மூலமும் உரையும்
புலியூர்க் கேசிகன் ☆ 85
சிவந்த பின்புறத்தைப் போன்ற, வளவிய செவ்வரி பரந்த குளிர்ந்த கண்களையும், தளிரை ஒத்த மேனியினையும், மாமை நிறத்தையும் உடையவளே!
நெடுந் தொலைவினிடத்தே உயர்ந்து தோன்றும் உயர்ந்த பக்கமலைகளையுடைய, வானளாவிய மலைக்கு உரியவனான நம் தலைவன், வரைவு மலிந்து வந்தனன். அவன் வருகை,
மழை பெய்யாது நாட்டிலே பஞ்சம் ஏற்படக், கலப்பைகள் அதனால் உழவின்றித் தூங்கக் கோடையானது நீண்ட, பசுமை அற்றுப்போன காலத்திலே, குன்றங்களைக் கண்டாற் போன்ற பெரிய கரைகளை உடையனவும், நீரில்லாமையினால் பறவையினம் சென்று தங்குதல் இல்லாதனவும், உள்நீரும் இல்லாது வெப்பம் மிக்கனவுமாகிய அகன்ற குளங்கள் எல்லாம், நிறையுமாறு பெய்த பெரிய மழையானது பொழிந்த, இன்பமிக்க அந்த விடியற்காலத்திலே, பல்லோரும் உவந்த உவகை எல்லாம், ஒருசேர என்னுள்ளே பெய்துவைத்தாற் போலும் இருந்ததே!
சொற்பொருள்: 8. சேக்கல் - தங்கல். 9. வீசி - உதவி. 14. வந்தமாறு - வரையவந்தபடி நின் மழைக்கண்ணும் தளிர்மேனியும் வேறுபட்டு விடாதபடி அவர் விரைவாக நின்னை மணக்க வந்தனர் என்க.
43. அளியரோ அளியர் தாமே!
பாடியவர்: மதுரையாசிரியர் நல்லந்துவனார். திணை: பாலை. துறை: தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. |
(கார்காலம் தன் செழுமையைக் காட்டிக் கொண்டிருக்கிறது. தன்னுடைய மனைவியைப் பிரியாதிருக்கும் ஒருவன், தன் மனத்திலே பொருள் ஆசை எழத், தன் நிலைமையைத் தெளிவுபடுத்துகின்றான். அவனுடைய காதல் மிகுதியை உணர்த்துவது இச்செய்யுள்!)
கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை
சுடர்நிமிர் மின்னொடு வலன்ஏர்பு இரங்கி
என்றுழ் உழந்த புன்தலை மடப்பிடி
கைமாய் நீத்தம் களிற்றொடு படீஇய,
நிலனும் விசும்பும் நீர்இயைந்து ஒன்றி,
5
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது,
கதிர்மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,
தளிமயங் கின்றே தண்குரல் எழிலி,யாமே
கொய்அகை முல்லை காலொடு மயங்கி,
மைஇருங் கானம் நாறும் நறுநுதல்,
10