பக்கம்:அகமும் புறமும்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256 • அகமும் புறமும்

உரிமைத் தன்மை பெரிதாகப் பாராட்டப் பெற்றது என்பதையே குறிக்கிறது.

அரசன் சுவைஞன்

அரசச் செல்வம் பெறும் வகை எவ்வாறாயினும், பெற்ற செல்வத்தை இவ்வரசர் நன்கு அனுபவித்தனர். இவர்கள் வாழ்ந்த அரண்மனைகள் கோயில் என்ற பெயராலும் வழங்கப்பெற்றன. கோன்வாழும் இடம் கோயில் என்று கூறுப்பெற்றது. பொருத்தம் உடையதே.

‘சென்றாள் அரசன் செழுங் கோயில் வாயில்முன்’

(ஊர்சூழ்வரி-75)

என இளங்கோ குறிப்பிடுதல் காண்க. இக்கோயிலை அமைக்கப் பெரும்பொருளும், பெருமுயற்சியும் செலவழித்தனர் என்பதை ‘நெடுநல்வாடை’ என்ற சங்கப் பாட்டால் அறிகிறோம். போரில் பெரும்பொழுதைக் கழித்தாலும் இம் மன்னர்கள் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற பேருண்மையை மறந்தாரல்லர். எனவே, அனுபவப்பொருள், போகப் பொருள் என்பனவற்றை வேண்டும் அளவு அனுபவித்தனர் என்றும் அறிகிறோம். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அரண்மனையில் அவன் மனைவி துயில் கொள்ளும் கட்டில் பற்றிய வருணனை, நக்கீரரால் ‘நெடுநல்வாடை’ என்ற நூலிற் கூறப்படுகிறது. இத்துணை முன்னேற்றம் உடைய காலத்திற் கூட அக்கட்டில் பற்றிய வருணனை நம்மைத் திகைக்க வைக்கிறது. பொருளைப் பெற்றிருக்கும் திரு வேறு; அனுபவிக்கும் திரு வேறு. இற்றை நாளில் பொருள் பெற்றிருப்பார் பலரைக் காண்கிறோமாயினும், அனுபவிப்பார் சிலரைக் காண்டலும் அரிதாகிறது. ஆனால், பழந் தமிழ் மன்னர் பொருளைப் பெறவும், அதனை நன்கு அனுபவிக்கவும் கற்றிருந்தனர் என அறிகிறோம். சிறந்த பொருளைப் பெறும் அவர்கள் ‘முருகியற்சுவை’ (aesthetic taste) வாழ்க!