நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/திருச்சந்தவிருத்தம்

விக்கிமூலம் இலிருந்து
பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்
நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே. (1) 752


ஆறுமாறு மாறுமா யோரைந்துமைந்து மைந்துமாய்
ஏறுசீரி ரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய்
வேறுவேறு ஞானமாகி மெய்யினொடு பொய்யுமாய்
ஊறொடோசை யாயவைந்து மாய ஆய மாயனே. (2) 753


ஐந்துமைந்து மைந்துமாகி யல்லவற்று ளாயுமாய்
ஐந்துமூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவனே
ஐந்துமைந்து மைந்துமாகி யந்தரத்த ணைந்துநின்று
ஐந்துமைந்து மாயநின்னை யாவர்காண வல்லரே. (3) 754


மூன்றுமுப்ப தாறினோடொ ரைந்துமைந்து மைந்துமாய்
மூன்றுமூர்த்தி யாகிமூன்று மூன்றுமூன்று மூன்றுமாய்
தோன்றுசோதி மூன்றுமாய்த் துளக்கமில் விளக்கமாய்
ஏன்றெனாவி யுள்புகுந்த தென்கொலோவெம் மீசனே (4) 755


நின்றியங்கு மொன்றலாவு ருக்கடோறும் ஆவியாய்
ஒன்றியுள்க லந்துநின்ற நின்னதன்மை யின்னதென்று
என்றும்யார்க்கு மெண்ணிறந்த ஆதியாய்நின் னுந்திவாய்
அன்றுநான்மு கற்பயந்த வாதிதேவ னல்லையே (5) 756


நாகமேந்து மேருவெற்பை நாகமேந்து மண்ணினை
நாகமேந்து மாகமாக மாகமேந்து வார்புனல்
மாகமேந்து மங்குல்தீயொர் வாயுவைந் தமைந்துகாத்து
ஏகமேந்தி நின்றநீர்மை நின்கணேயி யன்றதே (6) 757


ஒன்றிரண்டு மூர்த்தியா யுறக்கமோடு ணர்ச்சியாய்
ஒன்றிரண்டு காலமாகி வேலைஞால மாயினாய்
ஒன்றிரண்டு தீயுமாகி யாயனாய மாயனே
ஒன்றிரண்டு கண்ணினானு முன்னையேத்த வல்லனே (7)


ஆதியான வானவர்க்கு மண்டமாய வப்புறத்து
ஆதியான வானவர்க்கு மாதியான வாதிநீ
ஆதியான வானவாண ரந்தகாலம் நீயுரைத்தி
ஆதியான காலநின்னை யாவர்காண வல்லரே (8)


தாதுலாவு கொன்றைமாலை துன்னுசெஞ்ச டைச்சிவன்
நீதியால்வ ணங்குபாத நின்மலாநி லாயசீர்
வேதவாணர் கீதவேள்வி நீதியான வேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே (9)


தன்னுளேதி ரைத்தெழும் தரங்கவெண்த டங்கடல்
தன்னுளேதி ரைத்தெழுந் தடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளேபி றந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளேய டங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே. (10)