நீங்களும் இளமையாக வாழலாம்/மனதை மடக்கினால் போதும்

விக்கிமூலம் இலிருந்து
5
மனதை மடக்கினால் போதும்!


{இளமையே இரு
இளமையாக வாழ உடல் மட்டும் போதுமா? போதாது. மனமும் வேண்டும். மனம்தான் காட்டுக் குதிரையாக கனைத்துக் கொண்டு திரிகிறதே!

உடலில் உள்ள சுரப்பிகளை மாற்றிவிட்டால் இளமை வந்து விடுமா என்றால், அதுவும் நிச்யமாக இல்லை.

இளமை போய்விட்டது. முதுமை வந்து விட்டது என்று மனிதரை பாடாய் படுத்துவது இந்த ‘மனம்’ தான். இந்த மனம் வயதாகிவிட்டது என்று உணர்த்தத் தொடங்கியதுமே, உடல் உறுப்புக்களும் உற்சாகம் இழந்து போகின்றன. தளர்ந்து போகின்றன.

உதாரணமாக, ஒரு மனிதன் தைரியத்தை இழக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதாவது தைரியம் இல்லாமல் பயப்படுகின்றான். உடனே அவன் மனதாலும் உணர்வாலும் தளர்ந்துபோகிறான். இந்தத் தளர்ச்சி இத்துடன் நின்று போய்விடுவதில்லை.

 அவனது ஒவ்வொரு செயலிலும் இந்தத் தளர்ச்சி வந்து புகுந்து கொள்கிறது. அவன் எதையோ பறிகொடுத்தவன் போல ஊசலாடுகிறான். வாழ்வே போனது போல அழுது வழிகிறான். அலறி அலறி நலிகிறான்.

நடையில் தேக்கம், தோள்களில் கவிழ்ச்சி, முகத்திலே சந்தோஷத்தின் வறட்சி, ஆமாம், மனதால் தளர்ந்து போகிற யாருமே, தன்னம்பிக்கையை உடனே இழந்து போகின்றார்கள்.

மனதைக் கட்டுப்படுத்தி விட்டால், ‘முதுமை இன்னும் வரவில்லை. இளமையுடன் தான் இருக்கிறோம்’ என்ற உணர்வினை உண்டாக்கிக் கொள்கின்றன. தேங்கிய நடையில் தெளிவு கிடைக்கிறது. களையிழந்த முகம் பொலிவு கொள்கிறது. நிமிர்ந்த மார்பு, உணர்வுகளைக் கொப்பளிக்கும் தினவு மிகுந்த கால்கள் உற்சாகம் கொள்கிறது. ஆமாம். மனம்தான் அத்தனைக்கும் காரணம்!

எப்படி இந்த மனதை இதமாக்கிக் கொள்வது? பதமாக வழிக்குக் கொண்டு வருவது?

“உலகத்திலுள்ள இன்பங்களையெல்லாம் இளமைக் காலத்தில்தான் அனுபவிக்க முடியும். முதுமை வந்தால் எல்லாமே முடியாமற் போய்விடும்” என்ற ஒரு மூன்றாந்தர நினைவு எல்லோரிடமும் இருக்கிறது.

அதனால் தான் ‘இளமையே இரு. முதுமையே பொறு’ என்று எல்லா தர மக்களும் கூறுகின்றனர். ஆசைப்படுகின்றனர். உள்ளுக்குள்ளே அவதியும்படுகின்றனர்.

ஆனால் நாம் மனதைத் தயார்ப்படுத்திக் கொண்டோமானால், வயதான காலத்திலும் வருந்தாமல் வாழமுடியும்.

இளையகாலங்களில் மகிழ்ச்சியுடன் இருந்தது போலவே, முதுமையிலும் இன்பமாக வாழ முடியும்.

எப்படி? அதுதான் அற்புதமான ரகசியமாகும்.

60,70, 80 வயதானவர்கள் என்ன நினைக்கின்றார்கள்? நமக்கு இயலாமை வந்து விட்டது. இஷ்டம் போல் எங்கும் போக முடியவில்லை. தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறோம். தள்ளாமை தான் காரணம் என்று தானே நினைக்கின்றார்கள்!

அப்படி நினைக்கத் தூண்டுகிற காரணங்களை நாம் இங்கே கண்டுபிடித்து விடுவோம். பிறகு, காரணங்களுக்கேற்ப காரியங்களை செய்வது தான் பகுத்தறியும் பெருமைபெற்ற ஜாதிக்கு மகிமையாகும். அதில் ஓர் அங்கம் தானே நாமும்.

இங்கே பாருங்கள்
20 வயது இளைஞன் ஒருவனின் இயக்கத்தைப் பாருங்கள். அவன் நினைப்பதைப் போல உடலால் செயல்படுகிறான். அவன் நினைவை அவனது தசைகள் உடனே செயல்படுத்துகின்றன. இளைஞனது தசைகளுக்கு இயங்கும் ஆற்றலும் இயங்கும் வேகமும் இணையற்றவையாக இருக்கின்றன.

உதாரணத்திற்கு ஒரு குத்துச் சண்டை வீரனைக் காண்போம். 20 வயது இளைஞன் தன் எதிரியைத் தாக்க நினைக்கும் வேகத்திற்கு அவனது உடலுறுப்புக்கள் ஒத்துழைக்கின்றன. முன்னும் பின்னும் வந்து நகர்ந்து, தாக்கவும் தடுக்கவும், ஒதுக்கவும் ஒதுங்கவும் கூடிய லாவகமான தன்மைகளைப் பெற்றுத் திகழ்கின்றன.

இன்னும் 5 ஆண்டுகள் கழிகின்றன. இளைஞனின் ஆற்றல் அப்படியே தான் இருக்கிறது. எண்ணத்தில் எழுச்சி குறையவில்லை. ஆனால் அவனது தசைகள் மட்டும் அந்த வேகத்துடன் செயல்படும் திறமைகளில் கொஞ்சம் இழந்து விட்டிருக்கின்றன.

அவனால் அதிகமாக எண்ண முடிகிறது. ஆனால் எண்ணத்தின்படி செயல்பட முடியவில்லை. தசைகளில் ஏதோ ஒரு தேக்கமான இயக்கம். தொடர்ந்து தீவிரமாக இயங்கிய உடலுறுப்புக்களில். ஏதோ ஒரு தடைப்பட்டுத் தாமதமாகக் கிளம்புகின்ற செயல்கள். ஏன்!

இன்னும் 5 ஆண்டுகள் போகின்றன. அனுபவங்கள் கூடுகின்றன. குத்துச்சண்டையின் குதர்க்கங்கள், தந்திரங்கள், அற்புத யுக்திகள் அனைத்தும் அவனிடம் நிலைக்கின்றன. ஆனால், அந்த உடலின் வேகம் உணர்வுகளுக்கு ஈடுகொடுக்க முடியவில்லையே. ஏன்?

நினைக்கிறான். ஆனால் அதன்படி நடக்க முடியவில்லை. இதைத்தான் முதுமையின் தொடக்கம் என்கிறார்கள். குத்துச்சண்டை வீரன் முப்பது வயதிற்குள்ளே இதுபோன்ற ஒரு முதுமைத் தன்மையை அடைந்து விடுகிறான்.

குத்துச் சண்டையைவிட, மல்யுத்தம் சற்று கடுமை குறைந்த திறமையைக் கொண்டதாகும். இதில் ஈடுபடும் வீரர்கள் இன்னும் கொஞ்சம் காலம் தாக்குப்பிடிக்கின்றார்கள். இன்னும் ஓர் ஐந்து வயதுவரை ஆற்றல் குறையாமல் போரிடும் இளமையைப் பெற்றுக் கொள்கின்றார்கள்.

இன்னும் கடுமை குறைந்த விளையாட்டுக்களில் ஈடுபடுவோர். அதாவது பூப்பந்தாட்டம், டென்னிஸ் போன்றவைகளில் பங்குபெறுவோர். உடல் வன்மையை அதிகம் மேற்கொள்ளாத காரணத்தால், அருமையாக இளமைத் தன்மையுடன் விளையாடிக் கொள்கின்றார்கள்.

இதிலிருந்து நாம் ஒரு கருத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். சாதாரண ஒரு மனிதன் 58 அல்லது 60 வயதில், தான் செய்யும் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறான். அது அவனை வயோதிகனாக சமுதாயத்திற்குத் தனித்துக் காட்டுகிறது.

ஆனால் 30 அல்லது 35 வயதில், தான் செய்யும் தொழிலிலிருந்து ஓய்வு பெறுகிறான் ஒரு குத்துச் சண்டை வீரன். அதற்குப்பிறகு, அவன் சமுதாயத்திலிருந்து ஓய்வு பெற்ற வயோதிகன் போல் தான் ஒதுக்கமாகக் காணப்படுகிறான்.

இரண்டு நிலையாளர்களுமே உழைக்கும் தொழிலில் ஓய்வு பெற்றுக் கொள்கின்றார்கள். ஓய்வு பெறுவது என்பது கடுமையான குற்றமுமல்ல. வரக்கூடாத வம்பும் அல்ல. அது இயற்கையின் சட்டம்.

வளர்ந்துக் கொண்டே வரும் இயற்கைச் சூழலில், மனிதன் வளர்ந்து கொண்டேதான் வரவேண்டும். அதுதான் முறை, அந்த முறையை அனுசரித்துப் போகவே, மனத்தினை நாம் மடக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஓய்வு பெறுகின்றவர்களின் மனநிலைதான் மற்ற எல்லா துன்பங்களுக்கும், புரியாத மயக்கங்களுக்கும் காரணமாகும்.

30 வயதிலே ஓய்வு பெறும் குத்துச்சண்டை வீரன், அவனுக்கு ஆர்ப்பாட்டமான புகழ், அளவில்லாத வருமானம். புரட்டிய பத்திரிகையின் பக்கத்திலெல்லாம் அவனது புகைப்படம். போகுமிடங்களெல்லாம் ரசிகர்கள் கூட்டம். புகழ்மாலை, புன்னகை வரவேற்பு, ஆரவாரக் கூச்சல்.

தொழிலில் இருக்கும்போது இத்தனை சுகம், இத்தனை இதம் இதிலிருந்து விடுபடும் போது, வேறு ஒருவன் வந்து அந்த இடத்தை ஆக்ரமித்துக் கொள்கிறான். சுற்றி வந்த ஜனக் கூட்டம், பாராட்டி எழுதிய பத்திரிக்கைக் கூட்டம், கேளாமலே வந்த காசு பணம், எல்லாமே விடைபெற்றுக் கொண்டுபோய் விடுகின்றனவே!

உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுபவர்களின் நிலையும் இப்படித்தானே! அதிகார சுகம், அமர்க்களமான வரவேற்பு. திரும்பிய பக்கமெல்லாம் தொழும் கரங்கள். துணை கேட்கும் கண்கள். உதவி கேட்டு உயிரை வாங்கும் ஜனங்கள். அப்படி இப்படி வருமானங்கள்.

இப்படி இருந்தவர்களுக்கு, இடம் மாறிப் போகின்ற பொழுது வருத்தம் வராதா என்ன?

இந்த வருத்தம் வயதாகி விட்டதே என்பதால் அல்ல. வகித்த பதவியும் சுகித்த இன்பங்களும் போய்விட்டனவே என்ற கவலைதான். இன்னொருவன் வந்து தனது இடத்தைப் பிடித்துக் கொண்டு இன்பங்களை அனுபவிக்கின்றானே என்ற வேதனைதான்.

பிறகென்ன?
இவைகள் தான் மனிதனை முதுமையானவனாகக் காட்டுகின்றன. கவலைகளைக் கூட்டுகின்றன. கற்பனைப் பயங்களை ஊட்டுகின்றன. களைத்துப் போகும் சுருதியை கனவேகமாக மீட்டுகின்றன.

பிறருக்குப் புகழ் சேரும் போது, பிறர் நன்றாக உயரும் போதும், மனித மனம் பொறுக்காதுதான். அதுவும் தன் இடம் பறிபோகிறபோது தாங்கவே தாங்காதுதான்.

அதற்காக, வரும் எதிர்கால வாழ்க்கையை ஏன் பாழாக்கிக் கொள்ள வேண்டும்? மகிழ்ச்சி தரும் வழிகளை ஏன் மாற்றிக்கொள்ள கொள்ள வேண்டும்? மனதைக் கட்டுப்படுத்தி, மகிழ்ச்சியாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும். எப்படி?

“என் வாழ்நாளில் நான் வாழ்ந்தவரை நன்றாகவே வாழ்ந்திருக்கிறேன். மற்றவர்களும் என்னைப் போல் வாழ, நான் வழிவிட்டாக வேண்டும் அவர்கள் வாழ்கின்ற இனிய நிலைகளை தான் அனுமதித்து, முடிந்த வரை உதவத்தான் வேண்டும். விலகத்தான் வேண்டும். நான் ஓடிய வாழ்க்கை ஓட்டம் முடியவில்லை. இன்னும் ஓட வேண்டிய தூரம். அடைய வேண்டிய இடம் வேறு பல இருக்கின்றன. அதற்காக, எனது திறமைகளையும் கடமைகளையும், சக்திகளையும் ஒன்று சேர்த்து பாடுபடுவேன், பலன் பெறுவேன்” என்று ஒருவர் நினைத்துவிட்டால், கவலைதான் வருமா? முதுமைதான் எழுமா?