நீங்களும் இளமையாக வாழலாம்/முதுமையை முறியடிக்கலாம்!

விக்கிமூலம் இலிருந்து
7
முதுமையை முறியடிக்கலாம்!

முதுமை எப்படியும் வந்துவிடும். முடிந்த முடிவுதான் இது

உடலுறுப்புக்கள் ஒரு மாதிரியாகத் தளர்ச்சியடையும். உண்மை நிலையும் அதுதான்.

கண் மங்கிப் போகிறது. காது கேட்க மறுக்கிறது. வெளித்தோல் மினுமினுப்பை இழக்கிறது. சுருக்கங்கள் சுந்தரத் தேகத்தை ஆக்ரமித்துக் கொள்கின்றன. எலும்புகள் எடை இழக்கின்ற. இரத்தக் குழாய்கள் உள்சுற்றளவில் குறுகுகின்றன. எல்லாம் நடக்கும்.

இயற்கை தானே! இவை உடலைத் தானே தாக்குகின்றன! தகர்க்கின்றன!

ஆனால், மனதையும் நினைவையும் முதுமை என்ன செய்யும்? முதுமை உடலுறுப்புக்களைத்தானே வளர விடாமல் தளரச் செய்யும்? மனதை ஒன்றும் செய்துவிட முடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்! ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!



மனம் மகிழும் முடிவு:

மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவானது கீழ் வருமாறு இருக்கிறது! கேட்க சுவையான செய்திதான்!

உடலில் நலமும் வளமும் நிறைந்து வாழ்பவர்களுக்கு, முதுமையானாலும் கற்கின்ற ஆற்றல் வளர்ந்து கொண்டுதான் வருகிறது. 60 வயதானாலும், புத்திசாலித்தனமும் அறிவும் குறையாமல் வளர்ந்து பெருகுகிறது. மிகுதியடைகிறது.

இப்படிச் சொல்கிறவர் டாக்டர் பேராசிரியர் பால். பி. பால்டஸ் என்பவர். (Prof. paul B. Baltes) இந்த உளவியல் அறிஞரும், அவரைச் சார்ந்த ஆராய்ச்சிக் குழுவினரும் ஒன்று சேர்ந்து, மேற்கு ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் 250 முதியவர்களிடம் சோதனை நடத்தினார்கள். அதாவது 60 முதல் 80 வயதானவர்களிடையே ஆய்வு நடந்தது. அப்பொழுதுதான் மேலே கண்டவாறு கருத்தைத் தெரிவித்தார்கள்.

வயதாகிறபொழுதே, உடலுறுப்புக்கள் தளர்ச்சி யடைவதுபோலவே, மனமும் கிழத்தன்மை பெற்று விடுகிறது. என்னும் கருத்து பொதுமக்களிடையே பரவியுள்ள கருத்துதான்.

இப்படி நினைப்பது பத்தாம் பசலித்தனமாகும். அது ஒரு கட்டுக் கதையான வதந்தியாகும் என்கிறது மருத்துவத்துறை.

வயது ஏறி முதுமை நிலை வருகிறபொழுது, ஏதாவது ஒரு நோயினால் கடுமையாகத் தாக்கப்படுகிற காரணத்தால், மூளை வளமும் சக்தியும் குறைந்து காணப்படுவது இயற்கைதான்.

ஆனால் இப்படி பாதிக்கப்படுவது பொதுவானதாக இல்லை. எப்பொழுதோ எங்கேயோ, அங்கெங்கு ஒன்று இரண்டாகக் காணப்படுவதுதான். அது உண்மையல்ல என்று பால் கூறுகிறார்.

பேராசிரியர் பால் மேலும் கூறுகிறார். மனித அறிவானது ஒரு வகை கூட்டுச் சக்தியாகும். பின்னிப் பிணைந்து பிரித்து எடுக்க முடியாத அளவில் ஒருமித்த அமைந்த அமைப்பாகும். இளமையில் வளர்ந்து, முதுமையில் தளருகின்ற பண்பாற்றல் உடையதாகும்.

இருந்தாலும், கல்வி, வயது, பால் போன்றவற்றிற்கும் மேலே, வயதானாலும் மூளை வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதுவும் உடல்நலம் தெளிவாக உள்ளவர்களுக்கு மட்டுமே என்ற குறிப்பை நாம் உணர்ந்தாக வேண்டும்.

சிந்தனைத் தெளிவு:

சிறு குழந்தைகளுக்கு தான் கற்பனா சக்தி அதிகம். சிறுவர்களுக்குத்தான் சிந்தனை செய்யும் ஆற்றல் நிறைய உண்டு என்று பலர் பேசக் கேட்டிருக்கிறோம். இதையே உறுதிப்படுத்திக் கூறுபவர்களும் உண்டு.

ஆனால், சிறுவர்கள் குழந்தைகள் ரசித்துப் படிக்கும் பல மாயாஜாலக் கதைகள், கற்பனை செறிந்த கதைத்துத் துணுக்குகள் பலவற்றைப் படைத்த மேதாவிகள் எல்லோரும் முதுமையடைந்தவர்களே என்னும் உண்மையையும் நாம் மறந்துவிடக் கூடாது.

வயது அதிகமாக ஆக, பெரியாரின் சிந்தனைகள், இராஜாஜி கருத்துக்கள், காந்தியாரின் குறிப்புக்கள், அண்ணாவின் உவமைகள் எல்லாம் மெருகேறியிருந்தன என்பதெல்லாம்; நிதரிசனமாக நாம் பார்த்தவை தானே!

வயதாவதற்கும் கற்பனா சக்தி குறைவதற்கும், வயதாவதற்கும் ஞாபகம் தவறிப் போவதற்கும் சம்பந்தமே இல்லை.

ஏனென்றால் வயதேறும் பொழுது முதுமை மட்டும் கூட வருகிறது என்பதில்லை. அறிவும் அனுபவமும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன என்பதும் உண்மைதானே!

இன்னொரு கருத்தையும் நாம் உணர்வது நல்லது.

முதுமை காலத்தில் அறிவு குறைவதில்லை. ஒரு காரியத்தை செய்வதிலோ, ஒன்றை நினைத்து உருவாக்குவதிலோ இருக்கும் ஆழ்ந்த தன்மை (Concentration) சற்றும் மாறுபடுவதில்லை. மாறாக நல்ல செழுமையுடன் தான் இருக்கிறது.

ஒருவேளை நோய்வாய்ப்பட்டவர்களுக்குத் தான் ஆழ்ந்த சிந்திக்கும் தன்மை குறையுமே தவிர, நல்ல உடல் நலம் உள்ளவர்களுக்கு எல்லாமே கூடுதலாகத் தான் இருக்கிறது. அப்படித்தான் இருக்க வேண்டும்.

இளைஞர்களைவிட முதியவர்களுக்கு என்ன சாதகம் என்றால், அவர்களால் ஒரு காரியத்தில் கண்ணுங் கருத்துமாக கவனத்துடன், அறிவார்ந்த அனுபவத்துடன் ஈடுபட முடியும். என்பதுதான்.

இளமையும் முதுமையும்

இளைஞர்கள் விரைவில் களைப்படையாமல் ஒரு காரியத்தை செய்யலாம். முதியவர்கள் சற்று முன்னதாக களைப்படைந்து விடுவார்கள் என்பதைத் தவிர, இளைஞர்களை விட முதியவர்கள் செய்யும் காரியம் சிறப்பாகவே அமையும்.

இந்தப் பண்புகளை உணர்ந்து செய்யும் முதியவர்களே, வீட்டிலும் நாட்டிலும் வெற்றிமிகுந்த புகழுடன் விளங்குகின்றார்கள். மற்றவர்களால் ஏன் அவ்வாறு முடிவதில்லை என்றால், அவர்களுக்கு முதலில் தன்னம்பிக்கை இல்லை. அடுத்தது தன்னால் முடியும் என்று முயற்சித்துப் பார்க்கக் கூட முனையும் முனைப்பில்லை.

முதுமையில் சாதிக்கும் ஆற்றல் மிக்கவர்கள், தங்கள் வாழ்வில் தொடர்ந்து ஆர்வம் உள்ளவர்களாகவே வளர்ந்திருக்கின்றார்கள்.

இப்படிப்பட்டவர்கள், இளைஞர்கள் தங்களுக்குப் போட்டியாக வருகின்றார்கள் என்று எண்ணவே மாட்டார்கள். இளைய உலகிலே தங்களுக்கு இடமில்லையே என்று இடர்ப்படவும் மாட்டார்கள்.

நமக்கென்று ஒரு வாய்ப்பில்லையே என்று நலிந்து போகவும் மாட்டார்கள்.

முதிய மனம் வந்தால்...

மனோ நிலையில் யார் தாழ்ந்து போகின்றார்களோ, முடங்கிப் போகின்றார்களோ, அவர்களே முதுமையை அதிகமாக எண்ணி முதுமையை தங்களுக்கு அதிகமாக்கிக் கொண்டு முனுமுனுத்து வாழ்கின்றார்கள்.

அவர்கள் வாழ்க்கையில் இளைஞர்களுடன் போட்டிபோட்டு இடம் பிடிப்பதற்கு முன்னதாகவே, வார்த்தையாலே, தாங்களாகவே தங்களுக்குள் வாதமிட்டுக்கொண்டு, சோர்ந்து உட்கார்ந்து விடுகின்றனர்.

அறிவார்ந்த முதியவர்கள் ஏன் முன்னுக்கு வர இயலாது முடங்கிப் போகின்றார்கள்.

இந்த மாதிரி முதிய மனிதர்களுக்கு அதிகமாக இருப்பது திருப்தியின்மை. அதிருப்தியே அவர்கள் அழிவுக்கு முதல் காரணம்.

மற்றவர்களிடம் ஒரு இனம் புரியாத எரிச்சல், சகிப்புத்தன்மை இல்லாமை; பொறுமையின்மை, மற்றவர்கள் மேல் எரிந்து விழுதல், முன்கோபங்கள், தங்கள் மேலேயே உள்ள சுயநலங்கள், அதற்கான எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், இந்த அற்ப குணங்களால் அவர்கள் சிதறுண்டு போகின்றார்கள்.

அதனால் தான் ‘வயதானாலும் புத்தி கொஞ்சம் கூடக் கிடையாது’ என்ற வசை மொழிக்கு சிலர் ஆளாகின்றார்கள்.

தங்களது முதுமையை அவர்கள் மற்றவர்களுக்கு முன்நிறுத்திக்காட்டி, பரிதாபம் திரட்டி பாசம் பெற முயற்சிக்கின்றார்கள். அதனால் அவர்கள் எந்தக் காரியத்திலும் துன்பம் நிறைய வந்து விடும் என்று பயப்படுகின்றார்கள்.

எதுவுமே காரணமில்லாமல் கவலைப்படுகின்றார்கள். அவர்கள் வேண்டாத கற்பனைகளால் வதைப்படுகின்றார்கள்.

மனிதத்தனம்

நீண்ட காலம் வாழ்ந்த இவர்கள், தங்களுக்கு எது வேண்டும். என்னென்ன தேவை என்பதை நன்றாக அறிந்திருக்க வேண்டும். தங்களுக்குரிய நிலைமை பற்றியாவது தெரிந்திருக்க வேண்டும். இதுதான் ஒரு மனிதருக்குள்ள மனிதத்தனம்.

இந்த மனிதத்தனம், மனிதக் குணம் இளைஞர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால் அவர்களுக்கு அனுபவம் போதாது. இத்தனை காலம் வாழ்ந்து, தங்களையே அறிந்து கொள்ளாத முதியவர்களை, முட்டாள் கிழங்கள் என்று மற்றவர்கள் திட்டுவது நியாயமாகத்தானே படுகிறது!

முதுமையிலும் மூளை வளர்வதற்கு வைட்டமின்கள் உதவுகின்றன என்று பேராசிரியர் வாலகர் பியூடல் என்பவர் கண்டு பிடித்திருக்கின்றார்.

317 பேர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்திக் கண்டுபிடித்த இந்த கருத்தை மற்றவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

வைட்டமின் மட்டுமே முதியவர்களை அறிவாளியாக்கி வழி நடத்தி விடுமா? பழக்கம் மாறாதல்லவா?