நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/011-013

விக்கிமூலம் இலிருந்து

 

11. ஜூடஸின் முகம்


 

நான் மிகவும் சிறுவனாயிருந்த போது “அறிஞர்” என மக்களால் போற்றப்பட்ட ஒரு கிழப் பாதிரியார் சொல்ல நான் கேள்விப்பட்ட கதை இது. இந்தக் கதையை என் வாழ்நாளில் நான் அடிக்கடி நினைவு கூர்ந்து மகிழ்ந்ததுண்டு. நண்பர்களிடம் கூறியும் குதூகலம் அடைந்திருக்கிறேன்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் “சிசிலியன்” எனும் பட்டினத்தில் ஒரு மாதா கோவில் இருந்தது. கோவிலின் வெளிப்புறச் சுவர்களில் ஏசுவின் இளமை தொட்டு இறுதிகாறும் அவருடைய திருவுருவத்தை வர்ண ஓவியங்களாகத் தீட்டிக் காட்ட வேண்டுமென ஆவலாய் ஒரு ஓவியர் ஈடுபட்டிருந்தார். இவ்வாறு அவர் சித்திரிக்கத் தொடங்கி சில ஆண்டுகள் கழிந்தும் உளஞ்சோராது, உறுதி குன்றாது, தீட்டிக் கொண்டேயிருந்தார். மேலும் தீட்டி முடிக்க வேண்டியிருந்தவை, இரண்டேயிரண்டு ஓவியங்கள் மட்டுமே. அவையாவன : இளமைப் பருவத்திலிருந்த கிறிஸ்துவின் உருவம் மற்றும் ஜீடஸ்க்யாரட்’ உருவம் மட்டுமே. இந்த இரண்டு ஒவியங்களையும் முடிப்பதற்கு இன்றியமையாதிருந்த “ரூப தரிசினிகள்” இருவருக்காக அந்த ஓவியர் ஊர் உலகமெல்லாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிச் சஞ்சரிக்கலானார்.

ஒருநாள், ஒரு சிறிய நகர்ப்புறத்தில் ஒரு கோடியில் அவர் வந்து கொண்டிருக்கும் போது வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சில குழந்தைகள் அவருடைய கண்களுக்குத் தென்பட்டனர். அவர்களில் சுமார் பன்னிரண்டு ஆண்டுப் பருவத்திலான பாலகன் ஒருவனின் முகம் ஓவியக் கலைஞனின் உள்ளத்தை ஈர்த்தது. ஒரு திவ்விய ஞானியின் முகத்து ஒளி அந்தச்

(Upload an image to replace this placeholder.)

சிறுவன் முகத்தில் இருந்ததை ஓவியர் கண்டார். ஆனால், அந்தச் சிறுவனின் கிழிந்த உடைகளும் உடலும் மிகவும் அழுக்குப் படிந்து இருந்தன. எனினும், ஒரு கலைஞன் விரும்ப வேண்டியதாகவே இருந்தது, அந்தச் சிறுவனுடைய முகம்.

ஏழைப்பட்ட அந்தச் சிறுவனின் பெற்றோர்கள் அனுமதியோடு கூடவே அவனை அழைத்துக் கொண்டு ஓவியர் தம் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார். குழந்தை ஏசுவின் திருவுருவம் ஓவியமாகத் தீட்டி முடியும்காறும் ஒவ்வொரு நாளும் அந்தச் சிறுவன் ஓவியர் கருத்துக்கிணங்க அமர்ந்து கொண்டிருந்தான். அவனுடைய பொறுமையும், இயல்பும் ஓவியருக்கு மனநிறைவை அளிப்பதாயிருந்தது. எண்ணியதை எண்ணியவாறு தீட்டி முடித்த இந்த இளமை ஓவியம் மிகமிக இயல்பாக அமைந்து காண்பாரைக் களிப்புறச் செய்தது.

ஆனால், ‘ஜுடஸின்’ ஒவியத்திற்கான ரூபதரிசினமாய் யாருமே அவருக்குக் கிட்டவில்லை. இடையில் ஒன்றன்பின் ஒன்றாய் இரண்டு ஆண்டுகளும் வந்து சென்றன. சித்திர வரிசையில், இனி எழுதி முடிக்க வேண்டிய ஓவியம் இது ஒன்று மட்டுமே. எனவே இது நிறைவேறாமல் நின்று போய்விடுமோ’ என்ற சஞ்சலமும் அவருக்கு ஏற்படாமல் இல்லை. இந்த மகானின் ஓவிய மாலை எங்கு முழுமையாகமலேயே போய் விடுமோ என்ற வியாகூலமும், அவர் உள்ளத்தில் வைத்தவாறே ஒவ்வொரு ஊராக ஒரு ரூபதர்சினியைத் தேடத் தொடங்கினார். முதிர்ந்த வயதினராயிருந்தும் அந்த ௐவியர் தன் முயற்சியை மட்டும் இடையில் நிறுத்தவே இல்லை.

இதற்குள்ளேயே இந்த சித்திரக் கலா வரிசையின் புகழ் எல்லா ஊர்களுக்கும் பரவத் தொடங்கி விட்டது. கோரமான முரட்டு சுபாவமுடைய ஒன்றிரண்டு பேர் ‘ஜூடஸ்’ ஓவியத்திற்கு ஏற்ப எங்களை வைத்து உங்களுடைய மனக்குறை தீர ‘சித்திரத்தைத் தீட்டி முடித்து விடுங்களென்று முன் வந்து ௐவியரிடம் கூறியதுமுண்டு. ஆயினும் ௐவியர் உள்ளம் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. வாழ்க்கையின் அழுத்தத்தைத் தாங்க முடியாத நிலையில் இவர்கள் இயல்பு மாறிற்றே தவிர உளத்தில் மாறியவர்களல்ல. எனவே, ௐவியர் அவர்களை வைத்துச் சித்திரம் தீட்ட ஒத்துக்கொள்ளவில்லை. இயல்பாகவே, கொடிய செயல்களைச் செய்து செய்து முதிர்ச்சியடைந்த ஒரு கொடிய முகத்தை ‘ஜூடஸ்’ ஓவியத்திற்காக அவர் மேலும் தேடத் தொடங்கினார். கலைஞனின் உள்ளம் எளிதில் திருப்தியடையவில்லை. ‘ஏனாதானம்’ என்பது ஒரு கலைஞனிடம் என்றுமே காணமுடியாது போலும்.

ஒருநாள் உச்சி வேளையில் ஓவியர் அயலூரில் இருந்த ஒரு மதுபானக் கடையில் மது அருந்தியவாறு உட்கார்ந்திருந்தார். அப்போது கந்தல் துணியைக் கட்டியிருந்த மிகமிகக் கோரமான முகத்தையுடைய ஒருவன் தள்ளாடியவாறு வந்து முன் வாசல் படியில் கால் தட்டிக் கீழே விழுந்தான். அந்த நிலையிலேயே ‘மது, மது’ என்று அவன் அங்கிருந்தவர்களைப் பார்த்து யாசிக்கலானான். ஓவியர் அவனை மெல்ல எடுத்து நிறுத்தி அவன் முகத்தைப் பார்த்துத் திடுக்கிட்டார். அவனுடைய முகபாவம் ஒரு மனிதன் உலகத்தில் செய்ய இருந்த எல்லாப் பாவங்களையும் செய்து முடித்ததாகப் பிரதிபலித்தது.

இதே போன்ற கொடியவன் ஒருவனைத்தான் அவர் இதுகாறும் தேடிக் கொண்டிருந்தார். எனவே, அவர் தம்முடைய எண்ணம் கைகூடும் காலம் வந்து விட்டது என்ற மன நெகிழ்ச்சியோடு அந்த மகாப் பாவியை மெல்லத் தன் முகமாகத் திருப்பி, “என்னோடு நீ கூடவே வா, நான் உனக்கு வேண்டிய மது, மாமிசம் இன்னும் நீ விரும்புகின்றதனைத்தையும் நிறையத் தருகிறேன், ஒவ்வொரு நாளும் தவறாது நீ குடிக்குமளவு மதுவும், அதுவுமின்றி உணவும் தருகிறேன்; உடைகளும் தருகிறேன். மேலும், நீ விரும்பினால் கைநிறையக் காசும் தருகிறேன்” என்று கூறி வற்புறுத்தினார்.

இறுதியாக அந்தக் கொடியவனான ஜுடஸின் தோற்றத்திற்குப் பொருத்தமான ‘ரூபதரிசினியாய் ஒருவன் ஓவியருக்குக் கிடைத்து விட்டான். இரவு, பகல் என்ற பேதத்தையும் மறந்தவராய் வெறிபிடித்தவரைப் போல உடல் சிரமம் பாராட்டாது அந்த ஓவியர் அவனை வைத்துக் கொண்டு தம்முடைய, மகத்தான ஓவிய வரிசையைத் தீட்டி முடிப்பதில் உளமொன்றிப் போனார். இது முடியும் தறுவாயில் அந்தக் கொடிய ஜூடஸ் ரூப தரிசினியாயிருந்தவன் ஏதோ ஒருவித மறதி நிலையிலிருந்து நினைவு நிலைக்கு வந்தவனைப் போல் அவனிடம் மாற்றம் தெரிந்தது. திக்பிரமை பிறப்பதற்கு மாறாய் ஒருவிதமான தெளிந்த உத்வேக உணர்ச்சி அவனுடைய முகத்தில் தென்படலாயிற்று. பயம் கலந்த பார்வையோடு தனக்கெதிரில் உருவாகிக் கொண்டிருக்கக்கூடிய தன்னைப் போன்ற ஒரு ஓவியத்தை அவன் சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒருநாள், அந்த மனிதனின் முகபாவம் மாறியிருப்பதைக் கண்ட அந்த ஓவியர் தான் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்துக் கேட்டார்; ‘அப்பா’ உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு ஏதாயினும் தொந்தரவு ஏற்பட்டிருந்தால் தயங்காமல் நீ என்னிடம் சொல். நான் அதற்கு வேண்டிய உதவி செய்கிறேன் என்றார்.

இதைக்கேட்ட அந்த ரூபதரிசினி முகத்தைக் கவிழ்த்தவாறு விக்கி விக்கி அழத் தொடங்கினான். ஒருபாட்டம் அழுது முடித்து விட்ட பிறகு வயோதிக ஓவியரின் முகத்தை உற்று நோக்கிச் சொல்லத் தொடங்கினான்.

ஐயா, நீங்கள் என்னை அடியோடு மறந்து விட்டீர்கள். பல ஆண்டுகளுக்கு முன் உங்களுடைய இளம் ஏசுவின் ஒவியத்திற்கு ரூபதரிசினியாக இருந்த சிறுவன் நானே யல்லவா? இதை நீங்கள் எப்படி மறந்தீர்கள்?" என்று மேலும் அழத் தொடங்கினான்.

இந்த ஜூடஸ் யார்? ஏசு கிறிஸ்துவை, விசுவாச துரோகியாகச் சத்துருக்களின் வசம் காட்டிக் கொடுத்த அவருடைய சீடன்.

🌑