உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(218

||-

அப்பாத்துரையம் - 22

உங்கள் அரண்மனைவரை துணைதந்து இட்டுச் செல்லுவதை ஒரு மதிப்பாகக் கருதுவேன். என்றார். அங்கே போகும் விருப்பம் துளியும் கெஞ்சிக்குக் கிடையாது. ஆயினும் மாமனார் என்ற முறையில் அவருக்கு மறுப்புக்கூற வகையில்லை. கெஞ்சியை அவர் தம் ஊர்தியிலேயே இட்டுக் கொண்டு நெடுமாடம் சென்றார். மாளிகையடைந்ததும் காளைகளைத் தன் கையாலேயே அவிழ்த்து இட்டுச் சென்றார். இத்தகைய செயல்கள் கெஞ்சியிடம் அவர் கொண்டிருந்த தனிப்பெரும் பாசத்தைக் காட்டுபவையாக அமைந்தன. ஆனால் அத்தகைய பாசநேசங்கள் கெஞ்சிக்குத் தொல்லைகளாகவே தோற்றின.

கெஞ்சி வருகையை எதிர்நோக்கி ஆய் இளவரசியின் அறைகள் முற்றிலும் சீராக்கப் பட்டிருந்தன. அவன் அவளைச் சந்தித்து நெடுநாட்கள் ஆய்விட்டன. அதற்குள் அவற்றின் தோற்றம் எவ்வளவோ மாறுபட்டிருந்தது. சீர்திருத்தங்கள் பலவற்றுள் ஒரு பகுதியாக, மிக அழகான ஒரு மட்டுப்பா அமைக்கப்பட்டிருந்தது. முற்றிலும் ஒழுங்கமைத்துச் செய்யப் பட்டிருந்த இந்தஅழகு வாய்ந்த பகுதியில் மாசுமறுவுக்கு இடமில்லாதிருந்தது. ஆனால் வழக்கப்படி இங்கே இளவரசி ஆயை மட்டும் எவரும் காணமுடியவில்லை. அவள் தந்தை அவளை மீண்டும் மீண்டும் வேண்டிக் கொண்ட பின்னரே அவள் தன் கணவன் முன்னிலையில் வர இசைந்தாள்.

படத்திலமர்ந்திருக்கும் இளவரசியரைப் போலவே அவள் ஆடாமல் அசையாமல் ஒய்யாரமாக வீற்றிருந்தாள். அவள் வடிவம் அழகின் திருவுருவமாகவே இருந்தது என்பதில் ஐயமில்லை.

கெஞ்சி அவளை அணுகி உரையாட முயன்றான்.

'என்னுடைய மலைப் பயணத்தைப் பற்றி உன்னுடன் பேச நான் விரும்புதல் இயல்பு. ஆனால் அதில் உனக்கு அக்கறை இருக்குமோ, என்னவோ? சொல்லுக்குச் சொல் அதுபற்றி ஏதேனும் உரையாடுவாயோ, மாட்டாயோ? இதனை அறியாமல் தான் தயங்குகிறேன். ஆனாலும் இப்படியே போய்க் கொண்டிருப்பதில் எனக்கு ஒரு சிறிதும் விருப்பம் இல்லை. நீ ஏன் என்னிடம் இப்படி நெருங்காமல் பராமுகமாகவும் இறுமாப் பாகவும் தொடர்பற்ற அயலார்போல நடந்து கொள்ளுகிறாய்?