உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தேனிலந்தை

ஆனைமலையை அடுத்த உம்பற் காட்டில் செங்கோடன் என்று ஒரு குறவர் நாட்டு மன்னன் இருந்தான். அவன் மாயத்தில் வல்ல ஒரு வாயாடி மரபுப் பெண்ணை மணந்து கொண்டான். இந்த உறவை அவன் நாட்டு மக்கள் விரும்பவில்லை. ஆகவே, அவன் தன் உறவினன் ஒருவனுக்கு முடி சூட்டிவிட்டு, நாடு துறந்து, அயல்நாட்டில் சென்று காலங்கழித்தான்.

செங்கோடன் மனைவி இலஞ்சி, அழகிற் சிறந்த ஒரு பெண் மகவை ஈன்றாள். குழந்தை பிறந்த சில நாட்களிலேயே செங்கோடன் இயற்கை எய்தினான். இலஞ்,சி வாழ்வில் தனித்து, வறுமையினால் அல்லல்பட்டாள். ஆனால், குழந்தையை அரும்பாடுபட்டு வளர்த்தாள். அது தேனிலந்தைப் பழத்திலேயே ஆரா நாட்டம் கொண்டிருந்ததனால், அதை எல்லாரும் தேனிலந்தை என்றே அழைத்தனர்.

இலஞ்சி இருந்த குடிசையின் அருகே ஒரு பூங்கா இருந்தது. அது மாந்தை என்ற சீமாட்டிக்கு உரியது. அவள் மாயத்தாலேயே பெருஞ்செல்வம் ஈட்டியவள். அவளும் தேனிலந்தைப் பழத்தில் அவா உடையவள். எனவே, அவளது பூங்காவெங்கும் தேனிலந்தைக் கனி பழுத்துக் குலுங்கிற்று.

இலஞ்சி தன் செல்வமகளுக்காக அடிக்கடி அந்தப் பூங்காவில் சென்று பழம் பறிப்பது வழக்கம். இது சீமாட்டி மாந்தைக்குப் பிடிப்பதில்லை. ஆயினும், இலஞ்சியும் தன்னைப் போல மாயம் வல்லவள் என்பது அவளுக்குத் தெரியும். அத்துடன் இலஞ்சி தனக்கெனச் செல்வம் திரட்ட மாயத்தைப் பயன்படுத்த வில்லை. ஆதலால், அவள் மாயத்துக்கு ஆற்றல் மிகுதியா யிருந்தது. மாந்தை தன் செல்வத்தைப் பெருக்க மாயத்தைப் பயன் படுத்தியிருந்ததால், அது இலஞ்சியின் முன் செயலாற்ற முடியவில்லை.