பக்கம்:அகமும் புறமும்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 281

ஆழ்ந்து உறங்கும் உறக்கத்தையே குறிக்கிறார் ஆசிரியர். இத்தகைய ஆழ்ந்த உறக்கத்தை யார் பெற முடியும்?

பச்சிளங் குழந்தைகளும் மெய்ஞ்ஞானிகளும் மட்டுமே படுக்கையிற் படுத்தவுடன் உறங்கிவிடுகிறார்கள். மேலும், உறங்கும்பொழுதும் அரைகுறையாய் உறங்காமல், கனவு முதலியவற்றால் அல்லற்படாமல், நன்கு உறங்குகிறார்கள். குழந்தைகளும் மன உறுதியுடையாரும் இவ்வாறு உறங்கக் காரணம் யாது? இவ்விருவரும் மனக் கவலை இன்றி இருப்பதால் உறங்க முடிகிறது. எனவே, ஒருவன் திருந்திய துயில் கொள்ளுகிறான். எனில், அவன் மனம் கவலை அற்றுள்ளது என்பதே பொருள். துறவியின் மனம் கவலை இன்றி இருத்தல் கூடும். ஆனால், மன்னன் ஒருவன் இவ்வாறு சிறிதும் கவலை இன்றி இருக்கிறான். எனில், அது வியப்பானதே. பழந்தமிழ் மன்னர்கள் கவலையின்றி இருந்தார்கள். கவலை இன்றி இருப்பதென்றால், அது இருவகையிற் கூடும். கல் மனம் உடையவனாய், பிறர் வாழ்வு தாழ்வில் கவலையற்றவனாய், பொறுப்பற்றவனாய் இருக்கும் ஒருவனும் கவலையற்றிருத்தல் கூடும்.

தமிழ் மன்னர்கள் பற்றிய பாடல்களைப் பார்த்தால், அவர்கள் இவ்வாறு பொறுப்பற்றிருந்தார்கள் என்று கூறல் இயலாது. எனவே, வேறு ஒரு காரணம் பற்றியே அவர்கள் திருந்திய துயில் கொண்டிருத்தல் கூடும். அக்காரணமாவது யாது? வாழ்வின் உட்பொருளை நன்கு உணர்ந்தும் அரசராய்ப் பிறந்துள்ள தம் பொறுப்பை நன்குணர்ந்தும் வாழ்ந்தனர் அற்றை நாள் மன்னர்கள். மேலும், அக்கடமையை நன்கு நிறைவேற்றினமையின், கிடைத்தற்கரிய அமைதி என்ற பரிசைப்பெற்றனர். கடமையை நன்கு நிறைவேற்றியதால் உண்டாகும் மன நிறைவில் பிறந்த உறக்கமே அவர்கள் உறங்கிய உறக்கமாகும். இதனையே ஆசிரியர் ‘திருந்து துயில்’ என்ற சொற்றொடரால் குறிப்பிடுகிறார்.