கு ஒரு ஆள் இருக்கிறான்.

நன்மை கருதும் நண்பனைக் கைவிட்டு விட்டு நயமாகப் பேசி நடிக்கும் புன்மையனை நயப்பது நெய் ஊற்றும் கிண்ணத்தில் அதை நீக்கிவிட்டு வேம்பு அதன் நெய் நிரப்புவது போல் ஆகும். இனிமை கெடுகிறலு: கசப்புப்படுகிறது. தீய நட்பு நீக்குக; கட்டுவிரியன் காட்சிக்கு அழகு தருவது; அதனோடு பிணை இணைகிறது; இறுதியில் ஆண் நாகம் அதனை அறவே விட்டு விலகுகிறது. நண்பர்கள் நயமாக உரையாடுவர்; கவர்ச்சிமிக்கவராகக் காணப்படுவர். புகழ்ச்சிக்கு உரியவர் போல் தோற்றம் அளிப்பர். ஆனால் எந்த அளவும் நன்மை செய்யமாட்டார்கள். இவர்கள் கட்டு விரியன்கள்; நாமே தேடிக் கொள்ளும் சனியன்கள். குடிக்கும் பால் என்று நினைத்தால் அவர்கள் வெறும் கலப்படம்தான்; தண்ணீர்தான் புலப்படும்.