பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9. சேரமான் செய்த முடிவு


மலையமான் திருமுடிக்காரி திருக்கோவலூரை விட்டு ஓடியவன். ஒருவரும் அறியாமல் ஓரிடத்தில் இருந்தான். அவனுடைய வீரர்களில் சிலர் அவன் இருக்கும் இடம் அறிந்து அவனோடு சேர்ந்து கொண்டார்கள். யாவரும் வஞ்சிமா நகரை நோக்கிப் புறப்பட்டார்கள். காரியென்னும் குதிரையில் ஏறி விரைவாகச் சென்றான் மலையமான்.

அதிகமான் திருக்கோவலூரை முற்றுகையிட்டது உடனே பெருஞ்சேரல் இரும்பொறைக்குத் தெரியவில்லை. தெரிந்த பிறகு, அவன் மகிழ்ச்சியே அடைந்தான். காரி, கோட்டை கொத்தளங்களுள்ள தன் ஊராகிய கோவலூரில் இருந்தான். பகைவர்களை அவர்கள் ஊரிலேயே சென்று பொருது அடர்க்கும் பேராற்றல் உடையவன் அவன். அத்தகையவன் தன்னூரில் இருக்கும்போது அவனை யாரால் வெல்ல முடியும்? அதிகமானுக்குக் கேடுகாலம் வந்ததனால்தான் இந்தப் பேதைமைச் செயலை மேற்கொண்டானென்று சேரன் எண்ணினான்.

ஆனால் அவன் நினைத்த வண்ணம் நடக்கவில்லை. அதிகமானே வெற்றி பெற்றான். காரி எங்கே போனான் என்பது தெரியாமல் சேரன் கலங்கினான். காரியையே தோல்வியுறச் செய்த அதிகமான் பெரிய விறல் வீரனாகவே இருக்க வேண்டும் என்று எண்ணினான். காரியைப் பற்றிய செய்தியை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தான். கடைசியில் ஒருநாள் காரியே நேரில் வந்து சேர்ந்தான்.

அவனைக் கண்டவுடன் சேரன், “நான் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை” என்றான்.