பக்கம்:அகமும் புறமும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகம் – அகத்தின் அடிப்படை • 25

வழக்கமான ஆட்டமாக இருந்தால் மகிழ்வது அன்றி மருள்வது ஏது?

இம் மருட்சிக்குக் காரணம் ஆட்டத்தில் நிகழ்ந்த புதுமை; புதுமை காரணமாக மருட்சி ஏற்பட்டது என்பது வெளிப்படை. இக் குறிப்பு பிற்பகுதியில் சொல்லப் பெற்ற கருத்திற்கு அங்குரமாக அமையக் காணலாம்.

அன்றாடம் காணும் தலைவன் உடன் இருக்கின்ற தோழிமார், எனினும் இன்று ஏதோ ஒரு புதுமை நிகழ்ந்து விட்டது. இன்று மருட்சி ஏற்பட்டது; தலைவிக்கு உறக்கம் போய்விட்டது.

இக் கருத்தை வலியுறுத்தும் வகையில் குறுந்தொகைப் பாடல் ஒன்று விளக்கம் தருகின்றது.


காமம் காமம்’ என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே
                                                           (குறுந்தொகை 136)

(காமம் காமம் என்று உலகினர் கூறும் அது தோன்றும் வருத்தமோ, பீடிக்கும் நோயோ அன்று. நுண்மையதாகி மிகுதலோ குறைதலோ இல்லாதது. தழை உணவை மென்று தின்று அதனால் யானை மதம் கொள்வது போல கண்டு மகிழ்வாரைப் பெற்றால் வெளிப்படும் செவ்வியையும் உடையது)

இப்பாடலில் காமம் என்ற சொல்லிற்கு இன்று நாம் கருதும் பொருள் தந்து இடர்ப்படக் கூடாது. சங்க காலத்திலும் காமம் காதல் என்பவை ஒரே பொருளுடைய பரியாயச் சொற்களாய் வழங்கப்பட்டன.