பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 153


        முல்லை அருந்தும் மெல்லிய ஆகி,
        அறல்என விரிந்த உறல்இன் சாயல் 15

        ஒலிஇருங் கூந்தல் தேறும் என,
        வலிய கூறவும் வல்லையோ, மற்றே?

வாழிய என் நெஞ்சமே!

பாலைநிலத்தின் பாதிரியிலே மலர்ந்த தலையிலே துய்யினையுடைய அதன் புதுப்பூக்களை, எரியும் நெருப்பினைப் போலத் தோன்றும் இதழ்களையுடைய அலரிப்பூக்களுடன் இடையிடையே கலந்து, வெண்மையான தாழம்பூவின் தோட்டிலே தொடுத்துக் கட்டிய வண்டுமொய்க்கும் கண்ணியைத் தரித்தவர்களாகவும், காலிலே தோற்செருப்புகள் அணிந்து ஒலியெழ நடப்பவர்களாகவும், கையிலே கோலினை உடையவர்களாகவும் உமணர்கள் சென்று கொண்டிருப்பார்கள். ஊர் திரண்டு வருவதுபோலக் கூட்டமாகச் சேர்ந்துவரும் அவர்கள், தம் வண்டியினை இழுத்துப் பிடிப்பவர்களாக, ஏறுவதற்கு அரியதான மேடுகளிலே ஏறுவர். அப்போது, தளர்ச்சியில்லாத வலிமையான கால்களையுடைய, வண்டியிலே பூட்டப்பட்டிருக்கும் எருமைக் கடாக்களின் வளைந்த மணிகள் ஒலி செய்யும். அத்துடன், அவற்றைச் செலுத்தும் அவர்கள் தம் வாயை மடித்து எழுப்பும் சீழ்க்கை ஒலியும் சேர்ந்து காட்டிலே ஆரவாரம் எழும் ஒமை மரங்களையுடைய காட்டினூடே, அஞ்சிஅஞ்சி வந்து கொண்டிருக்கும் புதியவர்களுக்கு, அந்த ஒலிகள் தமக்குப் பாதுகாப்பு வருகிறதென்பதை எதிர்ப்பட்டுச் சென்று கூறுவதாயிருக்கும். வெப்பம் மிகுந்த நெடிய அத்தகையை காட்டு வழியிலே, அருமையுடையதான பொருளினைத் தேடி வருவதற்கு விரும்பி, நம் தலைவியைப் பிரிந்து உறைதலான வன்மையுடன் விடாதுசென்று பொருளிட்டி வரவும் நீ கருதினையானால் -

உறுதற்கு இனிமையான சாயலுடன், நிரைத்த முல்லை அரும்புகள் சூடியதாக, மென்மையான கருமணல்போல விரிந்த, தழைத்த கருங்கூந்தலையுடைய நம் தலைவியானவள், நம்மைப் பிரிந்து தேறுதல் கொண்டிருப்பவளாவாள் என்று கருதி, அவளிடம் சென்று பிரிவுபற்றிய வலிய சொற்களைக் கூறவும் நீ வன்மை உடையையோ? அதனை உடையையாயின், நன்மை பொருந்தச் சென்று நீயே சொல்லுவாயாக!

என்று, தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செல வழுங்கினான் என்க.