பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௪௨

அகநானூறு

பாட்டு


களவுடம் படுநரில் கவிழ்ந்து நிலங் கிளையா
நாணி நின்றோள் நிலைகண் டியானும்
பேணினென் அல்லனோ மகிழ்ந வானத்
தணங்கருங் கடவு ளன்னோள்நின் -
மகன்தா யாதல் புரைவதாங் கெனவே.

-- சாகலாசனார்.

(சொ - ள்.) கஎ. மகிழ்ந - தலைவனே!

க-ரு. நாயுடை முது நீர் கலித்த தாமரைத் தாதின் அல்லி அயல் இதழ் புரையும் - நீர் நாய்களை யுடைய பழைய நீரில் தழைத்த தாமரையின் பூந்தாதாகிய அல்லியின் அடுத்த இதழினை யொத்த, மாசு இல் அங்கை மணிமருள் அவ்வாய் - குற்றமில்லாத அகங்கையினையும் பவளம் போன்ற அழகிய வாயினையும், நாவொடு நவிலா நகை படு தீஞ்சொல் - நாவாற் பயின்று பேசப்படாத கேட்டார்க்கு மகிழ்ச்சியைத் தரும் இனிய குதலைச் சொற்களையும் உடைய, யாவரும் விழையும் பொலம் தொடிப் புதல்வனை - கண்டார் அனைவரும் விரும்பும் பொற்றொடி யணிந்த புதல்வனை,

சு--கக. பொலம் கலம் சுமந்த - பொற்கலன்களைத் தாங்கிய, கூர் எயிற்று அரிவை - கூரிய பற்களையுடைய நின் பரத்தை, தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டு - அவன் சிறுதேர் ஓட்டிக் கொண்டிருந்த தெருவில் தனியனாய் நிற்பக் கண்டு, செத்தனள் பேணி - நின் ஒப்புமை கருதிப் போற்றி, யாவரும் காணுநர் இன்மையின் - யாருங் காண்போர் இன்மையின், குறுகினள் - குறுகி, பெரிது உவந்து - மிகமகிழ்ந்து, வருகஎன் உயிரென - என் உயிரே வருவாயாக என, பூண் தாங்கு இளமுலை கொண்டனள் நின்றோள் கண்டு - பூண்களை யணிந்த இளமுலைகளில் அணைத்துக்கொண்டு நின்றவளைக் கண்டு,

கக--ச. நிலைச் செல்லேன் - நின்ற நிலையினின்று மீளேனாய், விரைவனென் வந்து கவைஇ - விரைந்து வந்து அவளை அணைத்து, மாசில் குறு மகள் - குற்றமற்ற இளைய மகளே, எவன் பேதுற்றனை - ஏன் மயங்கினை, நீயும் தாயை இவற்கு என - இவனுக்கு நீயும் ஒரு தாயல்லையோ என்று, யான் தன் கரைய - யான் அவளிடம் கூற,

கரு-சு. களவு உடம்படுநரில் கவிழ்ந்து - தாம் செய்த களவைக் (கண்டு கொண்டார் முன்) உடன் பட்டு நிற்பார்போல முகம் கவிழ்ந்து, நிலம் கிளையா நாணி நின்றோள் நிலைகண்டு - நிலத்தைக் கால்விரலாற் கீறி நாணி நின்ற அவள் தன் நிலையினைக் கண்டு,

கசு-கூ. வானத்து அணங்கு அருங் கடவுள் அன்னோள் - வானத்தின் அரிய தெய்வமாகிய அருந்ததி போன்றாள், நின் மகன் தாயாதல் புரைவது எனவே - நின் மகனுக்குத் தாயாதல் ஒக்கும் என எண்ணி, யானும் பேணினென் அல்லனோ - யானும் அவளை விரும்பினேன் அல்லனோ.