பக்கம்:அகமும் புறமும்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட உண்மைகள் • 345


மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே,
(புறம்–165)

என்பதாகும். எனவே, நிலையற்ற உலகிடை நாம் நிலைபெற வேண்டுமாயின், செய்யத் தகுவது நம் புகழை நிலை நிறுத்துவதேயாகும். நிலையாமையின் நடுவே நிலைபேற்றுக்குரிய வழிகண்ட தமிழன் வாழ்க! உலகம் நிலையற்றது என்பது உலகிடை வாழ்ந்த அனைவருங் கண்ட உண்மையாகும். உலகம் போற்றும் ஷேக்ஸ்பியர்,

“The Cloud-capp’d towers the gorgeous palaces,
The solemn temples, the great globe itself,
Yea, all which it inherit, shall dissolve,
And, like this insubstantial pageant faded,

Leave not a rack behind.”
–THE TEMPEST: Act IV, SCENE l.

என்று தாம் எழுதிய ‘புயல்’ என்னும் நாடகத்தில் குறிப்பிடுதல் அறிதற்குரியது.

இத்தகைய நிலையாமை பொருந்திய உலகத்தில் வாழ்ந்த மனிதன் தான்மட்டும் நிலைபெற வேண்டிச்செய்த செயல் புகழைத் தேடுதலேயாம் என்பதைக் கண்டோம். ‘அப்புகழை எவ்வாறு தேடவேண்டும்?’ என்பதே அறியவேண்டுவதொன்றாகும். இதற்குரிய விடை தெளியப்படுமானால், அதுவே, வாழ்க்கை வாழ்வதற்கு, என்னும் உண்மையை நன்கு புலப்படுத்தும். புகழ் என்பது எல்லாரும் விரும்பப்படும் ஒன்றாகும். புகழ் விரும்பாத மனிதனே உலகிடை இல்லை எனலாம். ஆனால், எல்லாராலும் போற்றி விரும்பப்படும் இதனையடைய இவ்வனைவரும் முயற்சி எடுத்துக்கொள்கின்றனரா என்று பார்த்தால் பெரும்பாலும் இல்லை என்றே கூறிவிடலாம். இதுவே உலகியற்கை புகழை அனைவரும் விரும்புகின்றனர்;