பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 329



நல்ல நெற்றியினளான அவள், தான் ஏதும் அதற்குக் கடுமையாக மறுமொழி சொல்லுதலின்றித், தன்னுடைய மழலைத் தன்மைகொண்ட இனிய சொல்லினாலே, எம் இனிய உயிரினுடன் கலப்பதுபோல விடை கூறினள்.

பெருஞ்சோற்று வளமுடைய எம் வீட்டிலே, எம்முடனே கூடி அவள் இப்போது இவ்விடத்தே இராதவளாயினள். எவனோ அயலவனது காதலையே சிறப்புடையது என நம்பினள். நாம் இவ்விடத்தே ஒழிந்துபோக, அவனுடன் சென்றும் விட்டனள்.

திரண்ட அறையினையுடையது இருப்பை, அதன் தொளையுடைய வெண்பூக்களைக் குட்டிக் கரடிகளின் பெருங்கூட்டம் கவர்ந்து உண்டு கொண்டிருக்கும். அத்தகைய வெம்மையான மலைப்பகுதியான, அரிய சுரத்தினையுடைய, பெரிய உலக மெல்லாம் அஞ்சி உயிர்க்கின்ற கொடுமையினையுடைய, காட்டினூடே நேற்றுப் போயும் விட்டனள்.

பெரிதான மடப்பத்தை உடையவள் என் மகள்; அழகிதாக அகன்ற அவளுடைய அல்குல் தடத்தினிடத்திலே உடுத்தும் தழையுடைக்காகக் கொய்து சேர்க்கும் குறுகிய நொச்சி மரத்தின் கீழதாகச், சிவந்த பக்கத்தையுடைய அவளது சிறு விரல்களால் வரித்துள்ள வண்டலையும், கண்பெற்றவர்களே! இதோ நீங்களேதான் காணீர்களோ?

என்று, மகட்போக்கிய தாய் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. தாழி - உயரமும் பெரிதுமான வாயகன்ற மண்பாத்திரம். மல்க நிறைய. 2. குடை - பனங்குடை3 வயலை - வயலைக்கொடி, 5. பிதிர்வை நீரை சுற்றிச் சுழலும் தன்மை உடையை, 9. பெருஞ்சோறு விருந்துமாம்; நாளும் விருந்து போலவே பெருஞ்சோறு வட்டிக்கின்ற வளமனை என்க14.நிலம் உயிர்த்தல் - வெண்மையான அனல் எழுதல் 18. செம்புடை - சிவந்த பக்கம்.

விளக்கம்: “மணந்து குடும்பப் பொறுப்பு வகிக்கவேண்டிய நீ, இப்படிப் பந்தெறிந்தாடிச் சுற்றித் திரிகின்றனையே! நின் பெண்மை நீறாக!” எனத் தாய் கடிந்தனள் என்க. அப்படிப் பொறுப்பின்றிச் சிறுபெண்போலக் கவலையற்று ஆடித் திரிந்தவள், நேற்றுக் கொடிய வெங்காட்டினூடே, அயலவனின் காதலை நம்பிப் போய்விட்டனளே! என வருந்துகின்றனள். அதுபற்றியே, பெருமடத்தகுவி’ என்றனள்.