பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

#64 அபிராமி அந்தாதி

பராகாசா என்பது லலிதா சகசிரநாமத்தில் ஒரு நாமம். சிதாகாசத்தில் உறைபவளாதலின் அந்தரி என்ற பெயர் கொண்டாள் என்றும் கூறலாம், இதயத்தினூடே உள்ள நுட்ப வெளியாகிய தசராகாச உருவினளாக உறை கின்றவள் என்றும் அதற்குப் பொருள் கூறலாம்.

தகராகாச ரூபிணி' என்பது அன்னையின் ஆயிரம் திரு. நாமங்களில் ஒன்று.

'இத்தகைய பெருமாட்டியின் திருவடி என் தலைமேல் இருக்கிறது' என்று சொல்லுகிறார் அபிராமிபட்டர்.

           பொருந்திய முப்புரை, செப்புரை
               செய்யும் புணர்முலையால் 
           வருந்திய வஞ்சி மருங்குல்
               மனோன்மணி, வார்சடையோன் 
           அருந்திய நஞ்சமு தாக்கிய
               அம்பிகை, அம்புயமேல் 
           திருந்திய சுந்தரி, அந்தரி
               பாதம்என் சென்னியதே.

(சேர்ந்து பொருந்திய திரிபுரத்தின் தலைவி, செப்பை உவமையாகச் சொல்லும் இரண்டு தனங்களின் பாரத்தால் வருந்திய வஞ்சிக்கொடியைப் போன்ற இடையையுடைய மனோன்மணி, நீண்ட சடையை உடைய சிவபெருமான் அருந்திய ஆலகால நஞ்சைத் தன் கையால் கழுத்தளவில் நிற்கச்செய்து அமுதம்போல் ஆக்கிய தாய், தாமரையின் மேல் அழகுபெற வீற்றிருந்தருளும் பேரழகி, பராகாச வடிவினன் ஆகிய அபிராமியின் திருவடி என் தலையின் மேல் உள்ளது.) -

திருவடிகள் இரண்டாயினும் ஒன்றாக வைத்துச் சென்னியது என்றார்.

எம்பெருமாட்டியின் அடியைப் பணிந்து வாழ்வேன் என்பது கருத்து.