பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காதல் அனுபவம் உண்டா?

“எங்கே கருணானந்தம்?” என்று கேட்ட இன்ப ஒலி என் செவிப்புலனில் பாய்ந்து, சிந்தையை உலுக்கி, எழச் செய்தது!

யார் குரல்? யாருடைய குரல் இது? அண்ணாவின் குரல்போல் இருக்கிறதே? அண்ணா எப்போது ஈரோடு வந்தார்கள்? கேள்வி அலைகள் அடுக்கடுக்காய்ப் புரண்டெழுந்து முடிவதற்குள் “குடி அரசு” அலுவலகத்தின் மெஷின் ரூமில் நான் நின்றிருந்த இடத்துக்கே விரைந்து வந்த வண்ணம் ஈ. வெ. கி. சம்பத், “வாங்க வாங்க! அண்ணா உங்களெப் பாக்க வந்திருக்கார்!” என்று அழைத்தார். புலவர் நா. மு. மாணிக்கம் வியப்புடன் எழுந்து வந்து வேடிக்கை பார்க்கிறார்.

வெளிப்புற முதல் அறையில் வீற்றிருந்த அண்ணா, என் வலது கரத்தைப் பற்றிக் குலுக்கினார்-“உன்னைப் பாராட்ட வந்தேன்” என்றார், புன்சிரிப்புத் தவழ! இறக்கையின்றி மேகமண்டலத்தில் பறந்து கொண்டிருக் கிறேன் நான்! என் உடம்பிலுள்ள மயிர்க்கால்களெல்லாம் சிலிர்த்து, உணர்வுகளின் உயிர்த்துடிப்போடு, மகிழ்வால் உள்ளம் பொங்கி நிரம்பி வழிகிறது! ஒன்றும் விளங்காமல், “எதற்காக அண்ணா?” என்கிறேன், வினாக்குறி தேக் கிய முகத்துடன், சம்பத்தையும் பார்த்தவாறே!

“நீ ‘குடி அரசில்’ எழுதிய நாடக விமர்சனம் ஊரிலேயே படிச்சேன். ஈரோடு வந்தா உன்னெப் பாராட்டணும்னு நெனச்சேன். ரொம்ப அருமையா எழுதி யிருக்கே அனுபவப்பட்ட நாடகத்துறை எழுத்தாளர்