நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/திருப்பள்ளி எழுச்சி

விக்கிமூலம் இலிருந்து

திருப்பள்ளியெழுச்சி தனியங்கள்[தொகு]

திருமாலையாண்டான் அருளிச்செய்த

தமேவமத்வா பரவாஸுதேவம்
ரங்கேசயம் ராஜவதர்கணீயம்-
ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
பக்தாங்க்ரி ரேணும் பகவந்த மீடே.


திருவரங்கப்பெருமாளரையர் அருளிச்செய்த

மண்டங் குடியென்பர் மாமரையோர் மன்னியசீர்த்
தொண்ட, ரடிப்பொடி தொன்னகரம் - வண்டு
திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ளி
உணர்த்தும் பிரானுதித்த வூர்.

திருப்பள்ளியெழுச்சி[தொகு]

ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி


கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்
மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்
வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி
எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த
இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்
அரங்கத்தம் மா!பள்ளி யெழுந்தரு ளாயே (1) 917


கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக்
கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ
எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம்
ஈன்பனி நனைந்தத மிருஞ்சிற குதறி
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்
வெள்ளெயி றுறவதன் விடத்தனுக் கனுங்கி
அழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த
அரங்கத்தம் மா!பள்ளி யெழுந்தரு ளாயே (2) 918


சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி
படரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ
பாயிறு ளகன்றது பைம்பொழில் கமுகின்
மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருத மிதுவோ
அடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை
அரங்கத்தம் மா!பள்ளி யெழுந்தரு ளாயே (3) 919


மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்
வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும்,
ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை,
வாட்டிய வரிசிலை வானவ ரேறே!
மாமுனி வேள்வியைக் காத்து,அவ பிரதம்
ஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் மரசே!
அரங்கத்தம் மா!பள்ளி யெழுந்தரு ளாயே (4) 920


புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய்
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி,
கலந்தது குணதிசைக் கனைகட லரவம்
களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த,
அலங்கலந் தொடையல்கொண் டடியினை பணிவான்
அமரர்கள் புகுந்தன ராதவி லம்மா
இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்
எம்பெரு மான்!பள்ளி யெழுந்தரு ளாயே. (5) 921


இரவியர் மணிநெடுந் தேரொடு மிவரோ?
இறையவர் பதினொரு விடையரு மிவரோ?
மருவிய மயிலின னறுமுக னிவனோ?
மருதரும் வசுக்களும் வந்துவந் தீண்டி
புரவியோ டாடலும் பாடலும் தேரும்
குமரதண் டம்புகுந் தீண்டிய வெள்ளம்
அருவரை யனையநின் கோயில்முன் னிவரோ?
அரங்கத்தம் மா!பள்ளி யெழுந்தரு ளாயே (6) 922


அந்தரத் தமரர்கள் கூட்டங்க ளிவையோ?
அருந்தவ முனிவரும் மருதரு மிவரோ?
இந்திர னானையும் தானும்வந் திவனோ?
எம்பெரு மானுன கோயிலின் வாசல்,
சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்,
அந்தரம் பாரிட மில்லைமற் றிதுவோ?
அரங்கத்தம் மா!பள்ளி யெழுந்தரு ளாயே. (7) 923


வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலையண் கண்ணாடி முதலா,
எம்பெரு மான்படி மக்கலம் காண்டற்கு
ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர்,
தும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ?
தோன்றின னிரவியும் துலங்கொளி பரப்பி,
அம்பர தலத்தில்நின் றகல்கின்ற திருள்போய்
அரங்கத்தம் மா!பள்ளி யெழுந்தரு ளாயே. (8) 924


ஏதமில் தண்ணுமை யெக்கம்மத் தளியே
யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி,
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்
கந்தரு வரவர் கங்குலு ளெல்லாம்,
மாதவர் வானவர் சாரண ரியக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,
ஆதலி லவர்க்குநா ளோலக்க மருள
அரங்கத்தம் மா!பள்ளி யெழுந்தரு ளாயே. (9) 925


கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ?
துடியிடை யார்கரி குழல்பிழிந் துதறித்
துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா,
தொடையத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடி யென்னும்
அடியனை, அளியனென் றருளியுன் னடியார்க்--
காட்படுத் தாய்!பள்ளி யெழுந்தரு ளாயே. (10) 926


அடிவரவு:கதிர் கொழு சுடர் மேட்டு புலம்பின இரவி அந்தரம் வம்பவிழ் ஏதம் கடிமலர் -- அமலன்.

தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்