பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அகநானூறு - நித்திலக் கோவை

அகத்தினின்று எழுகின்ற இன்பியல் வாழ்வின் ஆர்வத் துடிதுடிப்புக்களையும், அளவற்ற எண்ணச் சூழல்களையும் அணிபெறக் காட்டுவனவே தமிழரின் அக நூல்கள். அவற்றுள், கடைச்சங்க காலத்துத் தொகுக்கப்பெற்றது அகநானூறு. 'நெடுந்தொகை' எனவும் அது பெயர் பெறும். அதனுள், மூன்றாம் பகுதி இந்நூலாகிய நித்திலக் கோவை.

அகநானூற்றை அழகுற முதற்கண் ஆய்ந்து பதிப்பித்த சான்றோர் கம்பர் விலாசம் இராஜகோபால அய்யங்கார் அவர்களாவர்; பரிசோதித்தோர் மகாவித்துவான் ரா.ராகவய்யங்கார் அவர்களாவர். அடுத்து, உரையொன்றனை நூல் முழுமைக்குமே வகுத்த பெரியார் கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளையவர்கள். அது நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் துணையுடன் வெளிவந்தது. சைவசித்தாந்த மகா சமாசத்தார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையவர்கள் துணையுடன் சங்க இலக்கியங்கள் அனைத்தையுமே புலவர் வரிசையிலே வெளியிட்டனர். அண்மையில் மர்ரே கம்பெனியார் அகநானூற்று மூலத்தை மட்டும் நன்கு ஆராய்ந்து வெளியிட்டனர். இவர்களனைவரும் செய்த பெரும் பணியினாலேயே அகநானூற்றை அறிந்தறிந்து அனுபவிக்கும் பெருவாய்ப்புத் தமிழ் அன்பர்களுக்கு நெடுகிலும் வாய்த்தது.

எனினும், பலரும் எளிதில் கற்று இன்புற வேண்டுமானால் எளிய உரை ஒன்றும் இன்றியமையாதது எனக் கருதி, அந்தத் தேவையை நிறைவுசெய்ய முயல்வதே இந்நூலின் நோக்கமாகும். பல்லாயிரவரும் பயனடையவேண்டும் என்ற காரணம்பற்றி, மக்கள் பதிப்பு வரிசையிலே இதனை வெளியிட்டனர்.

நூலினை அனுபவிக்க உதவும் வகையிலே, பாடினோர் வரலாறுகளும், பாடப்பட்டோர் வரலாறுகளும் பின்னிணைப்புக்களாக மிளிர்வது இந்நூலின் தனித்த சிறப்பாகும். தெளிவான உரையும், மற்றும் தேவையான குறிப்புக்களும், விளக்கங்களும் ஆங்காங்கே தரப்பட்டிருக்கின்றன. அவை செய்யுளைக் கற்பவர்க்குப் பெரிதும் உதவுவன.

பொதுவாக, எந்த நூலுக்குமே அதற்குரிய உரையின் துணைமட்டும் அந்த நூலின் முழு இனிமையினையும் வளமையினையும் அனுபவிக்கப் போதுமானதாகாது. ஒவ்வொரு பாடலையும் உள்ளத்துள்ளே எண்ணி எண்ணி அவற்றின் அமைவுடன் ஒன்றிக்கலந்து அனுபவிப்பதே உண்மையாக அவற்றை அறிந்து உணர்ந்து அனுபவிப்பதாகும். அப்படித் தமிழ் அன்பர்கள் அநுபவித்து மகிழ்வதற்கு இந்நூல் ஒரளவுக்கு உதவியாயிருக்கும் என்று நம்புகின்றேன்.

வாழ்க தமிழ் வளர்க தமிழ்ப்பண்பு

புலியூர்க் கேசிகன்.