உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152 அப்பாத்துரையம் - 11

கடல் தீவங்களையும், தென் கிழக்காசியாவையும் படையெடுத்துச் சென்று திறைகொண்டு வீறுடன் ஆண்டனர்

கனவில்கூடக் காளிதாசன்போன்ற சமஸ்கிருதக் கவிஞர்கள் இருகடற்கரைவரை நீண்ட வடதிசைப் பரப்பையே தம் கனவுகளுக்குரிய உச்ச எல்லைப் பெரும் பேரரசின் எல்லையாகக் கொண்டிருந்தனர். அதையே உலகமாகவும் கருதினர்.

'மாகடல் அளாவிய மாநில மன்னர் ' -ஆசமுத்ர க்ஷிதீசாஃ . என்றும்,


'உளது ஒரு மாமலையரசு
வடதிசைக்கண் இமயம்
வளமுடன் கீழ்மேல் கடல்கள்
மூழ்கி இடை உலகம்
அளக்கின்ற முழங்கோல் போல்
கிடக்கின்ற தந்தோ!'

அஸ்த் யுத்தரஸ்யாம் திசிதேவதாத்மா
ஹிமாலயோ நாம நகாதிராஜஃ
பூர்வாபரெள வாரி நிதீ விகாஹ்ய
ஸ்திதஃ ப்ருதிவ்யா இவமானதண்டஃ

என்றும் அவன் கூறுவது காண்கிறோம். ஆனால் தமிழக அரசரோ இருகடல் குளித்த தென்னகப் பெருநில அரசரையும் வானிமயத் தருக்கடக்கிய வளர்நிலப் பேரரசையும், கடல்கடந்த கடற்பேரரசையும் வரலாற்றில் கண்டு பாடியுள்ளனர். அதுமட்டுமன்றி முத்தமிழ்நாடுகளான சேர, சோழ, பாண்டிய நாடுகள் மூன்றையும் ஒருங்கே ஆண்ட மன்னரையே மூவுலகாண்ட மன்னரென்றும், அவருள்ளும் எழுகடல் தாண்டிக் கடல்கடந்த உலகாண்ட மன்னரையே ஏழுலகாண்ட மன்னரென்றும் தமிழக வரலாறு காணாத புராணிகரைத் தமிழர் பாட வைத்தனர்! மூவரசருமே இமயத்தில் தமிழ்க்கொடி பொறித்து உலகாண்டவராதலால் மூவரசும் ஆண்டவரை மூவுலக அரசரென்றும், அலை எழு கடலை எழு கடலென்றும் உரைத்த தமிழ் வாய்மையைத் தமிழ்க் கற்பனை மாண்புணராத வடவர் அறியாது உழன்றனர், உழல்கின்றனர்!