பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 அப்பாத்துரையம் -1 'தமிழ்' என்ற சொல் மொழிப் பெயராக மட்டுமன்றி, நாடு, இனம், மக்கள் பெயராகவும் சங்க இலக்கியத்தில் பெரிதும் வழங்குகிறது. தமிழர் தம் மொழியுடன் அறிவும் கலையும் வளர்த்து, கலைப் பண்பையும், அறிவுப் பண்பையும், இனப் பண்பையும் மொழியுடன் இணைத்து மொழிப் பண்பாகப் பேணினர். தமிழ் அயல் மொழிகளைப் போல, உலகின் மற்றப் பண்புடைய தொல்பழங்கால மொழிகளைப் போல, வழக்கிறவாமல், வளமிழக்காமல் நிலவுவதற்கு இதுவே காரணம். தமிழ்ப் பண்பு தளர்ந்துவரும் காலத்தில் வாழ்ந்த தமிழர், புராண காலத் தமிழர். தன்னிகரில்லாத பழந்தமிழ் சமற்கிருதத்துடன் ஒப்பாகத் தாழ்ந்து, வடமொழி, தென்மொழி என்ற ஒப்பீட்டுக்கு இலக்காவதை அவர்கள் கண்முன் கண்டனர். சமற்கிருதம் தேவமொழியாகி, தமிழ் தாய்மொழிகளுள் ஒன்றாகத் தணிவதையும் அவர்கள் கலங்கிய கண்களுடன் நோக்கினர். 'தானாடா விட்டாலும் தன் தசையாடும்' என்ற முதுமொழிக்கிணங்க, அவர்கள் தமிழ்ப்பற்று ஆட்டங் கண்டது. அதனை மீட்டும் உறுதிசெய்ய, வலியுறுத்தவே, அவர்கள் தளர்ச்சிக்கு ஆறுதலாகக் 'கன்னித் தாய்'ப் பண்பு கண்டு பராவினர்! 'தெய்வத் தமிழ்'க் கூறு கண்டு பாசுரம் பாடினர்! தம்மிடையே தோன்றித் தமிழிலே படர்ந்த தளர்ச்சி, தமிழ் மொழியின் ஆழ்ந்த தனிப் பண்பைக் கெடுத்துவிடாது என்று அவர்கள் தமக்குத் தாமே ஆறுதல் கூறிக்கொண்டனர். சமற்கிருத மரபும், ஆங்கில மரபும், இந்தி மரபும் தழுவத் தொடங்கியுள்ள இக்கால ஆதிக்கவாதத் தமிழர், தம் பிறமொழி சார்ந்த உயர் பதவிக் கோட்டைகளில் இருந்துகொண்டு, இதே ஆறுதலைத் தம் மனச்சான்றுக்கு அளிக்கத் தொடங்கியுள்ளனர். பிற மொழி தழுவுதலும், பிறமொழிச் சொற்கள் கலத்தலும் இன்றியமையாதன என்ற தம் வயிற்றுப் பிழைப்புக் கொள்கைக்கு இவ்வகையிலேயே ஆதரவும் திருத்தமும் ஒருங்கே தேடுகின்றனர். கலப்பினளவும் தழுவலளவும் தமிழின் தனிப் பண்பினைக் கெடுக்கும் அளவில் செல்லக்கூடாது; செல்ல வில்லை என்று காட்டி அவர்கள் சிறிது மகிழ்வும் எய்துகின்றனர். ஆறுதல் பெற்று ஆறுதலும் தருகின்றனர். இனத்தினின்று ஒதுங்கி