பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௦௦

அகநானூறு

[பாட்டு

 பாசறைக் கண்ணே, பருந்து படப் பண்ணி - பருந்து சுற்றும்படி போர் செய்து, பட்டென - பின்பு இறந்தானாக,

கஉ-௪. கண்டு அது நோனான் ஆகி - அதனைக் கண்டு பொறா னாகி, திண் தேர்க் கணையன் அகப்பட - வலிய தேரினையுடைய கணையன் உட்பட, கழுமலம் தந்த - கழுமலம் என்னும் ஊரைக் கைப் பற்றிய, பிணையல் அம் கண்ணிப் பெரும்பூண் சென்னி - கட்டிய கண் ணியினையுடைய பெரும்பூட் சென்னி என்பானது,

கரு-௯. அழும்பில் அன்ன - அழும்பில் என்னும் ஊரினை யொத்த, அறாஅ யாணர் - நீங்காத புது வருவாயை யுடையதும், பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை - மிக்க பழைய நெல்லினை யுடைய பல குடிப் பரப்பினை உடையதும், பொங்கடி படிகயம் மண்டிய பசுமிளை - யானை படியும் குளத்தினையும் நெருங்கிய காவற் காடுகளையும் உடையதுமாகிய, தண்குடவாயில் அன்னோள் - குளிர்ந்த குடவாயில் என்னும் ஊரை யொத்த சிறப்பினளாகிய நம் தலைவியது, பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே - நற்பண்பினையுடைய ஆகத்தின் கண்ணே இனிய துயிலைப் பெறுதற்கு,

௪-௬. பாக - பாகனே, முன் இயங்கு ஊர்தி நின் தேர் - முற்படச் செல்லும் நின் தேராகிய ஊர்தியினை, பின்னிலை யீயாது- இனிப் பின்னில்லாதபடி, கழிய - இச் சுரத்தை நாம் கழிய, ஒருவினை ஊர்க - மீண்ட தேர்களை நீங்கினையாய் விரைந்து செலுத்துவாயாக.

(முடிபு) பாக! வேந்தனும் வினை முடித்தனன்; பகைவரும் தமராயினர்; தானை இரண்டும் ஒன்றெனப் பணை அறைந்தன; சென்னியின் குடவாயிலன்னோள் ஆகத்து இன்றுயில் பெற நின் தேரினைப் பின்னிலை யீயாது ஒருவினை கழிய ஊர்க.

(வி - ரை.) பின்நிலை யீயாது - பின் நிற்றல் செய்யாது; வினைத்திரி சொல். நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை என் போர் சேரன் படைத் தலைவர்கள். என்று அவர் - என்று கூறப் பட்ட அவர், என விரித்துரைக்க. ஆங்கு, அசை. கட்டூர் - பாசறை. பழையன் - சோழன் பெரும்பூட் சென்னியின் படைத் தலைவன். கணையன் - சேரன் படை முதலி, தலைமைப் படைத் தலைவன். பிணையலங் கண்ணி - அல் அம், சாரியைகள். கழுமலம் - சேர நாட்டகத்ததோர் ஊர். அழும்பில் - பாண்டி நாட்டூர் என்பர். பரவை - பரப்பு. பொங்கடி - யானை; யாவற்றினும் பெரிய அடியினை யுடையது. பண்புடை யாகம்: பண்பாவது கற்புடைமையான் ஆற்றி யிருத்தல். தலைவியின் பண்பு ஆகத்தின் மேல் ஏற்றிக் கூறப்பட்டது.

'வந்து வினை முடித்தனன் வேந்தனும்' என்றமையின் வேந்தற்கு உற்றுழிச் சென்ற தலைவனாதல் பெற்றாம்.

(மே - ள்.) 1'கரணத்தி னமைந்து' என்னுஞ் சூத்திரத்து, ' பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும்' தலைவன் கூற்று நிகழ்வதற்கு இதனை எடுத்துக் காட்டினர், நச்.


1. தொல், கற்பு, ரு.