தாயகத்தின் அழைப்பு
13
அதை வைத்துக்கொண்டு ஆங்கிள்பரியில் மணம் செய்ய முடியாது என்று அவர் மறுத்துவிட்டார். மணப் பெண் திகில் கொண்டாள். அதற்குப்பின் பட்மத் செல்வதும் முடியாத காரியம். வில்டீவ் தன் தவறை ஒத்துக் கொண்டு, விரைவில் புதுச்சீட்டுப் பெற்று மற்றொருநாள் மணப்பதாகக் கூறினான். ஆனால் அவள் மனம் இடிந்து விட்டது. மணமாகாமல் அவனுடன் வண்டியில் வர அவள் மறுத்துவிட்டாள்.மணவினையை எதிர்பார்த்தனால், வேறு ஏற்பாடும் செய்யவில்லை. அதற்குப்பின் எவர் முகத்திலும் விழிக்க மனமின்றி, அவள் அடிபட்ட விலங்குபோல அலறி ஓடினாள். தன் அவமானத்தை மறைக்கவே அவள் துடித்தாள். டிக்கரிவென்னின் வண்டியும் அவன் அன்பாதரவும் அவளுக்குப் பெரிதும் உதவின.
அத்தையும் மருமகளும் சென்றதை நினைக்கக்கூட உரமற்றவர்களாய், விரைந்து பேசாமடந்தையினுள் தம் அறைக்குச் சென்றனர்.டிக்கரிவென் விடைபெற்றுச் சென்றான்.
மணப்பெண்ணுக்குக் கோவிலில் தந்த அதே விளக்கத்தைத் தான் வில்டீவ் பேசாமடந்தையிலும் கொடுக்க முடிந்தது.ஆனால் அடுத்தபடி திட்டத்தைப்பற்றி அவர்கள் நினைக்குமுன் மணவாழ்த்துப் பாடிப் பாராட்டவந்த கும்பல் வெளியேவந்து ஆரவாரம் செய்தது. நடந்த செய்தியை அவர்கள் முகம் பார்த்துச் சொல்ல வில்டீவுக்கு மனமில்லை. பெண்டிருக்கும் அது பிடிக்கவில்லை. ஆகவே இருவரையும் உள்ளறையில் வைத்து விட்டு வில்டீவ் வெளியில் வந்தான். மணப்பெண் சோர்வுற்று ஓய்வுகொள்வதாகக்கூறி வேண்டாவெறுப்பாக வில்டீவ் அவர்கள் பாராட்டைப் பெற்று, கொடுத்துத் தொலைக்க வேண்டிய புட்டிகளைக் கொடுத்தான். கிழவன் காண்டில் குடித்ததுடன் விடவில்லை; இரண்டொரு காதல் பாட்டுப் பாடித்தான் அயர்ந்தான்.
ஒருமட்டில் கும்பலை அனுப்பிவிட்டு வில்டீவ் உள்ளே வந்தான். தாம்சின் எதுவும் வாய் திறக்கவில்லை.
திருமதி யோப்ரைட் அழுதாள், திட்டினாள்; கண்டித்தாள், சீறினாள். தாம்சினின் உயிர்த்துடிப்பும் வில்டீவிடம் எத்தகைய மாறுதலையும் செய்யவில்லை. அவள் அத்தையின் சீற்றமும் அவனை ஒன்றும் பாதித்ததாகத் தெரியவில்லை. நடந்த செய்தி